ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 373

குரு நாதர் அருளிய பொதுவாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நலம் நலம் நலமே எல்லா நிலையிலும் எல்லா சூழலிலும் தொடர்ந்து கிட்டிட இறைவன் அருளால் நல்லாசிகள் இத்தருணம் இயம்புகின்றோம். இறைவன் அருளாலே மனிதர்களின் வாழ்விலே பின்னிப்படர்ந்து கிடக்கின்ற கர்ம வினைகள் பெரும்பாலும் பாவங்களே இருப்பதால்தான் அறியாமை அதிகமாக மதியிலே படர்ந்து கிடக்கிறது. அறியாமையை விட மிகப்பெரிய துன்பம் மனிதனுக்கு வேறு எதுவுமில்லை. எல்லாம் அறிந்திருக்கிறோம் என்று அறியாத நிலையிலும் அறிந்தது போல் மனிதன் இருப்பதுதான் அறியாமையின் உச்ச நிலையாகும். அதாவது லோகாய அறிவு என்பது ஒரு நிலை. லோகாய அறிவை நன்றாகக் கைவரப்பெற்ற மனிதன் கூட பல்வேறு தருணங்களில் அந்த அறிவால் பெரிய பலனேதுமில்லாமல் துன்பத்தில் வாழ்வது உண்டு. அதே சமயம் அறிவை செயல்பட விடாமல் முடக்குவதில் ஆசைக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. அந்த ஆசைக்கு துணையாக கடுமையான பாசத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ஆசையும் பாசமும் மட்டுமா அறியாமைக்கு துணை செய்கிறது? அதோடு உணர்ச்சி நிலை மிகு உணர்ச்சி நிலை. இவை அனைத்தையுமே கொண்டுள்ள மனிதன் அதிலிருந்து தப்ப இயலாமல் தொடர்ந்து போராடிக் கொண்டே வாழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறான் அன்றும் இன்றும் என்றும். எனவேதான் ஒரு மனிதன் எப்பொழுதுமே இறைபக்தியோடு சத்தியத்தை விடாது மனசாட்சியோடு தொடர்ந்து தர்மசிந்தனையோடு வாழ மேற்கூறிய அறியாமை மெல்ல மெல்ல விலகும்.

அறியாமை விலக விலகவே மனிதனுக்கு நிம்மதி பிறக்கும். அதுபோல் நிலையிலே மனிதன் தன்னையும் தன்னை சேர்ந்த குடும்பத்தாரையும் பாசவலைக்குள் வைத்து பார்க்கும் பொழுதுதான் என் பிள்ளை இப்படி துன்பப்படுகிறானே என் தாய் இப்படியெல்லாம் கடினப்படுகிறாளே என்றெல்லாம் எண்ணி எண்ணி ஒரு மயக்கத்தில் ஆழ நேரிடும். ஆயினும் கூட அந்த பாசம்தான் பெருமளவு குடும்பக் கடமைகளை செய்ய மனிதனுக்கு ஒருவிதத்தில் உதவுகிறது. இருந்தாலும் அதே அதிகமாகும் தருணத்தில் அவனை அறியாமையில் வழுக்கிவிழ வைக்கிறது. அதை அப்படியே மூன்றாவது மனிதன் மீது பார்க்கும் பொழுது இரத்த சம்பந்தமில்லாத நட்போ உறவோ இல்லாத மனிதனிடம் பார்க்கும் பொழுது அப்படியெல்லாம் ஏற்படாததால் அப்படி ஏற்பட்டு ஒரு மயக்கம் கிட்டாததால் மனிதன் அதனை சாதாரணமாகப் பார்க்கிறான். அவர்களின் துன்பம் மனிதனுக்கு துன்பமாகத் தெரிவதில்லை. அதை அப்படியே இரத்த சம்பந்தம் உடைய உறவுகளோடு பொருத்திப் பார்க்க பழகிவிட்டால் அதுதான் ஞானத்தை நோக்கி செல்கின்ற பாதையாகும். அது எப்படி ? சொந்த உறவுகளுக்கும், சொந்த நட்புகளுக்கும், பழகிய உறவுகளுக்கும் துன்பம் என்றால் பார்த்துக்கொண்டு இருப்பதா? என்றால் யாங்கள் அந்தப் பொருளில் கூறவில்லை. யாராக இருந்தாலும் துன்பம் வந்து விட்டால் அதனை துடைக்கும் வழியை மேற்கொண்டிட வேண்டும். ஆனால் உள்ளத்தில் பாசமும் ஆசையும் அறியாமையும் வைத்துக் கொண்டு அதனை செய்யாமல் நடுநிலையோடு செய்யப்பழகினால் மனதிலே சோர்வில்லாமல் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கலாம். இந்தக் கருத்தை மனதிலே வைத்துக் கொண்டால் வாழ்வு நலமாகும் சுகமாகும் சாந்தியாகும்.

