கேள்வி: மார்கழி (2012-2013) மாதத்தில் மகா பிரளயம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா?
இறைவன் அருளால் பிரளயம் என்றால் என்ன? என்று நீ எண்ணுகிறாய்? (சுனாமி போன்ற அழிவு)
ஒன்று தெரியுமா? ஒவ்வொரு இல்லத்திலும் இது அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே இது போன்ற பேரழிவு குறித்து கூறியிருக்கிறோம். இப்போதைக்கு உலகம் என்பது சிறைச்சாலை ஆன்மாக்கள் செய்கின்ற பாவ புண்ணியத்திற்கு எத்தனையோ சிறைச்சாலைகள் உண்டு. அதில் ஒன்றுதான் இந்த புவி உலகம். ஒட்டு மொத்தமாக இந்த சிறைச்சாலையை அழிக்கின்ற எண்ணம் இறைவனுக்கு இல்லை. பகுதி பகுதியாக அவ்வப் பொழுது சிறிய அழிவுகள் ஏற்படும். மற்றபடி இந்த சிறைச்சாலை அழிக்கப்பட வேண்டும் என்றால் இங்குள்ள அனைவருமே புனிதர்களாக மாற வேண்டும். புண்ணிய ஆத்மாக்கள் அத்தனை பேரும் புனிதர்களாக மாறிவிட்டால் வேண்டுமானால் இந்த சிறைச்சாலை தேவையில்லை என்று இறைவன் அழித்துவிடலாம். அப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்று மனிதன் கங்கணம் கட்டிக் கொண்டு புனிதம் ஏன் செய்ய வேண்டும்? புண்ணியத்தை செய்து எதற்காக இந்த உலகத்தை இழக்க வேண்டும்? என்று அவன் தவறு மேல் தவறு செய்து கொண்டிருப்பதால் நீ கூறுவது போல் இந்த மார்கழி அல்ல எந்த மார்கழி வந்தாலும் எந்த ஆண்டு வந்தாலும் ஒட்டு மொத்தமாக இந்த உலகம் அழியப் போவதில்லை. ஆங்காங்கே சிறு சிறு அழிவுகள் ஏற்படுவது என்பது இயல்பு.
கேள்வி: எல்லோரின் சார்பாக கேட்கிறேன். தங்களை ஸ்தூல தேகமாக (உடல்) தரிசிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
முதலில் இறைவனை தரிசிக்க யாது செய்ய வேண்டும்? என்று எண்ணி யாங்கள் கூறிய வழிமுறைகளையெல்லாம் பின்பற்றிக் கொண்டே வந்தால் இறை தரிசனமே மிகப்பெரிய தரிசனம் என்பதை புரிந்து கொள்ளலாம். அதை நோக்கி சென்றாலே போதுமப்பா. அதற்கிடையே மகான்கள் தரிசனம் என்பது இயல்பாகவே நடக்கும்.
கிருஷ்ணா அதர்மம் அதிகமாக பெருகுவதால் குலப்பெண்களின் நடத்தை கெடுகிறது வர்ணங்களில் கலப்பு உண்டாகிறது.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: குலப் பெண்கள் என்று இந்த சுலோகத்தில் சொல்லப்படுவது யார்?
ஒருவர் ஒரு தொழிலை செய்து கொண்டிருக்கிறார். அவரை பின்பற்றி அவரின் வாரிசுகள் அந்த தொழிலை சிறுவயதில் இருந்தே அவருடன் இருந்து கற்றுக் கொண்டு அதனை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவர்களை தொடர்ந்து அவர்களது வாரிசுகள் என்று தலை முறை தலைமுறையாக ஒரே தொழிலை செய்து வருவார்கள். ஒரு குறிப்பிட்ட தொழிலை தொன்று தொட்டு பாரம்பரியமாக செய்பவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு செயல்படுவார்கள். அவர்கள் தங்களின் தொழிலுக்கு எற்றபடி ஒரு தர்மத்தை அமைத்துக் கொண்டு அதன்படி ஒரு குறிப்பிட்ட இறைவழிபாட்டு முறைகளையும் ஒழுக்க முறைகளையும் கடைபிடித்து வருவார்கள். இவர்களின் மூதாதையர்களின் பெயரை இந்த குழுவுக்கு பெயராக சூட்டி இந்த குலத்தின் வழியாக வந்த தர்மங்களையும் தொழில்களையும் கடைபிடித்துக் கொண்டு குழுவாக செயல்படுவார்கள். ஒவ்வொரு குழுவைச் சேர்ந்தவர்களும் ஒரு குலத்தை சேர்ந்தவர்களாக கருதப்பட்டார்கள். தங்களின் குழுக்களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமண வயது வந்ததும் தங்கள் குலத்தைப் போன்றே தொழில் செய்து வரும் வேறு குழுக்களில் உள்ளவர்களுடன் பெண் கொடுத்து பெண் எடுத்து திருமணம் செய்து வைப்பார்கள். இவர்களது தலைமுறை வளர்வதற்கு காரணமான திருமணமான பெண்கள் குலப் பெண்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: வர்ணங்கள் என்றால் என்ன?
