ராமரைப் பற்றியும் தம்மைப் பற்றியும் அனுமனிடம் சொல்ல ஆரம்பித்தான் லட்சுமணன். ராமர் எனது அண்ணன் அயோத்தியை ஆண்ட தசரதரின் மூத்த ராஜகுமாரன். தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற தற்போது வனவாசத்தில் இருக்கிறார். இந்நேரத்தில் அவரது மனைவி சீதையை ராட்சசன் ஒருவன் ஏமாற்றி தூக்கிச் சென்று விட்டான். அவளை தேடிச் செல்லும் போது கபந்தன் என்ற ஒரு ராட்சசன் சாப விமோசனம் பெற்றான். சீதை இருக்கும் இடம் தெரியாமல் தேடிக்கொண்டிருக்கும் எங்களிடம் சுக்ரீவனின் நட்பை பெற்றுக்கொள்ளுங்கள். அவருக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். உங்களுக்கு அவர் உதவியும் செய்வார். சீதையை நீங்கள் மீட்டெடுக்கலாம் என்று சொல்லினார். அதன்படி சுக்ரீவனின் நட்பை பெற்றுக் கொள்வதற்கான சுக்ரீவனை தேடி இங்கை வந்திருக்கின்றோம் என்று சொல்லி முடித்தான் லட்சுமணன்.
அனுமன் சூக்ரீவனை பற்றி சொல்ல ஆரம்பித்தார். சுக்ரீவன் தனது அண்ணன் வாலியினால் ராஜ்யத்தையும் மனைவியையும் இழந்து தற்போது காட்டில் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். உங்கள் உதவியால் அவர் தனது ராஜ்யத்தையும் மனைவியையும் அடைவார். அவரது உதவியால் நீங்கள் உங்களது மனைவியை அடைவீர்கள். வாருங்கள் உங்களை சுக்ரீவனிடம் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி தனது உடலை பெரிய உருவமாக மாற்றிக்கொண்டார் அனுமன். ராமர் லட்சுமணர் இருவரையும் தனது தோள்களில் அமர வைத்து ரிச்ய மலையிலிருந்து சுக்ரீவன் இருக்கும் மலய மலைக்கு பறந்து சென்றார் அனுமன். சுக்ரீவனிடம் ராமரை பற்றிய அனைத்து விவரங்களையும் சொல்லி இவரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டால் நீங்கள் இழந்த ராஜ்யத்தை அடையலாம் என்று விரிவாக எடுத்துச் சொன்னார் அனுமன்.
ராமரைப் பார்த்ததும் சுக்ரீவன் பேச ஆரம்பித்தார். ராஜகுமாரனே வானரமான என்னுடைய நட்பை நீங்கள் தேடி வந்ததினால் இப்போதே உங்களை நட்பை ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய நட்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தனது கையை நீட்டினார். இருவரும் கைகளை பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்கள். சுக்ரீவன் தன்னுடைய அண்ணன் வாலியால் தனக்கு ஏற்பட்ட தூக்கத்தை பகிர்ந்து கொண்டான். எனது அண்ணன் வாலியால் ராஜ்யத்தையும் இழந்து மனைவியையும் இழந்தேன். என்னை தாக்க வருவானே என்று அவனுக்கு பயந்து இக்காட்டில் அங்கும் இங்கும் திரிந்து ஒளிந்து கொண்டு காலத்தை கழித்து வருகிறேன். நீங்கள் வாலியை கொன்று என் துக்கத்தை தீர்த்து எனக்கு ராஜ்யத்தையும் மனைவியையும் திரும்ப பெறும்படி செய்யுங்கள் என்றான் சுக்ரீவன். அதற்கு ராமர் அறம் தவறி உன்னுடைய மனைவியை தூக்கிச் சென்ற வாலியை கொல்வேன் இது நிச்சயம். என்னுடைய அம்புகள் வீண்போகதவை. என் அம்புக்கு வாலி நிச்சயம் இரையாவான் இதில் சந்தேகம் இல்லை என்று உறுதி கூறினார். ராமர் கூறிய வார்த்தையை கேட்ட சுக்ரீவன் உங்களால் நான் இழந்தவைகள் அனைத்தையும் பெறுவேன் என்று மகிழ்ச்சி அடைந்தான்.
ராமர் சுக்ரீவனிடத்தில் உறுதி கூறிய அதே நேரத்தில் வாலிக்கும் லங்கையில் இருக்கும் சீதைக்கும் ராவணனுக்கும் இடது கண் துடித்தது. சீதைக்கு மங்கள கரமாக துடித்தது. இதனை அறிந்த சீதை ராமர் தம்மை தேட ஆரம்பித்து விட்டார். நம்மை ராட்சசன் தூக்கி வந்ததை அறிந்திருப்பார். நாம் இங்கிருப்பது அவருக்கு தெரிந்து விட்டது. விரைவில் நம்மை காப்பாற்ற வந்துவிடுவார் என்று ஆறுதலடைந்தாள். ராவணனுக்கும் வாலிக்கும் இடது கண் அபசகுனமாக துடித்தது.
துர்வாச முனிவர் திருமுருகன் பூண்டியை வந்தடைந்து திருமுருகநாதருக்கு பூஜைகள் செய்தார். அங்கு பிதுர்க்கிரியை செய்வதற்கு சிறந்த இடம் என்பதை உணர்ந்தர். மறுதினம் தை அமாவாசை புண்ணியகாலமாக இருந்தது. எனவே தை அமாவாசை விடியற் காலையில் ஆலயத்திற்கு அருகே ஒரு பூந்தோட்டத்தில் சிவபூசை ஹோமம் செய்தார். அன்னத்தை நிவேதனம் செய்து பிதுர்களுக்கு மந்திர பூர்வமாக உணவு அளிக்கும் முன்பு காகத்திற்கு உணவு வைத்தார். அப்போது ஒரு காகம் வந்து மற்றைய காகங்களையும் கூவி அழைத்துச் சாப்பிட்டு தன் குஞ்சுக்கு கொடுக்க வாயில் உணவை அடக்கிக் கொண்டு தன் இருப்பிடம் சென்றது. செல்லும் வழியில் திருப்பிக்கொளியூர் என்னும் அவிநாசியிலுள்ள மற்றொரு காகம் அக்காகத்தை வந்து எதிர்த்து சோற்றைப் பறித்தது. அச்சோற்றில் சில பருக்கைகள் சிவவேடம் பூண்டவரின் பிட்சா பாத்திரத்தில் விழுந்தது. அதனை அறியாத அவர் அந்தச் சோற்றை உண்டு மகிழ்ந்தான்.