தெய்வங்கள் பேசும் ஆலயம்

பிஹாரில் இருக்கும் பஸ்தார் என்னும் இடத்தில் அமைந்துள்ளது ராஜராஜேஸ்வரி திருபுரசுந்தரி ஆலயம். இங்கு மூலஸ்தானத்தில் துர்காதேவி வீற்றிருக்கிறாள். இக்கோவிலில் இரவில் தெய்வங்கள் ஒன்று கூடி பேசிக் கொள்வது போல் சப்தம் கேட்பது அவ்வூர் மக்களுக்கு மர்மமான விஷயமாக இன்று வரை இருந்து வருகிறது. நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் தாந்திரிக் பவானி மிஸ்ரா என்பவரால் நிறுவப்பட்டது. அவர் அக்காலத்திலேயே தாந்திரீகம் மற்றும் வேத முறைப்படி எழுப்பிய இந்த கோவிலில் நிறைய தாந்திரீகர்கள் மற்றும் வேத சாஸ்திரம் பயின்றவர்கள் வருகை தருகின்றனர்.

இக்கோவிலில் 1. திரிபுரா பைரவி 2. துமாவதி 3. பகுளாமுகி 4. தாரா 5. காளி சின்னமஸ்தா 6.ஷோடசி 7. மாதங்கி 8. கமலா 9.உக்ரதாரா 10, புவனேஸ்வரி ஆகிய பத்து மகாவித்யாக்களின் சிலைகள் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இது தவிர 1. பங்களாமுகி மாதா 2. தத்தாத்ரேய பைரவ் 3. படுக் பைரவ் 4. அன்னபூர்ண பைரவ் 5. கால பைரவ் 6. மாதங்கி பைரவ் ஆகிய பைரவர்களின் சிலைகளும் இங்கு நிறுவப்பட்டுள்ளன.

இக்கோவிலில் இரவு வேளை பூஜை முடிந்ததும் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது போன்ற சப்தம் மதில் சுவர் வாயிலாக கேட்கப்படுகிறது. இது மிகவும் ஆச்சரியப்படும் வகையில் உள்ளதால் இக்கோவில் மக்களிடையே பிரபலமானது. இதனை ஆராய்ச்சி செய்வதற்கு வந்த விஞ்ஞானிகள் குழு ஒரு நாள் இரவு முழுவதும் அங்கு தங்கி இருந்தனர். வழக்கமாக இரவு நேரத்தில் இங்கே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவதில்லை. இரவில் கோவிலின் மதில் சுவரில் எதிரொலித்த வண்ணம் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதை போல் சப்தங்கள் கேட்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சப்தம் மனிதர்கள் பேசுவதை போலவே எதிரொலித்தது. ஆனால் நிச்சயமாக அது இந்த கோவிலின் வெளியில் இருந்து வரவில்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 372

குரு நாதர் அருளிய பொதுவாக்கு.

