பிரம்மா பதவிக்கு வரப்போகும் அனுமன்

ராமர் தன் யுக காரியம் முடிந்த நிலையில் தன்னுடன் இருந்தவர்களை வைகுண்டத்திற்கு அழைத்தார். அனைவரும் புறப்பட்டனர் ஆனால் அனுமன் மட்டும் வைகுண்டம் செல்ல விரும்பவில்லை. தான் இன்னும் சிறிது காலம் பூலோகத்திலிருந்து கொண்டு ராமரை தான் முதன் முதலில் சந்தித்த வினாடியிலிருந்து ராம காரியத்தில் ஈடுபட்டு, பட்டாபிஷேகம் முடியும் வரை, ராமருடன் தான் கழித்த பொழுதுகளை அணு அணுவாக அசைபோட்டு ஆனந்திக்க விரும்புவதாகவும் ராம தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்க பூலோகம் தான் தகுதியான இடம் என்றும் ஆகவே தான் இங்கேயே இருக்க விரும்புவதாக ராமரிடம் கூறினார்.

ராமர் இதை கேட்டதும் மகிழ்ந்து ஆஞ்சநேயரை சிரஞ்சீவியாய் இருக்க ஆசீர்வதித்து மகேந்திரகிரி சென்று தவம் புரியுமாறு சொன்னார். அவருடைய தவத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு பஞ்ச முகங்களை அருளி எத்திக்கிலிருந்தும் எந்த சோதனையும் ஏற்படாத வகையில் ஆஞ்சநேய, ஹயக்ரீவ, நரசிம்ம, கருட, ஆதிவராக மூர்த்திகளின் திரு முகங்களையும் அவர்களுடைய சக்திகளையும் உனக்குத் தந்தேன். அடுத்து வரும் பிறவியில் நீ தான் பிரம்மா என்று சொல்லி ஆசிர்வதித்தார்.

கலியுகம் முடிந்ததும் ஒரு யுகம் வரப்போகிறது அந்த யுகத்தில் ஆஞ்சநேயர்தான் பிரம்மா அதற்காக அவர் தன்னை பக்குவப்படுத்திக் கொண்டு தவத்தில் ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிற இடம் தான் மகேந்திரகிரி.

ராமரைப் பற்றி காஞ்சி மகா பெரியவர் அருளியது

ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம் மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல் ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துக் கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால் அது ராமர்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள்ளே ஆனந்தமாகவே இருந்தான். சுக துக்கங்களில் சலனமடையாமல் தான் ஆனந்தமாக இருந்து கொண்டு மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப் போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.

மக்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந்நாராயணனே ராமராக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும் இது என் அபிப்பிராயம் என்று சொல்லவே மாட்டார். ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள் சாஸ்திரம் இப்படிச்சொல்கிறது என்றே அடக்கமாகச் சொல்வார். சகலவேதங்களின் பயனாக அறியப்பட வேண்டிய பரமபுருஷன் எவனோ அவனே அந்த வேததர்மத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு வாழ்ந்தான். அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக் கொண்டு ராமர் என்னும் வேடத்தில் ஸ்ரீமந்நாராயணன் வாழ்ந்தான்.

துளசிதாசர்

துளசிதாசர் காசியில் கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசிப்பார். எப்போதும் ராமநாம செபம் செய்த படி இருப்பார். இரவில் அசுவமேத கட்டிடத்தின் படிக்கட்டில் உட்கார்ந்து ராமாயணம் கதாகாலட்சேபம் சொல்வார். ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறி அக்கரைக்கு சென்று கங்கையில் நீர் எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று ஒரு காட்டில் காலைக் கடன்களை கழிப்பார். பின் உடம்பை சுத்தம் செய்து கொண்டு மீதியுள்ள தண்ணீரை ராம நாமத்தை சொல்லி ஒரு ஆலமரத்தில் கொட்டி விடுவார். அந்த ஆலமரத்தில் துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று வசித்து வந்தது. அது அந்த ராம நாம நீரை குடித்ததும் தாகம் அடங்கி அதற்கு அமைதி கிடைத்தது. இதன் பயனாக விவேகம் வந்தது. இவர் ஒரு பெரிய மகான் என்று தெரிந்து கொண்டது. அந்த ஆவி ஒரு நாள் துளசிதாசர் திரும்பிப் போகும் வழியில் மறைந்து நின்றது. துளசிதாசரின் நடை தடைப்பட்டது. உரக்க ராமா ராமா என்று சத்தமிட்டு கூவினார். அப்போது அந்த ஆவி கூறியது. பெரியவரே பயப்பட வேண்டாம். நான் ஒரு பாவியின் ஆவி. நீங்கள் வார்த்த நீரைக் குடித்து புனிதமானேன். உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன் சொல்லுங்கள் என கேட்டது.

