ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 368

கேள்வி: எண்ணியது எண்ணியாங்கு பெறின் – இந்தக் குறளில் திண்ணியம் என்பதின் பொருள் என்ன?

மனிதன் எதில் திண்ணியமாக (மன உறுதி- வலிமை) இருக்கக் கூடாதோ அதில் திண்ணியமாக இருக்கிறானப்பா. அளவற்ற உறுதி. எத்தனை இடர் வந்தாலும் எத்தனை சோதனை வந்தாலும் எத்தனை கலக்கம் வந்தாலும் அந்த நோக்கத்திலிருந்து வழுவாமல் ஒரு மனிதன் இருக்கிறானே? அந்த உறுதி. அதைதான் இதன் பொருளாகக் கொள்ள வேண்டும். இது எதில் இருக்க வேண்டும்? நல்ல எண்ணங்களுக்கும் நல்ல செயல்களுக்கும் நேர்மைக்கும் தர்மத்திற்கும் இவ்வாறு உறுதியோடு போராடக் கூடிய மன நிலை வேண்டும். ஆனால் இவற்றுக்கெல்லாம் உறுதி கொள்ளாத மனிதன் வேறு வேறு தேவையற்ற விஷயங்களில் உறுதி கொள்கிறான். பகையிலே திண்ணியம் கொள்கிறான். பொறாமையிலே திண்ணியம் கொள்கிறான். பிறரை வெறுப்பதில் திண்ணியம் கொள்கிறான். தேவையற்ற விவாதத்தில் திண்ணியம் கொள்கிறான். இப்படி மன உளைச்சலில் கவலையில் திண்ணியம் கொள்வதையெல்லாம் விட்டுவிட்டு நல்ல எண்ணங்களிலே அந்த உறுதியை வளர்த்துக் கொண்டால் என்றென்றும் மனித வாழ்வு சுகமாகும். எனவே அந்த எண்ணிய எண்ணம் அது நல் எண்ணமாக உயர்ந்த நோக்கமாக இருந்து அந்த எண்ணம் உறுதி உறுதி உறுதி உறுதியோ உறுதி என்று இருந்தால் கர்மா இடம் தரவில்லை என்றாலும் கட்டாயம் நடக்கும் என்பதே இதன் அடிப்படை பொருளாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 367

கேள்வி: பித்ரு தோஷம் குறைய ஆதி முதல் அந்தம் வரை தில யாகம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள் அது குறித்து:

மிகவும் கடினமப்பா. முதலில் மனிதன் மனோ ரீதியாக தயாராக இருக்க வேண்டும். பொதுவாகவே இறை பக்தியும் தர்ம சிந்தனையும் அதிகமாக இருப்பவர்களுக்கு தோஷம் குறைந்து கொண்டே வரும். எந்த விதமான வழிபாடும் செய்யாமல் எடுத்த எடுப்பிலேயே தில யாகம் செய்து விட்டால் மட்டும் தோஷம் குறையும் என்று எண்ணி வருபவனுக்கு வெறும் தில யாகத்தால் யாதொரு பயனுமில்லை. பித்ருக்கள் தோஷம் குறைவதற்கு தொடர்ந்து பைரவர் வழிபாடும் திருவிடைமருதூர் வழிபாடும் அவசியம். முக்கண்ணனுக்கு தினமும் பரிபூரண அபிஷேகம் செய்ய வேண்டும். இதை செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் பாலபிஷேகமாவது செய்ய வேண்டும். இது ஒரு பகுதியாக இருக்க பட்சம் (15 நாள்) குறையாது பைரவருக்கு பரிபூரண அபிஷேகமும் மறு பட்சத்திலே சந்தனக்காப்பும் மாறி மாறி செய்யப்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் ஆளுக்கு ஒரு ஐ வதன தீபம் (ஐந்து முகம் தீபம்) ஏற்ற வேண்டும். பைரவர் சன்னிதியில் தொடர்ந்து அணையா தீபம் ஏற்றப்பட வேண்டும். பசு தானமும் பசு காப்பகத்திற்கு தகுந்த உதவிகளும் ஆலய குளத்து கயல்களுக்கு(மீன்கள்) உணவும் கொடுக்கப்பட வேண்டும். அன்னதானம் செய்யப்பட வேண்டும். இவற்றை செய்து கொண்டே ஒரு தினத்தில் (அமாவாசை சதுர்த்தி பஞ்சமி ஏகாதசி) அன்று தெய்வ சமுத்திர கோட்டம் எனப்படும் இராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடி இறை தரிசனம் செய்து இவன் சக்திக்குட்பட்டு அத்தனை வழிபாடுகளையும் செய்து ஏழைகளுக்கு அன்னம் ஆடை தனம் அளித்து விட்டு அங்குள்ள விலங்கினங்களுக்கு முடிந்ததை செய்து விட்டு பிறகு அவன் தில யாகத்திலே அமர வேண்டும்.

