சுலோகம் -19

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #19

இந்த பெரு முழக்கத்திலிருந்து வந்த ஒலி ஆகாயத்தையும் பூமியையும் எதிரோலிக்கச் செய்து திருதராஷ்டிர கூட்டத்தின் இதயங்களை பிளக்கச் செய்தது.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: பாண்டவ படைகளுக்கு உற்சாகத்தை கொடுத்து பயத்தை போக்கிய சங்கின் முழக்கம் ஏன் கௌரவ படைகளின் இதயத்தை பிளந்தது?

கௌரவர்களின் சங்கு முழக்கத்தின் சத்தத்தை விட பாண்டவர்களின் சங்கு முழக்கத்தின் சத்தம் மிகவும் அதிகமாக ஆகாயத்திலும் பூமியிலும் எதிரோலித்தது. இதனால் பாண்டவர்கள் தங்களை விட மிகவும் உற்சாகமாகவும் வலிமையாகவும் இருக்கிறார்கள் என்ற எண்ணம் கௌரவர்களுக்கு ஒரு விதமான பயத்தை உண்டு பண்ணி அவர்களின் இதயத்தை பிளந்தது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 46

கேள்வி: ராம நாமத்தை பற்றி

சதா உள்ள சுத்தியோடு ராம நாமத்தை ஜபித்து வந்தால் மனிதனை இறைவனிடம் சேராமல் தடுப்பதற்கு இந்த உலகிலே எத்தனையோ சோதனைகள் துன்பங்கள் காத்திருக்கின்றன. ஒன்று மண் ஒன்று பொன் அடுத்தது பெண். இதை மட்டும் காமம் என்று மால் தூதன் (ஆஞ்சிநேயர்) உரைக்கவில்லை. காமம் என்றால் இச்சை ஆசை. எதன் மீதாவது ஒரு மனிதனுக்கு தீவிர ஆசையும் பற்றும் வந்துவிட்டால் அது கிடைக்கும் வரை அவனுக்கு வேறு எதிலும் கவனம் செல்லாது. ஒரு வேளை அது பலருக்கும் பயனுள்ள காரியமாக இருந்தாலும் பாதகமில்லை. ஒன்றுமில்லாத சுய நல லாப நோக்கம் வந்து விட்டால் அதற்காக எல்லா செயலும் ஏன்? தகாத செயலை செய்யக்கூட அவனை அந்த இச்சை அந்த ஆசை காமம் இழுத்து செல்லும். எனவே அப்பேற்பட்ட தனக்கும் தன்னை சேர்ந்தவர்களுக்கும் துன்பத்தை தரக் கூடிய அந்த காமத்தை ராம நாம ஜெபம் ஓட்டும் என்பதே பொருள்.

கேள்வி: காமத்தை வெல்வது எப்படி?

அபிராமி அந்தாதி ஓதி வரலாம். நல்ல பலன் உண்டு. சமீப காலத்தில் ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு ஆண்களுக்கு காமம் தான் மிகப்பெரும் தடையாக உள்ளது. காமத்தை வெல்ல முடியாமல் பெரிய ஞானிகள் கூட தோற்றுப் போயிருக்கிறார்கள். ஆனால் அபிராமி பட்டர் அதிலே சுலபமாக வென்றுவிட்டார். எப்படி என்றால் பார்க்கின்ற பெண்களையெல்லாம் அன்னையாகவே பார்த்தான். காமம் அவனை விட்டு ஓடி போய்விட்டது. அபிராமி பட்டறை புரிந்து கொள்ள முடியாத மனிதர்கள் பலர் அக்காலத்தில் இருந்தார்கள். அந்த கோவிலிலே அன்னைக்கு பணிவிடை செய்த எத்தனையோ அர்ச்சகர்களில் ஒருவர் மட்டும் இவரை நன்றாக புரிந்து கொண்டார். அந்த தருணத்திலே ஞான நிலையில் இருந்து பட்டர் பாடிய பாடல்களை (அபிராமி அந்தாதி) அவர் பிரதி எடுத்து வைத்ததனால் தான் இவ்வளவு காலத்திற்குப் பிறகும் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.

