ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -39

பரதன் ராமரிடம் பேசினான். தந்தையின் ஆணையை நிறைவேற்றியே தீர வேண்டுமானால் நான் தங்களுக்கு பதிலாக 14 வருடங்கள் காட்டில் இருக்கிறேன். எனக்கு பதிலாக நீங்கள் அயோத்தியில் அரச பதவியை ஏற்றுக்கொண்டு ஆட்சி செய்யுங்கள் என்றான். ராமர் இதனைக்கேட்டு சிரித்தார். பரதா இது என்ன பண்ட மாற்று வியாபாரமா ஒருவன் கடமையை ஆபத்துக்காலங்களில் அவனால் செய்ய முடியவில்லை என்றால் மற்றோருவன் செய்வதுண்டு. நான் எற்றுக்கொண்ட விரதத்திற்கு என் உடல் சக்தியில்லாமல் இருந்து என்னால் செய்ய முடியவில்லை என்றால் தம்பி முறையில் நீ செய்யலாம். ஆனால் நான் திடகாத்திரமான வலிமையோடு இருக்கின்றேன். நான் சக்தியற்றும் நீ சக்தியுள்ளவன் என்றும் உன்னால் சொல்ல முடியுமா என்றார். பரதன் தலை குனிந்து நின்றான். வசிஷ்டர் பரதனிடம் நீ ராமனுடைய அனுமதியை பெற்றுக்கொண்டு அரசாட்சி செய் இதனால் எந்த பழி பாவமும் உன்னை வந்து சேராது. சத்தியமும் தர்மமும் காக்கப்படும் என்றார்.

ராமர் பரதனை அனைத்து அயோத்தியை நான் உனக்கு தந்த ராஜ்யமாக எண்ணி அரசாட்சி செய் என்று தன் அன்பின் சக்தியெல்லாம் அவன் மீது செலுத்தி கட்டளையிட்டார் ராமர். பரதன் ராமரிடம் அண்ணா நீயே என் தந்தை என் தெய்வம் நீ சொல்கின்றபடி செய்கின்றேன். நீங்கள் 14 வருடம் முடிந்ததும் அயோத்திக்கு வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்வேன் என்று உறுதி மொழி தாருங்கள். பின்னர் உங்கள் மிதியடியை தந்தீர்கள் என்றால் உங்கள் மிதியடியை சிம்மாசனத்தின் மீது வைத்து 14 வருடங்கள் கழித்து நீங்கள் வரும் வரை அரசாட்சி செய்வேன். எனது பணிகள் அனைத்தையும் உங்கள் மிதியடிக்கு சமர்ப்பிப்பேன் என்றான் பரதன். அப்படியே என்ற ராமர் தனது மிதியடியை பரதனிடம் கொடுத்தார். பரதன் ராமரின் மிதியடியை பெற்றுகொண்டு தன் தலையில் வைத்துக்கொண்டு அயோத்தி நகரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். தாயார் மூவரும் பின் தொடர அனைவரும் அயோத்தி நோக்கி சென்றார்கள்.

அயோத்தி செல்லும் வழியில் பரத்வாஜ முனிவரிடம் நடந்தவற்றை சொல்லி அவரிடம் ஆசி பெற்றான் பரதன். பரதனுடைய குணத்தை பாராட்டிய பரத்வாஜ முனிவர் மழை நீர் பள்ளத்தை நோக்கி பாய்வதை போல உன் குலத்தின் நெறி உன்னை அடைந்திருக்கின்றது. உன்னை பெற்ற தந்தை பெரும் பாக்கியவான். அவர் இறக்கவில்லை உன் சொரூபத்தில் அமரராக இருக்கிறார் என்று சொல்லி வாழ்த்தினார்.

அயோத்தி நகரை அடைந்ததும் பரதன் வசிஷ்டர் மற்றும் மந்திரிகள் அனைவரையும் சபைக்கு வரவழைத்தான். அந்த ராஜ்யம் ராமருடையது. தற்காலிகமாக அவர் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். அண்ணனுக்கு பதிலாக அவரின் மிதியடியை அரசரின் சிம்மாசனத்தில் அமர்த்திருக்கிறேன். ராமர் 14 ஆண்டுகள் கழித்து திரும்பி வரும் வரையில் நான் அருகில் இருக்கும் நந்தி கிராமத்தில் இருந்து ஆட்சி செய்து அவர் எனக்கு இட்ட கட்டளையே நிறைவேற்ற போகின்றேன். தாங்கள் அனைவரும் அதற்கு உறுதுணையாக இருந்து நல்வழிகாட்டுகள் என்றான்.

தொடரும்………..