துளசிதாசருக்கு மனதில் ஒரே எண்ணம் தானே. ராம தரிசனத்தை காண வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கு ராம தரிசனம் கிடைக்க வேண்டும் என்றார். அதற்கு ஆவி இது உங்களுக்கு வெகு சுலபமாயிற்றே என்றது. திகைத்த துளசிதாசர் எப்படி என கேட்டார். அதற்கு ஆவி உங்களிடம் தான் ராமாயணம் கேட்க தினமும் அனுமன் வருகிறாரே என்றது. அவரிடம் கேட்டால் ராம தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வார் என்றது. மேலும் திகைத்த துளசிதாசர் அனுமன் வருகிறாரா எனக்கு தெரியாதே என்றார் துளசிதாசர். ஆமாம் நீங்கள் நாளும் ராமாயணம் கதாகலட்சேபம் செய்யும் போது ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நேரே மக்களுக்கு பின்னால் உட்கார்ந்திருப்பார். நீங்கள் அங்கு வருவதற்கு முன்பே வந்து விடுவார். பிரசங்கம் முடிந்து மக்கள் திரும்பும் போது ஒவ்வொரு வரையும் விழுந்து வணங்கி விட்டு கடைசியில் தான் அவர் செல்வார் என்றது ஆவி. துளசிதாசருக்கு ஆர்வம் மேலிட்டது. அவர் எப்படி இருப்பார் என்று கேட்டார் துளசிதாசர். உடம்பெல்லாம் வெண் குஷ்டம். அசிங்கமாக இருப்பார். யாரும் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது. ஒதுக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி வருவார். அவர் கால்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு ஆவி சென்றது.

துளசிதாசர் அன்று இரவு சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே அனுமனை கவனித்து விட்டார். தன் கண்ணெதிரே ஆனால் சற்று தள்ளி தலையில் முக்காடிட்டுக் கொண்டிருந்தார். அன்று பிரசங்கத்தில் சபரியின் கதை. சபரி ராமன் எப்போது வருவாரோ என்று வழிமேல் வழி வைத்து காத்திருக்கிறாள். வழியிலே போவோர் வருவோரை எல்லாம் கேட்கிறாள் புலம்புகிறாள். ராமா என்னை ஏமாற்றி விடாதே. எனக்கு நீ தான் கதி. எனக்கு வேறு எதிலும் நாட்டமில்லை. எங்கே சுற்றுகிறாயோ? உனக்கு யாராவது வழிகாட்ட மாட்டார்களா? நீ இங்கு வரமாட்டாயா? உன்னைத் தேடி நான் அலைய வேண்டும். ஆனால் என்னைத் தேடி நீ வர வேண்டும் என நினைக்கிறேனே? நான் உன்னை தேடி வர முடியாதே? யாராவது அழைத்து வர மாட்டார்களா? ராமனை நான் தரிசனம் செய்வேனா? எனக்கு அந்த பாக்கியம் உண்டா? என்று சபரியின் கதையை கூறி விட்டு மயக்கம் அடைந்து விட்டார் துளசிதாசர். சபை முழுவதும் கண்ணீர் விட்டு கதறியது. எங்கும் ராம நாம கோஷம். பின் வெகு நேரம் ஆகியும் துளசிதாசருக்கு மயக்கம் தெளியவில்லை. சிலர் நெருங்கி வந்து மயக்கம் தெளிய உதவி செய்தனர். அத்துடன் சபை கலைந்து விட்டது. பின் வெகுநேரம் கழித்து கண் திறந்து பார்த்தார் துளசி தாசர். எதிரே குஷ்டரோகி வடிவில் அனுமர் நின்று கொண்டிருந்தார். பிரபோ அஞ்சன புத்ரா என்று கதறி அழுது அவருடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அனுமன் கால்களை விடுவித்துக் கொண்டார். பின் தாசரை தோளில் சுமந்து கொண்டு விடுவிடுவென்று நடந்தார். பொழுது விடிந்து விட்டது.

