சுலோகம் -114

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-67

நீரில் போய்க் கொண்டிருக்கும் ஓடத்தைக் காற்று அடித்துக் கொண்டு போவது போல போகங்களில் சஞ்சரிக்கின்ற புலன்களில் எந்த ஒரு புலனும் மனம் ஒட்டி இருக்கின்றதோ அந்த ஒரு புலன் மனம் வசப்படாத இந்த மனிதனின் புத்தியைக் கவர்ந்து சொல்கிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உயிர்கள் இறைவனை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பிறவி என்னும் ஓடத்தில் பயணம் செய்யும் போது மனமான காற்றானது தனியாக அமைதியாக பயணிக்கும் போது இறைவனை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது. ஆனால் மனமான காற்றானது புத்தியுடன் இணைந்தவுடன் ஐம்புலன்களில் ஏதேனும் ஒரு புலன்களுடன் இணைந்தாலும் அது ஆசைகளின் வழி செல்லும் போது புலன்களுடன் இணைந்த மனமானது பெருங்காற்று தன் செல்லும் வழியில் ஓடத்தை இழுத்துச் செல்வது போல் மனிதனின் புத்தியை கவர்ந்து இழுத்துச் செல்கிறது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 216

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் ஜாதகத்திலே இராகு கேதுவிற்குள் எல்லா கிரகங்களும் அடங்கி விட்டாலும் அல்லது இராகு கேது லக்னம் (முதல் வீடு) லக்னத்திற்கு அடுத்த இடம் (2 ஆம் வீடு) குறிப்பாக சப்தமஸ்தானம் (7 ஆம் வீடு) அட்டம ஸ்தானம் (8 ஆம் வீடு) விய ஸ்தானம் (12 ஆம் வீடு) ருண ரோக ஸ்தானம் (6 ஆம் வீடு) இது போன்ற இடங்களில் அமர்ந்து அதிலும் சுபாவ சுபர்களாலும் அந்த ஜாதப்படி உள்ள சுப கிரங்களாலும் பார்க்கப்படாமல் இருக்கும் பட்சத்திலே கடுமையான நாக தோஷம் என்று பொதுவாகக் கூறப்படுவதுண்டு. உடனடியாக மனிதன் என்ன எண்ணுகிறான்? பாம்புகளையெல்லாம் கொன்றால் தான் இந்த பாவம் வந்து விட்டதாக எண்ணுகிறான். அப்படியானால் பசுவைக் கொன்றால் பாவம் வராதா? பிறகு எதற்கு இவ்வாறு கூறப்பட்டது? இது ஒரு வகையான அடையாளம். உச்சக்கட்ட பாவ தோஷம் என்பதை அடையாளப்படுத்த அங்கு ஒரு அடையாள சின்னமாக வைத்திருக்கிறார்கள் அவ்வளவே. எனவே அதற்காக அந்த நாக தோஷம் போவதற்குண்டான ஸ்தலங்கள் சென்று வழிபாடுகள் செய்தால் மட்டும் நல்ல பலன் வந்துவிடும் என்று எண்ணி விடாமல் இந்த நாக தோஷத்தால் பாதிக்கப்பட்ட பிற மனிதர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் குறிப்பாக ஒவ்வாமை நோய் பலரை பிடித்து வாட்டுகிறது.

