ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 163

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

எமது (அகத்திய மாமுனிவர்) வாக்கிலே ஒருவனை உயர்த்திக் கூறுவதால் மட்டும் ஒருவன் உயர் ஆத்மா ஆகி விட முடியாது. மனிதனிடம் பல நல்ல உயர்வான குணங்களும் உயர்வில்லாத குணங்களும் இருக்கிறது. எம் முன்னே அமரும் மனிதனுக்கு உயர்வில்லாத குணங்களை சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தால் அவனுக்கு மனச்சோர்வு வந்து விடும். அவனை உற்சாகப்படுத்தி வேகத்தோடு பல நல்ல செயல்களை செய்யவே நாங்கள் அவ்வாறு கூறுகிறோம். மற்ற படி எல்லா மனிதர்களும் சராசரி குணங்கள் கொண்ட மனிதர்கள்தாம் இதில் உயர்வு தாழ்வு இல்லை. நாங்கள் கூறுகின்ற வழி முறைகளை எல்லாம் ஒரு மனிதன் எப்போது நூற்றுக்கு நூறு கடை பிடிக்கிறானோ அப்போதுதான் அவன் எம் சிஷ்யன் என்ற அன்புக்கு பாத்திரம் ஆவான். அதுவரை அவன் மனம் தளராத படிக்கு நாங்கள் சில வார்த்தைகளை கூறுகிறோமே தவிர எல்லா மனிதர்களிடமும் நல்ல குணமும் நல்லன அல்லாத குணமும் இருக்கிறது.

பூர்வீக தோஷத்தை குறைக்கவும் தன் முனைப்பில்லாமல் இறைவனை நோக்கி செல்லவும் எமை நாடும் மனிதர்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். யாங்கள் என்ன தான் உரைத்தாலும் அதை இந்த செவியிலே (காதிலே) வாங்கி அந்த செவியிலே விடுவதும் தேவையானால் எமது வாக்கை எடுத்துக் கொள்வதும் இல்லை என்றால் அதை தள்ளி விடுவதுமாகத்தான் எப்போதுமே மனிதர்கள் இருக்கிறார்கள். எனவே ஒரு மனிதனின் சேவையை மற்ற மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சில சமயம் நாங்கள் கோடிட்டுக் காட்டுகிறோமே தவிர அதற்காக அவன் மிகப் பெரிய மகான் என்றோ ஞானி என்றோ நாங்கள் யாரையும் கூறவில்லை. ஏன்? எமது வாக்கை ஓதுவதால் மட்டும் இந்த சுவடியை ஓதும் மூடனுக்கு மிகப் பெரிய தகுதியோ பராக்ரமோ ஞான நிலையோ வந்து விடவில்லை என்பதை தெரிந்து கொள். வெறும் வார்த்தைகளால் மட்டும் ஒருவனை உயர்த்துவது மட்டுமல்ல எமது நோக்கம். அப்படியாவது அவன் உற்சாகம் கொண்டு செயல் படட்டுமே நற்காரியம் செய்யட்டுமே என்பதுதான் எமது நோக்கம் ஆகும்.

சுலோகம் -91

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-44

இவர்கள் தங்களின் பேச்சு மற்றும் செயல்களினால் தங்கள் அறிவை இழந்து நிற்கிறார்கள். மேலும் மேலும் சொர்க்கத்தை அனுபவிப்பதிலேயே ஆவலுடன் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அறிவற்றவர்களின் மனம் ஒரு நிலைப்பட்டு அவர்களுக்கு கர்ம யோக புத்தி உண்டாக வாய்ப்பே இல்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இவ்வாறான பேச்சு மற்றும் செயல்களினால் தங்களின் சுய சிந்தனையை விட்டு அறிவை இழந்து நிற்பார்கள். அனுபவிக்கும் சுகமே சொர்க்கம் என்று பந்தம் பாசம் ஆகியவற்றை அனுபவிப்பதிலேயே ஆர்வத்துடன் இருப்பார்கள். இவ்வாறு இருப்பவர்களுக்கு மனம் ஒரு நிலைப்படாது. இவர்களுக்கு கர்ம யோகத்தைப் பற்றிய அறிவும் புத்தியும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 162

ஒரு அன்பர் டிரைவர் தொழில் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு அகத்திய மாமுனிவர் அறிவுரை:

சாரதி (ஓட்டுநர்) தொழில் என்பது கிருஷ்ண பரமாத்மாவின் தொழில் தானப்பா. இதில் தாழ்வு என்பது ஒரு போதும் கிடையாது. இந்தத் தொழிலின் நுணுக்கத்தை அறியாமல் சிலர் மேம்போக்காக கற்றுக் கொள்கிறார்கள். இதை ஒரு மருத்துவ படிப்பு பொறியியல் படிப்பு எப்படி சில ஆண்டுகள் சொல்லித் தரப்படுகிறதோ அவ்வாறு முழுமையாக மொழி அறிவு போக்குவரத்து விதிமுறை அறிவு வாகனத்தின் நுணுக்கத் தன்மை இயக்கத் தன்மை என்று பிரித்து சில ஆண்டுகள் பயிற்சி தந்தால் ஒழிய திறம்பட செயல்பட முடியாது. அனுபவத்தால் பெறுவது என்பது வேறு. முதலில் அறிவால் பல விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். வாகனத்தின் உள்ளே இருக்கும் மனிதனுக்கு இவன் வாகனத்தை இயக்குகிறான் வேக நிலை மாற்றுகிறான். வலம் இடம் திரும்புகிறான். வாகனத்திலே பற்று பற்றா பாகத்தை இயக்குகிறான். வேக முடுக்கியை இயக்குகிறான் என்பதே தெரியக்கூடாது. அவை தெரியும் வண்ணம் எவன் ஒருவன் வாகனத்தை இயக்குகிறானோ அவன் நல்ல சாரதி (ஓட்டுநர்) அல்ல. வாகனம் நன்றாக இருக்கும் பட்சத்தில் இந்த கருத்து பொருந்தும்.

வாகனத்தை இயக்கும் போது இட வலமாக அலசல் இருந்தால் உடனடியாக சாரதியை (ஓட்டுநர்) நீக்கிவிட வேண்டும். நன்றாக பயிற்சி பெறு என்று கூற வேண்டும். சிந்தனையை வேறு பக்கம் செலுத்தி திடுப்பென்று (உடனடியாக) வேக தடுப்பானை (ஸ்பீடு பிரேக்) பயன்படுத்தினால் அந்த சாரதி (ஓட்டுநர்) ஏற்புடையவன் அல்ல. பயணிகளை ஏற்றி வைத்துக் கொண்டு எவன் ஒருவன் எரிபொருளை நிரப்புகிறானோ அவன் நல்ல சாரதி (ஓட்டுநர்) அல்ல. முன்னரே காற்று அழுத்தத்தையும் மின் கலனின் (பேட்டரி) திறனையும் எரிபொருளையும் சோதிக்கா விட்டால் அவன் கவனக் குறைவான சாரதி (ஓட்டுநர்) ஆகும். நெடுந்தூரம் எடுத்துச் செல்லும் முன்னர் அ முதல் ஃ வரை சோதித்து சிறு சிறு குறைகளை சரி செய்து கொள்ள வேண்டும். என்னென்ன பாகங்கள் நடுவழியில் கை கொடுக்காமல் விலகிவிடும் என்பதை முன்கூட்டியே யூகித்து சரியான மாற்று பாகத்தை வைத்திருக்க வேண்டும். வாகனத்தை பராமரிப்பதும் ஒரு சாரதிக்கு (ஓட்டுநர்) முக்கியம். வாகனத்தில் ஓடுகின்ற வாயு உருளைகள் எல்லாம் ஒரு பகுதியாகவே தேய்ந்து கொண்டு வரும் என்பதால்(சில சமயம் முறை மாற்றி ஓடுவதாக சூழல் இருக்கும்) அப்படி செய்யவில்லை என்றால் அந்த சாரதி (ஓட்டுநர்) கவனக்குறைவான சாரதி தான். எனவே சரியான வாகனம் சரியான சாரதி சரியான பயணிகள் சரியான பயணம் அப்பா.

வாகனத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் பிற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் வெப்பம் தணிக்கும் கருவி(ஏசி) பொருத்தப்பட்ட வாகனங்கள் இருக்கின்றன. அதை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக சாளரங்களை (சன்னல்) எல்லாம் அடைத்து வைக்கிறார்கள். இது எதிர்பாராத விபத்தை அதிகப்படுத்தும் என்பதால் சிறிதளவு குளிர் வெளியே சென்றாலும் பாதகமில்லை என்று வெளிக்காற்றை உள்ளே வரும்படி செய்து கொள்ள வேண்டும். அதேப் போல் வலப்புறம் இடப்புறம் என்று எப்புறம் சென்றாலும் அப்புறம் (பின்) பார்த்துக் கொள்ளலாம் என்று செல்லாமல் நிதானமாக அதற்குரிய குறியீடுகளை (காட்டிகளை) அவசியம் பயன்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாது வாகனத்திலே உள்ள ஔிரும் பொருள்கள் (மின் விளக்குகள்) எல்லாம் சரியான சாய் கோணத்தில் இருக்க வேண்டும். ஔிரும் பொருள்களை ஔிர விடுவதும் அணைப்பதுமாக திடீரென்று செய்யாமல் முன்னரே தீர்மானித்து துவக்க வேண்டும். உள்ளே இருக்கும் பொருள்கள் எந்த அளவுக்குத் தாக்குப் பிடிக்கும் என்பதை அவன் கற்றுக் கொள்ள வேண்டும். வாகனத்திலே கொடுக்க வேண்டிய அழுத்தமானது எந்த அளவுக்கு எந்த கோணத்தில் பிரயோகிக்கப் (உபயோகிக்க) படவேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலே உள்ள ஆழி சீசா (கண்ணாடி) போன்ற வண்ணங்கள் எல்லாம் கீழே விழுந்து விட்டால் உடனுக்குடன் எடுத்து விட வேண்டும். இல்லையென்றால் நிறுத்துவான் என்ற பகுதிக்கு அடியிலே சென்று விட்டால் அது இயங்காமல் போய் விபத்தை ஏற்படுத்தும்.