ஆதியோடு அந்தமாக திலயாகம் என்றால் முதலில் கணபதி பூஜை குல தெய்வ பூஜை இஷ்ட தெய்வ பூஜை யாகம் நவகிரகங்களுக்கு பித்ரு தேவதைகளுக்கு சுதர்சன யாகம் இவற்றை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும். பிறகுதான் தில தொடர்பான பூஜைக்கு செல்ல வேண்டும். இவற்றை செய்து விட்டு தனுஷ்கோடி சென்று (அங்கும் யாகம் செய்தால் சிறப்பு அப்படி முடியாதவர்கள்) பிரார்த்தனை செய்து விட்டு அந்தக் கடலிலும் நீராடி விட்டு வர வேண்டும். பூஜைகள் முடிந்த பிறகும் ஒவ்வொரு மனிதனும் தானங்கள் செய்ய வேண்டும். நன்றாக வார்த்தையை கவனிக்க வேண்டும் தானம். ஏனென்றால் தோஷங்கள் போக வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படுவதால் ஆடை தானம் அன்ன தானம் இதுபோல் ஸ்வர்ண தானம் வெள்ளி தானம் இல்ல தானம் கிருடி எனப்படும் நில தானம் மாடு தானம் ஆடு தானம் கல்வி தொடர்பான தானம் மருத்துவ தானம் என்று 32 வகையான அறங்கள் இதிலே அடங்கும். இதுபோல் நீர் நிலை இல்லாத இடங்களில் நீர் நிலையை அமைத்து தருவது எல்லாம் தில யாகத்தோடு தொடர்புடையவை. ஏனென்றால் இத்தனை தானத்தோடு தொடர்பாக அவனுடைய முன்னோர்கள் கட்டாயம் பாவங்கள் செய்திருப்பார்கள். அந்தப் பாவங்கள் இந்த தானங்களின் மூலம் நிவர்த்தியாகும். இதை உரைத்தால் யாரால் இது முடியும்? என்று மனிதன் எழுந்து போய் விடுவான். எனவே அவனுக்கு சிறந்த வழி விதி வழியாக சென்று மனிதனிடம் மருத்துவனிடம் தனத்தை இழப்பது விபத்திலே சிக்கி தனத்தை இழப்பது தொலைத்து இழப்பது என்று விதி பரிகாரம் செய்து விட்டால் அவனுக்கு அது இயல்பாகத் தெரியும். இவனாக மனமுவந்து இதையெல்லாம் செய் என்றால் கட்டாயம் செய்ய மாட்டான். சொல்லி வைக்கிறோம் ஆதி முதல் அந்தம் வரை என்று இயன்றவர்கள் செய்யட்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 366

க்ருத யுகத்தில் தர்மம் 4 கால்களில் இருந்தது. அவ்வாறு கலியுகத்திலும் இருக்க சாத்தியம் உண்டா?

எல்லா காலங்களிலும் தர்மம் இப்படிதானப்பா இருந்தது. ஒருக்கால் இருக்கலாம் கலியுகத்தில் என்ற பெயர்தான் ஒரு கால் என்று வந்து விட்டது. கலியுகம் போக்கிற போக்கிலே ஒருக்கால் தர்மம் இருந்தாலும் இருக்கலாம். ஒரு காலிலும் இருக்கலாம். ஒருக்காலும் இல்லாமல் போகாது என்பதாகத்தான் ஒருக்கால் தர்மம் இருக்கலாம் என்று கூறப்பட்டது. எல்லா காலங்களிலும் இதே நிலைதானப்பா. ஒரு காலத்தில் நிறைய தர்மவான்கள் இருந்தது போலவும் இப்பொழுது குறைந்து விட்டது போலவும் அல்ல. அப்பொழுது மக்கள் தொகை குறைவு. எனவே நல்லவர்கள் ஓரளவு அதிகமாக காணப்பட்டார்கள். அவ்வளவேதான் தவிர இப்பொழுதுள்ள எல்லாவகை மோசமான குணங்களும் அப்பொழுதும் மனிதர்களிடம் இருந்தன. அக்காலத்தில்தான் சகோதரர்கள் முன்னிலையில் துகில் உரித்தான் துரியோதனன். அதுவும் பகவான் க்ருஷ்ணனாக அவதரித்த அந்த காலத்தில் நடந்தது. எனவே எல்லா காலங்களிலும் அசுர குணங்கள் தலை தூக்கியேதான் இருந்தது. தர்ம குணங்கள் மறைந்தே இருந்தது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 365