சோற்றை இழந்த காகம் வேறிடம் சென்று அன்னம் தேடி தன் குஞ்சுக்கு கொண்டு வரும்போது ஒரு வேடன் தன் அம்பால் அக்காகத்தை அடித்தான். காகம் திருப்புக்கொளியூர் எல்லையில் விழுந்து இறந்தது. அப்போது அந்த காகம் தேவவுருவம் பெற்று தேவ விமானத்தில் திருக்கைலையை அடைந்தது. உமாதேவியரோடு சிவபெருமான் எழுந்தருளிய சந்நிதியின் முன் நின்று வணங்கி எழுந்து கை குவித்து நின்றது. சிவகணங்களுக்கு ஒரு காகத்திற்கு முக்தியா என்று ஆச்சரியமடைந்தனர். சிவபெருமான் புன்முறுவல் பூத்து காகம் தனது மூக்கினால் கொத்தி விழுந்த சில சோற்று பருக்கைகளை அன்னதானமாக ஒரு சிவனடியார் உண்டதனால் இக்காகம் இங்கு வந்தது என்று சிவகணங்களுக்கு கூறினார். காகத்திற்கு தீர்க்கத் துண்டன் என்ற பெயரிட்டுச் சிவகணங்களில் ஒன்றாக இருக்கச் செய்தார்.
பலராமனிடம் ஒரு அரக்கன் சண்டைக்கு வரும்படி சவால் விட்டான். பலராமனும் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார். பலராமன் தனது புஜத்தை உயர்த்தி அந்த அரக்கனின் தலையை நசுக்கப் போனார். அப்போது அந்த அரக்கன் பலராமனின் உருவத்தை விட இரண்டு மடங்கு வளர்ந்து நின்றான். பலராமனும் தனது வரத்தைப் பயன்படுத்தி, இரண்டு மடங்கு வளர்ந்து அரக்கனைத் தாக்கச் சென்றார். அரக்கனோ மேலும் வளர்ந்து பலராமன் மீது குன்றுகளைப் பிடுங்கி எறியத் தொடங்கினான். ஒருகட்டத்தில் பலராமன் தன்னால் அரக்கனை வெல்லமுடியாதென்று உணர்ந்து கொண்டான். சகோதரன் கிருஷ்ணனிடம் சென்று உதவி கேட்டான்.
அண்ணா இந்தப் பிரச்சினையை என்னிடம் விடுங்கள். நான் அந்த அரக்கனைப் பார்த்துக் கொள்கிறேன். என்று உறுதியளித்த கிருஷ்ணன் அரக்கன் இருக்குமிடத்திற்கு வந்தார். கிருஷ்ணனின் கையில் எந்த ஆயுதமும் இல்லை. இரண்டு கைகளையும் அகலவிரித்து அரக்கனைப் பார்த்து புன்னகை பூத்தார். அரக்கனின் உருவம் சாதாரண மனித வடிவை அடைந்தது. வா என் தோழனே என்று மீண்டும் கூப்பிட்டு அவன் அருகில் சென்றார். அரக்கனின் உருவம் சிறியதாகிக் கொண்டே சென்றது. அரக்கன் அருகில் சென்ற கிருஷ்ணன் அவனை அரவணைத்து தட்டிக்கொடுத்தார். இன்னும் சிறியவனாகிவிட்டான் அரக்கன். இதைப் பார்த்த பலராமனுக்கோ ஆச்சரியம். தம்பி எனக்கு இந்த விஷயம் புரியவேயில்லை. அவனை எப்படி இத்தனை சிறியனவனாக்கினாய்? என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர் இந்த அரக்கனின் பெயர் குரோதம். நீ கோபமாகும் போது அவனுக்கு அது உணவாகும். மற்றவனின் கோபத்தில் தன்னை வளர்த்துக் கொள்பவன் இவன். நீ உன்னுடைய கோபத்தைத் துறந்து விட்டு அன்பை அவனுக்கு ஊட்டினால் அவன் மிகவும் சிறியவனாகி விடுவான் என்று சொல்லி முடித்தார்.
வெறுப்பால் வெறுப்பை யாராலும் சமாதானப்படுத்தவே இயலாது. அன்பின் மூலமாக எல்லாவற்றையும் வெல்லமுடியும்.
ராமரும் லட்சுமணனும் ரிச்யமுக மலைக்கு வந்து சுக்ரீவனை தேடினார்கள். இதனை கண்ட சுக்ரீவனின் ஒற்றர்கள் வில்லும் அம்பும் வைத்துக்கொண்டு இருவர் வனத்தில் யாரையோ தேடுகின்றார்கள் என்று சுக்ரீவனிடம் செய்தி சொன்னார்கள். இதனை கேட்ட சுக்ரீவனுக்கும் அவனது படைகளுக்கும் பயம் பிடித்துக் கொண்டது. ராஜ்யத்தில் இருந்து துரத்தப்பட்ட நாம் வாலியால் கண்டு பிடிக்க முடியாத மலைப்பிரதேசத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றோம். இங்கு நம்மை தேடி வாலி மாறு வேடத்தில் வந்திருப்பானோ அல்லது வாலியின் நண்பர்கள் நம்மை அழிக்க இங்கு வந்திருக்கின்றார்களோ என்று சுக்ரீவன் பயந்தான். அவனது படைகள் பயந்து அங்கும் இங்கும் ஓடி ஒளிய இடம் தேடினார்கள். அனுமன் சுக்ரீவனுடைய முதல் மந்திரி அவர் சுக்ரீவனுக்கு தைரியம் சொன்னார். வந்திருக்கும் இருவரை பற்றிய செய்தியை கேட்டால் அவர்கள் வாலியோ அவனது நண்பர்களோ இல்லை என்று எண்ணுகிறேன். அதனால் நாம் பயப்பட வேண்டியதில்லை. நான் சென்று அவர்களை பற்றிய தகவல்களை அவர்களிடமே கேட்டு தெரிந்து கொண்டு வருகிறேன் என்றார். அனுமனிடமிருந்து வாலி வரவில்லை என்ற வார்த்தையை கேட்ட சுக்ரீவன் மிகவும் மகிழ்ந்தான். மிகவும் சாமர்தியமாக அவர்களை பற்றிய உண்மையை அறிந்து கொண்டு வா. அவர்கள் அங்கும் இங்கும் அழைந்து தேடுவதைப் பார்த்தால் சிறிது பயமாக இருக்கிறது. ஜாக்கிரதையாகப சென்று வா என்று அனுப்பி வைத்தார்.
