108 திவ்யதேசத்தில் 78 வது திருக்குறுங்குடி

திருமாலுக்கு ஆழ்வார்கள் மங்களாசனம் பாடிய திவ்ய தேசம் கோவில்களில் 78 வது இக்கோவிலாகும். வராக அவதாரத்தில் திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி தனது மிகப் பெரிய வராக வடிவத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி என்று பெயர் பெற்றது. மூலவர் நின்றநம்பி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவன் நின்றநம்பிக்கு குறுங்குடி நம்பி மலைமேல் நம்பி என்ற வேறு பெயர்களும் உண்டு. குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு குரங்கச் சேத்திரம் என்ற பெயரும் உண்டு. 1.நின்ற 2.அமர்ந்த 3.நடந்த 4.கிடந்த 5.இருந்த என்று ஐந்து நிலைகளிலும் இக்கோவிலில் பெருமாள் காட்சி தருகிறார். தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார். தீர்த்தம் திருப்பாற்கடல் பஞ்சதுறை சிந்துநதி. விமானம் பஞ்சகேதக விமானம். இந்த கோயிலில் தாயாருக்கு தனி சன்னதி இருந்தாலும் அர்ச்சனை கிடையாது. கோவிலில் இறைவனுக்கு நேராக இருக்கும் கொடிமரம் சிறிது விலகி உள்ளது. நின்ற நம்பி கிடந்த நம்பி என்ற இரு சன்னதிக்கு இடையில் சிவன் மற்றும் பைரவர் சன்னதி உள்ளது. கோவில் மூலவரான அழகிய நம்பிக்கு பூஜை நடக்கும் போது இங்குள்ள சிவனுக்கும் பூஜை நடந்து விட்டதா? என்பதை அறிய சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பர்க்கு குறையேதும் உண்டா? என்று பட்டர் கேட்பார். அதற்கு குறை ஒன்றும் இல்லை என பட்டர்கள் பதில் அளிப்பார்கள். இது இன்றும் நடைமுறையில் உள்ளது.

பெரிய சிவாலயங்களில் விஷ்ணுவுக்கு தனி சன்னதி உள்ளதைப் போல இத்திருக்கோவிலில் சிவனுக்கும் பைரவருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு மகேந்திரகிரி நாதர் என்றும் பக்கம் நின்ற பிரான் என்றும் பெயர். திருக்குறுங்குடி நம்பி கோவிலைக் காக்கும் தெய்வமாக பைரவர் இங்கு இருக்கிறார். பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை சிவபெருமான் இந்தத் திருக்குறுங்குடி தலத்தில் போக்கிக் கொண்டார் என்பதால் அவருடைய அம்சமான பைரவர் அந்த நற்பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்வாறு இங்கு காவல் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார். இந்த கால பைரவருக்கு இடது பக்கத்தில் ஒரு விளக்குத் தூண் உள்ளது. இதன் மேல் பகுதியில் பைரவரின் முகத்தின் அருகில் ஒரு விளக்கும் கீழ்ப் பகுதியில் இன்னொரு விளக்கும் உள்ளது. இவை தவிர இரண்டு சர விளக்குகளும் உண்டு. இந்த நான்கு விளக்குகளிலும் உள்ள தீபம் ஒளி சிந்தி பைரவரின் முழு ரூபத்தையும் தெளிவாகக் காட்டுகின்றன. மேலே உள்ள விளக்கின் தீபத்தின் ஜ்வாலை மட்டும் காற்று பட்டது போல் அசைகிறது. பிற மூன்று விளக்கு ஜ்வாலைகளும் சீராக எந்தச் சலனமுமில்லாமல் எரிந்து கொண்டிருக்கின்றன. மேல் விளக்கு தீபத்தின் ஜ்வாலை மட்டும் எப்படி அசைகிறது? அது பைரவரின் மூச்சுக் காற்று அந்த தீபத்தில் மட்டும் படுவதினால் ஏற்படும் அசைவு ஆகும். பைரவர் மூச்சை இழுக்கும் போது ஜ்வாலை அவரை நோக்கித் திரும்பியும் விடும் போது எதிர் திசையில் விலகியும் அசைகிறது. அது போல் அவரது கண்கள் தீப ஆராதனை ஒளியில் அசைவதை இப்போதும் நேரில் கண்டு தரிசிக்கலாம்.

இந்த பைரவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் பைரவரின் மூச்சுக்காற்றில் அசையும் தீபத்தின் வீடியோவையும் பார்க்க கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்தி இவருக்கு தொல்லை கொடுத்தார்கள். ராமானுஜர் இத்தல இறைவனை வேண்டியதால் கருடராழ்வார் நம்பூதிரிகளிடமிருந்து அவரை மீட்டு இத்தலத்திற்கு தூக்கி வந்தார். ராமானுஜர் இத்தலத்திற்கு வந்தபோது இத்தல இறைவன் நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சமஸ்காரம் செய்து உபதேசம் பெற்றார் என்பது வரலாறு. உபதேசம் பெற்றதும் அவருக்கு ராமானுஜர் வைத்த பெயர் வைஷ்ண நம்பி என்பதாகும். திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்க பெருமாளிடம் மோட்சம் கேட்டபோது திருக்குறுங்குடி போ அங்கு மோட்சம் கிடைக்கும் என்றார். திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது இத்தலத்தில் தான். ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயல்கிறான். அப்போது விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டார். அப்போது பூமித்தாய் இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வராகமூர்த்தியிடம் கேட்டார். அதற்கு வராக மூர்த்தி இசையால் இறைவனை அடையலாம் என்றார். அதனை நிருபிக்கும் விதமாக இறைவன் நம்பாடுவான் என்ற பக்தரின் வரலாறு உள்ளது.