குருநாதர் அருளிய பொதுவாக்கு

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் இறைவனின் கருணையாலே மனிதப் பிறவி எடுத்திட்ட பல்வேறு ஆத்மாக்களில் சில குறிப்பிட்ட ஆத்மாக்களுக்கு குறிப்பிட்ட விதமாக குறிப்பாக இதுபோல் ஜீவ அருள் ஓலை மூலம் இறைவனின் அருளாணையின்படி வழிகாட்டவே எமைப் போன்ற சித்தர்கள் இதுபோல் ஓலை மூலம் ஒளி வடிவான அக்ஷரங்களை இதுபோல் இதழை ஓதுவதற்கென்றே தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆத்மாக்களின் மூலம் உள் உணர்வாக சில வழி காட்டுதல்களை இறையின் அருள் கொண்டு காலகாலம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இதுபோல் நிலையிலே எத்தனைதான் இறைவன் அருளை பெறுவதற்கு ஒரு மனிதன் முயற்சி செய்தாலும் கூட பழ வினை அதோடு பல வினை ஒரு ஆத்மாவை கரையேற கடைத்தேற விடாது. பாசமும் பந்தமும் ஆசையும் அறியாமையும் ஒருபுறம் ஆன்மீகம் பேசிக் கொண்டே மறுபுறம் மிக மிக சராசரியாகவே நடந்து கொள்ளத் தூண்டும். இதனை யாம் உரைத்து ஒவ்வொரு மனிதனின் கீழ்த்தரமான எண்ணங்களை எல்லாம் புறந்தள்ளி அந்த ஆத்மாவை மேலேற்றுவதற்கு அந்தந்த ஆத்மாவின் அடிப்படை ஜாதக நிலை எமை நாடுகின்ற பொழுது இருக்கின்ற கிரக நிலை தசாபுத்தி அந்தர சூட்சுமம் அதுபோல் பல்வேறு கர்ம கணக்குகளின் அடிப்படையிலே யாம் வழிகாட்டிக் கொண்டு இருக்கிறோம். ஆயினும் கூட இவையெல்லாவற்றையும் நூற்றுக்கு நூறு புரிந்து கொள்ள முடியாது என்பது எமக்கும் தெரியும். புரிந்து கொள்ள இயலாது என்பதால் அதுபோல் முன் காலங்களில் எல்லாம் குருவானவன் எதைக் கூறுகிறானோ அதை ஏன்? எதற்கு? எப்படி? என்றெல்லாம் அறிவு கொண்டு ஆராய்ச்சி செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. அதற்காக அவற்றையெல்லாம் இக்காலத்தில் அப்படியே புகுத்து விரும்பவில்லை. ஏனென்றால் குரு என்ற ஸ்தானத்தில் இருந்து கொண்டு ஏற்கக் கூடாத கருத்துக்களை கூறினால் அதை ஏற்க வேண்டும் என்று நாங்கள் ஒருபொழுதும் வலியுறுத்த மாட்டோம்.