ராமர் இருக்கும் இடத்திற்கு அனுமன் ஒரு பிராமண வடிவமெடுத்து சென்றார். தூரத்தில் ராமரைக் கண்டதும் அனுமனின் உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சி உண்டாகியது. ராமரின் அருகில் வந்து அவரின் முகத்தைப் பார்த்ததும் அனுமன் பரவச நிலையை அடைந்தான். ராமரிடம் உள்ளது உள்ளபடி உண்மையை பேச ஆரம்பித்தார். இக்காட்டில் சுக்ரீவன் என்கின்ற வனராஜா தன் அண்ணனால் துரத்தப்பட்டு மறைந்து வாழ்ந்து வருகிறார். அவருடைய மந்திரி நான் எனது பெயர் அனுமன் நான் வாயுவின் புத்திரன். எனது அரசரின் உத்தரவின் படி தங்களை பற்றி தெரிந்து கொள்ள மாறுவேடமிட்டு வந்திருக்கின்றேன். நீங்கள் இந்த வனத்திற்கு தவம் செய்ய வந்த தவஸ்விகள் போல் மரஉரி தரித்து வேடமணிந்து வந்திருக்கின்றீர்கள். மனதைக் கவரும் ரூபம் கொண்ட நீங்கள் தேவ ரிஷிகளைப் போல் கம்பீரமாக உள்ளீர்கள். நீங்கள் இந்த வனத்திற்கு வந்ததும் முன்பை விட இந்த வனம் மிகவும் அழகாக இருக்கின்றது. பெரிய ராஜ்யத்தை ஆட்சி செய்ய பிறத்தவர் போலவே இருக்கின்றீர்கள். உங்களுடைய பராக்கிரமத்தை பார்த்து இந்த காட்டில் இருக்கும் பல ஜீவன்கள் பயப்படுகின்றது. நீங்கள் யார் எங்கிருந்து வந்திருக்கின்றீர்கள் என்று அனுமன் இருவரிடமும் கேட்டு தன் சுயஉருவை எடுத்துக்கொண்டார்.
ராமர் அனுமனின் பேச்சை ரசித்தார். அனுமனின் பணிவான வார்த்தைகளை கேட்ட ராமர் லட்சுமணனிடம் இவர் பேசிய பேச்சின் அழகை பார்த்தாயா எவ்வளவு சரியான படி வார்த்தையை உபயோகித்து இலக்கணப்படி பேசுகிறார். வேதங்களை முறையாக கற்றவர் போல் பேசுகிறார். இவரின் பேச்சால் எனக்கு முழு நம்பிக்கை வந்திருக்கிறது. தூதர் என்பவர் இவரைப்போல் இருக்க வேண்டும். இவரை தூதராக கொண்ட சுக்ரீவனுக்கு எந்த காலத்திலும் குறை இருக்காது. நாம் சுக்ரீவனை தேடி வந்திருக்கின்றோம் அவரே நம்மை தேடி தூதரை அனுப்பியிருக்கிறார். இவரிடம் நாம் யார் என்பதையும் சுக்ரீவனிடம் நட்பு தேடி வந்திருக்கின்றோம் என்பதையும் சொல்லி அவர் இருக்குமிடத்திற்கு நம்மை அழைத்துச்செல்ல அனுமதி பெற்றுக்கொள். நாம் விரைவில் அவரை சந்திக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார்.
ராமரிடம் ராட்சசன் பேச ஆரம்பித்தான். எனது பெயர் கபந்தன். பிரம்மாவை குறிந்து கடுமையான தவம் இருந்து நீண்ட ஆயுளைப் பெற்றேன். நீண்ட ஆயுள் கிடைத்து விட்டது இனி யாராலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற கர்வத்தில் இந்திரனை போருக்கு அழைத்தேன். இந்திரனின் ஆயுதத்தால் எனது தலையும் காலும் உடலுக்குள் சென்று விட்டது. நீண்ட ஆயுள் பெற்ற நான் வாய் இல்லாமல் சாப்பிடாமல் எப்படி வாழ்வேன் என்று புலம்பினேன். கால்கள் இல்லாததினால் நீண்ட கைகளையும் வயிற்றுப்பகுதியில் வாயும் கொடுத்து இதே உடலுடன் இருப்பாயாக என்று இந்திரன் என்னை சபித்து விட்டுவிட்டான். இந்திரனிடம் சாப விமோசனம் கேட்டு முறையிட்டேன். ஒரு நாள் ராமர் லட்சுமணன் இருவரும் வந்து உனக்கு விமோசனம் கொடுப்பார்கள் என்று சாப விமோசனமாக கூறினார். தற்போது எனது கையை நீங்கள் வெட்டியதும் எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது. நீங்கள் தான் ராம லட்சுமணன் என்று எண்ணுகிறேன். எனது உடலை நீங்கள் எரிந்து விடுங்கள். நான் எனது பழைய உடலெடுத்து தேவலோகம் சென்று விடுவேன் என்று கேட்டுக்கொண்டான். ராம லட்சுமணன் இருவரும் காட்டில் விறகுகளை குவித்து அந்த ராட்சச உடலை எரித்துவிட்டனர். அந்த நெருப்பில் இருந்து மங்கள ரூபத்துடன் கபந்தன் வெளியே வந்து ராமரை வணங்கினான். நீங்கள் சீதை தேடிக் கொண்டிருக்கின்றீர்கள். முதலில் பம்பா சரஸ் நதிக்கரைக்கு அருகில் இருக்கும் ரிச்யமுக மலையில் வசித்து வரும் சுக்ரிவன் என்ற வன ராஜாவை சந்தியுங்கள். அவர் தனது அண்ணன் வாலியால் ராஜ்யத்தில் இருந்து துரத்தப்பட்டு காட்டில் வாழ்ந்து வருகிறார். அவரை சந்தித்து அவருடைய நட்பை பெற்றுக் கொள்ளுங்கள். ராட்சசனிடம் இருந்து சீதையை மீட்க அவர் உங்களுக்கு உதவி செய்வார். நீங்கள் நிச்சயமாக சீதையை அடைவீர்கள் என்று சொல்லி தேவலோகம் நோக்கி புறப்பட்டான் கபந்தன்.
ராமரும் லட்சுமணனும் பம்பா சரஸ் நோக்கி சென்றார்கள். பம்பா சரஸ் நதிக்கரைக்கு அருகில் ஆசிரமம் ஒன்று இருப்பதை கண்டு அதன் அருகில் சென்றார்கள். ஆசிரமத்தில் இருந்த வயதான பெண்மணி வந்திருப்பது இறைவனின் அவதாரம் என்பதை தனது ஞான திருஷ்டியில் அறிந்து கொண்டாள். அவர்களை வணங்கி வரவேற்று உணவளித்து உபசாரங்கள் செய்தாள். உபசாரங்களை ஏற்றுக்கொண்ட ராமர் தாங்கள் யார்? இந்த ஆசிரமத்தில் இருந்த ரிஷிகள் எங்கே என்று கேட்டார். அதற்கு அந்த வயதான பெண்மணி எனது பெயர் சபரி. இந்த இடம் மதங்க மகரிஷியின் ஆசிரமம். இங்கிருந்த ரிஷிகள் அனைவரும் தங்களது ஆத்ம சாதனம் முற்றுப்பெற்று சொர்க்கம் சென்று விட்டார்கள். எனது ஆத்ம சாதனம் முற்றுப்பெறும் தருவாயில் எனது குருவானவர் தான் சொர்க்கம் செல்வதற்கு முன்பாக எனக்கு ஓர் உத்தரவிட்டுச் சென்றார். இந்த ஆசிரமத்திற்கு தசரதரின் புதல்வர்கள் ராம லட்சுமணர்கள் வருவார்கள். அவர்களுக்கு உணவு உபசரனைகள் செய்ய வேண்டும் என்று எனக்கு கட்டளை இட்டு சொர்க்கம் சென்றார். தங்களின் வரவிற்காக இத்தனை காலம் காத்திருந்தேன். தங்களை தரிசித்ததில் நான் மேன்மை அடைந்து விட்டேன் என்று சொல்லி ராமருக்கு பரவச நிலையில் வந்தனைகளும் வழிபாடுகளும் செய்தாள். சபரியின் வழிபாடுகளை ராமர் ஏற்றுக்கொண்டார். தனது குருவின் உத்தரவை செயல் படுத்திய சபரி ராமரை தரிசித்த மகிழ்ச்சியில் தனது உடலை விட்டு சொர்க்கம் சென்றாள்.
