ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -20

அரசனின் குருவான சம்வர்த்தன் என்ற மகரிஷி அவனை தடுத்து நிறுத்தி அவனுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தார். இந்த சமயம் நீ கோபப்படுவதும் ராவணனுடன் யுத்தம் செய்வதும் சரியல்ல. மாகேஸ்வர யாகம் செய்ய நீ அக்னி ஏற்றிவிட்டாய். யுத்தம் செய்து வெற்றி பெற்று பின் யாகத்தை தொடர்ந்து நடத்துவேன் என்று நீ சொல்லலாம் ஆனால் இந்த ராட்சசன் பல வரங்களைப் பெற்றவன். எளிதில் வெற்றி பெற முடியாதவன். இந்த ராட்சசனுடன் நீ யுத்தம் செய்தால் நிச்சயமாக உனக்கு வெற்றி கிடைக்குமா? வெற்றி கிடைக்காமல் போனால் உன்னால் யாகத்தை தொடர்ந்து செய்ய முடியாது. யாகத்தை ஆரம்பித்து விட்டு அதை முடிக்காமல் விட்டால் அது உனது குலத்திற்கு கேட்டை விளைவிக்கும். எனவே சந்தேகத்துக் கிடமான இந்த செயலில் இறங்குவதற்கு முன் யோசித்துச் செயல் படு என்றார். குருவின் சொல்லைக் கேட்டதும் அரசன் தன் ஆயுதங்களை வைத்து விட்டு அமைதியுடன் யாகத்தில் அமர்ந்தான். உடனே ராவணன் வெற்றி பெற்று விட்டார். அரசன் சரணடைந்து விட்டான் என்று ராவணனைச் சேர்ந்தவர்கள் ஆரவாரம் செய்து ஆர்ப்பரித்தார்கள். அங்கு இருந்த பல மகரிஷிகளை தின்று தீர்த்து விட்டு ராவணனின் கூட்டம் திரும்பிச் சென்றது. ராவணன் சென்றதும் தேவர்கள் தங்கள் சுய ரூபத்துக்கு மாறினார்கள். அரசன் யாகத்தை நிறைவு செய்தான். ராவணன் மருத்தன் அரசனை வென்ற திருப்தியோடு எங்கு யுத்தம் செய்யலாம் என்று ஊர் ஊராகச் சென்று அரசர்களுடன் மோதினான் ராவணன்.

இந்திரன் வருணன் இவர்களுக்கு சமமாக தர்மத்தின்படி அமைதியாக ஆட்சி செய்து வந்த அரசர்களிடம் வம்பிற்கு சென்றான் ராவணன். யுத்தம் செய்ய வாருங்கள் யுத்தம் செய்ய வரவில்லை என்றால் என்னை உங்கள் அரசனாக ஏற்றுக் கொள்ளுங்கள். இரண்டில் ஒன்றை நீங்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் இல்லை என்றால் உங்கள் அனைவரையும் அழித்து விடுவேன். எனது படைகள் உங்களை தின்றே தீர்த்து விடுவார்கள் இது எனது கொள்கை என்று அனைத்து இடங்களுக்கும் தனது படைகளுடன் சென்றான் ராவணன். துஷ்யந்தன் காதி சுரதன் கயன் புரூரவன் போன்ற பல வலிமையான அரசர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ராவணனைப் பற்றி ஆலோசனை செய்தார்கள். இறுதியில் ராவணனை யுத்தம் செய்து வெல்ல முடியாது என்று தாங்கள் தோற்றதாக ஒப்புக் கொண்டனர். அங்கிருந்து கிளம்பிய ராவணன் அயோத்திக்கு வந்து சேர்ந்தான்.

இந்திரன் அமராவதி நகரை அழகாக வைத்திருப்பது போல் இருந்தது அயோத்தி. இஷ்வாகு குலத்தில் வந்த அனரண்யன் என்ற அரசன் அயோத்தியை அப்போது ஆண்டு வந்தான். இவர் தசரத சக்ரவர்த்தியின் முதாதையர் ஆவார். இவரையும் ராவணன் யுத்தத்திற்கு அழைத்தான். ராவணன் வருவான் என்பதை முன்னரை அறிந்து வைத்திருந்த அனரண்யன் யுத்தத்திற்கு தனது படைகளுடன் தயாராக இருந்தார். ராவணா நீ செய்யும் பாப காரியங்களைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன். உன்னுடன் யுத்தம் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்று யுத்தத்திற்கு கிளம்பினார். பத்தாயிரம் யானைகள் அதைப் போல இரு மடங்கு குதிரைகளும் கணக்கில்லாத ரதங்கள் கால் நடை வீரர்கள் என்று அனரண்யனன் படைகள் பூமியை மறைத்தபடி போருக்கு வந்தனர். அரசனின் படைகளும் ராவணனின் படைகளும் யுத்தம் செய்ய தயாராக இருந்தனர். அனரண்யன் படை பலம் மிக அற்புதமாக பெரிதாக இருந்தது. கடுமையாக யுத்தம் நடந்தது. நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சிகள் போல ராவணனின் படைகளிடம் அரசனின் அந்த பெரும் படை சில மணி நேரத்தில் அழிந்தது. தன் வீரர்கள் மடிந்ததைக் கண்ட அனரண்யன் தானே ராவணனுடன் நேரடியாக மோதினான். மாரீசன் சுகன் சாரணன் பிரஹஸ்தன் ஆகிய ராவணனின் மந்திரிகள் தோற்று ஓடினர். பல விதமான அஸ்திர சஸ்திரங்களை பிரயோகித்தும் அனரண்யனால் ராவணனை எதுவும் செய்ய முடியவில்லை. ராவணன் அரசனை தன் கையால் ஓங்கி அடித்தான் அதை தாங்க முடியாமல் அரசன் ரதத்திலிருந்து கீழே விழுந்தான். அரசனை பார்த்த ராவணன் பலமாக சிரித்து என்னுடன் மோதி என் பலத்தை தெரிந்து கொண்டாயா? மூவுலகிலும் எனக்கு சமமாக யுத்தம் செய்ய யாராலும் முடியாது தெரிந்து கொள் என்றான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -19

வேதவதி கோபத்தில் எரிப்பதைப் போல பார்ப்பதைக் கண்ட ராவணன் ஒரு கணம் ஸ்தப்பித்து நின்றான். வேதவதி ராவணனிடம் பேச ஆரம்பித்தாள். பண்பற்றவனே வனத்தில் தனியாக இருக்கும் என்னை யார் என்பதை நீ அறிந்து கொள்ளாமல் அனாவசியமாக என்னை தொட்டு விட்டாய். பல வரங்கள் பெற்று வலிமையுடன் இருக்கும் உன்னை என்னால் அழிக்க முடியாது. ஆனால் உனக்கு சாபம் கொடுக்கலாம். நான் உனக்கு சாபம் கொடுத்தால் அது என் தவ வலிமையைக் குறைத்து விடும். உனது கைகள் பட்ட இந்த சாரீரத்துடன் இனி நான் இருக்க மாட்டேன். இங்கேயே அக்னியை வளர்த்து இந்த நெருப்பில் விழுந்து எனது உடலை விடப் போகிறேன். நான் இது வரை செய்த தவத்தின் பலன் சிறிதளவாவது இருக்குமானால் நான் ஒரு தர்மவானின் குலத்தில் பிறந்து நீ அழிவதற்கு ஏதெனும் ஒரு வகையில் காரணமாக இருப்பேன் என்று சொல்லிக் கொண்டே வேதவதி அக்னியில் குதித்து தன் உடலை விட்டாள். அப்போது வானத்தில் இருந்து பூக்கள் மழையாக பொழிந்தது.