இந்த ஒவ்வாமை நோய்க்குண்டான மருத்துவ சிகிச்சையை தக்க மனிதர்களுக்கு செய்து வந்தாலும் நாக தோஷம் குறையும். அதைப் போல நாக தோஷங்களுக்கு உண்டான ஸ்தலங்கள் சென்று உரிய முறையிலே பரிகாரங்கள் செய்து கொள்வதும் இல்லத்திலே அமர்ந்து அது தொடர்பான மந்திரங்களை உருவேற்றி வருவதும் நல்லப் பலனைத் தருவதோடு இன்னமும் கூறப்போனால் நாக தோஷம் இருக்கக்கூடிய ஜாதகரின் தேகத்தை ஆய்ந்து (ஆராய்ந்து) பார்த்தால் (இந்த விஷ பொருள்கள் என்று உடலிலே மருத்துவ இயல் கூறும்) அந்த விஷ பொருள்கள் அதிகமாக கழிவுகளாக தேங்கி நிற்கும். எனவே தேகம் (உடல்) சார்ந்தும் விஷத்தை எடுத்துவிட வேண்டும். இவற்றிற்கு உரிய பரிகாரத்தோடு நல்விதமான பூஜைகளோடு நாங்கள் கூறிய தர்மகாரியங்களை செய்து வருவதும் நல்ல பலனைத் தருவதோடு மிகவும் சிறப்பான ஸ்தலம் அந்த காளஹஸ்தி அருகே வேதபுரம் என்று முன் அழைக்கப்பட்டு இன்று திரிந்து போய் வேடியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்தலம் சென்று வழிபட நன்மை உண்டாம்.

சுலோகம் -113

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-6

மனதையும் புலன்களையும் வெற்றி கொள்ளாதவனுக்கு நிச்சயமான புத்தி இருக்காது. உறுதியான புத்தி இல்லாதவனுக்கு மனதில் பாவனையும் தோன்றாது. அவ்வாறே பாவனை இல்லாதவனுக்கு அமைதியும் கிடைக்காது. அமைதி இல்லாதவனுக்கு சுகம் ஏது?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மனதையும் ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கொள்ளாதவனுக்கு நிலையான புத்தி இருக்காது. எந்த செயலை செய்தாலும் நிலையில்லாத புத்தியானது அதனை முதலில் சரி என்று சொல்லும் சிறிது நேரத்தில் இது சரியில்லை என்று மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டு புத்தியானது தடுமாறிக் கொண்டே இருக்கும். இப்படிப் பட்டவர்களது மனதில் இறைவனைப் பற்றிய சிந்தனையும் தியானமும் வராது. இதனால் இவர்களது மனதில் அமைதி என்றும் இருக்காது. அமைதி இல்லாதவனுக்கு வாழ்க்கையில் இன்பம் என்பது இருக்காது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 215

கேள்வி: சத்சங்கமாக அன்பர்களை அழைத்து வாக்கு அருள வேண்டும்:

இறைவன் அருளாலே மிகப்பெரிய நெருக்கடி எது தெரியுமா? மகான்கள் மகான்கள் நிலையிலேயே மனிதர்களை அணுகுவதுதான். மனித நிலைக்கு இறங்கி சிலவற்றை எம்மால் கூற இயலாது. வெளிப்படையாக நாங்கள் கூறவந்தால் எதற்காக இந்த வாக்கை சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்? என்பதை புரிந்து கொள்ளாமல் அதற்கு குதர்க்கமான பொருளைத்தான் பல மனிதர்களும் கொள்வார்கள். யாரையெல்லாம் மனதில் வைத்து நீ கேட்கிறாயோ அவர்கள் விதி அனுமதித்தால் யாருக்கெல்லாம் இந்த ஜீவ அருள் நாடி மீது நம்பிக்கை வந்து தர்மத்தின் மீது நாட்டம் வந்து சத்தியத்திலும் பிடிப்பு வந்தால் இறைவனருள் அவர்களை வழிநடத்தும். யாமும் (அகத்திய மாமுனிவர்) இந்த ஜீவ அருள் ஓலை (ஜீவநாடி) மூலம் வழி நடத்துவோம். பொதுவாக சிலரை அழைத்து சத்சங்கமாக வாக்கை கூறவேண்டும் என்று யாம் எண்ணிணாலும் எமைப் பொருத்தவரை ஒருவன் தீய வழியில் சென்றாலும் நல்ல வழியில் சென்றாலும் எமது சேய்களே. நல்வழிப்படுத்த வேண்டியது எமது கடமை என்றாலும் இறைவன் அனுமதித்தால் நாளை கூட அதற்கு ஆயத்தமாக இருக்கிறோம். எனவே இறைவனிடம் எல்லோரும் பிராத்தனை வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

