ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 189

கேள்வி: பைரவர் (பைரவரின் வாகனம்) ஊளையிடுவதன் காரணம் என்ன?

அகத்திய மாமுனிவர் வாக்க :

பல்வேறு காரணங்கள் இருக்கிறதப்பா. இது போன்ற நிலையிலே மனித கண்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையை மட்டும் பார்க்கக்கூடிய வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வண்ணத்தின் மேலான அதிர்வெண்களும் கீழான அதிர்வெண்களும் மனிதக் கண்களுக்குத் தோன்றுவதில்லை. ஆனால் அந்த தோன்றாத அலை வரிசையிலே பல்வேறு ஆத்மாக்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கும். அது போன்ற ஆத்மாக்கள் அந்த ஆத்மாக்களின் தன்மை இவற்றைப் பொருத்தே நீ கூறிய அந்த பைரவரின் வாகைக் குரல் ஒலிக்கிறது.

கேள்வி: ஆத்திசூடியில் வரும் அரவம் ஆடேல் அனந்தல் ஆடேல் என்பதன் பொருள் என்ன?

பாம்போடு பழக வேண்டாம் என்பது தான் நேரிடையான பொருள் என்றாலும் கூட இது போன்ற இந்த பாம்பானது சுருண்டு கிடக்கும் பட்சத்திலே அந்த குண்டலினி ஆற்றல் எனப்படும் அந்த சக்தி மனிதனுக்கு தெரியாமல் போய் விடுகிறது. இந்த ஆற்றலை பாம்பாக உருவகப்படுத்துவது மகான்களின் ஒரு நிலையாகும். இது போன்ற நிலையிலே அப்படி சுருண்டு கிடக்கும் அந்த பாம்பை ஆடாமல் அசையாமல் நேராக நிமிர்த்தி மேலே ஏற்ற வேண்டும் என்பதே இதன் உட்பொருளாகும்.

கேள்வி: அதே ஆத்திசூடியில் வரும் புகழ்ந்தாரைப் போற்றி வாழ் என்பதன் பொருள் என்ன?

இதுபோன்ற நிலையிலே ஒருவனை மதித்து இன்னொருவன் வாழும் பட்சத்திலே தன்னை மதிக்கின்ற நியாயமாக தனக்கு உதவிகளை செய்கின்ற தன் உணர்வை மிதிக்காமல் மதிக்கின்ற மற்றவர்களை இவனும் மதித்து வாழ வேண்டும் என்பதே இதன் உட்பொருளாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 188

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 188

கேள்வி: கணினியில் ஜாதகம் கணிக்கும் பொழுது ஸ்ரீ சூரிய சித்தாந்த அயனாம்ச முறையையும் எடுத்துக் கொள்ளலாமா?

இப்பொழுது உள்ள அனைத்து முறையிலும் ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் பாவ வினைகளால் இடை செருகல்களும் தவறுகளும் ஏற்பட்டுதான் இருக்கிறது. ஆயினும் பாதகமில்லை. வாக்கிய முறையை பின்பற்றுவது பொதுவாக நன்மையைத் தரும். அதற்கு மாறான முறையை பின்பற்றக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. எப்படிப் பார்த்தாலும் அடிப்படை விதியை மனிதனால் கணிப்பது என்பது கடினம். ஏனென்றால் ஒரு மனிதனுக்கு கிரகங்கள் வக்ரமாவது தெரிகிறது. ஆனால் லக்னமே வக்ரமாவது என்பதெல்லாம் இறை சூட்சுமம் அறிந்த மகான்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இருந்தாலும் நீ கூறிய முறையைக் கூட தாராளமாக பின்பற்றலாம். ஆனாலும் கூட எம்மைக் கேட்டால் இங்கே தமிழ் மண்ணிலே புழங்குகின்ற வாக்ய முறைகளை தொடர்ந்து பின்பற்றுவது அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும்.

கேள்வி: ஆஞ்சிநேயர் தன் இதயத்தைப் பிளந்து காட்டிய பொழுது அதில் ராமரும் சீதையும் காட்சியளித்ததாக இதிகாசம் கூறுகிறது. இது எந்த நோக்கில் கூறப்பட்து? அனுமன் போல் அனைவரும் சிறந்த பக்தர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூறப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் தத்துவார்த்த விளக்கங்கள் உண்டா?

இறைவன் அருளாலே ஒரு காதலன் தன் காதலியைப் பார்த்து என்ன கூறுவான்? என் இதயத்தில் நீ இருக்கிறாய் என்று கூறுவான். அப்படிதான் காதலியும் கூறுவாள். எனவே என் சிந்தனை என்னுடைய எண்ணங்கள் என்னுடைய நோக்கம் நான் செய்கின்ற செயல்கள் அனைத்தும் நீயாக இருக்கிறாய் யாதுமாகி நிற்கிறாய் என்பது போல உண்ணும் உணவு பருகும் நீர் சுவாசிக்கும் காற்று இன்னும் நான் செய்கின்ற அனைத்து செயல்ளும் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் என்பதை உணர்த்தும் வண்ணம் அந்த ராமபிரான் மீது மால் தூதனாகிய ஆஞ்சிநேயர் கொண்ட பக்தியை விளக்குவதற்காக இப்படி பரிபூரண சரணாகதியிலே ஒவ்வொரு மனிதனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சித்திரம் போடப்பட்டது.