கந்தபுராணம்

கந்த புராணம் சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகும். இது நூறாயிரம் சுலோகங்களால் ஆனது. அது ஆறு சங்கிதைகளைக் கொண்டது. இதில் சங்கர சங்கிதையும் ஒன்றாகும். சங்கர சங்கிதையில் உள்ள பல கண்டங்களில் சிவ ரகசிய கண்டமும் ஒன்றாகும். இக்கண்டத்தில் ஏழு காண்டங்கள் காணப்படுகின்றன. இவற்றில் உபதேச காண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களதும் தமிழ்த் தொகுப்பே கந்தபுராணமாகும். உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு காண்டங்களை உடையது. இது 91 படலங்களையும், 10345 பாடல்களையும் உடைய இது முருகப்பெருமானின் வரலாற்றை முறையாகவும் முழுமையாகவும் கூறுகிறது.

கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் குமரக் கோட்டத்து முருகக்கடவுள் கோவிலின் அர்ச்சகர் காளத்தியப்ப சிவாசாரியார். அவருடைய குமாரர் கச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணத்தை இயற்றினார். இப்புராணத்திற்கு முருகப் பெருமானே முதல் அடி எடுத்துக் கொடுத்தார். அதே போல் கந்த புராணத்தை எழுதி முடித்ததும் முருகப் பெருமானே எழுத்துப்பிழை திருத்திக் கொடுத்தருளினார். நூலை அரங்கேற்றம் செய்த போது முருகப் பெருமானே அடியார் திருவடிவம் கொண்டு கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு உதவி புரிந்தார். குமரக் கோட்டத்திலேயே அரசர் பிரபுக்கள் கல்வி கேள்விகளில் சிறந்த வல்லுநர்கள் முன்னிலையில் கந்தபுராணத்தை பாடிப் பொருள் கூறி விளக்கி அரங்கேற்றம் செய்ய ஆரம்பித்தார். திகடச் சக்கரச் செம்முக மைந்துளான் என்று முதல் பாட்டு துவங்குகிறது. முதல் செய்யுளே இலக்கணப் பிழை உள்ளது என்று அறிஞர்கள் சிலர் ஆட்சேபித்தனர். மறு நாள் விளக்கம் தருவதாகச் சொன்ன கச்சியப்பர் அதற்கான இலக்கண விதியைக் காணாமல் பரிதவித்தார். இரவில் முருகப் பெருமானே கனவில் வந்து வீரசோழியத்தில் அதற்கான விளக்கம் இருப்பதாகச் செய்யுளைக் காட்டினார். மறு நாள் அவர் அதற்கு விளக்கம் தந்து கந்தபுராணத்தை அரங்கேற்றினார் கச்சியப்ப சிவாச்சாரியர். கந்த புராணம் முழுவதும் தினம் ஒரு பகுதியாகப் பாடி ஓராண்டுக் காலமாகத் தன் நூலினை அரங்கேற்றினார். இதில் 10346 செய்யுள்கள் உள்ளன. அரங்கேற்றம் முற்றுப் பெற்ற நாளில் கச்சியப்ப சிவாசாரியாரைத் தங்கச் சிவிகையில் ஏற்றி தொண்டை மண்டலத்தின் இருபத்துநான்கு வேளாளர்களும் காஞ்சியின் மற்றையோரும் சிவிகை தாங்கியும் சாமரம் வீசியும் குடை கொடி முதலானவைகளை எடுத்துப் பிடித்தும் வீதிவலம் வந்து நூலையும் ஆசிரியரையும் சிறப்புச் செய்தனர். சம்பந்த சரணாலய சுவாமிகள் என்பவர் கந்தப் புராணத்திலுள்ள வரலாறுகளை சுருக்கித் தொகுத்து 1049 செய்யுட்களால் இயற்றி அருளினார்.

பதினெண் புராணங்களும் வடமொழியில் இருப்பவை. இவற்றுள் கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம். கந்தபுராணத்தில் எல்லா உபகதைகளும் இதில் உள்ளன. இதன் மூல நூல் சம்ஸ்கிருத மொழியில் உள்ள ஸ்காந்தம் ஆகும். அதுதான் 18 புராணங்களில் மிகப் பெரியது 81000 ஸ்லோகங்கள் உடைத்து. வடமொழியில் உள்ள ஏழாவது காண்டமான உபதேச காண்டத்தை கோனேரியப்பர் என்பவர் 4347 செய்யுட்களாகப் பாடியுள்ளார். அதில் சூரனின் முற்பிறவி வரலாறும் ருத்திராட்ச மஹிமையும் விபூதி மஹிமையும் சிவ நாம மஹிமையும் உள்ளது. பதினெட்டு புராணங்களில் பத்து புராணங்கள் சிவபரமானவை அவைகளில் கந்தபுராணம் வேதாந்த சித்தாந்த சாரங்களை உள்ளடக்கியது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு தத்துவங்களையும் எளிதில் தரவல்லது. இதனை படிக்க மங்கலத்தைச் கொடுத்து வலிமை மிக்க கலியின் துன்பத்தை நீக்கும்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -38