அபிராமி பட்டரின் வரலாற்றை மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

அரசன் ஒருவன் கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். அவனது கிழிந்த உடைகளையும் குளிக்காத அழுக்கு உடலையும் பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றார்கள். இதை உணர்ந்த அந்த ஏழை இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நிற்போம் அனைவரும் அன்னதானம் பெற்றச் சென்ற பிறகு நாம் வாங்கிக் கொள்வோம் என்று தள்ளி நின்றான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள். இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு இழிசொல்? சென்ற ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான். நீண்ட நேரம் காத்திருந்தான் இறுதியில் உணவு அனைத்தும் தீர்ந்து விட்டது. சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அப்பனே ஆண்டவா என்ன தவறு செய்தேனோ தெரியவில்லை இப்படி ஒரு இழி பிறவியில் பிறந்து விட்டேன். எனக்கு ஏதேனும் நன்மை செய்யப்பா என்று கோவில் கோபுரத்தை பார்த்து வேண்டிக் கொண்டு கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான்.

அரசன் அன்னதானம் கொடுத்து முடித்து அந்த படித்துறையில் நடந்து வந்தார். அப்போது பரம ஏழை அரசனின் கண்ணில் பட்டான். என்னப்பா சாப்பிட்டாயா என்று அந்த ஏழையிடம் கேட்டார். தலை குனிந்து இருந்த ஏழை அரசனின் முகத்தைப் பார்க்காமல் கேட்பது அரசன் என்றும் தெரியாமல் ஊரே சாப்பிட்டது என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது என்று விரக்தியாக பதில் சொன்னான். அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் பிறந்த நாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்று தானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம் ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து உனக்கு பசிக்கிறதா எனக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது என் தவறு என்னை மன்னித்து விடப்பா என்றார். தன்னை தொட்டவரை திரும்பிப் பார்த்த பரம ஏழை தலையில் கிரீடம் காதல் குண்டலம் சுற்றிலும் பாதுகாவலர்கள் என்று அரசன் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தான். அரசே நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்து கொண்டே பதில் சொல்லிவிட்டேன் மன்னிக்க வேண்டுகிறேன் என்று பதறி எழுந்தான். அரசர் சிரித்தபடியே என்னுடன் வா இன்று நீ என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய் என்று அவனை பேசவிடாமல் அரண்மணைக்கு அழைத்துச் சென்றார். தன்னுடைய புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார். பரம ஏழை குளித்து புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்தார். இன்றிலிருந்து நீ ஏழை இல்லை இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்ந்து கொள் என்று வாழ்த்தினார்.

அரசரின் முன் இதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. இதனை கண்ட அரசர் ஏனப்பா அழுகிறாய் என்று கேட்டார். அதற்கு பரம ஏழை நான் இது நாள் வரை பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன். இப்போது நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்து கொண்டேன் என்று சொன்னான். திடுக்கிட்ட அரசன் ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்டார். வாழ்க்கையில் இன்று தான் முதல் முறையாக கோவிலின் கோபுரத்தை பார்த்து எனக்கு ஏதேனும் நன்மை செய்யப்பா என்று ஆண்டவனிடம் வேண்டினேன் கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே இறைவன் மாற்றி விட்டான். இத்தனை வருடங்கள் இந்த கோவிலில் அமர்ந்திருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட கோபுரத்தை கண்டு வணங்கியதில்லை. கோபுர தரிசனத்தை கண்டு வேண்டியதற்கே இறைவன் என் வாழ்க்கையை மாற்றி விட்டார் என்றால் கோவிலின் உள்ளே சென்று கடவுளிடம் கேட்டால் முக்தியையே கொடுத்திருப்பார் என்று இதுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன் என்று சொல்லி அழுதான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 45

கேள்வி: திருவிடைமருதூர் பற்றி? (கும்பகோணம் அருகில்)