துரோணர் செய்த தவறு

குருஷேத்திரம் யுத்தம் முடிந்துவிட்டது. அஸ்தினாபுரத்து அரசனாக தருமன் முடிசூட்டிக் கொண்டு விட்டான். பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால் பெற்ற சாபத்தினால் மன நிம்மதியின்றி துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அலைந்து கொண்டிருந்தான். அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப்படைத்தது. என் தந்தை சத்தியவான் செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே துரியோதனனுக்கு ஆதரவாக போர் புரிந்தார். ஆனால் அவரை பாண்டவர்கள் நான் இறந்ததாக பொய் சொல்லி அநியாயமாக கொன்று விட்டனர். என் தந்தை செய்த தவறு என்ன என மனதுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான். ஒரு நாள் கிருஷ்ணரை சந்தித்தான். கிருஷ்ணன் மீது அவனுக்கு கோபம் இருந்தாலும் தன் கேள்விக்கு கிருஷ்ணரை தவிர வேறு யாராலும் பதில் சொல்ல முடியாது என்ற காரணத்தால் அவரிடமே தன் மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டான். என் தந்தையை பாண்டவர்கள் அநியாயமாக கொன்றதற்கு நீயும் காரணமாக இருந்தாய் அவர் செய்த தவறு என்ன? என கேட்டான்.

கிருஷ்ணன் சிரித்தபடியே செய்த பாவத்துக்கு யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்றார். என் தந்தை என்ன பாவம் செய்தார் கேட்டான் அஸ்வத்தாமன். அதற்கு கிருஷ்ணன் உன் தந்தை அனைத்து சாஸ்திரங்களையும் கற்றவர். ஆனால் ஏழையாக இருந்தார். அவரை கௌவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் குருவாக பீஷ்மர் நியமித்தார். அதன் பின் தான் அவரது வாழ்க்கையில் வளம் ஏற்பட்டது. கௌவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சகல வில்வித்தை உட்பட அனைத்தையும் கற்றுக் கொடுத்தார் உன் தந்தை. ஒருநாள் அவரை ஏகலைவன் என்ற வேடுவர் இனத்தை சேர்ந்த சிறுவன் சந்தித்தான். தனக்கும் வில்வித்தை கற்றுக் கொடுங்கள் என உன் தந்தையிடம் கேட்டான். அரச குமாரர்களுக்கு சொல்லி தருவதால் ஏகலைவனுக்கு கற்று தர துரோணர் மறுத்து விட்டார். ஆனால் ஏகலைவன் உன் தந்தையை போல் மண்ணில் சிலை செய்து குருவாக வழிபட்டு வில்வித்தையை தானாக கற்றுக் கொண்டான். சில ஆண்டுகளுக்கு பின் ஒரு சந்தர்ப்பத்தில் ஏகலைவனின் வில் வித்தை திறமை அர்ஜூனனுக்கு தெரிந்தது. அர்ஜூணன் துரோணரிடம் இதனை தெரிவித்தான்.

அரண்மனை பணி போய்விடும் என்ற சுயநலத்தின் காரணமாக உன் தந்தை சுயநலமாக நடந்து கொண்டார். ஏகலைவனை வரவலைத்த உனது தந்தை வில்வித்தைக்கு மிகவும் தேவையான கட்டை விரலை குரு காணிக்கையாக ஏகலைவனிடம் உன் தந்தை கேட்டு பெற்றுக் கொண்டார். அவனும் மகிழ்ச்சியாக கொடுத்து குரு பக்திக்கு நீங்காத புகழை பெற்றார். ஒரு வேடனின் திறமையை பாழடித்தார். ஏகலைவனுக்கு பெருமை கிடைத்தாலும் அவனது எதிர்காலம் வீணானதுக்கு உன் தந்தை தான் காரணம். மேலும் போர் களத்தில் யுத்த தர்மத்திற்கு எதிராக அபிமன்யுவை அநியாயமாக கொலை செய்தார்கள். அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் உனது தத்தை. இந்த பாவம் தான் உன் தந்தையை போர்களத்தில் மகன் இறந்ததாக எண்ணி ஏற்பட்ட சோகத்தில் மரணமடைய வைத்தது என்று கூறி நிறுத்தினான் கிருஷ்ணன்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 187

இறை உண்டு பற்றிய அகத்திய மாமுனிவர் வாக்கு:

ஆகுமப்பா. இறை உண்டு. யாங்கள் (சித்தர்கள்) உண்டு. தெய்வ சக்தி உயர் சக்தி உண்டு. மாந்தனுண்டு. சித்தனுண்டு. எல்லா உயிர்களும் உண்டு. ஆயினும் கூட அவரவர் பக்குவம் மனநிலை அறிவுநிலை புண்ணியம் எண்ணங்கள் நடைமுறை வாழ்வு இவைகளைப் பொறுத்துத்தான் இந்த இதழில் (ஜீவநாடி) பலசமயம் யாங்கள் வாக்குகள் பகிர்வதும் மெளனம் காப்பதும். சித்தர்கள் பேதங்கள் பார்க்கலாமா? எல்லா உயிர்களும் ஒன்றுதானே என்ற எண்ணங்கள் மனிதனுக்குத் தோன்றும். எமக்கு எவர்மீதும் உயர்வு தாழ்வு பேதமில்லை. ஆயினும் கூட மனதிலே சில திட்டங்களை வகுத்துக் கொண்டு சில காட்சிகளை கற்பனை செய்து கொண்டு அது தொடர்பாகவும் அதுபோலத்தான் வாழ்வு என்றும் வாழ்வின் நோக்கம் என்றும் எம்முன்னே வந்து அமர்ந்தால் எமக்கு அவனவன் கர்மாதான் கண்ணுக்குத் தெரியும். சேர்த்த பாவத்தைக் குறைப்பதற்கும் இனி பாவம் செய்யாமல் வாழ்வதற்கும் மட்டும்தான் மனித தேகம் மனித பிறவி. அந்த ஆற்றலை இறை மனிதனுக்குத் தந்ததின் காரணம் பிறர் துன்பங்களைக் கண்டு வருந்த இரங்க வேண்டும் என்பதற்காகத்தான். அதுபோல இந்த எண்ணம் யாருக்கு இருந்தாலும் அவர்கள் உயர்ந்த ஆன்மாக்களே.

