61. மண் சுமந்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மண் சுமந்த படலம் அறுபத்தி ஒன்றாவது படலமாகும்.

மாணிக்கவாசகரை காப்பாற்றும் நோக்கில் இறைவனார் வைகையில் வெள்ளப் பெருக்கினை உண்டாக்கினார். வைகையில் ஏற்பட்ட வெள்ளமானது ஆற்றின் கரையை உடைத்து வெளியேறத் தொடங்கியது. இதனைக் கண்டதும் காவலர்கள் அரிமர்த்தன பாண்டியனிடம் விவரத்தை எடுத்துரைத்தனர். அரிமர்த்தன பாண்டியனும் குடிமக்களுக்கு ஆற்றின் கரையை அடைக்குமாறு ஆணையிட்டான். அரசாங்க ஏவலர்கள் பாண்டிய நாட்டு குடிமக்களுக்கு ஆற்றின் உடைபட்ட கரையினை அளந்து தனித்தனியே கொடுத்து பெயர்களை பதிவு செய்து கொண்டு அவரவர் பங்கினை அடைக்க உத்தரவிட்டனர். மக்களும் வைக்கோல் பசுந்தளை மண்வெட்டி கூடை ஆகியவற்றைக் கொண்டு தாங்களாகவும் கூலிக்கு வேலையாள் அமர்த்தியும் ஆற்றின் கரையினை அடைக்கத் தொடங்கினர். அப்போது பாண்டிய நாட்டில் தென்கிழக்குத் திசையில் வஞ்சி என்னும் மூதாட்டி பிட்டு விற்று வசித்து வந்தாள். அவள் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டவள். தினமும் தான் செய்யும் முதல் பிட்டினை இறைவனாருக்குப் படைத்துவிட்டு அப்பிட்டினை சிவனடியாருக்கு வழங்கி ஏனைய பிட்டுகளை விற்று வாழ்ந்து கொண்டிருந்தாள். வஞ்சி பாட்டிக்கும் ஆற்றின் கரையை அடைக்குமாறு பாகம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. வஞ்சியோ மூதாட்டி ஆதலால் தன் பங்கிற்கான ஆற்றின் கரையை அடைக்க தகுந்த கூலியாளைத் தேடிக் கொண்டிருந்தாள். கூலியாள் கிடைக்காததால் வஞ்சி மிகவும் கலக்கமுற்று சொக்கநாதரிடம் ஐயனே நானோ வயதானவள். என்னுடைய பங்கிற்கான ஆற்றின் கரையை அடைக்க கூலியாள் கிடைக்கவில்லை. ஆகையால் இன்னும் என்னுடைய பங்கிற்கான ஆற்றின் கரை அடைபடாமல் உள்ளது. எனவே அரசனின் கோபத்திற்கு நான் உள்ளாகலாம். ஆதலால் என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்று என்று வேண்டினாள்.

இறைவனார் வஞ்சிக்கு அருள் செய்ய விருப்பம் கொண்டார். ஆதலால் மண் சுமக்கும் கூலியாள் போல் வேடமிட்டு கையில் மண்வெட்டியும் திருமுடியில் கூடையையும் சுமந்து கொண்டு பிட்டு விற்றுக் கொண்டிருக்கும் வஞ்சியின் இடத்தினை அடைந்தார். கூலி கொடுத்து என்னை வேலைக்கு அமர்த்துபவர் உண்டோ என கூவிக்கொண்டு வஞ்சியை நெருங்கினார். உடனே வஞ்சி இறைவனாரிடம் என்னுடைய பங்கான ஆற்றின் கரையை அடைக்க முடியுமா? என்று கேட்டாள். சரி அப்படியே செய்கிறேன். எனக்கு என்ன கூலி கொடுப்பாய்? என்று கேட்டார். அதற்கு பாட்டி என்னிடம் பணம் இல்லை. நான் விற்கும் பிட்டினை உனக்கு கூலியாகத் தருகிறேன் என்று கூறினாள். இறைவனாரும் அதற்கு சம்மதம் தெரிவித்து நீ செய்யும் பிட்டில் உதிர்ந்த பிட்டுக்கள் அனைத்தையும் எனக்கு கொடுத்துவிடு. உதிராத பிட்டுக்கள் அன்னைத்தும் விற்பனைக்கு வைத்துக் கொள் சம்மதமா என்று கேட்டார். பாட்டியும் சம்மதித்தாள். பின்னர் வஞ்சியிடம் நான் தற்போது பசியால் மிகவும் சோர்வாக இருகிறேன். ஆகையால் நீ எனக்கு பிட்டை சாப்பிட கொடு நான் சாப்பிட்டு பசியாறிய பிறகு வைகையை அடைக்கிறேன் என்று கூறினார். வஞ்சியும் அதற்கு சம்மதித்து நான் பிட்டினை செய்கிறேன் நீ அதற்குள் வைகையின் கரையினை அடைக்க நான் வந்தியின் கூலியாள் என பதிவேட்டில் குறித்து வைத்துவிட்டு வா என்று சொல்லி பிட்டினை செய்ய ஆரம்பித்தாள். அன்று சமைத்த பிட்டெல்லாம் உதிர்ந்து கொண்டே போனது. விற்பனைக்கு பிட்டு இல்லையே என முகம் சுளிக்காமல் கொடுத்த வாக்கின் படி மகிழ்ச்சியோடு பிட்டை அள்ளி வைத்தாள். இறைவனார் பிட்டை சாப்பிட்டதும் கரையை அடைத்து விடப்பா எனப் பணிவுடன் கேட்டுக் கொண்டாள்.

