கிருஷ்ண பக்தை அம்மாளு அம்மாள்

அம்மாளு என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் கும்பகோணத்தில் 1906ல் அவள் பிறந்தாள். அந்த கால வழக்கப்படி சிறு வயதிலேயே அவளுக்கு திருமணம் நடந்தது. திருமணம் என்றால் என்ன என்றே தெரியாத நிலையில் கணவன் மரணம் அடைந்ததால் அவள் சிறு வயதிலேயே விதவையாகி விட்டாள். சமூகத்தில் ஒதுக்கப்பட்டு பெண் உருவத்தில் சிதைக்கப்பட்டு உள்ளத்தில் நொறுக்கப்பட்டு சமூகத்தில் அபசகுனமாக வெறுக்கப்பட்டு சபிக்கப்பட்ட ஒரு ஜீவனாக பசியிலும் அவமானத்திலும் வளர்ந்து வாழ்ந்தாள். நரசிம்மனிடம் நாராயணனிடம் கிருஷ்ணனிடம் அவள் கொண்ட பக்தி ஒன்றே அவளை உயிர் வாழச் செய்தது. நாட்கள் செல்ல செல்ல இந்த சமூகம் எனும் கொடிய உலக நரகத்திலிருந்து விடுதலை பெற தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தாள். பக்கத்தில் ஒரு ஆழமான குளம். கண்களை மூடி ஒருநாள் பகவானே என்னை ஏற்றுக் கொள் என்று குதிக்கும் போது நில் என்று ஒரு குரல் தடுத்தது கண் விழித்தாள்.

உக்கிரமான நரசிம்மர் அவள் எதிரே சாந்த ஸ்வரூபமாக நின்றார். எதற்காக இந்த தற்கொலை முயற்சி உனக்கு. உனக்கு கடைசி நிமிடம் வரை உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க நிழலும் கிடைக்க போகிறதே என்றார் நரசிம்மர். அம்மாளு அவரை போற்றி வாழ்த்தி வணங்கினாள். பகவானே எனக்கு ஒரு வரம் தா என்றாள். என்ன வேண்டும் கேள் அம்மாளு என்றார். எனக்கு பசியே இருக்கக் கூடாது என்றாள். அம்மாளு இனி உனக்கு பசி என்றால் என்ன என்றே தெரியாது என்று நரசிம்மர் வரமளித்ததார். அன்று முதல் ஒரு நாளைக்கு ஒரு முறை ஒரு டம்பளர் மோர் பால் ஏதாவது ஒரு பழம் என்று கடைசி வரை வாழ்ந்த அம்மாளு அம்மாள் உணவை தொடவில்லை. ஏகாதசி அன்று அதுவும் கிடையாது. உற்சாகத்தோடு இருந்தாள். தினந்தோறும் கிருஷ்ண பஜனையில் தன்னை மறந்த நிலையில் ஈடுபட்டாள். அவளுக்கு குருவாக இருந்த ராமச்சந்திர தீர்த்தர் பலவற்றை கற்றுக் கொடுத்தார். இளம் விதைவையாக வாழ்ந்த அம்மாளுக்கு ஒரு நாள் பாண்டுரங்கன் கனவில் உத்தரவிட்டான். நீ பண்டரிபுரம் வா என்றான் பண்டரிநாதன்.

இந்த குரல் அவளை பொழுது விடிந்ததும் பண்டரிபுரம் போக வைத்தது. எப்படி தனியாக போவது என்று அவளது அம்மாவை நீயும் என் கூட வா என்று கூப்பிட்டாள். அம்மா வரவில்லை. தனியாக கட்டிய துணியோடும் தம்புராவோடும் பண்டரிபுரம் சென்றவள் பல வருடங்கள் அங்கேயே தங்கி விட்டாள். கோவிலை அலம்பினாள் பெருக்கினாள் கோலமிட்டாள் மலர்கள் பறித்து மாலை தொடுத்து இறைவனுக்கு சூட்டினாள் பாடினாள் நிறைய பட்சணங்கள் உணவு வகைகள் சமைத்து பாண்டுரங்கனுக்கு திருப்தியோடு அர்பணித்தாள். எல்லோருக்கும் அவற்றை பிரசாதமாக விநியோகித்தாள். ஆனால் அவைகளில் ஒரு துளியும் அவள் உட்கொள்ளவில்லை. அந்த ஊர் ராணி அம்மாளுவின் பூஜைக்காக வெள்ளி தங்க பாத்திரங்கள் நிறைய கொடுத்தாள். கண்ணில் கண்டவர்களுக்கு எல்லாம் அவற்றை அப்படியே விநியோகம் செய்து விட்டாள் அம்மாளு அம்மாள். பணத்தை தொட்டதே இல்லை. கீர்த்தனங்களை சாதாரணமாக அவள் பாடினாள். எந்த கோவிலுக்கு சென்றாலும் அந்த கோவிலின் பெருமைகளை அப்படியே அவள் பாடலில் பாடினாள். அவள் அந்த கோவில்களுக்கு அதற்கு முன் சென்றதில்லை ஒன்றுமே தெரியாது என்றாலும் இந்த அதிசயம் பல கோவில்களில் நடந்திருக்கிறது.

மகா பெரியவா கும்பகோணத்தில் தங்கி இருந்த போது ஒருநாள் ஒருவர் தன் பெண்ணுக்கு திருமணம் பெரியவா ஆசீர்வாதம் ஆசி பெற வந்திருக்கிறேன் என்கிறார். என்கிட்டே எதுக்கு வந்திருக்கே. மரத்தடியில் ஒரு நித்ய உபவாசி இருக்காளே அவா கிட்டே போய் ஆசிர்வாதம் வாங்கிக்கோ. உனக்கு சர்வ மங்களமும் சித்திக்கும். வேண்டிக் கொண்ட எண்ணங்களும் நிறைவேறும் என்றார். மகாபெரியவா இவ்வாறு அம்மாளு அம்மாளின் பெருமைகளை எல்லோருக்கும் அறிவித்ததற்கு பிறகு நிறைய பக்தர்கள் அம்மாளுவை சூழ்ந்து கொண்டார்கள். மகாபெரியவா ஒரு தடவை அம்மாளு அம்மாள் புரந்தர தாசர் அம்சம் என்று கூறினார். பாகவத தர்மத்தின் உதாரணமாக நித்ய பஜனை ஆடல் பாடல் என்று அவள் வாழ்க்கை பூரணமாக கடந்தது. ஒரு பெரியவர் மரணத் தருவாயில் இருக்கும் போது உறவினர்கள் அம்மாளுவை அவரிடம் அழைத்து போனார்கள். அவரைப் பார்த்ததும் அவர் உயிர் பிரிந்து போவது தெரிந்தது. உடனே அம்மாளு தன்னை மறந்த நிலையில் கண்களை மூடி பாடினாள். அவரது உயிரை ராம நாமம் தூக்கி செல்வது அவளுக்கு தெரிந்தது. அதை பாடினாள். அருகே இருந்த உறவினர்களுக்கு அந்த மனிதர் ராம நாமம் உபதேசம் பெற்று ஜபித்து வந்தவர் என்பதே தெரியாது. பிறகு தான் தெரிந்தது.

