திருமூலர் – வரலாறு

திருமூலர் வாழ்க்கை வரலாறைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் 19-06-2021 அன்று Zoom நேரலையில் நிகழ்த்திய கலந்துரையாடல்.

108 திவ்யதேசத்தில் 78 வது திருக்குறுங்குடி

திருமாலுக்கு ஆழ்வார்கள் மங்களாசனம் பாடிய திவ்ய தேசம் கோவில்களில் 78 வது இக்கோவிலாகும். வராக அவதாரத்தில் திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி தனது மிகப் பெரிய வராக வடிவத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி என்று பெயர் பெற்றது. மூலவர் நின்றநம்பி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவன் நின்றநம்பிக்கு குறுங்குடி நம்பி மலைமேல் நம்பி என்ற வேறு பெயர்களும் உண்டு. குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு குரங்கச் சேத்திரம் என்ற பெயரும் உண்டு. 1.நின்ற 2.அமர்ந்த 3.நடந்த 4.கிடந்த 5.இருந்த என்று ஐந்து நிலைகளிலும் இக்கோவிலில் பெருமாள் காட்சி தருகிறார். தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார். தீர்த்தம் திருப்பாற்கடல் பஞ்சதுறை சிந்துநதி. விமானம் பஞ்சகேதக விமானம். இந்த கோயிலில் தாயாருக்கு தனி சன்னதி இருந்தாலும் அர்ச்சனை கிடையாது. கோவிலில் இறைவனுக்கு நேராக இருக்கும் கொடிமரம் சிறிது விலகி உள்ளது. நின்ற நம்பி கிடந்த நம்பி என்ற இரு சன்னதிக்கு இடையில் சிவன் மற்றும் பைரவர் சன்னதி உள்ளது. கோவில் மூலவரான அழகிய நம்பிக்கு பூஜை நடக்கும் போது இங்குள்ள சிவனுக்கும் பூஜை நடந்து விட்டதா? என்பதை அறிய சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பர்க்கு குறையேதும் உண்டா? என்று பட்டர் கேட்பார். அதற்கு குறை ஒன்றும் இல்லை என பட்டர்கள் பதில் அளிப்பார்கள். இது இன்றும் நடைமுறையில் உள்ளது.

பெரிய சிவாலயங்களில் விஷ்ணுவுக்கு தனி சன்னதி உள்ளதைப் போல இத்திருக்கோவிலில் சிவனுக்கும் பைரவருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு மகேந்திரகிரி நாதர் என்றும் பக்கம் நின்ற பிரான் என்றும் பெயர். திருக்குறுங்குடி நம்பி கோவிலைக் காக்கும் தெய்வமாக பைரவர் இங்கு இருக்கிறார். பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை சிவபெருமான் இந்தத் திருக்குறுங்குடி தலத்தில் போக்கிக் கொண்டார் என்பதால் அவருடைய அம்சமான பைரவர் அந்த நற்பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்வாறு இங்கு காவல் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார். இந்த கால பைரவருக்கு இடது பக்கத்தில் ஒரு விளக்குத் தூண் உள்ளது. இதன் மேல் பகுதியில் பைரவரின் முகத்தின் அருகில் ஒரு விளக்கும் கீழ்ப் பகுதியில் இன்னொரு விளக்கும் உள்ளது. இவை தவிர இரண்டு சர விளக்குகளும் உண்டு. இந்த நான்கு விளக்குகளிலும் உள்ள தீபம் ஒளி சிந்தி பைரவரின் முழு ரூபத்தையும் தெளிவாகக் காட்டுகின்றன. மேலே உள்ள விளக்கின் தீபத்தின் ஜ்வாலை மட்டும் காற்று பட்டது போல் அசைகிறது. பிற மூன்று விளக்கு ஜ்வாலைகளும் சீராக எந்தச் சலனமுமில்லாமல் எரிந்து கொண்டிருக்கின்றன. மேல் விளக்கு தீபத்தின் ஜ்வாலை மட்டும் எப்படி அசைகிறது? அது பைரவரின் மூச்சுக் காற்று அந்த தீபத்தில் மட்டும் படுவதினால் ஏற்படும் அசைவு ஆகும். பைரவர் மூச்சை இழுக்கும் போது ஜ்வாலை அவரை நோக்கித் திரும்பியும் விடும் போது எதிர் திசையில் விலகியும் அசைகிறது. அது போல் அவரது கண்கள் தீப ஆராதனை ஒளியில் அசைவதை இப்போதும் நேரில் கண்டு தரிசிக்கலாம்.

இந்த பைரவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் பைரவரின் மூச்சுக்காற்றில் அசையும் தீபத்தின் வீடியோவையும் பார்க்க கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்தி இவருக்கு தொல்லை கொடுத்தார்கள். ராமானுஜர் இத்தல இறைவனை வேண்டியதால் கருடராழ்வார் நம்பூதிரிகளிடமிருந்து அவரை மீட்டு இத்தலத்திற்கு தூக்கி வந்தார். ராமானுஜர் இத்தலத்திற்கு வந்தபோது இத்தல இறைவன் நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சமஸ்காரம் செய்து உபதேசம் பெற்றார் என்பது வரலாறு. உபதேசம் பெற்றதும் அவருக்கு ராமானுஜர் வைத்த பெயர் வைஷ்ண நம்பி என்பதாகும். திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்க பெருமாளிடம் மோட்சம் கேட்டபோது திருக்குறுங்குடி போ அங்கு மோட்சம் கிடைக்கும் என்றார். திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது இத்தலத்தில் தான். ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயல்கிறான். அப்போது விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டார். அப்போது பூமித்தாய் இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வராகமூர்த்தியிடம் கேட்டார். அதற்கு வராக மூர்த்தி இசையால் இறைவனை அடையலாம் என்றார். அதனை நிருபிக்கும் விதமாக இறைவன் நம்பாடுவான் என்ற பக்தரின் வரலாறு உள்ளது.