ராமரும் லட்சுமணனும் பம்பா சரஸ் நதியில் குளித்த பின் புத்தணர்ச்சி பெற்று மனம் தெளிந்திருப்பதை உணர்ந்தார்கள். ராமர் லட்சுணனிடம் நாம் சீதையை மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கை எனது மனதில் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. நாம் நிச்சயம் வெற்றி அடைவோம். நாம் அடுத்து ரிச்யமுக மலைக்கு சென்று வன ராஜா சுக்ரீவனை பார்க்கும் முயற்சியில் அடுத்து ஈடு படவேண்டும் விரைவாக சொல்வோம் வா என்று அங்கிருந்து இருவரும் கிளம்பினார்கள்.
ஆரண்ய காண்டம் முற்றியது அடுத்து கிஷ்கிந்தா காண்டம்
பாஞ்சசன்யம் அல்லது பாஞ்சன்னிபம் என்பது திருமாலுடைய சங்கின் பெயராகும். இந்த ஒரு சங்கில் 4 சங்கங்கள் இருக்கும். மொத்தத்தில் ஐந்து சங்குகள் இருக்கும். இந்த சங்கு வலம்புரி சங்கின் வகையைச் சார்ந்தது. சங்கொலி என்பதே பிரணவ ஓசையை வெளிப்படுத்தும் ஒரு இயற்கை வாத்தியம். அதிலும் சுத்தமாக அட்சரம் பிசகாமல் பிரணவ மந்திரத்தை ஒலிப்பது பாஞ்சஜன்யம் சங்கு மட்டும் தான். இந்த பாஞ்சஜன்யம் என்ற சங்கில் இருந்து எழக்கூடிய ஓம்கார நாதமானது அட்சரம் ஒரு துளியும் பிசகாத நாத பிரம்மமானது அதன் ஒலியைக் கேட்கும் அனைவரையும் தமது மூல இயல்பான ஆத்ம நிலையுடன் ஒரு கனம் ஒன்ற வைக்கும் விதமாக அவ்வொலி இருந்தது என்பதை மகான்கள் எடுத்துக்காட்டியுள்ளார்கள். ஆயிரம் சிப்பிகள் சேருமிடத்தில் ஒரு இடம்புரி சங்கு கிடைக்கும். ஆயிரம் இடம்புரி சங்குகள் விளையும் இடத்தில் ஒரே ஒரு வலம்புரி சங்கு கிடைக்கும். வலம்புரி சங்குகள் ஆயிர கணக்கில் எங்கு இருக்கிறதோ அங்கே அரிதான சலஞ்சலம் என்ற சங்கு கிடைக்கும். சலஞ்சலம் சங்கு பல்லாயிர கணக்கில் உற்பத்தியாகுமிடத்தில் அரிதினும் அரிதான பாஞ்சஜன்ய சங்கு கிடைக்கும்.
தலைச்சங்காடு சிவத் தலத்தில் கடுந்தவம் புரிந்து திருமால் பாஞ்சசன்ய சங்கினை பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. இந்த சங்கானது உலக உயிர்களை காப்பதற்காக திருமாலுக்கு சிவபெருமான் சங்கினை வழங்கிய காரணத்தினால் இத்தல இறைவன் சங்காரண்யேஸ்வரர் சங்கவனநாதர் என்றும் அழைக்கப்பெறுகிறார். கிருஷ்ணன் தன் கையில் பாஞ்சஜன்யம் சங்கை வைத்திருக்கிறார். சங்கு மகாலக்ஷ்மியின் அம்சமாக உள்ளது. கிருஷ்ணர் பயன்படுத்தியது பாஞ்சஜன்யம் சங்கு அது போல் அர்ஜுனன் தேவதத்தம் சங்கையும் பீமன் மகாசங்கம் சங்கையும் தர்மர் அனந்த விஜயம் சங்கையும் நகுலன் சுகோஷம் சங்கையும் சகாதேவன் மணிபுஷ்பகம் சங்கையும் பயன்படுத்தினர்.
படத்தில் உள்ள இந்த சங்கின் நுனியிலும் அடியிலும் விளிம்பிலும் தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. சங்கின் நுனியில் ரத்தினங்கள் கொண்டு அழகு படுத்தப்பட்டுள்ளது. இந்த அபூர்வமான பாஞ்சஜன்ய சங்கு மைசூரில் உள்ள ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவியின் ஆலயத்தில் அன்னையின் அபிஷேகத்திற்காக பயன் படுத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கு மைசூர் சமஸ்தான மன்னர்களால் மைசூர் சாமுண்டீஸ்வரி அன்னைக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.
ராமர் தூரத்தில் இருந்த ஜடாயுவை பார்த்ததும் அதோ ராட்சசன் சீதையை தின்று விட்டு நம்மை ஏமாற்ற படுத்திருக்கிறான் என்று ராமர் வில் அம்பை எடுத்தார். அப்போது ஜடாயு ராமனே நீ என்னை கொல்ல வேண்டாம் நானே சிறிது நேரத்தில் இறந்து விடுவேன். நீ தேடிக் கொண்டிருக்கும் சீதையை பலவந்தமாக ராவணன் தன்னுடைய மாய ரதத்தில் தூக்கிச் சென்றான். அப்போது ராவணனுடன் சண்டையிட்டு அவனை தடுத்து சீதையை மீட்க முயற்சித்தேன். அவனது தேரோட்டியை கொன்றேன். அவனது தேரையும் உடைத்தேன். அதன் பாகங்களும் இறந்த தேரோட்டியும் அருகில் இருப்பதை பார். சண்டையிட்டு கொண்டிருந்த நான் சிறிது களைப்பாக இருக்கும் போது என் சிறகை ராவணன் வெட்டி விட்டான். எதிர்க்க யாரும் இல்லாமல் சீதையை ஆகாய மார்க்கமாக கொண்டு சென்று விட்டான். சிறகு உடைந்த என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உன்னிடம் செய்தியை சொல்வதற்காக உயிரை பிடித்துக் கொண்டிருக்கின்றேன் என்று சொல்லி முடித்தான் ஜடாயு.