வேக நிலை மாற்றத்தை (கியர்) இயக்குவதில் ஒரு மனிதன் கவனமாக இருக்க வேண்டும். நிலை ஒன்று நிலை இரண்டு நிலை மூன்று என்று அதன் கோணத்தில் சென்று அதனை சரி செய்வது மிகவும் சிறப்பாகும். வாகனத்தில் இருந்து வெளிவரும் நச்சுப்புகை இந்த அண்டத்திற்கும் உயிர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இந்த தொடர்புடையவர்கள் எல்லாம் நறுமணமிக்க புகையை ஆலயங்களில் அதிகம் இட்டு இட்டு இந்தக் குறைக்கான பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ யாங்கள் (சித்தர்கள்) கூறலாம். இவற்றை மனதில் பதிய வைத்தால் நன்றாக இருக்கும்.

சுலோகம் -90

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-43

இவர்கள் உலகியல் இன்பத்தில் திளைத்தவர்களாகவும் சொர்க்கத்திற்கு செல்வதில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மீண்டும் மீண்டும் பிறவி அளிக்கவல்லதும் கர்மங்களில் தொடர்ந்து ஈடுபட வைப்பதும் ஆகிய பேச்சுக்களை மட்டுமே பேசுவார்கள். மேலும் தங்களுக்கு இன்பத்தையும் போகத்தையும் கொடுக்கும் செயல்களையே செய்து வருவார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இல்லறமே நல்லறம் என்ற வரிகளின் உள் விளக்கத்தை தெரிந்து கொள்ளாமல் வரிகளின் விளக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு இதுவே சிறந்தது இதனை அனுபவித்தால் சொர்க்கத்திற்கு சென்று விடுவோம் என்று நினைத்துக் கொண்டு பாசம் பந்தம் ஆகியவற்றிற்குள் சிக்கி அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி அளிக்கும் கர்மங்களிளேயே ஈடுபட்டுக் கொண்டு அதனைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 161

கேள்வி: எனக்கு ஏன் சித்தர்களோடு தொடர்பு ஏற்பட்டது?

இறைவனின் கருணையைக் கொண்டு இந்த இன்னவன் ஒத்து பலரும் அறிய முயல்வது இத்தனை மனிதர்கள் இருக்க எனக்கு இவ்வாறு சித்தர்களோடு தொடர்பு ஏன் ஏற்பட்டது? அதிலும் குறிப்பிட்ட சித்தர்களோடு என்ன வகையான நிலையில் எனக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. யாம் யாது செய்ய வேண்டும்? என்றெல்லாம் கேட்கிறார்கள். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு சித்தனோடு ஒரு பிறவியில் தொடர்பு ஏற்பட்டால் அதே சித்தன்தான் மறுபடியும் வழிகாட்டப் போகிறார் என்று பொருள் அல்ல. எந்த சித்தர்களும் பெயர் தான் மாறுமே தவிர உயர்ந்த நிலையை அடைந்த அனைவரும் ஒரே சமநிலையில்தான் இருக்கிறார்கள். எனவே இந்த எமது திருவடியைத் தொட்டு எம்மோடு தொடர்புடைய சில மாணாக்கன் பின்னால் ப்ருகுவிடமோ (ப்ருகு மகரிஷி) வசிஷ்டரிமோ காகபுஜண்டரிடமோ கூட செல்வதுண்டு.

