ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 18

அனுமனை ராட்சச வீரர்கள் அரண்மனையை விட்டு வெளியே அழைத்து வந்து தெருக்கள் வழியாக இழுத்துச் சென்றார்கள். ராட்சச கூட்டம் சுற்றி நின்று அனுமனை திட்டியும் பரிகாசம் செய்தும் கோசம் போட்டும் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். ராவணன் உத்தரவிட்டபடி வாலில் நெருப்பை வைக்கட்டும் அதன் பிறகு நமது சக்தியை இந்த ராட்சசர்களுக்கு காண்பிக்கலாம் என்று அனைத்தையும் பொறுத்துக் கொண்ட அனுமன் அமைதியாக இருந்தார். அனுமனின் வாலில் எண்ணைய் தடவிய துணியை சுற்றி நெருப்பை வைத்து இழுத்துச் சென்றார்கள் ராட்சசர்கள். அசோகவனத்தில் சீதைக்கு பாதுகாப்பாக நின்ற ராட்சசிகள் சீதையிடம் உன்னிடம் பேசி விட்டு சென்ற அந்த வானரத்தின் வாலில் நெருப்பை பற்ற வைத்து தெரு தெருவாக இழுத்துச் செல்கிறார்கள் என்று சொல்லி சிரித்தார்கள். சீதை அவளருகே அக்னியை மூட்டினாள். அக்னியே நான் செய்த புண்ணியம் ஏதேனும் இருந்தால் நான் உண்மையான பதிவிரதையாக இருந்தால் அனுமனை நெருப்பின் வெப்பம் தாக்காமல் குளிர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள்.

அனுமனுக்கு தனது வாலில் உள்ள நெருப்பின் வெப்பம் தாக்காமல் குளிர்ச்சியாகவே இருந்தது. அனுமன் சிந்திக்க ஆரம்பித்தார் நெருப்பு வைக்கப்பட்ட துணி எரிகிறது ஆனால் நமது வால் குளிர்ச்சியாக இருக்கிறது தன் தந்தை வாயு பகவானுக்கு மரியாதை செய்ய அக்னி பகவான் தன்னை சுடவில்லை என்று எண்ணிய அனுமன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணினார். தன்னை பரிகாசம் செய்த ராட்சசர்களின் மீது அனுமனுக்கு கோபம் அதிகரித்தது. தன்னை கட்டியிருக்கும் கயிற்றை உதறி அறுத்தார். தனது உருவத்தை பெரிதாக்கினார். எரியும் வாலுடன் ஒவ்வொரு மாளிகையாக குதித்து தாவி வாலில் உள்ள நெருப்பை ஒவ்வொரு மாளிகைக்கும் வைத்தார். பெரும் காற்று நெருப்பிற்கு உதவி செய்தது. ஒவ்வொரு மாளிகையும் முழுமையாக எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் இலங்கை நகரமே வானளவு நெருப்பில் எரிந்தது. ராட்சசர்கள் அனைவரும் கதறிக்கொண்டே ஓடினார்கள். தனது வாலில் உள்ள நெருப்பை கடல் நீரில் அனுமன் அணைத்துக் கொண்டார்.

