தீர்த்த மலை தீர்த்தகிரிசுவரர் கோவில்

ராமர் இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. இங்குள்ள இறைவனின் பெயர் தீர்த்தகிரீஸ்வரர். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் பெயர் வடிவாம்பிகை. இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயருடன் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள தல விருட்சம் பவளமல்லி மரம். இந்த தீர்த்தமலையில் இருந்து பல நீரூற்றுகள் உற்பத்தியாகின்றன. இந்த நீரூற்றுகளை கொண்டே இதற்கு தீர்த்த மலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவில் இருக்கும் தீர்த்த மலைக்கு கிழக்கில் இந்திர தீர்த்தம் இருக்கிறது. மேற்கே ராம தீர்த்தம் வாயு தீர்த்தம் வருண தீர்த்தம் உள்ளது. வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது. தெற்கே எம தீர்த்தம் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் உள்ளது. மேலும் அக்னி தீர்த்தம் கௌரி தீர்த்தம் குமாரா தீர்த்தம் அகத்தியர் தீர்த்தங்கள் இமய தீர்த்தம் கந்த தீர்த்தம் உள்ளன. இதில் ராம தீர்த்தம் ஒரு பாறையின் உச்சியில் இருந்து எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் கோடைக் காலத்திலும் இந்த தீர்த்தம் கொட்டுவது நின்றதில்லை. தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது.

வனவாசத்தின் போது ராமனோடு வனத்தில் இருந்த சீதையை மாய வேலைகள் செய்து கடத்திச் சென்றான் ராவணன். சீதையை மீட்பதற்காக ராவணனுடன் யுத்தம் செய்தார் ராமபிரான். அந்த யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டான். இதையடுத்து ராமர் அயோத்தி திரும்பினார். வழியில் இந்த தலத்திற்கு வந்தபோது சிவபூஜை செய்ய விரும்பினார். இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜைக்குத் தேவையான தீர்த்தத்தை காசியில் இருந்து கொண்டு வரும்படி அனுமனிடம் ராமபிரான் கூறினார். ஆனால் அனுமன் வந்து சேருவதற்கு கால தாமதம் ஆனது. எனவே ராமர் தனது பாணத்தை எடுத்து அங்கிருந்த மலை மீது விட்டார். ராமர் விட்ட பாணம் பாறையில் பட்ட இடத்தில் இருந்து தீர்த்தம் உண்டாகியது. அந்த தீர்த்தத்தைக் கொண்டு ராமர் சிவபூஜையை நடத்தி முடித்தார். ராமரின் பாணத்தால் உருவானது என்பதால் இதற்கு ராம தீர்த்தம் என்று பெயர். இதற்கிடையில் காசியில் இருந்து அனுமனும் தீர்த்தம் கொண்டு வந்து சேர்ந்து விட்டார். தான் வருவதற்குள் ராமபிரான் தீர்த்தம் உண்டாக்கி பூஜையை நிறைவு செய்து விட்டதால் கோபம் கொண்ட அனுமன் தான் கொண்டு வந்த தீர்த்தத்தை வீசி எறிந்தார். அது இத்தலத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையில் விழுந்தது. அது அனுமந்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

ராம தீர்த்தம்

மரம் செடி கொடி இலைகளில் இருந்தும் பாறைகளில் இருந்தும் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட அரிய தீர்த்தம் இது. ராமரால் உருவாக்கப்பெற்ற இந்த தீர்த்தத்தில் ஸ்ரீ ராம ஜெயம் என்று தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் சகல பாவங்களும் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.

அனுமன் தீர்த்தம்

அனுமான் ஒரு கிண்ணம் கங்கை நீரை இந்த பகுதியில் தெளித்ததாக புராணம் தெரிவிக்கிறது. மேலும் இந்த பகுதியில் இருக்கும் ஒரு பாறையில் இருந்து ஒரு நீரூற்று வருகிறது. இதன் தண்ணீர் மிக இனிப்பாக இருக்கும். இந்த நீரூற்றின் சிறப்பு என்னவென்றால் பென்னாற்றில் நீர் வற்றினாலும் இந்த நீரூற்று மட்டும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும். அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்குள்ள ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.

