ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 23

ராமர் துயரத்துடன் இருப்பதை பார்த்த விபீஷணன் அவருக்கு ஆறுதல் சொல்ல தனது ராட்சச சுயரூபத்தில் அங்கு வந்தான். இதனை கண்ட வானர படைகள் இந்திரஜித் மீண்டும் திரும்பி வந்து விட்டான் என்று எண்ணி சிதறி ஓட ஆரம்பித்தார்கள். இதனை கண்ட சுக்ரீவன் ஏன் வானர வீரர்கள் சிதறி ஒடுகின்றார்கள் என்று குழப்பமடைந்து அங்கதனை பார்த்து கேட்டான். அங்கதனும் புரியாமல் விழித்தான். அவர்களின் அருகில் விபிஷணன் வந்ததை பார்த்ததும் அவர்களுக்கு புரிந்தது. விபீஷணனின் பெரிய ராட்சச உருவத்தை பார்த்து இந்திரஜித் வந்து விட்டான் என்று ஓடுகின்றனர் என்பதே உணர்ந்த சுக்ரீவன் ஜாம்பவான் மூலமாக வானர வீரர்களிடம் வந்திருப்பது விபீஷணன் என்று புரிய வைத்து அனைவரையும் அமைதிப் படுத்தினான். விபீஷணன் ராம லட்சுமணர்களின் மீது நாக பாணம் பாய்ந்து கிடப்பதை பார்த்து காரியம் அனைத்தும் கெட்டு விட்டது இனி என்ன செய்வது என்று கண்ணீர் வடித்தான். இதனை கண்ட சுக்ரீவன் விபீஷணனுக்கு ஆறுதல் கூறினான். தனது உறவினன் சுஷேணனே அழைத்து ராம லட்சுமணர்களை கிஷ்கிந்தைக்கு அழைத்துச் செல்லுங்கள். நான் அந்த ராவணனே அழித்துவிட்டு சீதையை அழைத்து வருகிறேன் என்றான் சூக்ரீவன். அதற்கு சுஷேணன் ராம லட்சுமணர்களின் காயத்திற்கு மூலிகை மருந்துகள் இருக்கிறது. மூலிகைகள் இருக்கும் இடம் நம்மில் பலருக்கு தெரியும். அனுமனிடம் சொன்னால் மூலிகையை உடனே கொண்டு வந்து விடுவார். அதனை வைத்து விரைவில் ராம லட்சுமணர்களே குணப்படுத்தி விடலாம் என்றான். அப்போது காற்றின் சத்தம் அதிகமானது சத்தத்திற்கு நடுவே மிகப்பெரிய கருடன் ஒன்று பறந்து வந்தது.

ராமர் லட்சுமணர்களின் அருகே வந்த கருடன் இருவரையும் தடவிக் கொடுத்தது. உடனே இருவரின் மீதிருந்த அம்புகள் அனைத்தும் மறைந்தது. கருடன் இருவரின் உடலில் இருந்த காயங்கள் மீது தடவிக் கொடுத்தான். இருவரின் மேலிருந்த காயங்கள் அனைத்தும் மறைந்து மிகவும் பலத்துடனும் பொலிவுடனும் எழுந்து அமர்ந்தார்கள். ராமர் லட்சுமணன் எழுந்ததை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவனை அணைத்துக் கொண்டார். வானர வீரர்கள் அனைவரும் ராம லட்சுமணர்கள் எழுந்ததை பார்த்து மகிழ்ந்து ராம லட்சுமணர்கள் வாழ்க என்று கோசமிட்டார்கள். ராமர் முன்னை விடவும் உற்சாகமாய் இருப்பதை உணர்ந்து மிகவும் ஆச்சரியமடைந்தார். கருடனை பார்த்து தாங்கள் யார் என்று கேட்டார் அதற்கு கருடன் நான் உனக்கு நண்பன். இந்திரஜித் தன்னுடைய மாயத்தினால் பாம்புகளை அம்புகளாக்கி உங்கள் மீது எய்தான். பாம்புகளின் விஷத்தன்மையால் இருவரும் கட்டப்பட்டு இருந்தீர்கள். உங்கள் தவ சக்தியின் மிகுதியால் உங்களால் கண் விழிக்க முடிந்தது. பாம்புகளின் சத்ருவான கருடனான என்னை கண்டதும் பாம்புகள் ஓடிவிட்டது. நீ தொடர்ந்து யுத்தம் செய்யலாம் உனக்கு வெற்றி உண்டாகும். நான் யார் என்பதை நேரம் வரும் போது சொல்கிறேன். இப்போது யுத்தத்தில் உங்களுடைய கவனத்தை செலுத்துங்கள் நான் வருகிறேன் என்று கருடன் அங்கிருந்து சென்றது.

ராம லட்சுமணர்கள் மீண்டும் தங்களின் முழுமையான பலத்துடன் யுத்தம் செய்ய வருகின்றார்கள் என்று தெரிந்ததும் வானர படைகள் தங்கள் பயத்தை விட்டு உற்சாகத்துடன் யுத்தம் செய்ய ஆயத்தமானார்கள். ஆராவாரத்துடன் சென்ற வானர படைகள் ராவணனின் கோட்டையை தாக்க ஆரம்பித்தார்கள். கோட்டைக்கு வெளியே வானரர்களின் ஆரவாரத்தை கேட்ட ராவணன் ஆச்சரியப்பட்டான். அருகில் இருந்தவர்களிடம் ஏன் இந்த வானர படைகள் உற்சாகத்துடன் நம்மை நெருங்கி வருகின்றார்கள். ராம லட்சுமணர்கள் நாக பாணத்தால் மயங்கிக் கிடக்கிறார்கள் விரைவில் இறந்து விடுவார்கள். இதனை நினைத்து கவலைப்பட வேண்டியவர்கள் மகிழ்ச்சியுடன் யுத்தத்திற்கு வருகின்றார்கள். இதற்கு ஏதேனும் காரணம் இருக்கும் அது என்ன என்று தெரிந்து கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 22

ராம லட்சுமணர்கள் இந்திரஜித்தால் அழிக்கப்பட்டார்கள் என்ற செய்தியை இலங்கை முழுவதும் பரப்ப ராவணன் உத்தரவிட்டான். ஒரு ராட்சசியை அழைத்து ராமர் லட்சுமணர் இருவரும் அவர்களுடைய வானர சேனைகளும் யுத்த பூமியில் இறந்து கிடக்கிறார்கள் என்ற செய்தியை சீதையிடம் போய் சொல்லுங்கள். அவளை எனது பறக்கும் புஷ்பக விமானத்தில் அழைத்துச் சென்று ராமர் லட்சுமணர்கள் இறந்து கிடப்பதை காண்பியுங்கள். இனி ராவணனைத் தவிர வேறு வேறு யாரும் சீதைக்கு ஆதரவு இல்லை என்று அவளுக்கு புரிய வையுங்கள் என்று சொல்லி அனுப்பினான். ராட்சசிகளும் ராவணன் கட்டளை இட்டபடி சீதையை ராமர் இருக்கும் இடத்திற்கு புஷ்பக விமானத்தில் அழைத்துச் சென்றார்கள். தரையில் அசைவற்று இருக்கும் ராமர் லட்சுமணனை பார்த்த சீதை ஒரு கணம் திடுக்கிட்டாள். ராவணன் மாயத்தின் மூலமாக வஞ்சகமாக நம்மை ஏமாற்ற பார்க்கிறானா என்ற சந்தேகம் சீதைக்கு எழுந்தது. ராமர் அருகில் அவருடைய வில்லும் அம்பும் இருப்பதை பார்த்த சீதை காண்பது உண்மை தான் என்று நம்ப ஆரம்பித்தாள். பிற்காலத்தை பற்றி அறிந்து கொள்பவர்கள் தன்னுடைய வருங்காலத்தை பற்றி சொல்லியது அனைத்தும் பொய்யா? கணவர் இறந்து போவார் சிறு வயதில் விதவையாவாய் என்று யாரும் சொல்லவில்லையே. நீண்ட காலம் மகாராணியாய் வாழ்வாய் என்றும் உனக்கு குழந்தைகள் பிறக்கும் என்று அவர்கள் சொல்லியது அனைத்தும் பொய்யாகப் போனதே. உங்களது அஸ்திர வித்தைகள் எல்லாம் எங்கே போனது. உங்களை யாரும் வெல்ல முடியாது என்றார்களே அதுவும் பொய்யாகிப் போனதே. இனி நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை. இப்போதே எனது உயிரை விட்டு விடப்போகிறேன் என்று சீதை கண்ணீருடன் அழுது புழம்பினாள். அருகில் இருந்த திரிசடை என்ற ராட்சசி சீதையிடம் பேச ஆரம்பித்தாள்.