அனுமன் உயரமான திருகூட மலை மேல் ஏறி நின்று எரியும் இலங்கையை பார்த்து மகிழ்ந்தார். உடனே நாம் தவறு செய்து விட்டோமோ என்று எண்ணிய அனுமன் திடுக்கிட்டு அதிர்ந்தார். எவ்வளவு சாமர்த்தியமும் வலிமையும் நம்மிடம் இருந்தாலும் கோபத்தை அடக்க முடியாமல் மதியிழந்து விட்டோமே என்று எண்ணினார். இந்த இலங்கை நகரத்தில் பெரும் தீயை உண்டாக்கி விட்டோம். இந்த நெருப்பில் சீதையும் எரிந்து போயிருப்பாளே. சீதையை ராட்சசர்கள் கொல்வதற்கு முன்பாகவே நாம் கொன்று விட்டோம். கோபத்தில் நாம் செய்த செயல் ராம காரியத்தையும் நாசம் செய்து விட்டதே நம்மைப் போன்ற மூடன் பாவி இந்த உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று தன்னை தானே திட்டிக் கொண்டு துக்கத்தில் இருந்தார் அனுமன். இனி இந்த உலகத்தில் வாழ நமக்கு தகுதி இல்லை. இங்கேயே நமது உயிரை விட்டு விடலாம் என்று முடிவு செய்தார் அனுமன். அப்போது நல்ல சகுனங்கள் அனுமனுக்கு தென்பட்டது. உடனே சிந்திக்க ஆரம்பித்தார். தனது வாலில் உள்ள நெருப்பு நம்மை சுடாத போது அற நெறி தவறாமல் சத்தியத்தை கடைபிடிக்கும் ராமரின் மனைவி சீதையை நெருப்பு எப்படி சுடும். கற்புக்கரசியாக இருக்கும் சீதை இந்த நெருப்பில் அழிந்திருக்க மாட்டார். சீதை நலமாக இருப்பார் என்று அனுமன் நினைத்துக் கொண்டிருக்கும் போது ஆகாயத்தில் இரண்டு வானவர்கள் பேசிக் கொண்டு சென்றது அனுமனுக்கு கேட்டது.

அனுமன் இலங்கையில் இந்த அற்புதமான செயலை செய்திருக்கிறார். இலங்கையில் சீதை இருக்கும் இடம் தவிர மற்ற அனைத்து இடங்களும் பற்றி எரிகிறது. அனுமன் வாழ்க அனுமனின் பராக்கிரமம் வாழ்க என்று சொல்லிக் கொண்டே சென்றார்கள். அனுமனுக்கு அப்போதுதான் புரிந்தது. சீதையின் புண்ணியத்தால் தான் நமது வாலில் இருந்த நெருப்பு நம்மை சுடவில்லை. நம்மை சுடாத நெருப்பு அவரை எப்படி சுடும் சீதை நலமாக இருக்கிறார். நாம் பிழைத்தோம் ஒரு முறை சீதையை பார்த்து விட்டு பிறகு செல்லலாம் என்று முடிவெடுத்த அனுமன் அசோகவனத்திற்கு மீண்டும் சென்றார்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 17

அனுமன் மேலும் பேச ஆரம்பித்தார். நான் வானர அரசன் சுக்ரீவனிடம் இருந்து வந்திருக்கும் தூதுவன் என்று சொல்லியும் என்னை கயிற்றால் கட்டி வைத்து எனக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்து பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தினால் நான் வீழ்ந்து விட்டேன் நான் கைதி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். இந்திரஜித்துக்கு வரம் கொடுத்த பிரம்மா எனக்கும் சிரஞ்சீவி என்ற வரத்தை கொடுத்திருக்கின்றார். பிரம்மாவின் வரத்திற்கு கட்டுப்பட்டு நான் இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தேன். இப்போது எனக்குரிய ஆசனத்தை நானே ஏற்படுத்திக் கொள்கிறேன் என்று அனுமன் தன்னுடைய வாலை பெரியாக்கி சுருட்டி ஆசனம் செய்து அதன் மேல் அமர்ந்து பேச ஆரம்பித்தார். தசரதரின் மூத்த குமாரன் ராமர் தனது தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற வனவாசம் மேற்கொண்டார். அப்போது ஒரு ராட்சசன் வஞ்சகமாக ஏமாற்றி அவரது மனைவி சீதையை தர்மத்திற்கு விரோதமாக தூக்கிச் சென்று விட்டான். ராமர் சீதையை தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் சுக்ரீவனிடம் நட்பு கொண்டார். யாராலும் அழிக்க முடியாத வலிமை பொருந்திய வாலியை ராமர் வதம் செய்து சுக்ரீவனுக்கு அரச பதவியை பெற்று தந்தார். ராமரின் கட்டளைப்படி சுக்ரீவன் சீதையை தேட உலகம் முழுவதும் தனது வானர படைகளை அனுப்பி வைத்தார். இந்த இலங்கையில் சீதையை தேடி நான் வந்தேன். இங்கு சீதையை கண்டேன். நீங்கள் சீதையை அபகரித்து வந்தது தர்மத்துக்கு விரோதமான செயல் என்று உங்களுக்கு தெரியும். உங்களின் இந்த செயலால் ராமர் மற்றும் வானர கூட்டத்தின் பகையை சம்பாதித்துக் கொண்டீர்கள். உடனடியாக ராமரிடம் மன்னிப்பு கேட்டு சீதையை அவரிடம் ஒப்படைத்து சரணடைந்து விடுங்கள். இல்லையென்றால் ராமர் மற்றும் அவரது தம்பி லட்சுமனணின் அம்புகள் மற்றும் வானர கூட்டத்தினால் இந்த ராட்சச கூட்டம் மொத்தமும் அழிந்து போகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்றார் அனுமன்.