ஒரு சமயம் சென்னை ஜார்ஜ் டவுனில் நாராயண முதலி தெருவில் நாராயண செட்டி சத்திரத்தில் அம்மாளு தங்கியிருந்தார். அப்போது சென்னையில் பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதிலே பங்கேற்ற நாட்டியக் கலைஞர்கள் கோபிநாத் மற்றும் தங்கமணி தம் குழுவினருடன் இரவு நேரக் கலை நிகழ்ச்சியை முடித்து விட்டு அம்மாளு தங்கியிருந்த சத்திரத்தின் மேல் தளத்திற்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியைத் தாண்டிய நிலையில் சற்றே கண்ணயரும் நிலையில் கீழே தாள சப்தமும் நர்த்தனம் ஆடும் சப்தமும் கேட்டதும் இந்த நேரத்தில் யார் ஆடுவார்? பிரமையோ என்று நினைத்தார்கள். மீண்டும் மீண்டும் இன்னமும் சப்தம் அதிகரிக்க நாட்டியக் கலைஞர்கள் கீழே வந்து பார்த்த போது அம்மாளு அம்மாள் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தார். உடனே தாளத்தை வாங்கி நாட்டியத்தில் அனுபவம் மிக்க கலைஞர்கள் தாளம் போட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்களை மறந்து நாட்டியத்தில் லயித்தனர். கேதார ராகத்தில் பாலக் கடல சய்யா எனும் கீர்த்தனம் பிறந்தது. எல்லாம் முடிந்ததும் நாட்டியக் கலைஞர்கள் அம்மாளு அம்மாவை வணங்கி சில ஜதிகள் நாட்டிய சாஸ்திரம் நன்கு கற்றவர்களாலேயே ஆட முடியாது. அதைப் போன்ற எவராலும் சாதாரணமாக ஆட முடி யாத தெய்வீக நர்த்தனத்தை இன்று கண்டோம். இது யாரிடமும் பயின்று வருவதல்ல யாராலும் பயிற்றுவிக்க முடியாததும் கூட என்று கூறி பிரமித்து நின்றனர். இன்று இதைக் கண்டது நாங்கள் செய்த பேறு என உணர்ச்சி வசப்பட்டனர். இவள் புரந்தரதாஸரின் அவதாரம் என்று ஒருமனதாக புகழ்ந்து போற்றி வணங்கினார்கள்.

மதுராபுரி ஆஸ்ரமத்தில் 2002 இல் அம்மாளுக்கு 94 வயதில் நேரிலேயே கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் தரிசனம் கிடைத்தது. அந்த கணமே நாக்கு கால மூர்தியு நீனே நீ தானே நாலு கால மூர்த்தி என பாடினாள். அந்த நாலு கால மூர்த்திகள் யார்? விடியற்காலையில் ஸ்ரீமந் நாராயணன் காலை முடியும் நேரம் ஸ்ரீ ராமன் அந்தி நேரத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மன் இரவில் ஸ்ரீ வேணுகோபாலன். கடைசி காலங்களை கும்பகோணத்தில் கழித்தாள். வயதானாலும் கிருஷ்ணனை தூங்கப் பண்ணி எழுப்பி குளிப்பாட்டி சிங்காரித்து ஆடைகள் அணிவித்து பாடி உணவு சமைத்து நிவேதித்து தாயாக பாண்டுரங்கனுக்கு சேவை செய்தவள் அம்மாளு அம்மாள். ஒரு நாள் தன்னுடைய இறுதிக் காலம் நெருங்கியதை உணர்ந்த அம்மாளு பாடிக் கொண்டிருக்கும் போது அதில் வைகுண்டம் எப்படி இருக்கும் என விவரித்து பாடினாள். பங்குனி உத்தரம் நாளில் கௌரி சிவனை அடைந்தாள். சீதை ராமனை அடைந்தாள். ஆண்டாள் பரமனை அடைந்தாள். அதுபோல் அம்மாளு அம்மாள் 104 வயது வாழ்ந்து 2010 பங்குனி உத்திரம் அன்று சித்தி அடைந்தாள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 377

கேள்வி: போக மகரிஷியின் தொடர்பு கிடைக்க என்ன செய்யவேண்டும்? அதற்கு ஆசி கூறுங்கள்:

இறைவனின் அருளைக்கொண்டு இன்னவனின் முன் இரு வினாக்களுக்கு பின்னொரு தருணம் இன்னவன் எம்முன்னே அமரும் தருணம் யாங்கள் வாக்குகளை பரவலாகக் கூறுகின்ற தருணம் இயம்பிடுவோம். அதே தருணம் போகன் என்று இல்லை. எந்த மகானுடன் மனிதன் தொடர்பு கொள்ள வேண்டும். எந்த சித்தர்களுடன் மனிதன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் முதலில் மனிதன் தன்னிடம் உள்ள அனைத்து தீய பழக்க வழக்கங்களையும் குணங்களையும் விட்டுவிட்டு இன்னும் கூறப் போனால் பல மனிதர்களிடம் தன்னிடம் இன்ன இன்ன வேண்டாத குணங்கள் இருக்கின்றன என்று கூட புரிந்து கொள்ள முடியாமல் வாழ்கிறார்கள். அவற்றையெல்லாம் சுய ஆய்வு செய்து மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இன்னொருபுறம் எந்த சித்தனோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று மனிதன் எண்ணுகிறானோ அந்த சித்தனின் நாமத்தை அடிக்கடி ஆழ்மனதிலே சொல்லிக் கொண்டு இருப்பதும் குறிப்பாக முன் பிரம்ம முகூர்த்தத்திலே எழுந்து வடகிழக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து ஓர் முக சிந்தனையோடு அந்த சித்தனின் நாமாவளியை மனதிற்குள் உருவேற்ற உருவேற்ற சித்தர்களின் தொடர்பு என்பது மிக எளிதாகும். ஆனால் சிக்கல் எங்கே உருவாகிறது? என்றால் சித்தர்களோடு எனக்கு தொடர்பு இருக்கிறது.

சித்தர்கள் என்னோடு பேசுகிறார்கள் அல்லது நான் சித்தர்களை தரிசனம் செய்திருக்கிறேன் என்பது ஒரு மனிதனை பொறுத்தவரை அந்தரங்கமாக இருக்கும் வரையில் பிரச்சினை இல்லை. அதனை பலரும் நம்பவேண்டும் என்று அவன் முயற்சி செய்யும் பொழுதுதான் சிக்கல் உருவாகிறது. எனவே இதனை அவன் தனித்தன்மையோடு வைத்துக் கொண்டு இந்தவிதமான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இதோடு பெருவாரியான தொண்டுகளையும் தேக வழி தொண்டுகளையும் பொருள் வழி தொண்டுகளையும் செய்து கொண்டே இருந்தால் கட்டாயம் சித்தர்களின் தொடர்பு எல்லா மனிதர்களுக்குமே எளிதாகக் கிட்டும்.

தாமரை லிங்கம் சோமநாதர்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர் என்ற சிறு கிராமம் உள்ளது. இந்த ஊரில் அருள்மிகு சோமநாதர் திருக்கோவில் உள்ளது. புராணபெயர் சதூர்வேதி மங்கலம் பெருமூள்ளுர் பேரூர். மூலவர் ஸ்ரீசோமநாதர். சதுர வடிவ பீடத்தில் சுயம்பு லிங்க பாணத்துடன் இறைவன் அருளுகின்றார். அம்பாள் சுந்தராம்பிகை குந்தளாம்பிகை. நின்ற கோலத்தில் அருள் காட்சி கொடுக்கின்றாள். தலவிருட்சம் செந்தாமரை கொடி. தீர்த்தம் லட்சுமி தீர்த்தம்.

இக்கோயில் அருகில் உள்ள லட்சுமி தீர்த்தமானது சிவனது தலையிலிருந்து  விழுந்த கங்கையிலிருந்து தோன்றியது ஆகும். இந்த லட்சுமி தீர்த்தத்திலிருந்து தோன்றிய தாமரைத் தண்டிலிருந்து உருவானது தான் இத்தல லிங்கமாகும். ஸ்ரீதிரிபுவன சித்தர் என்பவர் ஓர் அரிய தவத்தை மேற்கொண்டார். பூலோகம் புவர்லோகம் சுவர்லோகம் என்ற மூன்று லோகங்களிலும் அரிய ஒரு தெய்வீகத் தாமரைப் புஷ்பத்தை தன் தவத்தினால் லிங்கமாக உருவாக்கி வழிபட எண்ணம் கொண்டார். தன் எண்ணத்தின் படி பூலோகத்தில் இக்கோவிலின் தீர்த்தத்தில் இருந்து எடுத்த தாமரை மலரை தன் தவ வலிமையால் லிங்கமாக உருவாக்கி பிரதிஸ்டை செய்து வழிபட்டார். பாணலிங்கமே தாமரைத் தண்டினால் வடிக்கப்பெற்ற இத்தகைய அபூர்வமான சிவலிங்கத்தைப்போல் வேறு எங்கும் காண இயலாது.