ராமர் லட்சுமணன் முகத்தை நன்றாக பாருங்கள் அவர்கள் இறக்கவில்லை. அவர்களின் முகத்தில் தெய்வீக பொலிவு அப்படியே இருக்கிறது. இறந்திருந்தால் அவர்களின் முகம் வேறு மாதிரி இருக்கும். அவர்கள் மாய அஸ்திரத்தின் வலிமையால் மயக்கத்தில் இருக்கிறார்கள். விரைவில் எழுந்து விடுவார்கள். அவர்களை சுற்றி இருக்கும் வானர வீரர்களை பாருங்கள் யாரும் பயந்து ஓடவில்லை. ராமர் விரைவில் எழுந்து விடுவார் என்று அவரை சுற்றி தைரியத்துடன் இருக்கிறார்கள் என்றாள். ராட்சசியின் இந்த வார்த்தைகள் சீதையின் காதுகளில் அமிர்தம் பாய்வது போல் இருந்தது. மீண்டும் தனது தைரியத்தை பெற்று அமைதியானாள். உடனே ராட்சசிகள் மீண்டும் சீதையை அசோக வனத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். ராமரை நினைத்த படி இருந்த சீதை ராவணன் அழிவான். விரைவில் ராமர் வந்து தன்னை மீட்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.

ராமரின் உடல் நாக பாணத்தினால் தைக்கப்பட்டு காயங்கள் பலமாக இருந்தாலும் தனது ஆத்ம பலத்தாலும் தனது சக்தியாலும் கண் விழித்த ராமர் அருகில் இருந்த லட்சுமணனை பார்த்து அலறினார். உன்னை இழந்த நான் இனி எப்படி வாழ்வேன். நான் வாழ்ந்து என்ன பயன்? என்னுடன் காட்டிற்கு வருவேன் என்று வந்து எனக்கு பல சேவைகள் செய்து இப்போது எனக்காக உனது உயிரையும் கொடுத்து விட்டாயே. உன்னைப் போன்ற வீரர்களை இனி பார்க்க முடியாது. நான் இனி எப்படி அயோத்திக்கு செல்வேன். அன்னை கோசலை சுமித்திரை கைகேயிக்கு என்ன பதில் சொல்வேன் என்று கதறினார். அருகில் இருந்த சுக்ரீவனிடத்தில் ராமர் பேச ஆரம்பித்தார். இலங்கையின் அரசனாவாய் என்று விபீஷணனுக்கு நான் கொடுத்த உறுதி மொழி பொய்யானது. நீங்கள் எனக்கு கொடுத்த உறுதிமொழியின் படி இத்தனை நாட்கள் என்னுடன் இருந்து சத்தியத்தை காப்பாற்றினீர்கள். என்னால் பல வானர வீரர்கள் இறந்து விட்டார்கள். இனி எனக்காக யாரும் உயிரை விடவேண்டாம். உங்கள் படைகளை கிஷ்கிந்தைக்கு அழைத்துச் செல்லுங்கள். நான் இங்கேயே எனது உயிரை விட்டு விடுகிறேன் என்று தனது தைரியத்தை இழந்த ராமர் கவலையுடன் கூறினார்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 21

ராமர் வாழ்க லட்சுமணன் வாழ்க ராம லட்சுமணர்களுக்கு வெற்றி என்ற கர்ஜனையுடன் வானர சேனைகள் இலங்கை நகரத்திற்குள் முன்னேறிச் சென்றார்கள். இதனை கண்ட ராவணன் பெரும் ராட்சசர்களின் படையை அனுப்பி வைத்தான். சங்குகள் பேரிகைகள் முழங்க ராட்சச வீரர்களும் கடல் அலைகள் போல் கிளம்பி வானர வீரர்களை கொடூரமான ஆயுதங்களை கொண்டு தாங்கினார்கள். ராட்சச படைகளுக்கும் வானர படைகளுக்கும் பெரும் யுத்தம் தொடங்கியது. வானர வீரர்கள் பெரிய பாறைகளையும் மரங்களை வேரோடு பிடுங்கி ராட்சசர்கள் மீது தூக்கி வீசி தாக்கினார்கள். இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் இறந்தார்கள். யுத்த பூமி முழுவதும் ரத்தமும் சதையும் பரவிக் கிடந்தது. ஒரு பக்கம் அங்கதனும் இந்திரஜித்தும் மறு பக்கம் ப்ரஜங்கன் என்ற ராட்சசனும் விபீஷணனுடைய மந்திரி சம்பாதிக்கும் இடையே கடுமையாக சண்டை நடந்தது. மறு பக்கம் அனுமனுக்கும் ராட்சசன் ஜம்புமாலிக்கும் லட்சுமணன் ராட்சசன் விருபாக்ஷனுக்கும் சண்டை நடந்தது. இன்னோரு பக்கம் நீலனும் ராட்சசன் திகும்பனும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்திரஜித்தின் குதிரைகளை கொன்ற அங்கதன் ரதத்தையும் உடைத்து எறிந்தான். அங்கதனின் வீரத்தை கண்ட வானரர்கள் மிகவும் உற்சாகமாக சண்டையிட்டார்கள். இதனால் கோபமடைந்த இந்திரஜித் அதற்கு பதிலடியாக தனது மாய வித்தைகளை காட்டி மறைந்திருந்து யுத்தம் செய்து அங்கதனை அடித்து காயப்படுத்தினான். இந்திரஜித் இருக்கும் இடத்தை வானர வீரர்களால் காணமுடியவில்லை. இந்திரஜித் மறைந்திருந்து அம்புகள் எய்து வாரன வீரர்களின் உற்சாகத்தை குலைத்தான். இந்திரஜித் செய்த மாய யுத்தத்தினால் வானர வீரர்கள் தங்களின் தைரியத்தை சிறிது இழக்கத் தொடங்கினார்கள்.

ராமரை தாக்க அவரின் அருகில் நெருங்க முடியாத ராட்சசர்கள் ராமரை அம்புகளால் தாக்கத் தொடங்கினார்கள். ராட்சசர்களின் அனைத்து அம்புகளுக்கும் பதிலடி கொடுத்த ராமர் மறுபக்கம் தனது அம்புகளால் கூட்டம் கூட்டமாக ராட்சசர்களை அழித்துக் கொண்டிருந்தார். அன்றைய பகல் முழுவதும் நடந்த யுத்தம் இரவிலும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. இந்திரஜித் தனது மாய வித்தையின் மூலம் மறைந்திருந்து ராம லட்சுமணர்களின் மீது நாக பாணத்தை ஏய்தான். இதனால் ராம லட்சுமணர்கள் இருவரும் நாக பாணத்தால் கட்டுண்டு அசைய முடியாமல் கீழே விழுந்தார்கள். வானர சேனைகள் ராம லட்சுமணர்களை சூழ்ந்து கொண்டு கவலையுடன் இருந்தார்கள். இதனால் யுத்தம் நின்றது. இந்திரஜித் ராட்சச படை வீரர்களை பாராட்டி விட்டு அரண்மனைக்கு வெற்றிக் கொண்டாடத்தோடு திரும்பினான். ராவணனிடம் சென்ற இந்திரஜித் ராம லட்சுமணர்கள் அழிந்தார்கள். இனி எதிரிகளால் எந்த பயமும் இல்லை என்று கூறினான். இதனைக் கேட்ட ராவணன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தனது மகனின் வீரத்தை பாராட்டி கட்டி அணைத்து புகழ்ந்தான்.

ராம லட்சுமணர்கள் நாக பாணத்தின் சக்திக்கு கட்டுப்பட்டு மயக்கத்தில் கிடக்கிறார்கள். பல வானர வீரர்கள் இறந்து விட்டார்கள். பலர் காயமடைந்து விட்டார்கள். முதல் நாள் யுத்தத்தில் மிகப்பெரிய பின்னடைவை கண்ட சுக்ரீவன் நாம் யுத்தத்தில் தோல்வி அடைந்து விட்டோம் என்று எண்ணிக் கொண்டு கவலையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் அமர்ந்து விட்டான். இதனை கண்ட விபீஷணன் சூக்ரீவனிடம் சென்று நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். நீங்கள் தைரியத்தை இழந்தால் வானர வீரர்களும் தைரியம் இழந்து விடுவார்கள். ராம லட்சுமணர்களின் முகத்தை பாருங்கள் இன்னும் அவர்களின் பொலிவு அப்படியே முகத்தில் இருக்கிறது. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து மறுபடியும் யுத்தம் செய்ய கிளம்பி விடுவார்கள் என்று சூக்ரீவனுக்கு தைரியத்தை கொடுத்தான் விபீஷணன். சூக்ரீவனும் விபீஷணனும் வானர வீரர்கள் தைரியத்தை இழக்காமல் இருக்க சிதறிப் போயிருந்த வானர வீரர்களை ஒன்று படுத்தி உற்சாகப் படுத்தினார்கள். அனைத்து வானர வீரர்களும் ஒன்று பட்டு ராம லட்சுமணர்கள் விழிப்படைய காத்திருந்தார்கள்.