குமார தீர்த்தம்

முருகனை தேவ சேனாதிபதியாக நியமித்த போது இத்தீர்த்தத்தால் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். முருகனுக்காக வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும் என்று புராணம் கூறுகிறது.

கௌரி தீர்த்தம்

இது அன்னை வடிவாம்பிகைக்காக வழங்கப்பெற்றது. இத்தீர்த்தத்தை கொண்டு இறைவனை வழிபாடு செய்ததால் வடிவாம்பிகை இறைவனை மணந்து இறைவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றாள் என புராணம் கூறுகிறது. இத்தீர்த்தத்தை தெளித்துக் கொண்டும் பருகியும் இறைவனையும் இறைவியையும் வணங்கினால் சகல தோசங்களும் நீங்கும். இல்லறம் நல்லறமாக இருக்கும் என்று புராணம் கூறுகிறது.

அகத்திய தீர்த்தம்

அகத்திய மாமுனிவரின் குன்ம நோய் நீங்க இறைவனால் அருளப்பெற்றது. இத்தீர்த்தம் தாமிர சத்தும் மூலிகைகளின் சக்தியும் கொண்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உணவு சமைக்கவும் பயன்படுத்தி வந்தால் குன்ம நோய் (அல்சர்) நீங்கி வயிற்று வலியும் குணமடையும் என்று புராணம் கூறுகிறது.

அக்னி தீர்த்தம்

அக்னி தேவனின் பெண்ணாசையால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிய தீர்த்தம் இது. இதனால் உடலின் தட்பவெப்பம் சமமாகும். ஆஸ்துமா சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்று புராணம் கூறுகிறது.

தீர்த்தகிரிசுவரர் கோவிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன என்றாலும் இவற்றில் பழமையான கல்வெட்டு மேலைக் கங்க மன்னனான மல்லிதேவ மகாராசர் என்ற மன்னன் இந்த இறைவனுக்கு ஆலம்பாடி என்ற சிற்றூரை தானமாக அளித்தார் என்று கி.பி ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டே பழமையானதாக உள்ளதால் இக்கோயில் ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டக் கோயிலாகும். தீர்த்தகிரிசுவரர் கோவில் ஏழாம் நூற்றாண்டில் சோழர் மற்றும் பாண்டியர்களால் கட்டப்பட்டது. இதற்கான பல கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகின்றன. ராஜேந்திரச் சோழன் தினந்தோறும் இந்த கோவிலுக்கு வந்து அவர் கையாலே சிவபூசை செய்வார் என்று கல்வெட்டுகளின் மூலமாக அறிந்து கொள்ளலாம். தீர்த்தகிரிப் புராணம் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சைவ எல்லப்ப நாவலர் என்பவரால் எழுதப்பட்டது. இந்நூல் சிறப்புப் பாயிரம் சாற்றுக்கவி பாயிரம் நீங்களாக நானூற்று முப்பத்திரண்டு பாடல்களைக் கொண்டுள்ளது. அவை 14 சருக்கங்களாக அமைக்கப்பட்டுள்ளன. என்னும் சருக்கங்கள் நீங்கலாக மற்ற 9 சருக்கங்கள் தீர்த்தங்களின் பெயரைக் கொண்டுள்ளன. கோயில் உள்ள முருகன் மீது அருணகிரிநாதர் நான்கு பாடல்கள் பாடியுள்ளார்.

சுலோகம் -69

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #22

மனிதன் எப்படி நைந்து போன பழைய துணிகளை நீக்கி விட்டு புதிய துணிகளை எடுத்துக் கொள்கிறானோ அது போலவே ஆத்மாவானது பழைய உடலை விட்டு புதிய உடல்களை சென்று அடைகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தாயானவள் தன் குழந்தைக்கு பழைய துணிகளை கழற்றிவிட்டு புதிய துணிகளை அணிவிக்கிறாள். அப்போது குழந்தை அழுகிறது. குழந்தை அழுவதைக் கண்டு தாய் கவலைப் படுவதில்லை. புதிய துணிகளை அணிவித்து மகிழ்கிறாள். அதுபோலவே மனிதன் மரணத்தைப் பற்றி பயப்படுவதையும் அழுவதையும் கண்டு கவலைப்படாத இறைவன் ஆத்மா இருக்கும் உடலுக்கான தேவை மறையும் போது ஆத்மாவின் நன்மைக்காக அடுத்த உடலைக் கொடுக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 96

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 96

கேள்வி: பெண்கள் மூத்தோனை (விநாயகரை) எவ்வாறு வழிபடுவது?

