ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 229

கேள்வி: நான் பொதிகை மலை சென்றிருந்த பொழுது ஒரு அன்பர் என்னிடம் நீ வந்தது சந்தோஷம். அகத்தியருக்கு திருப்தி என்று வாக்கு சொல்வது போல் கூறினார். அப்படி நீங்கள்தான் பேசினீர்களா? அல்லது அந்த அன்பரின் கற்பனையா?

இறைவனருளால் ஒன்றைத் தெரிந்து கொள். இந்த ஜீவ அருள் ஓலையை (ஜீவநாடியை) கற்பனை என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நிலைமை இவ்வாறு இருக்க இப்பொழுதெல்லாம் கலிகாலத்திலே எம்மையே நாம் நிரூபித்துக் கொள்ள வேண்டிய நிலையில்தான் யாமும் இருக்கிறோம். எனவே உண்மை என்று எடுத்துக் கொள். அதனால் என்ன நட்டம்? பொய் என்றாலும் என்ன பெரிதாக நட்டம் வந்துவிடப் போகிறது? நாங்கள் குறிப்பாகக் கூறுவது என்னவென்றால் இது போன்ற வினாக்களை விடுக்கும் பொழுது யாங்கள்(சித்தர்கள்) மெளனத்தைதான் கடை பிடிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் ஏதாவது நாங்கள்(சித்தர்கள்) உண்மையைக் கூறினால் மனிதர்களுக்குள்ளே தேவையில்லாத பிரச்சனைகளும் பிணக்குகளும் ஏற்படும். எனவே இது போன்று அடுத்த ஒரு சூழலில் நீ இருந்தால் செவியாடலாகக் கேட்டுக் கொள் அமைதியாக இரு. ஆய்வு எதுவும் செய்யாதே.

கேள்வி: ரசாயன உணவு இயற்கை உணவு எது சிறப்பு?

எல்லா சூழலிலும் இயற்கை உணவு என்பதை நாங்கள் (சித்தர்கள்) மறுக்கவில்லை என்றாலும் தற்காலத்தில் அது சாத்தியமில்லை என்பதும் எமக்குத் தெரியும். எதை ஏற்றாலும் அதற்கு ஏற்றாற் போல் உடலை மாற்றிக் கொள்ளக் கூடிய சக்தி சில விலங்குகளுக்கு இருக்கிறது. கடுமையான ரசாயனத்திலிருந்து கூட தன்னை தற்காத்துக் கொள்ளுகின்ற பூச்சியினங்கள் இன்னும் இந்த உலகிலே வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. அந்த நிலையிலே மனிதன் கூடுமானவரை ரசாயன கலப்பில்லாத பொருள்களை ஏற்பதே சரி என்றுதான் நாங்கள் கூறுகிறோம். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாத பட்சத்திலே முடிந்தவரை அதனை பின்பற்றிவிட்டு அதன் தீய பக்க விளைவுகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள கசப்பான மூலிகைகளை அதிகம் ஏற்றால் அதனால் தீய பின் விளைவுகள் இல்லாமல் இருக்கும். இது ஒன்றுதான் இக்கலியில் (இக்கலிகாலத்தில்) ஏற்ற வழியாகும்.

சுசீந்திரம் கோவில்

சுசீந்திரம் கோவிலில் உள்ள தூணில் உள்ள இந்த சிலையின் ஒரு காதில் 0.5 மிமீ விட்டம் கொண்ட மெல்லிய குச்சியை செலுத்தினால் மற்றொரு காது வழியாக குச்சியின் மறுமுனை வெளிவருகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 228

கேள்வி: தங்கள் வாக்கின்படி சிவன் கோயிலுக்கு என்னால் முடிந்த அறப்பணிகளை செய்து கொண்டிருக்கிறேன். என்றாலும் சில தடங்கல்கள் வருகின்றன. அந்தக் கோவில் திருப்பணிகள் எப்போது பூர்த்தியாகும்?