நமச்சிவாயக் கவிராயர்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் வைத்த பக்தியினாலும் பேரன்பினாலும் நாள்தோறும் பாபநாசம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் உலகம்மையை வழிபாடு செய்து வருவது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல பாபநாசம் சென்று உலகம்மையை தொழுது பாடினார். இரவு வரை தொடர்ந்து பாடியவர் கோவில் மூடியதும் அங்கிருந்து கிளம்பினார். இல்லத்திற்குத் திரும்பும் போதும் உலகம்மையைப் புகழ்ந்து கவிதை பாடிக்கொண்டே வந்தார். பக்தன் பாடும் கவிதையை கேட்க ஆவல் கொண்ட உலகம்மை கவிராயரை பின் தொடர்ந்து வந்தாள். அம்பிகை வருவதை அறியாத கவிராயர் வெற்றிலை தரித்து போட்டுக் கொண்டு வாய்விட்டுப் பாடிக்கொண்டே வந்தார். மெய் மறந்து பாடியபோது அவரையும் அறியாமல் அவர் வாயிலிருந்து தெறித்த எச்சில் துளிகள் உலகம்மையின் மேல் பட்டது. அத்திருக்கோலத்தோடு உலகம்மை கோயிலில் மீண்டும் எழுந்தருளினாள். மறுநாள் காலையில் கோயிலைத் திறந்து பார்த்த அர்ச்சகர் உலகம்மையின் சேலையில் தெரிந்த எச்சில் துளிகளைக் கண்டு திடுக்கிட்டார்.

இறைவழிபாட்டுக்கு அச்சமயம் வந்திருந்த அரசனிடம் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. மன்னன் வேதனையுற்றான். இப்பாதகத்தை செய்தவன் யார் உடனே கண்டு பிடியுங்கள் என்று உத்தரவிட்ட அரசன் அரணைமனைக்கு திரும்பி இந்த வேதனையிலேயே இருந்தான். இரவு அரசன் இந்த யோசனையிலேயே தூங்கிய அரசனின் கனவில் வந்த உலகம்மை வருந்தாதே அரசனை என் மீது கொண்ட பக்தியினால் நமச்சிவயாத்தின் பாடலுக்கு வசப்பட்டு அவன் பின்னே நான் தான் சென்றன். பாடுவதில் தன்னை மறந்த நிலையில் இருந்த நமச்சிவாயக் கவிராயர் வாயிலிருந்த வந்த எச்சில் என் மீது பட்டது. அவனை விட சிறந்த பக்தன் கிடையாது. அவனுக்கு சகல மரியாதைகளையும் செய்து கௌரவிப்பாய் என்று கூறி மறைந்தாள். அம்பிகையின் உத்தரவு கேட்டு அகமகிழ்ந்த அரசன் அம்பிகையின் உத்தரவின் படி நமச்சிவாயக் கவிராயரை கௌரவிக்க எண்ணி அவரை கோவிலுக்கு வரவழைந்தான். நமச்சிவாயக் கவிராயர் உலகம்மையின் மீது வைத்திருக்கும் அன்பை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிய அரசன் அவரிடம் சென்று தாங்கள் உலகம்மை மீது வைத்த அன்பு சத்தியமானால் இதோ உலகம்மை கையிலிருக்கும் தங்கப் பூச்செண்டு தாங்கள் பாடப் பாட அப்பூச்செண்டை சுற்றியிருக்கும் தங்க கயிறுகள் அறுந்து இப்பூச்செண்டு தானாய் உங்கள் கையில் வந்து விழ வேண்டும் என்றான் அரசன். உலகம்மை அந்தாதி எனும் அற்புதமான நூலை இயற்றினார். நமச்சிவாயக் கவிராயர் அந்தாதி பாடப்பாட அம்மையின் கரத்துள்ள பூச்செண்டின் தங்க நார்கள் ஒவ்வொன்றாய் அறுந்து விழுந்தன.

விண்டல நின்ற சரற்கால சந்திர சுவேதமுக
மண்டலமும் கையில் மலரொடும் தோளில் வழிந்த ரத்ன
குண்டலமும் பொலி வாலப் பிராய குமாரத்தியாய்
செண்டலர் செங்கை உலகாள் என் நாவில் சிறந்தவளே

எனும் பாடலை பாடி முடித்த சமயம் அனைத்து தங்க நாரும் அறுந்து தங்கச் செண்டு உலகம்மையின் கையிலிருந்து நமச்சிவாயக் கவிராயர் கரத்திற்கு தாவி வந்தது. அரசர் முதல் அனைவரும் நமச்சிவாயக் கவிராயர் பாதத்தில் விழுந்தனர். இப்பாடல் கொண்ட தொகுப்பு உலகம்மை கலித்துறை அந்தாதி என்று அழைக்கப்படுகிறது. இவர் சிங்கை உலகம்மை பிள்ளைத் தமிழ், சிங்கை உலகம்மை கலித்துறை அந்தாதி, சிங்கை உலகம்மை கொச்சகக் கலிப்பா, சிங்கை உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, சிங்கை உலகம்மை சந்த விருத்தம், சிங்கை சிலேடை வெண்பா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

அவர் இயற்றிய கலித்துறை அந்தாதி கீழ் PDF நூல் வடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சுப்ரமண்ய புஜங்கம்

ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம் என்ற பாடல் ஆதிசங்கரரால் முருகனைப் போற்றி வடமொழியில் இயற்றப்பட்டது. இது முப்பத்தியிரண்டு பாடல்களால் ஆனது. முடிவில் முப்பத்தி மூன்றாவது பாடலாக நூலின் பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதிசங்கரர் அத்வைதக் கொள்கையை நாடெங்கிலும் பரப்புவதற்காக வடக்கே அபிநவகுப்தர் என்ற ஒரு வேதாந்த வித்வானுடன் தர்க்கம் செய்தார். ஆதிசங்கரரின் வேத ஞானத்தைக் கண்டு அபிநவகுப்தர் பொறாமை கொண்டார். அதனால் அவர் ஆதிசங்கரர் மீது தீய ஏவல் செய்தார். ஏவலுக்கு உட்பட்ட ஆதிசங்கரர் காசநோயால் பீடிக்கப்பட்டு அவதியுற்றார். உடல் நலிவுற்ற நிலையில் ஒரு நாள் காலையில் திருகோகர்ணம் என்ற தலத்தில் தங்கியிருந்த போது அவருடைய கனவில் சிவபெருமான் தனது விடை மீது காட்சியளித்தார். சூரபத்மன் முதலிய அசுரர்களை வதம் செய்தபின் அந்த உக்கிரம் தணிய ஜெயந்திபுரத்தில் (திருச்செந்தூருக்கு ஜெயந்திபுரம் என்ற பெயரும் உண்டு) என் குமாரன் சண்முகன் இருக்கிறான். அவனை தரிசித்தால் உன் பிணி நீங்கும் என்று சொல்லி ஆதிசங்கரரின் கையில் திருநீறும் வழங்கினார். தூக்கத்திலிருந்து விழித்த ஆதிசங்கரர் தன் கையில் திருநீறு இருப்பதைக் கண்டு அதைத் தன் நெற்றியிலும் கைகளிலும் அணிந்து கொண்டார். உடனே தன் சித்தியினால் தன் உடலை விட்டு சூட்சுமமாக பிரிந்து ஜெயந்திபுரம் அடைந்து சண்முகப் பெருமானை தரிசித்தார். அந்தக் கணமே தன் உடல் சுகமடையத் தொடங்குவதை உணர்ந்தார். அச்சமயம் சண்முகநாதனின் கமல பாதங்களை ஒரு பெரிய நாகபாம்பு பூஜை செய்து கொண்டிருப்பதையும் கண்டார். நாகபாம்புக்கு வடமொழியில் புஜங்கம் என்று பெயர். நெளிந்து வளைந்து பயமின்றிச் செல்லும் நாகப்பாம்பின் கம்பீரமான நடையையே தன் மனதில் நிறுத்தி சுப்பிரமணிய புஜங்கம் எனற பாடல்களை ஆதிசங்கரர் பாடினார்.

ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கம் வட மொழி இசை வடிவில்

ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கம் தமிழாக்கம்

  1. தீராத இடர் தீர

என்றும் இளமை எழிலன் எனினும் இடர்மா மலைக்கே இடராவன்
துன்றும் கரிமா முகத்தோன் எனினும் சிம்ம முகச்சிவன் மகிழ்நேயன்
நன்றே நாடி இந்திரன் பிரமன் நாடித் தேடும் கணேசனெனும்
ஒன்றே எனக்கு சுபம் திருவும் உதவும் மங்கள மூர்த்தமதே.

  1. புலமை ஏற்படும்

சொல்லு மறியேன்சுதி அறியேன் சொற்கள் சுமக்கும் பொருளரியேன்
சொல்லைச் சொல்லும்விதி யறிதேன் தோய்ந்து சொல்ல நானறியேன்
எல்லை யிலாதோர் ஞான வொளி இதயத் தமர்ந்து அறுமுகமாய்
சொல்லை வெள்ள மெனப் பெருக்கும் தோற்றம் கண்டேன் சுடர்கண்டேன்.

  1. திருவடி தரிசனம் கிட்டும்

மயில்மீது ஆர்த்து உயர்வாக்கிற் பொதிந்து மனதை கவரும் உடலான்
பயில்வோர்கள் உள்ளக் குகைக் ஆகாயில் தங்கி பார்ப்பவர் தெய்வ மானான்
உயிராகும் மறையின் பொருளாகி நின்று உலகைப் புரக்கும் பெருமான்
கயிலாய மேவும் அரனாரின் செல்வக் கந்தன் பதம் பணிகுவாம்.

  1. பிறவிப் பிணி தீரும்

என்றன் சந்நிதி யடையும் மனிதர் எப்போ தெனினு மப்போதே
இந்தப் பிறவியின் சாகரக் கரையை எய்திக் களித்தோ ராகின்றார்
மந்தரு மறிய மறையை விளக்கிச் செந்தில் சாகரக் கரையதனில்
சுந்தரன் சக்தி பாலன் அமர்ந்தான் தூயன் பாதம் துதிக்கின்றேன்.

  1. போகாத துன்பம் போகும்

கடலில் தோன்றும் அலையும் அழிந்து காட்சி மறைவது போல்
திடமாய்ச் சந்நிதி சேவித் திடுவார் தீமை யழிந்து படும்
படமாய் மனதில் பதியச் செய்ய பரவைக் கரையில் குகன்
இடமே யமர்ந்தான் இதயமலர் மேல் ஏற்றித் தியானம் செய்கின்றேன்.

  1. கயிலை தரிசன பலன் கிட்டும்

என்றன் இருக்கை யறிந்தே யெவரும் இம்மலை ஏறி வரின்
எந்தைக் கயிலை மலை மீதேறும் இனிய பலன் கொள்வார்
கந்தன் இதனைச் சுட்டிக் காட்டிக் கந்த மான கிரிமேல்
சிந்தை மகிழ மூவிரு முகமாய்த் திருக்கொலு வமர்ந்தே யிருக்கட்டும்.

  1. கரையாத பாவம் கரையும்

கொடிதாம் பாவக் குறை நீக்கிடவே பெரிதாம் கடற் கரையில்
அடியார் தவமே நிறைவே தருமோர் கந்த மான கிரிமேல்
குடியாம் குகையில் ஒளியின் வடிவாய் குலவி விளங்கு குகன்
அடியார் மிடிமை கெடவே செய்வான் அவனைச் சரண மடைகின்றேன்.

  1. மனம் சாந்தியுறும்

மன்னும் இளமை யாயிரம் ஆதவர் மலரும் காந்தி யுடன்
நன்மலர்க் கொத்துச் சூழ்ந்து மறைக்கும் இரத்தின மஞ்சமதில்
கன்னிய ரறுவர் போற்றி வளர்த்த கந்தன் கொலு காணப்
பொன்மயக் குகையில் புகுந்த மாந்தர் சித்தம் சாந்தி யுறும்.

  1. புகலிடம் கிட்டும்

மென்மை மிகுந்த கமலத் திருவடி மேலும் அசையச் சிவப்பாகும்
மன்னும் அழகு மனதைக் கவர்ந்து மலரின் மேலே குடியேற்றும்
சின்னம் சிறிய வண்டாம் மனது சிக்கல் பலவும் விட்டேகி
பொன்னால் பாதத் தாமரைச் சார்ந்து பொலிவு பெற்றே வாழட்டும்.

  1. அக இருள் நீங்கும்

பொன்னெனத் திகழும் பூந்துகி லாடை பொலிவுடன் இடையில் ஒளி துள்ள
மின்னென மணிகள் மெல்லிசை ஒலிக்க மேகலை இடையைப் பொன்னாத்த
தன்னிக ரில்லா இடையதன் காந்தித் தன்னொளி ஒன்றை ஏவிவிடும்
நின்னெழில் இடையின் அணியா அழகை நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.

  1. ஆபத்து விலகும்

வேடவேந்தன் திருமகள் வள்ளி விரிந்த நகில்கள் மீதயர்ந்த
சேடல் குங்குமச் சேற்றில் தோய்ந்து திகழும் நின்றன் தடமார்பு
நாடும் அடியர் துன்பம் துடைத்து நலமே பொங்கச் சிவந்துவிடும்
கோடிய தாரகன் தன்னைக் கடிந்த குமரன் மார்பைப் போற்றுகிறேன்.

  1. பிரம்ம ஞானம் கிட்டும்

வேதன் தலையில் குட்டிய கை விண்ணவர் கோனை வாழ்த்தும் கை
வாதனை போக்கும் யமதண்ட மதாய் வையம் தாங்கும் விளையாட்டாய்
சாதனைக் கரியின் கைபற்றி தன்மத மடக்கும் நின்னுடைய
காதல் கரங்கள் பன்னி ரெண்டும் கந்தா என்னைக் காத்திடுக.

  1. தாபங்கள் நீங்கும்

சந்திரர் அறுவர் வான் வெளியில் சற்றும் களங்க மில்லாமல்
சுந்தரச் சுடர்தான் வீசி யெங்கும் தோற்றக் குறைவு யேதின்றி
யந்திர மென்னச் சுழன் றாங்கு என்றும் உதயத் தோற்றமொடு
கந்தா அவைதான் விளங்கினும் நின் கருணை முகத்திற் கெதிராமோ.

  1. அமுத லாபம் ஏற்படும்

அன்னம் அசைதல் போல் நின் புன்னகை அழகின் அதரம் அமுதூர
சின்னஞ்சிறிய கொவ்வைப் பழமாய்ச் சிவந்த உதடும் அழகூர
பன்னிரு கண்கள் வண்டாய் ஊர்ந்து பவனி கடைசி ஒளியாக
நின்திரு முகங்கள் ஆறும் தாமரை நிகர்த்தே நிங்கக் காண்கிறேன்.

  1. கிருபா கடக்ஷம் கிட்டும்

விண்ணிலும் விரிந்த கருணை யதால் வியத்தகு தயவை அருளுகின்ற
பன்னிரு விழிகள் செவி வரைக்கும் படர்ந்து இடையீ டேதின்றி
மின்னென அருளைப் பெய் வனவாய விளங்கு குகனே மனதிறங்கி
என்மீது கடைக் கண் வைத்தால் ஏது குறைதாந் உனக்கெய்தும்.

  1. இஷ்டசித்தி ஏற்படும்

மறைகள் ஆறு முறை யோதி வாழ்க மகனே என மகிழும்
இறைவன் உடலில் இருந்தே பின் எழுந்த கந்தா முத்தாடும்
துறையாய் விளங்கும் நின் சிரங்கள் திகழும் மகுடத் தோ டுவகை
நிறைவாய்க் காக்கும், சிரங்களையே நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.

  1. சத்ருபயம் போகும்

இரத்தினத் தோள் வளை ஒளிகதுவ நல்முத்து மாலை யசைந்தாட
வரத்தில் உயர்ந்த நின் குண்டலங்கள் வளைந்த கன்னத்தே முத்தாட
திரிபுரத்தை எரித்த சிவக் குமரா செந்தில் தலைவா வேல்தாங்கி
மரகதப் பட்டை இடை யுடுத்தி வருக என்றன் கண்முன்னே.