மனித மதியானது விதிவழியாக செல்லும் பொழுது இறைவனும் நாங்களும் வெறும் பார்வையாளராகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது. அது எங்ஙனம் சாத்தியம்? அது எங்ஙனம் நியாயம்? என்றெல்லாம் மனிதன் வினவலாம். படைத்த இறைவனுக்கு பொறுப்பில்லையா? ஞானிகளுக்கு பொறுப்பில்லையா? மனிதர்கள்தான் அறியாமையால் தவறு செய்தால் அல்லது உழன்றால் அதிலிருந்து அவர்களை கரை சேர்க்க வேண்டாமா? என்ற ஒரு வினா எழலாம். அப்படி கரை சேர்ப்பதற்குதான் விதியை எதிர்த்து ஒரு மனிதன் பயணம் செய்ய வேண்டும் என்பதற்குதான் இறைவனின் அருளாணைக்கேற்ப யாம் (அகத்திய மாமுனிவர்) இந்த ஜீவ அருள் ஓலையிலே சில நுணுக்கமான வாக்குகளையெல்லாம் கூறுகிறோம். ஆனால் நடைமுறையில் இவையெல்லாம் ஏற்கத்தக்கதாக இல்லை. நடைமுறையில் இவற்றை பின்பற்ற முடியாது என்று மனிதன் தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டு மீண்டும் விதிவழியாகத்தான் செல்கிறான்.

இராணியின் படிக்கிணறு

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பதான் மாவட்டத் தலைமையகமான பதான் நகரத்தில் அமைந்துள்ள ஒரு படிக்கிணறு உள்ளது இது இராணியின் படிக்கட்டு என்று அழைக்கபடுகிறது. இராணி உதயமதி நிறுவியதால் இக்கிணற்றுக்கு இராணியின் கிணறு பெயராயிற்று. நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய இக்கிணற்றை இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய சின்னத்தில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இக்கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் காளி ராமர் கிருஷ்ணர் நரசிம்மர் கல்கி மகிசாசூரன் வென்ற மகிசாசூரமர்தினி வாமனர் வராகி நாககன்னிகள் யோகினி 16 வகையான கலை நயத்துடன் கூடிய அழகிய தேவலோக அப்சரசுகளின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் கௌதம புத்தர் சாதுக்கள் திருபாற்கடலில் ஆதிசேசன் மீது பள்ளி கொண்டுள்ள விஷ்ணுவின் சிற்பங்கள் கொண்டுள்ளன. லட்சுமி தேவியுடன் வராகமூர்த்தி கையில் பாஞ்சஜன்ய சங்குடன் இருக்கும் சிற்பமும் உள்ளது.

1050 இல் சோலாங்கி குல அரசை நிறுவியவரும் மன்னன் மூலராஜனின் மகனுமான முதலாம் பீமதேவனின் (1022–1063) நினைவாக அவரின் மனைவியும் பட்டத்து ராணியுமான உதயமதியும் மகன் முதலாம் கர்ணதேவனும் இணைந்து இக்கிணற்றை நிர்மாணித்தனர். இந்தக் கிணறு 64 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்டது. இது ஏழு அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது. கடைசிப் படிக்கட்டுக்குக் கீழே பல கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதை சித்பூருக்குச் செல்கிறது. போர்க் காலங்களில் அரச குடும்பத்தினர் தப்பிச் செல்வதற்காக இச்சுரங்கப்பாதைக் கட்டப்பட்டிருக்கிறது. 1304 இல் வாழ்ந்த சமண சமயத் துறவி மெருங்க சூரி என்பவர் எழுதிய பிரபந்த சிந்தாமணி என்ற நூலில் ராணி உதயமதி நிறுவிய இந்த படிக் கிணற்றைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. காலப் போக்கில் இந்த அழகிய கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. இதனால் காலப்போக்கில் இந்தக் கிணற்றை பற்றித் தெரியாமலே போய்விட்டது. 1960 ஆம் ஆண்டு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 214