காகபுஜண்டரிடம் தொடர்ந்து பல்வேறு விதமான வாக்குகளை நாடிகள் மூலமும் மானசீகமாகவும் அறிந்து கொண்டவர்கள் எம்மிடம் வருவதும் உண்டு. பொதுவாக சித்தர்களோடு மனிதர்களுக்கு தொடர்பு ஏற்படுவது என்றால் ஏதாவது ஒரு பிறவியிலே அவர்கள் ஒரு குறிப்பிட்ட அந்த தினத்திலே இந்த சித்தர்களுக்குப் பிரியமான வழிபாட்டை செய்வது ஒருபுறம். அடுத்தது வழிபாட்டோடு சேர்ந்து தர்ம காரியங்களை செய்வது ஒருபுறம். இவ்வாறு செய்வதால் தொடர்ந்து ஒரு ஆத்மாவை சித்தர்கள் வழிகாட்டுதல் மூலம் கடைத்தேற்ற வேண்டும் என்று இறைவன் முடிவு எடுத்த பிறகு அந்த ஆத்மா எத்தனை ஜென்மங்கள் கடந்து பிறவி எடுத்தாலும் ஏதாவது ஒரு சித்தனை அனுப்பி வழிகாட்ட கட்டளை இடுகிறார். இப்படி கூறும் பொழுது நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் சித்தர்கள் ரிஷிகள் முனிவர்கள் ஆகிய இவர்களின் வழிகாட்டுதல் இல்லாமலேயே பல்வேறு மனிதர்கள் அல்லது ஆத்மாக்கள் இறைவனடி சேர்ந்து இருக்கிறார்கள் என்பது வேறு நிலை. எல்லோருக்கும் நாங்கள் வழிகாட்டுவதில்லை. இறைவன் எந்தெந்த ஆத்மாக்களைத் தேர்ந்தெடுத்து எங்களிடம் ஒப்படைக்கிறாரோ அந்த ஆத்மாக்களுக்கு மட்டுமே நாங்கள் வழிகாட்ட ஆணையிடப்படுகிறோம். அவ்வாறு நாங்கள் வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையிலே எவனொருவன் ஒரு பிறவியிலே அதிக அன்ன சேவை செய்திருக்கிறானோ அதிக அளவு பசுக்களை காக்கும் முயற்சியில் இருந்திருக்கிறானோ உயிர்க்கொலை புரிய மாட்டேன் என்று இருந்திருக்கிறானோ அவர்களுக்கெல்லாம் சித்தர்களின் கருணையும் கடாட்சமும் இறை அருளாலோ அல்லது யாமே விரும்பியோ செய்திடுவோம்.

சுலோகம் -89

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-42

வேதங்களின் வரிகளில் உழன்று சொர்க்கத்தை விட சிறந்த பலன் வேறு இல்லை என்று சாதிப்பார்கள். இவர்கள் மலர்களைப் போன்று அழகாக பேசி தங்களது கருத்துக்களை தவிர மற்றவைகள் அனைத்தும் தவறானவை என்று சொல்வார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

வேதங்களில் யாகம் செய்வதினால் கிடைக்கும் பலன்களைப் பற்றி முழுமையாக சொல்லப்பட்டுள்ளது. அதன் உண்மையான உள் விளக்கம் மோட்சம் அடைவதை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் பலர் வேத வரிகளின் உட்கருத்தை புரிந்து கொள்ளாமல் வேதங்களில் உள்ள வரிகளில் உள்ள வார்த்தையின் விளக்கத்தை மட்டும் புரிந்து கொண்டு இதனைச் செய்தால் இந்த சக்தி கிடைக்கும் இதன் வழியாக சொர்க்கத்திற்கு செல்லலாம் அங்கு மேலும் சுகவாசியாக வாழலாம் என்ற எண்ணத்தில் பலனை எதிர்பார்த்து இருப்பார்கள். தங்களது இந்த கருத்து மட்டுமே சரியானது மற்றவை அனைத்தும் தவறானது என்று வேதத்தின் வரிகளை மட்டுமே ஆதாரமாக கொண்டு மற்றவைகள் அனைத்தும் தவறானவை என்று மலர்களைப் போன்று அழகாக பேசுவார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 160

ஒரு அன்பர் மகாலட்சுமி யாகம் செய்துவிட்டு வந்தவுடன் அகத்தியர் பெருமானின் அருள்வாக்கு:

இக்கேள்விக்கு திரு என்ற ஒரு தமிழ் வார்த்தையை வைத்து பதில் சொல்லி தமிழின் சிறப்பையும் அழகையும் காட்டியிருக்கிறார் அகத்தியர்.

திரு என்றால் மகாலட்சுமி என்று பொருள். திருப்தியாய் திரு யாகம் (திரு = மகாலட்சுமி) அன்னை திரு யாகம் அது அக்னி அணையா திரு யாகம் சிறப்பாய் அமைந்தமைக்கு இறைவன் அருளால் யாம் அருளாசி கூறுகிறோம்.