நம்பாடுவான் என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் இசைக்கருவி வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தல இறைவனை தரிசிக்க வருகிறார். வழியில் பசியோடு இருந்த பிரம்ம ராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாக கூறினான். நம்பாடுவான் தற்போது இறைவனுக்கு விரதம் இருப்பதாகவும் நம்பியை தரிசித்து விரதத்தை முடித்து விட்டு வந்து பிரம்ம ராட்சசனுக்கு இறையாவதாக கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட பிரம்ப ராட்சசன் நம்பாடுவன் அங்கிருந்து செல்ல அனுமதித்தான். அவரிடமிருந்து விடை பெற்று வந்த நம்பாடுவன் கோயிலின் வாயிலில் நின்று நம்பியை தரிசிக்க முயற்சிக்கும் போது கோவிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது. ஆயினும் பக்தி சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்டினார். நம்பியும் நம்பாடுவானுக்கு தரிசனம் கொடுக்க எண்ணி கொடிமரத்தை நகரச் சொல்லினார். அதன்படியே கொடிமரம் நகன்று நம்பியை நம்பாடுவான் தரிசிக்க வழி கொடுத்தது. இதனால் நம்பியைத் தரிசித்த நம்பாடுவான் மகிழ்ச்சியாக பிரம்ம ராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அப்போது வயதானவர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன் நம்பாடுவானை தடுத்து நிறுத்தி அந்தக் காட்டில் ஒரு பிரம்ம ராட்சசன் வாழ்வதாகவும் அந்த வழியாக செல்பவர்களை தின்று விடுவதாகவும் கூறினார். நம்பாடுவான் அவரிடம் முன்பு பிரம்ம ராட்சசனுக்குத் தான் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அதன்படி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தான் அந்தக் காட்டுக்குள் செல்வேன் என்று சொல்லிவிட்டு காட்டிற்குள் சென்றார். ராட்சசனைத் தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் ராட்சசனைக் கண்டு தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும் இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறினார். ஆனால் பிரம்ம ராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டது என நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் வழிபட்ட பின் கோவிலில் பெற்ற பிரசாதத்தின் பாதி பழத்தை சாப்பிடுமாறு பிரம்ம ராட்சசனுக்குக் கொடுத்தார் அதை சாப்பிட்ட பிரம்ம ராட்சசன் இறைவனின் பிரசாதத்தை சாப்பிட்ட பலனால் சாபத்தால் தான் பெற்ற பிரம்ம ராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்று தன் முற்பிறவு வடிவத்தைப் பெற்றான். இந்த வரலாற்று சம்பவத்தை நினைவில் வைத்திருக்க இப்போதும் இங்கு கொடிமரம் விலகி இருப்பதை இப்போதும் காணலாம்.

இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால் தெய்வநாயகன் மற்றும் வரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும் என்ற அசரீரி கேட்டான். அசரீரியின்படி அந்த இடத்தை தோண்ட அந்த தெய்வ ரூபங்கள் கிடைத்தது. அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக ஒரு வரலாற்று செய்தி உள்ளது. இந்த கோவிலில் தினசரி 1.விஸ்வரூபம் 2.காலசந்தி 3.உச்சி காலபூஜை 4.சாயரட்சை 5.அத்தாழம் 6.அர்த்தசாமம் ஆகிய ஆறு கால பூஜைகள் நடந்து வருகிறது. ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவம் கார்த்திகை மாதம் ஏகாதசி திருவிழாக்கள் நடந்து புரட்டாசி நவராத்திரி விழாவும் இங்கு பிரசித்திப் பெற்றது ஆகும். விழாவின் போது தினசரி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்படும். கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு கருட சேவை நடத்தப்படுகிறது. பகலில் நம்பி சுவாமிகளுக்கு திருமஞ்சனமும் இரவில் கருட சேவை உற்சவமும் இடம்பெறும். திருவாலித் திருநகரில் பிறந்த திருமங்கை என்ற மன்னன் தலங்கள் பல சென்று திருமாலைப் பாடி வழிபட்டவன் இங்கு வந்து முக்தியடைந்துள்ளார். ராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த அழகிய நம்பி தான் நம்மாழ்வாராக அவதரித்தார். பெருமாளின் தரிசனம் கண்டவர்கள் சிவபெருமான் கஜேந்திரன். நம்மாழ்வார் 13 பாசுரம் பெரியாழ்வார் 1 பாசுரம் திருமழிசையாழ்வார் 1 பாசுரம் திருமங்கையாழ்வார் 25 பாசுரங்களும் பாடியுள்ளனர்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 15

கேள்வி: பிரம்மஹத்தி தோஷம் பற்றி

பிராமணன் என்றால் ஏதோ ஒரு இனத்தை குறிப்பதாக எண்ணிவிடக்கூடாது. எவனொருவன் பிரம்மத்தை உணர்கிறானோ அவன்தான் பிராமணன்.
இறையை உணர்ந்து கொண்டு சாத்வீகமாக அமைதியாக தன் வழியில் வாழ்ந்து கொண்டு தான் உண்டு தன் பணி உண்டு என்றிருப்பவன் பசுவிற்கு சமம். அந்த மனிதர்களுக்கு அசுரத்தன்மை கொண்ட மனிதர்கள் கெடுதி செய்வதும் அவனை வதைப்பதுமாக பல காலங்களில் இருந்திருக்கிறார்கள். இது தான் பிராம்மணனைக் கொல்வது.

ராவணனைக் கொன்றதற்காக ராமனுக்கு எதற்காக பிரம்மஹத்தி தோஷம் பீடிக்க வேண்டும்?

ஒருவன் நல்லவனோ கெட்டவனோ நியாயமோ நியாயமற்ற நிலையோ எதைக் கொன்றாலும் தோஷம் தான். கொலை என்று மட்டுமல்ல கொலைக்கு சமமான எத்தனையோ பாவங்கள் இருக்கிறது. நம்பிக்கை துரோகத்திற்கு ஈடான வேறு தோஷம் ஏதுமில்லை.

