ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 394

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

இயம்புகிறோம் பொதுவாய் இதுபோல் சுவடி பூஜை பின் வாக்கை ஓதுகின்ற எண்ணம் எமக்கில்லை என்றாலும் சேய்களின் ஆர்வத்திற்காக இதுபோல் இறைவனின் கட்டளைக்காக யாங்கள் சில வாக்குகளை சில துளிகள் மட்டும் ஓத இருக்கிறோம். இருந்தாலும் கூட எம்மை குறித்து ஏதும் கூறவில்லையே? எமது நாமத்தை அழைத்து ஏதும் கூறவில்லையே? எனது மனக்குறையை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அதனை குறிப்பிட்டு எதனையும் கூறவில்லையே? என்றெல்லாம் எமது சேய்கள் சிந்தனையில் வாட்டத்தை வழியவிடாமல் இதுபோல் யாங்கள் கூறுவதை சரியாக புரிந்து கொண்டால் அது இங்குள்ள அனைவருக்குமே பொருந்தும் என்பதை இத்தருணம் இறைவனருளால் யாங்கள் கூறுகிறோம்.

நல்விதமாய் இதுபோல் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு கணமும் இறைவன் அருளால் நலமாய் இருக்க வேண்டும் என எண்ணும் சேய்கள் மனதிலே கள்ளமோ கபடமோ சூதோ சூழ்ச்சியோ இல்லாமல் வாழ முயற்சி எடுத்தல் அவசியமாகும். சூதும் வாதும் வஞ்சனை செய்யும் என்பது போல இதுபோல் எதிர்மறை எண்ணங்களும் தீய எண்ணங்களும் உள்ளத்தில் வைத்துக்கொண்டு எத்தனைதான் இறைவழியிலே வந்தாலும் எத்தனைதான் இறைவனின் திருநாமத்தை ஸ்லோகங்களை கூறினாலும் கட்டாயம் இறைவன் அருள் பரிபூரணமாக கிட்டுவது கடினம் கடினம் கடினம். எனவே இறைவன் அருளை பெற வேண்டும் இறைவனருளால் கூடுமானவரை துன்பமில்லாமல் வாழ வேண்டும் அல்லது துன்பம் வந்தாலும் அதனை தாங்குகின்ற திறன் வேண்டும் என எண்ணுகின்ற சேய்கள் இக்கணம் முதல் நல்விதமாய் சூதையும் சூழ்ச்சியையும் விட்டுவிட நன்மையாம்.

இதுபோல் மறந்தும் பிறரின் மனதை புண்படுத்துகின்ற செயலை விட்டுவிடுதல் மேலும் நலமாம். இதுபோல் யாங்கள் ஏன் இவ்வாறு கூறுகிறோம்? என்றால் இறைவன் வழியில் வந்துகொண்டுதான் இருக்கிறோம். சித்தர்களின் வாக்குகளை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இருந்தும் பெரிதாக வாழ்விலே முன்னேற்றம் இல்லை ஏற்றமில்லை துன்பங்கள் குறையவில்லை என எண்ணியெண்ணி வருந்துகின்ற சேய்களுக்கு தங்கள் குறைகள் பெரிதும் தெரிவதில்லை. நான் சரியாகத்தான் இருக்கிறேன், சிந்திக்கிறேன் பேசுகிறேன். என்னிடம் குறையில்லை என்று ஒவ்வொரு மனிதனும் எண்ணுகிறான். ஆனால் அப்படியல்ல. தனக்குள்ளே தானே தீவிரமாய் சிந்தித்துப் பார்த்து தன் குறையை தானாக முன்வந்து பிறர் முன் ஒப்புவித்து அதனை நீக்கிக் கொள்ளுதலே இறையருளை பெறுவதற்கு உண்டான அடிப்படை குணமாகும்.

இவற்றை எமது சேய்கள் தொடர்ந்து கடைபிடித்தால் எமது வாக்கின் தன்மையும் வாக்கின் கூர்மையும் மெல்ல மெல்ல புரியும். இல்லையென்றால் வெறும் போலித்தனமான ஆன்மீக பயணமாகத்தான் வாழ்வு அமையுமே தவிர மெய்யான மெய்யான மெய்யிலும் மெய்யான ஆன்மீகம் புரிபடாமல் சென்றுவிடும். எனவே தெள்ளத் தெளிவான திடமான உறுதியான சிந்தனை உள்ளார்ந்த நேர்மையான சிந்தனை சத்திய நெறி தொண்டு பரிபூரண சரணாகதி பக்தி எத்தனைமுறை எம்முன் அமர்ந்தாலும் அமர்கின்ற சேய்களுக்கு இவையெல்லாம் வரும் வரையில் பரிபூரண இறைவனருள் கிட்டுவது கடினம் என்பதை மீண்டும் யாங்கள் இறைவன் அருளைக் கொண்டு இயம்பிக்கொண்டே இருக்கிறோம். இதுபோல் நல்விதமாய் மனக்கலக்கம் தேகநலம் சார்ந்து தேக நலத்திலே மிகவும் வேதனையோடு இருக்கின்ற சேய்களுக்கு கூறுவது அருகே உள்ள அரங்கத் தடத்திலே தன்வந்திரியின் அருளை பெற தன்வந்திரியின் பரிபூரண ஆசியை பெற அதோடு சிகிச்சையும் சேர இதுபோல் மனதை வாட்டும் நோயும் இங்குள்ள சேய்களுக்கு மெல்ல மெல்ல மாறும். எனவே அச்சமின்றி நல்விதமாய் எக்காலமும் சென்று தன்வந்திரியை வணங்க நன்று. அதிலும் அந்தந்த சேய்களின் ஜென்ம நட்சத்திரம் அறிந்து அன்று சென்று வணங்க பரிபூரணம் பரிபூரணம் தேக நலம் ஆகுமப்பா.

இதோடு யாங்கள் கூறவருவது பொதுவாய் தேக நலம் நன்றாய் இருக்க செய்கின்ற முயற்சிகள் ஏற்கின்ற உணவுகள் செய்கின்ற உடற்பயிற்சிகளோடு நல்விதமாய் மஹா மிருத்யுஞ்சய மந்திரத்தை அன்றாடம் உருவேற்றுதலும் இதுபோல் திருநீற்றுப் பதிகத்தை உருவேற்றுதலும் திருநீலகண்ட பதிகத்தை உருவேற்றுதலும் நல்விதமாய் பழனியெம்பெருமான் திருவடியை வணங்கி போகனையும் வணங்கி திருநீற்று பிரசாதத்தை ஏற்றுக்கொள்வதும் நன்றாம். இதுபோல் தேக நலம் தாண்டி அடுத்ததாக உள்ள பிரச்சினை எதுவாக இருப்பினும் பொருளாதாரம் சார்ந்தோ சேய்களின் வாழ்வு நிலை குறித்தோ மண வாழ்க்கை குறித்தோ ஏதாக இருந்தாலும் நல்விதமாய் அரங்கனையே கூறுகிறோம். நல்விதமாய் சுக்கிர வாரம் சென்று அரங்கனை சேவிக்க நல்விதமாய் இதுபோல் கூறிய உபய பிரச்சினையும் நல்விதமாய் நல்விதமாய் இதுபோல் தருணத்திலே வாக்கினை கேட்கின்ற சேய்களுக்கு பலிதமாகும் என்பதனால் எதிர்வரும் சுக்கிரவாரம் தொட்டு தொடர்ந்து சென்று நல்விதமாய் அரங்கனை சேவிக்க தடைபட்ட திருமண முயற்சி நல்விதமாய் ஆவதோடு நல்விதமாய் அரங்கனை சுக்கிர வாரம் சென்று வணங்க இயலவில்லையே? என்று அன்றுதான் செல்லவேண்டும்ஙஎன்று வைராக்யம் கொண்டு செல்வது நன்றுதான் என்றாலும் அன்று செல்லவில்லை என்றால் வேறொரு தினத்தில் தாராளமாய் சென்று சேவிக்கலாம். குற்றமேதுமில்லை என்று சேய்கள் உணர நன்றாகும்.