அனுமனின் பேச்சினால் கோபமடைந்த ராவணன் இந்த வானரத்தை கொன்றே விட வேண்டும் என்று முடிவு செய்தான். அவனது கண்கள் கோபத்தில் துடித்தது. அனுமன் மேலும் பேச ஆரம்பித்தார். புத்திமான்கள் தர்மத்துக்கு எதிராக செயல்பட்டு தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார்கள். தங்களின் இந்த செயலால் இத்தனை நாட்கள் நீங்கள் செய்த தவங்கள் எல்லாம் அழிந்து போகும். உங்களுடைய தவ பலன்களின் வலிமை எல்லாம் ராமரின் முன்பு தோற்றுப் போகும். நீங்கள் பிழைக்க இப்போது ஒரு வழி மட்டுமே உள்ளது. ராமரை சரணடைவதை தவிர வேறு வழி இல்லை. சிந்தித்துப் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். ராம தூதுவனான எனது சொல்லை மதித்து நல்வழியில் சென்று பிழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி முடித்தார் அனுமன்.

அனுமனிடம் நிறுத்து உனது பேச்சை என்று கர்ஜனை செய்த ராவணன் இந்த வானரத்தை முதலில் கொல்லுங்கள் என்று கத்தினான். தூதுவனை கொல்வது தவறாகும். இதுவே ராஜ நீதி எனவே இந்த வானரத்தை கொல்ல வேண்டாம் என்று சபையில் இருந்த ராவணனின் தம்பி விபீஷணன் கூறினான். அதற்கு ராவணன் எனது மகன் அஷன் உட்பட நம்முடைய சேனாதிபதிகள் மற்றும் ராட்சச சேனைகள் பலரை இந்த வானரம் கொன்றிருக்கிறான். பாப காரியத்தை செய்த இந்த வானரத்தை கொல்வதில் தவறு ஒன்றும் இல்லை என்றான். அதற்கு விபிஷணன் இந்த வானரம் குற்றம் செய்தவனாக இருந்தாலும் அனைத்தும் பிறருடைய ஏவலினால் செய்திருக்கிறான். ஏவியவர்களை விட்டுவிட்டு தூதுவனாக வந்தவனை தண்டிப்பதில் எந்த பயனும் இல்லை. அந்த வானரத்தை அனுப்பியவர்களை தண்டிப்பதற்கு ஏற்ற வழியை தேடுங்கள். இந்த வானரத்தை உயிருடன் அனுப்பினால் மட்டுமே அவர்களிடம் சென்று சீதை இங்கிருக்கும் செய்தியை சொல்லுவான் இந்த வானரம். செய்தி கேட்டதும் அவர்கள் அனைவரும் நம்மை தாக்க இங்கே வருவார்கள். அவர்களை நம்முடைய பலத்தினால் தண்டிக்கலாம். இப்போது தண்டிக்க எண்ணினால் இந்த வானரத்தின் அங்கம் எதையாவது ஊனப்படுத்தி விடுங்கள் என்று சொல்லி முடித்தான் விபிஷணன். இந்த யோசனைக்கு ஒப்புக் கொண்ட ராவணன் வானரத்தின் லட்சண உறுப்பான வாலில் நெருப்பை வைத்து வெளியே துரத்தி விடுங்கள். வால் எறிந்து வால் இல்லாமல் அவலட்சணமாக இருக்கட்டும் என்று தனது சேவகர்களுக்கு ராவணன் உத்தரவிட்டான்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 16