இறைவன் கருணையால் விரைவில் கலச விழா (கும்பாபிஷேகம்) காண யாமும் இறையிடம் பிராத்தித்து நல்லாசிகளை இத்தருணம் கூறுகிறோம். இத்தருணம் யாம் இயம்புவது யாதென்றால் கூடுமானவரை இது போன்ற பொது செயல்களில் ஈடுபடுகின்ற மனிதர்கள் கூடுமானவரை நேர்மையாக செயல்படுவது மிக மிக முக்கியம். என்றாலும் கூட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பெருவாரியான இடங்களில் அது இயலாமல் போய் விடுகிறது. யாங்கள் (சித்தர்கள்) ஒருவனைப் பார்த்து ஆங்காங்கே நடக்கும் ஆலயத் திருப்பணிகளுக்கு உன்னால் முடிந்ததை செய் என்றால் அதைப் போல் நிறைய காப்பகங்களுக்கு முடிந்த உதவிகளை செய் என்றால் அவன் சென்று பார்த்துவிட்டு என்ன கேட்பான்? அங்கு நடப்பதெல்லாம் திருப்தியாக இல்லை. ஏமாற்றுகிறார்கள். எப்படி நான் செய்வது? என்று கேட்பான். இல்லை (என்றால்) தனத்தைக் கொடுத்து விட்டு தனத்தைக் கொடுத்தேன். என்னைப் போல் பலரும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இன்னமும் அங்கு பணி பூர்த்தியடையவில்லை. ஏதோ தவறு நடக்கிறது. ஏன் இப்படிப்பட்ட இடத்திற்கு நாங்கள் உதவி செய்யும் ஒரு நிலை ஏற்பட்டது? நீங்கள் தானே கூறினீர்கள். அதனால் தானே அறப்பணிகளுக்கு உதவினேன். இப்படி வீணாகிவிட்டதே? என்றெல்லாம் எம்மிடம் (அகத்திய மாமுனிவர்) அடுக்கடுக்காக வினாவை வைப்பான். இதற்கெல்லாம் ஒட்டு மொத்தமான பதில் 100 க்கு 100 நேர்மையான மனிதர்களை இந்த உலகம் இன்னும் காணவில்லை என்பதுதான்.

எனவே அவரவர்களால் சக்திக்கு இயன்ற உதவிகளைத் தொடர்ந்து அது ஆலயத் திருப்பணியாக இருந்தாலும் வேறு தர்ம காரியங்களாக இருந்தாலும் செய்து கொண்டே செல்ல வேண்டியதுதான். விளைவுகளைக் குறித்து சிந்திக்கக் கூடாது. ஒரு முறையோ இரு முறையோ செய்து பார்த்து விட்டு திருப்தியில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளலாமே தவிர செய்யும் முன்னரே இது நேர்மையான அமைப்பா? இங்கு தனம் தந்தால் முறையாக செயல்படுவார்களா? என்றெல்லாம் ஆய்ந்து (ஆராய்ந்து) பார்த்தால் எமது (அகத்திய மாமுனிவர்) நோக்கில் ஒன்று கூட இந்த உலகிலே ஏற்றம் பெறாது. இந்த நிலையிலே அந்தந்த மனிதனும் அவனவன் மன சான்றாக ஒரு ஆலயத்தை நோக்கி சென்று தன்னால் முடிந்ததை செய்து விட்டு அனைத்தும் இறைவனுக்கு சொந்தம் இறைவனுக்கே அர்ப்பணம் செய்து விட்டோம். எனவே விளைவுகளுக்கும் இறைவனே பொறுப்பு என்று வந்து விடுவதுதான் ஏற்புடையது. இது குறித்தெல்லாம் ஆய்வு செய்தால் ஒருவன் கூட ஒரு அறப்பணி கூட செய்ய இயலாது. இல்லை திருப்தியாக இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன். என் மனதிற்கு திருப்தியில்லையென்றால் நான் தர மாட்டேன் என்றால் அது அவனவன் விருப்பம். யாங்கள் எதுவும் தடை கூறவில்லை. எனவே உன்னால் முடிந்த உதவியை எந்த ஆலயத்திற்கும் நீ எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். தடை நீங்க வேண்டுமென்றால் ஒவ்வொரு முறையும் விநாயகப் பெருமானை அருகிலுள்ள ஆலயம் சென்று வணங்கி பிறகு முயற்சியில் இறங்கு. தடை நீங்கி நலம் நடக்கும்.