பிறப்பால் வர்ணங்கள் இல்லை அவர்களின் செயலினால் மட்டுமே என்பதை மனு தர்மம் சொல்கிறது. பிறப்பால் அனைவரும் சமமே தர்ம செயல்களை செய்வதாலும் நற்குணங்களை வளர்த்துக் கொள்வதாலும் மட்டுமே ஒருவன் மேன்மையான நிலைக்கு உயர்கிறான் என்று பகவத்கீதை சொல்கிறது. நம்முடைய வேதத்தில் இருக்கும் சில சமஸ்கிருத மந்திரங்களுக்கு பொருள் தவறாக அனைவருக்கும் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. அதன் சரியான விளக்கம்
வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை கடைபிடிப்பவனும் இதனை அடுத்தவருக்கு எடுத்துரைப்பவனுக்கும் மனம் வலிமையுடன் இருக்க வேண்டும். மனம் வலிமையடைந்தால் அவனது முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருக்கும். மனமானது நெற்றியின் நடுவே உள்ளது. மனதை வலிமையானதாக வைத்திருப்பவர்கள் அனைவரும் பிராமணன் ஆவார்கள்.
ராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்ரியனுடைய தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும். அப்போது தான் அவனால் போர்க் கலையில் சிறந்து விளங்கி எதிரிகளிடமிருந்து தனது குடி மக்களை திறம்பட காத்திட முடியும். தோள் வலிமையுடன் இருப்பவர்கள் அனைவரும் சத்ரியன் ஆவார்கள்.
வைசியனானவன் வாணிபம் செய்பவன். பல ஊர்களுக்கு நடந்து செல்ல வேண்டும். பல நாட்கள் நடப்பதற்கு வலிமையான தொடை இருக்க வேண்டும். வலிமையான தொடைகளுடன் இருப்பவர்கள் அனைவரும் வைசியன் ஆவார்கள்.
சூத்திரர்கள் உடல் உழைப்பால் வேலை செய்பவர்கள் மற்றும் வயல்களில் வேலை செய்து இந்த லோக உயிர்களுக்கு பசியாற்ற வேண்டிய உணவு உற்பத்திக்கு பாடுபடுபவர்கள். விவசாயம் செய்ய அவனுக்கு சோர்வில்லாத வலிமையான பாதங்கள் வேண்டும். வலிமையான பாதங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் சூத்திரன் ஆவார்கள்.
தற்போது சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் பொய்யான விளக்கம்
பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிராமணன் பிறந்தான் பிரம்மாவின் தோளில் இருந்து சத்திரியன் பிறந்தான் பிரம்மாவின் தொடையில் இருந்து வைசியன் பிறந்தான் பிரம்மாவின் பாதத்தில் இருந்து சூத்திரன் பிறந்தான்
இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: குலப்பெண்களின் நடத்தை என்று சொல்லப்படுவது என்ன?
ஒரு குறிப்பட்ட தொழிலை செய்யும் குலத்தில் வளரும் பெண்கள் அந்த தொழிலை செய்யும் குலத்திற்கு என்று இருக்கும் தொழில் மற்றும் வழிபாட்டு முறைகள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் சொல்லிக் கொடுத்த ஒழுக்க முறைகள் மட்டுமே தெரிந்து வைத்திருப்பார்கள். வேறு தொழிலை செய்யும் குலத்தில் உள்ளவர்களின் வழிபாட்டு முறைகளும் ஒழுக்க முறைகளும் அவர்களுக்குத் தெரியாது.
உதாரணத்திற்கு ஒருவர் உடல் உழைப்பால் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு என்று இருக்கும் குலத்தில் வழி வழியாக வந்த தொழில் முறைகளையும் தர்மங்களையும் வழிபாட்டு முறைகளையும் மட்டுமே தங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்கள். விவசாயம் செய்பவர்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் நிலத்தில் விவசாயத்திற்கு உதவி செய்வார்கள். விவசாயத்தை பற்றி நன்றாக அறிந்து வைத்திருப்பார்கள். விவசாயத்திற்கு ஏற்ற சூரிய வழிபாட்டு முறைகளும் தங்களின் தொழிலுக்கு உதவி செய்யும் காளைமாடு போன்ற உயிரினங்களை எப்படி பாதுகாப்பது என்பதும் அவற்றை தெய்வங்களாக வழிபடுவது பற்றியும் மட்டுமே தெரியும்.
வேறு ஒருவர் வாணிபம் செய்து வருகிறார். அவர் ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்வார். அவர் வியாபாரம் செய்ய பல ஊர்களுக்கு செல்வதால் பல நாட்கள் வீட்டில் இருக்க மாட்டார். வாணிபத்திற்கு ஏற்ற பொருளை வீட்டில் வைத்திருப்பார். அதனை பாதுகாப்பது பற்றி அவர்களது வீட்டில் உள்ள பெண்கள் அறிந்து வைத்திருப்பார்கள். அவரின் தொழிலுக்கு பொதி சுமக்க உதவி செய்யும் குதிரைகள் கழுதைகள் போன்ற உயிரினங்களை எப்படி பாதுகாப்பது என்பது மட்டுமே தெரியும்.