இதுபோல் நல்விதமாய் இறை வழியிலே வருகின்றேன் இறை தொண்டினை செய்கின்றேன் இறைவனை தேடித்தேடி அலைகின்றேன் அப்படியிருந்தும் மண வாழ்க்கை திருப்தியில்லை. மண வாழ்விலே பல்வேறு பிரச்சினைகள் குழப்பங்கள் வழக்கு மன்றம் செல்ல வேண்டியிருக்கிறதே? என்று வருந்தும் எம் வழி வருகின்ற சேய்கள் நல்விதமாய் கூறுகிறோம். இதுபோல் இத்தருணத்தில் குருவின் ஹோரையிலே கேட்கின்ற வாக்கு தன்னிலே பிரச்சினைக்கும் அரங்கனை நாடி சென்று வணங்கத்தான் நன்று. இதுபோல் ரோகிணி மீனிலே அரங்கனும் வாக்கை கேட்டு அருள் புரிகிறேன் என்று புன்னகை பூத்துக்கொண்டு இருக்கிறார் என்பதனால் அரங்கனை மீண்டும் மீண்டும் இழுக்கின்றேன் இத்தருணம் இதுபோல் சேய்களின் பிரச்சினைக்கு. நல்விதமாய் சேய்களின் எதிர்கால திட்டத்திற்கு வித்தைக்கு எதிர்காலம் என்னவாக இருக்கும்? என்று அஞ்சுகின்ற நல்விதமான ஈன்றோருக்கும் சேய்களுக்கும் கூட கூறுகிறோம் நல்விதமாய் புந்தி வாரம் சென்று அரங்கனை சேவிக்க நன்றுதான்.

இன்று பிரச்சினைகள் பல பலவிதமான சேய்களின் மனக்குறைகள் பல தீர்வு ஒன்று என்று கூறியிருக்கிறோம். ஆகையால் ஏனைய ஆலயங்கள் செல்ல வேண்டாம் ஆனைக்கா தடம் இங்கிருக்க அரங்கனை கூறுகிறாரே சித்தர்? என்று எண்ணிடவும் வேண்டாம். இதுபோல் ஒரு குறிப்புக்காக கூறுகிறோம். சேய்களின் கல்வியும் வெற்றி முயற்சிக்கும் கூட நல்விதமாய் அரங்கனின் திருவடியை சென்று சேவிக்க நன்றாம். இதுபோல் நல்விதமாய் இருக்கின்ற இல்லம் திருப்தியில்லை இல்லம் தாண்டி செல்ல வேண்டும் அதற்கு யாது செய்வது? என்றால் அதற்கும் அரங்கன் திருவடியை சேவிக்க நன்றுதான். நல்விதமாய் இறைவன் அருளால் திருமணம் நெருங்கி வருகிறது. நல்விதமாய் முடிய வேண்டும் என்று எண்ணுகின்ற சேய்களுக்கும் கூறுகிறோம். நல்விதமாய் அரங்கனின் திருவடியை சேவிக்க நன்றுதானே. இதுபோல் நல்விதமாய் திருமணம் ஆகிவிட்டது. பந்தமும் நன்றாக தொடர்கிறது. வாரிசுதான் வரவில்லை? என்று ஏங்குகின்ற தம்பதியருக்கும் கூறுகிறோம். நல்விதமாய் அனலோன் வாரம் சென்று நல்விதமாய் அரங்கனை சேவிக்க நன்றுதானே.

இதுபோல் நல்விதமாய் விதவிதமான பிரச்சினைகள் நெருக்கடியை தந்துகொண்டே இருக்கிறது. ஒரே குடும்பத்தில் விதவிதமான மனிதர்கள். யாரோடும் யாரும் ஒத்துப்போவதில்லை. மனக்குழப்பம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. யாது செய்வது? என்று தெரியவில்லை. ஒத்தும் போக முடியவில்லை விலகியும் செல்ல முடியவில்லை என்று ஏங்குகின்ற சேய்களுக்கும் கூறுகிறோம். நன்றாக முடவன் வாரம் அதுபோல் அரங்கனை சென்று சேவிக்க நன்றுதானே. எனவே தான் படைத்து காக்கின்ற உயிர்களுக்கு கர்மவினையால் பிரச்சினைகள் வந்தாலும் தானே அதற்கு தீர்வாக நின்று அரங்கன் நல்லாசி தர காத்திருக்க ஆனைக்கா அன்னையையும் ஐயனையும் வணங்கி இதுபோல் கர்மமும் பாவமும் அதிகமாக இதுபோல் சமுதாயத்தில் சேர்ந்ததின் எதிரொலிதான் அதுபோல் ஜம்புகேசுவரரின் அருகே நீரின்றி போனதப்பா. எனவேதான் புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள யாம் அடிக்கடி இயம்பிக் கொண்டே இருக்கிறோம். எனவே குறைந்தபட்சம் நல்விதமாய் பலரும் இந்த உலகிலே வாழ பலர் வாழ்வதற்காவது சிலராவது தொண்டு செய்வது அவசியம். எனவேதான் யாரெல்லாம் எம்மை நம்புகிறார்களோ யாரெல்லாம் இவ்வோலையில் பேசுவது சித்தர்தான் என்று மனதார எண்ணி இதுபோல் இவ்வோலையை பின்பற்றி வருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் மீண்டும் மீண்டும் கூறுவது சராசரி உலக வாழ்வை பார்த்து மயங்க வேண்டாம். ஏமாற வேண்டாம். மாயை பற்றிக்கொண்டுதான் இருக்கும். அதனை விட்டுவிட்டு யாங்கள் என்ன கூறுகிறோமோ அதனை தொடர்ந்து மனதில் பிடித்துக்கொண்டு அதை எதிர்த்து எந்த மூடன் விமர்சனம் செய்தாலும் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு அந்த மூடன் மீதும் சினம் கொண்டிடாமல் அமைதியாக எமது வழியை பின்பற்ற நன்றாம்.

ஏனென்றால் ஒருசிலராவது புண்ணியத்தை சேர்த்தால்தான் இந்த பரந்த உலகம் மகான்களின் பிரார்த்தனையால் மட்டுமல்ல மகான்கள் வழியில் வருகின்ற சேய்களின் புண்ணியத்தாலும் நன்றாக இருக்கும். இல்லையென்றால் தொடர்ந்து பரந்துபட்ட பாரத மண்ணிலே அடுத்தடுத்து நவகிரகங்களின் இயக்கத்தினால் தொடர்ந்து மனதிற்கு விரும்பத்தகாத சம்பவங்கள்தான் நடக்க இருக்கின்றன என்பதால் தொடர்ந்து கூட்டு பிரார்த்தனை தொடர்ந்து சுயநலமற்ற தொண்டு சரணாகதி பக்தியையும் தர்மத்தையும் சத்தியத்தையும் அதிகரித்து அதிகரித்து எமது சேய்கள் பரந்த இந்த உலகம் இந்த பிரபஞ்சம் நன்றாய் வாழவேண்டும் என பிரார்த்தனை செய்ய தொண்டு செய்ய தர்மம் செய்ய சத்திய வழியில் நிற்க இறைவன் அருளால் நல்லாசிகளை கூறுகிறோம். இதுபோல் நல்விதமாய் தொடர்ந்து மனக்கவலை இருந்தாலும் மன சோர்வு இருந்தாலும் எத்தனைதான் துன்பங்கள் வந்தாலும் யாங்கள் கூறுகின்ற நல்வழிமுறையை விட்டுவிடாது வருகின்ற சேய்களுக்குதான் இறைவன் அருள் தொடரும் என்பதை கூறுகிறோம். நல்விதமாய் இதுபோல் ஓலை இருக்கின்ற இல்லத்தின் தலைவனுக்கும் அதுபோல் தாரத்திற்கும் சேயவளுக்கும் சேயவனுக்கும் நல்விதமான நல்லாசியை கூறி தொடர்ந்து இறைவன் அருளை பெறுகின்ற அவர்களது முயற்சி வெற்றி பெற அத்தனை சேய்களின் வாழ்வும் நன்றாக முன்னேற இறைவன் அருளாலே நல்விதமாய் மீண்டும் நல்லாசிகளை கூறுகிறோம் ஆசிகள் ஆசிகள் ஆசிகள்.

தீர்க சுமங்கலி பவா

தீர்க சுமங்கலி பவா என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.