துளசிதாசரை கீழே கிடத்தினார் அனுமன். துளசி தாசரும் கண் விழித்து நான் எங்கிருக்கிறேன் என்று வினவினார். இது தான் சித்ர கூடம் இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர். ராமன் முதன் முதலில் வனவாசம் செய்த இடம். இங்கே அமர்ந்து ராம நாமத்தை செபியுங்கள் செய்யும். ராம தரிசனம் கிடைக்கும் என்று கூறினார் அனுமன். அதற்கு துளசி தாசர் நீங்கள் கூட இருக்க வேண்டும் என்றார். நீங்கள் ராம நாமத்தை சொன்னால் உங்களுடன் நான் இருப்பேன் என்று கூறிய அனுமன் அங்கிருந்து மறைந்து விட்டார். துளசிதாசரும் ராமஜபம் செய்தார். ராமன் வருவாரா? எப்படி வருவார்? லட்சுமணன் கண்டிப்பாக வருவாரா? எப்படி இருப்பார்? தலையில் ஜடா முடியுடன் வருவாரா? அல்லது வைரக் கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? பட்டு பீதாம்பரம் அணிந்து வருவாரா? ரதத்தில் வருவாரா? நடந்து வருவாரா? என்றவாரு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக்கொண்டார். கண் கொட்டாமல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தார். மலைப்பாதை. ஒற்றையடிப் பாதை. இருபுறமும் புதர். அப்பால் ஒரு பாறாங்கல். அதன் மேல் நின்ற கொண்டு ராம ராம என்று நர்த்தனமாடினார். மலை உச்சியிலிருந்து வேகமாக இரண்டு குதிரைகள் ஓடி வந்தன. அவற்றின் மீது இரண்டு ராஜாக்கள் வந்தார்கள். இவர்களை பார்த்த துளசிதாசருக்கு சந்தேகம் வந்தது. வந்தவர்களின் தலையில் தலைப்பாகை. அதைச் சுற்றி முத்துச் சரங்கள். கொண்டை மீது வெண் புறா இறகுகள். வேகமாக குதிரை மீது வந்தவர்கள் துளசிதாசரைப் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றார்கள். இவர்களை பார்த்த துளசிதாசர் இவர்கள் பெரிய வீரர்கள் என்றாலும் என் ராம லட்சுமணனுக்கு ஈடாவார்களா? தலையில் ரத்ன கிரீடமும் மார்பில் தங்க கவசமும் தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புராத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக்கொண்டே என்ன அழகாக இருப்பார்கள் என்று ராமனை தியானித்தவாறே ராம நாமம் சொன்னார்.

துளசிதாசரிடம் சிறிது நேரம் கழித்து வந்த அனுமன் ராம லட்சுமணர்களை பார்த்தீர்களா என்று கேட்டார். திடுக்கிட்ட துளசிதாசர் பார்க்கவில்லையே என்றார். அதற்கு அனுமன் இந்தப் பக்கமாகதானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார். வந்தது ராம லட்சுமணர்களா ஏமாந்து போனேனே என்று அலறினார் துளசி தாசர். அதற்கு அனுமன் ராமர் உங்கள் விருப்பப்படி தான் வர வேண்டுமா? அவரின் விருப்பப்படி வர கூடாதா? என்று கேட்டார். உடனே துளசிதாசர் சுவாமி மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாதவன் நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தவர்களை அலட்சியம் செய்து விட்டேன். இன்னும் ஒருமுறை தயவு செய்யுங்கள். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன் என்றார். சரி நீங்கள் அருகில் இருக்கும் மந்தாகினி நதியில் இறங்கி நீராடி ஜபம் செய்யுங்கள். ராமரின் தரிசனம் கிடைக்கும் என்றார். துளசிதாசரும் மந்தாகினிக்கு ஓடி நீராடி ராம நாம செபம் செய்தார். வால்மீகியின் ராமாயணத்தை ஒப்புவித்தார். நதியில் நீராடுதல் இதனிடையே இரண்டு நாட்கள் ஆகி விட்டது. ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்னால் ராம லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்கிற கட்டத்தை படித்துக் கொண்டிருந்தார். எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர். ஒருவன் நல்ல கருப்பு நிறம். மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்து பதினைந்து நாள் வளர்ந்த தாடி. சுவாமி கோபி சந்தனம் தங்களிடம் இருக்கிறதா என்று அவர்கள் கேட்டனர். இருக்கிறது தருகிறேன் என்று சந்தனத்தை எடுத்தார். சந்தனம் கேட்டவர்கள்எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள் என்றார்கள்.

துளசிதாசரும் அதற்கென்ன நாமம் போட்டு விடுகிறேன் என்று இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோபி சந்தனத்தை குழைத்தார். அந்த கருப்புப் பையன் எதிரே உட்கார்ந்து முகத்தை காட்டினான். துளசிதாசர் இளைஞனின் முகத்தைப் பார்த்ததும் அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்த்தது. பார்த்தவுடன் மெய் மறந்து சிலை போல் இருந்தார் துளசிதாசர். அந்தப் இளைஞன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தை தன் கட்டை விரலில் எடுத்து தன் நெற்றியில் வைத்துக் கொண்டு அவருடைய நெற்றியிலும் வைத்தான். தன்னுடன் வந்தவனுக்கும் வைத்தான். அப்போது அவர்கள் உட்கார்ந்திருந்திருந்த படித்துறைக்கு அருகே இருந்த மாமரத்தில் ஒரு கிளி கூவியது.