சந்திரனின் சாபத்தை நீக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஸ்தலம். அதை சந்திரனுக்காக இறைவன் உண்டாக்கினாரப்பா இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? யாம் கூறுகின்ற பரிகாரங்களை செய்யும் (எம்மை வணங்குகின்ற) சில பக்தர்கள் எண்ணுகிறார்கள். நாம் அகத்தியரை வணங்குகிறோம். அவரிடம் கேட்டால் அவர் இன்னொரு தெய்வத்தை வணங்க சொல்கிறார். நான் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று முரண்டு பிடிக்கின்ற கூட்டம் இன்றும் உண்டு. ஆனால் அன்று என்ன நடந்தது தெரியுமா? தனக்கு ஏற்பட்ட இன்னல் தீருவதற்கு என்ன வழி சுவாமி? என்று சந்திரன் வினவுகிறார். சந்திரனே பூமியிலே காவிரிக்கரையில் இந்த இடத்தில் (திருவிடைமருதூர்) சென்று வணங்கு தக்க காலத்தில் வந்து யாம் உன் சாபத்தை நீக்குகிறோம் என்றார் இறைவன். இங்கு தான் கவனிக்க வேண்டும். சாபத்தை நீக்குகிறேன் என்று சொல்பவர் யார்? சிவன். அங்கேயே நீக்க வேண்டியது தானே? எதற்காக இடை மருதூர் சென்று வணங்கு. பிறகு நீக்குகிறேன் என்று சொல்ல வேண்டும்? காரணம் அத்தனை காலம் சந்திரன் அந்த இடத்திலே தவம் செய்ய வேண்டும் என்ற ஒரு கணக்கு இருக்கிறது. அதைப் போலவே திருக்கழுக்குன்றம் (காஞ்சிபுரம் மாவட்டம்) சென்று தவம் செய்து சாபத்தை நீக்கிக் கொள் என்று நந்திக்கு இறைவன் சொல்கிறார். நந்தி தவம் செய்ய சென்ற உடனேயே இந்திரனை அழைத்து ஊர்வசியை அனுப்பி நந்தியின் தவத்திற்கு இடையூறு செய் என்கிறார். இதுதானப்பா இறைவனின் லீலை. எனவே சிவனே விரும்பி சந்திரனுக்காக ஏற்படுத்திய ஸ்தலங்களுள் இடை மருதூரும் (திருவிடைமருதூர்) ஒன்று.

திருவிடை மருதூர் தலத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 93 திருவிடைமருதூர்

திருக்கழுக்குன்றம் தலத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 261 திருக்கழுகுன்றம்

சுலோகம் -17 # 18

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #17

வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும் மகாரதனாகிய சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் விராடனும் தோல்வியை என்பதை அறியாத சாத்யகியும்

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #18

துருபதனும் திரௌபதியின் ஐந்து மகன்களும் பெரும் தோள்களுடைய சுபத்திரையின் மகன் அபிமன்யுவும் தனித்தனியே தங்களுக்குரிய சங்குகளை முழங்கினார்கள்.

பகவத்கீதையின் இந்த இரண்டு சுலோகத்தில் சொல்லப்பட்டவர்கள் யார் யார் என்று முதலில் வரும் சில சுலோகங்களில் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.

இரண்டு சுலோகத்திலும் எழும் பொதுவான கேள்வி: பாண்டவர்களில் முக்கியமானவர்கள் அத்தனை பேரும் ஏன் ஒரே நேரத்தில் சங்குகளை ஊதினார்கள்?

தாங்களும் தங்களின் படைகளும் யுத்தத்திற்கு தயாராக இருக்கிறோம் என்றும் தங்களின் படைகளை உற்சாகப்படுத்தவும் அவர்களிடம் உள்ள சங்குகளை தனித்தனியாக ஒரே நேரத்தில் முழங்கினார்கள்.

மேலும் இதில் கவனிக்க வேண்டியது சங்கின் சத்தமாகும். அர்ஜூனனும் பீமனும் முழங்கிய சங்குகளிலிருந்து வந்த சத்தம் எதிரிகளுக்கு பயத்தை உருவாக்கியது போல இவர்கள் முழங்கிய சங்குகளில் இருந்து வரும் சத்தம் பாண்டவ படைகளின் பயத்தை போக்குகிறது. மிகப்பெரிய ராட்சச ராட்டினத்தில் செல்பவர்களை கவனித்தால் புரியும் அதில் செல்பவர்கள் ஆ ஊ என்று சத்தம் போடுவார்கள். ஏன் என்றால் உரக்கமாக கத்தினால் வரும் சத்தத்திலிருந்து பயம் குறையும். யுத்தத்தில் ஒருவரை ஒருவர் கொல்லப் போகிறார்கள். மரண பயம் படைகளில் யாருக்கேனும் இருந்தால் சங்கு நாதத்தில் இருந்து வரும் ஒலியானது மனித மனதில் உள்ள பயத்தை பல விதங்களில் சரி செய்து யுத்தம் செய்ய ஒரு வெறியை கூட்டும். அதே ஒலி மிகவும் வெறித்தனத்துடன் இருப்பவர்களின் மனதை அமைதிப்படுத்தி யுத்த தர்மத்துடன் யுத்தம் செய்ய வைக்கும். இல்லை என்றால் யுத்த வெறியில் ஆயுதம் இல்லாதவர்களையும் யுத்த களத்தில் இருந்து பயந்து பின் வாங்குபவர்களையும் கொன்று தர்மத்திற்கு எதிராக செயல்படுவார்கள்.