கிழக்கு நோக்கிய திருவாயில். விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் நவக்கிரகம் பைரவர் சுப்பிரமணியன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. மூலவர் விமானம் அர்த்த மண்டபம் மகா மண்டபம் ஆகியவற்றுடன் திருக்கோயில் விளங்குகின்றது. மகாமண்டபத் தூண்களில் அழகிய கலை வேலைப்பாடும் புராணக்கதைகளை விளக்கும் சிற்பக்காட்சிகளும் விளங்குகின்றன.

தசரத மகாராஜா குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் தொடங்கும் முன் மாபெரும் சோம யாகம் நடத்த எண்ணி தக்க இடத்தை தேர்ந்தெடுக்கு மாறு குலகுருவான வசிஷ்டர் மகரிஷியை வேண்டியுள்ளார். சோம யாகத்திற்கு பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தில் அவ்வாண்டு வசிஷ்டர் குறித்த தேதியில் வேறு ஒரு சோம யாகத்தை நிகழ்த்த அவ்வூர் மக்கள் நிச்சயித்து இருந்தனர். அத்தேதியில் செய்யாவிடில் அதற்கு அடுத்த சரியான தேதி மூன்று ஆண்டு கழித்து வருவதால் தசரத மகாராஜா அம்பர் மாகாளத்திற்கு ஈடான திருத்தலத்தை பெற்றுத் தருமாறு வசிஷ்டரை வேண்டியுள்ளார். வசிஷ்டர் கைலாயம் சென்று அகத்தியரை நாடி விளக்கம் வேண்டினார். திரிபுவன சித்தர் தவ செய்த இடமான பெருமகளூரே  பூலோகம் பூவர்லோகம் சுவர்லோகம் என்ற மூன்று லோகங்களும் சோம யாகம் செய்ய சிறந்த இடமாகும். அத்துடன் அம்பர் மாகாளத்திற்கு ஈடான சிவதலமாகும். மேலும் இங்குள்ள மூலவர் இந்த யுகத்திலிருந்து சோமநாதர் என்ற திருநாமத்தை தாங்கி அச்சிவலிங்க மூர்த்தியாக அருள்பாலிப்பார் என்று அகத்தியர் விளக்கம் தந்திட தசரத மகாராஜா இப்பெருமகளூர் சிவாலயத்தில் பெரும் சோம யாகத்தை இயற்றினார். சேதுகரை செல்லும் போது ராமன் இத்தலத்தை பூஜித்துள்ளார்.

பல யுகங்களாக இருந்த இந்த சிவலிங்கம் இந்த யுகத்தில் வெள்ளத்தின் காரணமாக குளத்திற்குள் மூழ்கியது. பிற்காலத்தில் இந்த குளத்தில் சோழ மன்னனின் யானை ஒன்று செந்தாமரையை பறிக்க முயன்ற போது குளம் முழுவதும் செந்நிறமாக மாறியிருந்தது. இதை அறிந்த மன்னன் பதறி வந்து பார்த்த போது தண்ணீருக்கு அடியில் சிவலிங்கம் இருப்பதை அறிந்தான். தான் தவறு செய்து விட்டதாக சோழ மன்னன் சிவலிங்கத்தை கட்டித் தழுவி தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளான். அவன் கட்டித் தழுவிய போது சிவலிங்கத்தின் மீது மன்னன் அணிந்து இருந்த முத்து வைரம் வைடூரிய நகைகளின் தடயம் பதிந்தது. இதற்கு அடையாளமாக இன்றும் கூட சிவலிங்க பானத்தின் மீது அடையாளங்கள் உள்ளன. இதை அடுத்து சிவலிங்கம் இருந்த இடத்தை தூர்த்து இந்த சோமநாதர் கோயிலை சோழ மன்னன் கட்டியுள்ளான். இக்கோவிலை பாண்டியர்களும் திருப்பணி செய்துள்ளனர்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 376

கிருஷ்ணனின் பால்ய நண்பரான குசேலர் அக்ஷய திருதியை அன்று அவல் முடிப்பை தந்து திருவருள் பெற்றது அனைவருக்கும் நியாபகம் வந்து இருக்கும்.

அதுபோல் வறுமையில் வாடினாரே குசேலன் அவர் கிருஷ்ண பரமாத்மாவை பார்க்க செல்கிறார். எப்படி செல்கிறார்? பல நாள் பட்டினியால் வாடிய வயிறு தேகம் இளைத்து இருக்கிறது. களைத்து இருக்கிறது. உச்சி கதிரவன் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார். அன்றோ அக்னி நட்சத்திரம் தகித்து கொண்டிருக்கிறது. பாதை ஓரங்களில் நல்ல நிழல் தரும் விருட்சங்கள் இருக்கின்றன. ஆனால் குசேலர் ஓரமாக செல்லாமல் தன் பாதங்கள் புண்பட கடும் வெயிலில் நடந்து செல்கிறார். ஒருவர் கேட்கிறார் குசேலரிடம் அப்பனே உன் உடலோ வறுமையால் வாடியிருக்கிறது. உன் உள்ளமோ வேதனையில் ஆழ்ந்திருப்பது தெரிகிறது. இந்த நிலையிலும் உன் உடலை சூரிய ஒளியில் நடந்து ஏன் வாட்டுகிறாய்? அதுதான் சாலை ஓரங்களில் நிறைய விருட்சங்களை மன்னர்கள் வைத்திருக்கிறார்களே? எல்லோரும் அப்படித்தானே செல்கிறார்கள். நீயும் அதில் இளைப்பாறி ஓரமாகவே செல்லலாமே? என்று கேட்கிறார். உண்மைதான் பெரியவரே அப்படியே நடந்து செல்லலாம். என் உடலும் களைப்பில்லாமல் இருக்கும். ஆனால் இந்த அனல் தாங்காமல் சிறிய சிறிய உயிரினங்கள் எல்லாம் அந்த மரங்களின் அடியில் இருக்கும். என் கண்ணுக்குத் தெரியாமல் அவை அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் நான் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த உயிரினங்களின் வாழ்க்கையை முடித்து விடக்கூடாதல்லவா நான் நடக்க நடக்க என் பாதங்கள் பட்டு அந்த உயிரினங்கள் எல்லாம் இறந்து விடக்கூடாதல்லவா? கட்டாயம் இந்த கடும் வெயிலில் எந்த உயிரினமும் இராது. எனவேதான் நான் பயமின்றி எந்த பாவமும் சேர்ந்து விடுமோ? என்ற அச்சமும் இன்றி நடந்து செல்கிறேன் என்று நடந்து செல்கிறார்.

உடனே நமது மனது சிந்திக்கும் இது சாத்தியமா? இப்படி நடந்து கொள்ள முடியுமா என்று. காலையிலிருந்து எங்கள் பிரச்சினைகளே பெரிதாக இருக்க எறும்பு எங்கே இருக்கிறது? சிறிய பூச்சி எங்கே இருக்கிறது? பாதங்களில் என்ன மிதிபடுகிறது? என்றெல்லாம் பார்க்க முடியுமா முடியாதுதான் ஒத்துக் கொள்கிறோம். அதற்குதான் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் என்று புண்ணியத்தின் பலனை அதிகரித்துக் கொண்டால் இந்த புண்ணியத்திலிருந்து சில பகுதிகளை எடுத்து அப்படி புண்ணியவானின் பாதங்கள் பட்டு இறந்து போன உயிர்களுக்கு இறைவன் மோட்சத்தை தந்துவிடுவார். வேறு வழியில்லாமல் தவிர்க்க முடியாமல் உயிர்க் கொலை செய்யக் கூடிய நிலை வந்து விட்டால் அந்த உயிர்களுக்கு யார் அப்படி செய்தார்களோ அவர்களின் கணக்கிலிருந்து புண்ணியத்தை எடுத்து அந்த உயிர்கள் நன்றாக இருப்பதற்குண்டான ஒரு சூழலை தருகிறார். இல்லையென்றால் மனித பிறப்பைத் தருகிறார். இல்லையென்றால் மாண்பாக வாழக்கூடிய ஒரு பிறப்பைத் தருகிறார்.