யாங்கள் அடிக்கடி கூறுவது போல இறைவன் அருளால் கூறுகிறோம். தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமே சிந்தனை. தொடர்ந்த சிந்தனை என்பது மனமாகும். விழிகளை மூடிக் கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் மனதை உற்று நோக்கினால் அதில் எத்தனையோ ஆசா பாசங்கள் இருக்கலாம். அவற்றிலே ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். அதை விட்டுவிட்டு மேலும் பார்த்தால் என்ன தெரியும் லோகாயம் மட்டுமே அதில் நிரப்பப்பட்டு இருக்கும். ஒன்று இல்லக் கடமை அல்லது தசக்கடமை அல்லது அப்பொழுது அவன் சந்திக்கின்ற கடுமையான பிரச்சினை குறித்த சிந்தனை அல்லது எதிர்காலத்தில் வேறு எதாவது புதிதாக ஒரு பிரச்சினை இதனை சார்ந்து வந்துவிடுமோ? என்ற அச்சம். இது எதுவுமே இல்லாத மனிதனாக இருந்தால் பொழுதை ஆக்குவதற்கு பதிலாக பொழுதை போக்குகிறேன் என்று அந்தப் பொழுதை வீண் செய்வதும் அதற்காக தனத்தை வியம் செய்வதுமான ஒரு அசுரத்தனமான செயல்களில் ஈடுபடுவது. இப்படி மனதிற்கு அந்த மாபெரும் சக்திக்கு சரியான பணியை தராமல் அதன் ஆற்றலை முறைபடுத்தி பயிர்களுக்கு அந்த மனோ சக்தி எனப்படும் நீரை பாய்ச்சாமல் தேவையற்ற வெள்ளமாக வடிய விடுவதுதான் மனிதனுக்கு என்றென்றும் இயல்பாக இருந்து வருகிறது. எல்லோருக்குமே இது பெரும்பாலும் பொருந்துகிறது. உடல் வேறு உடலில் குடிகொண்டு இருக்கும் ஆத்மா வேறு.

ஆத்மா எத்தனையோ உடல்களுக்குள் இருந்து கொண்டு புகுந்து கொண்டு பிறவி என்ற பெயரில் வாழ்ந்து மடிந்து வாழ்ந்து மடிந்து சேர்த்த வினைகளின் தொகுப்புதான் அந்த வினைகளின் அடிப்படையில்தான் அடுத்த உடம்பு கிடைத்திருக்கிறது. அந்த உடம்போடு அந்த ஆத்மா மயக்கமுற்ற நிலையிலே தன்னை அறியாமல் வாழ்கிறது. அப்படி வாழ்கின்ற அந்தப் பிறவியிலும் அது பல்வேறு வினைகளை செய்கிறது. அதில் பாவமும் புண்ணியமும் அடங்குகிறது. இதிலே பாவங்களைக் குறைத்து எல்லா வகையிலும் புண்ணியங்களை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மகான்களின் உபதேசமாக இருக்கிறது. இந்த புண்ணியத்தை கனவிலும் நனவிலும் ஒவ்வொரு அணுவிலும் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே கடமைகளை பற்றற்ற நிலையில் ஆற்றிக் கொண்டே உள்ளத்தில் சதாசர்வ காலம் இறை சிந்தனை மட்டும் வைத்துக் கொண்டு எதனையும் இறைவன் பார்த்தால் எப்படி பார்ப்பாரோ அந்த பார்வையில் பார்க்கப் பழகினால் மனம் நிம்மதியான நிலையிலிருக்கும். நிம்மதியான மன நிலையில்தான் மனிதனுக்கு பெரிய ஞானம் சார்ந்த விஷயங்கள் மெல்ல மெல்ல புரியத் துவங்கும்.

திருநீறு

திருநீற்று நான்கு வகைகளாக உள்ளது அவை:

  1. கல்பம்
  2. அணுகல்பம்
  3. உபகல்பம்
  4. அகல்பம்

கல்பம்: கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாமல் தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி மந்திரங்களைச் சொல்லி சிவாக்கினியில் இட்டு எரித்து எடுப்பது கல்பத் திருநீறு எனப்படும்.

அணுகல்பம்: காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

உபகல்பம்: மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத் தீயில் எரித்து பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

அகல்பம்: அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 371

கேள்வி: மோட்ச உலகம் என்பது எங்கே இருக்கிறது?