இப்போது இந்த இரண்டு வர்ணங்களில் உள்ள பெண்கள் வர்ணம் மாறி வேறு ஒரு தொழில் செய்யும் குலத்தில் உள்ளவரை திருமணம் செய்து கொண்டால் புதிதாக அவர்களது வீட்டிற்கு செல்லும் பெண் அந்த வீட்டில் உள்ள தொழில் முறைகள் ஒழுக்க முறைகள் பற்றி ஒன்றும் தெரியாது. வீட்டிற்கு வந்த பெண் தொழிலுக்கு ஏற்ற வேலைகளை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆணுக்கு இருக்கும். இதனை செய்ய அந்தப் பெண் முயற்சி செய்தாலும் கற்றுக் கொள்ள நாட்கள் ஆகும். வேலை செய்யும் போது பல தவறுகள் ஏற்படும். இதனால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சண்டையிட நேரிடும். கணவனுடன் சண்டையிட நேரிடும். இதற்கு ஆணும் தானை காரணம் என்று பலர் கேட்கலாம். ஆனால் இங்கு ஆண் இருக்கும் வீட்டிற்கே பெண் வருகிறாள். இந்த ஆண் தனக்கு உண்டான வேலையை சரியாக இங்கு செய்து விடுகிறான். ஆனால் வந்திருக்கும் பெண்ணால் சரியாகச் செய்ய முடியவில்லை எனவே சண்டை ஏற்படுகிறது. புகுந்த வீட்டில் சண்டை ஏற்பட காரணமான பெண்ணிற்கு அங்கே நடத்தை சரியில்லை என்ற பேச்சு அங்கே உருவாகிறது. அனைத்திற்கும் மூல காரணம் வர்ணம் மாறி திருமணம் செய்ததே ஆகும். இவற்றையே இந்த சுலோகம் சொல்கிறது.
குறிப்பு: இந்த சுலோகத்தில் சொல்லப்பட்ட பல கருத்துக்களுக்கான விளக்கங்கள் பின் வரும் தலைப்புகளில் உள்ள சுலோகங்களில் மேலும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இறைவன் அருளால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் குடும்பத்தில் கணவன் மனைவி குழந்தைகள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் மனிதரீதியாக பார்த்தால் நிறைய செல்வம் வேண்டும் தனம் வேண்டும். மனைவி எண்ணுவதையெல்லாம் கணவன் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். கணவன் எண்ணுவதையெல்லாம் மனைவி உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். கணவனும் மனைவியும் விரும்புவதை குழந்தைகள் நிறைவேற்றித் தர வேண்டும். இப்படித்தான் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்புதான் ஏமாற்றம் அடையும் பொழுது கோபமாக வெடிக்கிறது. பிரச்சனையாக உருவெடுக்கிறது. எனவே பிறரிடம் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொண்டாலே கூடுமானவரை பிரச்சனைகள் குறைந்து விடும். இது ஒருபுறம் இருந்தாலும் கூட பக்திரீதியாக பார்க்கும் பொழுது துர்க்கை வழிபாட்டை தொடர்ந்து செய்து கொண்டு வந்தால் கட்டாயம் குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும்.
அகத்திய மாமுனிவரின் மனைவியைப் பற்றி அகத்திய மாமுனிவர் வாக்கு:
இறைவன் அருளைக் கொண்டு யாமே எம் தாரத்தைக் (மனைவி) குறித்து கூறுவது என்பது அத்தனை சிறப்பாக இராது என்றாலும் கூட நல்விதமாக அன்னையின் (பராசக்தி) அருளைப் பெற்று இறைவனின் கருணையாலே எம்மில் ஒரு பாதியாக இருந்து அந்த பாவத்தில் கூறுவதென்றால் இப்படி சுருக்கமாகக் கூறிவிடுகிறோம். அவள் பெண்பால் அகத்தியர். நான் ஆண்பால் லோபாமுத்திரை அவ்வளவே.
கேள்வி: அப்பா சாராயம் ஆறாக ஓடுகிறது நாட்டில் இதனால் அடுத்த தலைமுறையின் நிலை என்ன?
இறைவன் அருளாலே இந்த தீய பழக்க வழக்கங்கள் மனிதனிடம் இன்று நேற்று தோன்றியது அல்ல. என்று மனித குலம் தோன்றியதோ அன்றிலிருந்தே தீய பழக்கங்கள் அசுர பழக்கங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது வேண்டாம் முற்றிலும் அழித்து விடலாம் என்று மனிதன் எண்ணலாம். ஆனால் இது ஒருபொழுதும் நடக்கப் போவதில்லை என்பதே உண்மையாகும். ஆனால் ஒவ்வொரு மனிதனும் இது போன்ற தீய பழக்கத்திலிருந்து தம்மை தற்காத்துக் கொள்ள மனதை வைராக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். அந்த செயலை செய்வதால் என்ன நன்மை? என்ன தீமை என்பதை ஒருவன் சுயமாக சிந்தித்துப் பார்த்தால் அப்பொழுது புரியும். மிருகங்கள் இது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாவதில்லை மிருகங்களுக்கு ஐந்தறிவு. மனிதனுக்கு ஆறறிவு என்று கூறிக்கொள்கிறான். ஐந்தறிவு கொண்ட மிருகம் போதைக்கு அடிமையாவதில்லை. ஆனால் ஆறறிவு கொண்டவன் அடிமையாகிறான் என்றால் எங்கே தவறு இருக்கிறது? என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். இது விளக்கம்.