சர்வ சுதந்திரமாக ஒரு ஆத்மாவை சிந்திக்க வைத்து அதன் கர்மக் கணக்கின் அடிப்படையில் மேலேற்றுவதுதான் எமது எண்ணம். என்றாலும் கூட அந்த அதீத சுதந்திரம் ஒவ்வொரு ஆத்மாவையும் திசை மாற்றித்தான் போக வைக்கிறது என்பதை யாங்கள் நன்றாகவே அறிவோம். இதுபோல் நிலையிலே இந்த ஜீவ அருள் ஓலையின் மூலமாக எப்பொழுதும் வாக்கை தந்து கொண்டிருப்பது சித்தர்கள்தான் மகான்கள்தான் என்ற அடிப்படை எண்ணம் அணுவளவும் கூட குறையாமல் அழுத்தந்திருத்தமாக எவனொருவன் நம்பிக் கொண்டிருக்கிறானோ அவனுக்கு யாங்கள் தோன்றாத் துணையாக தொடர்ந்து இருந்து கொண்டே இருப்போம். ஆனால் இங்கு வருவதும் எம்முன்னே அமர்வதும் வாக்குகளைக் கேட்பதும் சுவையான வாக்குகள் என்று விவாதம் செய்வதும் பிறகு புறம் பேசுவதுமாக இருக்கும் ஆத்மாக்களுக்கு நாங்கள் யாது வழி காட்ட இயலும்? பல முறை கூறியிருக்கிறோம் எம்மைப் பொறுத்தவரை அனைவரும் எமது சேய்களே என்று. ஆனால் அந்த அதீத உச்ச நிலை பக்குவம் மனிதர்களுக்கு வந்து விடாது என்பது எமக்குத் தெரியும். உதாரணமாக இந்த இதழை ஓதும் மூடனுக்கு என்ன எண்ணம் இருக்கிறது? வருகின்ற அனைவருக்குமே நல்லது நடக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகள் தீர வேண்டும். இது ஒரு புறமிருக்க இங்கு வருகின்ற அனைவருமே இந்த இதழை நம்ப வேண்டும் என்று எண்ணுவான். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமல்ல என்பதே உண்மை. ஆனால் இதை வெளிப்புறமாக நம்புவது போல் நடித்துக் கொண்டு உள்புறமாக இவை எல்லாம் சித்தன் வாக்கா? இல்லை பித்தன் வாக்கா? என்று எண்ணிக் கொண்டே ஒருவன் இங்கு உள்ளே நுழைந்தால் அவன் வாயிலிருந்து நம்பிக்கைக்குரிய உரிய வார்த்தைகள் வந்தாலும் அவன் எண்ணங்கள் எதிர்மறையாக இருப்பதால் அந்த அலை இந்த இதழ் ஓதும் மூடனை பாதிக்கும். இனம் தெரியாத வெறுப்பு அந்த ஆத்மாவின் மீது ஏற்படும்.

ஏதோ ஒன்று தடுக்கிறதே? இந்த ஆத்மா இங்கிருந்து அகன்றால் போதும் என்ற எண்ணம் வரும். இந்த போராட்ட நிலையிலே என்னதான் பிரார்த்தனை செய்து ஓலையை எடுத்தாலும் வருபவனின் கர்மக் கணக்கின் அடிப்படையிலே இவன் கர்மக் கணக்கையும் அனுசரித்து எதாவது பரிகாரத்தைக் கூறினாலும் கூட அது முழுமையான ஒரு நிலைக்கு ஆட்படாது. அதனால்தான் ஆதியிலிருந்து நாங்கள் கூறிக்கொண்டு இருக்கிறோம் சில முறை வந்து பார்த்துவிட்டு இந்த ஏட்டிலே கூறப்படும் விஷயங்கள் எமக்கு ஏற்புடையது அல்ல என்று யாருக்கு தோன்றினாலும் வெளிப்படையாக நேர்மையாக அதை ஒப்புக் கொண்டு விலகிவிட வேண்டும். இங்கும் வருவேன் அங்கும் செல்வேன் மனம் போனபடி பேசுவேன் என்றால் அதுபோல் ஆத்மாக்கள் தானும் கரையேறாமல் கரையேற முயற்சி செய்யும் மற்ற ஆத்மாக்களையும் திசை மாற்றிக் கொண்டேதான் இருக்கும். எனவே இதுபோன்ற ஆத்மாக்களுக்கு எதிர்காலத்திலே இறைவன் தன் அருளை அதீதமாக அளித்தால் ஒழிய நாங்கள் வாக்கினை பகர இயலாது.