இன்னும் சில சூட்சுமங்கள் இருக்கிறது. இருக்கின்ற தனத்தையெல்லாம் புண்ணியம் என்று தர்மம் செய்து விட்டால் தாரம் பிள்ளைகள் சும்மா இருப்பார்களா? என்றெல்லாம் வறட்டு வாதமும் வீண் விவாதமும் செய்தால் நல்ல பலன்களை இழக்கப் போவது மனிதன்தான். புண்ணியத்தை முறையாக சேர்த்திருந்தால் எதற்கப்பா மருத்துவ சிகிச்சை வருகிறது? மருத்துவ சிகிச்சை வருகிறது என்றாலே செய்த புண்ணியங்கள் போதவில்லை இன்னும் பாவங்கள் இருக்கிறதுதான் என்று பொருள். வீண் விரயங்கள் ஒரு மனிதனுக்கு ஏன் வருகிறது? என்றால் விதி அவன் கணக்கிலிருந்து எத்தனை தனத்தைப் பிடுங்க வேண்டும் என்று இருக்கிறதோ அத்தனை தனத்தை பிடுங்கித்தான் ஆகவேண்டும். தனத்தை இறுக்கிப்பிடிக்கின்ற மனிதனிடமிருந்து விதி தனத்தை பிடுங்குகின்ற விதமே வேறு. தவறான மனிதர்கள் மூலம் அவனிடம் உள்ள செல்வத்தை மறைமுகமாகப் பிடுங்கிக் கொள்ளும். மனமார ஒருவனுக்கு உதவி செய்தால் மனதிற்கும் ஆறுதல் புண்ணியத்திற்கும் புண்ணியம். அப்படி செய்ய இயலாதவர்கள் தர்மத்தை மறந்தவர்கள் அல்லது தர்மத்தை மறுத்தவர்கள் பிறருக்கு உதவி செய்தால் அவன் சோம்பேறியாக மாறிவிடுவான். ஒரு சோம்பேறிக் கூட்டத்தை எதற்கு நாம் உருவாக்க வேண்டும்? என்றெல்லாம் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்பவர்கள் எல்லாம் இப்படித்தான். சோம்பேறி கூட்டம் உருவாகினாலும் பாதகமில்லை. ஒரு திருட்டுக் கூட்டத்தையே இவர்கள் எல்லாம் உருவாக்கி விடுவார்கள்.

ஒரு வளமான மனிதனை சுற்றி பல வறுமையான மனிதர்கள் இருந்தால் அவர்களின் குறைந்த பட்ச தேவைகளை அந்த வளமான மனிதன் நிறைவேற்றா விட்டால் எதாவது ஒரு காலகட்டத்தில் அந்த வறுமையான கூட்டம் அந்த வளமான மனிதனைத் தாக்கத்தான் செய்யும். இது மனித இனத்தின் மாற்ற முடியாத விதியாகும். ஆகுமே இரைந்து கேட்கும் போது தராத மனிதன் அடித்துக் கேட்டால்தான் தருவான் என்ற நிலை வந்துவிட்டால் அவன் அடிக்கத்தான் செய்வான். அவன் அடிக்கிறானே அவன் தவறு செய்கிறானே என்று வருத்தப்படுவதை விட அவனை ஏன் இந்த நிலைக்கு ஆளாக்கினோம்? என்று இந்த சமுதாயமும் ஒட்டு மொத்த மனித சமூகமும் சிந்திக்க வேண்டும். இந்த உலகில் உள்ள அனைவருமே இறைவனின் பிள்ளைகள். ஒரு பிள்ளைக்கு அதிக செல்வத்தை கொடுத்ததின் காரணம் மற்ற பிள்ளைகள் வறுமையில் வாடும்பொழுது கொடுத்து உதவுகிறானா? என்று சோதித்து பார்க்கத்தான். ஒருக்கால் அவன் உதவவில்லை என்றால் பிறகு அவன் மீண்டும் பிறவி எடுக்கும் போது வறுமையில்தான் வாட வேண்டும். இத்தனைக்கும் நடுவிலே சிலர் மட்டும் செல்வ செழிப்பிலே இருப்பதன் காரணம் என்ன தெரியுமா? தர்மம் செய்ததால்தான். ஆனால் ஒன்று. தர்மம் செய்து அப்படி செல்வத்தை பெற்ற பிறகு மாயையால் இந்த செல்வத்தை மீண்டும் புண்ணியமாக மாற்ற வேண்டும் என்ற கருத்து உதிக்கவில்லை என்றால் இந்தப் பிறவியில் மட்டும் செல்வம் இருக்கும் நிலை ஏற்படும்.

குசேலர் உயர்ந்த பண்புடனும் தர்ம சிந்தனையுடன் நடந்த பொழுது வறுமை அவரை வாட்டிய பொழுது கிருஷ்ண பரமாத்மாவின் கருணையினால் வறுமை நீங்கி வளமை வந்தது. ஒரு மாபெரும் சக்ரவர்த்திக்கு ஈடான செல்வம் அவரிடம் சேர்ந்தது. வறுமையில் இருந்த போது அவர்கள் சிறப்பாக வாழ்ந்தார்கள். செம்மையாக வாழ்ந்தார்கள். நேர்மையை தர்மத்தை கடை பிடித்தார்கள். தாம் பட்டினியாகக் கிடந்தாலும் வருகின்ற அதிதிக்கு உணவு தந்தார்கள். செல்வம் செல்வம் செல்வம் ருணம் ருணம் ருணம் என்றெல்லாம் எம்முன்னே அரட்டுகிறீர்களே? எளிய வழி மகாலட்சுமியை வணங்குங்கள் வணங்காமல் இருங்கள். புண்ணியம் வரும் என்ற எண்ணமில்லாமல் தர்மத்தை செய்து கொண்டே இருக்க வேண்டும். யாருக்கெல்லாம் தேவைகள் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் நேரிய வழியில் பொருளை ஈட்டி தந்து கொண்டே செல்லுங்கள். செல்வம் உங்கள் பின்னால் வந்து கொண்டே இருக்கும். இதனை சோதனை மார்க்கமாக செய்து விட்டு பிறகு தர்மம் செய்யலாமா? வேண்டாமா? என்ற முடிவிற்குக்கூட நீங்கள் வரலாம். ஏனென்றால் வழக்கம் போல் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு பிறவியிலும் செல்வந்தர்கள் குறைவு வறுமையாளர்கள் அதிகம். காரணம் செல்வந்தர்கள் தாராளமாக தர்மம் செய்வதில்லை. தாராளமாக தர்மம் செய்தவர்கள் செல்வத்தையெல்லாம் இழந்து வறுமையில் வீழ்ந்தாலும் இறைவன் அவர்களைக் கைவிடுவதில்லை. அப்படியொரு விதியிருந்தாலும்கூட பாதகமில்லை. கொடுத்து கொடுத்து வறுமை வந்தால் அதுதான் உச்சக்கட்ட வளமை. கொடுத்ததால் ஒருவன் வறுமைக்கு வந்துவிட்டான் என்றால் அவன் இறைக்கு பக்கத்தில் இருக்கிறான் என்று பொருள் ஆகும். எனவே இந்த கருத்தை மனதிலே வைத்து இனி வருகின்ற ஒவ்வொரு கணத்திலும் தேடித் தேடி உதவி செய்வதை லட்சியமாகக் கொண்டு விட்டால் அவர்களுக்கு எம் அருளாசி என்றும் தொடரும். சுபம்.

