ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 350

கேள்வி: மகாபாரதத்தில் வரும் விதுரரை பற்றி சொல்லுங்கள்:

விதுர நீதி என்று ஒரு நீதியே இருக்கிறதப்பா. விதுரனும் ஒரு மகான்தான். அதுபோல் திருதராஷ்டிரனுக்கு விளக்கம் எல்லாம் தந்தது இவன்தான். இதுபோல் அன்றே இருக்கும் இடத்திலிருந்து தொலைவில் நடப்பதை எல்லாம் கண்டு உணரும் ஞான திருஷ்டி பெற்றவனப்பா. இந்த சமுதாயத்தில் வாழ்ந்தாலும் பற்றற்று வாழக்கூடிய தன்மையை ஒரு மனிதன் பெற்று விட்டால் ஜனகனைப் போல யோகியாகிறான் ஞானியாகிறான். யோகியாக வேண்டும் ஞானியாக வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசையிருக்கிறது. ஆனால் சிறு துன்பம் வந்தாலும் கூட சோர்ந்து போய் விடுகிறான். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். எவன் ஒருவனால் அதிகமதிகம் அவமானங்களை தாங்க மனம் இடம் தருகிறதோ எவனொருவனால் அதிகமதிகம் பிறரால் ஏமாந்தவன் என்கிற பட்ட நாமத்திற்கு ஆளாக நேரிடுகிறதோ எவனொருவனால் பிழைக்கத் தெரியாதவன் என்று பலரால் கூறப்படுகின்ற நிலை ஏற்படுகிறதோ சராசரி உலகியல் செயல்கள் எல்லாம் பாவங்கள் என்று வெறுத்து ஒதுக்கி எவனொருவன் எம் வழியில் வருகிறானோ அவனுக்குத்தான் ஞான வாழ்க்கை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியும். அப்படி வாழ்ந்தவர்களில் விதுரனும் ஒரு உயர்ந்த ஞானியப்பா.

ஆணி மாண்டவ்யர் மிகப்பெரிய ஞானி. மகாபாரத கால கட்டத்திற்கு முன்னால் இருந்து இன்றளவும் வாழ்ந்து வருகின்ற அற்புத ஞானி. அடர்ந்த வனத்திலே தவம் இருந்து வருகின்ற வேளையில் ஒரு முறை காசி மன்னனின் காவலர்கள் சில திருடர்கள் கூட்டத்தை தேடி வருகின்றனர். காரணம் அந்த திருடர்கள் அரண்மனையில் இருந்த தங்க நகைகள் எல்லாம் கொள்ளையடித்து தப்பித்து விட்டனர். அதனால் அந்த கொள்ளை கூட்டத்தை தேடி காவலர்கள் மற்றும் மந்திரிகள் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வேளையில் இந்தக் கொள்ளைக் கூட்டமானது ஒரு அடர்ந்த வனத்திலே புகுந்து தப்பித்து ஓடி சென்று கொண்டிருக்கிறார்கள். அது சமயம் அந்த வனத்திலே கடும் தவத்தில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறார் ஆணி மாண்டவ்ய மகரிஷி. அவரைப் பார்த்த அந்த கொள்ளை கூட்டம் தாங்கள் கொள்ளை அடித்து வந்த தங்க நகைகள் எல்லாம் அந்த ஞானியின் மேல் ஆபரணமாக போட்டு விட்டு சில ஆபரணங்களை அவர் அமர்ந்திருக்கின்ற அந்த மரத்தின் அருகில் போட்டுவிட்டு தப்பித்து ஓடி விடுகிறார்கள். மறுபுறம் இந்த கொள்ளை கூட்டத்தை தேடி வருகின்ற காவலர்களும் அமைச்சர்களும் அதே வனத்திற்கு உள்ளே வருகிறார்கள். இந்த ஞானியை பார்த்தவுடன் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். இவர்தான் அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருக்க வேண்டும் கொள்ளைக் கூட்டத்தினரை தப்பிக்க வைத்து விட்டு இவர் மட்டும் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் தவத்தில் இருப்பது போல் நம்மிடம் நடிக்கிறார் என்று நினைக்கிறார்கள். இந்த நகைகள் எல்லாம் இவர்தான் திருடி வந்து யாருமில்லாத இந்த வனத்தில் அமர்ந்து தன் உடம்பில் போட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாது போல் தவத்தில் இருப்பது போல் நடிக்கிறார் என்று அந்த ஞானியை அப்படியே தூக்கிச் சென்று மன்னனின் முன்னால் நிறுத்துகிறார்கள்.

அப்போது கூட அந்த ஞானி தவத்தில் இருந்து சிறிதும் பிசகாமல் இறைவனின் திருவடியை எண்ணி தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். ஊர் மக்களுக்கெல்லாம் தெரிகிறது இவர் ஒரு மிகப்பெரிய ஞானி இவரை பார்த்தால் திருடன் போல் தெரியவில்லை. இவருக்கு இந்த நிலைமையா என்று அனைவரும் மனதிற்குள்ளே புலம்பி வருகிறார்கள். மன்னனும் உணர்ச்சி வசப்பட்டு உடனடியாக அவரை கழு வில் ஏற்றுங்கள் என்று உத்தரவிடுகிறார். காவலர்கள் உடனே ஆணி மாண்டவ்யரை கழு வில் ஏற்றி தண்டனை கொடுக்கிறார்கள். அப்பொழுதும் அந்த ஞானி தவத்தில் இருக்கிறார். அந்தக் கழு ஏற்றப்பட்ட அந்த மரத்தோடு தொடர்ந்து தவத்தில் இருக்கிறார். அந்த மரத்தோடு தான் அவர் பயணிக்கிறார். ஒரு கட்டத்தில் தான் தவத்திலிருந்து இயல்பு நிலைக்கு வரும் பொழுது கழுமரம் ஏற்றப்பட்டு நமக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்கிறார். ஆனால் அரசன் மீதும் காவலர்கள் மீதும் அவருக்கு கடுகளவும் கோபமோ வருத்தமோ இல்லை. எந்த ஒரு வினைப் பயன் என்னை இவ்வாறு தாக்கியிருக்கிறது. நான் செய்த பாவம்தான் என்ன? என்று எமதர்மராஜனிடம் சென்று கேட்கிறார். எமதர்மராஜனும் அவரின் முன் வினைப் பயன் ஒன்றை உரைக்கிறார். அதாவது சென்ற பிறவியில் சிறுவனாக சிறுபிள்ளையாக நீ இருக்கும் பொழுது சிறு சிறு பூச்சி இனங்களை துன்புறுத்தி இருக்கிறாய். அந்த உயிர்களின் துன்பத்தின் விளைவு தான் இன்று உமக்கு இந்தக் கழு வல் ஏற்றி தண்டனை கொடுக்க வேண்டும். என்ற விதியாக மாறி இருக்கிறது. அந்த விதிப்படி இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று மாண்டவ்யரிடம் எமதர்மராஜன் கூறுகிறார். மாண்டவ்யருக்கோ கடும் கோபம் வந்துவிட்டது.

நான் செய்த தவத்தை ஏற்றுக் கொண்டாவது என் முன்வினைப் பயனை நீங்கள் என் கணக்கில் இருந்து கழித்திருக்கலாம். நீங்கள் அதை செய்யவில்லை. எனவே நீங்கள் பூவுலகில் மனிதப் பிறவி எடுத்து துன்பத்தை அனுபவியுங்கள் என்று எமதர்மராஜனுக்கு சாபம் விடுகிறார். அந்த சாபத்தின் விளைவாகத்தான் எமதர்மராஜன் மீண்டும் பிறவி எடுத்து மகாபாரத காலகட்டத்தில் விதுரராக பிறக்கிறார் என்ற ஒரு புராண சம்பவமும் உள்ளது.