இதுபோல் அதிகாலை நேரத்திலே இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களைக் கொண்ட ஆத்மாக்களைக் குறித்து எதற்காக கூறுகிறோம்? என்றால் அதுபோல் ஆத்மாக்கள் தன்னிச்சையாக இங்கு வருவதும் போவதும் தவறில்லை என்றாலும்கூட வாஸ்தவமாகவே எம் மீது அதீத பற்று கொண்டு இந்த சுவடியை நூற்றுக்கு நூறு நம்புகின்ற சில நல்ல ஆத்மாக்களும் கூட இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணம் கொண்ட ஆத்மாவை இங்கு அழைத்து வந்து விடுவார்கள். எம் மீது முழு நம்பிக்கை கொண்டவனுக்காக இன்னவனுக்கும் நாங்கள் வாக்கினை பகர வேண்டியிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்ததாக பல முறை கூறியிருக்கிறோம் தர்மங்களின் அடிப்படையில்தான் கலிகாலத்திலே ஒவ்வொரு ஆத்மாவின் பாவத்தை இறைவன் சுத்தி செய்ய விரும்புகிறார் என்று. ஆனால் அதற்கும் ஜாதகத்தில் இடம் வேண்டும். சுப கிரகங்கள் ஆதிபத்யம் பெற்றிருக்க வேண்டும். இருந்தாலும்கூட ஜாதகத்தில் அங்ஙனம் வழியில்லாத ஆத்மாவிற்கும் தொடர்ந்து வாக்குகளைக் கூறி தர்ம வழியில் திசை திருப்ப இறைவன் அருளாணை இடுவதால் நாங்கள் கூறிக்கொண்டு இருக்கிறோம் என்றாலும், இங்கு வந்து சில ஆண்டுகளாக வாக்குகளைக் கேட்டாலும்கூட எம் முன்னே அமரும்போது மட்டும் ஒருவன் நல்லவனாக இருந்து பயனில்லை. அவன் 60 நாழிகையும் நல்லவனாக இருந்தால்தான் இறைவன் அருளை பெற முடியும். இறைவன் அருளை பெறுவது என்பது ஒருவிதத்தில் எளிமை ஒருவிதத்தில் மிக மிகக் கடினம். எந்த விதத்தில் எளிமை? வனம் சென்று தவம் செய்வது என்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. வாழ்க்கையில் இருந்து கொண்டே இறை வழியில் செல்வது என்பது வனம் சென்று தவம் செய்வதை விட கடினம் என்பது எமக்கு தெரியும். சராசரி எண்ணங்கள் அவ்வப்பொழுது வந்து மனிதனை பாடாய் படுத்தும் என்பதும் எமக்குத் தெரியும். அதற்கு இடம் தராமல் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளா விட்டாலும் பாவத்தை சேர்த்துக் கொள்ளாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு பிரச்சினை வரும் பொழுது அடுத்த மனிதன் தன்னை காயப்படுத்துகிறான் புறந்தள்ளுகிறான் என்பதைவிட அந்த பிரச்சினையின் இரு பக்கத்தையும் அலசி ஆராய கற்றுக் கொள்ள வேண்டும். வேறுபாடு இல்லாமல் தானே குற்றவாளியாக தானே நீதிபதியாக இருந்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். தான் எண்ணுவதே சரி செய்வதே சரி மற்றவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் என்று எண்ணினால் அங்கே உண்மை காயப்படுகிறது. பொய்மை மேலேறுகிறது. பாவம் சேர்ந்து விடுகிறது. தேவையில்லாமல் புண்ணியத்திலே பங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இதை எத்தனை முறை கூறினாலும் மனிதர்களின் ஜாதகப்பலன் அவனை மதி இழக்கத்தான் செய்கிறது. இது ஒருபுறமிருக்க எதிர்காலத்திலே தடையற்ற வாக்குகள் வேண்டும் என்று பலரும் எண்ணுகிறார்கள். நல்ல எண்ணம்தான். இறைவன் அருளால் நாங்கள் முழுமையாக எல்லோருக்கும் வாக்கை ரிஷபத் திங்கள் வளர்பிறையோ அல்லது அதற்குப் பிறகோ என்று முன்னரே கூறியிருக்கிறோம்.