இதற்கு பிராய்ச்சித்தம் என்றால் கதிர்மதி எனப்படும் அமாவாசை தினங்களிலே (வடக்கு நோக்கி இருக்கின்ற காளி போன்ற) உக்கிரமான தெய்வங்களுக்கு மிக மிக உயர்வான பொருள்களைக் கொண்டு அபிஷேகம் குறிப்பாக பசுவின் பாலைக் கொண்டு எத்தனை அளவு முடியுமோ அதைக் கொண்டு அபிஷேகம் செய்து அரசக்கனி எனப்படும் எலுமிச்சம் கனிகளால் மாலை சாற்றி நறுமண மலர்கள் மாலை சாற்றி அதன் பிறகு மிக மிக உயர்வான அன்னங்களை அதை பொருள் கொடுத்து வாங்கி உண்ண முடியாத ஏழைகளுக்கு யார் தருகிறார்களோ அந்த பகுதியிலே அதுபோன்ற பகுதியிலே இது போன்ற தீய பழக்கங்கள் படிப்படையாகக் குறையும்.
கேள்வி: திருமணம் தாமதமாவதற்கு எது காரணம் விளக்குங்கள் ஐயனே
திருமணம் தாமதமானால் பாவமில்லையப்பா புண்ணியம்தான். இதை பலமுறை கூறியிருக்கிறோம். புரிந்துகொள் திருமணம் ஆன பிறகுதான் அது பாவமா? புண்ணியமா? என்று முடிவெடுக்க முடியும். இருந்தாலும் வேடிக்கையாக இதை எடுத்துக் கொள்ளாமல் கவனமாக பார்த்தால் எது ஒரு மனிதனுக்கு ஏக்கத்தைத் தருகிறதோ எது ஒரு மனிதனுக்கு துக்கத்தைத் தருகிறதோ அந்த செயல்கள் அனைத்தும் பாவங்கள்தான். அதாவது ஒரு மனிதனுக்கு திருமணம் நடக்கவில்லை. அதனால் அவன் பாதிக்கப்படவில்லை என்றால் அது அவனுக்கு பாவமில்லை. ஆனால் அது பாவத்தை தூண்டுவதாக இருக்கக்கூடிய செயல் என்றால் கட்டாயம் அது அவனுக்கு துன்பத்தைத் தரும். துன்பத்தை தராத எந்த நிகழ்வையும் பாவம் என்று எடுத்து கொள்ள இயலாது.
கேள்வி: எங்கள் பாவ வினைகளை நீக்குவது ஒரு குருவின் கடமையல்லவா? நாங்கள் வாழ்ந்துதான் அந்த கர்மவினைகளை கழிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி நீங்களே அவைகளை அகற்ற ஏதாவது உபாயம் செய்ய முடியுமா?
குரு வழிகாட்டுவார் ஆனால் ஊட்டமாட்டார் என்பதை எப்பொழுதும் புரிந்துகொள். நாங்கள் ஊட்டினாலும் துப்புகின்ற குழந்தைகளாக இருந்தால் குதப்புகின்ற குழந்தைகளாக இருந்தால் எப்படியப்பா பாவ வினை தீரும்? எனவே நாங்கள் கூறுகின்ற விஷயத்தை ஏன்? எதற்கு? எப்படி என்றெல்லாம் ஆய்வு செய்யாமல் தொடர்ந்து எம் வழியிலே வந்தால் கட்டாயம் ஞானக்கதவு திறக்குமப்பா.
பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி வேறு செய்திகள் இல்லை. அகத்தியரின் சீடனாக இருந்தார். திருமூலரின் சீடரான நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவராகவும் இருந்தார். இவர் பதினெட்டு சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு நவசித்தர்களே பிரதானமாகக் கருதப்பட்டனர். மேரு மலையும் இமய மலையும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு இடமாகவே விளங்கியது. இங்கே தான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர் காலாங்கி நாதர். போகர் வந்த சமயம் அவர் மகாசமாதியில் இருந்தார். போகர் சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும் வானவெளியில் பறப்பது நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது. காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால் அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள் என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார். இதனால் இமய மலையில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர் நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார். மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம் போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண் விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள் பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது. அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி தான் கற்ற தாதுவித்தை எல்லாம் அந்த தவத்தின் முன்னால் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள் போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள். ஒரு சித்தர் போகர் மீது பெரும் கனிவு கொண்டு அமிர்தமணிப்பழம் என்னும் தேவக்கனி மரம் ஒன்றை காட்டி அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள் முழுக்க பசிக்காது நரைக்காது முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை சாப்பிட்டு விட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறினார்கள்.
போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய பசி தாகம் மூப்பு என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார். தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் போகர் ஏழாயிரம் போகர் நிகண்டு 17000 சூத்திரம் 700 யோகம் போன்றவை. நோயின்றி வாழ வைக்கும் பல அரிய குறிப்புகளை எழுதினார். இதனால் இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர். சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர் அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார். அந்த மந்திரம் தம்பணா மந்திரம் எனப்படுகிறது அமிர்தத்துக்கு இணையான ஆதி ரசத்தையே இவர் கண்டறிந்தார். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர். தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குவதற்காக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.
போகர் எழுதியதை போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர் போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவே செய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள் குளிகைகள் பெற்றுச் சென்றனர். மொத்தத்தில் மனித சமூகத்தை இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார். அண்டை நாடான சீன தேசமும் நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும் புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால் மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது. அங்கே போ யாங் என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள் கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து சீனராகவே வாழ்ந்தார். போகர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார். அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.
போகர் – 12,000
சப்த காண்டம் – 7000
போகர் நிகண்டு – 1700
போகர் வைத்தியம் – 1000
போகர் சரக்கு வைப்பு – 800
போகர் ஜெனன சாகரம் – 550
போகர் கற்பம் – 360
போகர் உபதேசம் – 150
போகர் இரண விகடம் – 100
போகர் ஞானசாராம்சம் – 100
போகர் கற்ப சூத்திரம் – 54
போகர் வைத்திய சூத்திரம் – 77
போகர் மூப்பு சூத்திரம் – 51
போகர் ஞான சூத்திரம் – 37
போகர் அட்டாங்க யோகம் – 24
போகர் பூஜாவிதி – 20
இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் 1799 1800 ஆம் பாடலில் விமான தொழில் நுட்பத்தை பற்றிய குறிப்பையும் அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளத் தெளிவாக கூறிப்பிட்டிருக்கிறார் அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின் (steam engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் மாடலையும் குறிப்பிட்டிருக்கிறார்.
போகர் தான் உருவாக்கிய மரக்கப்பலில் என்னனென்ன எப்படி இருக்கிறது என்று தன்னுடைய நூலில் விவரித்திருக்கிறார். அதன்படி ஒரு மரக்கப்பல் 2400 அடி நீளம் 300 அடி அகலம் 300 அடி உயரம் 7 மாடிகள் 64 அறைகள் அவற்றிற்கு கிழக்கும் மேற்குமாய் வாயில்கள் தெற்கும் வடக்குமாக ஜன்னல்கள் ஒவ்வொரு மாடியிலும் 128 வாயில்கள் இவற்றை சிந்தித்து பார்த்தால் ஒரு அரண்மனை போல் இருக்கும். இந்த கப்பல் நீராவியின் மூலம் இயங்கும் தொழில் நுட்பத்தில் செய்திருக்கிறார். சீனாவில் இருந்தபோது அமைத்த அந்த கப்பலில் சீன மக்களையும் ரிஷிகள் பலரையும் ஏற்றிக்கொண்டு உலகைச் சுற்றி ஏழு கடல்களையும் காண்பித்ததாக பல பாடல்களின் மூலமாக அறிந்து கொள்ளலாம். போகர் தனது மரக்கப்பலில் உலகைச் சுற்றிய அனுபவம் உலகுக்கும் பற்பல அறிவியல் நன்மைகளை வழங்கின. நிலம் ஒரு பங்கு நீர் மூன்று பங்கு என்று புவிச்சூழல் அமைப்பை முதலில் சொன்னவர் போகர். கடல் பயணத்தின் போது கடும் பாறையை பாயும் சுறாவைக் கண்டறிந்து விலகிச் செல்ல கப்பலுக்குள் கண்ணாடிக் கருவி கண்டுபிடித்து அமைத்திருந்தார் போகர்.