வியாச தீர்த்தர்

காவிரி நதியும் கபினி நதியும் கலக்கும் இடத்துக்கு அருகே உள்ள தலைக்காடு எனும் தலத்தின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த பன்னூரை ஆண்டு வந்தவர் வேங்கடகிரி நாயக். அவரிடம் அமைச்சராகப் பணி புரிந்தவர் ராமதேவர். உயர்ந்த கல்வியறிவு தெளிவு பெற்ற சிந்தனை நிர்வாகத் திறன் ஆகியவற்றில் தலை சிறந்து விளங்கியவர் ராமதேவர். ராமதேவரின் மனைவி சீதம்மா (லக்ஷமம்மா) என்றும் சொல்வார்கள். இந்தத் தம்பதியருக்கு பீமக்கா எனும் பெண் குழந்தை இருந்தது. அந்தத் தம்பதியினர் ஆண் குழந்தை ஒன்று வேண்டுமென தவம் இருந்தார்கள். அவர்களின் கனவில் வேதவியாசர் தோன்றி காவிரிக் கரைக்கு அருகில் ஒரு துறவி வருவார். அவரைச் சரண் அடையுங்கள் என்று சொல்லி மறைந்தார். நாட்கள் கடந்தன அவர்கள் அங்கு செல்லவில்லை. ஒரு நாள் ராமதேவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் மயக்கம் அடைந்து விட்டார். அவர் இறந்து விட்டதாக அனைவரும் நினைத்தார்கள். சீதம்மா உடன் கட்டை ஏறத் தீர்மானித்தார். அந்தக் கால கட்டத்தில் உடன் கட்டை ஏறி உயிர் துறக்கும் பெண் யாராவது ஒரு பெரியவரிடம் ஆசி வாங்க வேண்டும். என்பது வழக்கத்தில் இருந்து வந்தது. அதன்படி அப்போது அங்கு விஜயம் செய்திருந்த மகான் பிரமண்ய தீர்த்தர் என்பவரிடம் ஆசி பெறும்படி சீதம்மாவை மற்றவர்கள் அறிவுறுத்தினார்கள். சீதம்மா தாங்க முடியாத வேதனையுடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள அப்பூர் மடத்தின் தலைவரான பிரம்மண்ய தீர்த்தரை வணங்கினார்.

தீர்க்க சுமங்கலி பவ புத்ரவதீ பவ என்று ஆசிர்வாதம் செய்தார் பிரம்மண்ய தீர்த்தர். சீதம்மாவைச் சுற்றி இருந்தவர்கள் திடுக்கிட்டார்கள். நடந்ததை மகானிடம் விவரித்து சுவாமி கணவருடன் சேர்ந்து தானும் உயிர் துறக்க வேண்டும் என்பதற்காகவே இவள் தங்களிடம் ஆசி பெற வந்தாள் எனக் கூறினார்கள். அவர்களை பார்த்த பிரம்மண்ய தீர்த்தர் சீத்தம்மாவின் வீட்டுக்குச் சென்றார். தன் கையில் வைத்திருந்த கமண்டல நீரை ராமதேவர் உடம்பின் மீது தெளித்தார். உடனே ராமதேவர் உயிர்த்தெழுந்தார். எழுந்தவர் மனைவியுடன் சேர்ந்து பல முறை ஸ்வாமிகளை வணங்கினார். அவர்களுக்கு ஆசி கூறிய பிரம்மண்ய தீர்த்தர் உங்களுக்குப் பிறக்கப் போகும் முதல் குழந்தையை மடத்துக்குத் தந்து விடுங்கள் அதன் பிறகு உங்களுக்கு மற்றோர் ஆண் குழந்தை பிறக்கும் என்றார். அதன்படி சீதாம்மா கருவுற்றாள். குழந்தை பிறக்கப் போகும் நாளை அறிந்த பிரம்மண்ய தீர்த்தர் மடத்தில் இருந்து ஒரு தங்கக் தட்டைக் கொடுத்தனுப்பி குழந்தை பூமியில் படாமல் பிறக்க ஏற்பாடு செய்தார். பிரபவ வருடம் வைகாசி மாதம் பிறந்த குழந்தை பூமியைத் தொடாமல் தங்கத் தட்டில் ஏந்தப்பட்டது. ஏற்கெனவே வாக்களித்தபடி குழந்தையை மடத்துக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே சுவாமிக்கு அபிஷேகம் செய்த பாலை உண்டு வளர்ந்தது குழந்தை. யதிராஜன் என்று குழந்தைக்கு பெயரிட்டார்கள். சுவாமிகளின் நேரடிப் பார்வையில் வளர்ந்த யதிராஜனுக்கு ஐந்து வயதாகியது. உபநயனம் செய்தார்கள். ஏழாவது வயதில் யதிராஜனுக்கு சந்நியாச தீட்சை தந்து வியாச தீர்த்தர் என்ற திருநாமம் சூட்டினார் பிரம்மண்ய தீர்த்தர்.

திருவரங்கம் கோவிலுக்கும் திருவானைக் கோயிலுக்கு இடையே ஒருமுறை எல்லைப் பிரச்சனை எழுந்தது. அனைவரின் உள்ளங்களிலும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தது. பிரச்சனை நாட்டை ஆண்ட சாளுவ நரசிம்மன் என்ற மன்னரிடம் கொண்டு செல்லப்பட்டது. சாளுவ நரசிம்மருடன் அங்கு வந்த வியாச தீர்த்தர் பிரச்சனை தீர ஒரு வழி சொன்னார். கோவிலில் இருந்து ஒருவர் மூச்சு விடாமல் ஓடத் தொடங்க வேண்டும். அவர் எங்கு செல்லும் போது மூச்சு விடுகின்றாரோ அதுவே எல்லை என்றார். இதை சாளுவ மன்னன் உட்பட அனைவரும் ஒப்புக் கொண்டனர். ஆனால் மற்றொரு பிரச்சனை எழுந்தது. யார் ஓடுவது என்பதில் கருத்து வேறுபாடு எழுந்தது. முடிவில் நானே ஓடுகிறேன் என்றார் வியாச தீர்த்தார். அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். திருவரங்கம் திருக்கோயிலிலிருந்து வியாச தீர்த்தர் ஓடத் துவங்கினார். ஒரு குறிப்பிட்ட எல்லை வந்ததும் மூச்சுவிட்டு நின்றார். அதுவே அரங்கநாதனின் எல்லையாக தீர்மானிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஒரு அனுமன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து இரு கோவிலின் எல்லைப் பிரச்சனையை தீர்த்து வைத்தார் வியாச தீர்த்தார்.

கிருஷ்ண தேவராயர் கலிங்கப் போரில் வெற்றி பெற்று தலைநகர் திரும்பினார். அப்போது அவரை அணுகிய அரண்மனை ஜோதிடர்கள் ஒரு சில நட்சத்திரங்களின் சேர்க்கையால் மன்னருக்கு குறிப்பிட்ட நாளில் மரணம் நேரும் என்றார்கள். கிருஷ்ண தேவராயர் வியாச தீர்த்தரிடம் நடந்ததைக் கூறி அவரது பாதங்களில் சரணடைந்தார். ஆபத்து நேர்வதாக இருந்த அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் வியாச தீர்த்தர் தானே மன்னராக இருப்பதாக வழி கூறினார். அரசாட்சியை வியாச தீர்த்தரிடம் ஒப்படைத்தார் கிருஷ்ண தேவராயர். குறிப்பிட்ட நேரம் நெருங்கியது. சிம்மாசனம் காலியாக இருந்தது. வியாச தீர்த்தர் சிம்மாசனத்துக்குப் பூஜை செய்தார். தன் மேல் இருந்த காவி மேலாடையை எடுத்துச் சிம்மாசனத்தின் மீது எறிந்தார். பேரிரைச்சலுடன் அந்த ஆடை தீப்பிடித்து எரிந்தது. அதன் சாம்பல் மட்டுமே எஞ்சியது. கிருஷ்ண தேவராயருக்கு வரவிருந்த ஆபத்து நீங்கியது. அதன் பின் தான் வழிபட்டு வந்த தெய்வ வடிவத்தைச் சிம்மாசனத்தில் அமர்த்திய வியாச தீர்த்தர் தானும் சிம்மாசனத்தில் அமர்ந்தார். ஆபத்தை நீக்கிய வியாச தீர்த்தர் கிருஷ்ண தேவராயரிடமே மீண்டும் பதவியைத் தந்து அவரையே மன்னராககினார். அன்று முதல் வியாச தீர்த்தர் வியாசராஜர் என்று அழைக்கப்பட்டார்.