சித்ர கூடகே காடபரே பகி ஸந்தந கீ பீர
துளசிதாஸகே சந்தந கிஸே திலக தேத ரகுபீர

பொருள்: சித்ரக் கூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம். துளசிதாசர் சந்தனம் குழைக்கிறார். ராமன் திலகமிடுகிறார்.

துளசிதாசர் கிளியின் சத்தத்தின் பொருளை உணர்ந்து திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தார். துளசிதாசரை என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா என்று கேட்டான் அந்த கருப்பு இளைஞன். ராமா உனக்கு இதை விட பொருத்தமான நாமம் ஏது என்று கதறிக் கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசி தாசர். மறுகணம் ராம லட்சுமணர்கள் மறைந்தார்கள்.

குளிகை

ராவணனின் மனைவியான மண்டோதரி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அச்சமயத்தில் எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என இருக்க இலங்கை வேந்தன் தனது குலகுருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்து யாராலும் வெல்ல முடியாத வீரமும் மிகுந்த அழகும் நிறைந்த அறிவும் கொண்ட மகன் தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம் வேண்டுகோள் விடுத்து அதற்கான வழிமுறைகளையும் அவரிடம் கேட்டான். அதற்கு சுக்கிராச்சாரியார் கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும் என்று யோசனை கூறினார். உடனடியாக நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப்பிடித்து ஒன்றாக அடைத்து விட்டான் ராவணன். ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் தவித்துப் போனார்கள். இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்தும் கொண்டனர். தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப் போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டார்கள். அதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெருமளவு தவித்தாள். வலி அதிகம் இருந்த போதிலும் குழந்தை பிறக்கவே இல்லை. இந்தச் செய்தி நவக்கிரகங்களை எட்டியதும் அதற்கும் தாங்கள் தான் காரணம் என்று ராவணன் தண்டிப்பானோ என்று அச்சம் கொண்டு அது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டார்கள். இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால் உங்கள் ஒன்பது பேரைத் தவிர நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவன் ஒருவனை சிருஷ்டித்து ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால் உங்களுக்கு நன்மை உண்டாகும். அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் ராவணின் சிறையிலிருந்து விடுதலை பெறலாம் என்றார்.

சுக்கிராச்சாரியாரின் வாக்கின்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால் தனது மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும்படி செய்தார். சனீஸ்வரன் ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வனுக்கு குளிகன் என்று பெயரிடப்பட்டது. குளிகன் (மாந்தன் எனவும் அழைப்பர்) பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தான். குழந்தை பிறந்து முதன் முதலில் அழுதவுடன் ஒரு மாபெரும் வீரன் பிறந்துள்ளதைக் குறிக்கும் வகையில் இடி மின்னலுடன் அடர்மழை பெய்தது. அதனால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான். அவன் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பல அபூர்வமான அஸ்திரங்களைப் பெற்று இந்திரனை வென்று இந்திரஜித் என்று அழைக்கப்பட்டான். இந்திரஜித் என்ற மேகநாதன் பிறந்த நேரம் தான் குளிகை நேரம் எனப்படுகிறது. தான் பிறக்கும் போதே நல்லதை நடத்தி வைத்ததால் குளிகன் நவக்கிரகங்களால் பாராட்டப்பட்டார். குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக வழங்கப்பட்டது. குளிகை நேரத்தை காரிய விருத்தி நேரம் என்று ஆசீர்வதித்தார் சுக்கிராச்சாரியார். அதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மிதக்கும் பாறைகள்

விஸ்வகர்மாவின் மகனாகிய நளன் ஒரு சமயம் கங்கைக் கரையில் மரங்களின் கனிகளைப் பறித்துத் தின்பதும் மரக்கிளையில் தாவித் திரிவதுமாக இருந்தான். அப்போது சற்று தூரத்தில் ஒரு அந்தணர் சாளக்கிராமத்தை வைத்துப் பூஜை செய்து கொண்டிருப்பது அவன் கண்களில் பட்டது. மெதுவாகச் சென்று விளையாட்டுத்தனமாக அந்தச் சாளக்கிராமத்தை எடுத்துக் கங்கை நீரில் வீசி எறிந்து விட்டான். கோபம் கொண்ட அந்தணர் நீ தண்ணீரில் எதை எறிந்தாலும் அது மூழ்காமல் மிதக்கட்டும் என்று சாபமிட்டார். அதனால்தான் கடலில் நளன் வைத்த கற்கள் மூழ்கிவிடாமல் நின்றன.