ராமரிடம் ராவணனின் வரலாற்றை சொல்லிக் கொண்டிருந்த அகத்தியர் இடையில் நிறுத்தி சிலவற்றைச் சொன்னார். நாராயணனை அடைய வேண்டி தவமிருந்து வந்தவள் வேதவதி. அவளே ஜனகர் ஏர் கலப்பையால் உழும் பொழுது பெட்டிக்குள் இருந்து குழந்தையாக வந்தாள். கலப்பையில் (சீத) உண்டானவள் என்பதால் சீதை என்று பெயர் பெற்றாள். அவளே தன் தவப்பயனால் உனக்கு மனைவியாக வந்தாள். நீ தான் சனாதனனான நாராயணன். ராவணன் மீது கொண்ட கோபம் மேகவதியின் மனதில் வேரூன்றிப் போனதால் ராவணனின் அழிவுக்கும் அவளே காரணமானாள். பல வரங்கள் பெற்று யாராலும் வெல்ல முடியாத ராவணனை மானிடத்திற்கும் மேலான தங்களின் பேராற்றலால் வென்றீர்கள் என்று சொன்ன அகத்தியர் தொடர்ந்து ராவணனின் வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார்.

வேதவதி நெருப்பில் குதித்தது ராவணனிடத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பழைய படி உலகை சுற்ற ஆரம்பித்தான். ஒரு நாள் யாகம் செய்து கொண்டிருந்த மருத்தன் என்ற அரசரைக் கண்டு அவரின் அருகில் சென்றான். இவர் சம்வர்த்தன் என்ற பிரம்ம ரிஷியின் சகோதரர். மற்ற தேவகணங்கள் சூழ யாகம் செய்து கொண்டிருந்தார். இவருடன் இருந்த தேவர்கள் ராவணனின் வரங்களின் பலத்தைப் பற்றி தெரிந்து வைத்திருந்தார்கள். ராவணனை கண்டதும் பயந்து தங்கள் உருவத்தை பறவை மற்றும் மிருகங்களின் உருவமாக மாற்றிக் கொண்டார்கள். ராவணன் யாகத்தை அசுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அசுத்தமான நாய் போல தன் உருவத்தை மாற்றிக் கொண்டு யாக சாலையினுள் நுழைந்தான். யாகம் செய்து கொண்டிருந்த அரசனிடம் என்னுடன் யுத்தத்திற்கு வா அல்லது என்னிடம் தோற்று விட்டேன் என்று என் முன் மண்டியிடு என்று அதட்டினான். அதற்கு அரசர் யாக சாலைக்குள் வந்து திடிரென்று யுத்தத்திற்கு வா என்று கூப்பிடுகிறாயே நீ யார் என்று கேட்டான். ராவணன் அந்த இடம் அதிர சிரித்து தன் பெருமை பேசினான். என்னைக் கண்டு பயப்படாமல் நிற்கிறாயே? நான் பெற்ற வரங்கள் ஆயுதங்கள் அஸ்திரங்கள் என் பலம் இவற்றை எல்லாம் உலகமே தெரிந்து வைத்திருக்கிறது. என்னை கண்டால் தேவர்களும் பயந்து ஓடி ஒளிந்து கொள்வார்கள். என்னைப் பற்றி நீ அறிந்ததில்லையா? குபேரன் சகோதரன் ராவணன் நான். என் சகோதரன் என்றும் பார்க்காமல் குபேரனை வெற்றி பெற்று அவன் விமானத்தை அபகரித்துக் கொண்டவன் நான் என்றான்.

மருத்தன் ராவணனிடம் பேச ஆரம்பித்தான். குபைரனையே எதிர்த்து யுத்தம் செய்து வெற்றி பெற்றிருக்கிறாய் அப்படி என்றால் நிச்சயமாக உனக்கு சமமாக யாரும் இருக்க முடியாது என்பதை ஒத்துக் கொள்கிறேன். நீ தர்ம வழியில் தவம் செய்து வரங்களைப் பெற்றதாக நான் இதுவரை அறியவில்லை. நீ சொல்லும் போது தான் தெரிந்து கொள்கிறேன். நீ வீணாக தற்பெருமை பேசுகிறாய். துஷ்டனே யாகத்தை அசுத்தப்படுத்திய நீ இங்கிருந்து நீ உயிருடன் தப்ப முடியாது. என் உயிருள்ள வரை உன்னை விட மாட்டேன். கூர்மையான என் பாணங்களால் உன்னை யம லோகத்துக்கே அனுப்புகிறேன் என்று கோபத்துடன் சொல்லிக் கொண்டே தன் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு யுத்தம் செய்ய தயாரானான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -18

குசத்வஜன் என்பவர் ஒரு பிரம்ம ரிஷி எனது தந்தை அவர். அளவில்லாத மகிமையும் பெருமையும் கொண்டவர். பிரம்மாவுக்கு சமமாக இருந்தவர். அவர் நித்ய வேத பாராயணம் செய்து கொண்டிருக்கும் போது அவரது வாக்கிலிருந்து உதித்தவள் நான். என் பெயர் வேதவதி. என்னை தேவர்கள் கந்தர்வர்கள் யட்சர்கள் என்று பலர் திருமணம் செய்து கொள்ள எனது தந்தையிடம் கேட்டார்கள். ஆனால் என் தந்தை நாராயணனுக்கு மட்டுமே என்னை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்து வைத்திருந்தார். அதனால் அவர்களில் யாருக்குமே என்னைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார். என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தம்பு என்ற தைத்ய அரசன் எனது தந்தை தூங்கும் பொழுது அவரைக் கொன்று விட்டான். திடுக்கிட்டுப் போன என் தாய் எனது தந்தையுடனேயே நெருப்பில் விழுந்து விட்டாள். எனது தந்தையின் விருப்பப்படி நான் மனதில் வைத்திருக்கும் நாராயணன் தான் என் கணவன் என்று சங்கல்பம் செய்து கொண்டு அவரின் நினைவாகவே இக்காட்டில் தவ வாழ்வை வாழ்ந்து வருகிறேன். வேறு யாரும் என்னை அடைய முடியாது. ராவணன் என்று பெயர் பெற்ற நீ யார் என்பது எனக்குத் தெரியும். மூவுலகிலும் நடப்பதை என் தவ வலிமையால் அறிந்து கொண்டு விடுகிறேன். இங்கிருந்து உனக்கு விடை தருகிறேன். நலமாக போய் வா என்றாள்.