ராமரின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறு போல் சுரந்தது. வில்லை வீசி எறிந்தார். ஜடாயுவை கையில் தூக்கி கட்டி அணைத்தார். ராமர் லட்சுமணன் இருவருக்கும் துக்கம் எல்லை கடந்து போயிற்று. ராமர் பேச ஆரம்பித்தார். என்னை போன்ற துர்பாக்கியசாலி யாருமில்லை. தாய் சகோதரன் உறவினர்களை பிரிந்து காட்டிற்கு வந்தேன். இப்போது மனைவியை பிரிந்து துக்கத்தில் இருக்கிறேன். இப்போது தந்தை போல் இருந்த ஜடாயுவையும் இழந்து விட்டேன். தங்களை இழப்பது சீதையை இழந்த துக்கத்தை விட பெரிய துக்கமாக இருக்கிறது. நான் நெருப்பில் விழுந்தாலும் என் துர்பாக்கியமெல்லாம் சேர்ந்து நெருப்பையும் அணைத்து விடும். கடலில் விழ்ந்தால் என் துர்பாக்கியமெல்லாம் சேர்ந்து கடல் நீரும் வற்றிப் போகும். நான் பெரும் பாவி. லட்சுமணா உன்னையும் இழந்து விடுவேனோ என்று பயப்படுகிறேன் என்று சொல்லி ஜடாயுவை கட்டி அணைத்து நீங்கள் சீதையை கண்டீர்களா? அவள் எப்படி இருந்தாள். அந்த ராட்சசன் அவளை மிகவும் கொடுமை படுத்தினானா? சீதை மிகவும் துடித்தாளா என்று கேட்டார். ஜடாயு மரணத்தின் இறுதியில் பேச சக்தியின்றி பேச ஆரம்பித்தான். பயப்படாதை ராமா சீதைக்கு ஒரு பாதிப்பும் வராது. நீ மீண்டும் சீதையை அடைந்து பெரு மகிழ்ச்சியை அடைவாய் என்று சொல்லி உயிர் நீத்தான் ஜடாயு. ராமர் லட்சுமணனிடம் உலர்ந்த கட்டைகளை கொண்டு வா நமது தந்தைக்கு நம்மால் செய்ய முடியாமல் போன கிரியைகளை ஜடாயுவுக்கு செய்வோம் என்றார். இருவரும் ஜடாயுவுக்கு செய்ய வேண்டிய இறுதி கடமைகளை செய்து முடித்தனர். எதிர்பாராத சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்ததினால் ராம லட்சுமணர்கள் இருவரும் இயற்கையான தைரியத்தை இழந்து ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு ராவணனை சென்றடைந்து சீதையை எவ்வாறு மீட்கலாம் என்று பேசிக்கொண்டே காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார்கள்.
ராமருக்கு முன்பாக கபந்தன் என்ற ராட்சசன் கோர உருவத்துடன் வந்தான். அவனுக்கு தலையும் இல்லை கால்களும் இல்லை. மார்பில் ஒரு கண்ணும் பெரிய வயிறும் அதில் வாயும் மிக நீண்ட இரு கைகளுடன் அகோர உருவத்துடன் ராட்சசன் இருந்தான். இரண்டு கைகளையும் நீட்டி கையில் கிடைக்கும் காட்டு விலங்குகளை தின்று உயிர் வாழ்ந்து கொண்டிருந்தான் அந்த ராட்சசன். ராமர் லட்சுமணன் இருவரையும் இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டான் ராட்சசன். ராமர் லட்சுமணனிடம் நீ ஒரு கையை துண்டு துண்டாக வெட்டிவிடு. நான் ஒரு கையை வெட்டி விடுகிறேன் என்று வெட்ட ஆரம்பித்தார். இருவரும் ராட்சசனின் இரண்டு கைகளையும் வெட்டி விட்டனர். கைகள் வெட்டப்பட்ட ராட்சசன் ஒன்றும் செய்ய முடியாமல் பேச ஆரம்பித்தான்.
மகாபாரதக் கதை முழுவதையும் வியாச பகவானிடம் கேட்டறிந்தார் வியாசரின் சீடர் ஜைமினி முனிவர். அவருக்குச் சில சந்தேகங்கள் மீதமிருந்தன. அவற்றை வியாசரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று மகரிஷியே எனக்கு மகாபாரதத்தில் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் தீர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஜைமினி உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் நியாயமானவையே உங்கள் வினாக்களுக்கு விரிவாக விளக்கமளிக்க கால அவகாசம் இல்லை. நீங்கள் விந்திய மலைக்குச் சென்று அங்கு வசிக்கும் பிங்காக்ஷன், நிபோதன், சுபத்திரன், சுமுகன் என்ற நான்கு ஞான பட்சிகளைக் கேட்டால் அவை உங்கள் ஐயங்களைத் தீர்க்கும் என்றார். வியப்படைந்த ஜைமினி முனிவரே பக்ஷிகள் பேசுமா? அவை மகா பண்டிதர்களைப் போல் தர்ம சந்தேகங்களைத் தீர்க்குமா? என வினவினார். அந்த நான்கு பட்சிகளின் கதையை வியாசர் சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு முறை தேவேந்திரன் அப்சர ஸ்தீரிகளுடன் நந்த வனத்தில் உலாவிக் கொண்டிருக்கையில் அங்கு நாரத மகரிஷி வந்தார். அவரை வரவேற்ற தேவேந்திரன் அவரிடம் முனிவரே இந்த அப்சர பெண்களில் சிறந்த ஒருத்தியை தேர்ந்தேடுத்து அவளை நாட்டியம் ஆடும்படி ஆணையிடுங்கள் என்றான். நாரதர் அப்சரப் பெண்களே உங்களில் யார் ரூப லாவண்யங்களில் உயர்ந்தவர் என்று எண்ணுகிறீரோ அவர் ஆடலாம் என்றார். அவர்களில் ஒவ்வொருவரும் தானே சிறந்தவள் என்று வாதிட்டுக் கொள்ள ஆரம்பித்தனர். தேவேந்திரன் அவர்களுள் சிறந்தவளை நாரதரே தீர்மானிக்க வேண்டும் என்றான். நாரதர் அதற்கு ஒரு வழி கூறினார். இமாலயத்தில் துர்வாச முனிவர் கடுந்தவம் செய்து வருகிறார். உங்களில் யார் நடனமாடி அவர் தவத்தைக் கலைக்கின்றீர்களோ அவர்களே சிறந்தவர் என்று தீர்மானிப்பேன் என்றார் நாரதர். துர்வாசரின் பெயரைக் கேட்டதும் அப்பெண்களுக்கு நடுக்கம் ஏற்பட்டது. வபு என்ற பெண் நான் துர்வாசர் இருக்கும் இடத்திற்குச் சென்று அவரின் தவத்தை கலைக்கிறேன் என்று சொல்லிப் புறப்பட்டாள். வபு தன் ஆடலாலும் பாடலாலும் துர்வாசரின் தவத்தைக் கலைக்க முற்பட்டாள். அதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர் அப்சரப் பெண்ணே நீ கழுகாகப் பிறப்பாய் என்று சபித்தார். அவள் துர்வாசரைப் பணிந்து தன் தவறை மன்னித்து சாப விமோச்சனம் அளிக்கும்படி வேண்டினாள். கருணை கொண்ட முனிவர் உனக்கு நான்கு குஞ்சுகள் பிறக்கும். நீ அர்ஜுனனின் அம்பு பாய்ந்து மரணமுற்று நிஜ ரூபத்தை அடைந்து இந்திரலோகம் செல்வாய் என்று ஆசீர்வதித்தார். வபு கழுகாகப் பிறந்து கர்பமுற்றாள். அப்போது மகாபாரத யுத்தம் குருக்ஷேத்திரத்தில் நடந்து கொண்டிருந்தது. அதனைப் பார்க்கச் சென்ற த்ராக்ஷி மேலே பறந்தபடியே யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அர்ஜுனன் விடுத்த ஓர் அம்பு அவள் மேல் பாய்ந்தது. உடனே த்ராக்ஷியின் கர்பத்திலிருந்த நான்கு முட்டைகளும் பூமியில் விழுந்தன. என் குழந்தைகளை தெய்வம் தான் காக்க வேண்டும் என்று பிரார்த்தித்து உயிர் துறந்தாள்.