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இந்த மனித சிந்தனைகளும் மனித எண்ணங்களும் காலகாலம் பெரும்பாலும் மனிதன் பட்ட அனுபவத்தைப் பொறுத்தும் உடல் வலிமை அவனின் சமகால பதவியின் நிலைமை கையிலுள்ள செல்வத்தின் அளவு இவற்றை பொறுத்தே மனித ரீதியாக மனிதனுக்கு மனிதன் அந்த எண்ணங்களும் உரு பெறுகிறது. மாற்றம் பெறுகிறது. ஒரு ஞானியின் பார்வையில் கூறுவதென்றால் மனிதன் எண்ணுகிறான் மதியால் (அறிவால்) சிந்தித்து மதியை (அறிவை) கூர்மையாக்கி விசாலமாக்கி ஆழமாக்கி நன்றாக பயன்படுத்தினால் மனிதன் நன்றாக வாழலாம் என்று. இதை நாங்கள் ஒரு பொழுதும் மறுப்பதில்லை. ஆனால் இறைவன் தந்த மதியை அறிவை பரிபூரணமாக பயன்படுத்துவதற்கு உண்டான சூழலை அவனுக்கு விதிதான் தரவேண்டும். இல்லையென்றால் கடுமையான போராட்டத்தோடு வாழவேண்டிய நிலைமையும் அறியாமையில் சிக்கி வாழ வேண்டிய சூழலும் ஏற்படும். அங்கனமாயின் எத்தனையோ குணக்கேடானவர்கள் பண்பாடற்றவர்கள் புத்தி கூர்மையில் சிறந்து விளங்குகிறார்களே?அவர்களுக்கு விதி சாதகமாக இருக்கிறதா? நல்ல குணம் கொண்ட ஒரு மனிதனுக்கு அறியாமை மதியில் அமர்ந்து விட அதனால் அவன் எடுக்கும் முடிவுகளெல்லாம் தவறாக முடிந்து அவன் துயரில் ஆழ்வதற்கு வழிவகுக்கிறதே? இதுதான் விதியின் வேலையா? என்றெல்லாம் மனிதனுக்கு ஐயம் (சந்தேகம்) எழலாம். இதை மனிதர்கள் மறுத்தாலும் ஏற்றுக் கொண்டாலும் உண்மைதான். எல்லாம் விதிதான் என்றால் மதியின் தன்மைதான் என்ன? எதற்காக மனிதனுக்கு மதி (அறிவு) தரப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் முயன்றால் தன்னுடைய மதியின் ஆற்றலைக் கொண்டு கடுமையான சிந்தனையை வளர்த்துக் கொண்டு தன் வாழ்க்கையில் எதிர்படும் துன்பங்களையெல்லாம் விலக்கிக் கொள்ள இயலாதா? என்றால் தாராளமாக. அதை யாரும் செய்ய வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. இதை வேறு வகையில் கூறப் போனால் இப்பொழுது மனிதர்களுக்கு எந்தளவு மதி இருக்கிறதோ அதே அளவு மதிதானே சில ஆண்டுகளுக்கு முன்பும் பல ஆண்டுகளுக்கு முன்பும் இருந்திருக்க வேண்டும்? இப்பொழுது மனிதன் விஞ்ஞான பூர்வமாக உணர்ந்த விஷயங்கள் ஏற்கனவே இந்த நில உலகில் (பூமியில்) உள்ளதுதான்.