வேதவதி பேசியதைக் கேட்ட ராவணன் தன்னுடைய புஷ்பக விமானத்திலிருந்து கீழே இறங்கி அவளிடம் பேச ஆரம்பித்தான். அழகிய பெண்ணே நாராயணன் உனக்கு கிடைக்க மாட்டான். அவன் வருவான் என்று நம்பி நீ மேலும் தவம் செய்து கொண்டிருந்தால் இறுதியில் ஏமாந்து போவாய். இது போன்ற தவ வாழ்க்கையே வயதான முதியவர்கள் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள செய்வார்கள். எல்லா விதமான நல்ல குணங்களும் அழகும் கொண்ட நீ இப்படி பேசுவது பொருத்தமாக இல்லை. இது நாள் வரை உன்னைப் போல் ஒரு அழகியை நான் சந்தித்தது இல்லை. உனது அழகினால் நீ சிறிது கர்வம் கொண்டவளாக இருப்பாய் என்று எண்ணுகிறேன். மூவுலகும் போற்றத் தகுந்த அழகியே உன் இளமையை வீணாக்காதே. நான் இலங்கையின் அதிபதி யாராலும் வெல்ல முடியாதவன் என்று பெயர் பெற்றவன். நீ கூறிய நாராயணன் என்பவன் வீர்யத்திலும் தவத்திலும் பலத்தாலும் எனக்கு சமமாக நிற்க முடியாது அவனைப் போய் நீ விரும்புவதாகச் சொல்கிறாய். என்னை திருமணம் செய்து கொண்டால் அரசி என்ற பட்டத்துடன் எல்லா சுகங்களையும் நன்றாக அனுபவிக்கலாம் இந்த தவ வாழ்க்கையை விட்டு விட்டு என்னோடு வந்து விடு என்றான்.

வேதவதி கோபத்துடன் பேச ஆரம்பித்தாள். நீ பேசுவது சரியல்ல. நாராயணன் மூன்று உலக மக்களாலும் வணங்கப்படுபவர். மூன்று உலகத்திற்கும் நாயகனான நாராயணனை நீ அவமதிக்கிறாய். அறிவுடையவர்கள் யாரும் அவரை இழிவாக பேச மாட்டார்கள். ராட்சசனான உன்னைத் தவிர வேறு யாரும் இதுவரை நாராயணனை அவதூறாக பேசியதில்லை என்றாள். இதனைக் கேட்ட ராவணன் மூன்று உலகத்திற்கும் நானே நாயகன் அந்த நாராயணன் அல்ல. இதனை முதலில் நீ தெரிந்து கொள். மூன்று உலகங்களையும் வெற்றி பெற்ற என்னை அவமதித்து விட்டு என்னை வேண்டாம் என்றும் சொல்கிறாயா உன்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறேன் என்னை யார் தடுப்பார்கள் பார்க்கிறேன் என்று வேதவதியின் தலைக் கேசத்தை பிடித்து ராவணன் இழுத்தான். நெருப்பை போல் இருந்த வேதவதி தன் தலை கேசத்தை தனது கைகளால் தட்டினாள். அவளது கைகளே கத்தி போல் ராவணன் பற்றியிருந்த கேசத்தை அறுத்து அவளை ராவணனிடமிருந்து விடுவித்தது. எல்லையில்லாத கோபத்துடன் ராவணனை எரிப்பது போல் பார்த்து பேச ஆரம்பித்தாள்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -17

நந்திபகவான் சொன்னதைக் கேட்ட தசக்ரீவன் சற்றும் யோசிக்காமல் பேச ஆரம்பித்தான். மலை மேல் இந்த புஷ்பக விமானத்தில் நான் செல்வதை தடுத்து நிறுத்தி என்னை அவமதித்து விட்டாய். எனது வலிமை தெரியாமல் இருக்கிறாய். இந்த மலையை தூக்கி எனது வலிமையை காண்பிக்கிறேன் அப்போது எனது பலத்தை நீ தெரிந்து கொண்டு என் முன் மண்டியிடுவாய் என்ற தசக்ரீவன் மலையை தன் கைகளால் தூக்க முயன்றான். மலை அசைந்து ஆடியது. தேவ கணங்கள் நடுங்கினர். பார்வதியும் சிவனை அணைத்துக் கொண்டாள். அப்பொழுது சிவன் தன் கால் கட்டை விரலால் மலையை லேசாக அழுத்தினார். மலையின் அடியில் அகப்பட்டுக் கொண்ட தசக்ரீவனது கைகள் நசுங்கியது. தசக்ரீவனின் மந்திரிகள் செய்வதறியாமல் விழித்தார்கள். தன்னுடன் வந்தவர்கள் ஒன்றும் செய்யாமல் நிற்பதால் கோபமும் கைகள் நசுங்குவதால் ஏற்பட்ட உடல் வலியும் சேர தசக்ரீவன் மூவுலகும் நடுங்கும்படி உரத்த குரலில் அலறினான். தசக்ரீவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு பிரளய காலம் வந்து விட்டதோ என்று பலர் பயந்து நடுங்கினார்கள். தசக்ரீவனின் பரிதாபமான கதறலை கண்ட மந்திரிகள் சிவனை துதித்து பாடுங்கள். அவரைத் தவிர உங்களை காப்பாற்ற வேறு யாரலும் முடியாது வேறு வழி இல்லை. அவரை தோத்திரம் செய்து வணங்கி உங்கள் பிரார்த்தனையால் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள். சிவபெருமான் கருணையே வடிவானவர். உன் பிரார்த்தனையை கேட்டு நிச்சயம் அருள் புரிவார் என்று யோசனை சொன்னார்கள். இதற்கு சம்மதித்த தசகரீவன் சாமகானத்தில் பாடல்கள் பாடி சிவபெருமானை வணங்கி பிரார்த்தனை செய்து வழிபட்டான்.