வசிஷ்டர் ராமரிடம் பேசினார். ராஜ்யத்தின் அரச பதவியை மூத்தவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உனது குல தர்மம். இன்னொரு பக்கம் தந்தையின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்ற தர்மம். இரண்டில் பெரிய தர்மம் தந்தையின் ஆணையை நிறைவேற்ற வேண்டியது என்ற உன்னுடைய செயல் சரியானதாக இருந்தாலும் உன்னுடைய தம்பி தன் மேல் விழுந்த பழி பாவத்திற்கு அஞ்சி உன்னை தஞ்சம் அடைந்திருக்கின்றான். தஞ்சம் அடைந்தவர்களை காப்பாற்றவேண்டும் கைவிட கூடாது என்பது உன்னுடைய விரதமாயிற்றே. நீ உன்னுடைய விரதத்தையும் காப்பாற்ற வேண்டும் ஆகையால் பரதனுக்காக உன்னுடைய தர்மத்திலிருந்து சிறிது இறங்கிவா என்றார்.

தாங்கள் எனக்கு கூறிய சொற்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்க கூடியதாகவும் என்னால் செய்யக்கூடியதாக இருந்தாலும் இச்செயல் நல்ல வழி போல் தோற்றமளிக்கும். ஆனால் இது தவறான பாதையே ஆகும். அறநூல்களின் உபதேசங்களின் படி நடக்காதவன் தனது ஒழுக்கம் சிந்தனையில் இருந்து வேறுபட்டு பாவங்களை செய்தவன் ஆகின்றான். தந்தையும் தாயும் குழந்தைகளுக்கு செய்யும் சேவைக்கு கைமாறாக அக்குழந்தைகள் வளர்ந்தபின் காலம் முழுவதும் என்ன செய்தாலும் தீர்க்க முடியாது. அதிகபட்சம் அவர் கொடுத்த உத்தரவிற்காவது கட்டுப்பட்டு நடக்க வேண்டும். என் தந்தை எனக்கு காட்டிற்கு 14 வருடங்கள் செல்ல கட்டளையிட்டிருக்கிறார். நான் அவரின் கட்டளைக்கு சம்மதம் தெரிவித்து காட்டிற்கு வந்துவிட்டேன். அவரின் சொல்லை ஒரு போதும் பொய்யாக்க மாட்டேன். இருக்கும் தர்மத்தில் கடைபிடிக்க வேண்டிய பெரிய தர்மம் சத்தியத்தை காப்பாற்றுவதாகும். அவருக்கு கொடுத்த சத்தியத்தை நான் மீற மாட்டேன் என்றார் ராமர்.

ராமர் இவ்வாறு பேசியதும் பரதன் தன்னுடன் வந்தவர்களிடம் முறையிட்டான். எனது அண்ணன் என் மீது சிறிதும் இரக்கம் காட்ட மறுக்கிறார். ஆகையால் இங்கேயே நான் பட்டினி கிடந்து உயிர் துறக்கபோகின்றேன் என்று சொல்லி சுமந்தரனிடம் தர்பை புல்லை கொண்டு வர உத்தரவிட்டான் பரதன். சுமந்திரன் ராமரைப்பார்த்து தயங்கிய படியே நின்று கொண்டிருந்தான். பரதன் தானே சென்று தர்பை புல்லை எடுத்து வந்து ராமரின் முன்பாக போட்டு அமர்ந்தான் சுற்றி இருக்கும் மக்களிடம் பேச ஆரம்பித்தான். ராமர் வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையெனில் நான் இங்கேயே பட்டினி இருந்து உயிர் துறப்பேன் என்றான். மக்கள் பரதனிடம் ராமர் சத்தியம் தவறாதவர். தந்தைக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தன் எண்ணத்தில் அசையாமல் நிற்கின்றார். அவரின் குணம் நமக்கு தெரியும். அவர் அயோத்திக்கு வரமாட்டார். அவரை வற்புறுத்துவதில் பயன் ஒன்றும் இல்லை என்றார்கள்.

ராமர் பரதனை பார்த்து சத்ரிய தர்மத்துக்கு விரோதமான செயலை செய்யாதே எழுத்திரு. அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே செல்வார்கள். நாம் சத்தியத்தை இத்தனை நாட்கள் மீறாமல் காத்தபடியால் மக்களும் சத்தியத்தை மீறாமல் காப்பாற்றுகிறார்கள். மக்களின் பேச்சையும் கேள். அயோத்திக்கு சென்று அரச பதவியை எற்று உனது கடமையை செய் என்றார்.

குண்டலினி

குண்டலினி விழிப்படைய எவ்வளவு காலம் பிடிக்கும்?

மனம் ஒடுகினால் குண்டலினி விழிக்கும்.