சங்கின் முழக்கமனாது பலவகைப்படும். சங்கை முழங்குபவர்கள் என்ன தேவைக்காக எப்படி முழக்கம் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் பலன் உண்டாகும். உதாரணமாக இசை ஒன்று தான் அதை என்ன ராகத்தில் இருக்கிறது என்பதை பொறுத்து ராகத்திற்கு ஏற்றார் போல் மகிழ்ச்சி துக்கம் பயம் என ஒருவருக்குள் இசையால் எந்த மனநிலையையும் வரவழைக்க முடியும். இசையால் உடல் நோய்களைக் கூட சரி செய்ய முடியும். இசையைப் போலவே மனித உணர்வுகளை பாதிப்பதில் சங்கின் நாதமும் முக்கியமானது. பயத்தைப் போக்கவும் அல்லது உண்டாக்கவும் குழப்பத்தைப் போக்கவும் அல்லது உண்டாக்கவும் தெளிவு படுத்தவும் அமைதிப் படுத்தவும் யுத்த களத்தில் சங்கு பயன்படுகிறது. ஆகவே யுத்த களத்தில் சங்கின் பங்கு மிகவும் முக்கியமானது.

சுலோகம் -16

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #16

குந்தியின் மகனான அரசர் யுதிஷ்டிரர் அநந்தவிஜயம் என்ற சங்கையும் நகுலனும் சகாதேவனும் முறையே சுகோஷம் மணிபுஷ்பகம் என்ற சங்கையும் முழங்கினார்கள்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: யுதிஷ்டிரரின் தாய் குந்தி என்று ஏன் குறிப்பிட்டு சொல்லப்படுகிறார்?

யுதிஷ்டிரரும் அர்ஜூனனும் பீமனும் குந்திக்கு பிறந்தவர்கள். நகுலனும் சகாதேவனும் மாத்ரீக்கு பிறந்தவர்கள். இந்த சுலோகத்தில் நகுலன் மற்றும் சகாதேவன் பெயர்களும் வருகிறது. எனவே யுதிஷ்டிரரின் தாய் வேறு நகுலன் சகாதேவனின் தாய் வேறு என்பதை குறிப்பிடுவதற்காக குந்தியின் பெயர் சொல்லப்படுகிறது.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: யுதிஷ்டிரர் மகாபாரத யுத்தம் ஆரம்பிக்கும் போது எந்த நாட்டிற்கும் அரசனாக இல்லை ஆனாலும் அரசர் யுதிஷ்டிரர் என்று ஏன் சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் கூறினார்?

யுதிஷ்டிரர் வனவாசம் செல்வதற்கு முன்பு இந்திரப்பிரஸ்தத்திற்கு அரசனாக இருந்து தன் சகோதரர்களுடன் ராஜசூய யாகம் நடத்தி தன்னை எதிர்த்த அனைத்து அரசர்களையும் வெற்றி பெற்று அரசர்களுக்கெல்லாம் அரசனாக இருந்து சக்கரவர்த்தி என்று பெயர் பெற்று பெரிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து வந்தவர். மேலும் யுத்தத்தின் போது யுதிஷ்டிரருடைய உடம்பில் அரசனுக்குரிய அரசுச் சின்னங்கள் இருந்தது. இதன் காரணமாகவும் மேலும் இந்த யுத்தத்தில் யுதிஷ்டிரனே வெற்றி பெற்று அரசனாவான் என்று சஞ்சயன் அறிந்திருந்தான். இதனை திருதராஷ்டிரருக்கு மறைமுகமாக தெரிவிக்கும் வகையில் யுதிஷ்டிரனை அரசன் என்றுகூறினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 44

கேள்வி: தர்மம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்? யாருக்கு தர்மம் செய்ய வேண்டும்? இல்லாதவர்களுக்கா? நம் உடன் பிறந்தவர்களுக்கா? உறவினர்களுக்கா?