வியாச தீர்த்தர் டெல்லியில் ஒரு மேடான பகுதியில் தங்கி இருந்தார். அந்த மேடு சுல்தான் பலுல்லோடியின் மகன் சமாதி என்று தெரிய வந்தது. தோண்டுங்கள் இதை என்றார் மகான். சமாதி தோண்டப்பட்டது. அதனுள் இருந்த சடலத்தின் மேல் கமண்டல நீரைத் தெளித்தார் வியாச தீர்த்தர். உடனே சுல்தான் மகன் உயிர் பெற்றான். மாண்டவன் மீண்டதைக் கண்ட சுல்தான் பலுல்லோடி மகிழ்ந்தான். யானை ஒட்டகம் ஏராளமான சன்மானங்கள் ஆகியவற்றுடன் வாத்தியங்கள் முழங்க வந்து வியாச தீர்த்தருக்கு சமர்ப்பணம் செய்து வணங்கினான்.

இவர் இந்திய நாட்டின் பல்வேறு இடங்களில் அனுமன் சிலைகளை நிறுவினார். இவர் கன்னடத்தில் பல பாடல்களை இயற்றியுள்ளார். நியாயமிர்தம் தர்க்கதாண்டவம் ஆகியன இவரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கன. சோமநாத கவியின் வியாசயோகி சரிதம் மற்றும் அவரது சீடரான ஸ்ரீனிவாச தீர்த்தரின் வாழ்க்கை வரலாறு ஆகிய நூல்களில் வியாச தீர்த்தரின் வரலாறு உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 349

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் வினைகளின் கூட்டுத் தொகுப்பான பிறவிகளில் மனிதப் பிறவி விலங்கான பிறவிகளிலிருந்து சற்றே கடுகளவு மேம்பட்டது என்றாலும் மேலும் மேம்பட சற்றே முயலாமல் அந்த விலங்குத் தன்மையை மட்டும் கொண்டு உணர்வுகளுக்கு ஆட்பட்டு உணர்வுகளால் அலைக் கழிக்கப்பட்டு வாழ்கின்ற தன்மையே பெரும்பாலான மாந்தர்களிடம் நிலவி வருகிறது. இறைவனின் கருணையைப் பெறவும் மேலும் மேலும் இறை நோக்கி பயணம் செய்யவும் பாவங்களை சேர்க்காத வாழ்க்கை வாழவும் சேர்த்த பாவங்களை கழிக்கவும் மட்டுமே மனித பிறவி என்று ஒரு மனிதன் புரிந்து கொள்ளவே பல பல பல பிறவிகள் ஆகிவிடுகிறது. அவன் புலன்களால் கண்டு கேட்டு உணரக்கூடிய வாழ்க்கை முறையை நுகர்வதே வாழ்க்கை என்று எண்ணுகின்ற தன்மையில்தான் பெரும்பாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதுபோல் புலன் வாழ்வைத் தாண்டி மேலான வாழ்வு நிலையை நோக்கி செல்வதற்கு கொடுக்கப்பட்ட பிறவியை நன்றாக பயன்படுத்திக் கொள்ள கூடுமானவரை முயற்சி செய்வதே ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். ஆகிடுமே மனதை உறுதியாக வைத்துக்கொள்ள இது. அதுபோல் வினைகளின் தொகுப்பு உறவுகள் ரீதியாகவும் நட்பு வழியாகவும் இன்னும் தொடர்பு கொள்ளக் கூடிய பிற மாந்தர்கள் வழியாகவும் வேறு வேறு காரணங்களைக் கொண்டும் செயல்படும் தன்மையாகும். தேகத்தின் ஒட்டுமொத்த இயக்கம் மனிதன் தன் அறிவால் கண்டு இது இதனால் இயங்குகிறது. இது இவ்வாறு இருக்கிறது என்று புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் செயல் பட்டாலும் அப்படி தேகம் இயங்குகின்ற அந்த இயக்கத்தின் பின்னால் இருப்பதும் வினைகள்தான் என்பதை புரிந்து கொள்வது கடினமே.

இறைவனின் கருணையைப் பெறுவதற்கு சாத்வீக வாழ்வும் சலனமற்ற சினமற்ற தன்முனைப்பு அற்ற வாழ்வும் தேவை. இவையெல்லாம் விழி மூடி விழி திறப்பதற்குள் யாருக்கும் கிட்டிவிடாது. தொடர்ந்து போராடிக் கொண்டே இருத்தல் வேண்டும். எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து எழுந்து எழுந்து இறை நோக்கி நல்ல நிலை நோக்கி போராட மனிதன் கற்றுக் கொண்டிட வேண்டும். இறைவன் கருணையாலே எதையெடுத்தாலும் வினைகள் வினைகள் சென்ற பிறவிகளின் கர்மாக்கள் என்று கூறுவதால் என்ன லாபம்? மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவு எதற்கு? அந்த அறிவைக் கொண்டு ஒரு மனிதன் தன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள இயலாதா? துன்பங்களற்ற நிலையை அடைய இயலாதா? என்றால் இறைவன் படைத்த மனிதன் தான் பெற்றுள்ள அறிவை விருத்தி செய்து கொள்ளவும் அந்த அறிவை அனுபவங்களால் நிரப்பி தான் ஏற்கனவே பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுக்கவும் தன்னுடைய அறிவின் திறன் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ளவும் தனக்கு இடர் வராமல் காத்துக் கொள்ளவும் அவன் முயல்வது தவறு என்று நாங்கள் கூற வரவில்லை. அப்படி முயலுகின்ற பல மனிதர்களில் சிலரில் சிலரில் சிலரில் சிலரில் சிலருக்கு மட்டுமே அவன் எண்ணுவது போல ஓரளவு வாழ்க்கை நிலை அமைகிறது. பலருக்கு அவ்வாறு அமைவதில்லை. அது போன்ற தருணங்களில் எல்லாம் மனிதன் சோர்ந்து விடக்கூடாது. என்றோ எப்பொழுதோ செய்த வினை இப்பொழுது வருகிறது என்று எடுத்துக் கொண்டு பக்குவமாக அதனை எதிர்கொண்டு இனி பாவங்களற்ற வாழ்க்கையை வாழ போராட ஒவ்வொரு மனிதனும் கற்றுக் கொண்டிட வேண்டும். தன்னுடைய லோகாய கடமையை நேர்மையாக ஆற்றுவதோடு தன்னால் இயன்ற தொண்டினை செய்வதோடு அமைதியான முறையிலே பிரார்த்தனைகளை ஸ்தல யாத்திரைகளை தொடர்வதும் இயன்ற தர்மகாரியங்களை செய்வதும் ஒரு மனிதனின் பாவங்களைக் குறைப்பது மட்டுமில்லாமல் மேலும் கடுமையான பாவங்களை சேர்க்காமல் இருப்பதற்கும் உதவும்.

