விஷ்ணு துர்க்கை

ஆடை ஆபரணங்களோடு கால் மூட்டு கூட கல்லில் தெரிய காலை சிறிது மடக்கி இடையை கொஞ்சம் வளைத்து ஒயிலாக நிற்கும் நாராயணி என்றும் அழைக்கப்படும் விஷ்ணு துர்க்கை தேவியின் பல வடிவங்களில் ஒன்று.

இராஜராஜேஸ்வரம் 9 ஆம் மற்றும் 10ஆம் நூற்றாண்டு இராஜராஜசோழர் காலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 354

கேள்வி: யாகத்தில் அன்னை காட்சி தரவேண்டும்?

பிரகலாதனின் பக்தி வந்து விட்டால் இராவணனின் பக்தி வந்து விட்டால் (இதுபோல் அத்தனை அசுரர்களின் கதையை எடுத்துப் பார்) அந்த பக்தி வந்து விட்டால் நாயன்மார்களின் ஆழ்வார்களின் மன உறுதி மனத்தெளிவு வந்து விட்டால் சித்தர்களின் பற்றற்ற தன்மை வந்து விட்டால் கட்டாயம் இறை காட்சி கிடைக்கும். பல்வேறு வேலைகளில் இறைவனை வணங்குவது ஒரு வேலை என்றிருப்பது மனிதனின் இயல்பு. உலகியலுக்கு முக்கியத்துவம் தரும்வரை இறை இரண்டாம் பட்சமாகத்தான் மனிதனுக்கு இருக்கிறது. அடுத்து இந்த உலகியல் வாழ்வை நன்றாக வாழ வேண்டும் அது வேண்டும் இது வேண்டும் என்பதற்காக இறையை நோக்கி செல்லும்வரை இறை அதை வேண்டுமானாலும் தரலாம். இறை வேண்டும் என்று இது வரை யாரும் வேண்டவில்லை. அதுபோல் தின்மையும் உறுதியும் வரும் பொழுது கட்டாயம் இறை காட்சி கிட்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 353

கேள்வி: சத்ருசம்ஹார யாகத்தை எப்படி செய்வது ?

பொதுவாக சம்ஹார யாகத்தை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு துவங்குவது சிறப்பு. ஆனால் இதற்கு ஆலயத்து விதிமுறைகள் இடம் தராது என்பதை யாம் அறிவோம். எனவே அதிகாலை துவங்கினாலும் சாயரட்சை வரையாவது செய்வது நல்லது. இடையிலே அவசியம் ஏற்பட்டால் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். முதலில் வழக்கம் போல் மூத்தோனுக்கு யாகம் செய்துவிட்டு பிறகு தொடர்ந்து சத்ருசம்ஹார யாகத்தை செய்யலாம். கடைசியாக ஒரே பூரணாகுதியை தந்துவிட்டால் போதும். இதிலே கால அவகாசத்திற்கு ஏற்ப மந்திரங்களை நிறுத்தி நிதானமாக உச்சரிப்பில் பிழையின்றி சொல்வதும் எல்லாவற்றையும் அள்ளி எடுத்து ஏதோ கடமைக்கு அக்னியில் வார்ப்பது போல் இல்லாமல் பொருள்களை பயபக்தியோடு பவ்யமாக நிதானமாக பொறுமையாக பயன்படுத்துதல் சிறப்பை தரும். 300 மந்திரங்கள்தானே என்று அலட்சியமாக இல்லாமல் அதிக எண்ணிக்கையில் மனிதர்களை அமரவைத்து உரத்த குரலிலே உச்சரிப்பு பிழையின்றி ஆத்மார்த்தமாக உச்சரித்து உச்சரித்து ஒவ்வொன்றிற்கும் பூர்த்தி முடிவிலே பொருள்களை யாகத்தீயில் வார்ப்பதும் நல்ல பலனைத் தரும்.

நம்பிக்கை

பல ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கிறது. நடுவானில் இயந்திரக் கோளாறு என்று அறிவித்து அனைவரையும் தற்காப்பு பெல்ட் அணிய சொல்கிறார் விமானி. பயணிகள் மத்தியில் கலக்கம் பீதி. விமானம் குலுங்குகிறது. இறங்குகிறது மீண்டும் மேலே எழுகிறது. அப்பொழுது விமானியிடம் இருந்து ஒரு அறிவிப்பு ஒரு இயந்திரம் செயலிழந்து விட்டது இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பயணிகளின் கூக்குரல் விமானத்தை நிலைகுலையச் செய்தது. பிரார்த்தனை செய்து கொண்டும் தியானம் செய்து கொண்டும் அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்கி கொண்டும் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கதறுகிறார்கள். ஒரு சிறுமி மட்டும் தன்னுடன் இருந்த பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த குழந்தைக்கு சிறிதும் பயமோ சலனமோ இல்லை.