பெண்களுக்கு மூத்தோன் என்றால் முதலில் கணவன் என்று நாங்கள் கூறுவோம். கணவனை வணங்கு என்று நாங்கள் பெண்களைப் பார்த்து கூற இயலுமா இக்காலத்திலே? இன்னொரு வகையில் பார்த்தால் உடன் பிறந்தவர்களில் யார் மூத்தவர்களோ அவர்களை வணங்க வேண்டும். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க விநாயகப்பெருமானை வணங்குகின்ற தன்மையைத்தான் நீ வினாவாகக் கேட்டிருக்கிறாய். இறைவனை வணங்குவதற்கென்று விதிமுறைகள் என்று வேதங்களிலும் ஆகமங்களிலும் எத்தனையோ கூறப்பட்டிருந்தாலும் கூட எம்மிடம் வருகின்ற சேய்களுக்கு(பிள்ளைகளுக்கு) நாங்கள் அதனையெல்லாம் வலியுறுத்துவதில்லையப்பா. ஏனென்றால் விதிமுறைகளைக் கூறினால் பிறகு விதிமுறைகள்தான் அங்கே இருக்குமே தவிர பக்தி இல்லாமல் போய் விடும். விதிமுறைகள் புரிவதற்காக வகுக்கப்பட்டவை. அதனையே பிடித்துக் கொண்டு மனிதன் தொங்குவதுதான் வேதனையிலும் வேதனை.

காசியிலே இருந்தால் முக்தி என்றால் இவன் காசியில் இறந்தால் முக்தி என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். காசி என்றால் ஆக்ஞா சக்கரம். அங்கே நினைவை நிறுத்தி நிறுத்தி நிறுத்தி சதாசர்வகாலம் அந்த காசியிலே (புருவ மத்தி) இருந்தால் அது முக்திக்கு வழிவகுக்கும். பஞ்சமா பாதகங்களை செய்துவிட்டு காசியிலே இறந்தால் முக்தியா கிட்டும்? தனி நரகமே ஏற்படுத்த வேண்டுமல்லவா? தேர் இழுக்க வேண்டுமென்றால் குண்டலினி எனப்படும் தேரினை எண்ணங்கள் என்னும் கயிற்றால் வைராக்யம் எனும் வலிமையால் மேலே ஏற்றி ஏற்றி மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம் மணிப்பூரகம் என்று ஒவ்வொரு ஆதாரமாகக் கடந்து சஹஸ்ர ஆதாரத்திற்கு கொண்டு வந்து அதனை நிலைநிறுத்த வேண்டும். அந்தத் தேர் புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடும். இந்தத் தேர் மேலே வந்துவிட்டால் கீழே இறங்குவது கடினம். ஆனால் வைராக்யம் பெற்ற ஞானிகள் மேலும் கீழும் இந்த குண்டலினி தேரையும் இழுப்பார்கள். இதற்கு உவமானமாக ஒரு தேரை வைத்து அதனுள் சுவாமியை வைத்து இழுப்பது என்று சுட்டிக்காட்டினால் அந்தத் தேர் இழுப்பதையே பெருமையாக வைத்துக் கொண்டு இதிலும் கலவரத்தை வளர்த்துக் கொண்டு வாழ்கின்ற மனித கூட்டத்திற்கு எதனைக் கூறுவது? எனவே விதிமுறைகளை விட்டுவிட்டு ஆத்மார்த்தமாக ஒவ்வொரு ஆணும் பெண்ணும் எப்படியெல்லாம் இறைவனை வணங்கத் தோன்றுகிறதோ பாசத்திற்குரிய தந்தையை அன்பிற்குரிய மனைவியை பாசத்திற்குரிய அன்னையை குழந்தையை எப்படியெல்லாம் பார்க்கிறார்களோ அப்படி பார்த்து அப்படி பேசிக்கொண்டால் அதுதான் உண்மையான வழிபாடு.