சிவபெருமான் தசக்ரீவனின் சாமகானத்தில் மகிழ்ந்து அவனை விடுவித்தார். கைலாய மலையை தூக்கும் உனது பலத்தையும் தன்னம்பிக்கையும் பாராட்டுகின்றேன். உனது சாமகானத்தால் நான் மிகவும் மகிழ்ந்தேன். மலையின் அடியில் இருந்து நீ போட்ட கூக்குரலால் பிரளய காலம் வந்து விட்டதோ என்று பயப்படும் அளவிற்கு மூவுலகமும் நடுங்கியது. இதனால் இன்று முதல் நீ ராவணன் என்று அழைக்கப்படுவாய் என்று வாழ்த்தினார். (ராவண என்றால் உலகை நடுங்கச் செய்தவன் என்று பொருள்) மூன்று உலகங்களிலும் நீ எங்கு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று உனக்கு அனுமதி தருகிறேன் என்றார். அதற்கு ராவணன் நான் பாடிய சாம கானத்தில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தது உண்மையானால் எனக்கு ஒரு வரம் தாருங்கள். பிரம்மா எனக்கு தீர்காயுளையும் யட்சர்கள் கந்தர்கள் தேவர்களால் எனக்கு மரணம் இல்லையென்று வரம் அளித்திருக்கிறார். உங்கள் கையால் எனக்கு ஒரு அஸ்திர ஆயுதம் தாருங்கள் என்று சிவனிடம் கேட்டுக் கொண்டான். ராவணன் கேட்டதும் சிவபெருமான் சந்திர ஹாஸம் என்ற வாளைக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட ராவணனிடம் ஒரு எச்சரிக்கையும் செய்தார். இந்த ஆயுதத்தை அலட்சியமாக எண்ணாதே. நீ சற்று மதிப்பு குறைவாக நடந்து கொண்டாலும் இந்த ஆயுதம் என்னிடம் திரும்பி வந்து விடும் என்றார். சிவபெருமானை வணங்கி விடை பெற்றுக் கொண்டு புஷ்பகத்தில் ஏறிய ராவணன் இந்த பூமி முழுவதும் சுற்றினான். ஆங்காங்கு தென்பட்ட சத்திரிய அரசர்களை தனது பரிவாரங்களோடு சென்று துன்புறுத்திய வண்ணம் பலரை அழித்தான். ராவணன் வருகிறான் என்று தெரிந்ததும் பலர் பயந்து ஓடினார்கள். சிலர் இவனுடைய கர்வத்தையும் அட்டகாசத்தையும் தெரிந்து கொண்டு இவனைக் காணும் முன்னே தோற்றோம் என்று ஒப்புக் கொண்டு மண்டியிட்டு சரணடைந்தார்கள்.

சிவபெருமானிடம் வரம் பெற்றதும் உலகை சுற்றி வந்து அனைவரையும் வெற்றி பெற்ற ராவணன் ஒரு முறை இமய மலைச் சாரலுக்கு வந்தான். அங்கு மான் தோல் உடுத்தி ஜடை தரித்து தவம் செய்யும் ஒரு பெண்ணைக் கண்டான். இயல்பாகவே அழகான அந்த பெண் தன் தவத்தாலும் நியமங்களாலும் தேஜசுடன் பிரகாசமாக விளங்கினாள். அவளிடம் சென்று பேச ஆரம்பித்தான் ராவணன். அரசர்களையும் மோகத்தில் வீழ்த்தக் கூடிய அழகு உன்னுடையது. உன் அழகுக்கும் இளமைக்கும் சற்றும் பொருத்தமில்லாத தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாய். உன் அழகிற்கும் இள வயதிற்கும் தவம் செய்யும் செயல் ஏற்றது அல்ல. ஏன் உன்னை வருத்திக் கொண்டு தவம் செய்கிறாய். யார் நீ உன்னுடைய பூர்வீகம் என்ன என்று கேட்டான். விருந்தினருக்கு உரிய மரியாதை செய்த பின் அந்த பெண் பேச ஆரம்பித்தாள்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -16

குபேரனுக்கும் தசக்ரீவனுக்கும் யுத்தம் கடுமையாக நடந்தது. தசக்ரீவன் தன் மாயத்தை காண்பித்து மறைந்து நின்று பல விதமான ரூபங்களை எடுத்து யுத்தம் செய்து குபேரனை அலைக்கழித்து இறுதியில் தனது பெரிய கதையால் ஓங்கி அடித்தான். குபேரன் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மரம் போல தரையில் விழுந்தான். குபேரனின் படைகள் அவனை நந்தன வனத்துக்கு கொண்டு சென்று குபேரனை மயக்கத்தில் இருந்து தெளிவித்தார்கள். தசக்ரீவன் குபேரனை வெற்றி பெற்று விட்டோம் என்று மகிழ்ந்தான். தன்னுடைய வெற்றியைக் கொண்டாட குபேரனுடைய புஷ்பக விமானத்தை அபகரித்து எடுத்துக் கொண்டான். அதன் தூண்கள் தங்கத்தில் இருந்தது. தோரணங்களில் வைடூரியம் இழைத்து கட்டப்பட்டு இருந்தது. முத்துக்களால் வலைகள் பின்னப்பட்ட ஜன்னல்கள் இருந்தது. மனோ வேகத்தில் செல்லக் கூடியது. நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்திற்கு கொண்டு செல்லும் வல்லமை உடையது. ஆகாயத்தில் பறக்கும் அது விரும்பிய ரூபத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதியுடன் இருந்தது. அதன் படிகள் மணிகள் இழைத்து பொன்னால் செய்யப்பட்டிருந்தன. மூன்று உலகையும் வெற்றி கொண்ட இறுமாப்புடன் குபேரன் இருந்த கைலாச மலையின் ஒரு பகுதியை தன் ஆற்றலால் வெற்றி பெற்றதாக மகிழ்ந்து கொண்டாடினான்.

குபேரனை வெற்றி பெற்ற தசக்ரீவன் அங்கிருந்து புஷ்பக விமானத்தில் கையிலை மலைக்கு மேலே செல்ல முயற்சித்தான். அங்கிருந்த மலை தங்கம் போல் ஜொலித்தது அழகிய வனங்களைக் கொண்ட அந்த மலையில் ஏறும் பொழுது புஷ்பக விமானம் நின்று விட்டது. ஏன் நின்று விட்டது என்று மந்திரிகளுடன் கலந்தாலோசித்தான். ஏன் நான் நினத்தபடி செல்லவில்லை இந்த மலையில் யாரவது என்னை தடுக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். அப்போது மாரீசன் பதில் சொன்னான். காரணம் இல்லாமல் இந்த புஷ்பகம் நிற்கவில்லை இது குபேரனைத் தவிர மற்றவர்களுக்கு வாகனமாகப் பயன்படாது என்ற விதி முறை ஏதாவது இருக்கலாம் என்று நினைக்கிறேன் என்றான். அப்போது சிவபெருமானுடைய வாகனமான நந்தி பகவான் கருப்பும் மஞ்சளும் ஆன நிறமும் புஜ பலத்துடன் கூடிய உருவத்துடன் வித்தியாசமான தலையுடனும் வித்தியாசமான உருவமாக தசக்ரீவன் அருகில் வந்து பேச ஆரம்பித்தார்.