மனம் என்கிற கருவி ஒடுங்கும் போது குண்டலினி விழிக்கும். மனம் விழிக்கும் பொழுது குண்டலினி உறங்கும். அது கண்ணிமைக்கும் நேரமாக இருந்தாலும் பல மணித்துளிகளாக இருந்தாலும் அது நிகழும். நாம் விழித்துக் கொண்டிருக்கும் பொழுது குண்டலினி உறங்கி செயல்படுவதில்லை. அப்போது நம் சக்திகள் அனைத்தும் விரையமாகி விடுகின்றன. பிறகு நாம் ஆழ்ந்து உறங்கும் நிலையில் குண்டலினி விழித்துக் கொள்கிறது. இதனால் நம் உடலெங்கும் நாடி நரம்புகளுக்குள் சக்தி ஓட்டம் நடைபெறுகிறது. உடல் புத்துணர்வு பெறுகிறது, இறந்த செல்கள் அனைத்தும் உயிர்ப்படைகின்றன. நாடி நரம்புகளில் தடைகள் இருந்தால் ஆழ்ந்த உறக்கத்திலும் அந்த இடங்களுக்கு சக்தி ஓட்டம் கிடைப்பதில்லை. இதுவே முதுமை எனப்படுகிறது. எவரொருவர் நாடிகளை சுத்தி செய்து தடைகளின்றி வைத்துக் கொள்கிறார்களோ அவர்கள் நீண்ட நாட்கள் இளமையோடு திகழ்வார்கள்.

மனிதன் மூச்சு விடும் பொழுது மனம் வேலை செய்கிறது. மூச்சு நிற்கும் சிலகண நேரத்தில் மனமும் நின்று விடுகிறது. மூச்சு நிற்பது என்றால் நாம் வலிய நிறுத்தி வைக்கும் உயர்வான கும்பகம் ஒன்று ஒவ்வொரு மூச்சிற்கு இடையிலும் நமக்குள் நிகழ்கிறது. இதற்கு கேவல கும்பகம் என்று பெயர். கேவல கும்பகம் நிகழும் பொழுது மனம் ஒடுங்கும். நாம் ஒரு மூச்சை உள்ளே இழுத்த பிறகு அதை வெளியே விடுவோம். இந்த இரண்டு செயல்களுக்கும் இடையே ஏற்படும் இடைவெளி தான் கும்பகம் எனப்படுகிறது. இந்த கும்பகம் உள்ளே நிகழும் பொழுது நமது நுரையீரல் முழுவதும் காற்று நிரம்பியிருக்கும். அதே சமயம் மூச்சை வெளியே விட்டு விட்ட பிறகு மீண்டும் இழக்க வேண்டுமல்லவா? அப்படி இழுப்பதற்கு இடையே ஏற்படும் கால அவகாசத்தில் நிகழ்வதுதான் கேவல கும்பகம். இது நிகழும் பொழுது மனம் ஒடுங்கும். இப்படி நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 25000 முறை கேவல கும்பகம் நமக்குள் நிகழ்கிறது. இந்த க்ஷண நேரத்தில் மனம் ஒடுங்குவதால் ஓரளவு குண்டலினி சக்தி விழித்திருக்கும் பொழுதும் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் அது போதாது. இந்த கேவல கும்பகத்தில் கால அளவை நீட்டிப்பது தான் குண்டலினி யோகம். மனதை நீண்ட நேரம் ஒடுக்க நிலையில் நிறுத்துவது. தியானத்தில் வசப்பட வசப்பட மூச்சும் வசப்பட்டு கேவல கும்பகம் நிகழும் பொழுது யோகி சமாதி நிலையை அடையலாம். இப்படிப் பயிற்சியில் முன்னேறிய சாதகருக்கு ஒரு நாள் குண்டலினி விழிப்பு பெற்று சுழுமுனையை திறந்து கொண்டு சீறிப் பாய்ந்து மேலேறும். யோகி தன் நிலையை தனக்கு குண்டலினி விழிப்பு பெற்றதை உணர்வார்.