சிறிது நேரத்தில் இயந்திரம் மீண்டும் இயங்குகிறது நாம் ஆபத்திலிருந்து தப்பி விட்டோம் என்று விமானி அறிவித்து அருகில் உள்ள விமான நிலையத்தில் தரை இறக்குகிறார் விமானி. அதில் பயணம் செய்த ஒரு விஞ்ஞானி இந்த காட்சியை கண்டார். தரை இறங்கிய உடன் அந்த விஞ்ஞானி அந்த குழந்தையை பார்த்து கேட்டார். இவ்வளவு அமர்க்களம் நடந்தது உனக்கு தெரியுமா உனக்கு ஏன் ஒரு துளி கூட பயம் வரவில்லை எனக் கேட்டார். அதற்கு அந்த சிறுமி இந்த விமானத்தை இயக்கும் விமானி என்னுடைய தந்தை. என் தந்தை என்னை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை முழுவதும் எனக்கு உள்ளது. நான் ஏன் பயப்பட வேண்டும் என்ற சிறுமியின் பதிலால் திக்குமுக்காடி போனார் அந்த விஞ்ஞானி. அந்த குழந்தை தன் தந்தை மீது வைத்த முழு நம்பிக்கையை நாம் இறைனிடம் வைத்தால் பயம் என்ற ஒன்று வருமா?.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 352

கேள்வி: என் மனைவியிடம் ஆன்மீக விஷயங்களில் பொய் சொல்லி ஈடுபட வேண்டியிருக்கிறது:

உன் போன்ற பலருக்கும் இதே நிலைதான். அப்படியே செய் என்று ஊக்குவிப்பதும் கூறுவதும் ஒரு மகானுக்கு அழகல்ல. அல்லது உண்மையைக் கூறி இல்லத்திலே குழப்பத்தை ஏற்படுத்துவதும் மகான்களுக்கு அழகல்ல. எம் போன்ற ஞானி உலகியல் ரீதியாக இது குறித்து ஒரு யோசனையைக் கூறினாலும் அது ஞான நிலைக்கு ஏற்புடையதாக இராது. ஞானப் பார்வையிலே ஒரு யோசனையைக் கூறினால் உன் போன்ற மனிதனுக்கு அது ஏற்புடையதாக இராது. இரண்டையும் அனுசரித்து கூறுவது என்னவென்றால் எல்லா இல்லங்களிலும் தாயோ தாரமோ இது போன்ற ஆன்மீக அமைப்புகளை விரும்பாததின் காரணம் இதனால் குடும்ப நடைமுறை செலவினங்கள் பாதிக்கப்படும் என்பதால்தான். எனவே குடும்பத்தை பாதிக்காமல் உன் போன்ற ஒருவன் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் நாங்கள் அதை வரவேற்கிறோம். அல்லது இயல்பாகவே உன் மனம் முதிர்வடைந்து இந்த அளவில் குடும்பத்திற்கு செய்தால் போதும் இதனை தாண்டி செய்வதெல்லாம் வீண் விரயம்தான். அவற்றையெல்லாம் புண்ணியமாக மாற்றி வைத்துக் கொண்டால் அது குடும்பத்தாரின் எதிர்காலத்திற்கு உதவும் என்ற எண்ணம் அழுத்தந்திருத்தமாக உன் மனதிலே வந்து விட்டால் அவர்கள் விரும்புவதைப் போல ஒரு சொல்லாடலை பயன்படுத்திவிட்டு உன் விருப்பம் போல் செய்யலாம். எனவே இந்த இடத்தில் உண்மையைக் கூறினால் தேவையற்ற குழப்பம் வரும் என்பதால் உண்மையைக் கூற வேண்டிய அவசியமில்லை. பொய்யைக் கூறு என்று ஜீவ நாடியில் ஞானிகளே கூறிவிட்டார்கள் என்ற அபவாதத்திற்கு ஆளாகவும் நாங்கள் விரும்பவில்லை. எனவே மௌனத்தைக் கடைபிடி. அதே தருணம் தாரத்தின் நிலையில் என்ன குழப்பம் ஏற்படும்? என்றால் கணவன் குடும்பத்தை கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழும். இது போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் எழாத அளவிற்கு அவர்களின் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்து விட்டு உன் போக்கில் நீ செல்லலாம்.