இதில் விலங்கு விருக்ஷம் (மரம்) மனிதன் என்ற பேதமில்லை. பல்வேறு காரணங்களுக்காக நாங்கள் (சித்தர்கள்) வாக்குகளை மறுப்பதும் நிறுத்துவதும் கூறாமல் இருப்பதும் உண்டு. முதல் காரணமாக இந்த இதழை (ஓலைச்சுவடி) வாசிக்கின்ற இவன் அனுதினமும் அதிகாலையிலும் ஏனைய அயர்வு பொழுதிலும் மனம் ஒன்றி அதிகமதிகம் பிராத்தனை செய்ய வேண்டும். அடுத்து எமை (அகத்திய மாமுனிவர்) நாடி வருபவர்கள் ஏதோ கோள் ஆய்வு செய்வதும் ஜோதிட நிமித்தம் கேட்பதும் அருள் வாக்கு கேட்பதுமாக இல்லாமல் மெய்யாகவே தர்மவானாக எல்லா நிலையிலும் நல்லவனாக இருக்க வேண்டும். வேறு வகையில் கூறப்போனால் எம்மை நாடாவிட்டாலும் பாதகமில்லை மனசாட்சிப்படி வாழ்ந்து வந்தால் அவன் எம்மைத் தேட வேண்டாம் யாமே அதுபோல் இருக்கும் மனிதனைத் தேடிச் செல்வோம்.

கோடி கோடியாக அள்ளிக் கொடுத்த தர்மனை விட பலநாள் பட்டினியாகக் கிடந்த அந்த அந்தணன் தன் பசி தன் குடும்பப் பசி அனைத்தையும் மறந்து வந்திருந்த முனிவருக்குத் தந்த அன்னமே உயர் அன்னமாகி அதுவே உயர் தர்மமாகிவிட்டது. தர்மம் என்பது அளவைப் பொறுத்ததல்ல. சத்யம் என்பது சூழ்நிலையைப் பொறுத்ததல்ல. விளைவு இருக்கும் சூழல் இவற்றைப் பொறுத்ததே. இருப்பதில் கொடுப்பது சிறப்பு என்றால் இருப்பதையே கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு.

உயர்ந்த கருத்துக்களை கேட்பதும் மனதில் பதிய வைப்பதும் சத்சங்கம் நடத்துவதும் மட்டுமல்லாமல் அதை பின்பற்றவும் முயல வேண்டும். இதெல்லாம் யாரால் இயலும்? கலிகாலத்தில் இதெல்லாம் சாத்தியமா? உயர்ந்த பழக்க வழக்கங்கள் கேட்பதற்கும் ஓதுவதற்கும் விவாதம் செய்வதற்கும் நன்றாக இருக்கிறது. ஆனால் பின்பற்றக் கடினமாக உள்ளது என்று ஒருவன் கூறினால் நல்லவனாக உயர்வானவனாக வாழ்வது எளிது என்றால் அனைவரும் அவ்வாறு வாழ்ந்துவிட்டு போவார்களே? அது கடினம் என்பதால்தான் அதற்குரிய மரியாதையும் இருக்கிறது. ஏன்? செல்வம் திரட்டுவதைவிட கடினம் இந்தக் காலத்தில் ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வது. ஆக இதனால் நான் இந்த தவறை செய்தேன். இந்த சூழ்நிலையால் நான் அடிபணிந்து போக வேண்டியிருந்தது என்று எந்தக் காரணமும் கூறாமல் ஒரு மனிதன் சத்தியவானாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒருவன் செல்லத் துவங்கிவிட்டால் இறை அவனை நோக்கி வரும் என்பது உறுதி.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 186

கேள்வி: மோட்சம் பற்றிய விளக்கம்:

இறைவனின் அருளைக் கொண்டு இதை வேறு விதமாக விளக்குகிறோம். இந்த ஒரு நகரத்தில் இருந்து நீண்ட தொலைவு உள்ள நகரத்தை நோக்கி ஒரு பொது வாகனத்தில் இவன் ஏறி அமர்வதாகக் கொள்வோம். இவனைப் போல பலரும் அந்த தொலைதூர நகரத்திற்குச் செல்வதற்காக அந்த வாகனத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். இப்பொழுது உரிய அனுமதிச் சான்று பெற்று அந்த வாகனத்தில் இவனுக்கென்று ஒரு இருக்கை தரப்பட்டு அமர்ந்து இருக்கிறான். பலரும் அமர்ந்து இருக்கிறார்கள். ஆனால் அந்த வாகனம் அந்த நீண்டதூர நகரத்தை நோக்கி செல்வதற்கு முன்னால் இடையிடையே பல சிறிய பெரிய ஊர்களையும் நகரங்களையும் தாண்டி செல்லும். சில மனிதர்கள் இறுதியாக அந்த வாகனம் எங்கு செல்கிறதோ அதுவரை பயணம் செய்வதற்கு பயணச் சான்று வாங்கி இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் இறங்கிய வேண்டிய நகரம் அவர்களுக்கு வேண்டிய ஊர் அது. இன்னும் சிலர் பகுதியில் இடையில் உள்ள ஊரில் இறங்கிக் கொள்வார்கள். இது அந்தந்த மனிதனின் விருப்பத்தைச் சார்ந்தது. இந்த அந்த வாகனத்தில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கிறான். ஒரு நிலையிலே இடையிடையே இறங்குபவர்கள் எல்லாம் குறைந்து விட்டு இறங்குகின்ற பயணிகள் அனைவருமே இப்பொழுது அந்த இறுதியாக செல்ல வேண்டிய ஊரை அல்லது நகரத்தை நோக்கித்தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இப்பொழுது அவர்கள் சொந்த ஊரிலும் இல்லை. போக வேண்டிய ஊரை நோக்கியும் அவர்கள் இருந்திருக்கவில்லை. ஆனால் இடைப்பட்ட பயணத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையிலே அவர்களை எப்படி அழைப்பது? பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று அழைக்கலாம். இப்பொழுது அந்த வாகனம் எந்த விதமான பழுதும் இன்றி எந்த விதமான இடையிலே பிரச்சனையும் இன்றி தொடர்ந்து சென்று கொண்டே இருந்தால் உரிய காலத்தில் அந்த நகரம் சென்று விடலாம். ஆனால் இடையிலே அந்த வாகனம் ஒரு பழுதாகி விடுகிறது. அந்த பழுதுக்காக சில காலம் தாமதமாகிறது. பிறகு பழுதை சரி செய்து செல்லும் பொழுது உணவு இடைவேளைக்காக ஓய்வு எடுக்கப்படுகிறது. அப்பொழுது கால தாமதமாகிறது. பிறகு இடையிலே ஓர் ஊர்வலம் வருகிறது தாமதமாகிறது. இப்படியெல்லாம் சென்று இறுதியாக அந்த நகரத்தை அடைகிறது. அதை போல் ஆத்மா என்பது இந்த நகரத்தை அடைவது போல இருக்கின்ற பரம்பொருளில் இருந்து துவங்கி அதன் செய்த முன்வினையின் காரணமாக பல்வேறு பிறவிகளை எடுத்து இறுதியாக மீண்டும் இறைவனோடு இரண்டறக் கலக்கிறது. இந்த கலக்கின்ற நிகழ்ச்சிக்கு முன்னால் தான் மாயையில் சிக்கி அறியாமையில் சிக்கி பல்வேறு தவறுகளை அது செய்யக்கூடிய நிலைக்கு ஆட்படுகின்றது. எப்பொழுது பாவமற்ற நிலைமை ஒரு ஆத்மாவுக்கு ஏற்படுகிறதோ அப்பொழுது அது முக்தி அல்லது இறுதி நிலை அல்லது இறையோடு இருக்கக்கூடிய இறையோடு இரண்டறக் கலக்கக் கூடிய இறை வாழ்கின்ற அருகில் இருக்கக் கூடிய சாயுச்சம் சாமீபம் சாலோகம் சாரூபம் என்ற நான்கு விதமான நிலையில் ஒரு நிலையை அந்த ஆத்மா அடைகிறது. இதற்கு இடைப்பட்ட பயணம் போன்றது தான் பிறப்பு. ஒரு வேளை மனிதனாகப் பிறக்கலாம் அது தேவப் பிறப்பாக இருக்கலாம் அல்லது மிருகப் பிறப்பாக இருக்கலாம். அது அதனதன் வினைப்பயனைப் பொறுத்தது. எனவே இந்த உலகிலே காணுகின்ற காட்சிகள் இந்த உலகிலே உணர்கின்ற உணர்வுகள் அனைத்துமே தற்காலிகமானவை நிரந்தரம் அல்ல.

நிரந்தரம் என்பது அந்த பரம்பொருளை உண்மையாக உணர்ந்து பரம்பொருளோடு இரண்டறக் கலப்பதுதான். அந்த முயற்சியில் ஒரு மனிதன் ஒரு பிறவியில் இறங்கினால் ஒரே பிறவியில் அவன் அதை சாதித்து விட முடியாது. எத்தனையோ பிறவிகள் அவன் தாண்டித் தான் போக வேண்டும். இடையிலே சராசரி எண்ணங்கள் அவனை கீழ் நோக்கி இழுக்கும். அதை எல்லாம் போராடி வைராக்கிய மனம் கொண்டு வெற்றி பெற்று தான் மேலேற வேண்டும். இதற்கு எத்தனை பிறவிகள் ஆகும் என்பதை இறைவன் மட்டுமே தான் அறிவான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 185

அமைதி பற்றி அகத்திய மாமுனிவர் பொது வாக்கு:

ஒரு மனிதன் பூஜைகள் செய்வதும் ஸ்தல யாத்திரை செல்வதும் ஏழைகளுக்கு உதவி செய்வதும் அதோடு இறை நாமத்தை பிராத்தனை செய்வதும் தியானம் செய்வதும் சுவாசப் பயிற்சி செய்வதும் யோகாசனம் செய்வதும் முக்கியம் முக்கியம் அவசியம். அதைவிட அவசியம் மனோரீதியாகப் பக்குவப்பட்டு இன்னும் இன்னும் அமைதியோடு பிறரோடு தொடர்பு கொள்ளும் பொழுது அந்த மனம் புண்படாமல் வார்த்தைகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். அதுவே ஆன்மீகத்தின் முதல் பாடமாகும். இவையில்லாமல் வேறு எத்தனை திறமைகளை ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டாலும் இறையின் பரிபூரண அருளாசி கிட்டாது. அது மட்டுமல்லாமல் பல அப்பியாசங்களை (பயிற்சிகளை) செய்து இப்படி நல்ல பண்புகளை வளர்க்கத் தவறினால் செய்கின்ற பூஜா பலன்கள் அனைத்தும் சாளரமுள்ள பாத்திர நீர் போல் நிற்காமல் சென்று விடும்.

யாருக்கு சென்று விடும்?

எந்த மனிதனிடம் தேவை இல்லாமல் விவாதம் அபவாதம் செய்து மன வேதனையை இவன் ஏற்படுத்துகிறானோ அந்த மனிதனுக்கு இலவச சேவையாக இவன் செய்த பூஜா பலன்களையும் புண்ணிய பலன்களையும் தாரை வார்க்கிறான் என்பதுதான் ஆன்மீகத்தின் மிகப் பெரிய பேருண்மையாகும். ஆகவே அதொப்ப உண்மையை மனதிலே கொண்டு சினத்தை தவிர்த்து மெளனத்தைக் கடைபிடித்தால் எப்படி ஒரு கஞ்சன் தன்னுடைய தனத்தை பேழைக்குள்ளே (பெட்டிக்குள்ளே) வைத்து வைத்து பூட்டுகிறானோ அப்படி இவன் செய்த பூஜா பலனும் புண்ணிய பலனும் மெளனத்தில் விரயம் ஆகாமல் இருக்கும்.