தனுஷ்கோடியில் இருந்த ராமர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த ராமர் சீதை லட்சுமணர் ஆகியோரது சிலைகளுடன் ராமர் பயன்படுத்திய பாறைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. பூரி ஜெகநாதர் கோவில் குஜராத் துவாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் ரிஷிகேஷ் பத்திரிநாத் அலகாபாத் திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள் ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டவை. புதுச்சேரியில் உள்ள அனுமன் கோவிலிலும் இந்த மிதக்கும் பாறைகளை காணலாம்.

அக்னி தீர்த்தம்

ராமர் சீதையின் புனிதத்தை உலகிற்கு காட்டுவதற்காக அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார். சீதையின் புனிதத்தில் அக்னி மிகவும் வெப்பமடைந்து தாங்க முடியாத வேதனையை அனுபவித்தான். அக்னியைப் பார்த்த ராமர் நீ இந்த சமுத்திரத்தில் மூழ்கி உன்னுடைய வேதனையைக் குறைத்துக்கொள் என்றார். அக்னிபகவான் அந்தப் பகுதி கடலில் மூழ்கினார். அவர் மூழ்கிய இடம் அக்னி தீர்த்தம். இந்த தீர்த்தத்தில் மூழ்குகிறவர்களுக்கு சகல பாபங்களும் தீரும். இங்கு அமர்ந்து பித்ருக்களுக்கு நீர் வார்ப்பவர்களுக்கு பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அந்த பித்ருக்களின் தாகம் தணியும் என்று ராமர் ஆசிர்வதித்தார்.

முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. ராமர் தனுஷ்கோடி வழியாக இலங்கை சென்றதன் நினைவாக தனுஷ்கோடியில் ராமர் கோவில் ஒன்று இருந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடியே சின்னாபின்னாமான போது இந்த கோவிலும் சிதைந்து போனது. அந்த புயலுக்கு பின்னர் அங்கிருந்த ராமர் சீதை லட்சுமணர் ஆகியோரது சிலைகள் ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டன. தனுஷ்கோடி அழிந்த பிறகு ராமேஸ்வரம் ராமநாதர் கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது.

மாணிக்கவாசகர்

சிவ பக்தையான மண்டோதரி சிவபிரானை குழந்தை வடிவில் தரிசிக்க விரும்பி அதற்காக கடும் தவம் புரிந்தாள். அதேசமயம் உக்கிரகோசமங்கை எனும் திருத்தலத்தில் ஆயிரம் முனிவர்கள் ஒன்று கூடி சிவபிரானை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குக் காட்சியளித்த சிவன் தன் கையிலிருந்த சிவ ஆகமங்களை அவர்களிடம் தந்தார். ராவணனின் மனைவியான மண்டோதரிக்கு தான் குழந்தை வடிவில் காட்சியளிக்கச் செல்வதாகவும் திரும்பி வரும் வரை ஆகமங்களைப் பாதுகாக்கும் படியும் கூறினார். அதோடு குழந்தை வடிவில் செல்லும் தன்னை ராவணன் தொடும் சமயத்தில் அங்கிருந்து மறைந்து ஜோதி வடிவாக இக்கோயில் குளத்தினில் தோன்றி மீண்டும் ஒரு முறை காட்சியருள்வதாகக் கூறி மறைந்தார். அழகே உருவான குழந்தை வடிவில் மண்டோதரிக்குக் காட்சியளித்தார் சிவன். குழந்தை வடிவில் வந்தவர் யார் என உணர்ந்து கொண்ட மண்டோதரி தன் தவம் நிறைவேறியதால் மகிழ்ந்தாள். குழந்தையாய் இருந்த சிவனை வாரியணைத்து எடுத்து சீராட்டினாள். அப்போது அங்கு வந்த ராவணன் அக்குழந்தையின் அழகால் கவரப்பட்டான். அவன் மனதில் எல்லையில்லா ஆனந்தம் ஏற்பட்டது. யாருடைய குழந்தை இது என்று மண்டோதரியிடம் ராவணன் கேட்டான். அதற்கு மண்டோதரி நடந்தவற்றை கூறினாள். சிவனின் பக்தனான ராவணன் மகிழ்வோடு அந்த குழந்தையை தூக்க முயற்சிக்கும் போது சிவன் அங்கிருந்து மறைந்து உத்தர கோச மங்கை தலத்தின் திருக்குளத்தில் அக்னிப் பிழம்பாய் தோன்றினார். அவரைக் கண்ட அங்கிருந்த முனிவர்கள் பரவசமடைந்து ஜோதியில் பாய்ந்து நீரில் மூழ்கினர். ஒரே ஒரு முனிவர் மட்டும் இறைவன் கொடுத்த ஆகமங்களைக் காப்பதே தன் கடமை என சிவனின் கட்டளைக்கு பணிந்து அங்கேயே ஆகமங்களை காத்து நின்றார். அவருக்கு சிவன் தன் உமையவளுடன் விடைமேலமர்ந்து காட்சியருளினார். மூழ்கிய முனிவர்கள் ஒவ்வொருவரும் லிங்க வடிவில் இறைவனோடு ஒன்ற இறைவன் நடுவில் வீற்று சகஸ்ரலிங்கமாக அமர்ந்தார்.