இறைவனின் கருணையைக் கொண்டு தர்மம் எனப்படும் வார்த்தையை நாங்கள் பயன்படுத்தும் பொழுது மிக மிக நுணுக்கமாக கவனிக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே ஒரு மனிதனுக்கு தர்மத்தின் அனைத்து சூட்சுமத்தையும் கூறிவிட இயலாது. பொதுவாக கூறுகிறோம். தர்மம் செய்ய செய்யத்தான் தர்மத்தின் அனைத்து நுணுக்கங்களும் ஒரு மனிதனுக்கு புரிபடத் துவங்கும். இந்த நிலையில் நாங்கள் கூறுவது என்னவென்றால் யாருக்கு வேண்டுமானாலும் அவர்களின் தேவையறிந்து எந்த நிலையிலும் காலம் பார்க்காமல் திதி பார்க்காமல் நட்சத்திரம் பார்க்காமல் இரவு பகல் பார்க்காமல் கிழமை பார்க்காமல் தாராளமாக தேவைப்படும் மனிதர்களுக்கு தேவைப்படும் உதவியை தேவைப்படும் தருணத்தில் தரலாம். யாருக்கு தந்தாலும் நன்மைதான். இருந்தாலும் இரத்த சம்பந்தமான உறவுகளுக்கு தருவது கட்டாயக் கடமை. அதை தர்மத்தில் நாங்கள் சேர்க்க மாட்டோம். இரத்த தொடர்பு இல்லாதவர்களுக்கும் பிரதிபலன் எதிர்பாராமல் செய்வதைதான் நாங்கள் தர்மத்தில் சேர்க்கிறோம். அதே தருணம் ஒருவனுக்கு ஒரு உதவியை தர்மத்தை செய்யும் பொழுது அவன் அதனை முறைக்கேடாக பயன்படுத்துகிறான். எப்படி இதனை நாங்கள் ஏற்றுக் கொள்வது? என்றால் ஒருமுறை செய்து பார்த்துவிட்டு இது ஏற்புடையது இல்லை என்று மனதிலே பட்டுவிட்டால் நிறுத்திக் கொள்ளலாம். நாங்கள் அதை குறை கூறவில்லை. ஆனால் ஒவ்வொரு மனிதனையும் பார்த்து இந்த உதவியை இவன் சரியாக பயன்படுத்துவானா? என்று ஆராய்ந்து கொண்டே போனால் கட்டாயம் தர்மம் செய்ய இயலாது.

இறைவன் இவ்வாறு பார்த்து செய்தால் இங்கே மனிதனுக்கு பஞ்சபூதங்கள் கிட்டாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் காற்று வீசட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் சூரிய ஔி கிட்டட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் நீர் கிடைக்கட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் நிலவொளி கிடைக்கட்டும் என்று இறைவன் ஒரு பொழுதும் சிந்திப்பதில்லை செயல்படுவதில்லை. அந்த இறைவனின் மிகப்பெரிய பராக்ரம சிந்தனைக்கு ஒவ்வொரு மனிதனையும் நாங்கள் அழைக்கிறோம். அந்த உயர்ந்த உச்ச நிலையிலிருந்து அள்ளி அள்ளி வழங்குவதே எம் வழியில் வருபவர்களுக்கு அழகாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 43

கேள்வி: ஐயனே சரிவிகித உணவு என்பது என்ன? எப்பொழுது எவ்வகையான உணவை மனிதன் உண்ண வேண்டும்?

இறைவன் அருளால் நாங்கள் அடிக்கடி கூறுவது போல உணவை மனிதன் உண்ண வேண்டும். எந்த உணவும் மனிதனை உண்ணக் கூடாது. அப்படிப் பார்த்து மனிதன் உண்ணும் ஒரு முறையை கற்க வேண்டும். இன்னும் கூறப்போனால் உணவு என்பது ஒரு மனிதன் வாயைப் பார்த்து நாவைப் பார்த்து உண்ணக் கற்றுக் கொண்டிருக்கிறான். அப்படியல்ல வயிற்றைப் பார்த்து வயிற்றுக்கு எது சுகமோ வயிற்றுக்கு எது நன்மை தருமோ அப்படிதான் உண்ண பழக வேண்டும். உணவும் ஒரு கலைதான். இன்னும் கூறப்போனால் உணவு எனப்படும் இரை சரியாக இருந்தால் மாற்று இரை தேவையில்லை. அதாவது மாத்திரை தேவையில்லை என்பது உண்மையாகும். எனவே உடல் உழைப்பு சிந்தனை உழைப்பு இவற்றைப் பொறுத்து ஒரு மனிதன் உணவை தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எப்பொழுதுமே உணவிலும் சாத்வீகத்தைக் கடைபிடிப்பது அவசியமாகும். ஒருவனின் அன்றாடப் பணிகள் என்ன? அதிலே உடல் சார்ந்த பணிகள் என்ன? உள்ளம் சார்ந்த பணிகள் என்ன? இவற்றையெல்லாம் பிரித்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றாற் போல் உணவை பயன்படுத்த வேண்டும். அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள் உணவைக் குறைத்துக் கொள்வதும் உணவிற்கு பதிலாக கனி வகைகளை சேர்த்துக் கொள்வதிலும் இன்னும் கூறப்போனால் மசை பண்டம் இன்னும் அதிக காரம் அதிக சுவையான பொருள்கள் செயற்கையான உணவு பொருள்கள் இவற்றையெல்லாம் தவிர்த்து உணவை ஏற்பதே சிறப்பாக இருக்கும்.