இந்த இடத்தில் மனிதனுக்கு ஒரு வினா தோன்றும். அது எப்படி? அழியக்கூடிய சராசரியான பொருளைக் கொடுத்தாலே மிகப் பெரிய புண்ணியம் என்று சித்தர்கள் கூறும் பொழுது நாங்கள் செய்கின்ற பூஜா பலனும் புண்ணிய பலனும் இன்னொரு மனிதனுக்கு போகிறது என்றால் அதனாலும் எமக்குப் புண்ணியம் ஏற்பட வேண்டுமே? அப்படிப் பார்த்தாலும் தர்மத்தில் அது உயர்ந்த தர்மம் தானே? என்று ஒரு வினா மனிதனுக்குள் தோன்றும். உண்மைதான். எப்பொழுது ஒரு விஷயம் புண்ணியமாக மாறும்? மனம் உவந்து மனமார மன ஆறுதல் பெற செய்யும் காரியத்தில் தான் அதொப்ப புண்ணியம் வரும். ஒரு மனிதனுடைய பொருளை வேறொருவன் பறித்துக் கொண்டு செல்வது அல்லது அதை வேறு வழியில் இழப்பது என்று வரும் பொழுது அது புண்ணியமாக மாறாது. அது பாவத்தின் காரணமாக ஒரு நஷ்ட ஈடு போல் ஆகும். எனவே மனிதன் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும். சிந்தனையிலே மேம்பாடு ஆழம் அகலம் பண்பாட்டின் உச்சம் வார்த்தைகளை இன்னும் குறைக்கக் கற்றுக் கொள்ளுதல் மெளனத்தைப் பழகுதல் தேவையற்ற விவாதத்தை தவிர்த்தல் தான் எண்ணுவதுதான் நியாயம் என்று அடித்துக் கூறாமல் இருத்தல் (அது உண்மையாக இருந்தாலும் கூட பிறர் கூறுவது மூடத்தனமாக இருந்தாலும் கூட) – இந்த குணங்கள்தான் ஒருவன் ஆன்மீகத்தில் கடைஏறுவதற்கு ஏற்ற வழியாகும். அடுத்தவருக்கு புரிய வைக்கும் வார்த்தையிலே இதம் (இனிமை) வேண்டும். இங்கிதம் வேண்டும். சுகமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் மெளனம் காக்க வேண்டும். கோபத்தாலோ சினத்தாலோ ஒருவன் மனதில் உயர்ந்த கொள்கைகளை புகுத்தி விடலாம் என்றால் அது ஒரு பொழுதும் நடவாது. பிறரை குறை கூறுவதற்கு முன்னால் தம்மிடம் குற்றம் குறை இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் வேண்டுமானால் நானா அப்படி நடந்து கொள்கிறேன்? கிரகங்கள்தான் என்னை அவ்வாறு இயக்குகிறது என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம். அப்படியானால் உன்னால் பாதிப்பு அடைந்த ஒரு மனிதன் வந்து உன்னை தாக்கும் பொழுது அவன்மீது உனக்கு கோபம் வரக்கூடாது. ஏன் என்றால்? அவன் கிரகம் அவனை அவ்வாறு இயக்குகிறது என்று அமைதியடைய வேண்டும். ஒன்று கிரகம் என்றால் அப்படி வந்துவிட வேண்டும். இயல்பு என்றால் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு தனிப்பட்ட முறையில் எத்தனையோ பிரச்சனைகள் மனக்காயங்கள் இருக்கலாம். வேதனைகள் இருக்கலாம். ஆனால் ஆதிக்கம் செலுத்த முடியாத இடத்தில் இவன் வேடிக்கை தானே பார்த்துக் கொண்டிருக்கிறான். அதே நேரத்தில் இவன் ஆதிக்கம் செல்லுபடியாகும் இடத்தில் ஏன் திணிக்க எண்ணுகிறான்? பணிவாகவே சொல்லலாமே பணிவு என்பது கோழைத்தனம் ஆகாது. அதுதான் இனிமையை வளர்க்கிறது. உறவை மேம்படுத்துகிறது. ஆக்கப்பூர்வமான அலைகளை வெளிக் கொண்டு வருகிறது. அந்த அலைகள் அடுத்தவன் மனதை சாந்தப்படுத்துகிறது. ஒரு வார்த்தை இவன் பேசமாட்டானா? என்று அடுத்தவன் ஏங்கும் வண்ணம் வார்த்தைகளை குறைத்தே பயன்படுத்த வேண்டும். ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை ஒரு ஓவியம் சொல்லும் என்பார்கள். வார்த்தைகள் இரத்தினச் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள் ஆகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 184

கேள்வி: நீதிக் கதைகளை (பக்தி கதைகளை) எங்களுக்கு சொல்ல வேண்டும்:

இறைவன் அருளால் நலம் எண்ணி நலம் உரைத்து நலம் செய்ய நலமே நடக்கும். சதாசர்வகாலமும் நடப்பதெல்லாம் இறைவன் செயல் என்று எண்ணினால் இறைவன் அனைத்துக்கும் பொறுப்பாகி விடுகிறார். எனவே இதை எத்தனை வாய் மொழியாக கூறினாலும் மனிதனால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