சித்தர் பாடல் ஒன்று இரண்டு மணி நேரம் மூச்சை அடக்குவது ஒரு தாரணை என்றும் 24 மணி நேரம் மூச்சை அடக்குவது ஒரு தியானம் என்றும், 12 நாட்கள் மூச்சை அடக்குவது சமாதி என்றும் சொல்கிறது. இதில் சிலருக்கு சந்தேகம் உண்டு. அது என்னவெனில் மூச்சை அடக்கினால் உயிர் பிரிந்து விடாதா என்ற கேள்வி எழுகிறது. மூச்சை அடக்கி விடுவது என்றால் மொத்தமாக அடக்கி வைப்பது அல்ல. உடம்புக்குள் இழுந்த மூச்சை மெதுவாக விடுவதுதான். 4 வினாடிகள் விட வேண்டிய மூச்சுக்காற்றை சாதகம் பயிற்சிகள் மூலமாக நீட்டித்துக் கொள்வதாகும். பொதுவாக நாலு நொடிகளுக்கு ஒரு சுவாசம் நடைபெறும் பொழுது மார்பு விரியும் வயிறு புடைக்கும் உடல் அசைவு கண்ணுக்குப் புலப்படும். அதே ஒரு சுவாசத்தை நாம் ஒரு நிமிட கால அவகாசத்தில் மெதுவாக இழுத்து மெதுவாக விடுவோமேயானால் உடலசைவு பார்பவர்கள் கண்களுக்குப் புலப்படாது. மூச்சு நடைபெறவில்லை என்றே கருதுவார்கள். இப்படிப்பட்ட கடினமான உயர்ந்த யோக நிலையை அடைய 12 ஆண்டுகள் விடா முயற்சியுடன் பிரயத்தனப்பட வேண்டும் என்பதுதான் கோட்பாடு. குருவருளாலும் ஜென்மாந்திரத் தொடர்பாலும் விடா முயற்சியாலும் சிலருக்கு விரைவாகவும் நிகழும். பூரணமாக யோகத்தில் சாதனை புரிய பன்னிரண்டு ஆண்டுகள் விடா முயற்சியுடன் சாதனங்களை கை கொள்ள வேண்டும்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -37

ராமருடைய உறுதியான பேச்சைக்கேட்ட பரதனும் மக்களும் பேச வார்த்தை இல்லாமல் தவித்தார்கள். பரதன் மீண்டும் ராமரிடம் சொன்னான். தாங்கள் ராஜ்யத்தை ஏற்க மறுத்தால் என்மேல் விழுந்த பழி தீராமல் போகும். நான் என்ன செய்தாலும் இப்பாவத்தை போக்க இயலாது என்று வருத்தத்துடன் சொன்னான். அதற்கு ராமர் உன்னை நீயே நிந்தித்துக்கொள்ள வேண்டாம். நடந்தவைகள் அனைத்தும் உன்னாலேயே நடந்தது என்று நீ எண்ண வேண்டாம். விதியே அனைத்திற்கும் காரணம். துக்கத்தை விடு. தேவ ராஜனுக்கு சமமான நமது தந்தையார் எனக்கு இட்ட ஆணையை நான் நிறைவேற்றாமல் போனால் அதற்கு பதிலாக இந்த உலகமே எனக்கு கிடைத்தாலும் நான் திருப்தி அடைய மாட்டேன். தந்தையின் ஆணையை என்னால் நிராகரிக்க முடியாது. தந்தையின் கட்டளையை நாம் இருவரும் ஏற்க வேண்டும். உன்னிடம் ஒப்படைத்த ராஜ்ஜியத்தை நீ ஏற்றுக்கொண்டு அரச பதவியை நீ தாங்கியே ஆக வேண்டும். அயோத்திக்கு சென்று அரசனுக்கு உரிய பணியை செய்து மக்களுக்கு நன்மையை செய். உனக்கு உதவியாக சத்ருக்கணன் இருக்கின்றான். எனக்கு உதவியாக லட்சுமணன் இருக்கின்றான். தசரதரின் நான்கு புத்திரர்களாகிய நாம் நால்வரும் தந்தையின் ஆணையை நிறைவேற்றுவோம் என்று உறுதியுடன் கூறினார் ராமர்.

ராமரின் உறுதியையும் ராமருக்கு துணையாக லட்சுமணனேயும் பரதனின் அன்பையும் பரதனுக்கு துணையாக சத்ருக்கணனையும் பார்த்த கௌசலை சுமத்ரை கைகேயி மூவரும் களங்கமற்ற உள்ளத்தை கொண்ட ராஜகுமாரர்களை பெற்றோமே என்று மகிழ்ந்தார்கள். பரதனுடன் வந்த மக்கள் கூட்டத்தில் இருந்த ஜாபலர் என்ற புரோகிதர் இடையில் ராமருக்கு வணக்கம் செலுத்தி பேசினார். தந்தையின் ஆணை என்று திரும்ப திரும்ப சொல்கின்றீர்கள். தசரதர் என்பது ஒரு உடல். அது அழிந்து பஞ்ச பூதங்களுடன் கலந்து விட்டது. இல்லாத ஒரு உருவத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருப்பது போலவே பேசுகின்றீர்கள். இது அறியாமை. கண் எதிரே இருக்கும் சுகங்களை அனுபவிக்காமல் விட்டு விட்டு மூடர்கள் பேசும் பேச்சு போல் இருக்கினது தாங்கள் பேசுவது. துயரத்தில் மூழ்கி கிடக்கும் பெண் ஒருத்தி கூந்தலை வாரி முடிக்காமல் உள்ளது போல் அயோத்தி இப்போது துக்கத்தில் கிடந்து உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. பட்டாபிஷேகம் செய்து கொண்டு சுகங்களை அனுபவித்துக் கொண்டு மகிழ்ச்சியாய் இருந்து அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுங்கள் அதுவே இப்போதைய தர்மம். பரதன் சொல்வதை கேளுங்கள் என்றார்.