வயது தன்னுடைய உடலின் தன்மை அன்றாடம் செய்கின்ற பணியின் தன்மை மனநிலை இவற்றை பொருத்துதான் எப்பொழுதுமே உணவை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதைவிட முக்கியம் ஒருவன் எந்த சூழலில் இருக்கிறானோ எந்த தட்ப வெப்ப நிலையில் இருக்கிறானோ அதற்கு ஏற்றாற் போல் மாற்றிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட கவனம் வேண்டியது உணவை பகிர்ந்துண்டு ஏற்பது. அது மட்டுமல்லாமல் உயர்ந்த உணவாயிற்றே இதை வீணடிக்கக் கூடாது என்பதற்காக ஏற்காமல் உணவு வீணானாலும் உடல் வீணாகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஏற்பதே சிறந்த உணவாக இருக்கும். உணவு நல்ல உணர்வை தூண்டக்கூடியதாக இருக்க வேண்டும். சாத்வீக உணவாக இருக்க வேண்டும். எனவே உணவை ஒவ்வொரு மனிதனும் உண்ணும் பொழுது அந்த உணர்வை சிரமப்படுத்தாத உணவாகப் பார்த்து ஒரு உணவு உள்ளே செல்கிறதென்றால் அந்த உணவு பரிபூரணமாக செரிமானம் அதாவது ஜீரணம் அடைந்த பிறகே அடுத்ததொரு உணவை உள்ளே அனுப்பும் முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

காலம் தவறாமல் நாழிகை தப்பாமல் உண்ணுகின்ற முறையை பின்பற்ற வேண்டும். வேறு வகையில் கூறப்போனால் சமையல் செய்கின்ற ஒரு தருணம் ஒருவன் ஒரு அடுப்பிலே ஒரு பாத்திரத்தை ஏற்றி நீரை இட்டு அதிலே அரிசியை இட்டு அன்னம் சமைத்துக் கொண்டிருக்கிறான். அப்பொழுது அங்கே மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள். அதனால் மூன்று மனிதர்களுக்கு ஏற்ப அன்னம் தயாரித்துக் கொண்டிருக்கிறான். அன்னம் பகுதி வெந்துவிட்டது. இப்பொழுது மேலும் மனிதர்கள் அங்கே வந்துவிட்டார்கள். உடனடியாக ஆஹா இப்பொழுது சமைத்த உணவு பத்தாது. இப்பொழுது வெந்து கொண்டிருக்கும் இந்த அரிசியிலேயே இன்னும் மூன்று பேருக்குத் தேவையான அரிசியைப் போடுகிறேன் என்று யாராவது போடுவார்களா? மாட்டார்கள். இதை முழுமையாக சமைத்தப் பிறகு வேறொரு பாத்திரத்தில் மேலும் தேவையான அளவு சமைப்பார்கள். இந்த உண்மை சமைக்கின்ற அனைவருக்கும் தெரியும். ஆனால் ஏற்கனவே உண்ட உணவு அரைகுறையான செரிமானத்தில் இருக்கும் பொழுது மேலும் உணவை உள்ளே அனுப்புவது உடலுக்கு வியாதியை அவனாகவே வரவழைத்துக் கொள்வதாகும். ஒரு மனிதனுக்கு பெரும்பாலான வியாதிகள் விதியால் வராவிட்டாலும் அவன் மதியால் வரவழைத்துக் கொள்கிறான். விதியால் வந்த வியாதியை பிராத்தனையாலும் தர்மத்தாலும் விரட்டலாம். பழக்க வழக்கம் சரியில்லாமல் வருகின்ற வியாதியை மனிதன்தான் போராடி விரட்டும் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல உணவு என்பது நல்ல உணர்வை வளர்க்கும் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் பக்குவமாக உணவை அகங்காரம் இல்லாமல் ஆத்திரம் இல்லாமல் வேதனை இல்லாமல் கவலையில்லாமல் கஷ்டமில்லாமல் நல்ல மன நிலையில் அதனை தயார் செய்ய வேண்டும். நல்ல மனநிலையில் அதனை பரிமாற வேண்டும். உண்ணுபவனும் நல்ல உற்சாகமான மன நிலையில் உண்ண வேண்டும். இதில் எங்கு குறை இருந்தாலும் அந்த உணவு நல்ல உணர்வைத் தராது.