இறையிடம் கேட்கா திரு

எதையும் எதிர்பாரா திரு

இறையிடம் ஒன்றும் வேண்டாம் என் றிரு

இறையிடம் என்றென்றும் அன்பாய் இரு

பஞ்ச புலனை (ஐந்து புலனை) அடக்கி இரு

மனம் அலையாமல் அதனை இறுக்கி இரு

ஒவ்வொரு நாளும் அன்னை திரு வை (மகாலட்சுமி) எண்ணுங்கால் அந்த மெய்ப்பொருளே உண்மை பொருள் என்பதை உணர்ந்தே இரு

கேட்கா திரு. ஆனால் யாருக்கும் தரா இரா என்ற நிலையிலே அள்ளித் தரும் நிலை வரும் வரை மனம் அதில் ஆழும் வரை இருக்க இரு.

அந்த அன்னை திரு அது அனைவரையும் அணைக்கும் திரு. கேட்பதை கொடுக்கும் திரு அந்த உயர் திரு மைந்தனை உயர்த்தும் திரு.

எதையும் எண்ணா திரு அதைத் தவிர வேறு எதையும் எண்ணா திரு.

அன்னை திரு வின் திரு வடியை எண்ணும் திரு இயம்பு திரு. உயர்வு திரு. இப்படி வரும் திரு.

சில சமயம் போகும் திரு. இருந்தாலும் வரும் திரு போகும் திரு. எண்ணா திரு. அதிலே உயர் திரு.

இத் திரு அத் திரு எத் திரு? என்று பாராமல் காத் திரு காத் திரு.

அன்னை திரு என்றும் அனைவரையும் ரட்சித் திரு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 159

சில அன்பர்கள் ஒரு சிவன் ஆலயத்திற்கு சென்ற பொழுது இறை ரூபங்களின் மீது பூக்களை வைத்து வழிபட்டுவிட்டு வந்தனர். அதன் பிறகு அகத்திய மாமுனிவர் அருளிய வாக்கு:

கேள்வி: ஐயனே கோவிலுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட்டுவிட்டு வந்தோம். அதற்கு ஆசி வழங்க வேண்டும்.

அதெல்லாம் சரி. ஒன்று பூக்களை ஒரு மனிதன் மாலையாகப் போட்டுக் கொள்வான். அல்லது கலிகாலத்திலே அழகுற மேல் அங்கியிலே சொருகிக் கொள்கிறான். அதை விட்டுவிட்டு உதிரி பூக்களை அள்ளி தலையில் வைத்துக் கொண்டு ஒருவன் நடந்தால் அவனை என்னவென்று அழைப்பீர்கள்?

அன்பர்கள்: பைத்தியக்காரன் என்று அழைப்போம்

பின் ஏனடா நந்தியின் தலையிலே பூக்களை அப்படி அள்ளி வைக்கிறீர்கள்? தாமரையை மாலையாகக் கட்ட வேண்டும். தாமரையிலே இருக்கின்ற தேன் மிக உயர்ந்த தேன். தாமரை பூக்களின் தேனை மட்டும் அன்னை கலைவாணி (சரஸ்வதி தேவி) ரூபத்திற்கு அபிஷேகம் செய்தால் ஒருவனுக்கு முக்காலமும் உணரக்கூடிய ஞானம் பிற்காலத்திலே வரும். கல்வி கேள்வியில் வெற்றி கிடைக்கும்.
எனவே தாமரை பெரியதாக இருக்கிறது என்பதற்காக இதோ இந்த மூடன் அப்படி அப்படியே எடுத்து வைத்திருக்கிறான். தாமரை மாலை மிக மிகச் சிறப்பு. தனியாக வைப்பது தவறு என்று கூறவில்லை. அதை விட இது சிறப்பு என்றுதான் கூறுகிறோம்.

கேள்வி: சமீபத்தில் வாக்கு உரைப்பது தடைபட்டிருப்பதற்கான காரணத்தை குருநாதரிடம் வினவிய போது:

வாக்கு உரைக்கின்றோம் வாக்கு உரைப்பதில்லை.
வாக்கு உரைக்கின்றோம் வாக்கு உரைப்பதில்லை.
வாக்கு உரைக்கின்றோம் வாக்கு உரைப்பதில்லை.
வாக்கு உறைப்பதில்லை வாக்கு உரைக்கின்றோம்.

இந்த கேள்விக்கு பதில் கொடுக்கும் அகத்தியர் தழிழில் விளையாடி தமிழின் சிறப்பையும் அழகையும் காட்டியிருக்கிறார். அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பதிலை விளக்கத்துடன் கீழே கொடுத்திருக்கிறோம்.