அனுமன் மயக்கமடைந்தது போல் பாசாங்கு செய்கிறார். அப்படியே விட்டால் இந்த வானரம் திடீரென்று எழுந்து நம்மை தாக்கக் கூடும். அவரை உடனே கயிற்றால் கட்டி விடலாம் என்று ஒரு ராட்சசன் கூறினான். அருகில் இருந்த ராட்சசர்கள் அனைவரும் அமோதித்து ஒரு பெரிய கயிற்றை கொண்டு வந்து அனுமனை கட்டினார்கள். மந்திர பிரம்மாஸ்திரத்தினால் கட்டப்பட்டு இருப்பவர்களை தூலப்பொருளான கயிறு கொண்டு கட்டினால் பிரம்மாஸ்திரம் செயலற்றுப் போகும் என்பதை அறிந்திருந்த இந்திரஜித் வானரத்தை கயிரால் கட்டாதீர்கள் என்று கத்தினான். ராட்சசர்கள் வெற்றி முழக்கத்தில் போட்ட கூச்சலில் தூரத்தில் நின்றிருந்த இந்திரஜித் சொன்னது யார் காதிலும் விழவில்லை. ராட்சசர்கள் அனுமனை கட்டியதை தடுக்க முடியாமல் தவித்த இந்திரஜித் நம்முடைய பிரம்மாஸ்திரம் வீணாகப் போய் விட்டதே விரைவில் இந்த வானரம் எழுந்து யுத்தம் செய்ய வந்து விடுவான். மீண்டும் வானரத்தின் மீது பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்க முடியாதே என்று மிகவும் வருத்தப்பட்டான்.

அனுமன் தன்னை கட்டிய பிரம்மாஸ்திரம் அவிழ்ந்து போனதை உணர்ந்தார். சாதாரண கயிற்றினால் கட்டப்பட்டிருப்பதை பார்த்த அனுமன் தன் வலிமையால் ஒரு கனத்தில் இந்த கயிற்றை அறுத்து விடலாம். ஆனால் கயிற்றை அறுக்காமல் நாம் இப்படியே இருப்போம். இவர்கள் நம்மை ராவணனிடம் அழைத்துச் செல்வார்கள். அவனிடம் பேசுவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கும். இதனை பயன்படுத்திக் கொண்டு ராவணனை சந்தித்து அவனை பயமுறுத்தி வைக்கலாம் என்று அனுமன் அமைதியாக இருந்தார். ராட்சசர்கள் தனது கைகளினால் அனுமனை அடித்தும் திட்டியும் பரிகாசம் செய்து கொண்டே ராவணனின் அரண்மனை வரை இழுத்துச் சென்றார்கள். ராவணனை பயமுறுத்தியே ஆக வேண்டும் என்று அனைத்தையும் அனுமன் பொறுத்துக் கொண்டார்.

அனுமனை ராவணன் முன்பு கொண்டு போய் நிறுத்தினார்கள். ராவணன் பட்டுப் பீதாம்பரமும் கண் கூசும் ஆபரணங்களுடன் ரத்தின கீரீடத்துடனும் அரசவையில் கம்பீரமாக ஒரு மலை போல் அமர்ந்திருந்தான். ராட்சசர்களின் இவ்வளவு நேரம் செய்த கொடுமைகளில் அமைதியாக இருந்த அனுமன் ராவணனை பார்த்ததும் சீதைக்கு அவன் செய்த கொடுமைகள் ஞாபகம் வந்தது பெருங்கோபம் கொண்டு சித்திக்க ஆரம்பித்தார் அனுமன். எழிலுடனும் பராக்கிரம சாலியாக இருக்கும் இந்த ராவணன் தர்மத்தில் இருந்து விலகாமல் இருந்து சத்தியத்தை கடைபிடித்திருந்தால் தேவலோகத்தில் இருப்பவர்கள் கூட இவனுக்கு ஈடாக மாட்டார்கள். ராவணன் தான் பெற்ற வரங்களையும் மேன்மையையும் தவறான காரியங்கள் செய்து அனைத்தையும் இழந்து விட்டானே என்று அவன் மீது பரிதாப்பட்டார் அனுமன். ராவணன் தன் மந்திரிகளிடம் யார் இந்த வானரம் இலங்கைக்குள் எதற்காக வந்தான் என்று விசாரியுங்கள் என்று உத்தரவிட்டான். மத்திரிகளில் ஒருவரான பிரஹஸ்தன் என்பவன் அனுமனிடம் வந்து வானரனே யார் நீ? எதற்காக இங்கே வந்தாய்? வானர வேடம் அணிந்து வந்திருக்கின்றாயா? உன்னை அனுப்பியது யார்? இந்திரனா இல்லை குபேரனா வேறு யாராவது உன்னை ஏவினார்களா? உண்மையை சொல்லி விட்டால் இங்கிருந்து நீ உயிரோடு தப்பிக்கலாம் மறைக்காலம் சொல் இல்லையென்றால் இங்கிருந்து உயிருடன் செல்ல முடியாது என்றான்.