உன்னுடைய மனம்தான் மோட்சம். உன்னுடைய மனம்தான் சொர்க்கம். உன் மனம்தான் நரகம் என்று வைத்துக் கொள். ஏன்? என்றால் எது யாருக்கு எப்படி நடந்தாலும் அது அவனுக்கு கவலையை அளிக்கவில்லையோ எது எவனுக்கு எக்காலம் எந்த தருணத்தில் எல்லா நிலைகளிலும் திருப்தியை தருகிறதோ எது எவனுக்கு எந்த சூழலிலும் எந்தவித கஷ்டத்தையும் தரவில்லையோ அவன் வாஸ்தவமாகவே சொர்க்கத்தில் இருக்கின்றான். மோட்சத்தில் இருக்கிறான் என்பதுதான் பொருள். அப்படியானால் இத்தருணம் முதல் நீ மௌனத்தை கடைபடி. மௌனம்தான் அப்பா நீ இறையோடு கலக்கவும் இறையோடு பேசவும் உதவும். செவியிலே விழும் வார்த்தைகளுக்கெல்லாம் வாய் திறந்து பதில் கூற வேண்டும் என்று துடிக்காதே. அப்படி துடிக்க துடிக்க உனது சக்தி விரயமாகிக் கொண்டே போகும். உன்னை சுற்றி முட்டாள்கள் நின்றால் உனக்கென்ன? ஞானவான்கள் நின்றால் உனக்கென்ன? உன்னை பொறுத்தவரை மௌனத்தில் இரு. மௌனம்தான் உயர்ந்த ஞானம். மௌனத்தில் இருக்க பழக வேண்டும். எப்படி பழக வேண்டும் ? வாய் பேசாமல் இருப்பது மௌனமல்ல. உன் மனமும் எது குறித்தும் பேசாமல் இருக்க வேண்டும். மனம் சூன்யமாக இருக்க வேண்டும். எண்ணங்கள் அற்ற நிலையில் இருக்க வேண்டும். மனதிலே இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் என்று மூன்று காலமும் இருக்கக் கூடாது. அப்படி ஒரு பயிற்சியை பெறுவதுதான் நீ இங்கிருந்தே மோட்சத்தை பெறும் வழியாகும்.

கமண்டல கணபதி கோவில்

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோப்பா என்பது கடல் மட்டத்திலிருந்து 763 மீட்டர் உயரத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம். இந்த நகரத்தில் உள்ள சிறிய கிராமம் கேசவே. இங்கு கமண்டல கணபதி திருக்கோவில் இருக்கிறது. இந்த இந்தக் கோவிலில் உள்ள விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக தரையில் ஒரு துளை இருக்கும். அதன் வழியே தண்ணீர் பெருக்கெடுத்தபடியே இருக்கும். இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. மழைக் காலங்களில் அதிக அளவிலும் வெயில் காலங்களில் குறைவாகவும் இந்த துளையில் இருந்து நீரூற்று வந்துகொண்டே இருக்கும். ஒருபோதும் இதில் நீர் வராமல் இருந்ததில்லை. இந்த அதிசயம் 1000 வருடங்களாக நடைபெற்று வருவதாக வரலாறு உள்ளது.

புராண வரலாற்றின்படி சனி பகவானின் கிரக நிலை ஆதிக்கத்தில் சில காலம் பார்வதி தேவி இருந்தாள். ஆகையால் அவர் துன்பத்தில் சிக்கினார். இதற்குத் தீர்வு காணும் வகையில் பூலோகம் வந்த பார்வதிதேவி தவம் செய்ய பூமியில் சிறந்த இடத்தைத் தேடி தவம் செய்ய முடிவு செய்தாள். தனது தவத்தில் உள்ள தடைகளைத் தவிர்ப்பதற்காகவும் சனி தோஷத்திலிருந்து விடுபடவும் விநாயகரை வழிபட விரும்பிய பார்திதேவி இங்கு கணபதியை ஸ்தாபித்தாள். விநாயகர் சுகாசனம் என்ற ஆசனத்தில் அமர்ந்த நிலையில் வீற்றிருக்கிறார். ஒரு கையில் மோதகமும் மறு கையில் அபயஹஸ்தா வும் ஏந்தியபடி இருக்கிறார். வேத காலத்தில் உலகம் முழுவதுமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு தாகத்தை தணிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அனைத்து உயிர்களும் தவித்த போது அன்னை உமாதேவி இந்த கோவிலில் வீற்றிருக்கும் தன் மூத்த மைந்தன் ஆன கமண்டல கணபதி விக்ரகத்திற்கு அடியில் வற்றாத தண்ணீர் சுனையை ஏற்படுத்தி உலக உயிர்களின் தாகத்தை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது.

விநாயகர் முன்பாக உள்ள இந்த துளையில் இருந்து வரும் நீரைத்தான் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்ய பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில் பொங்கியும் சில நேரங்களில் சாதாரண அளவிலும் இந்த துளையிலிருந்து நீர் வந்துகொண்டே இருக்கிறது. விநாயகரின் காலடியில் வெளிப்படும் இந்த நீரானது இங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் ஓடி அங்குள்ள துங்கா நதியில் கலக்கிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 370

கேள்வி: அக்னி நட்சத்திர‌ வெயில் குறித்து?