இறைவன் அருளால் செப்பு சுருளுக்குள் காந்த சக்தியை பாய்ச்சினால் மின்சாரம் வரும் என்றால் இந்த விதி 1000 ஆண்டுகளுக்கும் முன்பும் பொருந்தும் அதற்கு முன்பும் பொருந்தும். ஆனால் அப்பொழுதுள்ள மனித மூளைக்கு இந்த கருத்து ஏன் எட்டவில்லை? எனவே ஏற்கனவே உள்ள விதிமுறைகள் எல்லாம் இன்னின்ன காலத்தில் இன்னின்ன மனித மூளையின் மூலமாக உலகிற்கு வரவேண்டும் என்று இதன் மூலம் தெரிய வருகிறது. அப்படியானால் நடப்பது நடந்து விட்டுப் போகட்டும். நான் ஏன் சிந்திக்க வேண்டும்? உழைக்க வேண்டும்? என்றெல்லாம் இருக்கலாமா? என்றால் அது குதர்க்க வாதத்தைக் குறிக்கும். அப்படியொருவன் எண்ணினாலும் கூட விதி அவனை இருக்க விடாது என்பது வேறு விஷயம். ஆன்மீகம் என்றால் எப்பொழுதுமே ஒரு மனிதன் அந்த ஆன்மீகத்தை தன் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து அது பொருந்தாத நிலையாக இருக்கும் பட்சத்தில் ஆன்மீகத்தை ஏற்க மறுக்கிறான். அதைப் போல மெய் ஞானத்தையும் அவன் ஓரளவு கற்ற விஞ்ஞானத்தையும் பொருத்திப் பார்த்து அவனுடைய அறிவிற்கு எட்டாத நிலையில் அவனால் எதையும் ஏற்க முடியவில்லை. நாங்கள் கூறுகின்ற கருத்தாக இருந்தாலும் இன்னும் மகான்களின் ஞானக்கருத்தாக இருந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றோ ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்றோ நாங்கள் கூறவில்லை.

ஓரளவு பாவங்கள் அற்ற நிலையில் எம்மை (அகத்திய மாமுனிவர்) நோக்கி வருகின்ற ஆன்மாக்களுக்கு வழிகாட்டி மெய் எது? மெய்யிலும் மெய் எது? என்பதை உணர்த்துவதற்காகத்தான் இறைவனின் கட்டளை எம் போன்ற (அகத்திய மாமுனிவர்) மகான்களை இந்தக் கலியில் (கலியுகத்தில்) இது போன்ற நிலையில் வாக்கினை கூற அருளாணையிடுகிறது. ஆயினும் கூட நாங்கள் என்ன கூற வருகிறோம்? எதற்கு அதனைக் கூறுகிறோம்? ஒரு வாக்கு எதற்காக உரைக்கிறோம்? ஒரு வாக்கை எதற்காக மறுக்கிறோம்? ஏன் மெளனம் காக்கிறோம்? ஏன் பின்னர் உரைக்கிறோம் என்று கூறுகிறோம்? என்பதை சற்றே கடுகளகாவது இறைவனை எண்ணி சிந்தித்துப் பார்த்தால் இறைவனே அவன் சிந்தனைக்குள் சிலவற்றை உணர்த்துவார். ஆனாலும் கூட அறியாமையின் உச்சத்தில் வாழ்கின்ற மனிதன் இதையெல்லாம் நினைத்து பார்ப்பதேயில்லை.

சுலோகம் -112

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-65

உள்ளத் தெளிவு ஏற்பட்டு விட்டால் இவனுடைய எல்லா துக்கங்களுக்கும் அழிவு ஏற்பட்டுவிடும். தெளிவடைந்த மனமுடைய கர்ம யோகியின் புத்தி விரைவிலேயே ஏல்லா விஷசங்களில் இருந்தும் விலகிப் பரமாத்மா ஒன்றிலேயே நன்கு நிலை பெற்று விடுகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஐந்து புலன்களையும் அடக்கி தன் வசப்படுத்தி இறைவன் மீது எண்ணத்தை வைத்து தியானம் செய்கின்ற சாதகன் உள்ளத்தில் தெளிவு ஏற்பட்டு விட்டால் அவனது மனமானது அமைதி அடைந்து இறைவனின் மீது லயித்து கிடக்கும். சதா சர்வ காலமும் இறைவனின் மீது லயித்து இருப்பவனுக்கு உலக ரீதியாகவும் பந்த பாச ரீதியாகவும் ஏற்படும் அனைத்து துக்கங்களும் எரித்து அழிந்து விடுகிறது. அதன் பிறகு அவனுடைய மனமானது உலக விஷசயங்களில் இருந்து விலகி இறைவனிடம் மட்டுமே நிலையாக நின்று விடுகிறது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