அனுமன் பேச ஆரம்பித்தார். இந்திரனாவது குபேரனாவது யாரும் என்னை அனுப்பவில்லை. வேடம் அணிந்து கொண்டும் நான் இங்கு வரவில்லை. வானர அரசனான சுக்ரீவனின் தூதுவனாக நான் இங்கே வந்தேன். ராட்சச அரசனான ராவணனை பார்க்க விரும்பினேன். அதற்கு சரியான அனுமதி எனக்கு கிடைக்காது என்பதை அறிந்தேன். அதற்காக வனத்தை அழித்தேன். என்னை கொல்ல வந்தவர்களை நான் அழித்தேன். இப்போது உங்கள் முன்பு நின்கின்றேன். உங்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வானர அரசன் சுக்ரீவன் ராவணனை தன் சகோதரனாக பாவித்து உங்களின் நலத்தை விசாரிக்கச் சொன்னார் என்ற செய்தியை முதலில் உங்களிடம் சொல்லி விடுகின்றேன் என்றார்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 15

அனுமன் அஷனை கொன்ற பிறகு வழக்கம் போல் அசோக வனத்தின் மதில் சுவற்றின் மீது அமர்ந்து கொண்டார். தேவர்களுக்கு நிகரான ராவணனின் புதல்வன் அஷன் கொல்லப்பட்ட செய்தி அறிந்த இந்திரன் அனுமனைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பல முனிவர்களும் தேவர்களும் ஆகய வழியாக வந்து அனுமனைப் பார்த்து வாழ்த்தி விட்டுச் சென்றார்கள். ராவணனால் அழைக்கப்பட்ட இந்திரஜித் தன் தம்பி அஷன் ஒரு வானரத்தால் கொல்லப்பட்டான் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தான். விரைவாக அரசவைக்குள் வந்து ராவணனின் முன் வந்து நின்று தனது வணக்கத்தை தெரிவித்தான். ராவணன் இந்திரஜித்திடம் பேச ஆரம்பித்தான். இந்திரனுக்கு சமமான வீரன் நீ. எல்லா அஸ்திரங்களையும் நன்றாக பயின்று அதனை அடைந்திருக்கிறாய். நம்மை எதிர்த்த தேவர்களையும் அசுரர்களையும் யுத்தத்தில் வென்று இருக்கின்றாய். பிரம்மாவை தவம் செய்து பூஜித்து அவரிடமிருந்து பிரம்மாஸ்திரம் பெற்று இருக்கின்றாய். உன்னை எதிர்த்து யுத்தம் செய்யக் கூடியவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை. அறிவில் சிறந்த நீ காரியங்களை சரியாக யோசித்து செய்வதில் உனக்கு நிகர் யாருமில்லை. அசோக வனத்தில் ஒரு வானரம் நம்மை எதிர்த்துக் கொண்டு இருக்கிறது. தேவர்களின் சூழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் அனுப்பிய கிங்கரர்கள் ஜமாலி நம்முடைய சேனாதிபதிகள் 5 பேர் உனது அருமை தம்பி அஷன் அத்தனை பேரும் அந்த வானரத்தால் கொல்லப்பட்டார்கள். நீ தான் அந்த வானரத்தை வெல்லும் வல்லமை கொண்டவன். அந்த வானரத்தை நமது சேனைகளின் பலத்தால் வெல்ல முடியாது. அந்த வானரத்தின் அறிவாற்றலையும் வல்லமையையும் பராக்கிரமத்தையும் சிந்தித்து பார்த்து உன்னுடைய தவ பலத்தை உபயோகித்து சிறந்த அஸ்திரத்தை பயன்படுத்தி கைது செய்து இங்கே வெற்றியுடன் திரும்பி வா என்று சொல்லி இந்திரஜித்தை அனுப்பி வைத்தான் ராவணன். இந்திரஜித் தந்தையே வலம் வந்து ஆசி பெற்றுக்கொண்டு நான்கு சிங்கங்கள் பூட்டிய தேரில் நின்று வில்லின் நானை இழுத்து சப்தம் செய்து அசோக வனத்தை நோக்கிச் சென்றான். அவன் பின்னே ராட்சச சேனைகள் பெரும் கூட்டமாக வந்தார்கள்.