வஜ்ராயுதம்

ததீசி முனிவர் வேத காலத்தைச் சார்ந்தவர். இவர் பெரிய சிவபக்தர். இவருடைய பெற்றோர் அதர்வண முனிவர் சிட்டி தேவி ஆவர். இவருடைய தந்தையே அதர்வண வேதத்தை உருவாக்கியவர் என்று கருதப்படுகிறார். ததீசி முனிவரின் மனைவி சுவர்ச்சா ஆவார். இவர் ஒரு சமயம் அரசன் ஒருவனுடன் கருத்து வேறுபாடு கொண்டார். இதனால் முனிவருக்கும் அரசனுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. சண்டையின் முடிவில் ஏராளமான காயங்கள் முனிவருக்கு உண்டானது. ததீசி முனிவரும் சுக்ராச்சாரியாரின் உதவியால் காயங்கள் நீங்கப் பெற்றார். பின் சுக்ராசாரியார் ததீசி முனிவருக்கு ம்ருத்யுஞ்ச சஞ்சீனி மந்திரத்தை போதித்தார். மந்திர உபதேசத்தின் பலனாக முனிவரின் உடல் மின்னல் போன்று வலிமை மிக்கதாக மாறியது. பின் முனிவர் அரசனுடன் ஏற்பட்ட சண்டைக்காக மனம் வருந்தி சிவனை நோக்கி தவம் இருந்தார். இறுதியில் சிவபெருமான் முனிவருக்கு காட்சி தந்தார். பின் முனிவரை எவரும் துன்புறுத்த முடியாது. எவரும் முனிவரைக் கொல்ல முடியாது. முனிவரின் உடல் மற்றும் எலும்புகள் வஜ்ரம் (மின்னல்) போன்று உறுதியானவையாக இருக்கும் என வரங்களை வழங்கினார். பின் ததீசி முனிவரும் காட்டில் தவ வாழ்க்கையை மேற்கொண்டார்.

அப்பொழுது பாற்கடலில் அமுதம் கடைவதற்காக தேவர்களும் அசுரர்களும் முடிவு மேற்கொண்டனர். தேவர்களும் தங்களின் ஆயுதங்கள் தீய சக்திகளிடம் சிக்காமல் இருக்க என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தேவரிஷி நாரதர் தேவர்கள் தங்களின் ஆயுதங்களைப் ததீசி முனிவரிடம் கொடுத்து பாதுகாக்க சொல்வதே சிறந்தது என்று கூறினார். தேவர்களும் தங்களின் ஆயுதங்களை ததீசியிடம் கொடுத்து நாங்கள் திரும்பி வந்து கேட்கும் வரை ஆயுதங்களை பாதுகாக்க வைத்திருங்கள் என்று கூறினர். முனிவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து ஆயுதங்களை தன்வசம் வைத்துக் கொண்டார். பாற்கடலை கடைந்த பின்பு வந்த அமிர்தத்தை தேவர்கள் பருகி சீரஞ்சீவி ஆயினர். தங்களின் ஆயுதங்கள் குறித்து மறந்து போயினர். ததீசி முனிவரும் தேவர்களிடம் அவர்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தார் நாட்கள் நகர்ந்தன. தேவர்கள் திரும்பி வரவில்லை. ததீசி முனிவரும் தேவர்களின் ஆயுதங்களை பாதுகாக்க முடியாமல் தனது தவ வலிமையால் அவற்றை திரவமாக்கி குடித்து விட்டார். தேவ ஆயுதங்களின் சக்தி முழுவதும் முனிவரின் முதுகெலும்பில் போய் சேர்ந்தது.

சிலகாலம் சென்ற பின்பு விருத்தாசுரன் என்ற அசுரன் பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். அவனுடைய தவத்தினைப் பாராட்டி பிரம்மதேவர் அவர் முன் தோன்றினார். அவரிடம் இருந்து அசுரன் எனக்கு உலகின் உலோகம் மற்றும் மரத்தால் ஆன ஆயுதத்தாலோ பஞ்சபூதத்தாலும் எந்த உயிரிகளாலும் ஆபத்து ஏற்படக் கூடாது என்ற வரம் வேண்டும் என்று கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அருளினார். வரத்தின் காரணமாக ஆவணம் தலைக்கேற உலக உயிர்களை விருத்தாசுரன் துன்புறுத்தினான். எந்த ஆயுதத்தாலும் அசுரனை கொல்ல இயலாது என்பதை அறிந்த இந்திராதி தேவர்கள் மிகவும் கவலையுற்றனர். அவர்கள் சிவபெருமானிடம் விருத்தாசுரனின் அழிவிற்கு வழிகூறுமாறு வேண்டினர். சிவபெருமானும் உங்களின் பிரச்சினைக்கு ததீசி முனிவர் தீர்வு சொல்வார். நீங்கள் அவரைச் சந்தியுங்கள் என்றார். அதன்படி இந்திராதி தேவர்கள் முனிவரை சந்தித்து விருத்தாசுரன் பற்றியும் அவனுடைய வரத்தினைப் பற்றியும் தெரிவித்தனர். அனைத்தையும் கேட்ட முனிவர் தியானத்தில் நடக்கப் போவதை அறிந்து பின் தனது உடலில் உள்ள சக்தி ஊட்டம் பெற்ற முது கெழும்பை இந்திரனிடம் ஆயுதமாக உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு கூறி தன் உடலை விட்டார். முனிவரின் முதுகெலும்பு இந்திரனின் வலிமை மிக்க வஜ்ராயுதம் ஆயுதமாகவும் விளங்கியது.

பலசாலிகளான கருட பகவானும் அனுமனும் இந்திரனின் வஜ்ராயுதத்தால் ஒரு முறை தாக்கப்பட்டனர். இந்த ஆயுதத்தை பெருமைப்படுத்த எண்ணி ஆயுதத்தை எதிர்க்காமல் பணிந்து நின்றார்கள். இதன் விளைவாக கருட பகவான் தனது ஒரு சிறகினை இழந்தும் அனுமன் மூர்ச்சை அடைந்தும் இவ்வாயுதத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர். தற்போது இந்திய அரசின் உயரிய விருதான பரம் வீர் சக்ராவின் மேல் ததீசி முனிவரின் முதுகெலும்பு படம் வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 375

குருநாதர் அருளிய பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இறைவனின் துணையைக் கொண்டு இறைவனின் அளப்பரியாத அந்த ஆற்றலைக் கொண்டு இதுபோல் இயம்புகிறோம் சிலவாக்கு அன்பு செய்தல் நல்ல பண்பை வளர்த்தல் வேறு தப்பு குறும்பு செய்யாமல் இருப்பதே நல்ல பண்பு அப்பா. அன்பு என்பதின் விரிவாக்கமே பூஜையாகும். பூ செய்தல் அன்பு செய்தல் நல்ல பண்பு செய்தல் அதன் மூலம். மனிதன் தமக்குள் இருக்கின்ற அசுரத்தனங்களை விலங்கு குணங்களை விட்டொழிக்க தன்னைத்தான் மேம்படுத்திக் கொள்ள தன்னைத்தான் இன்னமும் பண்படுத்திக் கொள்ள இருக்கின்ற எத்தனையோ வழிமுறைகளில் பூஜையும் ஒன்று. ஆத்மார்த்தமாக அமர்ந்து நீக்கமற நிறைந்துள்ள இறைவனை ஏதாவது ஒரு வடிவத்தில் பிடித்து வைத்து அதற்குரிய மந்திரங்களை தொடர்ந்து உச்சரிக்கும் பொழுது மனம் திடமாகி மனமெங்கும் இறையாற்றல் இவன் எந்த வடிவத்தில் வணங்குகிறானோ அந்த வடிவத்தில் வியாபிக்கும். அப்படி வியாபிக்கின்ற இறை சக்தி இவன் என்ன எண்ணத்தோடு பூஜை செய்கிறானோ அந்த எண்ணத்திற்கு அவனை அழைத்து செல்கிறது. என்ன நோக்கத்தோடு பூஜை செய்யப்படுகிறதோ அந்த நோக்கம் சற்றும் பழுதற நிறைவேறுகிறது. எனவே ஒரு வகையில் பூஜை என்பது ஒவ்வொரு மனித மனமும் பண்பட உயர்வு பெற திடம் பெற மனதிலே எந்த குழப்பமும் இல்லாமல் அவன் கம்பீரமாக செயல்பட உதவக் கூடிய ஒருவகையான மனோதத்துவ சிகிச்சை என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் இதுபோல் பூஜையில் எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. பூஜையிலே புற சடங்குகள் விதவிதமானவை. அதிலே நடை வண்டிகள்தான் பூஜைகள் வழிபாடுகள். இது பிடிக்காமல் எடுத்த எடுப்பிலேயே நடக்கவேண்டும் என்றுதான் சிலர் தியானம் செய்கிறேன். தியானத்தில் எனக்கு அந்த காட்சி தெரிகிறது. இந்த காட்சி தெரிகிறது என்றெல்லாம் பேசி திரிகிறார்கள். இவையெல்லாம் வெறும் மாயா வார்த்தைகள். எம்முன்னே அமர்ந்து கூட நான் சித்தர்களைப் பார்த்தேன் தெய்வத்தை பார்த்தேன் அது பற்றி உங்கள் கருத்து என்ன குருதேவா? என்று கேட்கும் பொழுது பேதைத்தனமாக அவர்கள் கேட்கிறார்கள் என்று தெரிந்தும்கூட அவர்கள் மனம் மகிழ்ந்துவிட்டுப் போகட்டும் என்பதற்காக ஆமாமப்பா காட்சி தெரிந்தது யாம்தான் வந்தோம் என்று கூறி யாமும் மனிதர்களைப் போலவே பேசக் கற்றுக் கொண்டு விட்டோம்.