சுலோகம் -68

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #21

அர்ஜூனா எந்த மனிதன் இந்த ஆத்மா அழிவற்றது நித்தியமானது பிறப்பற்றது மாறுதலற்றது என்று அறிகிறானோ அவன் கொல்வது யாரை? கொல்விப்பது எவனை?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஆத்மவைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டவன் அறத்தைக் காக்க தர்மத்தின் படி போர் புரிய யுத்த களம் சென்று மனம் புத்தியுடன் கூடிய உடலுடன் இணைந்து ஆத்ம தத்துவத்துடன் இருக்கும் இன்னொரு உடலை அழிக்கும் போது இங்கு நான் கொல்லவில்லை என்றும் இங்கு யாரும் கொல்லப்படவில்லை என்றும் அழியக்கூடிய உடல் தர்மப்படி அழியக்கூடிய இன்னொரு உடலை அழித்து விட்டது என்று மட்டுமே நினைப்பான். ஆகவே யாருக்காகவும் எதற்காகவும் வருத்தப்படத் தேவையில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 95

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 95

விருத்தகிரீஸ்வரர் ஆலயம் பற்றி அகத்தியர் மாமுனிவரின் (குருநாதர்) பொதுவாக்கு

இறைவன் அருளால் கண்டராதித்தன் சோழன் காலத்திருந்தே பெருமை பெற்றது விருத்தகிரீஸ்வரர் ஆலயம். விருத்தம் என்றால் இலக்கணத்திலே விருத்தம் என்ற பா வகை இருக்கிறது. பழமை என்ற ஒரு பொருளும் இருக்கிறது. பழமறைநாதர் என்ற நாமத்தோடு அங்கு சிவபெருமான் அருள்புரிந்து கொண்டிருக்கிறார். காசி போன்ற இடங்களுக்கு செல்ல இயலாதவர்கள் இந்த விருத்தகிரிக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்த ஸ்தலம் முழுவதுமே கிரிவலம் போல பிரகார வலம் வருவதும் குறிப்பாக மாத சிவராத்திரியன்று வணங்கினால் கடுமையான பிரம்மஹத்தி தோஷம் நீங்கக்கூடிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. மிக மிக உயர்வான ஆலயம். அங்கு ஆழத்து பிள்ளையார் இருக்கிறார். அந்த ஆழத்து பிள்ளையை ஒவ்வொரு மனிதனும் சதுர்த்தி மற்றும் மக நட்சத்திர தினத்தன்று சென்று நல்ல முறையிலே வழிபாடு ஏழைகளுக்கு அன்ன சேவை செய்தால் கேது திசையால் ஏற்படக்கூடிய சில எதிர் விளைவுகள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எல்லா ஆலயங்களும் சிறப்பான ஆலயங்கள்தான். அங்கு செல்லக்கூடிய மனிதனின் மனம் மனதிலே இருக்கக்கூடிய பக்தி அவன் செய்கின்ற செயல் இவற்றைப் பொறுத்து அவனவனுக்கு பலன் ஏற்படும்.

கேள்வி: வான மண்டலத்தில் பல மாற்றங்கள் உதாரணமாக உத்தராயணம் தட்சிணாயனம் வளர்பிறை தேய்பிறை போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆனால் விடியற்காலையிலே தோன்றும் விடிவெள்ளி மாறாமல் இருக்கிறதே அது எப்படி?

விடிவெள்ளியும் மாறிக் கொண்டுதான் இருக்கிறதப்பா. அதை கவனித்துப் பார்த்தால் புரியும்.

விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

சுலோகம் -67

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #20

இந்த ஆத்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை. இந்த ஆத்மா பிறப்பற்றவன் நித்தியமானவன் எக்காலத்திலும் உள்ளவன் பழமையானவன். உடல் கொல்லப்படும் போது இந்த ஆத்மா கொல்லப்படுவதில்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எந்த ஒரு பொருளுக்கும் ஆறு விதமான செயல்கள் உண்டு. அவை 1. உருவாகுதல் 2. உண்டான பிறகு அதனது தன்மைக்கு ஏற்ப இருப்பது 3. வளர்வது 4. தன்மைக்கு ஏற்ப உருமாறி அதன் செயல்களை செய்வது. 5. தேய்வது 6. அழிவது. மேற்சொன்ன ஆறு விதமான செயல்களும் ஆத்மாவிற்கு இல்லை. ஆத்மா இறைவனிடம் இருந்து பிரிந்து வந்து பல பிறவிகள் எடுத்து பலவிதமான உடல்களில் வசித்து பின்பு உடல் அழிந்ததும் வேறு ஒரு உடல் எடுக்கின்ற ஆத்மாவனது தனது கர்மங்கள் அனைத்தையும் தீர்த்த பின்பு இறைவனிடமே சென்று சேர்ந்து விடுகிறது. ஆதி காலத்தில் இருந்தே இருக்கின்ற ஆத்மாவானது எப்போதும் நித்தியமாக இருக்கும். உடலில் சிறிது காலம் இருக்கும் இந்த ஆத்மா உடல் கொல்லப்பட்டாலும் அழிவதில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 94

அகத்தியர் மாமுனிவரின் (குருநாதர்) பொதுவாக்கு

மனித வடிவிலே சிறந்த குரு வேண்டுமென்று பல மனிதர்கள் நாடுகிறார்கள். நன்றாக புரிந்து கொண்டிட வேண்டும். மனித வடிவிலே சிறந்த குருமார்கள் இல்லாமலில்லை. ஆனால் அதை ஒரு மனிதன் தன்னுடைய முன்ஜென்ம பாவங்களை குறைத்து குறைத்து குறைத்து அதனையும் தாண்டி ஆன்மீக தாகம் எடுத்து எடுத்து எடுத்து அதை நோக்கிய சிந்தனையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாத நிலையில் இறைவனாகப் பார்த்துதான் தக்க குருவை அனுப்பி வைப்பார். ஆனால் தன்னைப் பற்றி வெளியில் கூறிக்கொள்ளும் பெரும்பாலான குருமார்கள் அனைவருமே முழுமையான ஞானமோ முழுமையான இறையருளைப் பெற்றவர்களோ அல்ல. வெறும் ஒரு மடத்து நிர்வாகியாகவும் ஆன்மீகத்தைத் தொழில் போலவும் செய்யக்கூடிய மனிதர்களே அதிகம். எனவே மனித வடிவில் குருவைத் தேடி காலத்தை வியம் (விரயம்) ஆக்கிட வேண்டாம். சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு நல்ல விஷயம் இல்லாமலிருக்காது. அதைக் கற்றுக் கொண்டு தனக்குள்ளே பிரம்மத்தைத் தேடுகின்ற முயற்சியாக அமைதியாக முன் அதிகாலையிலே வடக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து அமைதியாக மிக மெதுவாக சுவாசத்தை உள்ளே வைக்கும் கும்பத்தை செய்திடாமல் மெல்ல மெல்ல சுவாசப் பயிற்சியை பயின்று வந்தால் நல்ல பலன் உண்டு. அப்படியே தியானத்திலே அமர்ந்து எது நடந்தாலும் சிந்தனை எத்தனை தடுமாற்றம் அடைந்தாலும் சிந்தனை எங்கு அலைந்து திரிந்து திளைத்து சென்றாலும் எத்தனை குழப்பம் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வை கொண்டு பார்க்க பழக வேண்டும். ஒரு சிந்தனை தவறு என்றால் அந்த சிந்தனை இன்னொரு மனிதரிடம் அதிலும் ஆன்மீக வழியில் வரும் மனிதரிடம் இருந்தால் இவன் ஏற்றுக் கொள்வானா? என்று பார்த்து இவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றால் பிறரிடம் இந்த சிந்தனையிருந்தால் அவனை மதிக்கமாட்டோம் என்றால் நம்மிடம் மட்டும் ஏன் இந்த சிந்தனை? என்று ஆய்ந்து பார்த்து பகுத்துப் பார்த்து இவனை இவன் சரிசெய்து கொண்டால் மெல்ல மெல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சுலோகம் -66