போகர் தான் உருவாக்கிய விமானத்தில் என்னனென்ன எப்படி இருக்கிறது என்று தன்னுடைய நூலில் விவரித்திருக்கிறார். இதற்கு அவர் பட்டம் என்று பெயரிட்டிருக்கிறார். 30 அடி நீளம் 30 அடி அகலம் என சதுர பரப்பில் பட்டம் செய்தார். ஒரு குடை ராட்டினம் போல் அதை அமைத்து பறக்க வைத்தார். காந்த கொலுசுகளும் நார்ப்பட்டு கயிறுகளையும் வைத்து உருவான தொழில்நுட்பத்தில் பட்டம் செய்து பறக்கவிட்டார். மக்களை ஏற்றிக் கொண்டு முதலில் முப்பது மைல் தூரம் பறந்து இருக்கிறார். போகர் இந்த பட்டத்தின் துணையுடன் சென்ற நாடுகள் அதன் வழியாக சித்தர்கள் அதிகமான பாடங்களை கற்றிருக்கிறார்கள். இதனைப் பற்றி சித்தர்கள் பாடல்கள் பல உள்ளன. பட்டம் தயாரிப்பதற்காகவே போகர் அஸ்வினி மகரிஷியை சந்தித்ததாக புலிப்பாணியார் ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார். அஸ்வினி மகரிஷி பஞ்சலோகத்தை உருக்கிச் செய்தவர். போகரின் பெருமைகளையும் திறமைகளையும் அஸ்வினி மகரிஷி ஏற்கனவே அறிந்திருந்ததால் போகரை வாழ்த்திப் போற்றியதோடு தான் வைத்திருந்த ஆகாயப் புரவியையும் அதிலிருந்த தொழில்நுட்பத்தையும் அதற்கேற்ற சித்த மந்திரங்களையும் சொல்லிக் கொடுத்தார். இந்த பட்டம் பறக்கும் போது ஒளி பொருந்திய சிவரதம் போல் இருக்குமாம். இந்த வானரதம் தயாரித்த போகர் அன்பர்களை நண்பர்களை ஏற்றிக்கொண்டு உலகம் சுற்றி வந்தார்.
தானான ரோமாபுரி சுற்றி வந்தேன் தக்காண எண்ணாயிரம் காதமப்பா வேனான சித்தர்களை ஏற்றிக்கொண்டு வேகமுடன் தானடத்தி வந்தேனப்பா கோடி பேர் சமாதிநிலை தன்னைக் கண்டேன் கொற்றவனாம் ரோமாபுரி சமாதியோரம்.
இப்படித் தொடர்கிறது போகரின் வான்வெளிப் பயணம். போச்சா என்பவர் தென் அமெரிக்கா வந்து எண்ணற்ற சீர்திருத்தங்கள் செய்ததாக கலாச்சார மாற்றம் ஏற்படுத்தியதாக எழுதி வைத்திருக்கிறார். சிலி நாட்டு வரலாற்றாசிரியர் மைகாஸ் என்பவர் தன் வரலாற்று ஆய்வின் மூலம் அந்த போச்சா என்பவர் தான் போகர் என்கிறார். வெப்பக் காற்றை நிரப்பி உயரே பறக்கும் பலூனை போகர் கண்டுபிடித்தார். அதற்கு அவர் வைத்த பெயர் கூண்டு வித்தை. பாராசூட்டை கண்டு போகர் பிடித்தார். அதற்கு அவர் வைத்த பெயர் குடை வித்தை.
போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர். பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார். யார் நீ அந்தப்பக்கம் போ அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொடங்கியது. அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர். போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார். போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர் முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம் முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார். போகர் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாசாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரரையும் போகர் உருவாக்கினார். பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது. போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்று உள்ளது.
ஒரு குலம் அழியும் போது அந்த குலத்தின் பழமையான நெறிமுறைகளும் அழிந்து விடுகின்றது. அந்த குலத்தின் நெறிகள் அழியும் போது அந்த குலத்தை அதர்மம் சூழ்ந்து கொள்கிறது.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: குலத்தின் நெறிமுறைகள் என்றால் என்ன?
ஒரு குலத்தில் தலை முறை தலைமுறையாக தர்மத்தின்படி பல நல்ல ஒழுக்க முறைகளை பாரம்பரியமாக கட்டுப் பாடுகளுடன் கடைபிடித்து வருவார்கள். இந்தக் கட்டுப்பாடுகளினால் அந்த குலம் நல்ல பெயருடன் தலைமுறை தலைமுறையாக பலகாலம் தொடந்து வாழ்ந்து வரும்.
இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: குலத்தின் நெறிகள் அழியும் போது அதர்மம் எப்படி அந்த குலத்தை சூழ்ந்து கொள்கிறது?
ஒரு குலம் அதர்மத்தில் இருந்து தப்புவதற்கான காரணங்கள் அந்த குலத்தில் உள்ளவர்களுக்கு தலைமுறை தலைமுறையாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் கடவுள் மீது நம்பிக்கை வைத்து வழிபடுவது மற்றும் ஆகமங்களையும் நியமங்களையும் சரியாக கடைபிடித்தல் ஆகியவை ஆகும். இவற்றை அறிந்த பெரியோர்கள் யுத்தத்தில் அழியும் போது அவர்களுக்குப் பின் வரும் வாரிசுகளின் சிறுவயது முதலே குலத்தின் நெறிமுறைகளையும் தர்மத்தையும் கற்றுக் கொடுக்க யாரும் இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. வாரிசுகள் தர்மத்துக்காக கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகள் தெரியாததால் அவரவர்கள் விருப்பப்படி நடந்து கொள்வார்கள். இதில் யாரேனும் தவறு செய்தால் அதன் பலனாக அவர்களை அதர்மம் சூழ்ந்து கொள்வது மட்டுமின்றி அவர்களது மரபாகத் தொடர்ந்து வரும் தலைமுறையையும் அதர்மம் சூழ்ந்து கொள்ளும்.