எஞ்சியிருந்த முனிவர் தன் உயிரினும் பெரிதாய் சிவாகமங்களைக் காத்ததால் அவரை பாண்டிய நாட்டில் மீண்டும் பிறந்து சைவமும் தமிழும் தழைத்தோங்க தொண்டு செய்யுமாறு அருளி மறைந்தார் எம்பெருமான். அந்த எஞ்சிய தொண்டரே மாணிக்கவாசகராய் அவதரித்தார். மகேசனின் புகழ்பாடி மண் சிறக்க வகை செய்தார். மாணிக்கவாசகப் பெருமானின் அவதாரத்திற்கு மண்டோதரியின் பக்தியும் ஒரு காரணமாயிற்று.

நமச்சிவாயக் கவிராயர்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் வைத்த பக்தியினாலும் பேரன்பினாலும் நாள்தோறும் பாபநாசம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் உலகம்மையை வழிபாடு செய்து வருவது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல பாபநாசம் சென்று உலகம்மையை தொழுது பாடினார். இரவு வரை தொடர்ந்து பாடியவர் கோவில் மூடியதும் அங்கிருந்து கிளம்பினார். இல்லத்திற்குத் திரும்பும் போதும் உலகம்மையைப் புகழ்ந்து கவிதை பாடிக்கொண்டே வந்தார். பக்தன் பாடும் கவிதையை கேட்க ஆவல் கொண்ட உலகம்மை கவிராயரை பின் தொடர்ந்து வந்தாள். அம்பிகை வருவதை அறியாத கவிராயர் வெற்றிலை தரித்து போட்டுக் கொண்டு வாய்விட்டுப் பாடிக்கொண்டே வந்தார். மெய் மறந்து பாடியபோது அவரையும் அறியாமல் அவர் வாயிலிருந்து தெறித்த எச்சில் துளிகள் உலகம்மையின் மேல் பட்டது. அத்திருக்கோலத்தோடு உலகம்மை கோயிலில் மீண்டும் எழுந்தருளினாள். மறுநாள் காலையில் கோயிலைத் திறந்து பார்த்த அர்ச்சகர் உலகம்மையின் சேலையில் தெரிந்த எச்சில் துளிகளைக் கண்டு திடுக்கிட்டார்.

இறைவழிபாட்டுக்கு அச்சமயம் வந்திருந்த அரசனிடம் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. மன்னன் வேதனையுற்றான். இப்பாதகத்தை செய்தவன் யார் உடனே கண்டு பிடியுங்கள் என்று உத்தரவிட்ட அரசன் அரணைமனைக்கு திரும்பி இந்த வேதனையிலேயே இருந்தான். இரவு அரசன் இந்த யோசனையிலேயே தூங்கிய அரசனின் கனவில் வந்த உலகம்மை வருந்தாதே அரசனை என் மீது கொண்ட பக்தியினால் நமச்சிவயாத்தின் பாடலுக்கு வசப்பட்டு அவன் பின்னே நான் தான் சென்றன். பாடுவதில் தன்னை மறந்த நிலையில் இருந்த நமச்சிவாயக் கவிராயர் வாயிலிருந்த வந்த எச்சில் என் மீது பட்டது. அவனை விட சிறந்த பக்தன் கிடையாது. அவனுக்கு சகல மரியாதைகளையும் செய்து கௌரவிப்பாய் என்று கூறி மறைந்தாள். அம்பிகையின் உத்தரவு கேட்டு அகமகிழ்ந்த அரசன் அம்பிகையின் உத்தரவின் படி நமச்சிவாயக் கவிராயரை கௌரவிக்க எண்ணி அவரை கோவிலுக்கு வரவழைந்தான். நமச்சிவாயக் கவிராயர் உலகம்மையின் மீது வைத்திருக்கும் அன்பை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிய அரசன் அவரிடம் சென்று தாங்கள் உலகம்மை மீது வைத்த அன்பு சத்தியமானால் இதோ உலகம்மை கையிலிருக்கும் தங்கப் பூச்செண்டு தாங்கள் பாடப் பாட அப்பூச்செண்டை சுற்றியிருக்கும் தங்க கயிறுகள் அறுந்து இப்பூச்செண்டு தானாய் உங்கள் கையில் வந்து விழ வேண்டும் என்றான் அரசன். உலகம்மை அந்தாதி எனும் அற்புதமான நூலை இயற்றினார். நமச்சிவாயக் கவிராயர் அந்தாதி பாடப்பாட அம்மையின் கரத்துள்ள பூச்செண்டின் தங்க நார்கள் ஒவ்வொன்றாய் அறுந்து விழுந்தன.