  1. ஆனந்தம் ஏற்படும்

வருக குமரா அரு கெனவே மகிழ்ந்தே இறைவன் கர மேந்த
பெருகும் சக்திமடி யிருந்தே பெம்மான் சிவனின் கரம் தாவும்
முருகே பரமன் மகிழ்ந் தணைக்கும் முத்தே இளமை வடிவுடைய
ஒரு சேவகனே கந்தா நின் உபய மலர்த்தாள் தொழுகின்றேன்.

  1. கர்மவினை தீரும்

குமரா பரமன் மகிழ் பாலா குகனே கந்தா சேனாபதியே
சமரில் சக்தி வேல் கரத்தில் தாங்கி மயில் மீதூர்பவனே
குமரி வள்ளிக் காதலா எம் குறைகள் தீர்க்கும் வேலவனே
அமரில் தாரகன் தனை யழித்தாய் அடியன் என்னைக் காத்திடுக.

  1. திவ்ய தரிசனம் கிட்டும்

தயவே காட்டும் தன்மை யனே தங்கக் குகையில் வாழ்பவனே
மயங்கி ஐந்து புலன் ஒடுங்கி வாயில் கபமே கக்கிடவும்
பயந்து நடுங்கிப் பயண மெனப் பாரை விட்டுப் புறப்படவே
அயர்ந்து கிடக்கும் போதென் முன் ஆறுமுகா நீ தோன்றுகவே.

  1. எமபயம் தீரும்

காலப் படர்கள் சினம்கொண்டு கட்டு வெட்டு குத்தென்று
ஓலமிட்டே அதட்டி என்முன் உயிரைக் கவர வரும்போது
கோல மயில் மேல் புறப்பட்டு குமரா சக்தி வேலோடு
பாலன் என்முன் நீ வந்து பயமேன் என்னத் தோன்றுகவே.

22 அபயம் கிட்டும்

கருணை மிகுமோர் பெருங் கடலே கந்தா நின்னைத் தொழுகின்றேன்
அருமைமிகு நின் பொன்னொளி சேர் அடியில் நானும் விழுகின்றேன்
எருமைக் காலன் வரும் போதென் எந்தப் புலனும் பேசாது
அருகே வந்து காத்திட நீ அசட்டை செய்ய லாகாது.

  1. கவலை தீரும்

அண்ட மனைத்தும் வென் நங்கே ஆண்ட சூர பதுமனையும்
மண்ணுள் மண்ணாய்த் தாரகனை மாயன் சிம்ம முகத்தனையும்
தண்டித் தவனும் நீ யான்றோ தமியேன் மனதில் புகந்திங்கே
ஒண்டிக் கிடக்கும் கவலையெனும் ஒருவனக் கொல்லுத லாகாதோ?

24.25. மனநோய் போகும்

துன்பச் சுமையால் தவிக்கிறேன் சொல்ல முடியா தழுகின்றேன்
அன்பைச் சொரியும் தீனருக் கிங்கருளும் கருணைப் பெருவாழ்வே
உன்னை நாடித் தொழு வதால் ஊமை நானோர் மாற்றறியேன்
நின்னைத் தொழவுடு தடை செய்யும் நெஞ்சின் நோவைப் போக்கிடுவாய்.

  1. நோய்கள் தீர

கொடிய பிணிகள் அபஸ் மாரம் குஷ்டம் க்ஷயமும் மூலமொடு
விடியா மேகம் சுரம் பைத்யம் வியாதி குன்மமென நோய்கள்
கொடிய பிசாசைப் போன்ற வைகள் குமரா உன்நன் திருநீறு
மடித்த இலையை பார்த்த வுடன் மாயம் போலப் பறந்திடுமே.

  1. சராணாகதி பலன் கிட்டும்

கண்கள் முருகன் தனைக் காணக் காதும் புகழைக் கேட்கட்டும்
பண்ணை வாயிங் கார்க் கட்டும் பாதத்தை கரமும் பற்றட்டும்
எண்சாண் உடலும் குற்றேவல் எல்லாம் செய்து வாழட்டும்
கண்ணாம் முருகைப் புலன்க ளெலாம் கலந்து மகிழ்ந்து குலவட்டும்.

  1. வரம் தரும் வள்ளல்

முனிவர் பக்தர் மனிதர்கட்கே முன்னே வந்து வரமளிக்கும்
தனித் தனி தேவர் பற் பலர்கள் தாரணி யெங்கும் இருக்கின்றார்
மனிதரில் ஈன மனி தருக்கும் மனம்போல் வரமே நல்கிடவே
கனிவுடைக் கடவுள் கந்த னன்று கருணை வடிவைக் காண்கிலனே.

  1. குடும்பம் இன்புறும்

மக்கள் மனைவி சுற்றம் பசு மற்ற உறவினர் அனை வோரும்
இக்கணத் தென்னுடன் வசித்திடு வோர் யாவரும் ஒன்றே லட்சியமாய்
சிக்கெனப் பற்றி நின் திருவடியைச் சேவிக்கும் தன்மை தருவாய் நீ
குக்குடக் கொடி யோய் செந்தில் வாழ் குமரா எமக்குக் கதிநீயே.

  1. விஷம் நோய் போகும்

கொடிய மிருகம் கடும் பறவை கொட்டும் பூச்சி போலென்றன்
கடிய உடலில் தோன்றி வுடன் கட்டி வருத்தும் நோயினையே
நெடிய உன்றன் வேல் கொண்டு நேராய் பிளந்து தூளாக்கு
முடியாம் க்ரெளஞ்ச கிரி பிளந்த முருகா வருக முன் வருக.

  1. குற்றம் குறை தீரும்

பெற்ற குழந்தை பிழை பொறுக்கும் பெற்றோர் உலகில் உண்டன்றோ
உற்ற தேவர் தம் தலைவா ஒப்பில் சக்தி யுடையானே
நற்ற வத்தின் தந்தாய் நீ நாயேன் நாளும் செய் கின்ற
குற்றம் யாவும் பொறுத் தென்னைக் குறை யில்லாமல் காத்தருள்க.

  1. ஆனந்தப் பெருமிதம்

இனிமை காட்டும் மயிலுக்கும் இறைவன் ஊர்ந்த ஆட்டிற்கும்
தனி மெய் ஒளிகொள் வேலுக்கும் தாங்கும் சேவற் கொடியுடனே
இனிதாம் கடலின் கரையினிலே இலங்குச் செந்தில் நகருக்கும்
கனியும் நின்றன் அடிகட்கும் கந்தா வணக்கம் வணக்கமதே.

  1. வெற்றி கூறுவோம்

ஆனந்த மூர்த்திக்கு வெற்றி கூறுவோம் அளவற்ற சோதிக்கு வெற்றி கூறுவோம்
வான்புகழ் மூர்த்திக்கு வெற்றி கூறுவோம் வையக நாயகர்க்கு வெற்றி கூறுவோம்
தீனரின் காவலர்க்கு வெற்றி கூறுவோம் திகழ்முத்தி தருபவர்க்கு வெற்றி கூறுவோம்
மோ னசிவன் புதல் வர்க்கு வெற்றி கூறுவோம் முருகனுக்கு என்றென்றும் வெற்றி கூறுவோம்

  1. வாழ்த்து

எந்த மனிதன் பக்தி யுடன் எழிலார் புஜங்க விருத்த மதை
சிந்தை கனிந்து படித் திடிலோ செல்வம் கீர்த்தி ஆயுளுடன்
சுந்தர மனைவி புத்தி ரர்கள் சூழ ஆண்டு பல வாழ்ந்து
கந்தன் பதத்தை அடைந் திடுவார்.