வாழ்க்கை

ஒரு சீடன் குருவிடம் தன் சந்தேகத்தை கேட்டான். குருவே வாழ்க்கை இனிமையானதா இல்லை கடுமையானதா? என்றான். அதற்கு அந்த குரு வாழ்க்கை பூனையின் பற்களைப் போன்றது என்று பதிலளிக்க சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் வாழ்க்கையை பற்றி கேட்டால் இவர் பூனையின் பற்களை பற்றி சொல்கிறாரே என்று ஒன்றும் புரியாமல் குழம்பி நின்ற சீடனிடம் குரு அதனை விளக்கினார். ஒரு பூனையின் குட்டியிடம் பூனையின் பற்கள் எப்படிப்பட்டது என்று கேட்டால் பூனையின் பற்கள் மிக மென்மையானவை இனிமையானவை என்று சொல்லும். பூனை தன் குட்டிக்கு சிறிதும் வலிக்காதவாரு அக்கறையுடன் அதனை மிகப்பாதுகாப்பாக தன் பற்களால் கவ்விக்கொண்டு போகும். அதே ஒரு எலியிடம் பூனையின் பற்கள் எப்படிப்பட்டது என்ற அதே கேள்வியை கேட்டால் ஐயோ பூனையின் பற்கள் மிகக்கொடுமையானவை என்ற பதில்தான் வரும். பூனையின் பற்களை போலத்தான் வாழ்க்கையும். வாழ்க்கையை நாம் எப்படி பார்க்கிறோம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொருத்தே அமையும் என்று விளக்கினார் அந்த துறவி.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 351

குருநாதர் அருளிய பொதுவாக்கு:

இறையருளின் துணைகொண்டு இயம்புகிறோம் இத்தருணம் இறையருளின் துணையின்றி எது நிகழும் எக்கணமும்? இறையருளை பெறத்தானே மாந்தர்கள் விடாமுயற்சி செய்யவேண்டும். இறையருளைத் தவிர வேறு எதைப் பெற்றாலும் பலனில்லை என்பதை உணரவேண்டும். இதுபோல் இறையருளை பெறுகிறேன் என்று இறை வணக்கம் செய்கிறேன் என்று இறை தங்கியிருக்கும் பிற உயிர்களை வருத்துதல் கூடாதப்பா. இதுபோல் வாழ்விலும் வாழ்விற்கு பிறகும் உடன் வருவது கர்மங்கள் என்பதை புரிந்து இதுபோல் கர்ம பாவத்தின் அடிப்படையிலே மனித வாழ்வு அமைகிறது என்பதையும் புரிந்துகொண்டு இயம்புங்கால் கணத்திற்கு கணம் (ஒவ்வொரு வினாடியும்) விழிப்போடு வாழ பழக வேண்டும். இதுபோல் பொறுமை விடாமுயற்சி பெருந்தன்மை சகிப்புத்தன்மை இரக்கம் கருணை அன்பு என்ற குணங்களை வளர்த்துக் கொண்டே செல்ல செல்ல இறையருள் தேடி வந்து கொண்டே இருக்கும்.

இதுபோல் தொடர்ந்து இறையருளை பெறவேண்டும் என்று எண்ணக் கூடிய மனிதன் முதலில் விடவேண்டியது ஆளுமை குணத்தை. தான் எண்ணுவதை தான் நினைப்பதை பிறர் செய்ய வேண்டும். தான் எதை ஆசைப் படுகிறோமோ அதன்படி தன்னை சுற்றியுள்ளவர்கள் நடக்க வேண்டும் என்ற தன்முனைப்போடு இருக்கக் கூடிய அந்த ஆளுமை குணத்தை ஒரு மனிதன் விட்டொழித்தால்தான் இறையருளை நோக்கி அவன் மனம் பயணம் செய்ய துவங்கும். இந்த ஆளுமை குணம்தான் பல மனிதர்களை அதள பாதாளத்திற்குள் தள்ளுகிறது. வேண்டுமானால் ஒருவரிடம் இருக்கக் கூடிய தனத்திற்காகவோ பதவிக்காகவோ மற்றவர்கள் அடிபணிவதுபோல் பாவனை செய்யலாமே ஒழிய உண்மையான அடிபணிதல் என்பது இராது. எனவேதான் பிற மனிதர்களை அன்பால் கருணையால். உதவி செய்து அடிமையாக்கலாம். ஆனால் அதிகாரத்தால் அடிமையாக்குதல் என்பது எக்காலமும் நீடிக்காது அது இறையருளையும் பெற்றுத் தராது. இறை தான் படைத்த உயிர்கள் ஒன்றுக்கொன்று சமாதானத்துடனும் சத்தியத்துடனும் நிம்மதியுடனும் இன்பத்துடனும் வாழவேண்டும் என்ற குறிக்கோளுடனும்தான் படைத்திருக்கிறது. ஆனாலும்கூட அவ்வாறெல்லாம் நிகழ்வதில்லை. காரணம் இந்த ஆளுமை குணமும் தன்முனைப்பும் ஒரு மனிதனை வெறிகொண்டு எழச்செய்து அதனாலே பல்வேறு அனர்த்தங்களை ஏற்படுத்தி காலகாலம் தொடர்ந்து அந்த ஆத்மாவை பாவப் படுகுழியிலே வீழ்த்திவிடுகிறது. எனவேதான் இந்த தன்முனைப்போடு கூடிய ஆளுமை குணம் அது ஆணோ பெண்ணோ அது யாரிடமும் இல்லாமல் இருப்பதே இறைவனின் அருளைப் பெறுவதற்கு மிகப்பெரிய வழிமுறையாகும்.