கேள்வி: போகர் (பழனி முருகப்பெருமானின் நவபாஷாண சிலையை வடிவமைத்த சித்தர்) மற்றவர்களை விட தங்களின் தலைசிறந்த சீடர் ஆனதற்கு பின்னணி என்ன?
இறைவன் அருளாலே தலை சிறந்தவர் என்றால் உடல் சிறந்தவரல்ல உள்ளம் சிறந்தவரல்ல என்று (மனிதர்கள்) பொருள் கொண்டு விடப் போகிறார்களப்பா. போகர் மட்டும் அல்லாமல் வெளி மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாத எண்ணற்ற பல சீடர்கள் இருக்கிறார்கள். யாமோ எல்லோரையும் எம் சீடர்களாகவும் சிஷ்யர்களாகவும்தான் பார்க்கிறோம். ஆனாலும் மனிதனை பிடித்துள்ள மாயை எம்மை நோக்கி வரவிடுவதில்லை. ஆயினும் கூட போகரிடம் உள்ள சிறப்பு என்னவென்றால் எம் போன்ற பல மகான்களிடம் தான் எத்தனையோ கற்றாலும் கூட கல்லாதது போல் ஒன்றும் தெரியாதது போல் இருந்து கொண்டு அனைத்தையும் அறிந்து கொண்டு அப்பொழுதும் ஒன்றும் தெரியவில்லை குருவே நீங்கள் சொன்னால் தான் எனக்கு புரியும் என எப்பொழுதுமே கூறிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு நிலையிலே அதோடு மட்டுமல்லாமல் நல்விதமாய் இந்த தெய்வ சக்திகளையும் சித்திகளையும் இவன் அடைந்தாலும்கூட மனித சக்தி போல ஒன்றும் அறியாதது போல் ஒவ்வொரு மூலிகையையும் தேடி சென்று சுயமாக பரிசோதனை செய்து பார்த்து பார்த்து பார்த்து பார்த்து எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டிருக்கிறான்.
72,000 நாடி நரம்புகளும் நன்றாக இயங்குவதற்குண்டான உடல் இயக்க முறைகளையும் சுவாச முறைகளையும் கற்றுணர்ந்ததோடு மலர் மருத்துவத்தையும் முதன்முதலாக மனித குலத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறான். மலர் மருத்துவத்தோடு மட்டுமல்லாமல் நறுமண மருத்துவ முறையையும் இவன் அறிமுகப்படுத்தியிருக்கிறான். இன்னின்ன நறுமணத்தை இன்னின்ன பிணியாளர்கள் இன்னின்ன கிரக நிலையிலே நுகர்ந்தால் இன்னின்ன பிணிகள் போகும் என்பதெல்லாம் அவனுடைய சுய ஆய்வின் முடிவாகும். எங்கள் உதவியோ இறை உதவியோ இருந்தாலும்கூட அவற்றைப் பயன்படுத்தாமல் சுயமாகவே பலவற்றைக் கற்றுத் தேர்ந்து அனைத்தையும் கற்றுவிட்டு எந்தவிதமான தகுதியும் தனக்கில்லை என்பது போல் தான் எப்பொழுதுமே நடந்து கொள்வான். ஏதாவது சிறிய விஷயத்தைக் கேட்டால்கூட தெரியாது குருதேவா நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன் என்றுதான் எப்பொழுதுமே அவன் கூறிக்கொண்டிருப்பான். ஒருநாள் யாம் கேட்டோம் போகனிடம் பல சித்தர்கள் இருக்க
போகனே அன்னை துர்க்கையைத் தெரியுமா?
பதில்: தெரியாது
போகனே முக்கண்ணனைத் தெரியுமா?
பதில்: தெரியாது
போகனே இளையவன் பாலன் முருகனை தெரியுமா?
பதில்: தெரியாது
இவன் ஏன் இப்படி கூறுகிறான் என்று எல்லோரும் திகைக்கிறார்கள். பழனி முருகனை வடிவமைத்துவிட்டு எனக்கு முருகனைத் தெரியாது என்று கூறுகிறான். சரி ஏதாவது ஒரு மூலிகையைக் காட்டி இது குறித்து உனக்கு ஏதாவது தெரியுமா?
பதில்: தெரியாது
இப்படியே எல்லோரும் ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டே வர இறுதியில் என்னதான் உனக்குத் தெரியும் என்று கேட்டால் குருவே உங்களைத்தான் தெரியும்.வேறு எதுவும் தெரியாது என்று கூறுகிறான். சொல்லப்பா இவன் (போகர் சித்தர்) தலை சிறந்த சீடனாகாமல் வேறு எவன் ஆவான்.
போகர் வரலாற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து படிக்கலாம்.