இது போன்ற பொதுவான கருத்துக்களை நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுவதின் நோக்கமே மீண்டும் மீண்டும் இது போன்ற கருத்துக்களை அசைபோட அசைபோட அசைபோட அசைபோட மனித மனம் தடுமாற்றமில்லாமல் உறுதியோடு இதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். ஏனென்றால் சராசரி மனிதர்கள் எதையெதையோ பேசி சற்றே தடுமாறி மேலே வரக்கூடிய மனிதர்களை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடும் என்பதால்தான் நல்ல விஷயங்களை உயர்ந்த கருத்துக்களையெல்லாம் மனிதன் அடிக்கடி செவியில் விழுவது போல் ஒரு சூழலை ஏற்படுத்திக் கொண்டிட வேண்டும். எனவேதான் வினைகளின் தொகுப்பான பிறவிகளை களைய மனிதன் முயற்சி எடுத்திட வேண்டும். இதுபோல் எல்லா நிலையிலும் மனிதனுக்கு துன்பங்களற்ற நிலை வேண்டும் என்றாலும் துன்பங்களற்ற ஒரு நிலையை புறத்தே தேடுவது என்பது அத்தனை ஏற்புடையது அல்ல. ஒரு மனிதன் பக்குவப்பட பக்குவப்படத்தான் துன்பங்களற்ற சூழல் என்பது அவன் உணரக்கூடிய சூழலாக இருக்கும்.ஒரு மனிதன் வியாபாரத்திலே கடுமையான நட்டத்தை சந்திக்கிறான். அதிகளவு பொருளை இழக்கிறான். உண்மையில் பார்க்கப் போனால் அது மிகப்பெரிய நட்டமே. அதைப்போல் இன்னொரு மனிதனும் அடைகிறான். இரண்டு மனிதர்களும் இழந்தது மிகப் பெரிய இழப்பு நட்டம். ஆனால் சரி போகட்டும். எங்கோ தவறு செய்து விட்டோம் இனி கவனமாக இருப்போம் என்று மனதை தளரவிடாமல் ஒரு மனிதன் இருந்தால் அவனைப் பொறுத்தவரை இந்த நட்டம் துன்பத்தை தரவில்லை. அதை விடுத்து இப்படியொரு நட்டம் வந்துவிட்டதே இனி எப்படி வாழ்வது? என்று அவன் மிகவும் சோர்ந்து சோர்ந்து அமர்ந்தால் இருக்கின்ற சக்தியும் அவனைவிட்டு சென்றுவிடும். சோர்வே அவனை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி விடும். எனவே நிஜமான துன்பம் என்பதும் நிஜமான இன்பம் என்பதும் இந்த உலகில் இல்லை என்பதை மனிதர்கள் புரிந்து கொண்டிட வேண்டும். அப்படியானால் துன்பம் என்று உணர்வதும் இன்பம் என்று உணர்வதும் பொய்யா? என்றால் அது பொய் என்று உணரும் நிலை வரும் பொழுது ஒவ்வொரு மனிதனுக்கும் அது புரியும். ஏனென்றால் பக்குவம் அடைய அடையத்தான் எது நிஜமான துன்பம்? எது நிஜமான இன்பம்? என்பது மனிதனுக்குத் தெரியும். இறைவனின் கருணையால் இது போன்ற ஞானக் கருத்துக்களை அசைபோட்டாலே வாழ்வின் எதிரே எத்தகைய சூழல் வந்தாலும் மனம் கலங்காமல் வாழ்ந்திடலாம்.

திருவேங்கடமுடையான்

தொண்டைமான் என்ற மன்னன் நாட்டு நன்மைக்காக ஒரு யாகம் செய்ய ஆசைப்பட்டான். தனது விருப்பத்தைத் தன் புரோகிதரான ஜடாதாரியிடம் சொன்னான். அவரும் சம்மதித்தார். ஜடாதாரியோ தீய எண்ணத்துடன் ஒரு துர்தேவதையைக் குறித்து யாகம் செய்து நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கத் திட்டமிட்டார். அந்த யாகத்துக்கு அனைத்து ரிஷிகளையும் வரவேற்கும்படி ஜடாதாரியிடம் மன்னன் கூறினான். அவரும் நாராயண ரிஷி உட்பட அனைத்து ரிஷிகளையும் நேரில் சென்று வரவேற்றார். ஆனால் நாராயண ரிஷி மட்டும் திருவேங்கடமுடையான் அருளால் இவர் ஏதோ தீய எண்ணத்தில் யாகம் செய்கிறார் என உணர்ந்து கொண்டார். அதனால் யாகத்துக்கு வர மறுத்து விட்டார். மேலும் இந்த யாகத்தால் நாட்டுக்குத் தீங்கு ஏற்படாமல் காக்குமாறு திருவேங்கடமுடையானை வேண்டினார். நாராயண ரிஷியால் தனது திட்டத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என உணர்ந்த ஜடாதாரி அவரைப் பற்றி அவதூறாக மன்னனிடம் பலவாறு கூறினார். தொண்டைமான் என்ன பெரிய மன்னனா? அவன் செய்யும் யாகத்துக்கு நான் வர வேண்டுமா? மன்னன் என் காலில் வந்து விழுந்து வரவேற்றால் தான் வருவேன் என்றெல்லாம் கர்வத்துடன் நாராயண ரிஷி பேசுவதாகக் கூறிய ஜடாதாரி மன்னா அவருக்கு நீங்கள் தான் சரியான தண்டனை அளித்துத் தாங்கள் யாரென்று காட்டவேண்டும் என்றார். கோபம் கொண்ட மன்னன் தனது வீரர்களை அனுப்பி நாராயண ரிஷியை இழுத்து வரச் சொன்னான். அவர்களும் ரிஷியை மன்னன் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். இந்த நாட்டை ஆளும் மன்னன் நான் எனக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? மரியாதையாக இந்த யாகத்தில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள் என்றான் மன்னன். இந்த யாகம் செய்வது நாட்டுக்கு நல்லதல்ல. ஏதோ துர்தேவதையைக் குறித்து ஜடாதாரி யாகம் செய்கிறார். நான் இதில் பங்கேற்க மாட்டேன் என்றார் ரிஷி. அவரது விளக்கத்தை ஏற்காத தொண்டைமான் இறுதியாகச் சொல்கிறேன். மன்னனின் ஆணைக்கு அடிபணிவீரா? மாட்டீரா? என்றான். நீ இந்த ஒரு தேசத்துக்குத் தான் அரசன். மன்னா என் ஏழுமலையானோ அகிலாண்டங்கோடி பிரம்மாண்ட நாயகன். அந்த மன்னாதி மன்னனைத் தவிர வேறு எந்த மன்னனுக்கும் அடிபணிய மாட்டேன் என்றார் ரிஷி. அவரைச் சிறையிலடைத்தான் தொண்டைமான்.

சிரித்துக் கொண்டே திருவேங்கடமுடையானின் அடியார்களுக்குச் சிறைச்சாலை கூட தங்க மாளிகை போல மின்னும். மூங்கில் கழிகள் கூட அவர்களுக்குக் கரும்பு போல் இனிக்கும் என்றார் நாராயண ரிஷி. அப்படியா? அப்படியானால் உங்கள் அகிலாண்டங்கோடி பிரம்மாண்ட நாயகனிடம் சொல்லி இந்தச் சிறையைத் தங்கமாக மாற்றச் சொல்லுங்கள். மூங்கில் கழிகளைத் தருகிறேன் நீங்கள் அதைக் கரும்பாய்க் கருதிச் சாப்பிடுங்கள். இவை இரண்டும் நாளை காலைக்குள் நடக்காவிட்டால் உங்கள் தெய்வத்தை இனி அகிலாண்டங்கோடி பிரம்மாண்ட நாயகன் என்று அழைக்கக் கூடாது என்றான். மூங்கில் கழிகளை அவரது சிறைக்குள் கொண்டு வந்து போடச் சொல்லி உத்தரவிட்டு விட்டுத் தன் அந்தப்புரத்துக்குச் சென்றான் மன்னன் அன்றிரவு திருவேங்கடமுடையான் கஜேந்திரன் யானையை சிறைச் சாலைக்கு அனுப்பினார். கஜேந்திரன் வந்து அனைத்து மூங்கில்களையும் எளிதில் தின்று தீர்த்தார். தன் திருமார்பில் உள்ள மகாலட்சுமியிடம் அந்தச் சிறைச் சாலையைக் கடாட்சிக்கும்படி கூறினார் திருமலையப்பன். மகாலட்சுமியின் பார்வை பட்டதும் சிறைச்சாலை பொன் மயமானது. அடுத்த நாள் காலை வந்து பார்த்த மன்னன் மூங்கில் கழிகள் அனைத்தும் காணாமல் போனதையும் சிறைச்சாலை முழுவதும் தங்கமயமாக இருப்பதையும் கண்டு வியந்து திருமலையப்பனின் மேன்மையையும் நாராயண ரிஷியின் பக்தியின் பெருமையையும் உணர்ந்தான். ஜடாதாரி செய்ய நினைத்த யாகத்தை நிறுத்தினான். அன்று முதல் தொண்டைமான் திருமலையப்பனின் பக்தனாக மாறினான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 348