ஒன்று திருமணத்தில்
2 வது 60 வயது சஷ்டியப்த பூர்த்தியில்
3 வது 70 வயது பீமரத சாந்தியில்
4 வது 80 வயது சதாபிஷேகத்தில்
5 வது 96 வயது கனகாபிஷேகத்தில்

60 வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் தனது என்ற பற்றை துறக்கும் போது செய்வது சஷ்டியப்த பூர்த்தி திருமணம் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.

70 வது வயதில் தன்னுடைய மகன் மகள் சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும். காமத்தை (ஆசைகள்) முற்றிலும் துறந்த நிலையே பீம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

80 வது வயதில் ஒவ்வொரு உயிரிலும் இருக்கும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும். மனிதனுக்கு ஜாதி மதம் இன பேதம் எதுவும் இல்லை. அனைத்திலும் அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார்.

96 வது வயதில் இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி ஆசி பெறுகிறார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 393

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் நல்விதமாய் இதுபோல் சேய்கள் அனைவரும் அனைத்து உயிர்களும் நலமாய் வாழ இறைவனருளைக் கொண்டு நாங்கள் பிரார்த்தனையை செய்கின்றோம் நாள்நாளும். இதுபோல் எல்லா உயிரும் சிறப்பாய் வாழ இதுபோல் காலகாலம் மகான்கள் செய்கின்ற பிரார்த்தனைகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் எல்லா உயிர்களும் சிறப்பாய் வாழ வேண்டுமே? ஆனால் நடைமுறையில் அப்படியில்லையே? என்ற ஐயம் எழும். அது ஒருபுறமிருக்க இக்கணம் இத்தருணம் ரோகிணி மீன் ஓடும் காலம் நல்விதமாய் அன்னையின் அருள் தடத்திலே கூடி இருக்கின்ற சேய்கள் அனைவருக்கும் இறைவனின் அருளைக்கொண்டு யாம் நல்லாசிகளை கூறுகிறோம்.

ஊருக்கா பேருக்கா பூஜை? இல்லை. உயிருக்கா உயிரில் உள்ள இறைக்கா பூஜை? இல்லை. உள்ளத்திற்கா உள்ளத்தில் உள்ள தொடரும் எண்ணத்திற்கா பூஜை? இதுபோல் எண்ணும் பொழுது நல்விதமாய் தாய்க்கா தந்தைக்கா? வாய்க்கா வாய்ப்புகளெல்லாம் மகனுக்கா வாய்க்கும்? வாய்த்தாலும் நல்விதமாய் மகளுக்கா வாய்க்கும்? அல்லது மகனுக்கா வாய்க்கும்? மகனுக்கோ மகளுக்கோ வாய்த்தாலும் அதுபோல் மகனுக்கும் மகளுக்கும் பிறக்கும் சேய்க்கா வாய்க்கும்? நல்விதமான வாய்ப்பை நல்விதமாய் தொடர்ந்து தாய்க்கா தந்தைக்கா என்றில்லாமல் இங்குள்ள அனைத்து சேய்க்கும் நல்வாய்ப்பு வாய்க்க நல்விதமாய் ஆனைக்கா அன்னை அருள் புரியட்டும் என்று அன்று பூனைக்கும் அருள் புரிந்து பின்னர் சிற்றுயிருக்கும் அருள் புரிந்த ஈசன் இந்த சிறு கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் இந்த ஆத்மாவிற்கும் அருள் புரிய நல்விதமாய் பரம்பொருள் அருளட்டும் அருளட்டும் என்று இந்த ஆனைக்கா தடத்திலே நல்விதமாய் ஆனைக்கா அன்னையின் திருவடி தொட்டு ஆனைக்கா அன்னையின் அன்பினை பெற சேய்கள் தொடரும் தொடரும். எதை தொடரும் தொடரும்? பிறவி தொடரும் என்றாலும் பிறவி தொடரா தொடர தொண்டினை தொடர உயிருக்கு அருளை தேடும் வழிமுறையை யாங்கள் கூறுகின்ற வழிமுறையை தொடர்ந்து பின்பற்ற நல்விதமாய் உயிருக்கா உதவும் இந்த அன்னைக்கா நிழலில் என்றென்றும் இச்சேய்கள் இளைப்பாற நல்விதமாய் நல்லாசியினை மீண்டும் அன்னையின் அடிதொட்டு கூறுகிறோம்.

நல்விதமாய் இவ்வாறு கூறினால் எவ்வாறு புரிவது தொண்டினை? இவ்வாறு கூறினால் எவ்வாறு புரிந்து கொள்வது வாழ்வினை? என்றெல்லாம் சிந்தையின் ஓடலாம் சேய்களுக்கு. யாங்கள் நாள்நாளும் சந்திக்கின்ற பிரச்சினையை சித்தர்கள் தொடர்பால் தீர்த்துக் கொள்ளலாம் என்று வந்தால் பிரச்சினையே எங்களை கொல்லலாம் என்றுதானே துரத்துகிறது. தீர்த்துக் கொள்ளலாமா? அல்லது பிரச்சினை எங்களைக் கொல்லலாமா? என்றெல்லாம் சிந்தனை சேய்களுக்கு ஓடுகின்ற இத்தருணத்திலே எப்பிரச்சினையும் தொடராது இருக்க எம்மை நம்புகின்ற சேய்கள் ஓலையிலே யாங்கள் ஓதுகின்ற வாக்கினை சரியாக புரிந்து கொள்கின்ற சேய்கள் நன்றாய் மனதை திடமாக்கி நுட்பமாக்கி உயர்வாக்கி சிந்தனையை கூர்மையாக்கி என்றென்றும் சராசரி மனிதர்களின் செயலைப் பார்த்து சங்கடம் கொள்ளாது என்றென்றும் எங்களது வாக்கினை சற்றே கூர்ந்து கவனித்து சிந்தித்து சிந்தித்து யாங்கள் என்ன கூற வருகிறோம்? எப்படி கூறுகிறோம்? எந்த நிலையில் கூறுகிறோம்? எதற்காக கூறுகிறோம்? எந்த வழிமுறையை கூறுகிறோம்? யாருக்கு கூறுகிறோம்? எந்தெந்த சூழலில் எவ்வாறெல்லாம் கூறுகிறோம்? என்று எண்ணி சரியாக புரிந்துகொள்ள எமது வாக்கின் தன்மையை மனதில் சரியாக பதிய வைக்க வாழ்வில் சங்கடங்கள் இல்லாமல் இறைநோக்கி செல்லலாம். ஆனால் அதுபோல் செல்வதற்கு மனம் வலிமை பெறவேண்டும்.

இதுபோல் பல்வேறு பிறவிகளில் சேர்த்த பாவ சுமைகள் கட்டாயம் வாட்டும். எம் தொடர்பு கிடைத்து விட்டாலேயே எல்லா துன்பங்களும் விலகிவிட வேண்டும் என்று சேய்கள் எண்ணுவது ஒருவகையில் சரி என்றாலும் அதுபோல் நேர்மையான பாதைக்கு அது சரியல்ல என்பதை புரிந்து கொண்டு துன்பங்கள் தொடர்ந்தாலும் இறைவனின் அருளால் அந்த துன்பத்தை தாங்குகின்ற வல்லமையை எமது சேய்கள் பெற வேண்டும் என்று கூறி இதோப்ல நல்லாசியை எம்முன் அமர்ந்த சேய்களுக்கும் அமர முயற்சி செய்து வர முடியாமல் சென்ற சேய்களுக்கும் இறைவன் அருளாலே நல்லாசிகளை இயம்புகிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 392

கேள்வி: சிவராத்திரியின் சிறப்புகள் பற்றி:

கண் விழித்தல் என்றால் உறங்காமல் இருத்தல் என்று மட்டும் பொருளல்ல. உறங்காமல் இருத்தல் என்றால் என்ன பொருள் தெரியுமா? அகக்கண் விழித்தல். உள்ளே அகம் விழித்திருக்க வேண்டும். தனித்திரு விழித்திரு பசித்திரு பசித்திரு என்றால் உணவு உண்ணாமல் இருப்பது மட்டுமல்ல. ஆன்மீகத்தில் சென்று ஞான நிலையை அந்த உச்சாணி நிலையை அடைய வேண்டும் என்ற பசியைதான் குறிக்கிறது. எனவே விழித்திருத்தல் என்றால் விழிப்புணர்வோடு இருத்தல். மாயையில் சிக்காமல் இருத்தல். பாசங்களில் பற்றுகளில் மாட்டிக் கொள்ளாமல் இருத்தல். ஆசாபாசங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருத்தல். இதை தவிர வெறும் கண்ணை மூடி சயனத்திலே படுத்து உறங்காமல் இருந்தால் மட்டும் இறையருள் கிட்டிவிடாது. எனவே விழித்தல் என்றால் அனைத்திலும் எச்சரிக்கையாக எந்த மாயையிலும் சிக்கிவிடாமல் இருப்பதற்குண்டான ஒரு பயிற்சி ஒரு முயற்சிதான் இதுபோன்ற பூஜைகள். எனவே அந்த அளவில் இதனை தத்துவார்த்த விளக்கமாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆலயங்கள் சென்றும் வணங்கலாம் இல்லத்தில் இருந்தும் வணங்கலாம். பரிபூரணமாக விரதமிருந்து சிவ நாமத்தை ஜபிக்கலாம். அது சாத்தியமில்லாதவர்கள் குறைந்த அளவு அன்னத்தை சாரமில்லாமல் சுவையில்லாமல் ஏற்பது சிறப்பு. திரவ வடிவ அன்னத்தை ஏற்பது சிறப்பு. அவ்வாறு இல்லத்தில் இருந்து சிவ நாமத்தையும் தேவார திருவாசகத்தையும் அமைதியாக கூறலாம். ஏதாவது ஒரு ஆலயம் சென்று அனைத்து பூஜைகளிலும் கலந்து கொள்ளலாம் அல்லது ஒரு கால பூஜையில் கலந்து கொள்ளலாம். பொருள் வசதி படைத்தவர்கள் ஆலயம் சென்று பூஜைகளுக்கு உண்டான உதவியை செய்யலாம். அனைத்தையும் விட எதுவுமே செய்ய முடியாதவர்கள் அமைதியாக பஞ்சாக்ஷரத்தை மானசீகமாக ஜபித்துக் கொண்டே இருக்கலாம்.

சோழ மற்றும் பாண்டிய மன்னர்களிடம் இறைவன் புரிந்த லீலை

பாண்டிய மாமன்னன் ராஜேந்திரன் சிவபெருமான் மீது மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தான். பட்டத்தரசி சுவர்ண மீனாட்சி எத்தனையோ முறை ஆலய தரிசனத்திற்கு அழைத்துப் பார்த்தாள். அவன் பிடிவாதமாக மறுத்துவிட்டான். தேவி நீ சென்று சொக்கநாதனை வணங்கி வா நான் தடுக்கவில்லை. ஆலயத்திற்கு அளிக்க வேண்டிய எந்த உதவிகளையும் நான் நிறுத்தவில்லை. ஆனால் சொக்கேசனை வணங்கும்படி மட்டும் என்னை வற்புறுத்தாதே என்று உறுதிபடக் கூறிவிட்டான். அப்படி என்னதான் சிவன் மீது உங்களுக்குக் கோபம்? என்று விடாப்பிடியாக வினவினாள் பாண்டிமாதேவி. ராஜேந்திர பாண்டியனின் தந்தை குலபூஷண பாண்டியன் காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

சோழர்கள் அப்போது காஞ்சியிலிருந்து ஆண்டு கொண்டிருந்தனர். சோழன் சிவநேசனுக்கு மதுரை சென்று ஆலவாய் அண்ணலைத் தரிசிக்க வேண்டுமென்று ஆவல். ஆனால் பாண்டியனோடு பகை. எப்படி அங்கு செல்வது? சிவநேசச் சோழன் உறையூர் வந்திருந்தான். எப்படியும் ஒரு நடை மதுரை சென்று மகேசனைத் தரிசிப்பது என்று முடிவும் செய்து விட்டான். மாறுவேடம் பூண்டு ஒரு சாதாரண யாத்ரீகன் போன்று மதுரைக்குப் புறப்பட்டான். வைகைக் கரைக்கு வந்து சேர்ந்த போது இருள் பரவத் தொடங்கியிருந்தது. வைகையில் வெள்ளமும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க வழி புரியாமல் மனம் கலங்கி நின்றான் சோழன்.

பொற்றாமரை குளத்தில் நீராடி இறைவனை தரிசிக்க விருப்பம் கொண்டு வந்த எனக்கு இது என்ன சோதனை? பாண்டியன் கண்டால் துணையின்றி வந்த என்னை சிறைபிடிப்பானே. வெள்ளம் வடியும் வரை பொறுமையாக காத்திருந்து செல்லவும் வழியில்லையே எனப் பலவாறு எண்ணி வேதனையுற்றான். அப்போது சொக்கநாதர் சித்தர் வடிவில் வந்து மீனாட்சியைப் பார்க்கப் போகிறேன் வருகிறாயா அப்பா எனக் கேட்டார். சோழன் ஆச்சர்யம் அடைந்தான். சித்தர் வைகையை பார்க்க வைகையில் வெள்ளம் குறைந்தது. சோழன் பெருத்த ஆச்சர்யத்துடன் சித்தரைப் பின் தொடர்ந்து சென்றான். கோவில் அருகில் வரும்போது நடு இரவாகிவிட்டது ஆகையால் ஆலயம் அர்த்தஜாம பூஜை முடிந்து பூட்டப்பட்டு விட்டது. இதனால் மீண்டும் சோழன் வருத்தத்துடன் நின்றான். அப்போது சித்தர் வடிவில் இருந்த சொக்கநாதர் ஆலயத்தின் காவல்காரன் எனக்கு மிகவும் வேண்டியவன். நான் போய் அவனிடமிருந்து சாவி வாங்கி வருகிறேன். நீங்கள் சொக்கநாதரை தரிசிப்பீர்கள் கவலை வேண்டாம் என்று சொல்லி திறவுகோலை வாங்கி வந்து ஆலயக் கதவுகளைத் திறந்து விட்டான். பொற்றாமரையில் நீராடி அம்மனையும் சொக்கநாதரையும் கண்குளிர தரிசித்து வழிபட்டு போற்றிப் பாமாலை பாடினான்.  இருட்டிலும் அவன் தெளிவாகப் பார்க்கும் தன்மையை சிவபெருமான் அருளி இருந்தார். விடியும் நேரமாகியும் அவன் புறப்படவில்லை.

சித்தர் வடிவில் இருந்த சொக்கநாதர் சோழ மன்னா நீ இங்கிருப்பதை பாண்டியன் அறிந்தால் உனக்கு துன்பம் உண்டாகும். ஆதலால் நீ இப்போது காஞ்சியை நோக்கி உன்னுடைய பயணத்தை ஆரம்பிப்பது நல்லது என்று கூறினார். பின்னர் சோழனை அழைத்துக் கொண்டு வடக்கு வாசல் வழியாக வந்தார். கோவிலின் வெளியே வந்ததும் கோட்டைக் கதவை அடைத்துத் தாளிட்டு நந்தி முத்திரையை வைத்தார். பின் வைகையின் அக்கரைக்கு கொண்டு சோழனை விட்டுவிட்டு உனக்கு நல்ல துணை கிடைக்கப் பெற்று செல்வாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். ஆலயத்தை மறுநாள் திறக்க வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி. வழக்கமாக ஆலயக் கதவுகள் மூடப்பட்டதும் அவற்றில் பாண்டிய முத்திரையான மீன் முத்திரையைப் பதிப்பார்கள். ஆனால் அன்று அங்கே காணப்பட்டதோ நந்தி முத்திரை அது பல்லவ நாட்டிற்குரியது. பல்லவம் அப்போது சோழராட்சியில் இருந்ததால் அது சோழ முத்திரையாகவும் பயன்பட்டது. அதை மதுரை ஆலயக் கதவுகளில் பொறித்தது யார்? செய்தி தெரிந்ததும் பாண்டிய மன்னன் கொதித்தான். எனக்குத் தெரியாமல் எதிரி இங்கே வந்து போயிருக்கிறான். இது பாண்டிய நாட்டின் மானத்திற்கும் வீரத்திற்கும் மகா இழுக்கு. எப்படி நடந்தது இந்த அநியாயம் இப்பழியைத் துடைக்க நாம் உடனே சோழ நாட்டின் மீது போர் தொடுத்தேயாக வேண்டும் முழங்கி படை திரட்ட உத்தரவிட்டான். போர் ஆயத்தங்கள் மும்முரமாக நடந்தன. விடிந்தால் படைகளுடன் சோழநாட்டை நோக்கிப் புறப்பட தயாராக இருந்த்தார்கள்.