சுலோகம் -122

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-3

பாவமற்ற அர்ஜூனா இந்த உலகில் இரண்டு வகைகள் கொண்ட நிஷ்டைகள் (வழி முறைகள்) முன்பு என்னால் கூறப்பட்டது. இவற்றில் உலக விஷயங்களில் ஈடுபடாமல் ஞானத்தை பிரதானமாக கொண்டவர்களுக்கு சாங்கிய யோகமும் (ஞானயோகம்) உலக விஷயங்களில் ஈடுபட்டவர்களுக்கு கர்ம யோகமும் அமைகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகம் படைக்கப்பட்ட பின் படைக்கப்பட்ட உயிர்கள் அவர்களின் ஆசைகளுக்கு ஏற்ப பலவிதமான தன்மைகளுடன் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அவர்களின் தன்மைக்கு ஏற்ப மோட்சத்தை அடைய என்னால் இரண்டு வழி முறைகள் உருவாக்கப்பட்டன. ஒன்று ஞான யோகம். இந்த உலக விஷயங்களான பந்தம் பாசம் உறவு செல்வம் என்று எதிலும் ஈடுபடாமல் தான் யார் என்று ஆத்ம விசாரணை செய்து தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து ஞானத்தை அடைந்து மோட்சம் அடைபவர்கள். இவர்கள் ஞான யோகத்தின் வழி செல்பவர்கள். இரண்டு கர்ம யோகம். ஆசைகளின் விளைவாக உலக பற்றுகளில் மாட்டிக் கொண்டு புலன்களின் வழியாகச் சென்று உலக விஷயங்களில் ஈடுபட்டு செல்வார்கள். ஆசைகளினால் தனது புலன்களின் வழியாக அவர்கள் சென்றாலும் அதனை பற்றில்லாமல் செல்ல வேண்டும் என்று இவர்களுக்கு சொல்லப்பட்டது கர்ம யோகம் ஆகும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி:

அர்ஜூனனை ஏன் பாவமற்ற அர்ஜூனா என்று கிருஷ்ணர் அழைக்கிறார்?

பாவம் உள்ளவன் இறைவனை அடைய இரண்டில் எந்த வழிமுறையிலும் செல்ல தகுதி அற்றவன் ஆகிறான். அர்ஜூனன் பாவமற்றவன் என்று சொல்வதின் வழியாக நான் செய்கிறேன் என்ற பற்றில்லாமல் கர்ம யோகத்தின் படி யுத்தம் செய்து கர்ம யோகத்தை கடைபிடித்து இறைவனை அடைய தகுதி உடையவன் என்று அர்ஜூனன் புரிந்து கொள்ளும் வகையில் கிருஷ்ணர் அவ்வாறு அழைக்கிறார்.

சுலோகம் -121

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-2

குழப்பமான பேச்சினால் என் புத்தியை தடுமாறச் செய்கிறாய். ஆகையால் எனக்கு நன்மையானது எதுவோ அந்த ஒன்றை தீர்மானமாகச் சொல்லுங்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இவ்வளவு நேரம் நீ என்னிடம் தெளிவாக அறிவுரைகள் சொன்னாலும் அனைத்தையும் கேட்ட என்னுடைய கூர்மையில்லாத புத்தி குழப்பம் அடைந்து உண்மையை அறிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறது. உன்னுடைய அறிவுரையின் படி ஞானம் கர்மம் இரண்டும் ஓரே நேரத்தில் ஒரு மனிதனால் பின்பற்ற இயலாது. இரண்டில் ஒன்றை மட்டுமே கடைபிடிக்க முடியும் என்றால் நான் எதனை கடைபிடித்தால் மோட்சம் பெறுவேன். எனக்கு சரியான வழியைச் சொல்லுங்கள் என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்கிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 227