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

கொடுத்துக் கொண்டேயிரு. காற்று எப்படி நல்லவன் தீயவன் என்று பாராமல் வீசுகிறதோ சூரிய ஒளி எப்படி நல்லவன் தீயவன் என்று பாராமல் படுகிறதோ மழை எவ்வாறு நல்லவன் தீயவன் என்று பாராது பொழிகிறதோ அதைப் போல பொதுவாக செவியில் பிறர் குறை விழுந்த உடனோ அல்லது தெரிந்த உடனோ உன்னால் முடிந்தவரை முயற்சி செய்து தீர்த்துக் கொண்டேயிரு. இதில் எத்தனை தடைகள் வந்தாலும் எத்தனை ஏளனங்கள் வந்தாலும் அதையெல்லாம் அமைதியாக ஏற்றுக் கொண்டேயிரு. ஏனென்றால் ஒருவகையில் தர்மம் செய்வது எளிது. இன்னொரு வகையில் கடினம். எப்பொழுது கடினம்? தர்மம் செய்ய செய்ய செய்ய இறைவன் சில சோதனைகளை வைப்பார். அதையெல்லாம் தாண்டி இந்த ஆத்மா வருகிறதா? என்று பார்ப்பார். உடன் இருப்பவர்களை வைத்தே எதிர்ப்பு காட்ட வைப்பார். இப்படி கொடுத்துக் கொண்டே போனால் நாளை உனக்கு ஒரு தேவை என்றால் என்ன செய்வாய்? என்பது போன்ற அச்சமூட்டும் வினாக்களையெல்லாம் பிறரை கேட்க வைப்பார். இது போன்ற தருணங்களிலெல்லாம் மனம் தடுமாறாமல் சோர்வடையாமல் தொடர்ந்து நல்ல வழியில் சென்று கொண்டே இருக்க வேண்டும்.

பகவத்கீதையும் கிருஷ்ணரும்

ஒரு ஏழை பிராமணன் கங்கைக் கரையில் மனைவியோடு வசித்து வந்தான். தினமும் கீதை பாராயணம் செய்து விட்டு பிட்சை எடுத்து கிடைத்ததை மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்லி அன்றைய உணவை கிருஷ்ணனுக்கு நைவேத்யம் செய்து விட்டு இருவரும் சாப்பிடுவது வழக்கம். ஒரு நாள் கீதையைப் பாராயணம் செய்யும் போது ஒன்பதாம் அத்தியாயத்தில் யோக க்ஷேமம் வஹாம்யஹம் என்று வந்தது. இதனை படித்ததும் அவனுக்கு ஒரு சந்தேகம். இந்த உலகத்தில் கோடானு கோடி பேர் இருக்கிறார்கள். அவ்வளவு பேரையும் கிருஷ்ணன் எப்படி நான் ரட்சிக்கிறேன் என்று சொல்கிறான். தானே ஒவ்வொருவரின் துன்பத்தையும் அறிந்து நேரில் சென்று போக்குவது என்பது நடக்காத காரியம். எல்லோரின் துன்பத்தையும் கிருஷ்ணன் தனி ஒருவனாக எப்படி சுமப்பான்? அவர்களை துன்பத்திலிருந்து எவ்விதம் காப்பாற்றுவான்? நான் பாதுகாக்கிறேன் என்றால் என்ன அர்த்தம் என்று திரும்பி திரும்பி கீதையை படித்தும் அவருக்கு விளங்கவில்லை. இதை விடக்கூடாது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து அந்த சுலோகத்தின் அருகில் x என்ற குறியிட்டை போட்டுவிட்டு புத்தகத்தை மூடினார். ஜால்ராவையும் பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு வழக்கம் போல பிட்சைக்கு கிளம்பினான். அன்று யாரும் அவனுக்கு உணவு தானியங்கள் என்று எதுவும் பிட்சை அளிக்கவில்லை. ஜால்ராவை வைத்து பாடிக் கொண்டே சென்றான்.

பிராமணன் ஊருக்குள் அலைந்து கொண்டிருந்த சமயம் ஒரு சிறு பையன் பிராமணன் வீட்டு கதவைத் தட்டினான். பிராமணன் மனைவி வாசல் கதவை திறந்த போது அந்த சிறுவன் தலையிலிருந்து ஒரு பெரிய மூட்டையை இறக்கி வைத்தான். இதனை கண்ட அவன் மனைவி யாரப்பா நீ? என்ன இதெல்லாம்? தவறான இடத்திற்கு வந்து விட்டாய் போல இருக்கிறது என்றாள். அதற்கு அந்த சிறுவன் இல்லேம்மா. நான் அருகில் வசிக்கிறேன். இது என் குருநாதர் வீடு. அவர் எனக்கு கட்டளை இட்டிருக்கிறார். அந்த கட்டளையின் படி உணவிற்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் கொண்டு வந்திருக்கிறேன் என்றான். நான் உன்னை பார்த்ததில்லை. அவருக்கு தெரியாமல் இதை நான் வாங்க மாட்டேன். இதெல்லாம் வேண்டாம் அவருக்கு தெரியாமல் வாங்கினால் அவர் என்னை கோபிப்பார் என்றாள். அம்மா உங்களுக்கு நான் இங்கே வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆனால் என் குருநாதருக்கு தெரியும். இதோ பாருங்கள் அவர் சொன்னதும் இந்த நான் மூட்டையை சுமந்து கொண்டு மெதுவாக நடக்கிறேன் என்று என் முதுகில் இடது பக்கமும் வலது பக்கமும் பலமாக அடித்திருக்கிறார் பாருங்கள் என்றான். முதுகில் x போல் அடித்தற்கான தழும்பு இருந்தது. அவள் திகைத்தாள் கணவர் ஏன் இவ்வாறு இந்த சிறுவனிடம் கொடுமையாக நடந்து கொண்டிருக்கிறார் என்று எண்ணியபடி நீ உள்ளை வா என்று அந்த சிறுவனை உள்ளே அழைத்து முதுகில் எண்ணெய் தடவி அவனுக்கு உணவளித்தாள். அவர் வரும் வரை ஓய்வெடு என்றாள். அவன் பூஜை அறையில் போய் படுப்பதாக சொல்லி உள்ளே சென்றான்.

பிராமணர் உணவு சமைக்க பிட்சை எதுவும் கிடைக்காமல் களைப்பாக வீடு திரும்பினார். அவரைக் கண்டதும் அவரை பேச விடாமல் ஒரு சிறுவனிடம் இப்படியா கொடுமைப்படுத்தி அடிப்பீர்கள் என்று அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தாள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை என்ன உளற்றுகிறாய் என்றார். அவரிடம் நடந்த அனைத்தையும் சொல்லி மேலும் கேள்வி கேட்க ஆரம்பித்தாள். பிராமணருக்கு தலை சுற்றியது. எனக்கு சிஷ்யனா? நான் சாமான் கேட்டேனா? அவனை அடித்தேனா? என்னம்மா உளறுகிறாய். நீ சொல்வது போல் எதுவுமே நடக்கவில்லை என்றார். அதற்கு அவள் அந்த சிறுவன் முதுகை காட்டினான். அதில் x போல் அடித்த அடையாளம் இருந்தது. அவன் முதுகில் எண்ணெய் தடவினேன். சிறுவன் பொய் சொல்லவில்லை என்றாள். அதற்கு பிராமணர் என் கிருஷ்ணன் மீது ஆணையாக சொல்கிறேன். எனக்கு அவனைத் தெரியவே தெரியாது நான் அடிக்கவில்லை என்கிறார். அதற்கு அவள் இதோ பூஜை அறையில் தான் அந்த சிறுவன் இருக்கிறான் போய் பாருங்கள் என்றாள்.