இறைவனார் கரையை அடைப்பது போல் நடித்துக் கொண்டும் மற்றவர்களுக்கு வேடிக்கை காட்டியும் மரநிழலில் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டும் வஞ்சியிடம் பிட்டை வாங்கி உண்டும் பொழுதைப் போக்கினார். கூலியாட்களின் மேற்பார்வையாளர் இறைவனாரை எழுப்பி விரட்டி விட மீண்டும் வந்தியிடம் சென்று பிட்டை வாங்கித் தின்றுவிட்டு வந்து மரநிழலில் படுத்துக்கொண்டார். கணக்கரிடம் காவலாளிகள் இதனைச் சொல்லும் போது அச்சமயத்தில் அரிமர்த்தன பாண்டியன் அங்கு வந்தான். அனைத்தும் கேட்ட அரசன் தன்னிடம் உள்ள பிரம்பில் படுத்திருந்த இறைவனார் முதுகில் ஓங்கிப் அடித்தார். அந்த அடி உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியின் முதுகிலும் விழுந்தது. அடித்த அரசனும் ஆ வென அலறினான். வாதவூரரும் வந்தியும் முதுகைத் தடவிக் கொண்டனர். சிரித்துக் கொண்டே இறைவனார் ஒரு கூடை மண் எடுத்து வந்தியின் பங்கில் கொட்டி மறைந்தார். அடுத்த வினாடி வைகை வெள்ளம் அடங்கியது. பிட்டுக்கு மண் சுமக்க வந்தவர் பெருமானே என அனைவரும் உணர்ந்தனர். அரிமர்த்தன பாண்டியன் கூலியாளாக வந்தது இறைவனே என்பதை உணர்ந்தான்.

இறைவனார் அப்போது அசீரீரியாக பாண்டியனே தூயநெறியில் உன்னால் தேடப்பட்ட செல்வம் முழுவதும் என்னுடைய அடியவர்களின் பொருட்டு மாணிக்கவாசகரால் செலவழிக்கப்பட்டது. ஆகையால் யாம் நரிகளை பரிகளாக்கி உம்முடைய இடத்திற்கு அனுப்பினோம். பரிகளெல்லாம் மீண்டும் நரிகளானதால் மாணிக்கவாசகரை நீ தண்டித்தாய். அதனைப் பொறுக்காமல் வைகையை யாம் பொங்கி எழச்செய்து கரையினை உடைக்கச் செய்தோம். வஞ்சியின் கூலியாளாய் வந்து வஞ்சியிடம் பிட்டு வாங்கி உண்டு உன்னிடம் பிரம்படி பட்டோம். நீ மாணிக்கவாசகரின் உள்ளப்படி நடந்து கொண்டு நீதிநெறி பிறழாமல் ஆட்சி செய்து எம்மை வந்தடைவாயாக என்று திருவாக்கினைக் கூறினார். அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரைச் சந்தித்து தன்னை மன்னித்து மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டினான். மாணிக்கவாசகரோ அதனை மறுத்து தில்லை அம்பலத்திற்குச் சென்று இறைவனை வணங்குவதே தன்னுடைய விருப்பம் என்பதைக் கூறி தில்லைவனம் சென்று பாடல்கள் பாடி மகிழ்ந்து இறுதியில் இறைவனாரின் சோதியில் கலந்தார். இறைவனாரின் ஆணைப்படி சிவகணங்கள் வஞ்சியை சிவலோகத்துக்கு அழைத்துச் சென்றனர். அரிமர்த்தபாண்டியன் சகநாதன் என்னும் புதல்வனைப் பெற்று இறைவனாரின் திருவடியை அடைந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தமக்கு விரையம் ஏற்பட்டாலும் துன்பப்படாமல் மகிழ்ச்சியுடன் கொடுத்த வாக்கை நிறை வேற்ற வேண்டும் அவ்வாறு செய்தால் இறைவன் சிவலோகத்தையும் கொடுப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 484

கேள்வி: நடராஜப் பத்துவில் வரும் கும்பமுனி மச்சமுனி பிரம்மரிஷி கோரக்கர் வள்ளுவர் போகர் இவர்கள் எல்லாம் கூறிடும் வைத்தியம் அல்ல. என் மனது உன்னடிவிட்டு நீங்காது நிலை நிற்க ஏதுளவு புகல வருவாய் இதன் ஞானக்கருத்து என்ன?

இறைவனின் அருளாலே இதுபோல் கூற வருவது என்னவென்றால் நல்விதமாய் பலவற்றை யாங்கள் ஓதினாலும் பிறர் ஓதக் கேட்டாலும் அவை நல்லதோ அல்லது அல்லதோ அவற்றையெல்லாம்விட்டு நான் எண்ணுகின்ற எண்ணங்களில் இருந்தும் என்னை காப்பாற்றி நான் நினைப்பது சரியோ தவறோ அவற்றையும் தாண்டி என்னை நீ ஆட்கொள். சுருக்கமாக கூறப்போனால் நான் புரிந்து கொண்டது சரியோ தவறோ நான் நினைப்பது உண்மையோ பொய்யோ ஆனால் இறைவா என்னை அப்படியே ஏற்றுக்கொள். நான் எப்படியோ அப்படியே புரிந்து ஏற்றுக்கொள் அப்படியே என்னை ஆட்கொள் என்பதுதான் அடிப்படை உண்மையாகும்.