ஆங்கோர் தேசத்தில் (நாட்டில்) பலகாலம் முன்பு நடந்தது அப்பா. இதை எல்லாம் வெறும் கதை என்றும் மூட நம்பிக்கை என்றும் பலர் எண்ணுகிறார்கள். ஆங்கே மிகப்பெரிய ஏழை ஒருவன். சிறு தொழில் செய்து வாழ்ந்து வந்தான். சதாசர்வகாலம் பரம்பொருளை சிவ வடிவிலே உணர்ந்து நமசிவாயம் நமசிவாயம் என்று கூறிக் கொண்டு இருந்தான். யாராவது எதாவது வந்து கேட்டால் நமசிவாயம் அருள் இருந்தால் தருகிறேன் என்பான். அப்பா இந்த வேலையை செய்து தருகிறாயா? என்றால் நமசிவாயம் செய்யச் சொன்னால் செய்கிறேன் என்பான். அப்பா எனக்கு இது வேண்டும். தருகிறாயா? என்றால் நமசிவாயம் தரச் சொன்னால் தருகிறேன் என்பான். இப்படி சதாசர்வ காலமும் பார்ப்பதெல்லாம் அவனுக்கு நமசிவாயமாகவே பட்டது. மிகப் பெரிய வித்தை கற்காமலோ ஞான உபதேசம் இல்லாமலோ வெறும் பிறவியில் இருந்து அன்னவனுக்கு சிவன் மீது மிகப்பெரிய பற்றுதல் வந்துவிட்டது. சிறு தொழில் மூலம் கிடைத்த சிறிய வருமானத்தில் அவனும் அவன் குடும்பமும் திருப்தியாக வாழ்ந்து வந்தது. அப்பொழுது அனல் காலம் என்பதால் அவன் ஒரு நாள் காற்றை நாடி இல்லத்தின் வாயிலிலே கண் அயர்ந்து கொண்டிருந்தான்.

நமசிவாயம் அருள் இருந்தால் எனக்கு உறக்கம் வரட்டும். நமசிவாயம் எண்ணினால் இன்று தென்றல் வீசட்டும். நமச்சிவாயம் எண்ணினால் நான் நன்றாகத் தூங்குவேன் என்று எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் கள்வர்கள் (திருடர்கள்) சிலர் அரண்மனையில் இருந்து சில பொருள்களை திருடிக் கொண்டு ஓட காவலர்கள் துரத்த இங்கே இவன் இருப்பதை அறியாமல் இவன் மீது விழுந்தடித்துக் கொண்டு இவன் இல்லத்திற்குள் ஓடி ஔிந்து கொள்ள அப்பொழுது அந்த காவலர்கள் பின் தொடர்ந்து வந்து அந்த கள்வர்களை எல்லாம் பிடித்துக் கொண்டு இவனையும் பிடித்துக் கொண்டு சென்றார்கள். அனைவரையும் அரசன் முன் நிறுத்தி இந்த கள்வர்கள் இப்படி எல்லாம் செய்து இருக்கிறார்கள். இதோ இந்த மனிதன் வீட்டில்தான் ஔிந்து இருந்தார்கள். இவன்தான் அனைத்திற்கும் பொறுப்பு என்று கூற அரசன் அவனை ஏறிட்டுப் பார்த்தான்.

அரசன்: நீ என்னப்பா கூறுகிறாய்?

நமசிவாயம் அருளாலே நான் இரவு உணவை முடித்து விட்டு நமசிவாயம் அருளாலே காற்றில்லை என்பதால் நான் நமசிவாயம் அருளாலே இல்லத்தின் வெளியே அமர்ந்து இருந்தேன். நமசிவாயம் அருளாலே நான் கட்டிலிலே அமர்ந்து இருந்தேன். நமசிவாயம் அருள் இருந்தால் தென்றல் வரட்டும் என்று இருந்தேன். நமசிவாயம் அருள் இருந்தால் உறக்கம் வரட்டும் என்று படுத்து இருந்தேன். ஆனால் நமசிவாயம் என்னவோ கள்வர்களை (திருடர்களை) அனுப்பி வைத்து இருக்கிறது. நமசிவாயமே கள்வர்களை அனுப்பி இருக்கிறார். நமசிவாயம் அருளால் தான் கள்வர்கள் உங்கள் அரண்மனையில் இருந்து பொருள்களை எடுத்து இருக்கிறார்கள். நமசிவாயம் அருள்தான் கள்வர்களை என் இல்லத்திற்குள் புக வைத்தது. அந்த நமசிவாயம் அருள்தான் உங்கள் கள்வர்களையும் என் இல்லத்திற்கு வரவழைத்தது. அதே நமசிவாயத்தின் அருள்தான் காவலர்களிடம் கள்வர்கள் பிடிபட்டார்கள். அதே நமசிவாயத்தின் அருளால்தான் நானும் பிடிபட்டிருக்கிறேன். நமசிவாயம் அருளால் அரசே நீங்கள் என்னை விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். நமசிவாயத்தின் அருளால்தான் நான் கூறிக் கொண்டு இருக்கிறேன். எனவே நமசிவாயத்தின் அருளால்தான் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது என்று இன்னவன் கூற