நம்பாடுவான் என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் இசைக்கருவி வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தல இறைவனை தரிசிக்க வருகிறார். வழியில் பசியோடு இருந்த பிரம்ம ராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாக கூறினான். நம்பாடுவான் தற்போது இறைவனுக்கு விரதம் இருப்பதாகவும் நம்பியை தரிசித்து விரதத்தை முடித்து விட்டு வந்து பிரம்ம ராட்சசனுக்கு இறையாவதாக கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட பிரம்ப ராட்சசன் நம்பாடுவன் அங்கிருந்து செல்ல அனுமதித்தான். அவரிடமிருந்து விடை பெற்று வந்த நம்பாடுவன் கோயிலின் வாயிலில் நின்று நம்பியை தரிசிக்க முயற்சிக்கும் போது கோவிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது. ஆயினும் பக்தி சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்டினார். நம்பியும் நம்பாடுவானுக்கு தரிசனம் கொடுக்க எண்ணி கொடிமரத்தை நகரச் சொல்லினார். அதன்படியே கொடிமரம் நகன்று நம்பியை நம்பாடுவான் தரிசிக்க வழி கொடுத்தது. இதனால் நம்பியைத் தரிசித்த நம்பாடுவான் மகிழ்ச்சியாக பிரம்ம ராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அப்போது வயதானவர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன் நம்பாடுவானை தடுத்து நிறுத்தி அந்தக் காட்டில் ஒரு பிரம்ம ராட்சசன் வாழ்வதாகவும் அந்த வழியாக செல்பவர்களை தின்று விடுவதாகவும் கூறினார். நம்பாடுவான் அவரிடம் முன்பு பிரம்ம ராட்சசனுக்குத் தான் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அதன்படி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தான் அந்தக் காட்டுக்குள் செல்வேன் என்று சொல்லிவிட்டு காட்டிற்குள் சென்றார். ராட்சசனைத் தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் ராட்சசனைக் கண்டு தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும் இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறினார். ஆனால் பிரம்ம ராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டது என நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் வழிபட்ட பின் கோவிலில் பெற்ற பிரசாதத்தின் பாதி பழத்தை சாப்பிடுமாறு பிரம்ம ராட்சசனுக்குக் கொடுத்தார் அதை சாப்பிட்ட பிரம்ம ராட்சசன் இறைவனின் பிரசாதத்தை சாப்பிட்ட பலனால் சாபத்தால் தான் பெற்ற பிரம்ம ராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்று தன் முற்பிறவு வடிவத்தைப் பெற்றான். இந்த வரலாற்று சம்பவத்தை நினைவில் வைத்திருக்க இப்போதும் இங்கு கொடிமரம் விலகி இருப்பதை இப்போதும் காணலாம்.

இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால் தெய்வநாயகன் மற்றும் வரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும் என்ற அசரீரி கேட்டான். அசரீரியின்படி அந்த இடத்தை தோண்ட அந்த தெய்வ ரூபங்கள் கிடைத்தது. அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக ஒரு வரலாற்று செய்தி உள்ளது. இந்த கோவிலில் தினசரி 1.விஸ்வரூபம் 2.காலசந்தி 3.உச்சி காலபூஜை 4.சாயரட்சை 5.அத்தாழம் 6.அர்த்தசாமம் ஆகிய ஆறு கால பூஜைகள் நடந்து வருகிறது. ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவம் கார்த்திகை மாதம் ஏகாதசி திருவிழாக்கள் நடந்து புரட்டாசி நவராத்திரி விழாவும் இங்கு பிரசித்திப் பெற்றது ஆகும். விழாவின் போது தினசரி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்படும். கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு கருட சேவை நடத்தப்படுகிறது. பகலில் நம்பி சுவாமிகளுக்கு திருமஞ்சனமும் இரவில் கருட சேவை உற்சவமும் இடம்பெறும். திருவாலித் திருநகரில் பிறந்த திருமங்கை என்ற மன்னன் தலங்கள் பல சென்று திருமாலைப் பாடி வழிபட்டவன் இங்கு வந்து முக்தியடைந்துள்ளார். ராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த அழகிய நம்பி தான் நம்மாழ்வாராக அவதரித்தார். பெருமாளின் தரிசனம் கண்டவர்கள் சிவபெருமான் கஜேந்திரன். நம்மாழ்வார் 13 பாசுரம் பெரியாழ்வார் 1 பாசுரம் திருமழிசையாழ்வார் 1 பாசுரம் திருமங்கையாழ்வார் 25 பாசுரங்களும் பாடியுள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.