60. பரி நரியாக்கிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பரி நரியாக்கிய படலம் அறுபதாவது படலமாகும்.

இறைவனே குதிரைகளை கொண்டு வந்து கொடுத்தார் என்பதை உணர்ந்த மாணிக்கவாசகர் இறைவனின் திருவருளை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்தார். இறைவனை மனதார துதித்து வழிபட்டார். அன்று சூரியன் மறைந்ததால் பகல் முடிந்து இரவின் அடையாளமாக சந்திரன் தோன்றியது. நடு இரவில் இறைவனின் திருவருளால் குதிரைகளாக மாறிய நரிகள் எல்லாம் பழைய வடிவத்தை அடைந்தன. குதிரைக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்ததால் அவைகள் எரிச்சல் அடைந்து ஊளையிட்டன. அரிமர்த்தனனின் குதிரை லாயத்தில் கட்டியிருந்த பழைய குதிரைகளை நரிகள் கடித்துக் குதறின. குதிரைகள் வலி தாங்க முடியால் அலறிச் சாய்ந்தன. இதனால் பேரிரைச்சல் ஏற்பட்டது. குதிரை லாயத்திற்கான பணியாட்கள் பேரிரைச்சலால் கண் விழித்து நடந்தவைகளைப் பார்த்து திகைத்தனர். அரிமர்த்தனனிடம் நடந்தவைகளை கூறச் சென்றனர். அந்நேரம் நரிகள் ஆத்திரத்தில் ஊளையிட்ட வண்ணம் காட்டை நோக்கி ஓடின. நடந்தவைகளை கேள்வியுற்ற அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரின் மாயச் செயலாலே குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறிவிட்டதாகக் கருதினான். ஆத்திரத்தில் தண்டல்காரர்களிடம் அக்கொடியவன் அரச பணத்தைக் கொள்ளை அடித்துவிட்டு அதனை மறைக்கவே ஏதோ மாயங்கள் செய்து குதிரைகளைக் கொண்டு வந்து அவற்றை நரிகளாக மாற்றி ஏற்கனவே இருந்த குதிரைகளையும் கொல்லச் செய்து விட்டான். ஆதலால் அவனுக்கு சரியான தண்டனை அளித்து அரசப்பணத்தை மீட்டெடுங்கள் என்று கட்டளையிட்டான்.

மாணிக்கவாசகரின் மாளிகைக்கு அரசனின் ஆணையை செயல்படுத்த தண்டல்காரர்கள் சென்றனர். அவர் அங்கு தியானத்தில் இருந்தார். அவரை எழுப்பி நடந்தவைகளைக் கூறி அவரை அழைத்துச் சென்றனர். மாணிக்கவாசகரும் அவர்களுடன் ஏதும் கூறாமல் இறைவனை எண்ணியபடி நடந்து சென்றார். தண்டல்காரர்கள் அவருடைய கை மற்றும் கால்களில் பாங்கற்களை ஏற்றி வைத்து வெற்று உடம்புடன் நண்பகலில் வையை ஆற்று மண்ணில் படுக்கச் செய்தனர். மாணிக்கவாசகர் ஆற்றுமண்ணின் சூடு தாங்காமல் அலறித் துடித்தார். இறைவா இது என்ன சோதனை? என்னைக் காப்பாற்றுங்கள் என்று உருகினார். மாணிக்கவாசகரின் குரல் கேட்டு உருகிய இறைவனார் அவருக்கு அருள் செய்யும் நோக்கம் கொண்டார். இறைவனாரின் திருவருளால் வைகையில் தண்ணீர் வரத் தொடங்கியது. மழை ஏதும் பெய்யாமல் ஆற்றில் தண்ணீர் வருவதைக் கண்டதும் தண்டல்காரர்கள் திகைத்தனர். நேரம் செல்லச் செல்ல வைகையில் தண்ணீர் வருவது அதிகரித்து வெள்ளமாக மாறியது. மாணிக்கவாசகர் இருந்த இடத்தில் மட்டும் வெள்ளம் வராமல் தண்ணீராக மட்டும் வைகை ஓடியது. நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த மாணிக்கவாசகர் இறைவனாரின் திருவிளையாடலை எண்ணியபடி இருந்தார். நேரம் ஆக ஆக வைகையையின் வெள்ளம் கரையை உடைக்கத் தொடங்கியது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

அடியவர்களின் துன்பத்தினை இறைவனார் விரைந்து வந்து தீர்ப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 483

கேள்வி: மனித இனம் எப்படித் தோன்றி உலகம் முழுவதும் பரவியது?