கேள்வி: மரங்களை கொல்வதால் வரும் பாவங்களில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம்

ஒரு மரத்தை தவிர்க்க முடியாமல் அழிக்க நேரிட்டால் மிக மிக குறைந்தபடசம் ஒரு மனிதன் 1008 மரங்களையாவது நட வேண்டும். இதுதான் இதற்கு தகுந்த பரிகாரம்.

108 திவ்யதேசத்தில் 76 வது திருவட்டாறு

ஆதிகேசவப் பெருமாள் மூலவராக புஜங்க சயனத்தில் மேற்கே பார்த்து வீற்றிருக்கிறார். இடது கையை தொங்கவிட்டு வலது கையில் முத்திரை காட்டி தெற்கே தலை வைத்தும் வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார். ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட பெருமாளின் திருமேனி 22 அடி நீளம் உடையது. திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால் 16008 சாளக்கிராம கற்களை இணைத்து உருவானது. பெருமாள் மேனி கடுசர்க்கரைப் பூச்சால் செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு அபிஷேகம் செய்ப்படுவது கிடையாது. அவருக்கு பதிலாக உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. தாயார் மரகதவல்லி நாச்சியார். தீர்த்தம் கடல்வாய்த் தீர்த்தம் வாட்டாறு ராமதீர்த்தம் விமானங்கள் அஷ்டாங்க விமானம் அஷ்டாஷர விமானம். பெருமாள் 22 அடி நீளம் கொண்டு காட்சி அளிப்பதால் ஒரு வாசல் வழியாக முழுமையாக தரிசிக்க முடியாது என்பதால் அவரை தரிசிக்க திருத்தலை திருக்கரம் திருப்பாதம் என மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ‌ஐம்படையினையும் காணலாம். திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். திருமுகம் திருக்கரம் திருப்பாதம் இவ‌ற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும்.

கோவிலின் 5 கலசங்கள் செம்பு தகட்டால் செய்யப்பட்டு அதன் மேல் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. புரட்டாசி மற்றும் பங்குனி மாதத்தில் 6 நாட்கள் சூரிய கதிர்கள் நேராக கர்ப்பக்கிரகத்தின் உள்ளே மூலவரின் மீது படும். கோவிலில் ஊர்த்துவ தாண்டவம் வேணுகோபாலர் மன்மதர் மற்றும் ரதி தம்பதியர் லட்சுமணன் மற்றும் இந்த்ரஜித் போன்றவர்களின் சிலைகள் உள்ளது. இந்தக் கோவிலின் அமைப்பு மற்றும் கட்டிடக்கலையை ஒரு மாதிரியாகக் கொண்டே திருவனந்தபுரத்தில் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆதிகேசவபெருமாள் கோவிலுக்கு நேர் எதிரிலேயே ஆற்றின் அருகாமையில் இன்னும் ஒரு சிறிய இறைவன் லக்ஷ்மி நரசிம்ஹனை வழிபடும் கோவிலும் நிலைகொண்டுள்ளது.

கோவிலின் பிரதான வாயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. நடுவாசலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருளுகிறார். தரையில் தாயாருடன் கூடிய பெருமாளின் உலோகத் திருமேனி உள்ளது. பெருமாளின் நாபியில் தாமரையோ பிரம்மனோ கிடையாது. இவரை வணங்கினால் மறுபிறப்பு கிடையாது. கருவறையில் கருடன் சூரியன் பஞ்சாயுத புருஷர்கள் மதுகைடபர் என்னும் அரக்கர்கள் உள்ளனர். சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு அமர்ந்துள்ளார். ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும் புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம். இத்தலம் சேரநாட்டு முறையில் மரத்தால் ஆன தூண்கள் கதவுகள் மற்றும் கூரைகளுடன் கட்டப்பட்டு உள்ளது. கருவறைக்கு முன் உள்ள ஒற்றைக்கல் மண்டபம் 18 அடி சதுரமும் 3 அடி உயரத்துடன் ஒற்றைக் கல்லினால் எழுப்பப்பட்டது ஆகும். அதன் சுவர்கள் மட்டுமே 3 அடிகள் தடிமன் கொண்ட பாறையாகும். கி.பி. 1604 ஆம் ஆண்டு இம்மண்டபம் கட்டுவதற்கு வீரரவி ரவிமர்மன் என்ற குலசேகரப் பெருமாள் பொருளுதவி செய்தான். பெருமாள் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் வேளையில் ஒற்றைக் கல் மண்டபத்தை யாரும் தொடக் கூடாது என்பது தொன்மரபு. கோவிலின் வெளிப்பிரகாரம் நெடுகிலும் கையில் திருவிளக்கேந்தி நிற்கும் தீபலட்சுமிகளின் சிலை இருபுறமும் உள்ளது. பலிபீட மண்டபத்தின் இருபுறமும் ஒற்றைக் கல்லிலான பல கலைவடிவங்கள் உள்ளன. இவற்றுள் புல்லாங்குழல் ஊதும் கண்ணனின் இசையில் மயங்கி தாய்மாறிப் பால் குடிக்கும் விலங்கினக் குட்டிகளின் சிலையும் ஒன்று.

பிரம்மா யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால் யாக குண்டத்தில் இருந்து கேசன் கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளை பழிவாங்கும் நோக்கத்துடன் கங்கையையும் தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர். இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அவர்கள் திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் வட்டாறு என அழைக்கப்பட்டது. இரு நதிகளும் பெருமாளுக்கு மாலை சூட்டியது போல் இருப்பதைக்கண்ட நம்மாழ்வார் மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் என பாடுகிறார். கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப் பெருமாள் எனப்படுகிறார். கேசியின் மீது சயனித்த போது அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாரை சுற்றி சிவாலயங்களாக அமைந்தன. மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் 12 சிவாலயங்களையும் ஓடியவாறு தரிசித்து கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும் அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. பரசுராமனுக்கும் சந்திரனுக்கும் பகவான் தரிசனம் கொடுத்த கோயில். நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார்.