பிராமணர் பூஜை அறைக்கு ஓடினார். வீடு முழுதும் தேடினார். சிறுவனைக் காணவில்லை. பிராமணருக்கு புரிந்துவிட்டது வந்தது கிருஷ்ணன் தான். வீட்டில் நிறைய உணவுப் பொருட்களை கொடுத்து தன் வறுமை நீக்கி கிருஷ்ணன் லீலை புரிந்திருக்கிறார். கிருஷ்ணரின் மீது நன்றியோடு கீதை புத்தகத்தை எடுத்து மறுபடியும் பாராயணம் செய்ய பக்கத்தை புரட்டினார். காலையில் அவர் சந்தேகத்தோடு போட்ட x குறியைக் காணவில்லை. கோடானு கோடி மக்களின் துன்பத்தை தீர்க்க நான் அருகிலே இருப்பேன் என்று சொல்கிறாயே. உன்னால் அது எப்படி சாத்தியம் என்று உன்னை சந்தேகப்பட்டேனே. உன்னால் அனைத்தையும் செய்ய முடியும் என்று எனக்கு புரிய வைத்தாய். கீதையும் நீயும் வேறல்ல என்பதைக் காட்ட கீதையில் நான் போட்ட x குறியை உன் முதுகில் தாங்கி வந்து என் சந்தேகத்தை தீர்த்து என் அகக் கண்ணை திறந்தாய் கிருஷ்ணா என்னை மன்னித்துவிடு என்று பிரார்த்தனை செய்தார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 347

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் பலர் எண்ணலாம் எப்பொழுது வந்தாலும்  நலமான வாழ்வு உண்டு. நலமான எதிர்காலம் உண்டு. அச்சம் வேண்டாம். கலக்கம் வேண்டாம். கவலை வேண்டாம் என்று சித்தர்கள் கூறுகின்றார்கள். ஆயினும் கூட இதுபோல் உலகத்தில் அவ்வாறு எல்லா வகையிலும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ முடிவதில்லையே? பின் சித்தர்கள் ஆசிகள் கூறுகிறார்களே? பின் அது அவ்வாறு நடை முறையில் காண முடியவில்லை? என்று பலரும் ஐயமும் குழப்பமும் ஏன்? எங்கள் மீது விரக்தியும் கொண்டுதான் வாழ்கிறார்கள். நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது போல் இந்த உலகத்தில் ஒவ்வொரு ஆன்மாவும் பிறவி எடுத்ததின் நோக்கம் பூர்வீக பாவங்களைக் கழிப்பதற்கும் புதிதாக பாவங்களை சேர்த்துக் கொள்ளாமல் வாழ்வதற்குமே. அதாவது இது முற்றிலும் மனித பிறவிக்கு 100 க்கு 100 விழுக்காடு பொருந்தும். ஆயினும் கூட எண்ணற்ற பாவங்களை பிறவிகள் தோறும் இது ஆன்மாவிற்கு தான் செய்தது அல்லது செய்து கொண்டிருப்பது பாவம். இதனால் மற்றவர்களுக்கு துன்பமும் துயரமும் மன வேதனையும் ஏற்படும் என்பதை இறைவன் பெருங்கருணை கொண்டு கால அவகாசம் கொண்டு உணர்த்தவே எண்ணுகின்றார். இல்லையென்றால் எல்லோரும் கூறுவது போல தவறு செய்யும் பொழுதே ஒரு மனிதனை தடுத்து விடலாமே? தண்டித்து விடலாமே? என்ற பார்வையிலே பார்த்தால் இறைவன் எண்ணினால் அவ்வாறும் செய்யலாம்தான். ஏன்? அதை விட படைக்கும் பொழுதே எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும். நல்லதையே எண்ண வேண்டும் நல்லதையே உரைக்க வேண்டும் நல்லதையே செய்ய வேண்டும் என்று  எல்லாம் வல்ல இறைவன் எண்ணினால் அது மிக எளிதாக நடக்குமே?. ஆனால் அவ்வாறு இல்லாமல் இதுபோல் நிலையிலே மனிதர்களுக்கு எல்லா வகையான சுதந்திரங்களையும் தந்து அவனை பல்வேறு தருணங்களில் அவன் போக்கிலே விட்டு இது நல்லது இது தீயது இது தக்கது இது தகாதது என்று அவனையே சிந்தித்துப் பார்க்க வைத்து இயல்பாக ஒருவன் நல்லவனாக மாற வேண்டுமே தவிர தண்டனைக்கு பயந்தோ அல்லது தன்னை கண்காணிக்கின்றான் ஒருவன் அதாவது தான் கண்காணிக்கப் படுகிறோம் என்பதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ அச்சத்தினாலோ அல்லது வேறு ஏதாவது உபாதை ஏற்பட்டு விடும் என்பதற்காகவோ ஒருவன் நல்லவனாக இருப்பது என்பது இறைவனை பொருத்தவரை ஏற்புடையது அல்ல.

தங்கம் என்றால் அதன் இயல்பு எந்த நிலையிலும் மாறாதது. அதைபோல மனிதன் என்றால் தர்மத்திலும் சத்தியத்திலும் எப்பொழுதும் வழுவாமல் இருக்க வேண்டும். அந்த இயல்புதன்மை ஒரு ஆன்மாவிற்கு எப்பொழுது வரும்? ஏற்கனவே சேர்த்த பாவங்கள் அவனை நல்ல பாதையில் செல்ல விடாது. அந்த பாவங்களை  கழிக்க இறைவன் கருணை கொண்டு ஏதாவது ஒரு பிறவியிலே சில நல்ல விஷயங்களை செய்வதற்குண்டான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார் அல்லது சில நல்லவர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தருவார் அல்லது நல்ல தாய் தந்தையர்களுக்கு பிள்ளைகளாக பிறக்க வேண்டிய சூழ்நிலையை அப்படியொரு வாய்ப்பை தந்தருள்வார். அதைப் பிடித்துக் கொண்டு மனிதன் மெல்ல மெல்ல மேலேற வேண்டும். அதாவது எத்தனையோ கணக்கற்ற பிறவிகளை பிறந்து பிறகு இறந்து பிறகு பிறந்து பிறகு இறந்து அவையெல்லாம் நினைவுப்பதிவில் இருந்தும் இல்லாமல் போனது போல இந்த உலக வாழ்க்கையே நிஜம். இந்த தேகம் நிஜம். இந்த தேகம் சார்ந்த சுகத்திற்காகத்தான் பாடுபட வேண்டும். இந்த லோகாய விஷயங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று சராசரி குணம் கொண்டு வாழ்கின்ற மனிதன் இறைவனின் கருணையால் ஏதாவது ஒரு பிறவியிலே மெல்ல மெல்ல இவையெல்லாம் பொய். இதனைத் தாண்டி மெய்யான விஷயம் ஒன்று இருக்கிறது. அதனை நோக்கி செல்ல வேண்டும். இந்த தேகம் என்பது ஆன்மாவிற்கு ஒரு கூடு போன்றது. இன்னும் கூறப்போனால் ஆன்மா இந்த தேகத்திற்குள் சிறை வைக்கப் பட்டிருக்கிறது. அந்த ஆன்மா விடுதலை பெற வேண்டுமென்றால் இந்த தேகத்தைவிட்டு செல்வதோடு மீண்டும் ஒரு தேகத்திற்குள் புகாமல் இருப்பதற்கு என்ன வழி? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி சிந்தித்து சிந்தித்து சிந்தித்து சிந்தித்து கடைத் தேறியவர்களே மகான்களும் ஞானியர்களும் சித்த புருஷர்களும் ஆவர்.

இதற்காகத்தான் இத்தனை விதமான வழிபாடுகளும் சாஸ்திரங்களும் விதவிதமான ஆலயங்களும் மரபுகளும் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் காலப் போக்கில் என்னவாயிற்று? இந்த மரபையும் சாஸ்திரத்தையும் பிடித்துக் கொண்ட மனிதன் அதன் உண்மைத் தத்துவத்தை உணராமல் அல்லது உணர ஒரு முயற்சி செய்யாமல் இருந்து விட்டான். தேர் இழுக்கவேண்டும் என்பதை கற்றுக் கொண்ட மனிதன் தன் உடலில் இருக்கக் கூடிய குண்டலினி எனும் தேரை கீழிருந்து மேலே பிரயாசைபட்டு ஐம்புலன்களையும் ஒன்றாக்கி பிற இச்சைகளை எல்லாம் விட்டுவிட்டு மேலே இழுக்கவேண்டும் என்பதை விட்டு விட்டான். தீர்த்தமாடுதல் என்றால் உள்ளே சுரக்கும் அமிர்தத்தைத் தூண்டிவிட்டு அதை சுவைத்து உள்ளே இருக்கும் ஆன்மாவை உள்ளே சுரக்கும் அமிர்தத்திலே நீராட வைக்கவேண்டும் என்ற உண்மையை மறந்து விட்டு ஆங்காங்கே இருக்கின்ற நீர் நிலைகளுக்கு சென்று தேகத்தையே சுத்தி செய்து கொண்டிருக்கிறான். தேகத்தைப் போற்ற வேண்டும். தேகத்தை நன்றாக பேண வேண்டும். தேகத்தை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதல்ல. யாங்கள் அடிக்கடி கூறுவதுபோல 100 ஆண்டுகள் மேலும் வாழ்வதற்கு என்ன வழியோ அதனை தேகத்திற்கு ஒருவன் செய்து கொள்ளலாம் தவறில்லை. ஆனால் அடுத்த கணம் மரணம் வந்தாலும் ஏற்க மனதையும் தயாராக வைத்திருக்க வேண்டும். உடம்பு 100 வயதையும் தாண்டி வாழ்வதற்குண்டான பயிற்சியை மேற்கொண்டு வஜ்ர தேகமாக மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். மனது எப்பொழுது மரணம் வந்தாலும் அதை ஏற்கும் நிலைக்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். இதுதான் சித்தர்களின் வழியாகும்.