இறைவனின் கருணையாலே நீண்ட நெடும் விடையை தரவேண்டிய வினா இது. இருந்தாலும் கூறுகிறோம். ஆதியந்தமில்லாத பரம்பொருள் வெறும் ஓம்கார சப்தத்தோடு தனித்து அமைதியாய் இருக்கிறது. அது தானே எல்லாமாகவும் இருக்கிறது. வேறு எதுவும் இல்லாத நிலையில் தானாக இருக்கின்ற அதுதான் பலவிதமாக அண்ட சராசரங்களாக பிரிந்து மெல்ல மெல்ல விதவிதமான கிரகங்களாகவும் வேறுவிதமான நிலைகளாகவும் மாறுகிறது. அப்படி மாறிய நிலையிலேயே எந்த உயிரினமும் இல்லாமல் பல்கோடி ஆண்டுகள் கழிந்தன. அதன் பிறகுதான் சிறு சிறு உயிர்கள் தாவரங்கள் பிறகுதான் மனிதர்கள் என்ற நிலைக்கு ஒரு முடிவை எடுத்தது பரம்பொருள். இது ஒரு கணத்தில் ஒரு ஆண்டில் நிகழ்ந்தது அல்ல. ஆனால் விழி மூடி விழி திறப்பதற்குள் செய்யக் கூடிய ஆற்றலைப் பெற்ற பரம்பொருளால் பல ஆண்டுகாலமாக வேடிக்கையாக லீலா வினோதமாக செய்யப்பட்ட ஒரு விஷயமப்பா. இன்னும் இதுகுறித்து நுணுக்கமான வாக்கினை தக்க காலத்தில் உரைக்கின்றோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 482

கேள்வி: பல ஆதிசங்கரர்கள் பல ஔவையார்கள் இருந்தார்களா ?

இறைவனின் கருணையால் உண்மையான முதன்மையான பெயரில் இருப்பது ஒருவர்தான் என்றாலும் அவர்கள் மீது பற்றுகொண்டு இப்பொழுது போல பெயரை சூட்டிக்கொள்வது அந்தக் காலத்திலும் உண்டு. எனவே அப்படி இருந்தது உண்மை. அப்படியிருந்து சிலவற்றை எழுதியிருப்பதும் உண்மை. ஆனால் யாங்கள் எப்பொழுதும் சுட்டிக் காட்டுவதும் கூறுவதும் முதன்மையான நாமம் கொண்டவர்களை குறித்துதான்.

59. நரியை பரியாக்கிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் நரியை பரியாக்கிய படலம் ஐம்பத்தி ஒன்பதாவது படலமாகும்.

இறைவனார் குதிரைகளை அழைத்து வருவதாகக் கூறிய வாக்குறுதியை எண்ணி மாணிக்கவாசகர் குதிரைகளின் வரவிற்காக மதுரையில் காத்திருந்தார். நாட்கள் நகர்ந்தன. குதிரைகள் வந்தபாடில்லை. அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகர் பொய் உரைப்பதாகக் கருதி அவரை தண்டித்து அரசாங்கப் பணத்தை அவரிடம் இருந்து பெறுமாறு தண்டல்காரர்களுக்கு உத்தரவிட்டான். அரசனின் ஆணையை ஏற்று தண்டல்காரர்கள் மாணிக்கவாசகரின் வீட்டிற்கு அவரை அழைப்பதற்காகச் சென்றனர். அவர் நமசிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். தண்டல்காரர்கள் அரச ஆணையை அவரிடம் தெரிவித்தனர். அதற்கு அவர் எல்லாம் இறைவனின் விருப்பப்படி நடக்கும் என்று எண்ணி அவர்களுடன் சென்றார். தண்டல்காரர்கள் மாணிக்கவாசகரிடம் அரசாங்கப் பணத்தை திரும்ப அளிக்கும்படி வலியுறுத்தி அவரின் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றினர். அவருக்கு அது பஞ்சுப் பொதி போல் தோன்றியது. மறுநாள் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அவரைத் தாக்கினர். அதனையும் பொறுத்துக் கொண்ட மாணிக்கவாசகர் இறைவனிடம் தங்களுடைய திருவாக்கினை பொய்யாக்கமல் விரைவில் குதிரைகளுடன் மதுரைக்கு வாருங்கள் என மனமுருகி வழிபட்டார். இந்நிலையில் ஆடி முடித்து ஆவணி மாதம் பிறந்து விட்டது. இறைவனார் மாணிக்கவாசகருக்கு உதவ திருவுள்ளம் கொண்டார்.

இறைவனார் திருநந்தி தேவரிடம் மாணிக்கவாசகன் குதிரைகளை வாங்கித் தராத குற்றத்திற்காக பாண்டிய‌னின் சிறையில் அவதிப்படுகிறான். அவனுடைய துன்பத்தை போக்குவதற்காக நீயும் நம் பூதகணங்களும் காட்டில் உள்ள நரிகளை பரிகளாக்கி குதிரை வீரர்களாக மதுரையை நோக்கிச் செல்லுங்கள். மதுரைக்கு அருகில் செல்லும்போது யாம் குதிரை வீரனாக வந்து உங்களுடன் கலந்து கொள்வோம் என்று கூறினார். இறைவனின் ஆணையை ஏற்று நந்திதேவரும் பூதகணங்களும் நரிகளை குதிரைகளாக மாற்றி அதன்மீது அமர்ந்து மதுரையை நோக்கி விரைந்தனர். குதிரைகள் மதுரையை நோக்கி வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை விடுவிக்கச் செய்தான். அவருக்கு பரிசுகள் பல வழங்கினான். குதிரைகளின் அணி வகுப்பினைக் காண மணிமண்டபத்திற்கு வந்தான். மக்கள் எல்லோரும் குதிரைகளைக் கண்டு ஆரவாரம் செய்தனர்.