சிவனுடைய கிங்கரன் நான். எனது பெயர் நந்திகேஸ்வரன். தசக்ரீவா திரும்பி போ. இந்த இடம் சிவனின் இருப்பிடம். இந்த இடத்தை யாராலும் நெருங்கி வர முடியாது. சிவனைக் காணும் பாக்கியம் பெற்ற தகுதியானவர்கள் மட்டுமே இங்கு நுழைய முடியும் என்பது நடைமுறை விதி. துர்புத்தியிடன் இருக்கும் நீ திரும்பி போ இல்லையெனில் நாசமடைவாய் என்று எச்சரிக்கை செய்தார். இதைக் கேட்ட தசக்ரீவன் நந்திபகவானின் உருவத்தை அலட்சியமாக பார்த்து இடி இடிப்பது போல சிரித்து அவரது உருவத்தைப் பார்த்து ஏளானம் செய்து சிரித்தான். இதனால் கோபம் கொண்ட நந்திபகவான் கடுமையான குரலில் தசக்ரீவா எனது உருவத்தைப் பார்த்து ஏளானம் செய்து சிரித்து விட்டாய். இப்பொழுதே நான் உன்னை வதம் செய்து அழித்து விடுவேன் அது என்னால் முடியும். பிரம்மா உனக்கு அளித்த வரத்திற்கு மரியாதை செய்யும் விதமாக உன்னை நான் விடுகிறேன். இரண்டாவதாக உனது தீய செயல்களால் நீ ஏற்கனவே அழிந்து விட்டாய் இப்போது இருப்பது வெறும் சதைப்பிண்டம் மட்டுமே. வெறும் சதைப்பிண்டத்தை கொல்வதால் பயன் ஒன்றும் இல்லை. நீ என்னை ஏளானம் செய்ததின் விளைவாக எனது பலமும் வீர்யமும் தேஜசும் உள்ள வானரங்கள் உனது குலத்தை நாசம் செய்ய வருவார்கள். நகமும் பற்களுமே ஆயுதங்களாகவும் மனோ வேகத்தில் செயல் படுபவர்களாகவும் வெறி கொண்டு யுத்தம் செய்பவர்களாகவும் பெரிய மலை போன்ற உருவத்துடன் வருவார்கள். அவர்கள் உன் கர்வம் அகங்காரம் இவற்றை அடக்கி விடுவார்கள். உன்னை சார்ந்திருக்கும் மந்திரிகள் புத்திரர்கள் உற்றார் உறவினரோடு நாசம் அடைவாய் என்றார். நந்தி பகவான் இப்படிச் சொன்னதும் தேவர்கள் நந்திபகவானின் மீது மலர்களை தூவினார்கள். தேவ துந்துபிகள் முழங்கின.

மாணிக்கவாசகர்

சிவ பக்தையான மண்டோதரி சிவபிரானை குழந்தை வடிவில் தரிசிக்க விரும்பி அதற்காக கடும் தவம் புரிந்தாள். அதேசமயம் உக்கிரகோசமங்கை எனும் திருத்தலத்தில் ஆயிரம் முனிவர்கள் ஒன்று கூடி சிவபிரானை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குக் காட்சியளித்த சிவன் தன் கையிலிருந்த சிவ ஆகமங்களை அவர்களிடம் தந்தார். ராவணனின் மனைவியான மண்டோதரிக்கு தான் குழந்தை வடிவில் காட்சியளிக்கச் செல்வதாகவும் திரும்பி வரும் வரை ஆகமங்களைப் பாதுகாக்கும் படியும் கூறினார். அதோடு குழந்தை வடிவில் செல்லும் தன்னை ராவணன் தொடும் சமயத்தில் அங்கிருந்து மறைந்து ஜோதி வடிவாக இக்கோயில் குளத்தினில் தோன்றி மீண்டும் ஒரு முறை காட்சியருள்வதாகக் கூறி மறைந்தார். அழகே உருவான குழந்தை வடிவில் மண்டோதரிக்குக் காட்சியளித்தார் சிவன். குழந்தை வடிவில் வந்தவர் யார் என உணர்ந்து கொண்ட மண்டோதரி தன் தவம் நிறைவேறியதால் மகிழ்ந்தாள். குழந்தையாய் இருந்த சிவனை வாரியணைத்து எடுத்து சீராட்டினாள். அப்போது அங்கு வந்த ராவணன் அக்குழந்தையின் அழகால் கவரப்பட்டான். அவன் மனதில் எல்லையில்லா ஆனந்தம் ஏற்பட்டது. யாருடைய குழந்தை இது என்று மண்டோதரியிடம் ராவணன் கேட்டான். அதற்கு மண்டோதரி நடந்தவற்றை கூறினாள். சிவனின் பக்தனான ராவணன் மகிழ்வோடு அந்த குழந்தையை தூக்க முயற்சிக்கும் போது சிவன் அங்கிருந்து மறைந்து உத்தர கோச மங்கை தலத்தின் திருக்குளத்தில் அக்னிப் பிழம்பாய் தோன்றினார். அவரைக் கண்ட அங்கிருந்த முனிவர்கள் பரவசமடைந்து ஜோதியில் பாய்ந்து நீரில் மூழ்கினர். ஒரே ஒரு முனிவர் மட்டும் இறைவன் கொடுத்த ஆகமங்களைக் காப்பதே தன் கடமை என சிவனின் கட்டளைக்கு பணிந்து அங்கேயே ஆகமங்களை காத்து நின்றார். அவருக்கு சிவன் தன் உமையவளுடன் விடைமேலமர்ந்து காட்சியருளினார். மூழ்கிய முனிவர்கள் ஒவ்வொருவரும் லிங்க வடிவில் இறைவனோடு ஒன்ற இறைவன் நடுவில் வீற்று சகஸ்ரலிங்கமாக அமர்ந்தார்.

எஞ்சியிருந்த முனிவர் தன் உயிரினும் பெரிதாய் சிவாகமங்களைக் காத்ததால் அவரை பாண்டிய நாட்டில் மீண்டும் பிறந்து சைவமும் தமிழும் தழைத்தோங்க தொண்டு செய்யுமாறு அருளி மறைந்தார் எம்பெருமான். அந்த எஞ்சிய தொண்டரே மாணிக்கவாசகராய் அவதரித்தார். மகேசனின் புகழ்பாடி மண் சிறக்க வகை செய்தார். மாணிக்கவாசகப் பெருமானின் அவதாரத்திற்கு மண்டோதரியின் பக்தியும் ஒரு காரணமாயிற்று.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -15

குபேரனின் தூதுவன் சொன்னதைக் கேட்ட ராவணனின் கோபம் கட்டுக் கடங்காமல் போனது. அதனால் தூதுவனின் அமர்ந்திருந்த ஆசனத்தில் தனது காலை வைத்து அவனை அவமரியாதை செய்தான் தசக்ரீவன். தூதுவனே நீ சொல்வது எனக்கு நன்மை தருவதாக இல்லை. நீ சொல்வதை என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இது வரை குபேரன் எனக்கு மூத்தவன் என்பதால் அவனை எதுவும் செய்யாமல் விட்டு வைத்தேன். இப்பொழுது எனக்கு உபதேசம் சொல்லி அனுப்பும் அளவிற்கு வந்துவிட்டான். இனி அவனை விட்டு வைக்க மாட்டேன். எனது பலத்தால் மூவுலகையும் வெற்றி பெறுவேன். எதிர்ப்பவர்களை யம லோகம் அனுப்புவேன் என்று சொல்லிக் கொண்டே தனது வாளால் தூதுவனின் தலையை வெட்டிய தசக்ரீவன் அவனது உடலையும் தலையையும் ராட்சசர்களுக்கு உணவாக கொடுத்தான். தசக்ரீவனின் இச்செயலைக் கண்டதும் அரசவையில் இருந்தவர்கள் தசக்ரீவனை வாழ்த்தி புகழ்ந்து பேசினார்கள். இதனால் தற்பெருமை கொண்ட தசக்ரீவன் மூன்று உலகையும் வெற்றி கொள்ள முடிவெடுத்தான்.