விண்டல நின்ற சரற்கால சந்திர சுவேதமுக
மண்டலமும் கையில் மலரொடும் தோளில் வழிந்த ரத்ன
குண்டலமும் பொலி வாலப் பிராய குமாரத்தியாய்
செண்டலர் செங்கை உலகாள் என் நாவில் சிறந்தவளே

எனும் பாடலை பாடி முடித்த சமயம் அனைத்து தங்க நாரும் அறுந்து தங்கச் செண்டு உலகம்மையின் கையிலிருந்து நமச்சிவாயக் கவிராயர் கரத்திற்கு தாவி வந்தது. அரசர் முதல் அனைவரும் நமச்சிவாயக் கவிராயர் பாதத்தில் விழுந்தனர். இவர் சிங்கை உலகம்மை பிள்ளைத் தமிழ், சிங்கை உலகம்மை கலித்துறை அந்தாதி, சிங்கை உலகம்மை கொச்சகக் கலிப்பா, சிங்கை உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, சிங்கை உலகம்மை சந்த விருத்தம், சிங்கை சிலேடை வெண்பா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இந்நூல் சிங்கை பிரபந்தத் திரட்டு என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றன.

நாயாகப் பிறவி எடுப்பது ஏன்?

ராமர் தனது அரசவையில் அமர்ந்திருந்தார். அப்போது வெளியே நாய் ஒன்று பெருங்குரலில் குரைத்துக் கொண்டிருந்தது. என்னவென்று தெரிந்து வருமாறு ஒரு காவலனை அனுப்பினார். அவன் அந்த நாயைத் துரத்திவிட்டு ராமரிடம் வந்து காரணமின்றிக் குரைத்த அந்த நாயை இந்தப் பகுதியை விட்டே துரத்தி விட்டேன் என்றான். சற்று நேரம் கழித்து மீண்டும் அந்த நாய் குரைக்க அதே காவலன் விரைந்து சென்று அதைத் துரத்தினான். இந்த நிகழ்வானது தொடர்ந்து நடந்தது. இதனை சிந்தித்த ராமர் லட்சுமணனிடம் அந்த நாய் தொடர்ந்து குரைக்கிறது. நீ போய் காரணம் என்ன வென்று தெரிந்து கொண்டு வா என்று அனுப்பினார். லட்சுமணன் குரைக்கும் நாயை நெருங்கி உன் துயரத்துக்குக் காரணம் என்ன சொல் என்று கேட்டான். அதற்கு அந்த நாய் ஈனஸ்வரக் குரலில் பேசத் தொடங்கியது ராமரை வரச் சொல்லுங்கள் எனக்கு நீதி வேண்டும் என்றது. இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த லட்சுமணன் நாய் சொன்னதை அப்படியே ராமரிடம் கூறினான். உடனே ராமர் வெளியே வந்தார். எனது ராஜ்யத்தில் காரணமின்றி எவரும் துயரப்படக் கூடாது. ஆகவே நீ எவ்விதத் தயக்கமும் இன்றி உன் துயரத்தை என்னிடம் சொல் என்றார். அந்த நாய் பணிவுடன் அவரை வணங்கி பேசத் தொடங்கியது. என்னை சன்யாசி ஒருவர் கல்லால் அடித்துக் காலை உடைத்து விட்டார். அதை முறையிடவே இங்கு வந்தேன் எனக்கு நீதி வேண்டும் என்று வேதனையுடன் கூறியது. ராமர் கனிவான குரலில் வருந்தாதே. நான் இப்போதே அந்த சன்யாசியிடம் விசாரிக்கிறேன் என்று சன்யாசியை அழைத்து வர உத்தரவிட்டார். சற்று நேரத்துக்குள் அந்த சன்யாசி அங்கு வந்து ராமரை வணங்கி நின்றார்.