யுத்த பூமியில் பகதத்தன் என்ற வீரனின் வாகனமான சுப்ரதீபம் என்ற யானையின் கழுத்தில் தொங்கிய மணி அம்பு பட்டு அறுந்து சரியாக அந்த முட்டைகளின் மேல் கவிழ்ந்து விழுந்து அந்த மணியின் கீழ் முட்டைகள் பாதுகாப்பாகக் கிடந்தன. பாரத யுத்தம் முடிந்து குருக்ஷேத்திர பூமியில் அமைதி ஏற்பட்ட பின் ஒரு நாள் காலை சமீகர் என்ற மகா முனிவர் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்தார். மணியின் அடியிலிருந்து பறவைக் குஞ்சுகளின் கீச் கீச் எனும் ஒலியைக் கேட்டார். அதை கேட்டு ஆச்சர்யமாய்ந்த முனிவர் மணியைத் தூக்கிப் பார்த்து அங்கு நான்கு பறவைக் குஞ்சுகள் இருக்கக் கண்டார். கருணையோடு அவற்றைத் தம் ஆசிரமத்திற்கு எடுத்து வந்தார். அப்போது அக்குஞ்சுகள் அவரிடம் மகானுபாவரே எங்களை கோரமான மரணத்திலிருந்து காத்தருளினீர்கள். எங்களுக்கு நீங்களே தாய் தந்தை குரு ஆவீர்கள். தங்களுக்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம். உங்களுக்கு நாங்கள் என்ன சேவை செய்ய வேண்டுமோ கூறியருளுங்கள் என்றன. வியப்புற்ற சமீகர் பறவைக் குஞ்சுகளே நீங்கள் யார் எதனால் இந்த பட்சி ஜென்மத்தை அடைந்தீர்கள் என்று கேட்டார்.
முனிவரே நாங்கள் நால்வரும் சுக்ருதி எனும் மகா முனிவரின் புதல்வர்களாகப் பிறந்திருந்தோம். சாஸ்திரங்களை நன்றாகக் கற்றறிந்தோம். பெற்றோரைப் பூஜித்து வாழ்ந்து வந்தோம். ஒரு நாள் எங்கள் தந்தையின் சத்திய நெறியைச் சோதித்தறிய விரும்பிய தேவேந்திரன் கழுகு உருவில் வந்து தனக்கு நர மாமிசம் வேண்டுமென்று கேட்டார். எங்கள் தந்தை எங்களிடம் யாராவது ஒருவர் இந்திரனுக்கு ஆகாரமாகுங்கள் என்று கட்டளை இட்டார். நாங்கள் பயந்து அதனை ஏற்கவில்லை. கோபமடைந்த எங்கள் தந்தை, துஷ்ட புத்திரர்களா நான் இந்த பட்சிக்கு ராஜனுக்கு வாக்களித்து விட்டேன். நீங்கள் என் பேச்சைக் கேட்கவில்லை. அதனால் பறவைகளாகப் பிறக்கக் கடவீர். என்று சபித்து விட்டார். பிறகு அவர் தன் உடலையே இந்திரனுக்கு உணவாகச் சமர்ப்பித்தார். இந்திரன் எங்கள் தந்தையின் தியாகத்தை மெச்சி மகிழ்ந்து எங்களிடம் நீங்கள் விந்திய மலையில் சென்று வசியுங்கள். வியாசரின் சீடரான ஜைமினி உங்களிடம் வந்து சில தர்ம சந்தேகங்களைக் கேட்பார். அவற்றைத் தீர்த்தவுடன் உங்கள் சாபம் விலகும். நீங்கள் பட்சிகளாக இருந்தாலும் சகல வேத தர்ம சாத்திரங்களையும் அறிந்த ஞான பக்ஷிகள் தர்ம பக்ஷிகள் என்று போற்றப் படுவீர்கள் என்று அருளினார். பறவைகள் இவ்விதம் தம் பூர்வ ஜென்மக் கதையைக் கூறக் கேட்ட சமீகர் நீங்கள் எனக்குச் செய்ய வேண்டிய சேவை எதுவும் இல்லை. நீங்கள் இனி விந்திய பர்வதத்திற்குச் செல்லுங்கள் என்று அனுப்பி வைத்தார். இப்போது அந்த பறவைகள் அங்கி இருக்கின்றன. அங்கு சென்று உனது சந்தேகங்களை தீர்த்துக்கொள் என்று அனுப்பி வைத்தார் வியாசர்.
ஜைமினி முனிவர் விந்திய பர்வதத்தில் ஞானப் பறவைகளைத் தேடிச் சென்றார். அப்போது அவைகள் இனிமையாக வேத அத்யயனம் செய்து கொண்டிருந்தன. அவற்றை அணுகி ஞானப் பறவைகளே நான் வியாசரின் சீடன். என்னை ஜைமினி என்பார்கள். என் சந்தேகங்களைத் தீர்த்து எனக்கு மனசாந்தி அளியுங்கள் என்றார். அப்பறவைகள் முனிவரே உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். எங்களுக்குத் தெரிந்த வரை கூறுகிறோம் என்று பதிலளித்தன. ஜைமினி தனது சந்தேகங்களைக் கேட்டார்
கௌரவ பாண்டவ யுத்தத்தின் போது பலராமர் ஏன் தீர்த்த யாத்திரை சென்றார்?