பாண்டியனின் கண்களுக்கு மட்டும் குதிரைகள் புலப்படவில்லை. மாணிக்கவாசகர்தான் ஏதோ தந்திரம் செய்கிறார். ஆகையால்தான் தன் கண்களுக்கு குதிரைகள் புலப்படவில்லை என்று பாண்டியன் கருதி மாணிவாசகரை மீண்டும் சிறையில் அடைத்தான். சற்று நேரத்தில் குதிரை லாயத்தில் ஆயிரக்கணக்கான குதிரைகள் மற்றும் குதிரை வீரர்கள் இருப்பதைக் கண்ட பாண்டியநாட்டு வீரர்கள் அரிமர்த்தனனிடம் விபரத்தைச் சொல்லினர். அங்கு வந்த பாண்டிய‌ன் குதிரைகளைக் கண்டு மகிழ்ந்தான். பின்னர் அருகில் இருந்த குதிரை வீரனிடம் உங்கள் குதிரைப் படைக்கு தலைவன் யார்? என்று கேட்டான். அப்போது வேதமாகிய குதிரையில் அமர்ந்திருந்த இறைவனாரை சுட்டிக் காட்டி இவர்தாம் எம் தலைவர் என்று கூறினான். இறைவனாரைக் கண்டதும் பாண்டியன் அவனையும் அறியாமல் வணங்கினான். அப்போது இறைவனார் குதிரையின் கயிற்றினை பிடித்து பாண்டியனின் கையில் கொடுத்தார்.

சிங்கப் பாய்ச்சல் புலிப்பாய்ச்சல் முயல்பாய்ச்சல் குரங்குப் பாய்ச்சல் அம்புப்பாய்ச்சல் சர்ப்பப்பாய்ச்சல் வாயுப்பாய்ச்சல் என்று பலவகைப் பாய்ச்சல்களுள்ள குதிரைகளை பார்த்துப் பார்த்து வாங்கியதாலேயே தாமதமாகி விட்டது. குதிரை வரவில்லை என்று மந்திரியை தண்டித்தாய். அவரைத் துன்புறுத்தியது என்னை தண்டித்தது போல இருக்கிறது. அவசர புத்திக்காரனான நீ கேட்பார் பேச்சுக் கேட்டு செயல்படும் உனது சுபாவம் கீழ்மையானது. அவருடைய நல்ல குணத்திற்காகத் தான் குதிரையை ஒப்பந்தப்படி உன்னிடம் கொடுக்கிறேன். குதிரைகளை ஒப்படைத்ததாகி விட்டது. இனி குதிரைப் பற்றிக் கேட்கக் கூடாது. இதுவே குதிரை பரிமாற்றத்தில் கடைபிடிக்கப்படும் வழக்கம் என்று கூறினார். இறைவனாரின் கூற்றினை ஆமோதித்த அரிமர்த்தன பாண்டியன் இறைவனாருக்கு வெண்துண்டினைப் பரிசளித்தான். இறைவனாரும் தலையில் அதனைக் கட்டிக் கொண்டு அங்கிருந்து தம் பூதகணங்களோடு புறப்பட்டார். பின்னர் மாணிக்கவாசகருக்கு பரிசுகளை அரிமர்த்தன பாண்டியன் வழங்கி அவரை அவருடைய இல்லத்திற்கு வழி அனுப்பி வைத்தான். மாணிக்கவாசகரும் பாண்டியனின் பரிசுகளை தம் சுற்றத்தாருக்கு பகிர்ந்தளித்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தன்னை நம்பியவர்களை மேலும் மேல் நிலைக்கு அழைத்துச் செல்ல இறைவன் அவர்களுக்கு பல சோதனைகளை வைப்பார். இறைவனின் சோதனையை பொறுமையுடம் ஏற்றுக் கொண்டால் அவர்களை மேல் நிலைக்கு அழைத்துச் செல்வதுடன் அவர்களின் பெருமைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் படி வெளி உலகிற்கு காட்டுவார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 481

கேள்வி: ஆண் பிள்ளை இல்லாத நிலையில் ஒரு பெண் தன் முன்னோர்களுக்கு சிரார்த்தம் போன்றவற்றை செய்யும் முறை:

இறைவனின் கருணையால் முன்பே கூறியிருக்கிறோம். யாருக்கும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று. யாரை நினைத்து யார் வேண்டுமானாலும் இதுபோன்ற காரியங்களை செய்யலாம். அதோடு கூட தனக்குப் பின் வரும் வாரிசு செய்தால்தான் தன்னுடைய ஆத்மா கடைத்தேறும் என்ற நிலையில் ஒரு மனிதன் வாழக் கூடாது என்றும் நாங்கள் கூறுகிறோம். ஒரு பெண் தாராளமாக நடைமுறையில் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யலாம். சாஸ்திரம் அனுமதிக்கவில்லை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்று யாராவது கூறினால் ஆத்மார்த்தமான வழிபாட்டை இல்லத்தில் செய்து நிறைய தர்மங்களை அந்தப் பெண் செய்தால் போதும்.

58. வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம் ஐம்பத்தி எட்டாவது படலமாகும்.