சுலோகம் -15

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #15

கிருஷ்ண பகவான் பாஞ்சஜன்யம் என்ற பெயர் கொண்ட சங்கை முழங்கினார். அர்ஜூனன் தேவதத்தம் என்ற பெயர் கொண்ட சங்கை முழங்கினான். ஓநாயின் வயிற்றைக் கொண்ட பயங்கர செயலை புரியும் பீமன் பௌண்டிரம் என்ற பெயருள்ள பெரிய சங்கை முழங்கினான்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: கிருஷ்ணரிடம் பாஞ்சஜன்யம் சங்கு எப்படி வந்தது?

கிருஷ்ணர் மற்றும் பலராமர் சிறுவர்களாக இருந்த போது அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் குருவாக இருந்தவர் சாந்திபனீ முனிவர் அவரிடம் குரு தட்சணையாக என்ன வேண்டும் என்று கிருஷ்ணரும் பலராமரும் கேட்டார்கள். அதற்கு அவர் தன்னுடைய மகனை சங்கு வடிவில் இருந்த பாஞ்சஜன்யன் என்ற அசுரன் விழுங்கி விட்டான். தங்களால் இயன்றால் அவனை மீட்டுத் தாருங்கள் என்று கேட்டார். குருவின் வேண்டுகோளுக்கிணங்க கடலின் அடியில் சங்கு வடிவில் இருந்த அசுரனை கடலுக்கு மேல் கொண்டு வந்து அழித்து எமபுரம் வரை சென்று குருவின் மகனை மீட்டுக் கொடுத்த கிருஷ்ணர் சங்கு வடிவில் இருந்த அசுரனுக்கு அபயம் கொடுத்து சங்கு வடிவிலேயே அவனை தன்னுடன் வைத்துக் கொண்டார். அதனால் அந்த சங்குக்கு பாஞ்சஜன்யன் என்ற பெயர் கிடைத்தது.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: அர்ஜூனனுக்கு தேவதத்தம் சங்கு எப்படி கிடைத்தது?

யுதிஷ்டிரர் நடத்திய ராஜசூய யாகத்தின் போது போது அர்ஜூனன் பல அரசர்களை வெற்றி பெற்று நிறைய செல்வங்களை கொண்டு வந்தான். அப்போது தைத்யர்களுடன் போரிட்ட போது இந்திரன் தேவதத்தம் என்ற சங்கை அர்ஜூனனுக்கு வழங்கினான். இந்த சங்கின் சத்தம் எதிரிப் படைகளை நடுநடுங்க வைக்கும்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: பீமனுக்கு ஓநாயின் வயிற்றைக் கொண்டவன் என்ற பெயர் எப்படி வந்தது?

பீமன் அதிக அளவு உணவுகளை உட்கொள்ளக் கூடியவனாக இருந்தான். அத்தனை உணவுகளையும் ஜீரணமாக்கும் சக்தி அவனது வயிற்றில் இருந்தது. இதனால் அவனுக்கு ஓநாயின் வயிற்றைக் கொண்டவன் என்ற பெயர் வந்தது. பீமன் வைத்திருந்த பௌண்டிரம் சங்கு அளவில் பெரிதாக இருந்தது. பௌண்டிரம் என்ற சொல்லுக்கு எதிரிகளின் மனதை பிளப்பது என்று பொருள். பீமன் இந்த சங்கை முழங்கினால் தெளிவாக இருக்கும் எதிரிகளின் மனம் பிளந்து சிறிது நேரத்திற்கு குழப்பத்திற்குள் இருக்கும்.

குறிப்பு: சுலோகம் -14 இல் கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனன் வைத்திருந்த சங்குகள் தெய்வீகமானவை என்று சொல்லப்பட்டது. அதற்கான காரணம் கிருஷ்ணர் திருமாலின் அவதாரம் இறைவனிடன் இருந்த சங்கும் தெய்வீக அம்சமுடையதுதான். அதன் பிரதிபலிப்பாகவே பாஞ்சஜன்யம் என்ற பெயர் பஞ்ச இந்திரியங்களையும் அடக்குவது என்ற பொருளுடன் இந்த சங்கை முழங்கும் போது சங்கு சத்தத்துடன் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை துல்லியமாக சரியாக ஒலிக்கின்ற படியால் அதுவும் தெய்வீகம் பெற்றது. அர்ஜூனனுக்கு இந்திரன் தேவலோகத்து சங்கை அளித்திருந்தான். அதனால் அந்த சங்கும் தெய்வீகமானதுதான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 42