ராமருக்கு அவர் இவ்வாறு பேசியது அதிருப்தியை உண்டாக்கியது. சத்தியத்தை நீங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்று எண்ணுகின்றேன். நீங்கள் நாத்திகம் பேசுவது போல் உள்ளது. இது சரியாக இல்லை. சத்தியத்தை விட உயர்ந்த பொருள் உலகத்தில் இல்லவே இல்லை என்றார் ராமர். வசிஷ்டர் ராமரை சமாதானம் செய்தார். உன்னை எப்படியாவது அயோத்திக்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என்றும் பரதனுடைய துக்கத்தை போக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் அவ்வாறு பேசினார். அவர் மீது கோபிக்க வேண்டாம் என்றார் வசிஷ்டர்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -36

ராமர் பரதனிடம் பேச ஆரம்பித்தார். தந்தை உனக்கு தந்த ராஜ்யத்தை விட்டு தபஸ்விகளுக்கான உடைகளை அணிந்து கொண்டு ஏன் இங்கு வந்திருக்கிறாய். மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருக்கும் போது கடமையை விட்டு வந்திருக்கும் காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் சொல் என்றார். பரதன் பல தடவை பேச ஆரம்பித்து பேச முடியாமல் திக்கி திணறி மெதுவாக பேச ஆரம்பித்தான். உங்களை காட்டுக்கு அனுப்பிவிட்டு யாரும் செய்யத் துணியாத காரியத்தை செய்துவிட்டேனே என்று துக்கத்திலேயே வெந்து மேலுலகம் சென்று விட்டார் தந்தை. என்னை பெற்றவளும் தான் விரும்பிய சந்தோசத்தை பெற முடியாமல் மகா பாவம் செய்து உலகத்தால் பழிக்கப்பட்டு உயிருடன் நரக வேதனை அனுபவித்துக் கொண்டு சோகத்தில் மூழ்கி இருக்கின்றாள். அயோத்தி மக்கள் துக்கமே வடிவமாக மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். மாற்றங்கள் ஏதும் செய்து இனி தந்தையை பெற முடியாது. ஆனால் நீங்கள் அரச பதவியை எற்க சம்மதம் தெரிவித்து உங்களுக்கு உரிய ராஜ்யத்தை நீங்கள் அடைந்தால் அயோத்தி மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். தாயார் கௌசலையும் சுமத்ரையும் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள். தாயார் கைகேயி இனி வரப்போகும் பழிச்சொல்லில் இருந்து மீள்வார். சூழ்ச்சியால் ராஜ்யத்தை பெற்றேன் என்ற பழிச்சொல் என்னையும் விட்டு நீங்கும். அரச குடும்பத்தில் மூத்தவர் அரசனாக வேண்டும் என்ற நமது குல தர்மம் காப்பாற்றப்படும்.

சொர்க்கம் சென்ற தந்தையும் இதனையே விரும்புவார். உரிய அரசனில்லாமல் அயோத்தி நகரம் தேய்ந்த சந்திரனைப்போல் இருட்டாக இருக்கிறது. அதனை அகற்றி அயோத்தியை பூரண சந்திரனைப்போல் மங்கள நகரமாக்கி வெளிச்சமாக்குங்கள். உங்கள் பாதங்களில் வீழ்ந்து கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அரசனானால் அனைத்து பிரச்சனைகளுக்கும் சுமூகமான தீர்வு கிடைத்துவிடும். அரச பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என்ற தங்களின் வார்த்தையை கேட்க ஆவலுடன் நமது தாயார் மூவர் முதல் மக்கள் வரை காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மறுத்துவிடாதீர்கள் என்று கண்களில் நீர் வழிய ராமரின் காலை பிடித்துக்கொண்டான் பரதன்.