இது ஒருபுறமிருக்க இதற்கு இடையிலே தூய்மையான எமது இந்த இதழ் வழியாக வருகின்ற வாக்குகளை நம்புவதோடு நூற்றுக்கு நூறு (இப்படி கூறுவது கூட சித்தர்களாகிய எங்களுக்கு உடன்பாடில்லை. ஒரு குறிப்புக்காக கூறுகிறோம்) இங்கு நடக்கின்ற அறப்பணிகளிலே எவ்விதமான ஐயமும் இல்லாமல் அணுவளவு கூட சந்தேகம் இல்லாமல் இவ்வளவு தனத்தை தருகிறோமே முறையாக செலவு செய்கிறார்களா? இங்கு முறையான கணக்கு வழக்குகள் இல்லையே? இதை நம்பி தரலாமா? உணர்ச்சி வசப்பட்டு தந்துவிட்டு மற்றவர்களிடம் கூறும் போது நீ ஏனப்பா தனம் தந்தாய்? இப்படியெல்லாம் தனம் தந்தால் உன் பாவங்கள் போகும் இறையருள் கிட்டும் என்று யார் கூறினார்கள்? இப்படியெல்லாம் ஒரு நூலில் கூட நாங்கள் படிக்கவில்லையே? என்றெல்லாம் விவாதம் நடக்கும் பட்சத்திலே அதைக் கூட நாங்கள் குறை கூறவில்லை. அப்படிப்பட்ட எண்ணங்கள் கடுகளவு தோன்றினாலும் கூட அதுபோல் ஆத்மாக்கள் இக்குடில் மூலம் நடக்கின்ற அறப்பணிகளுக்கு எதுவும் தரவேண்டாம் என்றுதான் நாங்கள் பலமுறை வலியுறுத்தி வருகிறோம். நூற்றுக்கு நூறு ஐயம் இல்லாத நிலை எப்பொழுது வருகிறதோ அன்று செய்யட்டும் அல்லது அவர்கள் மனம் போனபடி செய்துவிட்டுப் போகட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம். கொடுத்தவனின் பாவங்கள்தான் குறையுமே தவிர அதை வாங்கி தர்மம் செய்தவனுக்கு எந்த பலனுமில்லை. அதை வாங்கி தர்மம் செய்தவனுக்கு செய்கூலி உண்டப்பா. இங்கு கனகத்தை (தங்கத்தை) நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.

இதுபோல் நிலையிலே நாங்கள் வாக்குகளுக்கு தடை கூறினால் அவரவர்கள் மனம் போனபடி அதற்கு கற்பனை காரணங்களை பொருளாக்கிக் கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. குடிலும் குடில் சார்ந்த அறப்பணிகளும் தெய்வத்தின் அருளாணையால் சித்தர்களால் நடத்தப்படுகிறது. இவற்றை குறித்து வினா எழுப்ப நமக்கு அருகதையில்லை. முடிந்தால் நம் பங்களிப்பை செய்வோம். இல்லையென்றால் ஒதுங்கிக் கொள்வோம் என்பதே ஒரு உயர்ந்த வழியாகும்.

மாத்ரு ஸ்ரீ வெங்காமம்பா

ஆந்திரா மாநிலம் ராய துர்க்க பகுதியில் உள்ள தரிகொண்டா என்ற கிராமத்தில் 1730 ம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது முதலே திருமலை பெருமாள் மீது அதீத பக்தி கொண்டவர். இதன் காரணமாக வெங்கமாம்பா திருமணத்தை வெறுத்தார் பெற்றோர் கட்டாயப்படுத்தி மிகச் சிறுவயதிலேயே வேங்கடாசலபதி என்பவரை திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் செய்து வைத்த போதும் இல்லற சுகத்தை மறுத்தார். பெருமாளே கதி என பக்தியில் கரைந்து கவிதைகளை பொழிந்தார். சில நாட்களில் அவரது கணவர் இறந்த பின் கணவர் வருவதற்கு முன்பிருந்தே தான் வைத்துக் கொண்டிருக்கும் பூ பொட்டு என்ற மங்கல சின்னங்களை கணவர் இறந்ததற்காக நான் எதற்கு எடுகக வேண்டும் என்று சொல்லி பூவும் பொட்டும் வைத்துக் கொள்வதில் உறுதியாக இருந்தார். இவரது உறுதியையும் ஆன்மீக பற்றையும் பார்த்துவிட்டு கிராமத்தினர் நாளடைவில் அவரை தேவுடம்மா எனச் சொல்லி வழிபட்டனர். வேங்கடவன் மேல் கீர்த்தனைகள் இயற்றுவதிலும் பாடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சுப்ரமண்யுடு என்ற ஆசானிடம் யோகக் கலை பயின்றார். திருவேங்கடவன் மீது கொண்ட காதலால் திருமலைக்கே குடியேறி வாழ ஆரம்பித்தார். இங்கு வந்த பிறகு பல முக்கியமான நூல்களை இயற்றியதோடு யோகக் கலையையும் நன்கு பயின்று அஷ்டாங்க யோக சாரம் என்ற நூலையும் எழுதி மக்களுக்கு படைத்தார். திருமலையையும் திருவேங்கடவனையும் பற்றி ஏராளமான கவிகள் இயற்றினார்.