வாக்கு உரைக்கின்றோம் (விளக்கம் சொல்லுகின்றோம்) வாக்கு உரைப்பதில்லை (அந்த விளக்கம் உங்களுக்கு புரியவில்லை)
வாக்கு உரைக்கின்றோம் (கேள்விக்கு பதில் அளிக்கின்றோம்) வாக்கு உரைப்பதில்லை (அந்த பதிலை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை)!
வாக்கு உரைக்கின்றோம் (திருவாக்கு சொல்லுகின்றோம்) வாக்கு உரைப்பதில்லை (அதனை ஏற்றுக் கொண்டாலும் சொல்லுகின்ற வாக்கை உறுதியாக கடைபிடிப்பதில்லை)
வாக்கு உறைப்பதில்லை (சொல்லுகின்ற வாக்கு உங்கள் மனதில் பதியவில்லை) வாக்கு உரைக்கின்றோம் (ஆனாலும் சொல்லுகின்ற வாக்கை ஏற்றுக் கொள்பவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்).

திருமூலர் அபிசேகம் ஆராதனை

2022 வருட பிறப்பை முன்னிட்டு திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள திருமூலர் சந்நிதியில் நடைபெற்ற அபிசேகம் மற்றும் ஆராதனை.

கந்தசாமி கோயில்

மூலவர் கந்தசுவாமி. உற்சவர் முத்துக்குமார சுவாமி. தாயார் வள்ளி தெய்வானை. தல விருட்சம் மகிழ மரம். தீர்த்தம் சரவணப் பொய்கை. இங்குள்ள விநாயகர் குளக்கரை விநாயகர். சித்திபுத்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் உள்ளார். சித்தியும் புத்தியும் ஒருகாலை மடக்கி மற்றொரு காலை தொங்கவிட்ட கோலத்தில் காட்சி தருகின்றனர். சரவணப்பொய்கையின் கரையிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் லட்சுமிதேவியும் இடப்புறத்தில் சரஸ்வதி தேவியும் உள்ளனர். கந்தசுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். மூலவருக்கு நேரே வாயில் இல்லை. அவருக்கும் கொடிமரத்திற்கும் இடையே துளைகளுடனான சுவர் மட்டும் உள்ளது. ராஜகோபுரமும் பிரதான வாயிலும் வடக்குப்பகுதியில் உள்ளது.

வேளூர் மாரிச்செட்டியார் பஞ்சாளம் கந்தப்ப ஆசாரி என்கிற இரு முருக பக்தர்கள் ஒவ்வொரு கிருத்திகை அன்றும் சென்னையில் இருந்து திருப்போரூர் வரை பாத யாத்திரை சென்று கந்தனைத் தரிசித்து வந்தார்கள். கிபி 1673ம் வருடம் மார்கழி மாதம் கிருத்திகை அன்று கந்தனை தரிசித்து விட்டுத் திரும்பியவர்கள் செங்கண்மால் ஈஸ்வரன் கோயில் (பழைய மாமல்லபுரம் சாலை) அருகேயிருக்கும் குளக்கரையில் ஓய்வு எடுக்க அமர்ந்தவர்கள் அசதியில் தூங்கிவிட்டார்கள். அப்போது கனவில் தோன்றிய முருகன் நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் உடலை வருத்திக் கொண்டு வருகிறீர்கள். இதோ இந்தப் புற்றிலிருக்கும் என்னை எடுத்துச் சென்று நீங்கள் வசிக்கும் சென்னப் பட்டணத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள் என்றார். உடனே இருவரும் கண் விழித்து தனக்கு வந்த கனவைப்பற்றி பேசினார்கள். இருவருக்கும் ஓரு போலவே கனவு வந்தபடியால் வந்த சொன்னது முருகனே என்று மகிழ்ந்தவர்கள் சுற்றுலும் தேடிப்பார்த்தார்கள். அருகில் முருகனின் உருவம் தென்படவே அவரை எடுத்து வந்தார்கள். வரும் வழியில் பாரிமுனையில் முருகனின் பாரம் தாங்காமல் கீழே வைத்தார்கள். அதன் பின் முருகரை அங்கிருந்து அசைக்க முடியவில்லை. முருகர் இங்கேயே கோவில் கொள்ள அருளுகிறார் என்று எண்ணிய இருவரும் தற்போது கோவில் இருக்கும் இடத்தில் செங்கல்லினால் கோயில் அமைத்தார்கள். பின்னர் கருங்கல்லால் கோயில் அமைக்க பக்தர்களால் நிச்சயித்து உண்ணாழி அந்தராளம் மகாமண்டபம் ஆகியவை கட்டினார்கள்.