செய்வதை எல்லாம் செய்துவிட்டு இறைவன் மீது நீ பழி போடுகிறாயே? என்று எல்லோரும் சொல்ல நமசிவாயம் அருளால்தான் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது நமசிவாயம் எண்ணம். நீங்கள் எல்லாம் என்னை கடுமையாக வசை பாட வேண்டும் என்று இருக்கிறது. நமசிவாயத்தின் எண்ணம் அப்படி இருந்தால் அப்படியே நடந்து விட்டுப் போகட்டுமே என்று இன்னவன் கூற நமசிவாயம் அருள் என்று கூறுகிறாயே இப்பொழுது நமசிவாயம் உன்னை தூக்கில் போட எனக்கு உத்தரவு இட்டிருக்கிறார். உன்னை தூக்கில் போடப் போகிறேன். உன் உயிரை எடுக்கப் போகிறேன் என்று அரசன் கூற ஆஹா நமசிவாயத்தின் கருணையே கருணை. நமசிவாயத்தின் அருளால்தான் இந்த சிந்தனையே உங்களுக்கு வந்திருக்கிறது. இந்ந உடல் பாரமானது. இந்த உடலுக்குள் இந்த ஆத்மா தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆத்மாவை விடுதலை செய்ய என் அப்பன் முடிவு செய்து விட்டார் போலும். நமசிவாயம் உங்கள் உடலில் புகுந்து கொண்டு அரசே இப்படியொரு அருமையான கட்டளையைப் போட்டிருக்கிறார். எனவே நமசிவாயம் எண்ணப்படி எல்லாம் நடந்து விட்டுப் போகட்டும். நமசிவாயம் எண்ணப்படி நான் சித்தமாக இருக்கிறேன். நமசிவாயத்தின் எண்ணம் எதுவாக இருந்தாலும் அதற்கு அடிபணிய நான் காத்திருக்கிறேன். எனவே நமசிவாயமே அனைத்துக்கும் பொறுப்பு என்று இவன் கூற அரசன் அவனின் உண்மையான பக்தியைப் புரிந்து கொண்டு ஏராளமான பொன்னும் பொருளும் கொடுத்து மற்ற கள்வர்களை (திருடர்களை) சிறைக்கு அனுப்பிவிட்டு இவனை அனுப்பி வைத்துவிட்டார்.

எனவே மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது ஏதோ ஒரு கதை போல் தோன்றினாலும் அப்படியொரு தீர்க்கமான அழுத்தந்திருத்தமான பக்தி இறை மீது இருந்தால் என்றும் அனைத்தையும் அனைவரும் சாதிக்கலாம் என்பதை இந்தக் கதை நினைவூட்டுகிறது.

துளசி

அதிகாலையில் தினமும் எழுந்து ஏழை ஒருவன் தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து அதைச் சந்தையில் விற்று அதில் வரும் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். அவன் தினமும் கீரைகளைப் பறிக்க காட்டுக்கு போகும் வழியில் ஒரு குடிலில் முனிவர் ஒருவர் சிறு பெருமாள் விக்கிரகத்தை வைத்து துளசி இலையால் பூஜைகள் செய்வதைப் பார்த்துக் கொண்டே போவான். ஒரு நாள் அதே போல் முனிவர் பெருமாளுக்கு துளசியை வைத்து பூஜை செய்வதைப் பார்த்துக் கொண்டே வயற்காட்டுக்குச் சென்றான். கீரைகளைப் பறிக்கும் போது அதன் அருகே சில துளசி செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டான். அப்போது அவனுக்கு அந்த முனிவர் தினமும் பெருமாளுக்கு பூஜை செய்யும் துளசி இலை ஞாபகத்துக்கு வந்தது. உடனே நம்மால் தான் பெருமாள் விக்கிரகத்துக்கு பூஜை செய்ய முடியவில்லை. இந்த துளசியையாவது பறித்துச் சென்று அந்த முனிவர் செய்யும் பூஜைக்கு அர்ச்சனையாகக் கொடுப்போமே என்று எண்ணியபடி செடியில் இருந்து துளசியையும் சேர்த்துப் பறித்து கீரைக் கட்டோடு ஒன்றாகப் போட்டு தலை மீது வைத்துக் கொண்டு முனிவரின் இல்லம் நோக்கி நடந்தான். ஆனால் அவன் பறித்துப் போட்ட கீரைக் கட்டில் ஒரு சிறு கருநாகமும் இருந்ததை அவன் கவனிக்கவில்லை.

முனிவரின் இல்லத்து முன் வந்து நின்றான் ஏழை விவசாயி. முனிவர் ஏழையைப் பார்த்தார். அதேசமயம் அவன் பின்னே அருவமாய் யாரோ ஒருவர் நிற்பதைக் கண்டார். தன் கண்ணை மூடி ஞான திருஷ்டியில் அவர் யார் என்று அறிய முயன்று பார்த்ததில் அந்த ஏழையின் பின்னே நிழல் போல் நிற்பது கிரகங்களில் நாகத்தின் அம்சத்தில் ஒருவரான ராகு பகவான் என்பது தெரிந்தது. முனிவர் உடனே ஏழையிடம் உன் தலையில் உள்ள கீரைக் கட்டை அப்படியே வைத்திரு ஒரு ஐந்து நிமிஷம் அதைக் கீழே இறக்க வேண்டாம். இதோ வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு குடிலின் பின் பக்கம் சென்று ராகு பகவானின் மந்திரத்தை உச்சரித்து ஏழையின் பின்னே நின்றிருந்த ராகு பகவானை அழைத்தார். ஏழையின் பின்னால் இருந்த ராகு பகவானும் குடிலின் பின்னே இருந்த முனிவரின் முன்பாக வந்து நின்று வணங்கி சுவாமி என்னைத் தாங்கள் அழைத்ததன் காரணம் என்ன? என்று கேட்டார். முனிவரும் ராகுவை வணங்கி ராகுவே எதற்காக இந்த ஏழையைப் பின்தொடர்ந்து வருகிறாய்? என்ன காரணம் என்று நான் அறியலாமா? என்று கேட்டார். அதற்கு ராகு சுவாமி இந்த ஏழையை இன்று நான் ஒரு சிறு கரு நாக உருவெடுத்து தீண்ட வேண்டும் என்பது இவனுக்கு எழுதப்பட்ட கிரக விதி. ஆனால் இவன் என்றும் இல்லாத அதிசயமாக இன்று பகவானின் பிரியமான துளசியை இவன் தலையில் சுமந்து வருவதால் இவனை என்னால் தீண்ட முடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன். இவன் தலையில் சுமந்திருக்கும் துளசியை உங்களிடம் கொடுத்த அடுத்த கணமே அவனைத் தீண்டி விட்டு என் கடமையை முடித்துக் கொண்டு நான் கிளம்பிச் சென்று விடுவேன் என்றார்.