இக்கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் தமிழ்க் கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் அரசர்களைப் பற்றிய குறிப்பும் அவர்களின் ஆட்சிக்காலமும் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி ஆட்சி செய்தவர்கள்

குலசேகரப்பெருமாள் – கி.பி. 644-659
வீரமார்த்தாண்டவர்மா – கி.பி. 510-519
வீரகேரளவர்மா – கி.பி. 519-550
செம்பலாதித்த வர்மா – கி.பி. 612-645
உன்னி கேரள வர்மா – கி.பி. 734-753

108 திவ்யதேசத்தில் 64 வது சோளிங்கர்

திருமாலுக்கு ஆழ்வார்கள் மங்களாசனம் பாடிய திவ்ய தேசம் கோவில்களில் 64 வது இக்கோவிலாகும். சோளிங்கர் சோளிங்கபுரம் என்று தற்போது வழங்கப் பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப் பெற்றுள்ளது. இதனை பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம். புராண நூலின் படி இம்மலையின் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பதும் கால அளவின் ஒரு கூறு. அசலம் என்றால் மாலை. நரசிம்ம பெருமாள் இரண்ய வதத்தை முடித்துக் கொண்டு பாற்கடலுக்கு செல்லும் வழியில் அகத்தியருக்கு கடிகை மாத்திரைப் பொழுது காட்சியளித்ததால் கடிகாசலம் எனப் பெயர் பெற்றது. நரசிம்மர் குடிகொண்டுள்ளதால் சிம்மபுரம் எனவும் சோழர்கள் நாட்டின் எல்லையாக ஒரு காலத்தில் இது இருந்ததால் சோழ சிம்மபுரம் என அழைக்கப்பட்டது.

சோளிங்கர் மலையில் 750 அடி உயரத்தில் 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் மலை குன்றின் மீது 200 அடி நீளம் 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இக்கோயில் அமைந்துள்ளது. யோக நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மாலை அணிந்து கொண்டு சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன் இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப் பட்டையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு அக்காரக்கனி என்ற பெயரும் உள்ளது. நாச்சியார் அம்ருதவல்லித் தாயார் என்ற திருநாமத்தோடு அழைக்கப் படுகிறாள். உலக உயிர்களைக் காப்பதற்கு உரிய முறையில் பெருமாளுக்கு உதவுவதால் அம்ருதவல்லி என வழங்கப்படுகிறாள். ஆரம்பத்தில் மலை ஏறும் வழியில் தாயாருக்கு தனிச் சன்னதி இருந்தது. சில காலத்திற்கு முன் அந்த சன்னதி சிதிலமடைந்த போது தாயார் மலை மீது கொண்டு தனி சன்னதியில் வைக்கப்பட்டாள். அக்கார அடிசல் எனும் விசேஷப் பாயசம் நரசிம்மருக்கு படைக்கப் படுகிறது. வெள்ளிக் கிழமைகளில் பெருமாளுக்கும் தாயாருக்கும் பால் தயிர் தேன் சர்க்கரை நெய் ஆகியவற்றைச் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டின் 11 மாதங்கள் யோக நிலையில் தரிசனம் தரும் நரசிம்மர் கார்த்திகை மாதம் முழுவதும் கண் திறந்த நிலையில் அருள் பாலிக்கிறார்.

இம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய குன்றில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 406 ஏறிக் கடக்க வேண்டும். இந்த ஆஞ்சநேயர் நரசிம்மரைப் போலவே யோக நிலையில் நான்கு திருக்கரங்களுடன் ஒரு கையில் சங்கு ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெப மாலையுடன் அமர்ந்திருக்கிறார். ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை அம்ருதவல்லித் தாயாரிடம் கூறினால் அவர் நரசிம்மரிடம் அதை பரிந்துரைப்பார். நரசிம்மர் அக்கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி ஆஞ்சநேயரிடம் கூறுவார். எனவே இங்கு தாயார் பெருமாள் பின்பு ஆஞ்சநேயர் என தரிசிக்க வேண்டும். தீர்த்தம் தாயார் பெயரால் அம்ருத தீர்த்தம் என்றும் பெருமாள் பெயரால் தக்கான் குளம் மற்றும் பாண்டவ தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. கோவிலில் வைகாசை ஆகமம் முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது. யோகநரசிம்மருக்கும் தாயாருக்கும் வெள்ளிக் கிழமை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். யோக ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

பொதுவாக பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வார்கள். ஆனால் இங்கு கருவரையில் மூலவர் மட்டுமே அருள் பாலிக்கிறார். உற்சவர் பக்தோசித பெருமாள் சுதாவல்லி அமிர்தவல்லி எனும் தனது இரு தேவியருடன் மலை அடிவாரத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் தனிக் கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் மற்றும் சுதாவல்லி தாயார் தனித்தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்கள். அமிர்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன. உற்சவர் பக்தவத்ஸல பெருமாள் பக்தர்களை அன்போடு அரவணைத்துச் செல்வதால் பக்தவத்ஸலன் எனப்படுகிறார். உசிதம் என்றால் விருப்பம் எனப்படும். பக்தர்கள் விருப்பப்படி அருளவல்லவர் ஆகையால் பக்தோசிதப் பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். அருளுவதில் தக்கவராக இருப்பதால் தக்கான் எனவும் அழைக்கப்படுகிறார். நாயக்கர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.

ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம் இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து ராமரை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார். இதனை கண்ட ராமர் அனுமனிடம் நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக என அருளினார். அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

வட மதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்த இந்திரத்துய்மன் என்ற அரசர் கடுமையான கோபம் கொண்டவர். எதற்கு எடுத்தாலும் இவருடைய வாய் பேசாது. அவர் கையில் இருக்கும் போர்வாள் தான் பேசும். இப்படி சினம் கொண்ட அரசர் ஸ்ரீ நரசிம்மரின் தீவிர பக்தர். அரசர் இந்திரத்துய்மன் நரசிம்மரை வணங்குவதால் நரசிம்மரை போல் கோபம் அதிகம் ஏற்படுகிறது. அதனால் அரசரை ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க சொல்லலாம் என்று அமைச்சர்களுக்குள் பேசி அதை பக்குவமாக அரசருக்கு எடுத்து சொல்ல ஒரு அமைச்சர் மன்னரிடம் சென்றார். அரசரிடம் சென்ற அமைச்சர் நரசிம்மரை வணங்கினால் வீரம் கிடைக்கும். அது போலவே ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கினால் செல்வம் செல்வாக்கு கிடைக்கும். வாழ்க்கைக்கு தேவையானது முக்கியமானது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை தரக் கூடியவர் ஸ்ரீயோக நரசிம்மர் என்ற அமைச்சரின் பேச்சு அரசருக்கு ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க வேண்டும் என்ற மன மாற்றத்தை தந்தது. ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க தொடங்கினார் இந்திரத்துய்மன். ஒரு நாள் அரசர் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றார். மான் ஒன்று பொன்னை போன்று ஜொலித்தது. அதை கண்ட அரசர் அந்த மானை தன் அரண்மனைக்கு அழைத்து செல்ல விரும்பி மானை பிடிக்க நினைத்தார். ஆனால் அந்த மானை பிடிக்க முடியவில்லை. பொன் மான் மன்னருக்கு விளையாட்டு காட்டியது. இதனால் சோர்வடைந்த மன்னர் ஒர் இடத்தில் களைப்பாக அமர்ந்தார். அப்போது அந்த பொன் மான் மன்னர் கண் முன்னே ஒரு ஜோதியாக மாறி ஆஞ்சநேயனாக காட்சி கொடுத்து நான் என்றும் உனக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கூறி மறைந்தார். யோக நரசிம்மரின் அருளால்தான் தமக்கு அஞ்சனேயர் ஆசி கிடைத்திருக்கிறது என்று ஆனந்தம் கொண்ட அரசர் மகிழ்ந்து அனுமனுக்கு அதே இடத்தில் கோயில் கட்டினார். பிற்காலத்தில் வந்த சோழர்கள் அங்கு கற்கோவிலாகக் கட்டனார்கள்.

இங்கு பிறந்த தொட்டாச்சார்யர் ஆண்டு தோறும் காஞ்சி சென்று வரதராஜப்பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை உடல் நிலை சரியில்லாத இவரால் காஞ்சி செல்ல முடியவில்லை. இங்கு உள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி பெருமாள் கோயிலில் நடக்கும் கருட சேவையை நினைத்து பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார். உடனே பெருமாள் கருட வாகனத்தில் இங்கு உள்ள நரசிம்ம குளத்தில் தரிசனம் தந்தார். இன்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளி தொட்டாச்சார்யருக்கு அருள் பாலிக்கிறார். இந்தக் குளத்தில் நீராடினால் பிரம்மதோஷம் கூட நீங்கும் என்று புராண நூல்கள் குறிப்பிடுகிறது. முன்பு இத்தலத்தில் பெருமாளுடன் சிவனும் கோவில் கொண்டிருந்தார். தொட்டாச்சாரியார் என்பவரே பின்பு சிவனை தனிக்கோவிலில் எழுந்தருளச் செய்ததாக வரலாறு சொல்லப் படுகிறது.

நாரயணன் எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண் கூடாக வெளிப்படுத்திய அவதாரம் அது மட்டுமில்லாமல் சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க உதவிய அவதாரமும் ஆகும். பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர் வசிஷ்டர் கஸ்யபர் அத்திரி மகரிஷி ஜமத்கனி கவுதமர் பரத்வாஜர் ஆகிய சப்த ரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். விஸ்வாமித்திரர் இம்மலையில் ஒரு நாழிகை (24 நிமிடம்) நேரம் நரசிம்மரை துதித்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். இந்த ஆலயத்தில் ஒரு நாழிகை நேரம் இருந்தாலே அனைத்து துன்பமும் விலகும். இங்கு ஒரு நாழிகை நேரம் (24 நிமிடம்) தங்கியிருந்து நரசிம்மனை தரிசித்தால் அனைத்தும் கிடைக்கும் என புராண நூல்கள் சொல்லுகின்றன. அவ்விதம் திருக்கடிகை செல்ல முடியாதவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகையை மனதில் நினைத்து நரசிம்மரைச் சிந்தித்தாலே பலன் உண்டு என்கிறார் அஷ்டப் பிரபந்தம் பாடிய பிள்ளைப் பெருமாளையங்கார். இங்கு தானம் தர்மம் செய்வது கயிலையில் தானம் தர்மம் செய்வதற்கு சமமானது. இந்தக்குளத்தில் நீராடினால் பிரம்மதோஷம் கூட நீங்கும் என்று புராண நூல்கள் குறிப்பிடுகிறது. பராங்குச சோழனால் இக்கோவில் கட்டப்பட்டது. வடமொழியில் பிரம்மகைவர்த்த புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய வரலாறுகள் உள்ளது. நம்மாழ்வார் பேயாழ்வார் திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் பெற்றத் தலம் இது. ஸ்ரீமந்நாத முனிகளும் மணவாள மாமுணியும் ராமானுஜரும் திருக்கச்சி நம்பிகளும் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்.

சுலோகம் -15

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #15

கிருஷ்ண பகவான் பாஞ்சஜன்யம் என்ற பெயர் கொண்ட சங்கை முழங்கினார். அர்ஜூனன் தேவதத்தம் என்ற பெயர் கொண்ட சங்கை முழங்கினான். ஓநாயின் வயிற்றைக் கொண்ட பயங்கர செயலை புரியும் பீமன் பௌண்டிரம் என்ற பெயருள்ள பெரிய சங்கை முழங்கினான்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: கிருஷ்ணரிடம் பாஞ்சஜன்யம் சங்கு எப்படி வந்தது?