இந்த பூஜையை முறையாக செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்த பூஜையை எதற்கு முறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்? இந்த பூஜையிலே சோடசம் என்ற சொல் எதற்காக பயன்படுகிறது? எந்த அர்த்தத்தில் இந்த ஈரெட்டு என்பது பயன் படுத்தப்படுகிறது? பொதுவாக இந்த நிலவுலகிலே ஒரு மனிதனுக்கு தேவையான பேறுகள் 16. அந்த 16 பேற்றையும் ஒரு மனிதன் பெற வேண்டும். அப்போதுதான் அவன் பரிபூரணமான மனிதனாக கருதப்படுவான் இருக்கவும் முடியும். அந்த 16 வகை பேறுகளை தருவதே இந்த பூஜை. இந்த பூஜையின் உச்சகட்ட நிலையிலே விக்கிரக ஆராதனை செய்கின்ற ஒரு இல்லமாகவோ அதற்கு வாய்ப்புள்ள இடமாகவோ இருக்கும் பட்சத்திலே ஐம்பொன்னால் ஆன அன்னை மகாலட்சுமியின் திருவுருவத்தை நல்லதொரு பத்மாசனத்திலே இட்டு அற்புதமான முறையில் அபிஷேகம் செய்யும் பட்சத்திலே வாழை இலையிட்டு அதன் மீது அரிசியிட்டு அதன் மீது நவதானியமும் இட்டு அதன் மீது தேவலோக பொருளான வெற்றிலையை அழகாக இட்டு அதன் மீது வலம்புரி சங்கும் வைத்து அந்த வலம்புரி சங்கத்திலே தூய்மையான நீர் பால் போன்ற 16 வகையான திரவியங்களையும் வைத்து இந்த வலம்புரி சங்கத்தையும் 108 ஆக வைத்து எல்லா வகை பூர்த்திக்குப் பிறகு இந்த சங்கினை எடுத்து அன்னையின் திருவுருவிற்கு அபிஷேகம் செய்தால் அது அபூர்வமான பலனப்பா.

இதுபோல் செய்யும் பொழுது தரித்திரம் போகிறது. தன (செல்வம்) சிக்கல் போகிறது. அச்சமற்ற வாழ்க்கை முறையும் அவனுக்கு கிட்டுகிறது. அதோடு நன்றாக வார்த்தையை கவனிக்க வேண்டும் வலம்புரி சங்கே 108 வைக்க வேண்டும். விலை அதிகம் என்பதால் ஒரு வலம்புரி சங்கமும் ஏனையவை எல்லாம் இடம்புரி சங்காக வைக்கும் பழக்கம் பல இடங்களில் இன்று இருக்கிறது. இதை குற்றம் என்று நாங்கள் கூறவில்லை. மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணக் கூடியவர்களுக்கு அனைத்தும் வலம்புரியாக இருக்கவேண்டும். இந்த வலம்புரியை ஏன் குறிப்பிடுகிறோம் என்று தெரிகிறதா? ஒரு புராணக் கதையை நினைவூட்டுகிறோம் அப்பா.

திருப்பாற்கடலில் இருந்து என்னென்ன வந்தது? உச்சைசிரவஸ் காமதேனு கற்பக விருட்சம் வலம்புரி சங்கு. இவற்றிலே மகாலட்சுமி எங்கே சென்றார்? (மகாவிஷ்ணுவிடம் சென்றார்). ஏன் சென்றார்? (அவரிடம்தான் பாஞ்சஜன்யம் என்ற வலம்புரி சங்கு இருக்கிறது) அதனால்தான் மகாலட்சுமி பூஜையில் வலம்புரி சங்கு வைக்க வேண்டும் என்று கூறுகிறோம். எனவே முக்கண்ணனாகிய சிவ பெருமானுக்குத்தான் பொருத்தம் என்று எண்ணக் கூடாது. எந்த தெய்வமாக இருந்தாலும் வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்ய வேண்டும் இது ஒன்று. ஆனால் இதையே நாங்கள் வேறொரு வாக்கிலே சங்கு வைத்து பூஜை செய்வதைகூட நாங்கள் அசைவ பூஜை என்று கூறியிருக்கிறோம். அது தெரியுமா? ஏனென்றால் இயல்பாக உயிரை விட்ட சங்கு கடலிலே மிதக்கும். அவற்றை எடுத்து வந்துதான் சித்தர்களும் முனிவர்களும் பயன்படுத்துவார்கள். ஆனால் இயல்பாக ஒரு சங்கு எப்போது இறப்பது? அது எப்போது கிடைப்பது? என்று மீனவர்கள் வலை வீசும் போது உயிருள்ள சங்கும் சிக்கி விடுகிறது. அதை எடுத்து வந்து கொடிய திராவகத்திலே இட்டு அதை துடிக்க வைத்து கொன்று பிறகுதான் விற்கிறார்கள். எனவே தோஷமுள்ள சங்குகள்தான் இங்கு பெரும்பாலும் கிட்டுகிறது. இருந்தாலும் ஆத்மார்த்தமான பூஜையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பவர்களுக்கு வலம்புரி சங்கு என்பது தேடி வரும். அப்படி தேடி வருகின்ற வலம்புரி சங்கானது கட்டாயம் தூய்மையான சங்காகத்தான் இருக்கும். இருந்தாலும் அதன் பூர்வீகம் தெரியாததால் அது இங்கு வந்த பிறகு ஒரு மண்டலம் கங்கா ஜலம் கொண்டு அபிஷேகம் செய்வதும் ஒரு மண்டலம் பூர்த்தியடைந்த பிறகு சகல அபிஷேகமும் செய்து அதன் பிறகு அதனை பூஜைக்கு பயன்படுத்தினால் அந்த தோஷம் குறையும்.

108 இயலாத பொழுது ஒன்றையாவது வைத்து சிறப்பாக செய்யலாம். இது சிறப்பிலும் சிறப்பாக இருக்கும். இதுபோல் பூஜை செய்வதால் என்ன நன்மை ஏற்படும்? வெறும் செல்வம் என்று கருதக் கூடாது. இங்கே அறிவில் குறையுடையோர் பலருண்டு. எனவே அறிவு செல்வம் உண்டு. திருமணம் என்பதும் ஒருவகையான செல்வம்தான். திருமண தடை உள்ளவர்களுக்கு திருமண பாக்கியம் ஏற்படும். திருமணமாகி கருத்து வேறுபாடு இருப்பவர்களுக்கு இந்த பூஜை உதவும். குழந்தை பாக்கியம் உண்டு. இந்த நிலவுலகில் மனிதனாக பிறவியெடுத்தவனுக்கு வேண்டிய சகலத்தையும் ஒருங்கே ஒருசேர தருகின்ற பூஜைகளில் தலையாய பூஜை இதுபோல் சோடச மகா அன்னை திரு பூஜையாகும்.