மதுரைக்கு அருகில் திருவாதவூர் என்றொரு திருத்தலம் உள்ளது. அவ்வூரில் இறைவனின் அருளால் சுந்தரநாதர் என்பவருக்கு திருவாதவூரர் என்ற புதல்வன் பிறந்தான். அவர் தன்னுடைய பதினாறு வயதினிலேயே ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத் தெளிந்தார். வாதவூரடிகளின் கல்வித் திறமையைக் அறிந்த அரிமர்த்தன பாண்டியன் வாதவூராரை தன்னுடைய அவைக்கு வரவழைத்து மந்திரியாக்கினான். நாளடைவில் தன் திறமையின் காரணமாக மந்திரிகளுக்கு எல்லாம் முதன்மை மந்திரியாக வாதவூரார் விளங்கினார். ஆயினும் அவர் இம்மை மறுமைகளில் வெறுப்புக் கொண்டு இவ்வுலக வாழ்வில் தன்னை உய்விக்க தகுந்த குருவினை எதிர் நோக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒருசமயம் அரிமர்த்தன பாண்டியன் தன்னுடைய படைகளின் பலத்தினைப் பற்றி அவையோரிடம் விவாதித்துக் கொண்டிருந்தான். குதிரைப் படையில் குதிரைகளின் எண்ணிக்கை குறைவாகவும் வயதான குதிரைகளாவும் இருப்பதைக் கண்ட அரசன் வாதவூராரிடம் கருவூலத்தைத் திறந்து வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு கடல்துறையில் வந்திறங்கும் குதிரைகளில் சிறந்தவைகளை வாங்கி வருமாறு கூறினான். வாதவூரடிகளும் அரனின் ஆணையை ஏற்று கருவூலத்தைத் திறந்து வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு அரசனிடம் விடை பெற்று குதிரைகளை வாங்கப் புறப்பட்டார்.

திருக்கோவிலில் சென்று இறைவனாரை வழிபட்டு தந்தையே இப்பொருட்கள் யாவும் சரியான வழியில் பயன்படும்படி தாங்கள் எனக்கு அருளல் வேண்டும் என்று மனமுருக வழிபாடு மேற்கொண்டார். பின்னர் குதிரைகளை வாங்க புறப்பட்டார். இந்நிலையில் இறைவனார் வாதவூரடிகளுக்கு ஞானத்தை உபதேசிக்க எண்ணினார். எனவே அவர் அந்தண வடிவில் குருவாகி பல மாணவர்களோடு திருப்பெருந்துறையில் வாதவூரடியாரை எதிர்நோக்கி இருந்தார். திருப்பெருந்துறையை நெருங்கியதும் வாதவூரடிகளின் உள்ளம் மகிழ்ச்சி கொண்டது.

சிவபெருமான் குருவடிவில் பல மாணவர்களுக்கு வேதத்தின் உட்பொருளை ஞான முத்திரையால் விளக்கிக் கொண்டிருந்தார். குருநாதரை பார்த்த வாதவூரர் பிரமித்து ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றுவிட்டார். தன் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிய அவரை நோக்கிச் சென்றார். குருவின் வடிவிலிருந்த சிவபெருமான் கடைக்கண்ணால் வாதவூரரைப் பார்த்தார். வாதவூரர் அருகே சென்று குருவை வணங்க எம்பெருமான் வாதவூரர் சிரசில் கை வைத்து உட்கார் என்றார். எம்பெருமான் கைபட்டதும் தன் குடும்பத்தை தன் அலுவல் வேலை தான் வந்த காரியம் தான் இருக்கும் இடம் அனைத்தையும் மறந்து தன்னையே மறந்த நிலையில் இருந்தார் வாதவூரர். சூட்சும பஞ்சாட்சரத்தையும் ஸ்தூல பஞ்சாட்சரத்தையும் வேதத்தின் பொருளையும் கற்பித்தார். இறைவனாரின் அருட்பார்வையால் வாதவூராரின் மும்மலங்களும் நீங்கின. பின்னர் வாதவூராருக்கு ஞானத்தை வழங்கினார்.

இறைவனின் திருவருளால் வாதவூரடிகள் செந்தமிழ் பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டார். பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த இறைவனார் வாதவூரடிகளுக்கு மாணிக்கவாசகன் என்ற திருநாமத்தைச் சூட்டி நீ இங்கே சில காலம் தங்கி இருப்பாயாக. இங்கு நீ செய்ய வேண்டிய காரியங்கள் சில உள்ளன என்று திருவாய் மலர்ந்தருளினார்.  பின்னர் அவ்விடத்தை விட்டு மறைந்தார். இறைவனார் குருவாகி வந்து தனக்கு ஞானத்தை வழங்கிய இடத்தில் திருக்கோவிலைக் கட்ட எண்ணிய மாணிக்கவாசகர் குதிரை வாங்கக் கொண்டு வந்த பொருட்களை அதற்குப் பயன்படுத்த திட்டமிட்டார். பின்னர் அரிமர்த்தன பாண்டியனுக்கு ஆடி மாதத்தில் குதிரைகளுடன் வந்து சேர்வதாக ஓலை அனுப்பிவிட்டு தன்னுடன் வந்த படைகளையும் திருப்பி அனுப்பினார். தான் எண்ணியவாறே திருக்கோவிலைக் கட்டி திருப்பணிகளை முடித்தார். ஆடி மாதமும் வந்தது. குதிரைகள் வராததைக் கண்ட அரிமர்த்தன பாண்டியன் குதிரைகள் இன்னும் ஏன் மதுரையை அடையவில்லை? என்று கேள்வி எழுப்பி ஓலை அனுப்பினான். பாண்டியனின் ஓலையைக் கண்டதும்தான் மாணிக்கவாசகருக்கு குதிரையைப் பற்றிய எண்ணம் வந்தது.