கேள்வி: கோவில் திருப்பணி சிறப்பாக நடக்க ஆசிகள்:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இந்த ஆன்மா லயிக்கின்ற இடம் ஆலயமாகும். ஒவ்வொரு மனிதனும் தம் தம் மனதிற்குள் ஆலயத்தை எழுப்புவதும் மனமாகிய கருவறையிலே தூய இறையை அமர்த்தி அன்றாடம் அன்பால் பூஜை செய்வதுமே இறைவன் விரும்புவது. இருப்பினும் எடுத்த எடுப்பிலேயே இது போன்ற தத்துவார்த்த விஷயங்களைக் கூறினால் அது பலனைத் தராது என்பதால்தான் புற வழிபாடுகளும் புற பூஜைகளும் முன்னோர்களாலும் மகான்களாலும் வகுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலே பல்வேறு ஆலயங்கள் பல்வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டு அது காலம் கடந்தும் நிற்கிறது. சில சிதிலமடைந்து விடுகிறது. இவை அனைத்திற்குமே பல்வேறு விதமான சூட்சும காரணங்கள் இருக்கின்றன. இந்த இன்னவன் எழுப்பிய வினாவின் அடிப்படையிலே இந்த ஆலயம் சிறப்புற வளர யாம் இறைவன் அருளால் நல்லாசிகள் கூறுகிறோம். எந்தவொரு ஆலயமும் மெய்யாக மெய்யாக வளர மெய்யன்பர்கள் ஒன்று பட்டால் போதும். அங்கே அருள் இணைப்பு இருந்தால் போதும் பொருள் இணைப்பு மிகப்பெரிய விஷயம் அல்ல. இறைவன் கருணையால் இனிதே நடக்கும். இந்தத் தமிழ் மண்ணில் உள்ள மூத்தோனுக்கு தலை சிறந்த ஆலயங்கள் அங்கெல்லாம் தொடர்புடைய மனிதர்கள் சென்று இயன்ற வழிபாடுகள் செய்து பணியை துவக்க நலம் நடக்கும். நல்லாசிகள்.

கேள்வி: சூளகிரி வரதராஜப் பெருமாள் பற்றி:

வரதராஜப் பெருமாள் திருக்கோவில். இடம் சூளகிரி. மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம்.

இறைவன் கருணையாலே அனைத்து புராண சம்பவங்களும் நடந்தது உண்மை. தக்க காலத்தில் இன்னமும் வலிவும் பொலிவும் அந்த சூழலும் உருவாகும். ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆலயம் வளர்ச்சி பெறுவது என்பது மனித நோக்கிலே இருப்பது அல்ல. பெருவாரியான மனிதர்கள் ஒரு ஆலயத்தை நோக்கிப் படையெடுத்தால் என்னவாகும்? அங்கு வெறும் வியாபாரம்தான் இருக்கும். இறையம்சம் இருக்குமா? எனவே ஒரு ஆலயம் அத்தனை எளிதாக பலரின் பார்வைக்கு வரவில்லை. பலரும் அதனை எண்ணிக்கூட பார்க்கவில்லை என்றால் சிலர் மட்டும் செல்கிறார்கள் என்றால் அதனால் ஆலயத்திற்குக் குறையொன்றும் அல்ல. தொடர்ந்து அந்தந்த காலத்தில் எந்தெந்த ஆத்மாக்கள் அந்த ஆலயத்தோடு தொடர்புடையவர்களோ அவர்கள் வந்து தொண்டினைத் தொடர்வார்கள். சிறப்பாய் அனைத்தும் நடக்கும். நல்லாசிகள்.