கிருஷ்ணர் மற்றும் பலராமர் சிறுவர்களாக இருந்த போது அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் குருவாக இருந்தவர் சாந்திபனீ முனிவர் அவரிடம் குரு தட்சணையாக என்ன வேண்டும் என்று கிருஷ்ணரும் பலராமரும் கேட்டார்கள். அதற்கு அவர் தன்னுடைய மகனை சங்கு வடிவில் இருந்த பாஞ்சஜன்யன் என்ற அசுரன் விழுங்கி விட்டான். தங்களால் இயன்றால் அவனை மீட்டுத் தாருங்கள் என்று கேட்டார். குருவின் வேண்டுகோளுக்கிணங்க கடலின் அடியில் சங்கு வடிவில் இருந்த அசுரனை கடலுக்கு மேல் கொண்டு வந்து அழித்து எமபுரம் வரை சென்று குருவின் மகனை மீட்டுக் கொடுத்த கிருஷ்ணர் சங்கு வடிவில் இருந்த அசுரனுக்கு அபயம் கொடுத்து சங்கு வடிவிலேயே அவனை தன்னுடன் வைத்துக் கொண்டார். அதனால் அந்த சங்குக்கு பாஞ்சஜன்யன் என்ற பெயர் கிடைத்தது.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: அர்ஜூனனுக்கு தேவதத்தம் சங்கு எப்படி கிடைத்தது?

யுதிஷ்டிரர் நடத்திய ராஜசூய யாகத்தின் போது போது அர்ஜூனன் பல அரசர்களை வெற்றி பெற்று நிறைய செல்வங்களை கொண்டு வந்தான். அப்போது தைத்யர்களுடன் போரிட்ட போது இந்திரன் தேவதத்தம் என்ற சங்கை அர்ஜூனனுக்கு வழங்கினான். இந்த சங்கின் சத்தம் எதிரிப் படைகளை நடுநடுங்க வைக்கும்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: பீமனுக்கு ஓநாயின் வயிற்றைக் கொண்டவன் என்ற பெயர் எப்படி வந்தது?

பீமன் அதிக அளவு உணவுகளை உட்கொள்ளக் கூடியவனாக இருந்தான். அத்தனை உணவுகளையும் ஜீரணமாக்கும் சக்தி அவனது வயிற்றில் இருந்தது. இதனால் அவனுக்கு ஓநாயின் வயிற்றைக் கொண்டவன் என்ற பெயர் வந்தது. பீமன் வைத்திருந்த பௌண்டிரம் சங்கு அளவில் பெரிதாக இருந்தது. பௌண்டிரம் என்ற சொல்லுக்கு எதிரிகளின் மனதை பிளப்பது என்று பொருள். பீமன் இந்த சங்கை முழங்கினால் தெளிவாக இருக்கும் எதிரிகளின் மனம் பிளந்து சிறிது நேரத்திற்கு குழப்பத்திற்குள் இருக்கும்.

குறிப்பு: சுலோகம் -14 இல் கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனன் வைத்திருந்த சங்குகள் தெய்வீகமானவை என்று சொல்லப்பட்டது. அதற்கான காரணம் கிருஷ்ணர் திருமாலின் அவதாரம் இறைவனிடன் இருந்த சங்கும் தெய்வீக அம்சமுடையதுதான். அதன் பிரதிபலிப்பாகவே பாஞ்சஜன்யம் என்ற பெயர் பஞ்ச இந்திரியங்களையும் அடக்குவது என்ற பொருளுடன் இந்த சங்கை முழங்கும் போது சங்கு சத்தத்துடன் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை துல்லியமாக சரியாக ஒலிக்கின்ற படியால் அதுவும் தெய்வீகம் பெற்றது. அர்ஜூனனுக்கு இந்திரன் தேவலோகத்து சங்கை அளித்திருந்தான். அதனால் அந்த சங்கும் தெய்வீகமானதுதான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 42

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் அருளைக் கொண்டு இயம்புவது யாதென்றால் ஒரு மனிதனின் மனோநிலை எந்த அளவிற்கு பக்குவம் அடைகிறதோ எந்த அளவிற்கு சாத்வீகம் அடைகிறதோ எந்த அளவிற்கு உயர் நுண்மா நுழை ஞானம் பெறுகிறதோ அந்த அளவிற்குதான் அவனை பொறுத்தவரை இந்த உலகமும் வாழ்க்கையும் உயர்வாக தெரியும். மனம் தான் வாழ்க்கை மனம் தான் உலகம் என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு எல்லாம் வெற்றி எண்ணியது எல்லாம் நடக்கிறது என்றால் இந்த உலகம் அவனுக்கு இனிப்பாக தெரியும். இன்னொரு மனிதனுக்கு தொட்டதெல்லாம் தோல்வி எல்லாம் எதிராக நடக்கிறது. எண்ணங்கள் ஒருவிதமாகவும் நடைமுறை செயல்கள் வேறுவிதமாகவும் இருக்க அவனை பொறுத்தவரை இந்த உலகம் கயப்பாக (கசப்பாக) தோன்றும். எனவே இப்படி இந்த உலகை உலகை சுற்றி உள்ள மனிதர்களை உலகில் நடக்கும் சம்பவங்களை ஒரு மனிதன் தான் எண்ணியபடி இருந்தால் நன்மை என்று எண்ணுவது பெரிதும் தவறல்ல என்றாலும் அப்படிதான் நடக்க வேண்டும் என்று எண்ணி அதற்கு மாறாக நடக்கும் போது எண்ணி வருத்தப்படுகிறான். அதுதான் அவனுக்கு மிகப்பெரிய வேதனையும் மன உலைச்சலையும் தருகிறது. எனவே இப்படித்தான் என்று எதிர்பார்ப்பதை விட எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தை இறைவா எனக்கு கொடு என்று மனோரீதியாக ஒருவன் வைராக்கியத்தையும் திடத்தையும் அடைந்து விட்டால் அவனை பொறுத்தவரை துன்பமான வாழ்க்கை என்று ஒன்றுமே இல்லை. எனவே துன்பங்கள் மற்றும் தொல்லை தரும் மனிதர்களை என்னை விட்டு அகற்று என்று வேண்டுவதை விட எல்லா நிலைகளிலும் எல்லா சூழல்களிலும் நான் திடகார்த்தமாக நான் தெய்வீக எண்ணத்தோடு வாழும்படியாக என் சிந்தனையை வைத்திரு இறைவா என்று வேண்டிக் கொண்டால் அது தான் தீர்க்கமான ஒரு முடிவாக நல்ல ஒரு நிச்சயமான நிம்மதியான வாழ்விற்கு ஒரு அடித்தளமாக அமையும்.