பரதனை தூக்கிய ராமர் தன் அருகில் அமர வைத்து பேச ஆரம்பித்தார். நாம் நால்வரும் நற்குலத்தில் பிறந்தோம். நல்ல முறையில் வளர்க்கப்பட்டோம். நாம் நால்வரும் ஒரு நாளும் தவறு செய்ய மாட்டோம். உன்னிடம் எள் அளவும் குறைகளை நான் இதுவரை கண்டதில்லை. நீ துக்கப்பட வேண்டாம். உனது தாயாரையும் குற்றம் கூற வேண்டாம். நம்முடைய குல பண்பாட்டுக்கு இது தகாது. நம்மை பெற்ற தந்தையும் தாயும் நமக்கு எந்த ஆணையும் இடலாம். அது அவர்களுடைய உரிமை. காட்டிற்கு அனுப்புவதும் ராஜ்யத்தை கொடுப்பதும் அவர்களுடைய உரிமை. அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றி தாய் தந்தையை கௌரவிப்பது நமது கடமை. உனக்கு ராஜ்ய பொறுப்பை தந்து எனக்கு 14 ஆண்டுகள் வனத்தின் தவ வாழ்க்கையை வகுத்துக் கொடுத்திருக்கிறார். இதனை நாம் மீறலாகாது. 14 ஆண்டுகள் 14 நாட்கள் போல் கழித்துவிட்டு விரைவில் அயோத்தி திரும்பிவருவேன் என்றார் ராமர்.

சிவனைப் பற்றி அப்துல் கலாம்

இந்திய விஞ்ஞானிகள் உட்பட உலகத்திலிருந்து பல நூறு விஞ்ஞானிகள் கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த ஆராய்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானது என்பது தான். அதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர். உடனடியாக விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் நடராஜர் சிலையை அங்கே வைத்து ஆராய்ச்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார் ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்டனர்.

அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்த உலகம் இயங்குகிறது. மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார். விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர். அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான் அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர்.

திரு முருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்

சுதந்திரத்திற்கு முன்பிருந்த இந்தியாவில் சென்னையிலேயே அதிக மருத்துவ வசதிகள் கிடையாது. ஒரு சிறுவன் அவனது காலில் புண் ஏற்பட்டது சின்னப் புண் தானே என்று அந்தப் பையனும் கண்டு கொள்ளவில்லை. நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூக்குள் பெரிதாகிப் போனதால் அவனுக்கு உள்ளே வலி ஏற்பட்டது. வலி தாங்கமுடியாமல் தவித்த அவனை அவனது பெற்றோர் டாக்டரிடம் காண்பித்தனர். அந்த உள்ளூர் டாக்டர் அவர்களை கண்டபடி திட்டி இப்படியா விட்டு வைப்பது உடனே பட்டணம் போய் காண்பியுங்கள் என்றார். பையனைச் சோதித்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார் உள்ளே செப்டிக் ஆகி விட்டது உடனே காலை எடுக்க வேண்டும் இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தனர். காலை எடுப்பதற்கு நீங்கள் எந்த மருத்துவ மனைக்குப் போனாலும் குறைந்தது 5000 ரூபாய் ஆகும். இந்த மருத்துவமனை என்றால் 3000 ஆகும். நீங்கள் எனக்குத் தெரிந்தவர் என்பதால்
நான் என்னுடைய பீஸைக் கூட குறைத்துக் கொள்கிறேன் மருத்துவமனை செலவுகளுக்காக மட்டும் 1500 ரூபாய் கட்டிவிடுங்கள் சிகிச்சையைத் தொடரலாம் என்றார்.

அந்த நாட்களில் அரசாங்க அதிகாரிகளின் மாத சம்பளமே 15 ரூபாய் தான் 1500 ரூபாய் என்று கேட்டதும் அதிர்ந்து போனான் பையன். ஒரு காலை வெட்டி எடுக்க ஒரு மருத்துவருக்கு 1500 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால் அந்த காலைக் கொடுத்த கடவுளுக்கு நம்மால் அதற்குப் பிறகு என்ன தரமுடியும் இந்தக் கால் தேயும் வரை அவன் ஆலயத்தை சுற்றுவோம் இவ்வாறு நினைத்த சிறுவன் தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்றான், 108 மற்றும் 1008 என்ற கணக்கெல்லாம் இல்லை. காலை மாலை என தினமும் கணக்கு வழக்கின்றி கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தான். சில மாதங்களில் யாராலும் நம்ப முடியாத அற்புதமாக அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில் தானே ஆற ஆரம்பித்த புண் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது. இனி என் வாழ் நாள் முழுதும் முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும். அதுவே என் தொழில். அதுவே என் மூச்சு என்று ஊர் ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தப் பையன். அந்தப் பையன் தன் உடல் தளரும் வரை ஓர் அரை நூற்றாண்டிற்கு மேல் நின்றபடியே முருகன் புகழ் பாடிய திரு முருக கிருபானந்த வாரியார் என அழைக்கப்பட்ட வாரியார் சுவாமிகள்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -35