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #19

இவன் கொல்வான் என்று நினைப்போனும் கொல்லப்படுவானென்று நினைப்போனும் ஆகிய இருவரும் உண்மையை அறியாதவர்கள். எனெனில் இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்வதுமில்லை. யாராலும் கொல்லப்படுவதுமில்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஒருவன் இன்னொருவனை கொல்லும் போது அவனது ஆன்மாவை அழித்து விட்டதாக நினைப்பவனும், ஒருவனால் இன்னொருவன் கொல்லப்படும் போது கொல்லப்பட்டவனின் ஆன்மாவும் அழிந்து விட்டதாக நினைப்பவனும் உண்மையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆத்மாவைப் பற்றிய ஞானம் இல்லை. இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்வதுமில்லை. யாராலும் கொல்லப்படுவதுமில்லை. ஏன் என்றால் இந்த உடலில் இருக்கும் ஆத்மாவின் பூர்வ ஜென்ம ஆசைகளும் எண்ணங்களுமே இந்த உடலால் செய்யப்படும் செயல்களாக இருக்கிறது.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி:

இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்வதுமில்லை. யாராலும் கொல்லப்படுவதுமில்லை என்றால்
கொல்பவன் யார்?

மனம் புத்தியுடன் கூடிய உடலுடன் இணைந்து இன்னொரு உடலை அழிக்க வேண்டும் என்று அஞ்ஞானத்தால் எண்ணி அதற்கான செயலில் ஈடுபடும் போது ஒரு உடலில் இருந்து உயிர் பிரிந்து சென்றால் அந்த செயலில் ஈடுபட்டவனே கொல்பவன் ஆவான். அப்படி கொல்பவன் நான் என்ற எண்ணத்தால் இதனை செய்கின்றதால் அதன் பலனாக வரும் பாவங்களை அவன் அனுபவித்துக் கொள்வான். ஆனால் அறத்தைக் காக்க தர்மத்தின் படி போர் புரிந்து ஒருவனை கொல்பவனை அதன் பலன்கள் அணுகுவதில்லை கர்ம வீரனை அவை பாதிப்பதும் இல்லை.

கொல்லப்படுபவன் யார்?

கொல்பவன் அதற்கான பலன்களை அனுபவிக்க வேண்டியும் கர்மாக்களை தீர்த்துக் கொள்ள வேண்டியும் இன்னொரு மனம் புத்தியுடன் கூடிய உடலுடன் கொண்டவனால் தனது உடலையும் உயிரையும் இழப்பவன் கொல்லப்படுபவன் ஆகிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 93

கேள்வி: கல்வியை அரசாங்கமே ஏற்று நடத்த அருள் செய்ய வேண்டும்?

இறைவன் அருளால் லட்சுமி (பணம்) இருந்தால் சரஸ்வதியை (கல்வி) வாங்கலாம் என்ற நிலை இப்பொழுது இருக்கிறது. இது காலகாலம் இருக்கக்கூடிய ஒரு நிலைதான். முற்காலத்திலும்கூட ஒரு சில அறிவிலிகள் நிறைய தனத்தை தந்தால்தான் போதிப்பேன் என்றெல்லாம்கூட இருந்திருக்கிறார்கள். இது மனித மலினங்களில் ஒன்று. இதை தவிர்ப்பது என்பது கடினம். இருந்தாலும்கூட ஏழைகளுக்கு இலவசமாக கல்வியைத் தரவேண்டுமென்று பல நல்ல உள்ளங்கள் ஒன்றுகூடி அதற்காக போராடினால் மெல்ல மெல்ல இதற்குரிய சூழ்நிலை ஏற்படும். இருந்தாலும்கூட பிரம்மனுக்கு உகந்த ஸ்தலங்கள் சென்று வணங்குவதும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குறைந்தபட்சம் 120 தினங்கள் பிரம்மாவையும் சரஸ்வதியையும் இல்லத்தில் வணங்குவதுமாக இருந்தால் இப்படி முறையற்ற கல்வி முறையற்ற மனிதனுக்கு போகாமல் தேவையான மனிதனுக்கு நியாயமான முறையில் கல்வி கற்பிக்க ஒரு சூழல் ஏற்படும்.

கேள்வி: தாங்கள் ஏழு கடல்களை உள்ளங்கையில் வைத்து குடித்ததின் நோக்கம் என்ன ஐயனே?

இறைவன் எம்மைக் கருவியாக வைத்து எத்தனையோ செயல்களை செய்திருக்கிறாரப்பா. அதில் ஒன்றுதான் நீ வினவியது.

கேள்வி: கல்வியை அரசாங்கமே ஏற்று நடத்த அருள் செய்ய வேண்டும்?