இறைவனிடம் ஐயனே பாண்டியன் குதிரை வாங்க கொடுத்த பணத்தை எல்லாம் கோவில் திருப்பணிகளுக்கு செலவிட்டுவிட்டேன். இனி நான் என்ன செய்வேன் மனமுருகி வழிபட்டார். அப்போது குதிரைகள் வரும் என்று பாண்டியனுக்கு செய்தி அனுப்பு என்று திருவாக்கு கேட்டது. மாணிக்கவாசகரும் இறைவனின் ஆணையின்படி மாணிக்கவாசகர் பாண்டியனுக்கு ஓலை அனுப்பினார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து யாம் குதிரைகளைக் கொண்டு வருகிறோம். நீ முன்னே சென்று மதுரையில் காத்திரு என்று மாணிக்கவாசகரின் கனவில் இறைவனார் அறிவுறுத்தினார். மாணிக்கவாசகரும் மதுரை சென்று பாண்டியனைச் சந்தித்து குதிரைகள் பின்னே வந்து கொண்டிருப்பதாகக் கூறினார். இறைவனாரின் வரவினை எதிர்நோக்கி மதுரையில் காத்திருந்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

அன்பும் பக்தியும் நிறைந்து தகுதி பெற்றால் இறைவனே குருவாக வந்து ஆட்கொண்டு மும்மலங்களையும் நீக்கி உபதேசம் கொடுப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

57. வலை வீசின படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வலை வீசின படலம் ஐம்பத்தி ஏழாவது படலமாகும்.

ஒரு சமயம் கையாலத்தில் சிவபெருமான் உமையம்மைக்கு வேதத்தின் உட்பொருளை விவரித்துக் கொண்டிருந்தார். இறைவனாரின் பாடத்தைக் கவனிக்காமல் வினாயகரையும் முருகனையும் கொஞ்சிக் கொண்டு உமையம்மை கனவக் குறைவாக இருந்தார். இதனை அறிந்ததும் சிவபெருமான் கோபம் கொண்டு உமையே நான் சொல்லிக் கொண்டிருக்கும் வேதத்தினை தெரிந்து கொள்ள ஆர்வமின்றி கவனக்குறைவாக இருந்ததால் நீ படிப்பறிவு இல்லாத மீனவப் பெண்ணாக மாறக் கடவாய் என்று சாபமிட்டார். இதனைக் கேட்டதும் ஐயனே தாங்கள் என்னுடைய பிழையைப் பொருந்தருளுங்கள். சாபத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டினாள். இறைவனாரும் என்னுடைய பக்தனான பரதவன் என்னும் மீனவத் தலைவனின் விருப்பத்தை நிறைவேற்ற இத்திருவிளையாடலை நிகழ்த்தினோம். இறுதியில் உன்னை வந்து யாம் திருமணம் செய்து கொள்வோம். அஞ்ச வேண்டாம் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இதனைப் பார்த்த முருகர் கோபம் கொண்டு உங்களது மாயையின் காரணத்தினால்தான் அன்னை கவனக்குறைவாய் இருந்தாள். இதற்கா சாபம் கொடுப்பீர்கள் என்று வெகுண்டு தந்தை கையிலிருந்த வேதப் புத்தகத்தை கிழித்தார். முருகனின் செயலைக் கண்ட சிவபெருமான் வேதப் புத்தகத்தைக் கிழித்ததினால் ஊமையாய்ப் பிறப்பாய் என்று சாபமிட்டார். முருகனும் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டு சாப விமோசனம் கேட்டார். எப்போது போற்றுதற்குரிய சிறந்த தமிழ்ப் பாடல்களை எப்போது கேட்டு கண்ணீர் வடிக்கின்றாயோ அப்போது உன் சாபம் நீங்கி எம்மிடம் வருவாய் என்றார். (முருகர் சாபத்தின்படி தனபதி தருமசாலினி என்ற தம்பதியினருக்கு ஊமை மகனாய் பிறந்து போற்றுதற்குரிய சிறந்த தமிழ்ப் பாடல்களை கேட்டு கண்ணீர் வடித்து புலவர் வழக்கை தீர்த்து வைத்தார். 55ஆம் திருவிளையாடலில் இருக்கிறது.)

விநாயகர் ஓடிவந்து சாத்திரப் புத்தகங்கள் அனைத்தையும் துதிக்கையால் துக்கிக் கடலில் எறிந்து விட்டார்.  சிவன் சினமுற்று வினாயகருக்கு சாபம் கொடுக்கும் நேரம் நந்தி குறுக்கே வர நீ கடலில் மீனாய் பிறக்கக் கடவாய் என அவருக்குச் சாபமிட்டார். இதனைக் கேட்டதும் நந்திதேவர் ஐயனே உங்களையும் கையிலாயத்தையும் பிரிந்து என்னால் இருக்க இயலாது. தயவு கூர்ந்து என்னைக் காப்பாற்றி அருளுங்கள் என்றார். இறைவனார் நந்திதேவரிடம் மீனவப் பெண்ணான உமையம்மையை திருமணம் செய்ய யாம் வரும் போது உன்னுடைய சாபம் நீங்கும் என்று அருளினார்.