இதுபோல் சுயநலமற்று பந்த பாசங்களில் சிக்காமல் கடமைகளில் இருந்து தவறாமல் கடமைகளை செய்கிறேன் என்று பாசத்தில் வழுக்கி விழாமல் கடமைகளை செய்கிறேன் என்பதற்காக நேர்மை தவறாமல் ஒருவன் தன்னையும் பாதுகாத்துக் கொண்டு தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொண்டு மனதை இறைவனின் திருவடியை நோக்கி வைத்துக் கொண்டு சதாசர்வகாலம் அந்த இறை சிந்தனையிலே
வாழ வேண்டும். ஏன்? ஒருவன் எதை எண்ணுகிறானோ அதுவாகவே மாறிவிடுகிறான். இந்த கருத்து பல மனிதர்கள் அறிந்ததே. அதைப் போல நீக்கமற நிறைந்துள்ள எங்கும் வியாபித்துள்ள பெரும் கருணை கொண்ட அந்த பரம்பொருளை எண்ண எண்ண எண்ண எண்ண ஒரு மனிதனுக்கு தவறு செய்யக் கூடாது பாவங்கள் சேர்க்கக் கூடாது என்கிற நினைவு இருந்து கொண்டே இருக்கும். இந்த நினைவு இருக்கும் வரையில் ஒரு மனிதன் கூடுமானவரை சரியான வழியில் சென்று கொண்டே இருப்பான். பாவங்கள் செய்வதால் ஒரு ஆன்மாவை மனித தேகம் எடுக்க வைத்தோ அல்லது விலங்கு தேகம் எடுக்க வைத்தோ கடுமையாக தண்டிப்பதில் இறைவனுக்கு என்ன லாபம்? ஒரு மனிதன் கண்ணீர் சிந்தினால் அதனால் இறைவனுக்கு எதாவது லாபமா? மூதுரை (பழமொழி) ஒன்று இருக்கிறதல்லவா நன்றும் தீதும் பிறர் தர வாரா என்று. ஒருவன் நுகர்வதெல்லாம் அவன் என்றோ செய்தவைதான். இன்றொருவன் எல்லா வகையிலும் நிம்மதியாக வாழ்கிறான் என்றால் அவன் அதற்கேற்றாற்போல் முந்தைய பிறவிகளில் உழைத்திருக்கிறான் என்று பொருள். ஒருவன் எல்லா வகையிலும் நிம்மதியிழந்து வாடுகிறான் என்றால் அதற்கேற்றாற்போல் அவன் விதைகளை விதைத்திருக்கிறான் என்பது பொருளாகும்.

இப்பொழுது எதை யாங்கள் கூற வருகிறோம் என்றால் சித்தர்கள் நல்லாசிகள் தந்தாலும் வாழ்வு நன்றாக இருக்கும் இறைவனருளால்  என்று கூறினாலும் கூட எங்கள் வாழ்வு நன்றாக இல்லையே என்று இங்கு வந்து போகின்ற மனிதர்கள் எண்ணுவது எதைக் குறிக்கிறது? என்றால் அறியாமையைக் குறிக்கிறது. ஏனென்றால் லோகாய வாழ்விலே ஒருவனுக்கு எத்தனை செல்வத்தைத் தந்தாலும் எத்தனை மாளிகைகளைத் தந்தாலும் எத்தனை கோடி கோடியாக தனத்தைத் தந்தாலும் அவன் விரும்புகின்ற எந்த விஷயத்தைத் தந்தாலும் அது பதவியோ அவன் ஆசைப்படுகின்ற பெண்களோ அல்லது நிறைய தங்கமோ எதைத் தந்தாலும்கூட ஒரு மனிதனால் நிம்மதியாக சந்தோஷமாக வாழ இயலாது. தொடர்ந்து ஒருவன் செய்கின்ற பக்தியும் தொண்டும்தான் நேர்மையான வழியில் சேர்த்த செல்வத்தை பிறருக்கு பயன்படுமாறு அள்ளி அள்ளி அள்ளி அள்ளி வழங்குகின்ற தடைபடாத தர்ம குணத்தினால் மட்டும்தான் ஒருவனுக்கு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சேர்ப்பதல்ல சுகம். சேர்த்து வைப்பதல்ல சுகம். இருப்பதையெல்லாம் தந்து கொண்டேயிருப்பதே சுகம். இழக்க இழக்கதான் மனிதன் பெறுகிறான் என்பதை மனிதன் மறந்து விடக்கூடாது. எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கிறானோ நியாயமான விஷயங்களுக்கு எதையெல்லாம் ஒரு மனிதன் கொடுக்கிறானோ தன்னையே எப்பொழுது இழக்கிறானோ அப்பொழுதுதான் அவனுக்கு இறைவனின் பரிபூரண கருணை கிட்டும். அதை விட்டு எனக்கு இந்த செல்வம் வேண்டும் எனக்கு இந்தவகையான வசதியான வாழ்வு வேண்டும் என்று இறைவனை நோக்கி வேண்டுவதால் பயனொன்றுமில்லை.

ஒருவேளை இவையெல்லாம் இறைவன் தரலாம். ஆனால் ஒரு மனிதன் கேட்கின்ற லௌகீக விஷயங்களால் லௌகீக வசதிகளால் சில காலமோ அல்லது சில நாழிகையோ வேண்டுமானால் அவன் சுகமாக நிம்மதியாக இருக்கலாம் அல்லது அப்படி இருப்பது போல் ஒரு மாயத்தோற்றம் ஏற்படலாம். நிரந்தர நிம்மதியும் நிரந்தர சந்தோஷமும் பற்றற்ற தன்மையும் யோகாசனத்தால் தன் தேகத்தை வஜ்ரமாக ஆக்கி வைத்துக் கொள்வதிலும் சுவாசப் பயிற்சியை தடையற்று செய்து சுவாசத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்வதும் பிறகு தன்னிடம் இருப்பவற்றை எல்லாம் தேவையான மனிதர்களுக்கு தேவையான பொழுது அவன் வாயைத் திறந்து கேட்கும் முன்னே குறிப்பறிந்து தருவதும் அப்படி தந்து விட்ட பிறகு எவன் பெற்றானோ அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொள்ளாமல் அதாவது ஒருவனுக்கு ஒரு உதவியை செய்ய வேண்டியது. பிறகு நான் உனக்கு இந்த உதவியை செய்திருக்கிறேன் செய்திருக்கிறேன் என்பது போல் அவனுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பது. இது போன்ற உதவியை செய்வதற்கு ஒரு மனிதன் செய்யாமலேயே இருக்கலாம். எனவே உதவியை செய்து விட்டு பிரதிபலன் எதிர்பார்ப்பது கூட அந்த உதவிக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்தியது போல் ஆகும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் வழங்கிக் கொண்டே இருத்தல் என்பதே இறைவனின் அருளையும் ஏன்? இறைவனின் தரிசனத்தையும் பெறுவதாகும். எனவே கொடுப்பது ஒன்று மட்டும்தான் இறைவன் கருணையை எளிதில் பெறுவதற்குண்டான வழியாகும்.