ஒருவர் கடவுளுடைய மகிமை பிரார்த்தனையின் மகத்துவம் என்று தினமும் போதனை செய்து கொண்டிருந்தார். ஒருநாள் நதியை படகில் கடக்கும் போது படகு நீரில் மூழ்கி அதில் இருந்த பலரும் இறந்து விட்டார்கள். இவர் மட்டும் நதியின் நடுவே இருந்த ஒரு மரத்தின் கிளையை பிடித்துக் கொண்டு தண்ணீரில் மூழ்காமல் கடவுளே என்னை எப்படியாவது காப்பாற்றி விடு என்று பிரார்த்தனை செய்தார். அப்போது கடவுள் எதிரில் வந்து உன் பிரார்த்தனையை கேட்டு நான் வந்தேன் கவலைப்படாதே வா என் கையை பிடித்துக் கொள் என்றார். இந்த மனிதர் கிளையைப் பிடித்துக் கொண்டு நான் உன்னை பிரார்த்தனை செய்து கூப்பிட்டதற்காக நீ வந்திருக்கிறாய் மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த மரக்கிளையை நான் விட்டால் தண்ணிரீல் அடித்துக் கொண்டு சென்று விடுவேன். ஆகையால் நான் இந்த கிளையைப் பிடித்துக் கொண்டிருக்கும் போதே என்னைக் காப்பாற்றி விடு. என் கையை மட்டும் கிளையில் இருந்து எடுக்கச் சொல்லாதே என்று சொல்லிக் கொண்டிருந்தாரே தவிர ஓடிப் போய் கடவுளை கட்டிக்கொண்டு அப்பா காப்பாற்றி விட்டாயே என்று சொல்லத் துணியவில்லை.
இதுதான் இந்த உலகத்தில் இன்று இருக்கும் பல பக்தர்களின் கதை. தன்னை இறைவனிடம் ஒப்புக்கு கொடுக்காமல் இருக்கிறார்கள். கடவுளிடம் பூரண சரணாகதி அடைந்து முழுமையாக உன்னை கடவுளிடம் ஒப்புக் கொடுக்க வேண்டும்.
கேள்வி: திருப்பதி பெருமாளை பற்றி சில விஷயங்களை தொலைக்காட்சியில் காட்டினார்கள் அது பற்றி?
மனித அறிவும் தெய்வீகமும் எக்காலத்திலும் ஒன்றுபடாது என்பது உண்மையிலும் உண்மை. இருந்தாலும் யாம் கூறுகிறோம். அந்த பெருமாளின் திருமேனி சாட்சாத் மகாவிஷ்ணுவே கலியுகத்திலே துன்பத்தைப் போக்க அவதாரம் எடுத்ததை யாமே (அகத்திய மாமுனிவர்) நேரில் பார்த்திருக்கிறேன். இப்போது நீ கூறுகின்ற விஷயத்தையெல்லாம் எம்மால் ஏற்க இயலாது. அதற்காக யாங்கள் கூறுவதையெல்லாம் மனிதர்களும் ஏற்கவேண்டும் என்று நாங்களும் கூறவில்லை. உண்மையில் தெய்வீகத்திற்குள் அறிவை புகுத்தக்கூடாது என்று நாங்களும் கூறவில்லை. ஆனால் எல்லா விஷயங்களும் அவ்வாறுதான். புரிந்து கொள்ளக்கூடிய விஷயம்தான் என்று எண்ணி அதற்குள் நுழைந்தால் குழப்பம்தான் வரும். காரணம் மனித அறிவுக்குள் உண்டான விஷயம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே சென்றாலும் தெய்வீகம் சார்ந்து அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் தியானமும் தன்னை அறிதலும்தான் எளிய வழி. வெறும் புற ஆய்வுகளை செய்து கொண்டே இருந்தால் குழப்பம்தான் மிஞ்சும். எனவே சாட்சாத் பெருமாளின் திவ்ய அவதாரம்தான் அங்கு (திருப்பதி).
வேறு வேறு தெய்வ மூர்த்தங்கள் அங்கு இருந்ததாகவும் அதனையெல்லாம் திசை மாறிவிட்டதாகவும் ஒரு கதை நிலவுகிறது. அவற்றையெல்லாம் நாங்கள் ஏற்கவில்லை. ஆனாலும் கூட தமிழ் மண்ணிலே இருந்ததால் தான் அதற்கு பெயரே (திருப்பதி) அவ்வாறு வழங்கப்பட்டு அங்கு இன்றும் கூட தமிழ் பாசுரங்கள் தான் ஓதப்பட்டு வருகிறது. காலம் அதனை இவ்வாறு மொழி மாற்று மண்ணிலே (ஆந்திர பிரதேசம்) அமைத்து விட்டாலும் கூட எம்மைப் பொருத்த வரை எல்லாம் ஒன்றுதான் என்பதால் இந்த மாற்றத்தையும் நாங்கள் பெரிதாகப் பார்க்கவில்லை. எனினும் கூட அங்கு சென்று வணங்குவது பெருமாளின் அருளைப் பெறுவது என்பது தீர்க்கமான ஒன்று. அதற்காக அங்கு சென்றால்தான் பெருமாள் அருள்வார் என்று எண்ணிவிடக்கூடாது. இருக்கும் இடத்திலேயே தூய்மையோடு இறைவனை எண்ணினால் இறையருள் எல்லோருக்கும் எப்பொழுதும் கிட்டும்.
திருப்பதி கோவில் வரலாற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து படிக்கலாம்.