விளக்கம்

எப்போதும் குழந்தையென இருந்தாலும் மலை போல் விக்னங்கள் வந்தாலும் வேரோடு அழிப்பான். எத்திக்கும் சிங்கமும் பூஜிக்கும் வேதம் தும்பிக்கை முகத்தான் தொழுதிடக் காப்பான். இந்த்ராதி தேவரும் எண்ணியது நடக்க வந்திங்கு தேடும் வல்லபை கணேசன் மங்கள மூர்த்தி மகிமை பிரதாபன் என்றென்றும் சுபமே தந்திடத் துதித்தேன். வெல்லும் சொல் அறியேன் விழி பொருள் அறியேன். உள்ளிடும் சந்தம் தொடுக்கவும் அறியேன். நல்லதோர் கவிதை நயங்களும் அறியேன். உள்ளம் தோய்ந்தே உருகிடவும் அறியேன். எல்லையில்லாததோர் ஒளி வந்து நெஞ்சின் உள்ளே புகுந்தது ஒராறு முகமும் சொல் என்று சொல்ல தொடுக்கின்றேன். பாட்டு வெள்ளமாய் பொங்கி பெருகிட மயிலேறி வந்தான் மகாபாக்யப் பொருளாய் உயிரில் கலந்தான். உள்ளம் கவர்ந்தான். அழகுக்கு இவன் தான் அணியாக நின்றான். முனிவர்கள் நெஞ்சில் குடிகொண்ட பெருமான்யாருக்கும் எளியன் வேதப் பொருளாய் பாரெல்லாம் காப்பான். ஈசன் குமாரன் ஈடேற்றி அக்கரை சேர்ப்பேனே என்று கூறுவான் போல கடலோரம் நின்றான் செந்தில் வேலன். சிவசக்தி பாலன் கும்பிடும் மலைபோல் வந்திடும் துயரை வந்தது போலவே திரும்பிடச் செய்வான். கண்கண்ட தெய்வம் என் நெஞ்சுக்குள் வந்தான். கந்தமாகெனமெனும் விந்தையூரிலே வந்து கால் வைப்பர் கைலாயம் காண்பரே என்று நீ சொல்வதாய் சொல்வதோர் சண்முகம் சந்தோஷம் பொங்கவே தந்திடு நின்னருள் செந்தூர் கடற்கரை வந்துற்ற போதே பஞ்சமா பாதகம் பறந்திடும் கந்தனை.

சிந்தையில் வந்தனை செய்திடும் மங்கள கந்த மாமலைக் குகை வந்தன காணவே விழியெலாம் போற்றிடும் அறுமுகன் குகையிலே கதிரவன் ஆயிரம் செவ்வொளி குவிந்ததோர் மலர்ச்சரம் சூழ்ந்ததோர் மாணிக்கக் கட்டிலில் கிருத்திகைப் பெண்டிரால் வளர்ந்தவன் தோன்றுவான் கந்தமா கோயிலில் அன்னங்கள் குலவிடும் சண்முகன் சேவடி சதங்கைகள் கொஞ்சிடும் அமிர்தம் வழிந்திடும் அரவிந்த மலர்ப்பதம் நெஞ்சமாம் அதில் தோய்ந் திளைப்பாடுக பொன் வண்ணப்பட்டாடை இடையிலே கட்டி கிண்கிணி சலங்கையோடு மேகலை பொருத்தி தங்கமயப் பட்டமும் அணிந்துன்னைப் பார்த்தால் கண் கொள்ளாக் காட்சி தான். செந்தில் குமாரா எந்தவொரு அலங்காரம் இல்லாத போதும் இடையழகு பேரழகு எங்குமில்லா அழகு எங்கும் நிறைந்தோர் ஆகாயம் போல் கந்தா உன் இடை தோன்றும் வேண்டியதை நல்கும் வனக்குறத்தி வள்ளி அவள் கரங்களிலே தோய்ந்து உனது திருமார்பில் குங்கும மாமுருகா மனம் சிவந்து அடியவர்க்கு வழங்க வரும் அழகா எது என விளக்கிடுக.

தாரகனின் பகைவா ஒருகரம் நான்முகனைச் சிறை வைத்து அடக்கும் ஒருகரம் விளையாட்டாய் உலகங்கள் படைக்கும். ஒரு கரம் போரிலே யானைகளை வீழ்த்தும். ஒரு கரம் இந்திரனின் பகைவர்களை வாட்டும். எஞ்சிய கரங்களெல்லாம் எங்களைக் காக்கும் அஞ்சதே என்று சொல்லி ஆறுதல் வழங்கும் செந்திலான் கரங்களுக்கு சிரந்தாழ்ந்த வணக்கம். சிங்கார வேலனுக்கு நெஞ்சார்ந்த வணக்கம். மழை பொழியும் சரத்கால நிலவொளியில் களங்கம் பிறை முதலில் வைத்ததொரு திலகமாய் விளங்கும் திலகமில்லை அழிவதெனும் கரையில்லா நிலவே கருநிலவு கூடுகின்ற அதிசயமாம் அழகு அன்னங்கள் அசைவது போல் புன்னகையைக் கண்டேன். அமுதூறும் அதரங்கள் கனிகோவை என்றேன் கண்கள் பனிரெண்டும் பொன்வண்டு கூட்டம். கமலமலர் வரிசைகளும் கந்தர் முகத் தோற்றம் காதுவரை நீண்டிருக்கும் கண் சுழலும் கோலம் ஆகாயம் என விரிந்து அழகு மழை பொழியும். ஏதேனும் ஓர் விழியால் ஏழை எனைப் பார்த்தால் என்ன குறை வந்து விடும் செந்தில் வடிவேலோய். நான் அளித்த பிள்ளை நீ எனைப் போல உள்ளாய் வாழ்க என மந்திரங்கள் ஆறுமுறை சொல்லி ஆறுதலை முகந்து சிவன் அகம் மகிழ்த குமராராஜன் என மணிமுடிகள் ஒளிவிடும் அழகா ஏழ் உலகமும் காப்பதற்கு ஆறுமுகம் தோன்ற காது நிறை குண்டலங்கள் கன்னங்கள் கொஞ்ச போர் வலை மணிமாலை ஆரங்கள் சூழ ஏகாம்பரம் இடையில் பேரொளியை வீச பார்வதித்தாய் தந்த ஆயுதத்தை ஏந்தி பவழ இதழ் முத்து நகை அழகு முகம் காக்க நீலமயில் ஏறிடும் கோல எழில் குமரா தேரினிலே நீ வருக சீர் அலைவாய் முருகா தாயாரின் மடியினிலே நீயிருக்கப் பார்த்து வாவாவா இங்கே வா என ஈசன் அழைக்க வேகமாய் நீ எழுந்து ஓடிவரக் கண்டு ஆலிங்கனம் செய்யும் அரன் மகனே சரணம்.

கோலாகலக் குமரா சிவன் புதல்வா கந்தா வேலாயுதா தலைவா மயில் ஏறும் மைந்தா சேனாபதி வள்ளி நாயகனே குகனே தாரகனே அழித்தவனே சரணம் தாள் சரணம் கதி கலங்கி கண் கலங்கி பொறிகளெல்லாம் ஒடுங்கிப்பற்றி எனையிழந்து உயிர் பிரியும் நேரம் நடுநடுங்கி கிடக்கின்ற என்முன்னே வந்து நானிருக்க பயமில்லை எனக்கூறும் முருகா வெட்டு இவனை கூறுக்கு வெந்தணலில் பொசுக்கு கட்டிவா என்றெல்லாம் எமதூதர் கூறும் துட்ட மொழி கேட்பதற்குள் தோன்றுக நீ மயில் மேல் வெற்றி வேல் காட்டி எந்தன் வேதனைகள் நீக்கு வாய் பேச முடியாது வருந்துகிற நேரம் தாய் போல் நீ வந்து தழுவிட வேண்டும் ஏது பிழை என்றாலும் மன்னிக்க வேண்டும். என்னருகே நீ இருந்து காப்பாற்ற வேண்டும். சூரபத்மன் தாரகன் சிங்கமுகன் இவரை கூர் வேலால் பிளந்தெரிந்த குமரா நீ வருக தீராத கவலைகள் தீர்த்திடவே வருக. யாரிடத்தில் போய் சொல்வேன் உனையன்றி துணை யார்? மனக் கவலையெனும் ரோகம் சுமையாக அழுத்தும் உனைப்பாடும் பணியினையும் இடைபுகுந்து தடுக்கும்.