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் அருளைக் கொண்டு இயம்புவது யாதென்றால் ஒரு மனிதனின் மனோநிலை எந்த அளவிற்கு பக்குவம் அடைகிறதோ எந்த அளவிற்கு சாத்வீகம் அடைகிறதோ எந்த அளவிற்கு உயர் நுண்மா நுழை ஞானம் பெறுகிறதோ அந்த அளவிற்குதான் அவனை பொறுத்தவரை இந்த உலகமும் வாழ்க்கையும் உயர்வாக தெரியும். மனம் தான் வாழ்க்கை மனம் தான் உலகம் என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு எல்லாம் வெற்றி எண்ணியது எல்லாம் நடக்கிறது என்றால் இந்த உலகம் அவனுக்கு இனிப்பாக தெரியும். இன்னொரு மனிதனுக்கு தொட்டதெல்லாம் தோல்வி எல்லாம் எதிராக நடக்கிறது. எண்ணங்கள் ஒருவிதமாகவும் நடைமுறை செயல்கள் வேறுவிதமாகவும் இருக்க அவனை பொறுத்தவரை இந்த உலகம் கயப்பாக (கசப்பாக) தோன்றும். எனவே இப்படி இந்த உலகை உலகை சுற்றி உள்ள மனிதர்களை உலகில் நடக்கும் சம்பவங்களை ஒரு மனிதன் தான் எண்ணியபடி இருந்தால் நன்மை என்று எண்ணுவது பெரிதும் தவறல்ல என்றாலும் அப்படிதான் நடக்க வேண்டும் என்று எண்ணி அதற்கு மாறாக நடக்கும் போது எண்ணி வருத்தப்படுகிறான். அதுதான் அவனுக்கு மிகப்பெரிய வேதனையும் மன உலைச்சலையும் தருகிறது. எனவே இப்படித்தான் என்று எதிர்பார்ப்பதை விட எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தை இறைவா எனக்கு கொடு என்று மனோரீதியாக ஒருவன் வைராக்கியத்தையும் திடத்தையும் அடைந்து விட்டால் அவனை பொறுத்தவரை துன்பமான வாழ்க்கை என்று ஒன்றுமே இல்லை. எனவே துன்பங்கள் மற்றும் தொல்லை தரும் மனிதர்களை என்னை விட்டு அகற்று என்று வேண்டுவதை விட எல்லா நிலைகளிலும் எல்லா சூழல்களிலும் நான் திடகார்த்தமாக நான் தெய்வீக எண்ணத்தோடு வாழும்படியாக என் சிந்தனையை வைத்திரு இறைவா என்று வேண்டிக் கொண்டால் அது தான் தீர்க்கமான ஒரு முடிவாக நல்ல ஒரு நிச்சயமான நிம்மதியான வாழ்விற்கு ஒரு அடித்தளமாக அமையும்.

யாங்கள் அடிக்கடி கூறுவது உண்ணுகின்ற உணவு அல்லது பருகுகின்ற மோரிலே உப்பின் தன்மை அதிகமாகிவிட்டால் அந்த அதிகமாக உள்ள உப்பை மட்டும் பிரித்தெடுப்பது என்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக சிறிது நீரை சேர்த்து அந்த உப்பை சரி செய்வது போல ஒரு மனிதன் கர்ப்ப கோடி காலம் பிறவி எடுத்து சேர்த்த பாவத்தை மட்டும் அவனை விட்டு பிரிப்பது என்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக புதிதாக பாவம் செய்யாமலும் அதாவது புதிதாக உப்பை சேர்க்காமலும் சிறிது நீரையோ மோரையோ சேர்ப்பது போல புண்ணியத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டே வந்தால் அந்த உப்பின் தன்மை சமத்துவம் பெறுவது போல அந்த பாவத்தினால் வரக்கூடிய துன்பம் அவன் தாங்கக்கூடிய வண்ணம் இருக்கும். நன்றாக கவனிக்க வேண்டும் பாவம் இங்கே குறைவதில்லை. பாவம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் சேர்த்த மோரின் அளவு அதிகமானதால் உப்பின் தன்மை தெரியாதது போல சேர்த்து வைத்த புண்ணியத்தின் பயனாக அல்லது சேர்க்கின்ற புண்ணியத்தின் பயனாக பாவத்தின் தாக்கம் அவன் தாங்கும் வண்ணம் அமைந்து விடுகிறது அவ்வளவே. இந்த கருத்தை மனதிலே வைத்துக் கொண்டு எம்மை நாடுகின்ற ஒவ்வொரு மனிதனும் அப்படியென்றால் நாடாத மனிதன் செயல்பட வேண்டாமா என்று வினவ வேண்டாம். யாராக இருந்தாலும் அப்படி ஒரு மனப்பான்மையை வளர்த்து கொண்டால் வாழ்க்கை என்றும் உயர்வாக இனிமையாக திருப்தியாக சந்தோஷமாக சாந்தியாக இருக்கும்.