ஏது ஏதோ மந்திரங்களை வாயில் நுழையாமல் கடினப்பட்டு கற்றுக் கொள்வதாலோ புரியாத அர்த்தம் கொள்ள இயலாத மந்திரங்களை கூறுவதாலோ மட்டும் இறைவனருள் கிட்டாது. அவையெல்லாம் ஒரு அடிப்படை பாடமாகும். இறைவன் அருளைப் பெற வேண்டும். எதற்காக பெற வேண்டும்? எல்லாவகையிலும் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகத்தானே? பிறரை நிம்மதியாக வாழ வைத்தால் ஒருவனுக்கு நிம்மதி தானாக வந்துவிடும். பிறர் கண்ணீரை ஒருவன் துடைத்தால் அவன் கண்ணீர் இறைவனால் துடைக்கப்படும். பிறர் புன்னகைக்கு ஒருவன் வழிவகுத்தால் இவன் நிரந்தரமாக புன்னகைக்க இறைவன் ஏற்பாடு செய்வார். இதுதான் அடிப்படை ஆன்மீகமாகும். இதனைப் புரிந்து கொண்டு விட்டால் எமது வாக்கும் வாக்கின் போக்கும் புரியும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 346

கேள்வி: முக்தி என்றால் என்ன? முக்தி ஸ்திதி என்றால் என்ன? அதற்குரிய சாதனைகள் என்னென்ன? ஒரு சாதகன் எந்தெந்த சாதனைகளைப் பின்பற்ற வேண்டும் ?

இறைவனின் கருணையால் இயம்புவது யாதென்றால் முத்தி என்றால் என்ன? முற்றிய நிலை என்று கொள்ளலாம். ஒரு வகையான ஒரு உயர்வான நிலை என்றும் கொள்ளலாம். சிப்பி என்ற கூட்டுக்குள் விழுகின்ற தூய நீர் முற்றி முத்து ஆவது போல. இதுபோல் தேகம் என்னும் சிறிய கூட்டுக்குள் அடைபட்டு அடைபட்டு பிறவிகள் எடுத்து எடுத்து மாயா வாழ்வில் சிக்கி உழன்று உழன்று தவிக்கின்ற ஆத்மாக்கள் அதிலிருந்து விடுபட்டு ஒரு முற்றிய நிலை. அந்த நிலையை நோக்கி செல்லுதல் அல்லது அடைதல் முக்தி எனலாம்.

விடுதல் அது நீழ்ச்சி பெற்று அது வீடுபேறு ஆயிற்று. விடுதல் என்றால் எதிலிருந்து? எவையெல்லாம் மனிதனுக்கு முதலில் இன்பமாய் தோன்றி பிறகு நிரந்தர துன்பத்தைத் தருகிறதோ அவை அனைத்திலிருந்தும் மனிதன் விடுபட வேண்டும். எல்லாவற்றிலிருந்தும் விடுபடக் கூடிய மனோபாவத்தை அந்த மனோநிலையை வைராக்கியம் கொண்டு எவனொருவன் வளர்த்துக் கொள்கிறானோ இதுபோல் ஒவ்வொரு மனிதனும் துயிலும்பொழுது கனவு காண்கிறான். ஆனால் என்றாவது காண்பது கனவு என்று உணர்கிறானா? கனவிலே அச்சமூட்டும் நிகழ்வு என்றால் அஞ்சுகிறான். மகிழ்வைத் தரும் நிகழ்வு என்றால் மகிழ்கிறான். அதைக் காணும் பொழுது கனவு என்று உணராமல் விழித்த பிறகுதான் கனவு என்று உணர முடிகிறது. ஆனால் அதை இப்படியே என்றென்றும் விழிப்பு நிலையிலேயே இருந்து உணர்ந்து பார்க்கின்ற ஒரு கலை அதாவது வாழும் பொழுதே இவ்வாழ்க்கை மெய்யல்ல பொய். வினைகளை நுகரத்தான் இந்த வாழ்வு.

இப்பொழுது நடப்பதும் பார்ப்பதும் சொப்பனம். விழிப்பு நிலை ஜாக்ரதா நிலை என்பது வேறு என்பதை உணர்ந்து இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே வினைகளை நுகர்ந்து கொண்டே இடைவிடாத  இறை சிந்தனையோடு எவனொருவன் அந்தப் பரம்பொருளை நோக்கி செல்கின்ற முயற்சியை விடாது செய்கிறானோ அப்படி செய்கின்ற அந்த மனிதனின் ஆத்மாவிற்கு இறுதி நிலையில் கிட்டுகின்ற ஒரு முற்றிய நிலை முக்தி நிலை. இதற்கு வைராக்யமும் பற்றற்ற தன்மையும் 100 க்கு 100 விழுக்காடு சத்தியமும் தர்மமும் தேவை. இதனை விட்டுவிட்டு வேறு எத்தனை மந்திரங்களை ஒருவன் உருவேற்றினாலும் மனம் பக்குவப்படாத நிலையில் இந்த முக்தி என்கிற ஒரு உயர் நிலையை அடைவது கடினம்.

அனுமனின் வாலில் மணி

ராமன் சீதையை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் உயரமானவை குட்டையானவை என்று பல வகை இருந்தது. அதில் சிங்கலிகா என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை இருந்தது. இதில் ஆயிரம் வானரங்கள் இருந்தன. இந்த வானரங்கள் கூட்டமாக சென்று எதிரியின் படை வீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும். போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும் போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர். அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வர வேண்டுமே என்ற கவலையில் இருந்தார்கள். அதைக் கவனித்த ராமன் அவர்களிடம் கூறினார் யாரும் கவலைப்பட வேண்டாம். என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு என்றார்.

ராமருக்கும் ராவணனுக்கும் போர் ஆரம்பமானது. கடும் போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள். தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச் சொன்னான் ராவணன். ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். கும்பகர்ணன் இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதையைக் கடத்தியதற்காக ராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை. வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன். கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கு ஏற்றாற் போல் அவனது தேரும் மிகப் பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராம பாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும் போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக் கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடி விட்டது. திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப் போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன. ஒரே இருட்டு. நல்ல வேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது. சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. ஒரு வானரம் சொன்னது இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப் போய் விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி என்றது. சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப் போவதில்லை நம்மைக் காப்பாற்ற நம் தலைவிதி இப்படியே கிடந்து சாக வேண்டியதுதான் சொன்னது இன்னொரு வானரம். ராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களை எல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டு வந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே அவர் என்ன செய்தார் இன்னொரு வானரம் சொன்னது. இதைக் கேட்ட மற்ற வானரங்களும் ஆமாம் ஆமாம் என்றன. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது. முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள். நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள். எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ராம் ராம் ராம் என்று ஜெபம் செய்யுங்கள். ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார் என்று சொன்னது. எல்லா வானரங்களும் அப்படியே செய்தன.

ராமரால் ராவணனும் கொல்லப்பட்டான் போர் முடிந்தது. சீதையை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள். அப்போது ராமன் சொன்னார் சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. பார்த்து எண்ணிக் கொண்டு வா என்றார். அதற்கு சுக்ரிவன் எண்ணி விட்டேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை என்றான் சுக்ரீவன். அதற்கு ராமர் மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா என்றார் ராமன். ராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான். தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை என்றார். உடனே ராமர் அனுமா நீயும் என்னுடன் வா. நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம் என்றார் ராமன். அனுமனும் ராமனும் வானர்களைத் தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள் உடைந்து கிடந்த தேரின் பாகங்கள் அம்புகள் கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப் பார்த்தார் அனுமன். சிங்கலிகர்கள் தென்படவில்லை. திடீரென்று ராமன் ஒரு இடத்தில் நின்றார். அனுமா அங்கே பார். ஒரு பெரிய மணி தெரிகிறது என்றார். ராமன் சொன்னது புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் அந்த இடத்திற்கு விரைந்தார்கள். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். அனுமன் மணியைத் தாக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக் கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப் பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள். எதிரே ஸ்ரீராமனும் அனுமனும் நின்றிருந்தார்கள். வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்கள் கண்ணீருடன் ராமரிடம் பிரபுவே என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம். எங்களை மன்னித்து அருள வேண்டும் என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின. அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ராமன் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார்.

ராமன் அனுமனைப் பார்த்து சொன்னார் அனுமா வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா? இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி ஞானம் வைராக்கியம் கிட்டும் என்று வாழ்த்தினார். கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இந்த மூன்று மாநிலங்களிலும் பல ஊர்களில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கி கொண்டிருக்கும்.