அனுமனுக்கு தூரத்தில் ஒரு கூட்டம் வருவது தெரிந்தது மீண்டும் யுத்தம் செய்வதற்கு தயாரானார். இந்திரஜித் தன்னுடைய வில்லில் அம்பு மழை பொழிந்தான். அனைத்து அம்புகளில் இருந்தும் அனுமன் லாவகமாக தப்பினார். சில அம்புகள் அனுமன் மீது பட்டாலும் அந்த அம்புகளால் அனுமனின் வஜ்ரம் போன்ற உடம்பை துளைக்க முடியவில்லை. இந்திரஜித் விட்ட அம்புகள் அனைத்தும் பயனற்றுப் போனது. ராட்சசர்கள் ஏற்படுத்திய பேரிகை நாணோசை சத்தங்களுக்கு எதிராக அனுமனின் கர்ஜனை சத்தம் பெரிதாக இருந்தது. இருவருக்கிடையிலும் நடந்த யுத்தம் இருவரின் சாமர்த்தியத்தையும் வலிமையையும் காட்டியது. யுத்தம் நீண்டு கொண்டே சென்றது. இந்திரஜித் சிந்திக்க தொடங்கினான். எத்தனை அம்புகள் விட்டாலும் இந்த வானரத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. தந்தை சொன்னது முற்றிலும் சரியே. நமது தவத்தினால் பெற்ற அஸ்திரத்தை உபயோகித்து இந்த வானரத்தை அடக்க வேண்டும் என்று முடிவு செயதான். பிரம்மாவிடம் இருந்து பெற்ற பிரம்மாஸ்திரத்தை அனுமன் மீது எய்தான் இந்திரஜித். பிரம்மாஸ்திரம் அனுமனை செயல் இழக்கச் செய்து கீழே தள்ளியது.

அனுமன் நம்மை கட்டியது பிரம்மாஸ்திரம் என்பதை தெரிந்து கொண்டார். பிரம்மா தனக்கு அளிந்த சிரஞ்சீவி பட்டத்தையும் அந்தநேரம் அவர் சொல்லிய செய்திகளையும் ஞாபகம் செய்து கொண்டார். ஒரு முகூர்த்த நேரம் மட்டுமே இந்த அஸ்திரம் நம்மை கட்டி வைக்கும் அதன் பிறகு செயலற்றுப் போகும் இதனால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்த ஒரு முகூர்த்த நேரத்தில் இந்த ராட்சசர்களால் என்ன செய்ய முடியும் பார்க்கலாம் என்று பிரம்மாவின் பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு தரையில் விழுந்து அமைதியாக இருந்தார். அனுமன் கீழே விழுந்து செயலற்றுப் போய் விட்டார் என்று அறிந்த ராட்சசர்கள் அனுமனுக்கு அருகில் வந்து சூழ்ந்து கொண்டு இந்திரஜித்தை புகழ்ந்தும் அனுமனை தின்று விடுவோம் என்றும் கோசம் போட ஆரம்பித்தார்கள்.