ஆகுமப்பா அதுபோல் ஒருவேளை ஒருவன் அள்ளியள்ளி தர்மங்கள் செய்யலாம். அனேக ஸ்தலங்கள் சென்று தரிசனம் செய்யலாம். அனேக பாழ்பட்ட ஆலயங்களை எழுப்புவிக்கலாம். ஆனாலும் கூட எத்தனை நல்ல குணங்கள் இருந்தாலும் தேவையற்ற ஒரு தீக்குணம் இருந்து விட்டால் அது ஒரு குடம் பாலிலே ஒரு துளி விஷம் போல. முன்னமே யாம் உதாரணம் இயம்பியதுபோல வித்தையிலே பல்வேறு பாடப்பிரிவுகள் இக்காலத்திலே இருக்கிறது. அது மொத்தம் ஐந்து என்றால் நான்கிலே தேர்ச்சி பெற்று ஒன்றிலே தேர்ச்சி பெறவில்லையென்றால் தகுதிச் சான்றிதழை வித்தைக் கூடம் தராது. ஐந்திலேயும் தேர்ச்சி பெறவேண்டும். அதைப் போலத்தான் இறை வழியில் வரக்கூடியவர்கள் நான் நித்தமும் பிரம்ம முகூர்த்தத்தில் மந்திரம் சொல்லி பூஜை செய்கிறேன். நித்தமும் எதாவது ஒரு ஆலயம் செய்கிறேன் என்றெல்லாம் கூறினாலும் கூட இதைத் தாண்டி மனித நேயத்துடன் நடந்து கொள்கிறானா? என்றுதான் இறை பார்க்கும். எனவே இதுபோல் கருத்துக்களை மீண்டும் மீண்டும் அசைபோட இறையருளை பெறுவதற்கு இந்த சிந்தனை உதவி செய்யும்.

விதுரர்

ஆணி மாண்டவ்யர் மிகப் பெரிய ஞானி. அடர்ந்த வனத்திலே தவம் இருந்து வருகின்ற வேளையில் ஒரு முறை காசி மன்னனின் காவலர்கள் சில திருடர்கள் கூட்டத்தை தேடி வருகின்றனர். காரணம் அந்த திருடர்கள் அரண்மனையில் இருந்த தங்க நகைகள் எல்லாம் கொள்ளையடித்து தப்பித்து விட்டனர். அதனால் அந்த கொள்ளை கூட்டத்தை தேடி காவலர்கள் மற்றும் மந்திரிகள் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வேளையில் இந்தக் கொள்ளைக் கூட்டமானது ஒரு அடர்ந்த வனத்திலே புகுந்து தப்பித்து ஓடி சென்று கொண்டிருக்கிறார்கள். அது சமயம் அந்த வனத்திலே கடும் தவத்தில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறார் ஆணி மாண்டவ்ய மகரிஷி. அவரைப் பார்த்த அந்த கொள்ளை கூட்டம் தாங்கள் கொள்ளை அடித்து வந்த தங்க நகைகள் எல்லாம் அந்த ஞானியின் மேல் ஆபரணமாக போட்டு விட்டு சில ஆபரணங்களை அவர் அமர்ந்திருக்கின்ற அந்த மரத்தின் அருகில் போட்டுவிட்டு தப்பித்து ஓடி விடுகிறார்கள். மறுபுறம் இந்த கொள்ளை கூட்டத்தை தேடி வருகின்ற காவலர்களும் அமைச்சர்களும் அதே வனத்திற்கு உள்ளே வருகிறார்கள். இந்த ஞானியை பார்த்தவுடன் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். இவர்தான் அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருக்க வேண்டும் கொள்ளைக் கூட்டத்தினரை தப்பிக்க வைத்து விட்டு இவர் மட்டும் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் தவத்தில் இருப்பது போல் நம்மிடம் நடிக்கிறார் என்று நினைக்கிறார்கள். இந்த நகைகள் எல்லாம் இவர்தான் திருடி வந்து யாருமில்லாத இந்த வனத்தில் அமர்ந்து தன் உடம்பில் போட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாது போல் தவத்தில் இருப்பது போல் நடிக்கிறார் என்று அந்த ஞானியை அப்படியே தூக்கிச் சென்று மன்னனின் முன்னால் நிறுத்துகிறார்கள்.