பத்துக் கரங்களில் ஆயுதமேந்தியபடி நடனமாடும் சிவன்

இரவனபாடி குடைவரைக் கோயில் ஐஹோளே கர்நாடக மாநிலத்தில் இந்த சிலை உள்ளது. வலது முன்கை மார்பை அணைத்தபடி இருக்க இடது முன்கை பக்கவாட்டில் விரிந்துள்ளது. உயரமான தலையலங்காரம் இடையில் மடிப்புடன் அமைந்த ஆடை அணிந்து சிவன் ஆடும் நடனத்தை பார்வதி கணபதி முருகன் (முகம் சிதைக்கப் பட்டுள்ளது) தேவலோகப் பெண்கள் மற்றும் சப்த_மாதர்கள் கண்டுகளிக்கிறார்கள். இங்கு சிவன் காட்டும் ஆடல் அந்தகாசுரனை அழித்த பின்பு வெற்றிக்களிப்புடன் ஆடும் நடனம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 374

கேள்வி: நடைமுறையில் புலன்களை எவ்வாறு வெல்வது ?

சட்டென்று விழி மூடி விழி திறப்பதற்குள் வென்று விடலாம் அல்லது கோடானு கோடி பிறவிகள் எடுத்தும் வெல்லலாம். நீ (முன்பு) கூறினாயே திண்ணியம் (உறுதி) அது மனிதன் மனதிலே வந்து விட்டால் உடனே கூட இது நடக்கலாம். எப்படியென்றால் காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே என்ற வாசகம் ஒரு பட்டினத்தானை இல்லறவாசியிலிருந்து துறவறம் ஆக்கிவிட்டது. ஆனால் அந்த வாசகம் எத்தனை பேரை அவ்வாறு துறவறம் ஆக்கும்? அந்த வாசகத்தின் பொருள் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் எல்லோராலும் சட்டென்று எல்லாவற்றையும் மனதளவிலே விட்டுவிட்டு வெளியே வரமுடிகிறதா? எனவே பற்றும் பாசமும் தீவிர ஆசையும் இருக்கும் வரையில் மனிதனால் புலன்களை வெல்லுவது என்பது கடினம். பற்றையும் பாசத்தையும் மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே வரவேண்டும். பற்றையும் விடுகிறேன் பாசத்தையும் விடுகிறேன் என்பதற்காக குடும்ப அங்கத்தினர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்யாமல் இருந்தால் அது ஒரு தோஷமாக மாறும் என்பதை மனிதர்கள் மறந்து விடக்கூடாது.

இதனை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் ஒரு மனிதன் ஒரு பணிபுரியும் இடத்திலே பணியாற்றுகிறான். அவனுக்கென்று சில பொருள்கள் அங்கே தரப்படுகின்றன. அமர்கின்ற ஆசனம், எழுதுகின்ற எழுது பலகை இன்னும் பல பல பல. அவனுக்கு நன்றாகத் தெரியும், இவையெல்லாம் நம் பொருள்கள் அல்ல. இந்த பணி புரியும் நிர்வாகத்திற்கு சொந்தமானது. இங்கே ( நான் ) பணியாற்றுவதற்காக இவையெல்லாம் ( எனக்கு ) கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தோடு அந்தப் பணி முடிந்தவுடன் அதனையெல்லாம் விட்டுவிட்டு இல்லம் திரும்புகிறானே? அதைப்போல இல்லமும் ஒரு பணிபுரியும் இடம். கர்மவினையால் இந்த பணிபுரியும் இடத்திற்கு வந்திருக்கிறோம். நம் வினைக்கு ஏற்ப உறவுகள் அமைந்திருக்கின்றன. இங்கே செய்யவேண்டிய பணிகளை செய்யவேண்டும். ஆனால் தீவிர பற்றையோ பாசத்தையோ வளர்த்துக் கொள்ளக் கூடாது என்ற அளவிலே மனதிலே எண்ணத்தை வளர்த்துக் கொண்டு அதனை முறையாக ஒரு பயிற்சியாக விதவிதமாக ஒரு மனிதன் கையாண்டு பார்க்க வேண்டும்.

இந்த உணவு இருந்தால்தான் என்னால் உயிர் வாழ முடியும். இந்த உணவுதான் என் நாவிற்கு பிடித்திருக்கிறது. இந்த பானம்தான் எனக்குத் தேவை. இந்த விதமான படுக்கைதான் எனக்குத் தேவை என்று எதையெல்லாம் ஒரு மனிதன் வேண்டும் வேண்டும் என்று எண்ணுகிறானோ அவையெல்லாம் இல்லாவிட்டால் என்ன? என்று ஒவ்வொரு முயற்சியாக செய்து பார்த்தால் கட்டாயம் எண்ணியது நிறைவேறும். ஆனாலும்கூட இதற்கு முன்னால் அவனைப் பற்றியுள்ள கர்ம வினைகளிலிருந்து வெளியே வரவேண்டும். எனவே எளிய வழி பக்தி மார்க்கம். பலவிதமான ஸ்தலங்களுக்கு சென்று மானசீகமாக பிரார்த்தனைகளை செய்து கொண்டே வர மெல்ல மெல்ல அதீத பற்றும் பாசமும் குறைய கட்டாயம் நீ எண்ணுவது போல புலன்களை முழுமையாக வெல்ல முடியாவிட்டாலும் மெல்ல மெல்ல வெல்லக்கூடிய நிலை வரும். பற்றையெல்லாம் விடு பாசத்தையெல்லாம் விடு என்றால் கட்டிய கணவன் எங்காவது சென்று விடுவானோ? என்று மனைவியும் அல்லது தாரம் தன்னைவிட்டு எங்காவது சென்று விடுவாளோ? என்று கணவனும் அல்லது தாயும் தந்தையும் இப்படி ஆன்மீகம் பார்த்துக் கொண்டு தங்களையெல்லாம் விட்டுவிடுவார்களோ? என்று சேய்களும் எண்ணலாம்.

நாங்கள் அதனைக் கூற வரவில்லை. எல்லாம் செய்ய வேண்டும். அதே சமயம் எதற்குள்ளும் ஆழ்ந்து விடக்கூடாது. கப்பல் பயணம் செய்ய பரந்த நீர்பரப்பு தேவை. நீர்பரப்பின் உதவியில்லாமல் கப்பல் செல்வது கடினம். நீர்தான் தனக்கு உதவி செய்கிறது என்பதற்காக கப்பல் நீரே நீ உள்ளே வா என்று கப்பலுக்குள் நீரை அனுமதித்தால் அந்தக் கப்பல் மூழ்கிவிடும் அல்லவா? அதைப்போல இந்த உலகம் இந்த உலகில் உள்ள விஷயங்கள் எல்லாம் ஓரளவு மனிதர்களுக்குத் தேவை கர்மாவை நுகர்வதற்கு. அதற்காக அதற்குள் ஆழ்ந்து விடாமல் இறை சிந்தனை கவனம் எங்கும் சிதறாமல் இருக்க வேண்டும். வேடிக்கையை சிலர் பார்த்திருக்கலாம் வீதியிலே. இரண்டு முனையிலே நீண்ட கயிற்றை கட்டி அதன் மேல் ஒரு பெண் லாவகமாக நடந்து வருவாள். கையிலே நீண்ட கோல் இருக்கும். அப்படி நடந்து வரும் தருணம் அந்த அதிசய திறமையைப் பார்த்து அனைவரும் ஆர்பரிப்பார்கள். பயங்கர கரகோஷம் செய்வார்கள். அதிலே கவனம் செலுத்தினால் அந்தப் பெண் மேலிருந்து கீழே விழுந்து விடுவாள். கீழே என்ன கூச்சல் என்ன குழப்பம் நேர்ந்தாலும் அந்தக் கயிற்றின் நுனியிலிருந்து கால் பிசகாமல் நடப்பது போல என்ன வேண்டுமானாலும் இந்த உலகில் நடந்துவிட்டுப் போகட்டும். என்ன வேண்டுமானாலும் குடும்பத்தில் நடந்துவிட்டுப் போகட்டும். அதற்கு நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்துவிட்டு இறைவனிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு மனது இறைவனை நோக்கியே இருக்க வேண்டும்.