இறைவனாரின் சாபப்படி உமையம்மை மதுரைக்கு கீழ்த்திசையில் இருந்த பாக்கம் என்னும் மீனவ ஊரில் புன்னை மரத்துக்கு அடியில் குழந்தையாகக் கிடந்து அழுதார். அம்மையின் அழுகுரல் குழந்தைப் பாக்கியம் இல்லாத மீனவத் தலைவன் பரதவனின் காதில் விழுந்தது. மீனவத் தலைவன் அழுகுரலின் திசையில் சென்று குழந்தையைப் பார்த்ததும் இக்குழந்தை எனக்கு சொக்கநாதர் தந்த பரிசு என்று எண்ணி குழந்தையை எடுத்துக் கொண்டு தன்னுடைய மனைவியிடம் கொடுத்து வளர்த்தான். நந்திதேவரும் சுறாமீனாகப் பிறந்து கடலில் வீசி எறியப்பட்ட வேதங்களை மீட்டு இறைவனாரிடம் தந்து விட்டு கடலில் திரிந்து கொண்டிருந்தார். அம்மையும் நாளடைவில் திருமணப் பருவத்தை எட்டிய குமரிப் பெண்ணானாள். கடலில் இருந்த சுறாவானது அங்கு மீன்பிடிக்க வரும் மீனவர்களின் வலையைக் கிழித்து படகுகளைக் கவிழ்த்து தொந்தரவு செய்து வந்தது. நாளுக்கு நாள் சுறாவின் தொந்தரவு அதிகமாகவே மீனவத் தலைவன் சுறாவினை அடங்கும் வீரனுக்கு தன்னுடைய பெண்ணை திருமணம் செய்து தருவதாக முரசு அறிவித்தான். தங்களுடைய உயிருக்குப் பயந்து யாரும் சுறாமீனை அடக்க முன்வரவில்லை.

இறைவனார் அழகான மீனவ இளைஞனாகத் தோன்றினார். மீனவத் தலைவன் முன் சென்று ஐயா எனது பெயர் சொக்கநாதன். என்னுடைய ஊர் மதுரையாகும். நான் வலை வீசி மீன்பிடிப்பதில் வல்லவன். நான் சுறாவினை அடக்கி தங்களுடைய மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார். இதனைக் கேட்டதும் மீனவத் தலைவன் தம்பி நீங்கள் கூறுவது போல் அது ஒன்றும் சாதாரண மீன் இல்லை. பல வலைகளைக் கிழித்தும் பல படகுகளைக் கவிழ்த்தும் உள்ளது அது. ஆகையால் அதனைப் பிடிப்பது அத்தனை சுலபம் இல்லை உன்னால் இயலாது என்றார். அதற்கு சொக்கநாதர் நான் வலைவீசினால் அதில் சிக்காத உயிர்களே கிடையாது. என்னுடைய வாலையைத் தூக்கக் கூட உங்களால் முடியாது தூக்கிப் பாருங்கள் என்றார். வலையை தூக்க மீனவர்கள் முயற்சி செய்தார்கள். எவராலும் வலையை அசைக்கக் கூட முடியவில்லை. சரி என்று மீனவத்தலைவன் அனுமதி கொடுத்தார்.

இறைவனார் சுறாமீனைப் பிடிக்கச் சென்றார். இறைவனார் வலையை வீசி சுறா மீனைப் பிடித்தார். பின்னர் கரைக்கு அதனை இழுத்து வந்து மீவனத் தலைவனிடம் காண்பித்தார். மீனவத் தலைவனும் ஒப்பந்தம் செய்தபடி தன்னுடைய பெண்ணை மீனவனான இறைவனாருக்கு திருமணம் செய்வித்தார். பின்னர் மணமக்கள் பார்வதி பரமேஸ்வராக மீனவர்களுக்குக் காட்சியளித்தனர். இதனைக் கண்ட பரதவனுக்கும் அவன் மனைவிக்கும் மோட்சத்தைக் கொடுத்து கைலைக்கு அனுப்பினார் இறைவன். சுறா மீனாக இருந்த நந்திதேவரும் சுயரூபம் பெற்று கையிலையை அடைந்தார். இறைவனார் சொக்கநாதராக மாறி மீனாட்சி அம்மனுடன் மதுரையம்பதியில் இனிது வீற்றிருந்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

நாம் செய்யும் செயலில் கவனக் குறைவாக இருந்தால் அது துன்பத்தை விளைவிக்கும் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 480

கேள்வி: தைராய்டு மற்றும் வறட்டு இருமலுக்கு மருந்து அருள வேண்டும்:

இறைவனின் கருணையால் இதுபோல் கூறவருவது யாதென்றால் கசப்பும் துவர்ப்புமான உணவுப் பொருள்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் இரண்டு பிரச்சினைகளும் சமமாகும். அதைவிட மருந்தை ஏற்பதைவிட முறையான சுவாசப் பயிற்சியை உடற்பயிற்சியை கற்றுக் கொண்டு செய்வதும் முறையான யோகாசனங்களை சூரிய நமஸ்காரத்தை செய்வதுமாக இருந்தால் இந்த சுரப்பி மட்டுமல்லாமல் அனைத்து சுரப்பிகளுமே சீர்படும்.