யாங்கள் அடிக்கடி கூறுவது உண்ணுகின்ற உணவு அல்லது பருகுகின்ற மோரிலே உப்பின் தன்மை அதிகமாகிவிட்டால் அந்த அதிகமாக உள்ள உப்பை மட்டும் பிரித்தெடுப்பது என்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக சிறிது நீரை சேர்த்து அந்த உப்பை சரி செய்வது போல ஒரு மனிதன் கர்ப்ப கோடி காலம் பிறவி எடுத்து சேர்த்த பாவத்தை மட்டும் அவனை விட்டு பிரிப்பது என்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக புதிதாக பாவம் செய்யாமலும் அதாவது புதிதாக உப்பை சேர்க்காமலும் சிறிது நீரையோ மோரையோ சேர்ப்பது போல புண்ணியத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டே வந்தால் அந்த உப்பின் தன்மை சமத்துவம் பெறுவது போல அந்த பாவத்தினால் வரக்கூடிய துன்பம் அவன் தாங்கக்கூடிய வண்ணம் இருக்கும். நன்றாக கவனிக்க வேண்டும் பாவம் இங்கே குறைவதில்லை. பாவம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் சேர்த்த மோரின் அளவு அதிகமானதால் உப்பின் தன்மை தெரியாதது போல சேர்த்து வைத்த புண்ணியத்தின் பயனாக அல்லது சேர்க்கின்ற புண்ணியத்தின் பயனாக பாவத்தின் தாக்கம் அவன் தாங்கும் வண்ணம் அமைந்து விடுகிறது அவ்வளவே. இந்த கருத்தை மனதிலே வைத்துக் கொண்டு எம்மை நாடுகின்ற ஒவ்வொரு மனிதனும் அப்படியென்றால் நாடாத மனிதன் செயல்பட வேண்டாமா என்று வினவ வேண்டாம். யாராக இருந்தாலும் அப்படி ஒரு மனப்பான்மையை வளர்த்து கொண்டால் வாழ்க்கை என்றும் உயர்வாக இனிமையாக திருப்தியாக சந்தோஷமாக சாந்தியாக இருக்கும்.

பரா முதல் குழந்தை வரை

பரா முதல் குழந்தை வரை

ஆதியிலிருந்தே இருக்கின்ற பரா எனும் அசையா சக்தியிலிருந்து
பரை எனும் அசையும் சக்தி தோன்றி
அந்த பராபரையிலிருந்து சிவம் தோன்றி
சிவத்தில் சக்தி தோன்றி
சக்தியில் நாதம் (ஒலி) தோன்றி
நாதத்தில் விந்து (ஒளி) தோன்றி
விந்துவில் சதாசிவம் தோன்றி
சதாசிவத்தில் மகேஸ்வரன் தோன்றி
மகேஸ்வரனில் ருத்திரன் தோன்றி
ருத்திரனில் விஷ்ணு தோன்றி
விஷ்ணுவில் பிரம்மா தோன்றி
பிரம்மாவில் ஆகாயம் தோன்றி
ஆகாயத்தில் வாயு தோன்றி
வாயுவில் அக்னி தோன்றி
அக்னியில் நீர் தோன்றி
நீரில் நிலம் தோன்றி
நிலத்தில் அன்னம் தோன்றி
அன்னத்தில் உயிர்சக்தி தோன்றி
உயிர்சக்தியில் உதிரம் தோன்றி
உதிரத்தில் மாமிசம் தோன்றி
மாமிசத்தில் மேதை (அறிவு) தோன்றி
மேதையில் அஸ்தி (எலும்பு) தோன்றி
அஸ்தியில் மச்சை (எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜை) தோன்றி
மச்சையில் சுக்கிலம் தோன்றி
சுக்கிலத்தில் சுரோணிதம் தோன்றியது.
சுக்கிலமானது சுரோணிதத்துடன் கலந்து ஜலமயமாகிப் பின்
ஏழாம் தினத்தில் குமிழியாகி
முப்பதாம் நாள் உதிரம் திரண்டு பிண்டமாகி
அறுபதாம் நாள் அப்பிண்டத்திற்கு சிரசு உண்டாகி
தொண்ணூறாம் நாள் பிண்டம் திரண்டு மூட்டு கை கால்கள் உண்டாகி
நூற்று இருபதாம் நாள் தண்டமாய் நரம்பு நாடி உண்டாகி
நூற்றி ஐம்பதாம் நாள் ஒன்பது துவாரங்களும் உண்டாகி
இருநூற்றுப் பத்தாம் நாள் பிராணன் உண்டாகிக் கருவை சூழ்ந்து புரளும்
இருநூற்று நாற்பதாம் நாள் மற்ற அவயங்கள் உண்டாகி
தாயுண்ட அன்ன சாரத்தை தொப்புள் வழியாக உண்டு பிள்ளையினுடைய உடல் வளர்ந்து தாயுடன் தோன்றி உயிருடன் ஆடும்.
இருநூற்றி எழுபதாம் நாள் தலை முதல் கால் வரை ரோமத் துவாரம் உண்டாகி அறிவுக் கண் திறந்து
முன்னூறாவது நாள் மலை மேலிருந்து தலைகீழாய் விழுவது போல் நிறைந்த பிண்டமாய் அபானனின் பலத்தினாலே பூமியில் பிறக்கும் குழந்தை.

சுலோகம் -14

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #14

இதற்குப் பிறகு வெள்ளை குதிரைகள் பூட்டப்பட்ட உயர்ந்த தேரில் அமர்ந்திருந்த கிருஷ்ணரும் அர்ஜூனனும் தெய்வீகமான சங்குகளை முழங்கினார்கள்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: வெள்ளை குதிரைகள் பூட்டப்பட்ட அர்ஜூனனின் தேர் ஏன் உயர்ந்தது என்று சொல்லப்படுகிறது?