குலபூஷண பாண்டியன் இரவு தூங்க செல்லும் முன்பாக சொக்கநாதரிடம் முறையிட்டு வேண்டினான். இரவில் குலபூஷண பாண்டியனின் கனவில் தோன்றிய சொக்கநாதர் உன்னைப் போலவே காடுவெட்டிச் சோழனும் என்னுடைய பக்தன். அவன் எம்முடைய தரிசனம் வேண்டினான். அவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற மாறுவேடத்தில் அவனை வரச்செய்து திருக்கோவிலின் வடக்கு வாயிற்வழியின் மூலமாக உட்செல்லச் செய்து வழிபாடு மேற்கொள்ளச் செய்து காஞ்சிக்கு திருப்பி அனுப்பினோம். இறுதியில் வடக்கு வாயில் கதவிற்கு நந்தி முத்திரையை வைத்து மூடினோம். சோழனின் பக்தியை எடுத்துரைக்கவே இவ்வாறு செய்தோம்

குலபூஷணா சோழன் மீதுள்ள சினத்தை விடு பகையை மற. அவனும் உன் போல் ஒரு சிவ பக்தன். அவன் பக்தியை மெச்சி நான்தான் சென்று அவனை இங்கு அழைத்து வந்தேன். மூடி முத்திரையிட்ட ஆலயக் கதவுகளைத் திறந்து சோழன் சிவதரிசனம் செய்யவும் நானே உதவினேன். திரும்ப மூடி முத்திரையிட்ட போது நந்தி முத்திரையை இட்டுவிட்டேன். பாண்டிய மன்னா நீ நினைப்பதுபோல் நந்தி முத்திரை பல்லவ நாடாளும் உரிமையால் சோழனுக்கு வந்ததல்ல. அது சிவராஜனின் சிறப்பு அடையாளம். இதை ஒரு காரணமாக்கி நீ சோழன் மீது போர் தொடுக்க வேண்டாம். குற்றம் சோழனுடையதல்ல என்னுடையது. ராஜ தண்டனை அளிப்பது என்றாலும் நீ எனக்கே அளிக்க வேண்டும் கனவில் வந்து சிவன் பேசப் பேச மெய் சிலிர்த்து போனார் பாண்டிய வேந்தர். பிறகு சிவநேசச் சோழனுக்குத் தூதனுப்பி நட்பு பேசினார். அதன் அடையாளமாக சோழன் மகளை பாண்டிய குமாரன் மணந்தான். பகை இப்போது உறவாக மலர்ந்து விட்டது. குலபூஷண பாண்டியர் சிவபதம் அடைந்தார். ராஜசேகரன் பாண்டிய மன்னன் ஆனான். ஆனால் ஈசன் சோழனுக்கு ஆதரவாகவே இருந்து விட்டார் என்பது அவன் மனக்குறை. இந்த வஞ்சகமே தன் தந்தையின் உயிரைக் குடித்துவிட்டதாக எண்ணினான். அதனாலேயே ஈசனை வணங்கவும் மறுத்தான்.

சோழன் மகளை மணந்தது பாண்டியனின் இளைய குமாரன் ராஜசிம்மன். மூத்தவன் ராஜசேகரன் மணந்திருப்பதோ சேரன் செல்வியை. இளையவன் சோழ சைன்யத்தோடு சேர்ந்து ஒருமுறை அண்ணனை எதிர்க்க எண்ணிச் சதி வேலைகள் செய்தான். அவை பாண்டிய ராஜதந்திரிகளால் முறியடிக்கப்பட்டன. பாண்டிய ராணி பிரபு பழசையெல்லாம் மறந்து விடுங்கள். உங்கள் தம்பி தன் குட்டு வெளிப்பட்டு விட்டதால் உங்கள் முகத்தில் விழிக்கவே அஞ்சி உறையூரே கதியென்று சோழநாட்டில் போய்க் கிடக்கிறாரே பிறகு ஏன் கவலை? சிவன் மீதான ஊடலையும் விட்டு விடுங்கள் என்றாள். இல்லை தேவி தம்பியை வேண்டுமானால் மன்னிக்கலாம். சிவபெருமான் செய்தது பெரிய அநீதி. எங்களுக்குள் ஒரு வழக்கு நடப்பதாக வேண்டுமானாலும் வைத்துக் கொள். குலதெய்வமாக எண்ணிய எங்களுக்கு அவர் ஓரவஞ்சனை செய்து விட்டார். சோழனுக்கு ஓடக்காரனாக நேரிலேயே சென்று உதவினார். சோழனுக்காக வாதிட என் தந்தையின் கனவில் மட்டுமே தோன்றினார். எங்கள் சிவபக்தி எதில் குறைந்தது? இதுவே என் தந்தையை மனம் நலியச் செய்து மரணத்தில் தள்ளியது. இவ்வளவு வருந்துகிறேனே என் கனவில் ஏன் வரவில்லை சிவன்? அவர் சோழன் ஆதரவாளர். அதனால்தான் நான் வெறுக்கிறேன் என்றான்.

சோழன் மகளை மணந்து உறையூர் ராஜமாளிகையில் தங்கியிருந்த பாண்டிய இளவல் ராஜசிம்மன் மீண்டும் ஒருமுறை மதுரை மீது படையெடுக்கத் திட்டமிட்டான். மதுரை நோக்கிப் புறப்பட்டு விட்டன சோழ சைன்யம். பொழுது புலர்ந்தால் மதுரைக் கோட்டையை முற்றுகையிடுவது அவர்கள் திட்டம். முன்னிரவில் மனைவியிடம் சிவபிரான் மீது ஏகப்பட்ட வசை மொழிகளை அர்ச்சித்து விட்டு கண்ணயரத் துவங்கியிருந்தான் ராஜசேகரப் பாண்டியன். நள்ளிரவில் அவன் கனவில் சிவன் தோன்றினார். குலபூஷண பாண்டியனின் புதல்வனே என் மீது சினம் கொண்ட பிள்ளையே எழுந்திரு. இது நீ உறங்க வேண்டிய தருணமல்ல. அங்கே சிவநேசச் சோழனின் மனத்தைக் கெடுத்து அவனையும் சோழப் படைகளையும் அழைத்துக் கொண்டு உன் தம்பி ராஜசிம்மன் உன்மீது போர் தொடுக்க வருகிறான். விடிந்தால் உன் கோட்டை முற்றுகை இடப்படும் நிலை. நீ என்னை வசை பாடினாலும் நான் உன்னைக் கோபித்ததில்லை. உன் வேண்டுகோள்படி இதோ உன் கனவில் தோன்றி உனக்கு நல்லதைச் செய்துள்ளேன். எழு விழி போராடு எதிரியை வெற்றிக் கொள் என்றார். சிவபிரான் பேசக்கேட்டு சிலிர்த்து எழுந்தான் பாண்டியன். விடியும் வரை காத்திருக்க அவன் விரும்பவில்லை. நிலைப் படையாக இருக்கும் சில நூறு வீரர்களை அழைத்துக் கொண்டு அப்பொழுதே புறப்பட்டான்.