விநாயகி

யானையின் தலையைக் கொண்ட பெண் தெய்வம் ஆவார். இவரைப் பற்றிய வரலாறு புராணங்ககளில் தெளிவாக சொல்லப்படவில்லை. விநாயகி தெய்வத்தின் உருவங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இவரது யானை உருவ அம்சங்கள் காரணமாக இத்தெய்வம் யானைத் தலையை உடைய ஞான கடவுளான விநாயகருடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இவருக்கு நிலையான பெயர் இல்லாததால் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார். ஸ்திரீ கணேசா விநாயகி விக்னேசுவரி மற்றும் கணேசனி போன்றவை இவரது பெயர்களாக உள்ளது. இந்தப் பெயர்கள் அனைத்தும் விநாயகர் கஜானனா விக்னேசுவரா மற்றும் விநாயகர் ஆகியோரின் பெண்ணிய வடிவங்கள் ஆகும். விநாயகி சில சமயங்களில் அறுபத்து நான்கு யோகினிகள் அல்லது சப்தகன்னியர் தெய்வங்களின் ஒரு பகுதியாகவும் காணப்படுகிறார்.

வட நாட்டில் தனிக்கோயில்கள் உள்ளன. தமிழகத்திலும் சில கோயில்களில் கோயில் மண்டபத்தூண்களில் பெண் உருவில் காட்சி தரும் விநாயகியைக் காணலாம். நாகர்கோயில் அருகில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள தூண் ஒன்றில் விநாயகியின் திருஉருவத்தைத் தரிசிக்கலாம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னிதிக்குச் செல்லும் வழியில் வலப்புறமுள்ள தண்டபாணி சன்னிதியின் முன்புறமுள்ள ஒரு மண்டபத் தூணில் விநாயகத் தாரணி எனப்படும் விநாயகியைக் காணலாம். தாரணி என்றால் அழகு பொருந்திய மேன்மையான பெண் என்று பொருள். இவரது பாதம் புலியின் கால்களைப் போல் உள்ளது. எனவே இவருக்கு வியாக்ர பாத விநாயகி என்று பெயர். கையில் வீணையுடன் காட்சி தரும் விநாயகியின் திருவுருவை கோவை மாவட்டம் பவானி பகுதியில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ சௌந்தரநாயகி தாயார் சந்நிதியின் மேல்மண்டபத்தில் காணலாம். இடுப்பிற்குக் கீழே யாளி வடிவமுடனும் கைகளில் வாள் மழு கதை கேடயம் ஆகியவற்றுடன் காட்சி தரும் விநாயகி திருவுருவத்தை நெல்லை மாவட்டம் வாசுதேவ நல்லூரில் உள்ள கோயிலில் தரிசிக்கலாம். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோவிலில் ஒரு தூணில் விநாயகியின் சிற்பம் அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து இடக்காலை தொங்கவிட்ட நிலையில் காணப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சிவாலயம் மற்றும் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அம்மன் கோவில் மற்றும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலும் விநாயகி திருஉருவத்தைத் தரிசிக்கலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்துக்கு முந்தைய விநாயகியின் கல் சிற்பம் ஒன்று இந்திய தொல்லியல் துறை குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகியின் சிலை கிரானைட் கல்லால் செய்யப்பட்ட 3 அடி உயரம் கொண்ட சிற்பமாகும்.