அருட்பிச்சை கேட்கின்றேன் தருக உன்கையால் எழியோரின் புகலிடமே வருக நீ வள்ளாய் காக்கை வலி நீரிழிவு சயம் குஷ்டம் மூலம் ஓயாத வயிற்றுவலி உன்மத்தம் காய்ச்சல் தீராதரோகங்கள் பிசாசு பூதங்கள் உந்தன் நீரணிந்த உடனே காதவழி ஓடும் கண்ணிரண்டும் கந்தா உன் வடிவழகு காண்க காதிரண்டும் முருகா உன் பேர் சொல்லக் கேட்க எண்ணமெலாம் உன்நினைவு இவ்வுடலாம் உனக்கே எந்நாளும் உன் பணியில் உன் புகழை பேச பண்பாடும் பக்தருக்கே பலனளிப்பார் தேவர் கொண்டாடும் முனிவருக்கும் கொடுப்பதற்கு வருவாய் அண்டி நின்று முருகா என்றழுகின்றவர் யார் சண்டாழ அவரனெனும் சண்முகனே தருவாய் மனைவி மக்கள் உற்றார் உயிரினங்கள் மற்றோர் அனைவருமே உனக்காக சேவை செய்ய வேண்டும் எனை வருத்தும் புள் விலங்கு ஜந்துக்கள் நோய்கள் எது எனினும் உன் வேலால் பொடி படவே வேண்டும் குற்றமெல்லாம் பொருத்தென்னை மன்னிப்பாய். பெற்றோர் உற்றவனே நீயும் இவ்வுலகிற்கே தந்தை முற்றுமெனை மன்னித்து முழுமையாய் ஏற்க முருகா. உன்முகம் கொண்டு கருணையால் பார்க்க கந்தனை சார்ந்திருக்கும் கடலுக்கும் வணக்கம். செந்தூர்க்கு வணக்கம் சேவலுக்கு வணக்கம் முந்தி வரும் வேலுக்கும் மயிலுக்கும் வணக்கம் முருகா உன் வாகனமாம் மாட்டுக்கும் வணக்கம் எல்லா உயிர்களுக்கும் நீ தானே உறவு எல்லையிலா மொழி அதனின் பேர் தானே முருகு சொல்லிலே முடியாத புகழுடையோய் சரணம் சுகமான முத்தி நிலை அருள்வாயே சரணம் ஆனந்த கடலாக அமைந்தாயே சரணம் ஆனந்த வடிவாக திகழ்வாயே சரணம் ஆனந்த மயமான அற்புதனே சரணம் ஆனந்த மயமாக்கி ஆட்கொள்வாய் சரணம் நல்மனை நல்ல மக்கள் செல்வங்கள் நீண்ட ஆயுள் இல்லறச் செழிப்பு பெற்று எதிலுமே வெற்றி கொள்வார் சொல்லுக சுப்ரமண்யன் புஜங்கத்தை நாளும் நாளும்.

விஷ்ணு சிலை

பாந்தவ்கர் தேசிய பூங்காவில் உள்ள விஷ்ணு சிலை

மத்திய பிரதேசத்தின் உமாரியா பகுதியில் உள்ள பாந்தவ்கர் தேசிய பூங்கா புராண மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தேசிய பூங்காவின் காட்டுப்பகுதியில் விஷ்ணு கிழக்குப்பக்கம் தலை வைத்து மிகவும் அமைதியான முறையில் படுத்துக் கொண்டிருக்கிறார். விஷ்ணுவின் சிலை 12 மீட்டர் நீளத்துடன் ஒற்றை பாறையில் செதுக்கப்பட்டது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த விஷ்ணு படுத்த நிலையில் ஒரு காலை நீட்டிய படியும் ஒரு காலை மடக்கி வைத்தபடியும் இருக்கிறார். விஷ்ணுவின் தலைக்கு பின்புறம் சிவலிங்கம் ஒன்று உள்ளது.

ராமாயண இதிகாசத்தில் இந்தப் பகுதியைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. இலங்கை போருக்குப் பிறகு இந்த இடம் ராமரால் லட்சுமணனுக்கு பரிசளிக்கப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளது. புராண நூல்களின் படி திரேதா யுகம் காலத்திலிருந்தே இந்த இடத்தில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மேலும் அந்தக் காலங்களில் உள்ள நாகரிகங்களின் எடுத்துக்காட்டுகளாக நிறைய குகை ஓவியங்கள் மற்றும் பிற அடையாளங்கள் உள்ளன. பூங்காவின் உள்ளே உள்ள கோவில் கட்டமைப்புகள் அக்காலத்தில் விஷ்ணு வழிபாடுகளும் சிவலிங்க வழிபாடுகளும் ஒன்றாகவே இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ராமாயண கதைகளின் சிற்பங்கள் மற்றும் பந்தாவதீஷ் கோவில் கருவூலம் விஷ்ணுவின் அவதாரமான வராக அவராதம் மீன் அவதாரம் ஆமை அவதாரம் ஆகிய மூர்த்திகள் உள்ளது. பூங்கா மற்றும் பூங்காவைச் சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலும் ராமாயண காலத்திலிருக்கும் சிற்பங்களாக உள்ளது.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் காலை உதயத்தின் போது பிரம்மபுரீஸ்வரருக்கு சூரிய வழிபாடு நடைபெறும் காட்சி. இதுபோல் வருடத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து சூரிய வழிபாடு நடக்கும்.

ஜீவாத்மா பரமாத்மாவின் வடிவம்

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொ ன்றாமே. திருமந்திரம் பாடல் # 2011

முதலில் ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை 100 ஆக பிரிக்க வேண்டும். அந்த 100 இல் ஒன்றை எடுத்து அதை ஆயிரமாக பிரிக்க வேண்டும். அந்த ஆயிரத்தில் ஒன்றை எடுத்து நூறாயிரம் ஆக பிரிக்க வேண்டும். கணக்கின் பாடி பார்த்தால் ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பிரிக்க வேண்டும். இது அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மனிதனின் முடியானது 40-80 மைக்ரோனாக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்த்தியாகவே இருக்கும். எனவே 100 மைக்ரோன் என்றே எடுத்துக் கொள்வோம்.

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்

பசு மாட்டின் ஒரு முடியை நூறாகப் பிரித்தால் 0.1 மில்லி மீட்டர் இதனை 100 ஆக பிரித்தால் = 0.001 மில்லி மீட்டர்

0.001 மில்லி மீட்டர் இதனை ஆயிரமாகப் பிரித்தால் = 0.000001 மில்லி மீட்டர்.

0.000001 மில்லி மீட்டர் இதனை நூறாயிரமாகப் (100,000) பிரித்தால் = 0.00000000001 மில்லிமீட்டர்

திருமூலர் உயிரின் அளவாகக் குறிப்பிடுவது சராசரியாக 0.00000000001 மில்லிமீட்டர்.

தற்போதைய விஞ்ஞானம் ஒரு ஹைட்ரோஜென் அணுவின் சுற்றளவு 0.000000212 எனப் பிரித்திருக்கின்றது. திருமூலர் அதற்கும் கீழே சென்று ஜீவாத்மாவின் அளவு 0.00000000001 மில்லி மீட்டராகக் திருமூலர் கூறியிருக்கின்றார்.

கடவுளின் வடிவம் பற்றி திருமூலர்

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே. திருமந்திரம் பாடல் # 2008

அணுவிற்குள் அணுவாகவும் அதற்கு அப்பாலும் இருப்பவன்தான் இறைவன். அப்படி அணுவிற்குள் அணுவாய் உள்ளதை ஆயிரம் கூறு செய்து அந்த ஆயிரத்தில் ஒரு கூறினை நெருங்க வல்லவர்களுக்கு அணுவிற்குள் அணுவாய் இருக்கின்ற இறைவனை அணுகலாம்.

ஜீவாத்மாவுக்கு கூறப்பட்ட அணுவின் வடிவத்தை ஆயிரம் கூறுகளாக்கிக் கிடைப்பது இறைவன் வடிவம் என்று கூறுகின்றார்.

ஜீவாத்மாவின் அளவு 0.00000000001 மில்லிமீட்டர் இதனை ஆயிரமாகப் பிரித்தால் = 0.0000000000000001

மனிதனின் ஜீவாத்மா 0.00000000001 மில்லிமீட்டர் அளவு இருக்கும். இந்த ஜீவாத்மா அணுக்களுக்குள் அணுவாக இறைவன் இருப்பதாகக் கூறுகின்றார். அணுவிற்குள் மனித ஜீவாத்மா இருப்பதாகவும் அதை ஆயிரம் மடங்கிற்கும் மேல் பிளக்கும் போது அதில் இறைவன் இருக்கிறான் என்றும் திருமூலர் கூறியிருக்கின்றார்.

நாயாகப் பிறவி எடுப்பது ஏன்?