சோழர் படையுடன் வரும் தம்பியை மதுரையின் எல்லைக்குள் நுழையவே விடக்கூடாது என்பது அவன் எண்ணம். வழியெங்கும் அவனுக்கு வியப்பூட்டும் விந்தை காத்திருந்தது. ஆங்காங்கே ஊருக்கு நூறுபேர் ஆயுதங்களும் தீப்பந்தங்களும் ஏந்தி நின்று காத்திருந்து மதுரைப் படையோடு தங்களை இணைத்துக் கொண்டனர். எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம் மதுரைக்கு எதிரிகள் புறப்பட்டு வருவதை இவர்கள் எப்படி அறிவார்கள்? விசாரித்தான் பாண்டியன் எல்லோரும் கூறியது ஒரே தகவல் ஆஜானுபாகுவான ஒரு மனிதர் குதிரை மீது வந்தார். ஒவ்வொரு சிற்றூரிலும் மக்களை எழுப்பி சோழ சைன்யம் மதுரையைத் தாக்க வருகிறது. அவர்களை வழிமடக்கிப் போரிட இதோ பாண்டியன் சிறிய படையுடன் வருகிறான். இளம் சிங்கங்கள் எழுந்து ஆயுதம் ஏந்தி வந்து மதுரைப் படையுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என அறிவித்தார். அவர் பாண்டிய ராஜமுத்திரையான மீன் பொறித்த மோதிரத்தைக் காட்டினார். கையில் மீன் கொடியும் ஏந்தியிருந்தார். அவர் பேச்சை ராஜ கட்டளையாக எண்ணியே நாங்கள் திரண்டோம் என்றனர். யார் அந்த மாய மனிதன்? ராஜசேகரப் பாண்டியனால் ஊகிக்க முடியவில்லை. அந்தப் புதிர் அவிழ அவன் மறுநாள் இரவு வரை காத்திருக்க நேர்ந்தது. சோழர் படை முறியடிக்கப்பட்டது. தம்பியும் தம்பிக்கு உதவிய சோழ வேந்தனும் சிறைப்பட்டனர். இரவில் நிம்மதியாகக் கண்ணுறங்கப் போனான் ராஜசேகரன். யார் அந்த மாய மனிதன்? என்கிற வினா மட்டும் இன்னமும் அவன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது.

அந்த மாய மனிதன் அதே உருவில் அவன் கனவில் தோன்றினான். என்னவொரு கம்பீரம் பிரபோ தங்கள் கட்டளையை மக்களிடம் அறிவித்த ஊழியன் அடியேன்தான் என்றான். யார் நீ? என் ஊழியரில் எவரும் உன் போல் இல்லையே? நான் எப்போது உன்னிடம் கட்டளையிட்டேன்? இதோ இப்போது பார் என்னை. உன் ஐயம் அனைத்தும் விலகும் பாண்டிய வீரன் சிவனாகிறார். இறைவா தாங்களா எனக்கு ஊழியம் பார்த்தீர்கள்? என்றான். அதற்கு இறைவன் பதற்றம் வேண்டாம் பாண்டிய மன்னா பரிகாரம் என்பது மனிதர்கள் செய்ய வேண்டியது மட்டுமன்று பக்தனுக்காக இறைவனும் செய்யலாம். நான் சோழனுக்கு ஓடக்காரனாக வந்து ஊழியம் புரிந்தேன். உனக்கு உன் சேவகனாக இதோ வந்தேன் உன் ராஜ முத்திரையை ஏந்தி ஊழியம் புரிந்தேன். போதுமா இல்லை இன்னும் என்மீது உனக்குச் சினம்தானா? நான் எதும் ராஜ தண்டனை ஏற்க வேண்டுமா? என்று கேட்டார். சிவ சிவா என்ன பேச்சு சுவாமி இது தாங்கள் எனக்கு ஊழியம் பார்த்தீர்களா? எவ்வளவு பெரிய அபசாரத்துக்கு என்னை ஆளாக்கிவிட்டீர்கள். இதற்கு நான் ஏதேனும் பரிகாரம் செய்ய விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்? ஆணையிடுங்கள் நீ சினம் தணிந்தால் போதும். போய் சிவநேசச் சோழனை விடுதலை செய். உன் தம்பியையும் விடுவித்து மன்னித்து ஏற்றுக்கொள். அப்படியே ஆகட்டும் ஐயனே இப்போதும் தங்கள் கருணை அவர்கள் பக்கம்தான் இருக்கிறது. ஓடக்காரனாக வந்தீர்கள். மக்கள் முன் பாண்டிய வீரனாக வந்தீர்கள். எனக்கு மட்டும் கனவுக் காட்சிதானா? விண்ணும் மண்ணும் அதிர வாய் விட்டு சிரித்தார் இறைவன். பிறகு ராஜசேகரா என்னிடம் வாதிப்பதிலேயே இன்பம் காணும் முரட்டு பக்தன் நீ. உன் மனைவியிடம் என்ன சொன்னாய்? சிவன் என் கனவில் வரவேண்டும் என்றுதானே? வந்து விட்டேன் சரிதானே? வாழ்வே ஒரு கனவுதான் கனவு ஒரு வாழ்வுதான். கவலையை விடு கடமையைச் செய் சிவன் ஜோதிமயமானார். பாண்டியன் கனவிலிருந்து சந்தோஷமாக விடுபட்டான். கிழக்கு வெளுத்தது. சிவன் கட்டளைப்படி சிறைக் கதவுகள் திறக்கப்பட்டன. பண்பு சிறந்து பகை மறைந்தது. உறவின் உன்னதம் மலர்ந்தது. சோழ மன்னனை அழைத்துச் சென்று சொக்கேசப் பெருமானைத் தரிசிக்க வைத்தான் ராஜசேகரப் பாண்டியன். அவன் கண்ட கனவுகள் வரலாற்றுப் பக்கங்களில் பதிவாயின.

பாம்பு கோவில்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே அமைந்துள்ளது நாம்பள்ளி குட்டா என்ற ஊர். இங்கு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வெமுலவாடாவில் இருந்து கரீம்நகர் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் ஒரு சிறிய குன்றின் மீது இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் வழியில் நாகதேவதைக்கு ஒரு கோவில் இருக்கிறது. பாம்பு வடிவத்தில் அமைந்த ஆலயம் இது. நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் நுழைவு வாசல் போன்று இந்த நாகர் வடிவ கோவில் உள்ளது. பிரமாண்ட வடிவம் கொண்ட பாம்பின் வால் பகுதியில் இருந்து கோவில் பிரவேசம் தொடங்குகிறது. அந்த இடத்தின் வெளிப்பகுதியில் தூணை பிளந்து கொண்டு நரசிம்மர் வெளிவருவது போன்ற சிற்பம் வடித்து வைக்கப்பட்டுள்ளது. வளைந்து நெளிந்து கிடக்கும் பாம்பு உருவம் சிமெண்டால் செய்யப்பட்டிருக்கிறது. இதன் அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாம்பு வயிற்றுப் பகுதியில் இருந்து உள்ளே செல்ல சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

பாம்பின் வடித்திற்குள் நுழைந்ததும் பக்த பிரகலாதனின் வாழ்க்கை வரலாறு அனைத்தும் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கிறது. பக்தபிரகலாதன் பிறந்தது முதல் விஷ்ணு பக்தன் என்பதால் இரண்யகசிபு அவனை கொல்வதற்கு எடுக்கும் முயற்சிகள் மற்றும் இறுதியில் தூணில் இருந்து வெளிப்படும் நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்வது வரை சிற்பமாக வடித்து வைக்கப்பட்டுள்ளது. நாகர் வடிவ சிலையில் சுரங்கப்பாதை முடிவுறும் இடத்தில் நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்யும் சிலை அமைந்துள்ளது. இங்கே நாகதேவதைகளின் பழமையான சிலைகளும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. பாம்பின் உடலுக்குள் செல்வது போல் அமைந்த சுரங்கத்தில் சூரிய வெளிச்சமும் காற்றும் வரும் வகையில் ஆங்காங்கே வட்ட வடிவ ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 391

கேள்வி: 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களுக்கு இணையான ஆலயங்கள் தமிழகத்தில் உள்ளதா?

எல்லா ஸ்தலங்களும் சிறப்புதானப்பா உயர்வுதானப்பா. மனித மனம்தான் அங்கு சென்றால் நன்மை இங்கு சென்றால் நன்மை என்று இயம்புகிறது. ஆனாலும் கூட தூர தூர இடங்களுக்குச் செல்லும் பொழுது மனிதனுக்குப் பல்வேறு விதமான உணர்வுகள் ஏற்படுகிறது. பல்வேறு அனுபவங்கள் ஏற்படுவதால் அதை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம் காசி என்ற சொல்லுக்கு புருவ மத்தி என்ற ஒரு பொருள் இருக்கிறது. காசியில் இறந்தால் முக்தி என்பது தவறான வாதம். காசி எனும் புருவ மத்தியில் மனதை நிலை நிறுத்தி இருந்தால் முக்தி என்று கொள்ள வேண்டும். காசியில் இருந்தால் முக்தி.