குபேரனை முதலில் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணிய தசக்ரீவன் மகோதரன் பிரஹஸ்தன் மாரீசன் சுகன் சாரணன் தூம்ராக்ஷன் என்ற ஆறு மந்திரிகளுடன் முதலில் குபேரனின் இருக்கும் கையிலை நோக்கிப் புறப்பட்டான். தங்கள் பலத்தில் எல்லையில்லா கர்வம் உடைய இவர்கள் யுத்தம் செய்ய ஆவலுடன் கைலாச மலையை சென்றடைந்தார்கள். இவர்களை காவலர்களால் தடுக்க முடியவில்லை. காவலர்கள் குபேரனிடம் சென்று முறையிட்டனர். தசக்ரீவன் யுத்தம் செய்ய வந்திருக்கிறான் என்பதை தெரிந்து கொண்ட குபேரன் யுத்தம் செய்ய தனது படைகளுக்கு அனுமதி கொடுத்தான். கோரமான பெரும் யுத்தம் தொடர்ந்து நடந்தது. ராட்சசர்கள் தொடர்ந்து நடந்த யுத்தத்தினால் களைத்து விட்டனர். தசக்ரீவன் குபேரனின் படைகளை எதிர்த்து நிற்க முடியாமல் திணறினான். மூச்சு முட்டுவது போல உணர்ந்தான். மழை பொழிவது போல அம்புகள் அவனை தடுத்தன. அம்புகள் பட்டதினால் ஏற்பட்ட காயம் அவனை வருத்தியது. இதனால் கோபமடைந்த தசக்ரீவன் தன் படைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதத்தில் கோசம் எழுப்பி கத்திக் கொண்டே ஓடி தனது கதையை சுழற்றி யுத்தம் செய்தான். இதனால் புத்துணர்ச்சி அடைந்த ராட்சச படைகள் குபேரனின் படைகளை கொன்று குவித்தார்கள். இறுதியில் ராட்சச படைகளின் முன் நிற்க முடியாமல் குபேரனின் படைகள் தோற்றார்கள். குபேரனின் படைகளில் இறந்தவர்கள் சொர்க்கம் செல்வதைக் கண்ட ரிஷிகள் ஆகாயத்தில் கூடி நின்று வாழ்த்தினார்கள். யுத்த களத்தில் நடந்தவற்றை குபேரனிடம் சென்ற படைவீரர்கள் கூறினார்கள்.

குபேரன் யுத்த களத்திற்கு வந்து தசக்ரீவனுடன் பேச ஆரம்பித்தான். துஷ்டனே நான் கூறிய அறிவுறையைக் கேட்காமல் எனது தூதுவனையும் கொன்று தவறு செய்து கொண்டே போகிறாய். நீ செய்த தவறுக்கான பலன் உனக்குத் தெரிய வரும் பொழுது நீ முற்றிலும் அழிந்திருப்பாய். தெரியாமல் விஷத்தை அருந்தி விட்டு தெரியாமல் செய்த தவறு தானே என்று கூறி விட்டால் விஷம் வேலை செய்யாமல் போய் விடுமா? தாய் தந்தையரையும் குருவையும் யார் அவமதிக்கிறானோ அதன் பலனை அவன் அனுபவித்தே ஆக வேண்டும். அவர்கள் யம லோகம் செல்லும் பொழுது இதனை அறிவார்கள். நிலையில்லாத இந்த சரீரத்தில் தவம் செய்து தன்னை செம்மை படுத்திக் கொள்ளாதவன் தனது முடிவு காலம் வரும் பொழுது மிகவும் சிரமப்படுவான். நீ உன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாய் என்ற குபேரன் தசக்ரீவனுடன் யுத்தம் செய்தான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -14

சக்தி என்ற அளவிட முடியாத பெருமை வாய்ந்த ஆயுதத்தை மயன் தசக்ரீவனுக்கு கொடுத்தான். இலங்கைக்கு மனைவியுடன் வந்த தசக்ரீவன் விரோசனனுடைய பேத்தியான வஜ்ர ஜ்வாலா என்ற பெண்ணை தன் சகோதரன் கும்பகர்ணனுக்கு திருமணம் செய்து வைத்தான். சைலூஷன் என்ற கந்தர்வனின் மகள் சரமா என்பவளை விபீஷணனுக்கு திருமணம் செய்து வைத்தான். திருமணம் செய்து கொண்ட மனைவியர்களுடன் ராட்சசர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். மந்தோதரி மேகனாதன் என்ற மகனைப் பெற்றாள். பிறந்த உடனே மேகம் இடி இடிப்பது போல உரத்த குரலில் குழந்தை அழுதது. அந்த ஓசையில் இலங்கை நகரமே ஸ்தம்பித்து விட்டது. அதனால் தசக்ரீவன் தன் மகனுக்கு மேகநாதன் என்று பெயரிட்டான். மேகநாதன் தாய் தந்தையருக்கு எல்லையில்லாத ஆனந்தத்தை தருபவனாக வளர்ந்தான்.

பிரம்மாவின் வரம் காரணமாக கும்பகர்ணனுக்கு அளவில்லாத தூக்கம் வர ஆரம்பித்தது. அரசனான தனது சகோதரனிடம் உறக்கம் என்னை வாட்டுகிறது. எனக்கு தகுந்தாற் போல் வீட்டைக் கட்டித் தா என்று கேட்டுக் கொண்டான் கும்பகர்ணன். தசக்ரீவனும் விஸ்வகர்மாவுக்கு இணையான சிற்பிகளை வைத்து கும்பகர்ணனின் உடல் பருமனுக்கு ஏற்றார் போல் அழகிய ஒரு மாளிகையை கட்ட உத்தரவிட்டான். ஒரு யோஜனை தூரம் நீளமும் இரண்டு மடங்கு அகலமுமாக மாளிகை உருவாகியது. கும்பகர்ணன் உறக்கத்தில் ஆழ்ந்தான். ஆறு மாதங்கள் தூங்கியும் ஆறு மாதங்கள் உணவு சாப்பிட்டும் சாப்பிட்ட களைப்பில் ஓய்வு எடுப்பதுமாக கும்பகர்ணனின் வாழ்க்கையில் பல வருடங்கள் கழிந்தது. கும்பகர்ணன் இவ்வாறு காலத்தை கழித்த பொழுது தசக்ரீவன் தேவர்கள் யட்சர்கள் கந்தர்வர்களை போரில் வென்றான். பூஜைகள் யாகங்கள் நடக்கும் இடங்கள் மற்றும் தேவலோகத்து நந்தவனம் போன்ற இடங்களை தசக்ரீவன் அழித்தான். தேவர்களின் இருப்பிடத்தை அழிப்பதையே காரியமாகக் கொண்ட தசக்ரீவனை திருத்த எண்ணிய குபேரன் ஒரு தூதுவனை அனுப்ப எண்ணினான். தசக்ரீவன் கேட்டதும் இலங்கையை திருப்பிக் கொடுத்ததை சுட்டிக் காட்டி அறிவுரை சொல்லி தூதுவன் ஒருவனை தசக்ரீவனிடம் அனுப்பினான் குபேரன். அந்த தூதன் முதலில் விபீஷணனிடம் சென்றான். அவனை நன்றாக உபசரித்த விபீஷணன் உறவினர்களின் நலம் விசாரித்த பின் தூதுவனை சபைக்கு அழைத்துச் சென்று தசக்ரீவனுக்கு அறிமுகப் படுத்தினான்.