எல்லோரும் அக்னி நட்சத்திர வெயிலின் போது என்னை இந்த வெயில் இப்படி வதைக்கிறதே கொடுமையாய் இருக்கிறதே என்று திட்டுகிறார்கள். அந்த நேரத்தில் அப்படிப்பட்ட அனல் இருப்பதன் காரணம் அந்த அளவு வெப்பம் இருந்தால் தான் பூமியில் அந்த நேரத்தில் உண்டாகி இருக்கக் கூடிய சில கிருமிகள் அழியும் இப்படி பட்ட பல்வேறு நுணுக்கங்கள் இருக்கிறதப்பா.

ஸ்ரீ கண்டேஸ்வரம் கோயில்

திருவனந்தபுரத்தில் கிழக்கு கோட்டையில் இருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் உள்ள கண்டேஸ்வரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகண்டேஸ்வரம் கோயில் கேரளாவின் மிகவும் பிரபலமான சிவன் கோயில்களில் ஒன்றாகும். இங்கு சிவன் கிழக்கு நோக்கி சிவலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். மூலவர் காந்தேஸ்வரன் மகாதேவர் கைலாசநாதர் கௌரி சங்கரர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். கோயிலில் மகாகணபதி தர்மசாஸ்தா நாகராஜர் முருகன் கிருஷ்ணர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கோயிலின் கிழக்குப் பகுதியில் புனித குளம் காணப்படுகிறது.

கோவிலின் தென் மேற்கில் பழைய கண்டேஸ்வரம் என்ற பெயரில் மற்றொரு கோயில் உள்ளது. இக்கோவில் மதிலகம் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய கண்டேஸ்வரம் கோவிலில் ஒரு வயதான மூதாட்டி துப்புரவாளர் வேலை செய்து வந்தார். அவர் தனது வேலை முடிந்ததும் கோவிலுக்கு அருகில் இருக்கும் ஒரு மரத்தின் நிழலில் ஓய்வெடுப்பது வழக்கம். துடைப்பம் மற்றும் கலயக்கூடம் என்று அழைக்கப்படும் பானையை அவள் அருகில் வைத்திருந்தாள். ஒரு நாள் அவள் பானையைத் தூக்க முயன்றபோது அது நகரவில்லை. அவள் ஒரு கல்லைப் பயன்படுத்தி பானையை உடைத்தாள். திடீரென்று பானையில் இரத்தம் வருவதைக் கண்டாள். சிவ பெருமான் சுயம்பு சிவலிங்க வடிவில் மூதாட்டிக்கு கொடுத்தார். அந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலே ஸ்ரீகண்டேஸ்வரம் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

திருவாதிரை மஹோத்ஸவம் திருவிழா கோயில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் 9 வது நாள் பல்லவிவெட்டா (அரச வேட்டை) ஆகும். 10-ம் நாள் காலை அத்ரியதர்ஷன். பத்து திருவாதிரை மஹோத்ஸவ விழா நாட்களிலும் அற்புதமான ஊர்வலங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. மலையாள மாதமான கும்பத்தில் சிவராத்திரி விழா ஸ்ரீகண்டேஸ்வரம் கோவிலில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் மற்றொரு முக்கிய திருவிழாவாகும். சிவராத்திரி திருவிழாவின் போது பக்தர்கள் சிவனின் மந்திரங்கள் மற்றும் ஸ்தோத்திரங்களை உச்சரித்து 108 முறை கோயிலை வலம் வருகின்றனர். அதிகாலை 3 மணிக்கு வெள்ளி ரிஷபவாகனத்தில் தெய்வம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ஊர்வலம் கோயில் திருவிழாவின் 5 வது நாளிலும் சிவராத்திரியின் போதும் மட்டுமே நடத்தப்படுகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 369