ராமர் தனது அரசவையில் அமர்ந்திருந்தார். அப்போது வெளியே நாய் ஒன்று பெருங்குரலில் குரைத்துக் கொண்டிருந்தது. என்னவென்று தெரிந்து வருமாறு ஒரு காவலனை அனுப்பினார். அவன் அந்த நாயைத் துரத்திவிட்டு ராமரிடம் வந்து காரணமின்றிக் குரைத்த அந்த நாயை இந்தப் பகுதியை விட்டே துரத்தி விட்டேன் என்றான். சற்று நேரம் கழித்து மீண்டும் அந்த நாய் குரைக்க அதே காவலன் விரைந்து சென்று அதைத் துரத்தினான். இந்த நிகழ்வானது தொடர்ந்து நடந்தது. இதனை சிந்தித்த ராமர் லட்சுமணனிடம் அந்த நாய் தொடர்ந்து குரைக்கிறது. நீ போய் காரணம் என்ன வென்று தெரிந்து கொண்டு வா என்று அனுப்பினார். லட்சுமணன் குரைக்கும் நாயை நெருங்கி உன் துயரத்துக்குக் காரணம் என்ன சொல் என்று கேட்டான். அதற்கு அந்த நாய் ஈனஸ்வரக் குரலில் பேசத் தொடங்கியது ராமரை வரச் சொல்லுங்கள் எனக்கு நீதி வேண்டும் என்றது. இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த லட்சுமணன் நாய் சொன்னதை அப்படியே ராமரிடம் கூறினான். உடனே ராமர் வெளியே வந்தார். எனது ராஜ்யத்தில் காரணமின்றி எவரும் துயரப்படக் கூடாது. ஆகவே நீ எவ்விதத் தயக்கமும் இன்றி உன் துயரத்தை என்னிடம் சொல் என்றார். அந்த நாய் பணிவுடன் அவரை வணங்கி பேசத் தொடங்கியது. என்னை சன்யாசி ஒருவர் கல்லால் அடித்துக் காலை உடைத்து விட்டார். அதை முறையிடவே இங்கு வந்தேன் எனக்கு நீதி வேண்டும் என்று வேதனையுடன் கூறியது. ராமர் கனிவான குரலில் வருந்தாதே. நான் இப்போதே அந்த சன்யாசியிடம் விசாரிக்கிறேன் என்று சன்யாசியை அழைத்து வர உத்தரவிட்டார். சற்று நேரத்துக்குள் அந்த சன்யாசி அங்கு வந்து ராமரை வணங்கி நின்றார்.

ராமர் சன்யாசியிடம் நீங்கள் எதற்காக இந்த நாயைக் கல்லால் அடித்தீர்கள் என்று விசாரித்தார். அதற்கு சன்யாசி நான் பிட்சை வாங்கி வரும்போது இந்த நாய் எனது பிட்சான்னத்தைத் தொட முயற்சி செய்தது. அப்போது நான் மிகவும் பசியுடன் இருந்ததால் இந்த நாய் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது. எனவே அதன் மீது கல் எறிந்தேன் என்றார். ராமர் புன்னகை மாறாத முகத்துடன் அவரை நோக்கி இந்த நாய் ஐந்தறிவு படைத்த பிராணி. இதனால் தனக்கு தேவையான உணவே சமைக்கவோ உருவாக்குக் கொள்ளவோ தெரியாது. பார்க்கும் உணவே சாப்பிடவே தோன்றும் இது ஐந்தறிவு படைத்த பிராணிகளுக்கு உண்டான விதி. உங்களுக்கு பசி இருப்பது போல் இந்த நாயிற்கும் பசி எடுத்ததினால் உங்களது உணவை சாப்பிட முயற்சி செய்தது. இந்த நாயின் விதிப்படி இது தவறு அல்ல. பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பது ஆறறிவு மனிதனுக்கு உண்டான தர்மம். நீங்கள் அந்த தர்மத்தை மீறியது மட்டுமல்லாமல் நாயை கல்லால் அடித்து காயப்படுத்தி தவறு செய்து விட்டீர்கள். உமது செயல் கண்டிப்பாகக் குற்றமே. எனவே நீங்கள் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறினார். நாயின் பக்கம் திரும்பிய ராமர் இந்த சன்யாசி உனக்கு கெடுதல் செய்திருப்பதால் இவரை தண்டிக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன். நீ என்ன சொன்னாலும் அதை நிறைவேற்றுகிறேன் என்றார். அதற்கு அந்த நாய் இவரை ஒரு சிவாலயத்தில் அதிகார வேலையில் அமர்த்துங்கள். இதுவே நான் அவருக்கு அளிக்கும் தண்டனை என்றது.

ராமர் அதற்குச் சம்மதித்து அதற்கான ஆணையை பிறப்பித்தார். தனக்குப் பெரிய பதவி கிடைத்த மகிழ்ச்சியில் சன்யாசியும் திருப்தியுடன் அங்கிருந்து வெளியேறினார். நாயும் மன நிறைவுடன் அகன்றது. இதை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் வியப்புடன் நின்றார்கள். அன்னத்துக்கு அலையும் அந்த சன்யாசிக்கு இது அதிர்ஷ்டமே அன்றி தண்டனையல்ல. இதனால் அவர் மேலும் சுகம் அடையப் போகிறார். இது எப்படி தண்டனை ஆகும் என்று மக்கள் ராமரிடம் கேட்டார்கள். அனைத்தும் அறிந்த ராமர் நாயிடமே இதனை கேட்டு தெரிந்து கொள்வோம் என்று அந்த நாயை அழைத்து வருமாறு தன் காவலரிடம் கூறினார். நாயும் வந்தது. இப்போது நாயிடம் அதே கேள்வியே மக்கள் கேட்டார்கள். அதற்கு அந்த நாய் சிவாலயத்தில் அதிகாரி வேலை என்று அந்த சன்யாசிக்கு நான் அளித்தது முள்ளின் மேல் நிற்கிற ஒரு பணி. சிவாலயம் மடம் கிராமம் போன்றவற்றில் தவறு செய்யும் அதிகாரிகள் பசு அந்தணர் அநாதை ஆகியோரின் செல்வத்தை அபகரிப்பவர்கள் அரசனது வீட்டில் இருந்து கொண்டு அங்கு வரும் யாசகர்களைத் தடுப்பவர்கள் அந்தணரின் உணவுப் பொருட்களை அபகரிப்பவர்கள் ஆகியோர் மறு ஜென்மத்தில் கண்டிப்பாக நாயாகப் பிறப்பார்கள். சென்ற பிறவியில் நான் தவறு இழைத்த ஒரு மடாதிபதியாக இருந்ததால் இப்போது நாயாகப் பிறவி எடுத்துள்ளேன். எனவே தான் சன்யாசிக்கு இப்படி ஒரு தீர்ப்பு சொன்னேன். இந்த ஜென்மத்தில் எனது பசிக்கு உணவு தராமல் தவறு செய்த சன்யாசி சிவாலயப் பணியில் இருந்து நல்ல விதமாக பணி செய்தால் என்னை அடித்த பாவம் தீர்ந்து நன்மை அடைவார். ஆசையின் காரணமாக ஏதேனும் தவறு செய்தால் மீண்டும் பாவம் செய்து நாயாகப் பிறப்பார் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பியது. அங்கு கூடியிருந்த அனைவரது சந்தேகமும் தீர்ந்தது.

கருத்து: சிவாலயம் மடம் அரசு நிர்வாகம் போன்ற பதவியில் இருப்பவர்கள் தவறு செய்யக்கூடாது. பசு அந்தணர் ஆதரவற்றோர் ஆகியோரின் செல்வத்தின் மேல் ஆசைப்படகூடாது. அரசனை காண வரும் யாசகர்களை தடுக்கக்கூடாது. உண்மையான அந்தணர்களின் பொருளை அபகரிக்ககூடாது.

திருவாசகம்

  1. திருச்சாழல்

அம்பரமாம் புள்ளித்தோல்
ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர்
எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏது அடுத்தங்கே அமுது
செய்திடினும்
தம்பெருமை தானறியாத்
தன்மையன்காண் சாழலோ.

கேள்வி

உனது பிரானுக்கு பிடித்த உடை போயும் போயும் புலித்தோல் அவன் அமுதமாக விரும்பி அருந்துவது ஆலகால விஷம்? இதில் என்ன பெருமை என்று கூறடி

பதில்:

எம்பெருமான் சிவன் தன்னைக் கொல்ல தாருகா வன முனிவர்களால் ஏவி விடப் பட்ட புலியைக் கொன்று அதை ஆடையாக அணிந்ததையோ அல்லது உலகைக் காக்க ஆலகால விஷத்தை விரும்பி அருந்தியதையோ பறை சாற்றிக் கொண்டதேயில்லை. தனது பெருமையை தானே அறியாத தன்மையவன் அவன் தெரிந்து கொள்.