வேங்கடவனே கதி என வாழ்ந்த வெங்கமாம்பா ஒவ்வொரு நாள் இரவும் ஏகாந்த சேவை ஆரத்தியின் போது தட்டில் முத்துக்களை வைத்து வேங்கடவனை வணங்கி வந்தார். ஒரு நாள் திருவேங்கடவன் நகை காணாமல் போக அப்பழி தினமும் கோயில் நடைசாற்றியவுடன் வேங்கடவன் முன் பாடும் வழக்கத்தை கொண்டிருந்த இவர் மீது விழுந்தது. இதனால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவரை கோயிலுக்கு எளிதில் வரமுடியாத துாரத்தில் உள்ள தும்புரகோணா என்ற குகைக்கு அனுப்பி வைத்தனர். இவர் தும்புறு குகையிலிருந்து திருமலை கருவறைக்கு ரகசிய பாதை அமைத்து தன்னுடைய பாமாலை பணியை யாரும் அறியவண்ணம் ஆறு வருடங்கள் தொடர்ந்து வந்தார். பின்னாளில் திருவேங்கடவன் மூலம் இவரின் பக்தி எல்லோராலும் அறியப்பட்டு மீண்டும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதோடு இவரின் பாடலோடும் கற்பூர ஆரத்தியோடும் நடைசாற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இவ்வழக்கம் இன்றும் தொடர்ந்து ஏகாந்த சேவையில் அதாவது கோயில் நடை மூடப்படும் முன் செய்யும் உபசாரங்களில் இறுதியாக எடுக்கப்படும் கற்பூர ஆரத்திக்கு வேங்கமாம்பா ஆரத்தி என்றே பெயரிட்டு அழைக்கப்பட்டு வருகிறது.

1730 ம் ஆண்டு பிறந்த வெங்கம்மாம்பா தனது 87வது வயதில் 1817 ம் வருடம் திருமலையில் ஜீவசமாதி அடைந்தார். இவர் நினைவாக இவரது பெயரில் தற்போது திருமலையில் அன்னதானக்கூடம் அமைந்துள்ளது. மாத்ரு தரிகொண்ட ஸ்ரீ வெங்காமாம்பா நித்யா அன்னதானக்கூடம் என்று பெயரிடப்பட்ட இம்மண்டபத்தில் ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் பேர் சாப்பிடுகிறார்கள். திருமலை மாடவீதிக்கு அருகிலுள்ள இவரின் உடல் புதைக்கப்பட்ட இடம் வளாகத்தை உள்ளடக்கி உயர்நிலைப் பள்ளியாக திருமலை கோயில் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. ஆயினும் வேங்கமாம்பாளின் சமாதியை யாவரும் வணங்கும் வண்ணம் அடியார்கள் எப்போதும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருமலையை வணங்க வரும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் இடும் மூன்று பெரிய வளாகங்களுக்கு மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா என்று இவரின் பெயரை வைத்திருக்கிறார்கள். தரிகொண்ட வேங்கமாம்பாவின் பெயரும் உருவமும் பொறித்த அஞ்சல் தலை அரசால் வெளியிடப்பட்டது.

இவர் முதல்முறை திருமலை வந்தவுடன் இயற்றிய நூல்கள்

தரிகொண்ட நரசிம்ம சதகம்
நரசிம்ம விலாச கதா
சிவ நாடகம்
பாலக்கிருஷ்ண நாடகம்
யக்‌ஷ கானம்
ராஜயோகம்ருத சாரம்
த்விபத காவியம்

தும்புரு குகையிலிருந்து மீண்டும் வந்தவுடன் இயற்றிய நூல்கள்

விஷ்ணு பாரிஜாதம்
செஞ்சு நாடகம்
ருக்மிணி நாடகம்
ஜலக்கீரட விலாசம்
முக்திகாந்தி விலாசம்
கோபி நாடகம்
ராம பரிநயம்
ஸ்ரீ பாகவதம்
ஸ்ரீ கிருஷ்ண மஞ்சரி
தத்வ கீர்த்தனலு
வசிஷ்ட ராமாயணம்
ஸ்ரீ வேங்கடாசல மகாத்மியம்
அஷ்டாங்க் யோகசாரம்