கந்தகோட்டம் கோவிலில் முருகனடியார்கள் எல்லாம் ஒன்று கூடி கந்தகோட்டத்து முருகன் கோயிலுக்கு உற்சவ விக்ரகம் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். சிற்ப சாஸ்திர வல்லுணர்களில் மிக நுட்பறிவு கொண்ட ஒருவரை தேர்வு செய்தனர். சிற்ப சாஸ்திரரிடம் உற்சவ முருகனாக பஞ்சலோகத்தில் விக்ரகம் ஒன்றை வார்த்து தரும்படி ஒப்படைத்தனர். சாஸ்திரரும் புடம்போட்டு எடுத்தபின் வார்ப்படத்தை பிரித்த போது, விக்ரகம் மினு மினு வென மின்னியது, அதன் ஒளிச் சிதறல்கள் கண்களைக் கூசச் செய்தது. ஆனால் வார்ப்படத்திலிருந்த பிரித்தெடுத்த பகுதிகள் பூராவும் முட்கள்போல சிறு பிசிறுகளாய் இருந்தன. கோயில் பொறுப்பாளர்கள் சிற்பசாஸ்திர முதன்மையாளரிடம் சிற்பம் நல்லா வந்திருக்கிறது. ஆனால் வெளித்துருத்தியிருக்கும் முட்கள் போலான பிசிறுகளை நீக்கினீர்களென்றால் சிற்பம் இன்னும் அழகாக இருக்கும் என்றனர்.

தலமை சிற்பியும் துருத்திய பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன் என்று சொல்லி அதற்குண்டான கருவியுடன் விக்ரகத்தை தொட்டார். அவ்வளவுதான் சிற்பத்தை தொட்ட மாத்திரத்தில் மின்சாரம் தாக்கியவர்போல் தூரப் போய் விழுந்தார். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து சிற்பசாஸ்ததரரை தூக்கி வைத்து ஆசுவாசப் படுத்தி என்ன ஆச்சு ஐயா என்றனர். என் தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலிருக்கிறது. ஒரே பதட்டமாக இருக்கிறது வாய் குழறி குழறிக் கூறினார். சிறிது நேரத்திற்குப் பிறகு தெளிந்து எழுந்த சிற்பி கண்களில் மிரட்சியோடு ஆலயப் பக்தர்களை நோக்கி கைகளைக் கூப்பி இந்த விக்ரகம் நீறு பூத்த அணலாக இருக்கிறது. இதைச் சுத்தத் தூய்மையாக்கும் சக்தி என்னிடம் இல்லை. என்னை விட்டு விடுங்கள் இது என்னால் இயலாது என்று கூறி போய்விட்டார். பிசிறுகளுடன் இருக்கும் உற்சவ விக்ரகத்தை தீண்டப் பயந்து வழிபாட்டுக்கு எடுத்துக் கொள்ளாமல் விக்ரகத்தை ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டி விட்டனர். இந்தச் செயலுக்குப் பின்பு இரண்டு ஆண்டுகளும் கடந்து போய்விட்டன.

ஒருநாள் காசியில் இருந்து சாம்பையர் எனும் துறவி கந்தகோட்டத்து முருகனைத் தரிசிக்க ஆலயத்திற்குள் புகுந்தார். அவர் மூலவரைத் தரிசித்த பின் ஆர்வத்தோடு உற்சவர் இல்லையா? எனக் கேட்டார். சிவாச்சாரியாரும் விக்ரகம் வார்ப்பெடுத்து உருவான விபரம் முதல் அனைத்தையும் சாம்பையரிடம் கூறிவிட்டு ஆலய முக்கியஸ்தரரிடம் அழைத்துப் போய் கொண்டு விட்டு விட்டார். இதன்பின் கோயில் நிர்வாகிகளைச் சந்தித்த சாம்பையர் அந்த உற்சவ விக்ரகத்தை நான் பார்க்கலாமா? என்றார். சாம்பையருடைய தோற்ற கோலத்தைக் கண்டு கட்டுப்பட்ட நிர்வாகிகள் உற்சவர் இருந்த அறையைத் திறந்து விட்டனர். அறைக்குள் நுழைந்த சாம்பையர் சில நிமிடத்தில் வெளியே வந்தார். சாம்பையர் கூடியிருந்த அனைவரையும் பார்த்து நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள் இக்கோயிலில் உள்ள மூலவருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அதே சக்தி இந்த உற்சவ மூர்த்தத்திலும் பொதிந்திருக்கிறது என்றார். விக்ரகம் இவ்வாறு அமைவது வெகு அபூர்வமானது. இங்கு இது அமையப் பெற்றதனால்தான் உங்களை நான் பாக்கியசாலி என்றேன் என்றார். தன்னை வழிபடும் அடியார்களுக்கு மூலவரைப்போல் இந்த உற்சவரும் அளவிலா அருட்செல்வத்தை வழங்குவார் இவர். இவரைப் பார்த்து வணக்கம் தியானம் ஆராதணை செய்யலாமே தவிர இவர் திருமேனியில் எந்த விதமான கருவிகளும் படக் கூடாது என்றார்.