அடுத்ததாக ஜோதிர் லிங்கங்கள் என்பது அந்தந்த ஸ்தலங்களுக்கு உண்டான பெருமையைக் கூறினாலும் அதே பெருமை ஒவ்வொரு சிவ ஆலயத்திற்கும் உண்டு. அந்த எண்ணத்தோடு அந்த சிவ ஆலயத்தை அணுகினால் ஜோதிர் லிங்கங்களை கண்டு தரிசித்த பலன் கட்டாயம் உண்டப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 390

கேள்வி: குமரகுருபரரை பற்றி

இறைவனின் அருளைக் கொண்டு இதுபோல் மழலை பேசும் என்று மழலையைப் பெற்ற பெற்றோருக்கு மழலை பேசுமா? என்கிற ஐயம் வந்த பொழுது மழலை பேசும் என்று சீரலைவாய் (திருச்செந்தூர்) முருகன் காட்டிய காட்சிதான் அந்த குமரகுருபரரின் காதையாகும். முருகப்பெருமானின் பரிபூரண கருணையை பெற்று அதுபோல் பேசும் ஆற்றல் மட்டுமல்லாமல் பாடும் ஆற்றலையும் பெற்று நல்ல முறையிலே தமிழையெல்லாம் கற்று அன்னை கலைவாணி மீது சகலகலாவல்லி மாலையை இயற்றி அதன் மூலம் பல மன்னர்களையெல்லாம் வென்று அங்குள்ள வடபுல (வடநாட்டு) புலவர்களையெல்லாம் அந்த வடமொழியிலேயே வாதிட்டு வென்றவன்தான் இந்த குமரகுருபரன்.

இது அண்மையில் நடந்த நிகழ்வுதான். இதுபோன்ற பல நிகழ்வுகள் இன்றும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. பிரச்சினை என்னவென்றால் இறைவன் எனக்கு அருள்கிறார். அல்லது இறைவன் தரிசனம் எனக்கு கிடைத்திருக்கிறது அல்லது இறைவனின் கருணை எனக்கு கிடைத்திருக்கிறது என்பதை மனிதன் மற்ற மனிதரிடம் அதை பகிர்ந்து கொண்டு அவர்கள் அதை ஒத்துக் கொண்டால்தான் இந்த மனிதனுக்கு ஆறுதல் கிட்டுகிறது. அப்படியில்லாத வரையில் இவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே நல்ல சாத்வீக எண்ணத்தோடு இதுபோல் இறை வழியில் சென்றால் ஒவ்வொரு குழந்தையும் குமரகுருபரர் ஆகலாம்.

குமரகுருபரரின் வரலாற்றை மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

குமர குருபரர்

தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம் என்னும் ஊரில் 17 ஆம் நூற்றாண்டில் சைவ வெள்ளாளர் குலத்தில் சண்முக சிகாமணி கவிராயர் சிவகாமி சுந்தரி என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். நீண்ட நாட்களாக குழந்தையில்லாத இத்தம்பதியர் கந்தசஷ்டி விரதமிருந்து ஒரு ஆண் குழந்தையைப் பெற்றனர். குழந்தைக்கு குமரகுருபரன் என்று வைத்தனர். பிறந்ததில் இருந்து குழந்தைக்கு பேச்சு வரவில்லை. கவலையடைந்த பெற்றோர் குழந்தை முருகன் கொடுத்த வரம். அவனால் குழந்தைக்கு பேசும் ஆற்றலை அந்த முருகன்தான் தர முடியும் என்று முடிவு செய்து திருச்செந்தூர் சென்று விரதம் இருந்தார்கள். முருகனை வழிபட்டு ஒருவேளை உப்பில்லாத உணவு சாப்பிட்டு 40 நாள் விரதமிருந்தனர். குருபரனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வேதனை மிகுந்த பெற்றோர் குழந்தை பேசும் வரை கோயிலை விட்டு செல்லக் கூடாது என்று முடிவோடு இருந்தார்கள். 45 வது நாள் மாலையில் கோவிலுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது குமரகுருபரன் வாய் திறந்து ஏதோ பேச முற்பட்டான். பெற்றோர்கள் கூர்ந்து கேட்க தெளிவில்லாமல் ஏதோ சில சொற்களை சொன்னான். அடுத்த சில நொடிகளில் குமரகுருபரன் கடும் மழை பொழிவது போல முருகனைப் பற்றி கவிதை மழை பொழிந்தான். குழந்தை பேசமாட்டானா என ஏங்கியிருந்த பெற்றோர் வாயடைத்து நிற்க கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களும் இந்த அதிசயம் கண்டு திகைத்து நின்றனர். குமரகுருபரன் பாடிய பாடல் தொகுப்பே கந்தர் கலிவெண்பா ஆகும். இதுவே குமரகுருபரரின் முதல் நூல் ஆகும். சரவணபவ என்ற மந்திரத்தின் மகிமையை வெண்பாக்களாக பாடியிருந்தார் குருபரர். திருச்செந்தூரில் அவர் இருந்த போது தன் குருவைக் கண்டவுடன் தன்னால் சரியாகப் பேச இயலாத நிலை ஏற்படும் என்கிற அசரீரி ஒலியினைக் கேட்டார். சில வருடங்களுக்குப் பிறகு தருமபுரம் ஆதீனத்தில் உள்ள மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அங்குச் சைவ சித்தாந்தம் பயின்றார்.

குமரகுருபரர் தனது இளம் வயதிலேயே தன் குருவைக் காணும் நோக்கத்தில் கடவுளை அறியும் பொருட்டு தன் குருவைத் தேடி பெற்றோர் ஆசியுடன் தல யாத்திரை புறப்பட்டார். ஒருமுறை குமரகுருபரர் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தார். மீனாட்சி சன்னதியின் முன் நின்று மீனாட்சி அன்னையை சிறு குழந்தையாக பாவித்து அவளது அழகு அருள் ஆற்றல் திருவிளையாடல்கள் அனைத்தையும் மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடலாக பாடினார். அந்நாளில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் கனவில் மீனாட்சி தோன்றி மன்னா என் செல்லக் குழந்தை குமரகுருபரன் மதுரை வந்துள்ளான். அவன் என்மீது பாடிய நூலை யாம் கேட்டு ஆனந்தமடைய ஏற்பாடு செய்க என்று பணித்தாள். உடனே மன்னர் குமரகுருபரர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர் பாதம் பணிந்து அம்மனின் விருப்பத்தை கூறினார். கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தார். புலவர்கள் எல்லாம் கூடியிருக்க மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேறி கொண்டிருந்தது. அப்போது கோயில் தலைமை அர்ச்சகரின் மகள் அங்கு வந்து மன்னரின் மடியில் உரிமையுடன் அமர்ந்து குருபரர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும் சிறுமி உரிமையுடன் மன்னரின் கழுத்திலிருந்த மணிமாலையை கழற்றி குருபரரின் கழுத்தில் அணிவித்தாள். பின் மூலஸ்தானத்தை நோக்கி நடந்து மறைந்தாள். அதன் பின்தான் வந்தது மீனாட்சி என அனைவருக்கும் தெரிந்தது. மீனாட்சி அம்மனைப் போற்றி மதுரைக் கலம்பகம் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் நீதி நெறி விளக்கம் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். பின்னர் திருவாரூர் சென்று அங்குள்ள தியாகராச பெருமானைப் போற்றித் திருவாரூர் நான்மணி மாலை என்னும் நூலை இயற்றினார்.