சமண மற்றும் பௌத்த மரபுகளில் விநாயகி ஒரு சுதந்திர தெய்வமாக போற்றப்படுகிறார். பௌத்த படைப்புகளில் இவர் கணபதி ஹிருதயா (விநாயகரின் இதயம்) என்று அழைக்கப்படுகிறார். முதன் முதலில் அறியப்பட்ட யானைத் தலையுடன் கூடிய விநாயகியின் தெய்வ உருவம் ராஜஸ்தானின் ரைரில் காணப்படுகிறது. இந்த உருவம் முதல் நூற்றாண்டை சார்ந்ததாக உள்ளது. இத்தெய்வத்தின் யானை முகத்தில் இருக்கும் தும்பிக்கை வலதுபுறம் திரும்பியுள்ளது. மேலும் இரண்டு கைகளைக் கொண்டுள்ளது. இதன் கைகளில் உள்ள சின்னங்களும் பிற அம்சங்களும் அழிந்துள்ளதால் தெய்வத்தை தெளிவாக அடையாளம் காண முடியவில்லை. இந்த தெய்வத்தின் மற்ற சிற்பங்கள் பத்தாம் நூற்றாண்டு முதல் காணப்படுகின்றன. விநாயகியின் மிகவும் பிரபலமான சிற்பங்களில் ஒன்று மத்தியப் பிரதேசத்தின் பெடகாட் நகரத்திலுள்ள சௌசத் யோகினி கோயிலில் நாற்பத்தியொன்றாவது யோகினியாக காணப்படுகிறது. இந்த தெய்வம் இங்கே ஸ்ரீஐங்கினி என்று அழைக்கப்படுகிறது. இங்கே விநாயகியின் வளைந்த இடது காலை யானை தலை கொண்ட விநாயகர் ஆதரிப்பது போல காணப்படுகிறது.

விநாயகியின் ஒரு அரிய உலோக சிற்பம் ஷிராலியின் சித்ராபூர் மடத்தில் காணப்படுகிறது. இங்கு இவர் விநாயகரைப் போல் இல்லாமல் மெல்லிய தோற்றத்தில் காணப்படுகிறார். இவரது மார்பின் குறுக்கே பூணூல் எனப்படும் புனித நூல் காணப்படுகிறது. மேலும் கழுத்தில் இரண்டு ஆபரணங்களை அணிந்துள்ளார். இவருடைய இரண்டு முன் கைகள் அபயம் மற்றும் வரம் கொடுக்கும் முத்திரைகளில் உள்ளது. இவருடைய இரண்டு பின்புற கைகளில் ஒரு வாள் மற்றும் ஒரு கயிறு காணப்படுகிறது. இவருடைய தும்பிக்கை இடது பக்கம் திரும்பியுள்ளது.

சுலோகம் -111

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-64

தன்வசப்பட்ட மனதுடைய சாதகன் விருப்பு வெறுப்பின்றி தன்னால் வசப்பட்ட புலன்கள் மூலம் அனைத்தையும் பார்த்துக் கொண்டு அவற்றின் மூலம் பாதிக்கப்படாமல் உள்ளத் தெளிவை அடைவான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஐந்து புலன்களையும் அடக்கி தன் வசப்படுத்தி இறைவன் மீது எண்ணத்தை வைத்து தியானம் செய்கின்ற சாதகன் உலகத்தில் அவனைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் தன் புலன்களால் பார்க்கும் போது துன்பம் வந்தால் அதனை வெறுக்காமலும் இன்பம் வந்தால் அதனால் மகிழ்ச்சி அடையாமலும் அனைத்தையும் ஒரே மாதிரி எண்ணத்தில் பார்க்கும் போது அவன் உள்ளத் தெளிவை அடைகிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 213