இறைவன் அருளால் லட்சுமி (பணம்) இருந்தால் சரஸ்வதியை (கல்வி) வாங்கலாம் என்ற நிலை இப்பொழுது இருக்கிறது. இது காலகாலம் இருக்கக்கூடிய ஒரு நிலைதான். முற்காலத்திலும்கூட ஒரு சில அறிவிலிகள் நிறைய தனத்தை தந்தால்தான் போதிப்பேன் என்றெல்லாம்கூட இருந்திருக்கிறார்கள். இது மனித மலினங்களில் ஒன்று. இதை தவிர்ப்பது என்பது கடினம். இருந்தாலும்கூட ஏழைகளுக்கு இலவசமாக கல்வியைத் தரவேண்டுமென்று பல நல்ல உள்ளங்கள் ஒன்றுகூடி அதற்காக போராடினால் மெல்ல மெல்ல இதற்குரிய சூழ்நிலை ஏற்படும். இருந்தாலும்கூட பிரம்மனுக்கு உகந்த ஸ்தலங்கள் சென்று வணங்குவதும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குறைந்தபட்சம் 120 தினங்கள் பிரம்மாவையும் சரஸ்வதியையும் இல்லத்தில் வணங்குவதுமாக இருந்தால் இப்படி முறையற்ற கல்வி முறையற்ற மனிதனுக்கு போகாமல் தேவையான மனிதனுக்கு நியாயமான முறையில் கல்வி கற்பிக்க ஒரு சூழல் ஏற்படும்.

கேள்வி: தாங்கள் ஏழு கடல்களை உள்ளங்கையில் வைத்து குடித்ததின் நோக்கம் என்ன ஐயனே?

இறைவன் எம்மைக் கருவியாக வைத்து எத்தனையோ செயல்களை செய்திருக்கிறாரப்பா. அதில் ஒன்றுதான் நீ வினவியது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 92

கேள்வி: வடலூர் (கடலூர் மாவட்டம்) வள்ளலார் ஔிதேகம் அடைந்ததைப் பற்றி?

இறைவன் அருளாலே வெளியில் தெரிந்த வள்ளலார் ஒருவன். தெரியாத வள்ளலார் அநேகம் பேர் இருக்கிறார்களப்பா. இருந்தாலும் இறைவன் திருவடியை அடைவதற்கு எத்தனையோ வழிமுறைகள் உண்டு. அதில் ஒன்றுதான் வள்ளலார் அடைந்த வழிமுறை. அவன் (வள்ளலார்) ஔிதேகம் பெற்றதும் உண்மை. மறைந்ததும் உண்மை. அதைப் போன்று பின்னால் பலருக்கும் அந்த வாய்ப்பை இறைவன் தந்ததும் உண்மை. இனி எதிர்காலத்தில் தரப்போவதும் உண்மை.

கேள்வி: தீர்த்தமலையில் (தருமபுரி மாவட்டம்) உள்ள தீர்த்தங்களின் சிறப்புகள் என்ன? அவைகள் எப்பொழுது உருவானது?

இறைவன் அருளால் பல்வேறு விதமான தீர்த்தங்கள் அங்கு இருக்கிறது. இராம தீர்த்தம் கூட அங்கு இருக்கிறது. அகத்தியர் என்ற நமது நாமத்திலும் தீர்த்தம் இருக்கிறது. அனுமன் நாமத்திலும் தீர்த்தம் இருக்கிறது. இது போன்ற தீர்த்தங்கள் எல்லாம் இறைவன் அருளால் காலகாலம் உருவாக்கப்பட்டு மனிதனின் தீராத கொடிய பிணிகளை தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவைகள். ஆனாலும்கூட இதுபோன்ற இடங்களில் அநாகரீகமான மனிதர்கள் சென்று பல அனாச்சாரங்களில் ஈடுபட்டால் கட்டாயம் இறைவன் அருளை மாற்றிவிடுவார் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இன்றளவு பரிசுத்த உள்ளத்தோடு சென்று பரிபூரணமான சரணாகதியோடு இறைவனை வணங்கி அந்த தீர்த்தத்தை அருந்த கட்டாயம் நன்மைகள் உண்டு. கொடும் நோய்கள் தீரும்.