இக்கோவிலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

ஸ்ரீ பிரசன்ன வரதராஜப் பெருமாள்

ஸ்ரீ பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரியில் அமைந்துள்ளது. இக்கோயில் பழமையான புகழ் பெற்ற விஷ்ணு கோவில் ஆகும். இக்கோவில் சூளகிரி மலையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது. மூலவர் ஸ்ரீ பிரசன்ன வரதராஜப் பெருமாள். ஏழு அடி உயரத்தில் மேற்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். உத்ராயண காலத்தில் (ஜனவரி நடுப்பகுதி முதல் ஜூலை நடுப்பகுதி வரை) சூரியன் அஸ்தமனம் ஆகும் போது சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படுகிறது. இதனால் இக்கோவில் அஸ்தகிரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தாயார் பெருந்தேவி மகாலட்சுமி. தனி சன்னதியில் மேற்கு பார்த்த வரதராஜப் பெருமாளை பார்த்தபடி கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மகா மண்டபத்தின் வலது பக்கத்தில் பெருமாளின் காவலனாக அனுமன் இருக்கிறார்.

ஏழு மலை ஏழு கோட்டை ஏழு மகா துவாரங்கள் ஏழு அடி உயர பெருமாள். இந்த ஏழுமலை வாசனுக்கு இப்படி எல்லாமே ஏழு ஏழாக அமைந்திருக்கிறது. சூளகிரி மலையின் மொத்த உயரம் 3000 அடி. மலையின் ஆரம்பத்திலேயே வரதராஜப் பெருமாள் கோயில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. கோயிலின் கருவறை மற்ற கோயில்களை விட உயரம் மிகவும் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் பெருமாளும் ஆரம்பகாலத்தில் கற்பகிரக நிலை வாசலுக்கு உள் அடங்கி இருந்ததாகவும் காலப்போக்கில் வளர்ந்து மகா மண்டபத்தில் இருந்து பார்த்தால் பெருமாள் பாதி அளவே தெரியும் அளவிற்கு வளர்ந்திருப்பதாகவும் வரலாறு உள்ளது. மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் துவாபர யுகத்தைச் சேர்ந்தது. பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் சென்ற போது பல இடங்களுக்கு சென்று விட்டு இந்த சூளகிரி மலைப் பகுதிக்கு வந்தனர். அப்போது அர்ஜூனன் பெருமாளை வழிபடுவதற்காக அங்கிருந்த மலையில் கல்லெடுத்து கோயில் அமைத்து வழிபாடு செய்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூனன் பிரதிஷ்டை செய்ததற்கு அடையாளமாக இன்றும் இந்த மலையில் ஐந்து குண்டு என்ற ஐந்து குன்றுகள் உள்ளன. இது பஞ்ச பாண்டவர்கள் ஐவரைக் கூறிக்கிறது. மேலும் இந்த மலையைப் பார்த்தால் சூலம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனாலேயே இப்பகுதி சூளகிரி என அழைக்கப்படுகிறது. அர்ஜூனனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு சோழ மன்னர்கள் கருவறை கட்டியுள்ளார்கள். விஜயநகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த கிருஷ்ண தேவராயரால் முன் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் பின் கர்நாடகத்தை ஆண்ட ஹோய்சாலர்கள் மற்றும் பாளையக்காரர்கள் விஜய நகர சிற்றரசர்கள் படிப்படியாக இந்த கோயிலை விரிவுபடுத்தி வழிபட்டு வந்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசி மார்கழி தனுர் பூஜை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தப்பகுதியிலேயே இங்கு தான் மிகப்பெரிய கருடாழ்வார் வாகனம் அமைந்துள்ளது. திருவிழா காலங்களில் கருட சேவை இத்தலத்தின் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அனுமன்

இந்தியாவின் மகாராஷ்டிராவில் இகத்புரி அருகே திரிங்கல்வாடி கோட்டையின் சுவரில் அனுமான் அருள் பாலிக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 226

கேள்வி: பிறவாத வரம் வேண்டும் என்று கேட்க வேண்டுமா? அல்லது பிறவி தொடர்ந்து வர வேண்டும் என்று கேட்க வேண்டுமா?