அப்போது கூட அந்த ஞானி தவத்தில் இருந்து சிறிதும் பிசகாமல் இறைவனின் திருவடியை எண்ணி தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். ஊர் மக்களுக்கெல்லாம் தெரிகிறது இவர் ஒரு மிகப்பெரிய ஞானி இவரை பார்த்தால் திருடன் போல் தெரியவில்லை. இவருக்கு இந்த நிலைமையா என்று அனைவரும் மனதிற்குள்ளே புலம்பி வருகிறார்கள். மன்னனும் உணர்ச்சி வசப்பட்டு உடனடியாக அவரை கழுவில் ஏற்றுங்கள் என்று உத்தரவிடுகிறார். காவலர்கள் உடனே ஆணி மாண்டவ்யரை கழு வில் ஏற்றி தண்டனை கொடுக்கிறார்கள். அப்பொழுதும் அந்த ஞானி தவத்தில் இருக்கிறார். அந்தக் கழு ஏற்றப்பட்ட அந்த மரத்தோடு தொடர்ந்து தவத்தில் இருக்கிறார். அந்த மரத்தோடு தான் அவர் பயணிக்கிறார். ஒரு கட்டத்தில் தான் தவத்திலிருந்து இயல்பு நிலைக்கு வரும் பொழுது கழுமரம் ஏற்றப்பட்டு நமக்கு தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதை உணர்கிறார். ஆனால் அரசன் மீதும் காவலர்கள் மீதும் அவருக்கு கடுகளவும் கோபமோ வருத்தமோ இல்லை. எந்த ஒரு வினைப் பயன் என்னை இவ்வாறு தாக்கியிருக்கிறது. நான் செய்த பாவம்தான் என்ன? என்று எமதர்மராஜனிடம் சென்று கேட்கிறார். எமதர்மராஜனும் அவரின் முன் வினைப் பயன் ஒன்றை உரைக்கிறார். அதாவது சென்ற பிறவியில் சிறுவனாக சிறுபிள்ளையாக நீ இருக்கும் பொழுது சிறு சிறு பூச்சி இனங்களை துன்புறுத்தி இருக்கிறாய். அந்த உயிர்களின் துன்பத்தின் விளைவு தான் இன்று உமக்கு இந்தக் கழு வல் ஏற்றி தண்டனை கொடுக்க வேண்டும். என்ற விதியாக மாறி இருக்கிறது. அந்த விதிப்படி இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று மாண்டவ்யரிடம் எமதர்மராஜன் கூறுகிறார். மாண்டவ்யருக்கோ கடும் கோபம் வந்துவிட்டது.

நான் செய்த தவத்தை ஏற்றுக் கொண்டாவது என் முன்வினைப் பயனை நீங்கள் என் கணக்கில் இருந்து கழித்திருக்கலாம். நீங்கள் அதை செய்யவில்லை. எனவே நீங்கள் பூவுலகில் மனிதப் பிறவி எடுத்து துன்பத்தை அனுபவியுங்கள் என்று எமதர்மராஜனுக்கு சாபம் விடுகிறார். அந்த சாபத்தின் விளைவாகத்தான் எமதர்மராஜன் மீண்டும் பிறவி எடுத்து மகாபாரத காலகட்டத்தில் விதுரராக பிறக்கிறார்.

சிவ பார்வதி திருமணம்

விஷ்ணு பகவான் தனது சகோதரி பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் செய்து கொடுக்கும் காட்சி ஒற்றைக் கல் தூணில் சிற்பமாக உள்ளது. ஆட்கொண்டநாதர் ஆலயம் இரணியூர் சிவகங்கை மாவட்டம்.