முனிவருக்கு ஏழை மேல் பரிதாபம் ஏற்பட்டது. எவ்வளவு ஆசையாக நம் பூஜைக்காக துளசியைப் பறித்துக் கொண்டு வந்துள்ளான். அவனைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் என்றெண்ணினார். ராகுவே அவனை நீ தீண்டாமல் இருக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா? என்றார். ராகுவோ சுவாமி இத்தனைக் காலம் நீங்கள் இறைவனை பூஜை செய்த புண்ணியத்தின் பலனை அந்த ஏழைக்கு கொடுத்தால் அவனது சர்ப்பதோஷம் நீங்கப் பெறுவான். அதனால் நான் அவனைத் தீண்டாமல் சென்று விடுவேன் என்றார். முனிவரும் அகமகிழ்ந்து அவ்வளவுதானே இதோ இப்பொழுதே நான் இதுவரை நான் செய்த பூஜை பலன்கள் முழுவதையும் அந்த ஏழைக்கு கொடுக்கிறேன் என்று கூறி ஏழைக்குத் தன் பூஜை பலனை கொடுக்க ராகு பகவானும் முனிவரின் தர்ம குணத்தை எண்ணி மகிழ்ந்து மறைந்து போனார். அப்பொழுது கீரைக் கட்டில் இருந்த கரு நாகமும் மறைந்தது. முனிவர் அந்த ஏழையிடம் வந்து இனி நீ தினமும் என் பூஜைக்கு துளசி பறித்து வரவேண்டும் சரியா? என்றார். ஏழைக்கு மிகுந்த மகிழ்ச்சி நம்மால் பெருமாளுக்கு பூஜை செய்ய முடியாவிட்டாலும் முனிவர் மூலம் இப்படி ஒரு கொடுப்பினை கிடைக்கிறதே என்று நினைத்து மகிழ்ந்து கொண்டே தன் குடிசையை நோக்கிச் சென்றான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 183

தருமத்தைப் பற்றி குருநாதரின் தத்துவ விளக்கம்:

அகத்திய மாமுனிவர் பொது வாக்கு:

தருமமோ தர்மம் – தர்மத்தில் தருமம்.
தருமமோ தர்மம் – அதர்மமில்லா தருமம்.
தருமமோ தர்மம் – தர்மமே தருமம்.
தருமமோ தர்மம் – தருவதே தருமம்.
தருமமோ யார் தருகிறார் யார் பெறுகிறார் என்பதே உயிரப்பா.
தருமமோ தர்மம் – தன்னிலை உணர்ந்து தானாய் தருவதே தருமம்.
தருமமோ தர்மம் – பிறர் நிலை உணர்ந்து தானாய் தருவதே தருமம்.
தருமமோ தர்மம் – தர்மம் செய்கின்றோம் என்ற எண்ணம் இல்லாது செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தர்மத்தால் வரும் பயன் எண்ணா செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – பேதங்கள் நோக்காது செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – உறவு நட்பு பகை பாராது செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – அப்பனே தர்மம் அன்னையே தருமம்.
தருமமோ தர்மம் – அப்பனுக்கு அப்பனே தருமம் அன்னைக்கு அன்னையே தருமம்.
தருமமோ தர்மம் – அவர்தம் பாதம் பணிந்து கடமை ஆற்றுதலே தருமம்.
தருமமோ தர்மம் – அகத்தில் சாந்தம் பொங்க வதனத்தில் சாந்தம் தவழ செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – அதனை உணர்ந்து உணர்ந்து உள்ளம் பூரித்து செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – பிறர் தர்மத்தை தடுக்காதிருப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – பற்றில்லா செய்வதே தருமம். அறப்பண்போடு செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தன் நலம் விட்டும் பிறர் நலம் பேணும் உயர் தன்மையே தருமம்.
தருமமோ தர்மம் – தன் இனமில்லா பிற உயிர்களுக்கும் செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தன்னையறிந்து தனக்குள்ள இறையை அறிந்து வாழ முயல்வதே தருமம்.
தருமமோ தர்மம் – கர்மம் குறைப்பதே தருமம். சட்டம் உரைப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – நட்டம் (நஷ்டம்) தவிர்ப்பதே தருமம். இட்டம் (இஷ்டம்) பலிப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – இட்டம் (இஷ்டம்) அடைவதே தருமம். இறை சட்டம் மதிப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – நல்திட்டம் காண்பதே தருமம். மிகு உணர்வினை கட்டுப்படுத்துவதே தருமம்.
தருமமோ தர்மம் – இலகுவாக வாழ்வை மாற்றித் தருவதே தருமம்.
தருமமோ தர்மம் – தன் நிலை தாண்டி மேல் உயர வைப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – தன் நிலைக்கு மேல் உயர்த்துவதே தருமம். தன்னையறிய உதவும் தருமம்.
தருமமோ தர்மம் – தன்னலமில்லா போது நலத்தை வளர்ப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – தன்னை தன்னிலிருந்து வேறாகப் பிரித்துக் காட்டும் தருமம்.
தருமமோ தர்மம் – உறவு தாண்டி செய்வதே தருமம். உயிர் காக்க உதவுவது தருமம்.
தருமமோ தர்மம் – உள்ளன்போடு செய்வதே தர்மம். உளைச்சலின்றி செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தன்னை உனக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டில் வைப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – இது போல் தொடர்ந்து இவ்வழியில் வந்து செய்யும் தருமத்தால் குறையும் கருமம் (கர்மம்).
தருமமோ தர்மம் – இதனை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் இவ்வாறு செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தினம் நாளும் செய்வதை வகுத்து வகுத்து பிரித்துப் பார்த்து அதில் உள்ள தன்மையை நுட்பத்தை அறிந்து ஏற்க முயல்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தர்மத்தின் தருமம்.
தருமமோ தர்மம் – தர்மத்தின் தருமம்.