திரௌபதிக்குப் பிறந்த ஐந்து உப பாண்டவர்களும் திருமணம் கூட நிகழாமல் திக்கற்றவர் போல் அகால மரணமடையக் காரணம் என்ன?
பலராமர் பாண்டவர்களின் உறவினர். சுபத்திரையை அர்ஜுனனுக்கு மணம் முடித்து சம்பந்தியானவர். துரியோதனனுக்கு கதை யுத்தம் பயிற்றுவித்து குருவானவர். கிருஷ்ணரோ பாண்டவர் பக்கம் நிற்பவர். யுத்தத்தில் எந்தப் பக்கம் சேர்ந்தாலும் தனக்குப் பிரியமானவர்களோடு போர் செய்ய வேண்டி வரும். அச்சமயம் பலராமர் நைமிசாரண்யம் சென்ற போது பாகவத கதை சொல்லிக் கொண்டிருந்த சூத முனிவர் தன்னைப் பார்த்தவுடன் எழுந்து நிற்கவில்லை என்ற கோபத்தில் அவரைக் கொன்று விட்டார். அங்கிருந்த மகரிஷிகள் பலராமரைப் பார்த்து வெறுப்புடன் நீ செய்த பாவத்தை எல்லோரிடமும் சொல்லியபடி பன்னிரண்டு ஆண்டுகள் தீர்த்த யாத்திரை விரதம் அனுசரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டனர். தீர்த்த யாத்திரை செல்லும் சாக்கில் பலராமர் யுத்தத்திலிருந்து விலகி நின்றார்.
பாண்டவ புத்திரர்களான உப பாண்டவர்கள் முன் ஜென்மத்தில் விச்வேதேவர்கள் ஆவர்கள். ராஜா அரிச்சந்திரனை அரசுரிமையை விட்டு நீக்கி துன்புறுத்திய விச்வாமித்திரரை வானத்திலிருந்து பார்த்த விஸ்வேதேவர்கள் ஐந்து பேர் கருணை கொண்டு இத்தனை துன்பம் செய்கின்ற இந்த விசுவாமித்திரர் எந்த பாவ உலகிற்குச் செல்வரோ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அவ்வார்த்தைகளைக் கேட்ட விசுவாமித்திரர் ரோஷத்தோடு நீங்கள் ஐவரும் மனித உலகில் பிறப்பீராக என்று சாபமிட்டார். அப்போது விஸ்வேதேவர்கள் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்க சாந்தமடைந்து நீங்கள் மனித ஜென்மமெடுத்தாலும் மனைவி, சந்ததி, காமம், க்ரோதம் போன்றவை இன்றி மீண்டும் தேவர்கள் ஆவீர்கள் என்று ஆசீர்வதித்தார். இந்த ஐந்து விஸ்வேதேவர்களே திரௌபதியின் கர்பத்தில் பிறந்து விவாகம் பிள்ளைகள் போன்ற பந்தங்களில் சிக்காமல் பிரம்மசாரிகளாகவே அஸ்வத்தாமனின் கையால் மரணமடைந்தனர். ஞான பக்ஷிகளின் பதிலைக் கேட்டு மகிழ்ந்த ஜைமினி அவைகளிடம் அரிச்சந்திரனின் வரலாற்றை சம்பூர்ணமாகக் கேட்டு அறிந்து கொண்டார்.
மஹாத்மாக்களே எனக்கு இன்னும் சில ஐயங்கள் உள்ளன. அவற்றையும் தீர்த்து வையுங்கள் என்று வேண்டிக் கொண்டார். பக்ஷிகள் சம்மதித்தன. பாவங்கள் என்றால் என்ன என்று கேட்டார் ஜைமினி. முனிவரே பாவங்கள் தெரிந்து செய்பவை, தெரியாமல் செய்பவை என இரண்டு வகைப்படும். சின்னச் சின்னப் பாவங்களுக்கு உடனுக்குடன் பலன்கள் கிடைத்து விடும். ஏதோ ஒரு வியாதியின் உருவில் அவை அனுபவிக்கப்பட்டு விடும். பெரிய பாவங்களானால் ஜென்ம ஜென்மமாகத் துரத்தி வரும். தெரித்து செய்த பாவங்களுக்குத் தண்டனை பெரிதாக இருக்கும் என்று பதிலளித்தன தர்ம பக்ஷிகள். இவ்விதமாக இன்னும் தத்தாத்திரேயரின் கதை, காலயவனனின் கதை, மதாலசா சரித்திரம், கிருஹஸ்தாசிரம தர்மங்கள் போன்ற எத்தனையோ சந்தேகங்களைக் கேட்டார் ஜைமினி. அவற்றுக்கெல்லாம் ஞானப் பறவைகள் தகுந்த விளக்கங்கள் அளித்து அதன் மூலம் முக்தி பெற்றன. சந்தேக நிவர்த்தி அடைந்த ஜைமினி ரிஷி ஞான பட்சிகளின் உருவத்தில் இருந்த முனி குமாரர்களை ஆசீர்வாதித்து தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.
நம்முடைய பெரியவர்கள் நமக்குப் புரியாத சில விஷயங்களைப் புரிய வைப்பதற்காக கதைகள் புராணங்கள் வாயிலாக பல உண்மைகளையும் கருத்துக்களைச் சொன்னார்கள். கதைகளைக் கேட்டு அதற்குள் இருக்கும் உண்மைகளையும் கருத்துக்களையும் புரிந்து கொள்ள வேண்டும். கதையில் இது சரி இது தவறு என்று விவாதித்துக் கொண்டு இருக்கக்கூடாது
மகாபாரத கதையில் சூதாடக் கூடாது. சூதாடுகிற புத்தி வந்தால் மனைவியை கூட அடகு வைக்கும் நிலை வரும் எனவே சூதாடக்கூடாது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
ராமாயண கதையில் சாமவேதம் தெரிந்து பல கலைகளில் வல்லவனாக விளங்கி சிவனை கைலாயத்திலேயே போய் தரிசனம் செய்தாலும் ராவணன் பெண்ணாசையால் அழிந்து போனான். எனவே பெண்ணாசை கூடாது என்ற கருத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
அசுரர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்திருந்தும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் இவற்றினால் அழிந்தார்கள். அவர்கள் கடவுளிடம் வாங்கிய வரமும் பயனில்லாமல் போனது. எனவே காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் எனவே இந்த குணங்களை அருகில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
புராணங்களில் ஒரு கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்தை உயர்த்திக் கொண்டு போய் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு போனவன் ஒரு சிறிய தவறு செய்து அதலபாதாளத்தில் விழுகிறான் என்று புரியாதவர்களுக்கும் புரிகிற வகையில் கதைகளாக சொல்லி சிறு தவறு கூட செய்ய எண்ணக்கூடாது என்று நம் பெரியவர்கள் சொன்னார்கள்.