ராஜ குமாரர்கள் நால்வரும் மந்தாகினி ஆற்றங்கரைக்கு சென்றார்கள். அங்கே தசரதருக்கு செய்ய வேண்டிய தர்பணங்களை முறைப்படி செய்தார்கள். ஒருவரை ஒருவர் அணைத்து தங்கள் துயரத்தை தீர்த்துக்கொண்டு குடிசைக்கு திரும்பினார்கள். கௌசலை சுமத்ரை கைகேயி மூவரையும் ராமர் இருக்கும் குடிசைக்கு செல்லலாம் வாருங்கள் என்று வசிஷ்டரரும் அவர்களுடன் கிளம்பினார். வழியில் மந்தாகினி ஆற்றங்கரையில் பித்ருக்களுக்கான தர்ப்பை புல்லும் எள்ளும் வைத்திருப்பதை பார்த்தார்கள். இந்த ஆற்றங்கரையில் இருந்து தான் தங்களுக்கு தேவையான நீரை கொண்டு செல்வார்கள் அருகில் தான் ராமர் இருக்கும் குடிசை இருக்கின்றது என்றார் வசிஷ்டர். எவ்வளவு வசதியாக வாழ்ந்த ராஜ குமாரர்கள் இங்கிருந்து குடிசை வரை தண்ணீர் சுமந்து கொண்டு செல்கின்றார்களா என்று கௌசலை அழ ஆரம்பித்தாள். சுமத்திரை கௌசலையை ஆறுதல் படுத்தினாள். ராமருக்காக லட்சுமணன் தினந்தோறும் தண்ணீரை சுமந்து கொண்டு செல்வதை மகிழ்ச்சியாகவே செய்வான். லட்சுமணனுக்கு இது பெரிய கடினமான காரியம் இல்லை என்று பேசிக்கொண்டே குடிசைக்கு அருகில் வந்தார்கள்.

நான்கு ராஜ குமாரர்களும் பட்டத்து அரசிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அரண்மனையில் சுக போகத்துடன் வாழ்ந்த ராஜகுமாரர்கள் குடியையில் இருப்பதை பார்த்ததும் சக்தியற்றவர்களாக கௌசலையும் சுமத்ரையும் அங்கேயே அமர்ந்து விட்டார்கள். கௌசலையிடம் விரைவாக வந்த ராமர் அவளை தூக்கி தலையில் தடவிக்கொடுத்தார். ராமரின் ஸ்பரிசத்தில் மயங்கிய கௌசலை ஆனந்தத்தில் மூழ்கிப்போனாள். சீதையிடம் வந்த கௌசலை ஜனகருக்கு மகளாகப் பிறந்து அயோத்திக்கு மருமகளாய் வந்து இந்த காட்டில் சிறு குடியையில் தங்கியிருக்கின்றாய். உன்னை பார்த்ததும் நெருப்பில் எரியும் விறகு போல் என் மனம் எரிகிறது என்று சீதையை அணைத்துக்கொண்டாள். சுமித்ரையின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி ராமரும் லட்சுமணனும் ஆசி பெற்றனர். நீண்ட கால பிரிவை ஒட்டி ஒருவரை ஒருவர் தங்கள் கண்களில் நீர் வழிய அணைத்துக் கொண்டு ஆனந்தம் கொண்டார்கள்

ராஜ குமாரர்கள் பட்டத்து அரசிகள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்கின்றார்கள் என்று தெரிந்தவுடன் படைகள் அனைத்தும் அவர்கள் இருக்குமிடம் நோக்கி விரைந்து வந்தார்கள். தசரதரை இழந்த துக்கத்தில் இருந்த அனைவரையும் ஒன்றாக பார்த்த மக்கள் இனி ராமர் அயோத்திக்கு திரும்பி வந்து விடுவார் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். வசிஷ்டருடைய பாதங்களில் ராமரும் லட்சுமணனுடன் பரதனும் சத்ருக்கணனும் வீழ்ந்து வணங்கி அவருக்கு தங்களுடைய வணக்கத்தை செலுத்தினார்கள். வசிஷ்டர் அவர்களுக்கு ஆசி கூறி ஓரிடத்தில் அமர்ந்தார். அவரை பின்பற்றி அனைவரும் அமர்ந்தார்கள். பரதன் ராமரின் அருகில் வந்து அமர்ந்தான். மக்கள் அனைவரும் பரதன் ராமரிடன் என்ன பேசப்போகின்றார் எப்படி ராமரை அயோத்திக்கு அழைக்கப்போகின்றார் என்ற ஆர்வத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

ஒரு மண்டலம் 48 நாள்

சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவது போல் நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன. மற்ற கோள்கள் அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும் அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.

நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும் 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர். ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள் 12 ராசிக்கூட்டங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்கள் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும்.

கிரகங்கள் 9 ராசி கூட்டங்கள் 12 நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டினால் 9+12+27=48 இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை. இதன் காரணமாகவே தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன. இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிட்டால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும் என்பார்கள். மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாமல் தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வழிபாடுகளும் வேண்டுதல்களும் அவர்களின் சிரத்தைக்கு ஏற்ப நிச்சயம் கைகூடும்.