இறைவன் கருணையைக் கொண்டு இன்னவனுக்கு இன்னவன் வினாவிற்கு இத்தருணம் யாங்கள் இயம்புவது ஒன்று மந்திரி ஒருவன் இருக்கிறான். மிகவும் உயர்ந்த பதவி என்று வைத்துக் கொள்வோம். அவனை எனக்குத் தெரியும். என் தோழன். என்னோடு தங்கி பயின்றவன் என்று கூறுவது உயர்வா? அல்லது அந்த மந்திரி இன்னாரை எனக்குத் தெரியும். என்னுடன் கல்வி பயின்றவன். உள்ளே அழைத்து வாருங்கள் என்று கூறுவது சிறப்பா?. இறைவனைத் தெரியும் என்று மனிதன் கூறுவதை விட இத்தனை கோடி மனிதர்களில் இவனை எனக்குத் தெரியும். அதோ வருகிறாள் யார்? எம் தாய் என்று காரைக்கால் அம்மையாரைப் பார்த்து முக்கண்ணன் (சிவபெருமான்) கூறினாரே? அதோ வருகிறார் யார்? நம் தோழன் என்று சுந்தரரைப் பார்த்துக் கூறினாரே? (கூறியது சிவபெருமான்) அதைப் போல இறைவனைத் தேடி யாரும் செல்ல வேண்டாம். ஒவ்வொரு மனிதனையும் தேடி இறை வரும் வண்ணம் ஒவ்வொரு மனிதனும் பக்குவம் அடைந்தால் போதும்.

எப்படி பக்குவம் அடைவது? என்பதற்குத்தான் பல்வேறு நீதி நூல்கள் இருக்கின்றன. யாமும் சில காலமாக இறைவன் அருளால் வாக்கினை ஓதிக்கொண்டு இருக்கிறோம். எனவே என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?. இது வேண்டுமா? வேண்டாமா? பிறவி தொடர்வதா? தொடராமல் இருப்பதா? இது போன்ற அனைத்தையும் விட்டுவிட்டு எந்தவிதமான எண்ணங்களும் இல்லாத வெற்றுப் பாத்திரமாக மனதை வைத்து இறையிடம் பரிபூரண சரணாகதி என்பதை எண்ணங்களால் வைத்து மெளனத்தையே மொழியாக்கி ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்தால் அவன் யார்? அவன் எதற்கு? அவன் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்பதை இறையே உணர்த்தும். எனவே இன்னவனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இது பொருந்தும். எல்லோரும் இறையின் நகல்கள்தான். ஆனால் கனகம்(தங்கம்) இருக்கிறது. அது கனகம் (தங்கம்) என்று தெரியாத நிலையில் சேற்றிலே அமிழ்ந்து கிடந்தால் யாரும் மதிக்க மாட்டார்கள். தூய்மைப்படுத்தினால் கனகம் என்பது தெரியும். அதைப் போல பற்று மாயை அறியாமை ஆசை சுயநலம் தன்முனைப்பு போன்ற அழுக்குகள் மனித ஆன்மாவை மூடியிருக்கின்றன. இவற்றை விட்டுவிட்டால் எல்லோரும் இறை நிலைக்கு உயர வாய்ப்பு உண்டு. ஆசிகள்.

கேள்வி: மூத்தோனை வணங்கு என்று சொன்னீர்கள். மூத்தோன் என்றால்? தமிழ் மூத்தோனாகிய முருகரா? அல்லது ஈஸ்வரனா? தாங்கள் குறிப்பாக சொன்னால் உதவியாக இருக்கும்:

யாம் (அகத்திய மாமுனிவர்) விநாயகப் பெருமானைக் குறிப்பிட்டோம். ஆனால் விதி உன் மதியில் அமர்ந்து மூவரையுமே கூற வைத்து விட்டது. எனவே மூவரையுமே நீ வணங்கு.