அரிச்சந்திரன் கதையில் எப்படிப்பட்ட சோதனை வந்தாலும் உண்மையை பேச வேண்டும் என்று நமக்கு கதை வடிவில் சொன்னார்கள். ஆனால் இப்போது உண்மை பேசினால் அரிச்சந்திரன் மாதிரி வாழ்க்கையில் எப்போதும் சோகத்தை அனுபவிக்க வேண்டும் போலிருக்கிறது என்று எதிர்மறையாக நினைக்கிறார்கள். தங்களுக்கு எண்ணங்களுக்கு ஏற்றார் போல் கதையின் கருத்துக்களை மாற்றி தத்துவங்களை கருத்துக்களை விட்டுவிட்டு கதைகளை மாத்திரம் பிடித்துக் கொள்கிறார்கள்.
ராமர் சிறிது நேரம் செயல்பட முடியாமல் தவித்தார். லட்சுமணா சீதையை ராட்சசர்கள் கொன்று தின்றிருப்பார்கள். சீதையை இழந்து விட்டேன். என்னை நம்பி வந்தவளை பாதுகாக்காமல் விட்டுவிட்டேன். என்னை போல் ஒரு பாவி உலகத்தில் இல்லை. இனி என் உயிர் எனக்கு வேண்டியதில்லை. வனத்திற்கு சீதையுடன் சென்றவன் ராட்சசர்களுக்கு சீதையை உணவாக கொடுத்து விட்டு தனியாக வந்திருக்கின்றான் என்று மக்கள் பேசுவார்கள். அவர்களுக்கு சமாதானம் சொல்ல என்னால் முடியாது. இனி அயோத்திக்கு தான் போக முடியாது. நீ அயோத்திக்கு சென்று நமது தாயார்களை பார்த்துக்கொள். பரதனிடம் அயோத்திக்கு இனி நீயே அரசன் என்று நான் உத்தரவிட்டதாக சொல்லிவிடு என்று அழது கொண்டே கூறினார்.
ராமருக்கு லட்சுமணன் தொடர்ந்து தைரியம் சொல்லிக் கொண்டே இருந்தான். மனநிலை தெளிவில்லாமல் தைரியம் இழந்தவர்கள் ஒரு செயலையும் செய்ய முடியாது. துக்கத்தை அடக்கிக் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் இந்த காடு மலை குகைகள் என்று அனைத்து திசைகளிலும் தேடுவோம். மகாவிஷ்ணு பலிச்சக்கரவர்த்தியை அடக்கி மூவுலகையும் அடைந்தது போல் நீங்களும் சீதையை நிச்சயம் அடைவீர்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தான். இருவரும் சீதையை தேடிக்கொண்டே இருந்தார்கள். அப்போது மான் கூட்டம் ஒன்றின் சகுனங்களை பார்த்த லட்சுமணன் தெற்கு திசை நோக்கி சென்று தேடலாம் வாருங்கள் என்று ராமரை அழைத்துச் சென்றான். வழியில் ஓரிடத்தில் பூக்கள் சிதறிக் கிடந்தது. பூக்களை கண்ட ராமர் இதோ நான் சீதைக்கு கொடுத்த பூக்கள் இங்கே சிதறிக்கிடக்கிறது என்று அழுதுகொண்டே சீதையை தேடி ஓட ஆரம்பித்தார். பூக்கள் இருக்கும் காட்டை சுற்றி தேடிப்பார்த்தார்கள். அங்கு ராட்சசனின் காலடித் தடங்களும் சீதையின் காலடித் தடங்களும் இருந்தன அருகில் சீதை அணிந்திருந்த மணிகள் சிதறிக் கிடந்தது. இதனை கண்ட ராமர் பார்த்தாயா லட்சுமணா சீதையை மிகவும் துன்புறுத்தி இருக்கிறான் ராட்சசன் என்று புலம்ப ஆரம்பித்தார்.
ராமரும் லட்சுமணனும் அந்த இடத்தை சுற்றி ஏதேனும் தடயங்கள் கிடைக்கின்றதா என்று பார்த்தார்கள். அருகில் தேரின் உடைந்த பாகங்களும் தேர் ஓட்டும் ராட்சச சாரதி ஒருவன் இறந்து கிடந்ததையும் கண்டார்கள். இரண்டு ராட்சசர்கள் சீதையை திண்பதற்காக சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள் பெரிய சண்டை ஒன்று இங்கு நடந்திருக்கின்றது. இந்த நேரத்தில் ஒரு தெய்வம் கூட சீதையை காப்பாற்ற வரவில்லை. இந்த கொடுமையான உலகத்தை என்னுடைய அஸ்திரங்களால் அழித்து விடுவதே சரியாக இருக்கும் நான் கற்ற அஸ்திரங்கள் பயன்படாமல் போகுமா பார்க்கலாம் என்று ராமர் லட்சுமணனிடம் புலம்பிக்கொண்டே கூறினார். லட்சுமணன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். உங்களுடைய பெரும் துயரத்தினால் உங்களுடைய இயற்கையான குணங்களை விட்டு விடாதீர்கள். ஒருவன் செய்த துஷ்ட செயலால் உலகத்தை வெறுக்கவோ கோபிக்கவோ தேவையில்லை. நம்முடைய எதிரி யார் என்று முதலில் தெரிந்து கொள்வோம். பிறகு செய்ய வேண்டியதை பற்றி யோசித்து செயல்படுவோம் என்று தைரியம் சொல்லிக்கொண்டே வந்தான். சிறிது தூரத்தில் பறவை ஒன்று சிறகு வெட்டப்பட்ட நிலையில் இரத்ததுடன் துடித்துக்கொண்டிருப்பதை கண்டார்கள்.
குறிப்பு:
ராமாயணம் புராணத்தில் ஆரண்ய காண்டம் பகுதியில் சீதையை இழந்த ராமர் புலம்பி அழுவதை படிக்கும் பலர் விஷ்ணுவின் அவதாரமாக இருக்கும் ராமர் ஏன் அழ வேண்டும். இறைவன் ஏன் துன்பப்படுகின்றார் என்று சந்தேகங்கள் கேட்பதுண்டு. அதற்கான பதில்
சீதை ராமரிடம் சரணடைந்திருப்பதை போல் இறைவனை சரணடைந்திருக்கும் பக்தன் சிறு தவறு செய்து இறைவனை சென்றடையும் பாதையை விட்டு வழி தவறிப் போனால் இறைவனின் திருவுள்ளம் துன்பப்படுகின்றது என்ற கருத்து இந்த இடத்தில் சித்தரிக்கப் பட்டிருக்கின்றது.