இப்படியொரு பழக்கத்தை மனிதன் மெல்ல மெல்ல பழகிக் கொண்டால் கட்டாயம் நீ எண்ணுவது போல புலன்களை வெல்லக்கூடிய ஆற்றல் எல்லோருக்கும் சித்திக்கும். நீரிலே இறங்காமல் நீச்சல் பழகுவது கடினம். ஒரு வாகனத்தில் அமர்ந்து அந்த வாகனத்தை இயக்க பயந்தால் வாகனத்தை கடைவரையில் இயக்க முடியாது. அதைப் போல இந்த மனித தேகம் எடுத்து, இந்த மனித தேகத்திற்குள்ளாகவே வாழ்ந்து விடாமல் இந்த அழியக் கூடிய தேகத்தை வைத்துக் கொண்டு அழியக் கூடிய உறவுகளை வைத்துக் கொண்டு அழியக் கூடிய அற்ப சுகங்களை வைத்துக் கொண்டே அழியாத பேரின்பத்தை அடைய மனிதன் முயற்சி செய்யவேண்டும்.

ஒரு வங்கியின் மூலம் அதிக அளவு தனத்தையெல்லாம் வரை ஓலையாகக் கீறி அத்தாட்சி சான்றும் வைத்து அதனை வாங்கி வரும் மனிதன் அதனை தூரத்தில் உள்ள மனிதனுக்கு அனுப்ப எண்ணுகிறான். கவசம்போல் ஒரு உறையை தயார் செய்து அதற்குள்ளே பாதுகாப்பாக வைத்து அனுப்புகிறான். இப்பொழுது உள்ளே இருக்கும் வரை ஓலை முக்கியமா? அல்லது அதனை பாதுகாக்கும் கவசம் முக்கியமா? என்று பார்த்தால் அது போய் சேரவேண்டிய இடம் வரை இரண்டும் முக்கியம்தான். போய் சேர்ந்த பிறகு உள்ளே இருக்கும் வரை ஓலையை எடுத்து விட்டு பாதுகாப்பு கவசமாக இருந்ததை தூக்கி எறிவதில்லையா? அதைப் போல இந்த உலகமும் இந்த தேகமும் போய் சேர வேண்டிய இறைவனின் திருவடியை நோக்கி சென்று அதனை உணர்ந்து அதற்குள் பரிபூரணமாகக் கரையும்வரை இதனைக் கவசம் போல் வைத்துக் கொண்டு அந்த கவசத்திற்கு என்ன மதிப்பு தர வேண்டுமோ அந்த மதிப்பைத் தந்து பிறகு உள்ளேயிருக்கும் அந்த விஷயத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தர வேண்டுமோ அந்த உள்ளேயிருக்கும் ஆத்மாவிற்கு முக்கியத்துவம் தந்தால் கட்டாயம் புலனை வெல்லலாம்.

பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர்

விநாயகருக்கு உள்ள மிகப்பெரிய குடைவறைக்கோயில். மூலவரான விநாயகர் கற்பக விநாயகர் என அழைக்கப்படுகிறார். தேசிவிநாயகப் பிள்ளையார் என்ற வேறு பெயரும் உள்ளது. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க அழகுள்ள விநாயகர் என்று பொருள். ஆறு அடி உயரத்தில் கம்பீரம்மாக வடக்கு நோக்கி உள்ளார் கற்பக விநாயகர். கோவில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் குடைந்து கோவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் அர்ஜுன வன திருத்தலங்கள் நான்கு இருக்கிறது. அர்ஜுனம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு மருத மரம் என்று அர்த்தம். அதில் தமிழ் நாட்டில் மூன்றும் ஆந்திர மாநிலத்தில் ஒன்றும் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் மூன்றில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலும் ஒன்று. இக் கோயிலின் தலவிருட்சமாக அர்ச்சுனா மரம் உள்ளது. இக்கோவில் இருக்கும் பிள்ளையார்பட்டியின் புராண பெயர்கள் எருகாட்டூர் அல்லது எக்காட்டுர் மருதங்குடி திருவீங்கைகுடி திருவீங்கைச்வரம் இராசநாராயணபுரம் மருதங்கூர் தென்மருதூர் கணேசபுரம் கணேசமாநகரம் பிள்ளை நகர் ஆகும். முருகனுக்கு தான் ஆறு படை வீடுகள் போல் விநாயகருக்கும் ஆறு படைவீடுகள் இருக்கின்றன. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னதி விநாயகரின் ஐந்தாவது படை வீடாகும்.

கோவிலில் இரண்டு பெரிய ராஜகோபுரங்கள் உள்ளது. ஒன்று கிழக்கு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. இரண்டாவது கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப் பிரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது.

தெற்கு நோக்கியபடி சங்கர நராயணர் அருளுகிறார். சண்டீசன் கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்கள். மலையைக் கடைந்து செதுக்கிய பெரிய மகாலிங்கம் உள்ளது. திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார். இங்கு திருமணம் நடைபெற வைக்கும் கார்த்தியாயினி அம்மன் சன்னதியும் பிள்ளை வரமளிக்கும் நாகலிங்கம் சுவாமி சன்னதியும் அனைத்து செல்வ வளங்களை அளிக்கும் பசுபதீசுவரர் சன்னதியும் உள்ளது. இக்குகைக் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மாள் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள். வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது.

கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும் மற்றொரு பகுதி கற்றளி ஆகவும் அமைந்திருக்கிறது. பிள்ளையார்பட்டி கோயில் தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகரின் சன்னதி மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளதால் வினாயகர் சன்னதியை வலம் வர இயலாது.

குடைவரை கோயில்களை கட்டுவதில் சிறந்தவர்களாக விளங்கியவர்கள் பல்லவ மன்னர்கள். அவர்கள் வழி வந்த மகேந்திர வர்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டதே இந்த கோயில் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும் சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. 4ம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலையை செதுக்கி இருக்கலாம் என்று நம்மப்படுகிறது. இது போல் 14 சிலை உருவங்கள் இக் கோயிலில் உள்ளது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

விநாயகரின் சிறப்புகள்:

  1. இங்கு பெருமானின் துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்திருக்கிறார்.
  2. சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குகிறார்.
  3. அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குகிறார்.
  4. வயிறு ஆசனத்தில் படியாமல் கால்கள் மடித்திருக்க அமர்ந்திருக்கிறார்.
  5. வலத்தந்தம் நீண்டும் இடத்தந்தம் குருகியும் காணப்படுகிறார்.
  6. வலக்கரத்தில் சிவலிங்கத்தைத் தாங்கியருள்கிறார்.

கோவில் திருவிழாக்களில் விநாயகருக்கும் சண்டிகேஸ்வரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும் மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செல்வர். சண்டிகேஸ்வரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வர். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வர். இத்திருவிழா 9ம் நாள் நிகழ்ச்சியாக நடக்கும். 9ம் நாள் விழாவான தேர்வலம் வரும் அதே நேரத்தில் மூலவருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மகா அபிஷேகமும் நடத்தப்படும்.

ஒவ்வொரு சதுர்த்தியன்றும் இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஞ்ஞூரு வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிராகாரத்தில் வலம் வருவார். திருக்கார்த்திகை அன்று விநாயகப் பெருமானும் உமாதேவி உடனுறை சந்திரசேகரப் பெருமானும் திருவீதி உலா வருவார். பிள்ளையார் மருதங்குடி நாயனார் சந்நதிகளில் சொக்கப்பனை கொளுத்தப்படும். மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாம சுந்தரி உடனுறை நடராசப் பெருமான் திருவீதி உலா வருவார். ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியே இங்கு பெரிய திருவிழாவாகும். இது 10 நாள் திருவிழாவாக நடக்கும். பிள்ளையார் சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி கொடியேற்றம் நடக்கும். பிள்ளையார்பட்டி கோயிலின் சிறப்பாக விநாயகர் சதுர்த்தி தினத்தன்று முக்குறுணி அரிசியை கொண்டு தயாரிக்கப்படும் மிகப்பெரிய கொழுக்கட்டை விநாயகருக்கு படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு அக்கொழுக்கட்டை ஊரார்களுக்கும் பக்தர்களுக்கும் அருட்பிரசாதமாக வழங்கப்படுகிறது. 10ம் நாள் காலையில் தீர்த்தவாரி உற்சவமும் உச்சிகால பூசையின் போது ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியமும் இரவு ஐம்பெருங்கடவுளரும் தங்க வெள்ளி வாகனங்களில் திருவீதி உலா வருவார்கள்.