குமரகுருபரர் திருவாரூரிலிருந்து தருமபுரத்திற்குப் பயணப்பட்டார். தருமபுரத்தில் பாரம்பரிய திருக்கயிலாய பரம்பரையான தருமபுர ஆதீன சைவ மடம் இருந்தது. அம்மடத்தை துறவி மாசிலாமணி தேசிகர் நிர்வகித்து வந்தார். குமரகுருபரர் அங்குச் சென்று அவரை வணங்கினார். அப்போது மாசிலாமணி தேசிகர் குமரகுருபரரிடம் பெரிய புராணத்தில் வரும் ஐந்து பேரறிவும் கண்களே கொல்லா எனத் தொடங்கும் பாடலின் சிறப்பம்சத்தை விளக்குமாறு கூறினார். அப் பாடலானது தில்லையில் உறையும் கடவுள் சிவபெருமானின் நாட்டியத்தைக் கண்டு மெய்யுருகி நின்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் நிலையைச் சொல்வதாகும். சேக்கிழார் அந்த நிகழ்ச்சியை அழகாகப் பெரிய புராணத்தில் விவரித்திருப்பார். யாராலும் விளக்க முடியாத இந்த பாடலுக்கு விளக்கம் சொல்லுமாறு கேட்டதும் வாயடைத்து நின்றார் குமரகுருபரர். தான் தேடி வந்த குரு மாசிலாமணி தேசிகர்தான் எனப் புரிந்து கொண்டு அவரைச் சரணடைந்தார். அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தின் கீழ் இந்து மதம் நசுக்கப்படுவதை மாசிலாமணிதேசிகர் உணர்ந்திருந்தார். குமாரகுருபாரரின் எதிர் காலத்தை உணர்ந்த அவர் காசி (வாரணாசி) யாத்திரை சென்று திரும்பி வரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் குமரகுருபரரை சீடராக இருக்க ஒப்புக் கொண்டு குமரகுருபரரைத் துறவறம் மேற்கொள்ளச் செய்தார்.

குமரகுருபரர் தனது குருவின் ஆணைப்படி காசிக்குச் சென்று சைவ சமயத்தைப் பரப்பினார். அங்குள்ள கேதாரேஸ்வர் கோவிலைைப் புதுப்பித்தார். காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாமல் பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் போய் கோயிலை தம்மிடம் தர வேண்டுமென்று குமரகுருபரர் வேண்டுகோள் விடுத்தார். சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் சிரித்தார். முதியவரே நீர் என்ன சொல்கின்றீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கின்றீர்கள் என்பது தெரிகிறது. ஆனால் என்ன தானம் என்பது தெரியவில்லை. எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள் தருகிறேன் சொல்லிவிட்டு எழுந்து போனார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார்.

மறுநாள் விடிந்தது. எங்கே அந்த மதுரை கிழவர் என்று நவாப் விசாரித்தார். அவர் அரபி படிக்க போயிருக்கிறார் என்று ஒருவர் சொல்ல சபை சிரித்தது. வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பிடரியும் கோரைப் பற்களும் சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண் சிங்கம் சபைக்குள் நுழைந்தது. குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். ஆண் சிங்கத்தின் மேல் அமர்ந்த ஆண் சிங்கம் போல் காட்சியளித்தார். அவர் நரைத்த தலைமுடியும் தலைப்பாகையும் வெள்ளை வெளேர் என்று வயிறு வரை நீண்ட தாடியும் இறையை உணர்ந்த உறுதியான முகமும் போகமே அறியாது கடுமையான பிரும்மச்சரியத்தில் இருக்கும் கட்டுக்குலையாத உடலும் அவரை சிங்கம்போல் காட்டின. அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன. நவாபின் சபையில் இருந்தவர்கள் பலர் கலைந்து ஓடினார்கள். பலர் தனது ஆசனத்தில் இருந்து காலைத் தூக்கிக் கொண்டார்கள். நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான். என்ன இது என்று கத்தினான். நேற்று நீர் எமக்கு அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்தோம் என்றார். இதுவா ஆசனம் இது சிங்கமல்லவா இது சிங்கம்தான். இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இது என் ஆசனம். என் சிம்மாசனம். உனது ஆசனத்திலும் சிங்கம் இருக்கிறது. ஆனால் பொம்மைச் சிங்கம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா என்றார்.

சிங்கம் ஒன்று பாய்ந்து நவாபுக்கு அருகே சென்றது. நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான். ஒரு பெண் சிங்கம் அவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. மற்ற சிங்கங்கள் சபையை சுற்றி வந்தன. சபை வெறிச்சோடிப் போயிற்று. குமரகுருபரர் இங்கே வா என்று சிங்கங்களைக் கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன. நவாப் சிம்மாசனத்தின் காலடியில் உட்கார்ந்தான். குமரகுருபரர் நவாபை பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. நவாப் சலாம் செய்தான். உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறுமையும் என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்து விட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன் மீண்டும் சலாம் செய்தான். தயவு செய்து சொல்லுங்கள் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.

காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும். நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னயே நான் இப்போது உன் மொழியில்தானே பேசுகிறேன். எவர் துணையுமின்றி புரிந்து கொண்டு எனக்குப் பதில் சொல்கிறாயே என்றார். ஆமாம் பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி எப்படி இது சாத்தியமாயிற்று என்று கேட்டான். உன்னுடையது என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறைவன் எல்லோருக்கும் பொது என்றார். உடனே நவாப் காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம் நவாப் பணிவாகப் பேசினான். மேலும் காசியில் மடத்தை நிறுவினார். இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாளிலும் நிறுவினார். குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும் கங்கை ஆற்றங்கரையிலும் மடம் அமைத்துத் தமிழையும் சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் வைகாசி தேய்பிறை திரிதியைத் திதியில் விளம்பி வருடம் வைகாசி 18 ஆம் நாள்இறைவனடி சேர்ந்தார்.

2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி ஒரு நினைவு தபால்தலை இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்டது. கயிலாசபுரத்தில் இவர் பிறந்த வீட்டுப் பகுதி மடமாக 31-8-1952 இல் அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குமரகுருபரர் இயற்றிய நூல்கள்

கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
கயிலைக் கலம்பகம்
காசித் துண்டி விநாயகர் பதிகம்

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 338 பாடல்களில் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் சரித்திரம் என்ற நூலை எழுதியுள்ளார். சேற்றூர் இரா. சுப்பிரமணியக் கவிராயர் 1001 பாடல்கள் கொண்ட ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் புராணம் என்ற நூல் எழுதியுள்ளார். பாரதிதாசன் தமது எதிர்பாராத முத்தம் என்ற நூலில் குமரகுருபரரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். தேனூர் வே. செ. சொக்கலிங்கனார் குமரகுருபரரைப் பற்றி செய்த தொண்டர் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். இவரது நூல்கள் நூல்கள் தோன்றியது பற்றிய கதைகளை மு. அருணாசலம் கையெழுத்து நிலையில் குறிப்புகளாக வைத்திருந்தார். இவரது நூல்கள் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள் என்னும் பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 389

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்கு ஆசிகள் சிறப்பாய் கல்வி கற்க உன் சேயவளுக்கு வித்தை ஓங்க அன்னை கலைவாணியின் அருள் கிடைக்க நல்லாசி கூறுகிறோம். அங்கு செல்வதற்கு முன்னால் மறைவனம் (வேதாரண்யம்) என்ற ஸ்தலம் ஏகி அங்குள்ள ஐயனை வணங்குவதோடு இயன்றால் இயன்றால் என்ற வார்த்தையை நாங்கள் கூறுவதற்கு காரணம் ஜீவ அருள் ஓலை என்பது எம் எதிரே அமருகின்ற மனிதனின் விதியை பொருத்தே நாங்கள் கூறுகின்றது. எமது கருத்து என்பது வேறு. இறையின் அருளாசி என்பது வேறு. எம்முன் அமருகின்ற மனிதனின் விதி என்பது வேறு. அங்கே தீபம் ஏற்றுவது என்பது சிறப்பு. நீயாக ஏற்றுவது என்பது ஒன்று. ஆலய நிர்வாகத்தின் மூலம் அதிக தீபங்களை ஏற்றுவது மிக சிறப்பு. அதோடு அங்குள்ள அன்னை கலைவாணிக்கு மிக மிக உயர்வான முறையிலே ஒரு அபிஷேகம். இல்லையென்றால் எளிய முறையில் உன்னால் என்ன வழிபாடு செய்ய முடியுமோ அதை செய்துவிட்டு பிறகு கல்விக் கூடத்திற்கு உண்டான முயற்சியை எடுக்க நல்லாசிகள் தொடரும். அதபுோல் குழந்தைக்கு ஹயக்ரீவர் மந்திரத்தையும் அன்னை கலைவாணி மந்திரத்தையும் கற்றுக் கொடுத்து அன்றாடம் உருவேற்ற வைப்பதும் அறிவிலே குழப்பமில்லாமல் தெளிவு ஏற்படுவதற்கு இறை ஆசி கிடைப்பதற்கு நல்ல வாய்ப்பாக அமையும்.