இறைவனின் கருணையால் தொடர்ந்து தர்மங்கள் செய்து பல்வேறு பிரார்த்தனைகள் செய்து ஒவ்வொரு ஆத்மாவும் நல்கர்மாக்களை கூட்டி வாழ நல் ஆசிகளை கூறுகிறோம். ஒவ்வொரு கணமும் நாழிகையும் சதா சர்வகாலமும் இறை சிந்தனையில் இருப்பது என்பது ஏதோ சோம்பி எந்தவிதமான வேலையும் செய்யாமல் இருப்பதற்காக கூறப்பட்ட ஒருவிதமான மூடப்பழக்கம் என்று பலர் எண்ணலாம். இறைவா இறைவா இறைவா இறைவா என்று கூறிக் கொண்டே இருந்தால் ஒருவனின் வயிறு நிரம்புமா? அவன் இந்த உடல் எடுத்ததற்கு ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைக்க வேண்டாமா? என்று எல்லாம் கூட அறிவானது வினாக்களை கேட்டுக் கொண்டே போகும். சித்தர்கள் ஆகிய நாங்கள் உடலுக்காக மட்டும் வாழாதே என்றுதான் கூறிக் கொண்டே இருக்கிறோம். உடல் சார்ந்த வாழ்வு ஒரு முழுமையான வாழ்வாக இராது. உடல் வாழ்வுக்காகத்தான் மனிதன் எல்லாப் பாவங்களையும் சேர்த்து கொள்கிறான். மனைவி பிள்ளைக்காக செய்தேன் என்று காரணம் கூறி ஒரு தனி நியாய விவாதத்தை இவன் கூறலாம். ஆனால் யாருக்காக செய்தாலும் பாவம் பாவம் தான். தாய்க்காக தந்தைக்காக செய்தேன் என்று கூறினாலும் யாருக்கும் பாவ மன்னிப்பு கிட்டி விடாது. மறந்தும் ஒரு மனிதன் பாவத்தை நினையாமலும் செய்யாமலும் விழிப்புணர்வுடன் வாழக் கற்றுக் கொண்டாலே மனிதனுக்கு பல பிரச்சினைகள் தீர்ந்து விடுமப்பா. இயம்புங்கால் ஒரு மனிதனின் நல்ல எண்ணங்கள் செயல்கள் ஒரு ஆரோக்யமான அதிர்வலைகளை அவனைச் சுற்றி உண்டாக்கும். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது போல நல்லாரை கண்டவுடன் சந்தோஷமும் மீண்டும் மீண்டும் இவனுடன் பழக வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். நல்ல சிந்தனையற்ற ஒரு மனிதன் நல்லவரோடு பழகப்பழக காந்தமற்ற இரும்பு காந்தத்தோடு சேர்ந்து தானும் காந்தமாவதுபோல அவனுக்குள் நல்ல எண்ணங்கள் இடம் மாறும்.

ஒரு மிகப்பெரிய தனவானிடம் எவ்வளவு நாள் பழகினாலும் அந்த தனம் இவனிடம் வந்துவிடாது. அழகான தோற்றம் உடையவனிடம் அழகற்ற ஒருவன் எத்தனை ஆண்டு பழகினாலும் அந்த அழகு இவனை வந்தடையாது. ஆனால் நல்ல குணங்கள் கொண்ட ஒரு மனிதனோடு பழக்கத்தை அதிகரிக்க அதிகரிக்க அந்த அதிர்வலையின் தாக்கத்தால் அவை மெல்ல மெல்ல இவனிடமும் வந்தடையும். எனவே சதாசர்வ காலமும் மனதிலே சினமும் வாயிலே தகாத வார்த்தைகளும் பிறரை பற்றி குறை கூறுவதுமாக இருந்தால் பிறகு அதுவே இயல்பாகி சமாதானமாகி பிறகு அதுதான் சரி என்றாகி பிறகு மனமும் புத்தியும் வாக்கும் எண்ணமும் செயலும் அமைந்து விடும் என்பதால் சதாசர்வ காலமும் இறை சிந்தனையில் மனம் லயிக்க பயிற்சி எடுக்க வேண்டும். இதுபோல் நிலையை உயர்த்த உயர்த்த உயர்த்த உயர்த்த மனம் பக்குவமடைந்து பிறகு அரிவை என்ற நிலை தாண்டி சித் என்ற உன்னத நிலை அறிவு அவனுள் மலரிடத் துவங்கும் சித் எனப்படும் அந்த சித்தம் தெளிந்தால்தான் உண்மையான சித்தர்களின் வழி வாக்கு யாம் எதை ஏன் எந்த காலகட்டம் உரைக்கிறோம்? என்பது புலப்படத் துவங்கும். எனவே பாவத்தை நீக்குவதற்கு போராட வேண்டும். பாவம் செய்யாமல் இருப்பதற்கும் போராட வேண்டும் .

பால கோபாலர்

கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் ஹுவினஹதகலியில் அமைந்துள்ள முருதேவரா கோயிலில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான பால கோபால் சிற்பம் பின்பக்கம் வினாயகர்.