குபேரனிடம் இருந்து வந்த தூதுவன் தான் கொண்டு வந்த செய்தியை கூறினான். உங்களுக்கும் உங்கள் சகோதரர் குபேரன் இருவருக்குமே சமமான குல மரியாதையும் செல்வங்களும் உள்ளது. உங்களுக்கு இலங்கையை கொடுத்து விட்ட குபேரன் கயிலையை தனது இருப்பிடமாகக் கொண்டு தவங்கள் பல செய்து வருகிறார். இதனால் சிவனின் அருளையும் பார்வதியின் அருளையும் பெற்றிருக்கிறார். உங்களால் பல முறை குபேரன் உதாசினப்படுத்தப் பட்டிருக்கிறார். ஆனாலும் தனது சகோதரனான நீங்கள் தர்மத்தை கடைபிடித்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் குபேரன் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார். அரசனான நீங்கள் தர்மத்தின் படி நடந்து கொள்வது நல்லது. தேவர்களின் நந்தன வனத்தை அழித்ததாகவும் ரிஷிகளையும் தேவர்களையும் வதைத்ததாகவும் கேள்விப்பட்டோம். பலரை அழித்து நாசமாக்கியதாகத் தெரிகிறது. உனது செயல்கள் நமது குலத்திற்கு தலை குனிவை ஏற்படுத்துகிறது. குலத்தின் பெருமையை கெடுக்கும் அதர்ம செயல்களை செய்து கொண்டிருக்கிறாய். நீங்கள் தேவகணங்களை அடித்தது போலவே அவர்களும் உங்களை வதம் செய்ய என்ன வழி என்று யோசித்து வருகிறார்கள். எனவே இனி மேல் இது போல் அதர்மமான செயல்களை செய்யாதே என்று தூதுவன் சொல்லி முடித்தான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -13

குபேரனிடம் விஸ்ரவஸ் பேச ஆரம்பித்தார். தசக்ரீவனுக்கு நானும் நிறைய அறிவுரை சொல்லியும் பயமுறுத்தியும் பார்த்து விட்டேன் பயனில்லை. பலசாலியாக துர்புத்தியுடன் யார் சொல்லையும் கேட்க மறுக்கிறான். அவனுக்கு கிடைத்துள்ள வரங்களைப் பற்றி உனக்குத் தெரியும். பிரம்மாவிடமிருந்து கிடைத்த வரங்களால் கர்வம் தலைக்கேற துர்புத்தி படைத்தவனாகி விட்டான். யாரை மதிக்க வேண்டும் யாரை வணங்க வேண்டும் என்ற சாதாரண எண்ணம் கூட இல்லாதவனாக இருக்கிறான். என்னிடம் சாபம் பெற்று பயங்கரமான உருவை அடைந்தும் அவன் கர்வம் குறையவில்லை. தசக்ரீவனுடன் விரோதத்தை வளர்த்துக் கொண்டு அவனுடன் மோதாதே. அது உனக்கு வீண் சிரமத்தைத் தான் கொடுக்கும். இலங்கையை காலி செய்து கொண்டு உன் பரிவாரங்களுடன் கைலாச மலைக்கு நீ சென்று விடு. அங்கு அழகிய மந்தாகினி நதி இருக்கிறது. நதிகளுள் சிறந்த நதி. சூரிய ஒளிக்கு இணையான பொன் நிற தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும் நீர் நிலைகளை உடையது. வாசனை மிகுந்த குமுத மலர்களும் உத்பல மலர்களும் நிறைந்தது. அங்கு தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மகிழ்வார்கள். மிகவும் சிறப்பான அந்த இடம் உனக்கு ஏற்றதாக இருக்கும் என்று குபேரனிடம் சொல்லி முடித்தார் விஸ்ரவஸ்.

குபேரன் தன் தந்தை விஸ்ரவஸ் சொன்னதைக் கேட்டதும் அவரின் வார்த்தைக்கு மரியாதை செய்யும் பொருட்டு தனது பரிவாரங்களுடன் இலங்கையை காலி செய்து கொண்டு கைலாச மலைக்கு சென்றான். இந்திரனின் அமராவதியைப் போல் குபேரன் தன் நகரையும் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்தான். இலங்கை நகரம் இப்போது சூன்யமாக இருந்தது. இலங்கை நகரை குபேரன் காலி செய்து விட்டான் என்பதை அறிந்த பிரஹஸ்தன் தசக்ரீவனிடம் நடந்தவைகள் அனைத்தையும் விவரமாக சொன்னான். குபேரன் இலங்கை நகரை காலி செய்து விட்டான். நீ உன் மந்திரிகள் சகோதரர்களுடன் இலங்கையை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்து வரலாம். எந்த வித தடையுமில்லை என்றான். தசக்ரீவனுக்கு இலங்கை நகரம் எந்த வித எதிர்ப்புமின்றி கிடைத்து விட்டது. தசக்ரீவனுக்கு அவனது சகோதரர்களும் சுமாலியின் மந்திரிகளும் சேர்ந்து இலங்கையின் அரசனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள். அரசனானதும் தசக்ரீவன் தன் சகோதரி சூர்ப்பனகைக்கு திருமணம் செய்து வைக்க தீர்மானித்தான். காலக குலத்தில் வந்த வித்யுத்ஜிஹ்வன் என்பவனுக்கு சூர்ப்பனகையை திருமணம் செய்து கொடுத்தான். இலங்கையில் ஒரு காட்டுப் பாதையில் தசக்ரீவன் சென்று கொண்டிருந்த போது ஒரு பெண்ணுடன் ஒருவர் இருப்பதைப் பார்த்தான். அவரின் அருகில் சென்ற தசக்ரீவன் யார் என்று விசாரித்தான்.

கஸ்யபர் முனிவருக்கும் திதி என்பவளுக்கும் பிறந்த ராட்சசர்களில் நானும் ஒருவன். எனது பெயர் மயன். தேவலோக சிற்பி விஸ்வகர்மாவைக் போல் நானும் ஒரு சிற்பி. நான் ஹேமா என்ற தேவலோக பெண்ணை மணந்து பத்தாயிர வருடம் அவளுடன் இனிமையாக காலம் கழித்தேன். ஏதோ தேவ காரியம் என்று தேவலோகம் சென்றாள். பதினான்கு வருடம் சென்று விட்டது இன்னும் வரவில்லை. அவளுக்காக தங்க மயமாக ஊரை அலங்கரித்து வைத்திருக்கிறேன். எனக்கு இரண்டு மகன்களும் உண்டு. ஒருவன் மாயாவி மற்றோருவன் பெயர் துந்துபி. மனைவியின் பிரிவால் தனிமையில் தவித்த நான் மன ஆறுதலுக்காக மகளையும் அழைத்துக் கொண்டு இந்த வனம் வந்தேன். இவள் எனது மகள் இவளது பெயர் மந்தோதரி. என் கதையை சொல்லி விட்டேன். நீங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா என்று மயன் கேட்டார். அதற்கு தசக்ரீவன் நான் புலஸ்தியனுடைய பேரன் விஸ்வரஸின் மகன் எனது பெயர் தசக்ரீவன் என்றான். இதனைக் கேட்ட மயன் இவளுக்கு சரியான வரன் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். மகரிஷி புத்திரன் என்பதால் நீ இவளுக்கு சரியான கணவனாக இருப்பாய் என்று எண்ணுகிறேன். இவளை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டார். தசக்ரீவனும் சம்மதிக்க அந்த இடத்திலேயே மயன் அக்னியை மூட்டி மந்தோதரியை தசக்ரீவனுக்கு திருமணம் செய்து வைத்தான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -12