சித்ரரதன் என்ற கந்தர்வன் தன்னிடம் இருந்த 100 திவ்வியமான வெள்ளை குதிரைகளில் இருந்து நான்கு குதிரைகளை அர்ஜூனனுக்கு கொடுத்திருந்தான். இந்த குதிரைகள் பூமியிலும் வானகத்திலும் சொர்க்க லோகத்திலும் செல்லக்கூடியவை. அர்ஜூனன் காண்டவ வனத்தை எரித்த போது அதில் திருப்தி அடைந்த அக்னி தேவன் இந்த ரதத்தை அர்ஜூனனுக்கு கொடுத்திருந்தான். இந்த தேரின் கொடியில் யுத்தம் முடியும் வரை அனுமனை அமர்ந்திருக்குமாறு கிருஷ்ணர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேரின் கொடியில் அனுமனும் அமர்ந்திருந்தார். கந்தர்வன் கொடுத்த தேவலோகத்து குதிரைகளுடன் அக்னி தேவன் கொடுத்த தேவலோகத்து தேரின் கொடியில் அனுமன் அமர்ந்திருக்கிறார். அந்தத் தேரில் கிருஷ்ணர் சாரதியாக அமர்ந்திருப்பதால் உயர்ந்த தேர் என்று சொல்லப்படுகிறது.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: கிருஷ்ணரும் அர்ஜூனனும் சங்குகளை ஏன் முழங்கினார்கள்?

பாண்டவர்களும் யுத்தத்திற்கு தயாராகி விட்டதை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் கிருஷ்ணரும் அர்ஜூனனும் சங்கை முழங்கினார்கள். கிருஷ்ணரும் அர்ஜூனனும் ஊதிய சங்கு ஏன் தெய்வீகமானது என்று சொல்லப்படுவதற்கான காரணத்தை அடுத்த சுலோகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு: முன்பு ஒரு நாளில் அக்னி தேவன் அர்ஜூனனுக்கு கொடுத்த தேரைப் பற்றி சஞ்சயனிடம் கேள்வி கேட்டான் துரியோதனன். அதற்கு பதில் அளித்த சஞ்சயன் தங்கத்தால் செய்யப்பட்ட இந்தத் தேர் மிகவும் விசாலமானது. தேரில் இருக்கும் கொடி மின்னல் போல் மின்னும். ஆகாயத்தில் வர்ண ஜாலங்கள் மிளிர்வது போல் அந்தக் கொடி மிளிரும். ஒரு யோசனை தூரத்திற்கு இருக்கும். இத்தனை தூரத்தில் இருந்தாலும் எவ்வளவு உயரமான மரங்களாக இருந்தாலும் இந்தக் கொடியை தொட முடியாத உயரத்தில் இருக்கும். இத்தனை பெரிய கொடியாக இருந்தாலும் இந்தக் கொடி பளு இல்லாமல் தங்கு தடை இல்லாமல் பறக்கும் என்று கூறினான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 41

கேள்வி: பசு பதி பாசம் பற்றி?

பசுவாகிய இந்த ஆன்மாக்கள் பதியாகிய இறைவனை விட்டு விட்டு பாசம் எனும் உலகியல் சுகத்தினுள்ளே மூழ்கி விடுகிறது. இந்த இரண்டிற்கும் பொதுவாக இருப்பவர் பதி இறைவன். பொதுவான இறையை நாடாமல் அந்த இறையின் படைப்பான அந்த படைப்புகளிலே இந்த பசு நாட்டம் கொள்வதால்தான் இத்தனை துன்பங்களும் அனாச்சாரங்களும் ஆன்மாவிற்கு ஏற்படுகிறது. இந்த ஆன்மாவின் கண்ணை மறைப்பது எது? மாயை. மாயை வைத்து கொண்டிருப்பது விதி. விதியை யார் இயக்குவது இறைவன். இறை எந்த அடிப்படையில் இயக்குகிறது? அந்த ஆன்மாவின் பாவ புண்ணியத்தின் அடிப்படையில் அப்பொழுது அந்த ஆன்மா என்ன செய்ய வேண்டும்? பாவத்தை குறைத்து புண்ணியத்தை அதிகரிக்க வேண்டும். இப்படி வாழ்ந்தால் அது பதியை தாண்டி பாசத்திற்கு போகாமல் பாசம் என்றாலே வழுக்கும் என்று புரிந்து கொண்டு பதியுடன் மட்டுமே அது இருக்கும்.

கேள்வி: இறைவனுக்கு என்று பிரியமான விஷயம் ஏதேனும் உண்டா?

வில்வத்தால் எமக்கு ஆராதனை செய்வது எமக்கு பிரியம் என்று இறை எங்காவது எழுதி வைத்திருக்கிறதா? அப்படியல்ல. இறையோடு தொடர்புடைய அனைத்தும் மனிதனுக்கு நன்மையைத் தரக்கூடியவைதான். வில்வத்தை ஏற்றுக் கொள் என்றால் மனிதன் உண்ண மாட்டான். ஆனால் அதையே பிரசாதம் என்றால் சாப்பிடுவான். அது மட்டுமல்ல அன்போடு எதைக் கொடுத்தாலும் அதை இறை ஏற்றுக் கொள்ளும். எனவே பக்தி அன்போடு செய்யப்படும் செயலை அல்ல அந்த செயலுக்குள் ஔிந்திருக்கும் அர்த்தத்தைத்தான் இறை பார்க்கிறது. இன்னொன்று வேறு மார்க்கத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நெய் தீபத்திற்கு பதிலாக வேறு வகை தீபத்தை ஏற்றுகிறார்கள். இன்னும் சிலர் மலர்களைப் போடுவதேயில்லை. அதையும் இறை ஏற்கத்தானே செய்கிறது. அண்ட சராசரங்களைப் படைத்தது இறைவன். அந்த இறைக்கு மனிதன் தரக்கூடியது ஒன்றுமல்ல தன் உள்ளத்தைத் தவிர.