இந்தத் தன்மை கொண்ட உற்சவ விக்ரகங்களை ஆத்ம சக்தியால் மூலம் தூய்மைப் படுத்த முடியும். ஆயுதத்தால் தீண்டித் தொட முனைந்தால் அது நடவாது போய்விடும். இந்த உற்சவரை ஆத்ம சக்தியால் நானே தூய்மை செய்து தருகிறேன் என்றார். தூய்மை செய்யும் நேரத்தில் கூறிப்பட்ட ராகத்தில் நாதஸ்வரம் வாசிக்க சொன்னார். நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பண்டிதரான சாம்பையரின் வார்த்தைகளை அப்படியே ஏற்று மகிழ்ந்த ஆலய நிர்வாகிகளும் பக்தர்களும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். தனி அறையில் உற்சவ விக்ரகம் வைக்கப்பட்டு திரை போட்டு மறைக்கப்பட்டது. வெளியே நாதஸ்வரம் வாசிக்கப்பட்டது. வடிவேலனின் முன் அமர்ந்து வேத மந்திரங்களைச் சொல்லி ஆத்ம சக்தியால் உற்சவரின் திருமேனி மீது இருந்த பிசிறுகளை நீக்கினார் சாம்பையர். திரை விலக்கி வெளியே வந்தார் சாம்பையர். முருகனின் முகத்தை மட்டும் சரி செய்ய இயலாது என்று கூறி விட்டு சென்று விட்டார். இப்போதும் கந்தகோட்டத்தில் இருக்கும் உற்சவர் இந்த முருகர் தான். மிகவும் அழகாக இருக்கும் முருகனின் முகம் மட்டும் அந்த பிசிருகளோடு இன்றும் இருக்கிறார். ஆறுமுகனின் அருளாடலால் வெளிப்பட்ட அந்த உற்சவ வடிவத்தை இன்றும் கந்த கோட்டத்திற்குச் சென்றால் தரிசிக்கலாம்.

கந்தசாமி கோயில் எனப்படும் கந்தகோட்டத்தின் 1858ம் வருட கல்வெட்டின் படி கோயிலின் வரலாற்றைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பார்க் டவுனின் ராசப்ப செட்டித் தெருவில் எட்டு ஏக்கர் பரப்பில் இக்கோவில் அமைந்துள்ளது. மூலவர் கந்தசாமி என்றும் உற்சவர் முத்துக்குமாரசுவாமி என்றும் அழைக்கப்படுகின்றனர். இருவரும் வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கின்றனர். கோவிலின் உள்ளேயே ஒரு தெப்பக்குளமும் உள்ளது. 1869 ஆம் வருடம் வையாபுரி செட்டியார் என்பவர் இக்கோயிலுக்கு 66 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தார். இவர் கோயிலுக்காக ஒரு தேர் செய்வித்தார். 1880ம் ஆண்டில் அக்கம்மாபேட்டை கோவிந்த செட்டியார் நாராயணச் செட்டியார் என்பவருடன் சேர்ந்து கோயிலின் அருகே இருந்த நிலத்தைக் கோயிலுக்கு அளித்தனர். அங்கு தான் வசந்த மண்டபம் கட்டப்பட்டது. கோயிலின் ராஜகோபுரம் 1901ம் வருடம் காளிரத்தினச் செட்டியார் அளித்த 50 ஆயிரம் ரூபாய் நன்கொடையைக் கொண்டு எழுப்பப்பட்டது என மதராசபட்டினம் நூலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் நரசய்யா.

ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு நடந்த முகலாயர்கள் படையெடுப்பு ஒன்றில் கோயில்கள் எல்லாம் சேதப்படுத்தப்பட்டன. அப்போது பக்தர்கள் சிலர் திருப்போரூர் முருகன் சிலையைக் காக்கும் பொருட்டு புற்றுக்குள் மறைத்து வைத்தனர். சில காலத்திற்குப் பிறகு சிலை இருந்த இடம் தெரியாமல் புதிய சிலையை பிரதிஷ்டை செய்து விட்டார்கள். இதுவே அந்த இரு முருக பக்தர்களின் கனவிலும் முருகப்பெருமான் சொல்லி சென்னைப் பட்டணத்திற்கு வந்த கதை என்று கோவில் புராண வரலாறு சொல்கிறது. வள்ளலார் கந்தசாமி முருகனை தனது திருவருட்பாவில் உருகி உருகிப் பாடியிருக்கிறார். அவர் சென்னையில் வாழ்ந்த நாட்களில் கந்தகோட்ட முருகனை தினமும் தரிசனம் செய்துள்ளார். ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவுவேண்டும் என்ற பாடலில் தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்தலம் ஓங்கு கந்தவேளே என்று பாடியிருக்கிறார். திருப்போரூர் சிதம்பர சுவாமிகளும் பாம்பன் சுவாமிகளும் கந்தகோட்ட முருகனைப் பற்றி பாடியுள்ளனர்.