பிரம்மாவிடம் வரங்கள் பெற்று யாராலும் வெற்றி பெற முடியாத பலசாலியாய் வலிமையுடன் இப்போது இருக்கிறாய். பலசாலிகளாக இருப்பவர்கள் உடன் பிறந்தவர்கள் என்று பார்ப்பது சரியில்லை. நான் சொல்வதை முழுவதுமாகக் கேள். திதி அதிதி என்ற சகோதரிகள் இருவரும் கஸ்யபர் என்பவரின் மனைவிகளாக இருந்தார்கள். அதிதி தேவர்களைப் பெற்றாள். திதி ராட்சசர்களை பிள்ளைகளைப் பெற்றாள். திதியின் மகன்களான ராட்சசர்கள் தேவர்களை கட்டுப்படுத்தி உலகம் முழுவதையும் ஆட்சி செய்தார்கள். இவர்கள் மிகுந்த ஆற்றலுடனும் சக்தியுடனும் இந்த பூமியில் வசித்து வந்தனர். அப்போது விஷ்ணு தேவர்களுடன் சேர்ந்து இவர்களைப் போரில் தோற்கடித்து இந்த தேசம் முழுவதையும் தேவர்கள் வசமாக்கினார். இரு பக்கத்தில் இருப்பவர்களும் சகோதரர்களே ஆனாலும் ராட்சசர்கள் தேவர்களை சகோதரர்கள் என்றும் பார்க்காமல் யுத்தம் செய்து வெற்றி பெற்று இந்த உலகத்தை ஆட்சி செய்தார்கள். பின்பு தேவர்களும் ராட்சர்ககளை சகோரர்கள் என்று பார்க்காமல் யுத்தம் செய்து வெற்றி பெற்று இந்த உலகத்தை ஆட்சி செய்தார்கள். பலசாலிகளாக இருப்பவர்கள் உடன் பிறந்தவர்கள் என்று பார்ப்பதில்லை. இந்த உலகம் முழுவதும் நீ ஆட்சி செய்யும் வலிமை உன்னிடம் உள்ளது. நான் சொல்வதைக் கேள். குபேரனே சகோதரன் என்று பார்க்காதே. நீ உலகத்தை ஆட்சி செய்ய விரும்புகிறேன் என்று குபேரனிடம் சொன்னால் நீ சகோதரன் தானே என்று உனக்கு விட்டுக் கொடுத்து விட மாட்டான். சகோதரன் என்றும் பார்க்காமல் உன் மீது யுத்தம் செய்யவே வருவான். அது போல் நீயும் குபேரனை சகோதரன் என்று பார்க்காதே. ஏதேனும் ஒரு வகையில் குபேரனை சமாதானப் படுத்தியோ அல்லது யுத்தம் செய்து வெற்றி பெற்றோ நீ இந்த உலகத்தை ஆளலாம் என்றான்.

பிரம்மா கொடுத்த வரத்தினால் வலிமையுள்ளவனாக இருக்கிறோம். ஆகையால் உலகத்தை ஆட்சி செய்யும் தகுதி தன்னிடம் உள்ளது என்ற எண்ணம் ராவணனின் மனதில் அதிகமானது. பிரஹஸ்தன் கூறிய யோசனையை ராவணன் ஏற்றுக் கொண்டான். பிரஹஸ்தன் அழகாக பேசக் கூடியவன். தேவையான காரியத்தை சரியாக முடித்துக் கொண்டு வரக் கூடியவன் என்ற நம்பிக்கை ராவணனுக்கு இருந்தது. முதலில் சமாதானமாக பேசுவதற்காக சில ராட்சசர்களுடன் பிரஹஸ்தனை தூதனாக குபேரனிடம் அனுப்பி வைத்தான் ராவணன். பிரஹஸ்தன் ராவணனின் சார்பாக குபேரனிடம் பேச ஆரம்பித்தான். உனது சகோதரனான தசக்ரீவன் என்னை தூதுவனாக உன்னிடம் அனுப்பி இருக்கிறான். இலங்கை ராட்சசர்கள் வசிப்பதற்காக கட்டப்பட்டது. சில காலம் சூழ்நிலை காரணமாக ராட்சசர்கள் பாதாள லோகத்திற்கு சென்று விட்டார்கள். அதனால் இலங்கையில் இத்தனை ஆண்டு காலம் நீ இருந்தாய். இதனை தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் இப்பொழுது ராட்சசர்கள் இழந்த வலிமையை பிரம்மாவின் வரத்தினால் திரும்பப்பெற்று மீண்டும் வந்து விட்டார்கள். எனவே ராட்சசர்களுக்கு சொந்தமான இலங்கையை அவர்களுக்கு தானாகவே குபேரன் திருப்பித் தர வேண்டும். அப்படித் தந்தால் ராட்சசர்களுக்கு திருப்தியாக இருக்கும். எனவே தர்மத்தை எண்ணி எங்களிடம் ஒப்படைத்து விடு என்று கேட்டுக் கொண்டான்

குபேரன் பிரஹஸ்தனிடம் பேச ஆரம்பித்தான். இந்த நகரம் யாரும் இல்லாத சூன்யமாக எனக்குத் தரப்பட்டது. இந்த நகரை செம்மைப்படுத்தி யட்சர்களையும் தானவர்களையும் குடியேற்றி வைத்திருக்கிறேன். தசக்ரீவனிடம் போய் சொல்லுங்கள். என்னுடைய ராஜ்யமும் நகரமும் எனக்கு உள்ளதைப் போலவே தசக்ரீவனுக்கும் உரிமை உள்ளது. எந்த வித இடையூறும் இன்றி ராஜ்யத்தை பிரிக்காமல் முழுவதுமாக சேர்ந்தே அனுபவிக்கலாம். அனைவருடன் இங்கு வந்து அனுபவித்து மகிழ்ச்சியுடன் இருக்கச் சொல்லுங்கள் என்று சொல்லி பிரஹஸ்தனை அனுப்பி விட்டான். பிறகு குபேரன் தன் தந்தையான விஸ்ரவஸிடம் சென்று ராவணன் பிரஹஸ்தன் மூலம் சொல்லி அனுப்பிய செய்தியைச் சொல்லி நான் செய்ய வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள் அதன்படி நடந்து கொள்கிறேன் என்றான்.