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

யாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல் இறைவன் அருளால் கூறுகிறோம். தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமே சிந்தனை. தொடர்ந்த சிந்தனை என்பது மனமாகும். விழிகளை மூடிக் கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் மனதை உற்று நோக்கினால் அதில் எத்தனையோ ஆசா பாசங்கள் இருக்கலாம். அவற்றிலே ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். அதை விட்டுவிட்டு மேலும் பார்த்தால் என்ன தெரியும்? லோகாயம் மட்டுமே அதில் நிரப்பப்பட்டு இருக்கும். ஒன்று இல்லக் கடமை அல்லது தசக்கடமை (தொழில்) அல்லது அப்பொழுது அவன் சந்திக்கின்ற கடுமையான பிரச்சினை குறித்த சிந்தனை அல்லது எதிர்காலத்தில் வேறு ஏதாவது புதிதாக ஒரு பிரச்சனை இதனை சார்ந்து வந்துவிடுமோ? என்ற அச்சம். இது எதுவுமே இல்லாத மனிதனாக இருந்தால் பொழுதை ஆக்குவதற்கு பதிலாக போக்குகிறேன் என்று அந்தப் பொழுதை வீண் செய்வதும் அதற்காக தனத்தை வியம் (விரயம்) செய்வதுமாக ஒரு அசுரத் தனமான செயல்களில் ஈடுபடுவது. இப்படி மனதிற்கு அந்த மாபெரும் சக்திக்கு சரியான பணியை தராமல் அதன் ஆற்றலை முறைப்படுத்தி பயிர்களுக்கு அந்த மனோசக்தி எனப்படும் நீரை பாய்ச்சாமல் தேவையற்ற வெள்ளமாக வடிய விடுவதுதான் மனிதனுக்கு என்றென்றும் இயல்பாக இருந்து வருகிறது. எல்லோருக்குமே இது பெரும்பாலும் பொருந்துகிறது.

உடல் வேறு உடலில் குடிகொண்டு இருக்கும் ஆத்மா வேறு. ஆத்மா எத்தனையோ உடலுக்குள் இருந்து கொண்டு புகுந்து கொண்டு பிறவி என்ற பெயரில் வாழ்ந்து மடிந்து வாழ்ந்து மடிந்து சேர்த்த வினைகளின் தொகுப்புதான் அந்த வினைகளின் அடிப்படையில்தான் அடுத்த உடம்பு கிடைத்திருக்கிறது. அந்த உடம்போடு அந்த ஆன்மா மயக்கமுற்ற நிலையிலே தன்னை அறியாமல் வாழ்கிறது. அப்படி வாழ்கின்ற அந்த பிறவியிலும் அது பல்வேறு வினைகளை செய்கிறது. அதில் பாவமும் புண்ணியமும் அடங்குகிறது. இதிலே பாவங்களைக் குறைத்து எல்லா வகையிலும் புண்ணியங்களை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மகான்களின் உபதேசமாக இருக்கிறது. இந்த புண்ணியத்தை கனவிலும் நனவிலும் ஒவ்வொரு அணுவிலும் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே கடமைகளை பற்றற்ற நிலையில் ஆற்றிக் கொண்டே உள்ளத்தில் சதா சர்வகாலம் இறை சிந்தனை மட்டும் வைத்துக் கொண்டு எதனையும் இறைவன் பார்த்தால் எப்படி பார்ப்பாரோ அந்த பார்வையில் பார்க்கப் பழகினால் மனம் நிம்மதியான நிலையிலிருக்கும். நிம்மதியான மன நிலையில்தான் மனிதனுக்கு பெரிய ஞானம் சார்ந்த விஷயங்கள் மெல்ல மெல்ல புரியத் துவங்கும். பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கை என்பது எக்காலத்திலும் எந்த மனிதனுக்கும் கிடையாதப்பா. பிர்ச்சனைகளை எப்படி எதிர் கொள்கிறான்? என்பதில்தான் வாழ்க்கை நிலை அடங்கியிருக்கிறது. அசைக்க முடியாத இறை பக்தி கொண்ட மனிதனுக்கும் வேறுபாடே அதிகளவு துன்பத்தை பார்க்கும் பொழுது அதனை எப்படி எதிர் கொள்கிறான்? என்பதை பொறுத்துதான். ஒரு வேளை இறைபக்தி இல்லாவிட்டாலும் தன்னுடைய அனுபவ அறிவைக் கொண்டும் தான் கற்ற கல்வியைக் கொண்டும் துன்பங்களை எதிர் கொண்டு வாழ்கின்ற மனிதன் எத்தனையோ மடங்கு மேலப்பா. இறை பக்தி இருந்தும் சோர்ந்து போகின்ற மனிதனை விட. எனவே மன சோர்வு மிகப்பெரிய பிணி. அதற்கு இங்கு வருகின்ற யாரும் இடம் தராமல் இருப்பதே சிறப்பு.