ராமர் சன்யாசியிடம் நீங்கள் எதற்காக இந்த நாயைக் கல்லால் அடித்தீர்கள் என்று விசாரித்தார். அதற்கு சன்யாசி நான் பிட்சை வாங்கி வரும்போது இந்த நாய் எனது பிட்சான்னத்தைத் தொட முயற்சி செய்தது. அப்போது நான் மிகவும் பசியுடன் இருந்ததால் இந்த நாய் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது. எனவே அதன் மீது கல் எறிந்தேன் என்றார். ராமர் புன்னகை மாறாத முகத்துடன் அவரை நோக்கி இந்த நாய் ஐந்தறிவு படைத்த பிராணி. இதனால் தனக்கு தேவையான உணவே சமைக்கவோ உருவாக்குக் கொள்ளவோ தெரியாது. பார்க்கும் உணவே சாப்பிடவே தோன்றும் இது ஐந்தறிவு படைத்த பிராணிகளுக்கு உண்டான விதி. உங்களுக்கு பசி இருப்பது போல் இந்த நாயிற்கும் பசி எடுத்ததினால் உங்களது உணவை சாப்பிட முயற்சி செய்தது. இந்த நாயின் விதிப்படி இது தவறு அல்ல. பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பது ஆறறிவு மனிதனுக்கு உண்டான தர்மம். நீங்கள் அந்த தர்மத்தை மீறியது மட்டுமல்லாமல் நாயை கல்லால் அடித்து காயப்படுத்தி தவறு செய்து விட்டீர்கள். உமது செயல் கண்டிப்பாகக் குற்றமே. எனவே நீங்கள் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறினார். நாயின் பக்கம் திரும்பிய ராமர் இந்த சன்யாசி உனக்கு கெடுதல் செய்திருப்பதால் இவரை தண்டிக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன். நீ என்ன சொன்னாலும் அதை நிறைவேற்றுகிறேன் என்றார். அதற்கு அந்த நாய் இவரை ஒரு சிவாலயத்தில் அதிகார வேலையில் அமர்த்துங்கள். இதுவே நான் அவருக்கு அளிக்கும் தண்டனை என்றது.

ராமர் அதற்குச் சம்மதித்து அதற்கான ஆணையை பிறப்பித்தார். தனக்குப் பெரிய பதவி கிடைத்த மகிழ்ச்சியில் சன்யாசியும் திருப்தியுடன் அங்கிருந்து வெளியேறினார். நாயும் மன நிறைவுடன் அகன்றது. இதை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் வியப்புடன் நின்றார்கள். அன்னத்துக்கு அலையும் அந்த சன்யாசிக்கு இது அதிர்ஷ்டமே அன்றி தண்டனையல்ல. இதனால் அவர் மேலும் சுகம் அடையப் போகிறார். இது எப்படி தண்டனை ஆகும் என்று மக்கள் ராமரிடம் கேட்டார்கள். அனைத்தும் அறிந்த ராமர் நாயிடமே இதனை கேட்டு தெரிந்து கொள்வோம் என்று அந்த நாயை அழைத்து வருமாறு தன் காவலரிடம் கூறினார். நாயும் வந்தது. இப்போது நாயிடம் அதே கேள்வியே மக்கள் கேட்டார்கள். அதற்கு அந்த நாய் சிவாலயத்தில் அதிகாரி வேலை என்று அந்த சன்யாசிக்கு நான் அளித்தது முள்ளின் மேல் நிற்கிற ஒரு பணி. சிவாலயம் மடம் கிராமம் போன்றவற்றில் தவறு செய்யும் அதிகாரிகள் பசு அந்தணர் அநாதை ஆகியோரின் செல்வத்தை அபகரிப்பவர்கள் அரசனது வீட்டில் இருந்து கொண்டு அங்கு வரும் யாசகர்களைத் தடுப்பவர்கள் அந்தணரின் உணவுப் பொருட்களை அபகரிப்பவர்கள் ஆகியோர் மறு ஜென்மத்தில் கண்டிப்பாக நாயாகப் பிறப்பார்கள். சென்ற பிறவியில் நான் தவறு இழைத்த ஒரு மடாதிபதியாக இருந்ததால் இப்போது நாயாகப் பிறவி எடுத்துள்ளேன். எனவே தான் சன்யாசிக்கு இப்படி ஒரு தீர்ப்பு சொன்னேன். இந்த ஜென்மத்தில் எனது பசிக்கு உணவு தராமல் தவறு செய்த சன்யாசி சிவாலயப் பணியில் இருந்து நல்ல விதமாக பணி செய்தால் என்னை அடித்த பாவம் தீர்ந்து நன்மை அடைவார். ஆசையின் காரணமாக ஏதேனும் தவறு செய்தால் மீண்டும் பாவம் செய்து நாயாகப் பிறப்பார் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பியது. அங்கு கூடியிருந்த அனைவரது சந்தேகமும் தீர்ந்தது.

கருத்து: சிவாலயம் மடம் அரசு நிர்வாகம் போன்ற பதவியில் இருப்பவர்கள் தவறு செய்யக்கூடாது. பசு அந்தணர் ஆதரவற்றோர் ஆகியோரின் செல்வத்தின் மேல் ஆசைப்படகூடாது. அரசனை காண வரும் யாசகர்களை தடுக்கக்கூடாது. உண்மையான அந்தணர்களின் பொருளை அபகரிக்ககூடாது.