ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 364

கேள்வி: கடன் தொல்லைகளில் இருந்து விடுபட?

இறைவனின் கருணையைக் கொண்டு இதுபோல் இயம்புவது யாதென்றால் நல்விதமாய் கடன் எனப்படும் துன்பம் மட்டுமல்ல ஒரு மனிதன் சந்திக்கின்ற நுகர்கின்ற எந்தத் துன்பங்களாக இருந்தாலும் அந்தத் துன்பத்திற்கு விதையை அவன்தான் என்றோ போட்டிருக்கிறான். எவன் ஒருவன் அழுது கொண்டே வாழ்கிறானோ எத்தனையோ மனிதர்களை அவன் அழ வைத்திருக்கிறான் என்பது பொருள். எவனொருவன் நன்றாக மகிழ்ச்சியோடு கூடுமானவரை வாழ்கிறானோ பலரையும் அவன் மகிழ்ச்சியோடு வாழ வைத்திருக்கிறான் என்று பொருள். எனவே இதில் கடன் எனப்படும் துன்பத்தை எடுத்துக் கொண்டால் இதுபோல் ஏனைய துன்பங்களைப் போலதான். தொடர்ந்து செய்து வரும் பிரார்த்தனையாலும் தர்மத்தினாலும் இவைகள் குறையலாம். அதோடு மட்டுமல்ல வம்சாவளி முன்னோர்களின் தோஷங்களும் சாபங்களும் அதிகமாக இருக்கின்ற மனிதனுக்கு கடன் சுமையும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.

யாங்கள் கூற வருவது மிகவும் நேர்மையாக ஒரு மனிதன் வாழ்ந்து சிந்தனையை தெளிவாக வைத்து திட்டமிட்டு வாழ்ந்து அதனையும் தாண்டி கடன் சுமை ஏற்பட்டால் அல்லது ஒவ்வொரு மனிதனும் முட்டாள்தனமாக செயல்பட்டு கடனை அதிகமாக ஏற்றிக் கொண்டால் அதை அவன் சுயமாக சிந்தித்து குறைத்துக் கொள்ள முயற்சி எடுப்பதுதான் நல்விதமான வழி முறையாகும். இதுபோல் நல்விதமாய் பைரவர் அல்லது காலபைரவர் திருவடியை அன்றாடம் வணங்குவதும் நல்விதமாய் கலப்பில்லா பசுவின் பால் கொண்டு பைரவருக்கு அபிஷேகம் செய்வதும் அதுபோல் தூய இளநீர் கலப்பில்லா சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்வதும் இவைகளால் அபிஷேகம் செய்ய முடியாத மனிதர்கள் நல்ல நறுமணமிக்க மலர் மாலை சாற்றி பைரவரை வழிபாடு செய்வதும் இதுபோல் செய்ய இயலாத மனிதர்கள் ஆறு முக நெய் தீபத்தை ஆறு தீபங்களுக்குக் குறையாமல் ஏற்றி பைரவர் திருவடியை வணங்குவதும் இவைகளை செய்ய இயலாதவர்கள் இல்லத்தில் அமைதியாக அமர்ந்து பைரவருக்குரிய மந்திரங்களை உருவேற்றுவதும், இவைகளோடு நவக்ரக வழிபாட்டை செய்து வருவதாலும் நல்விதமாய் படிப்படியாய் கடன் சுமை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவைகளை ஒரு குறிப்புக்காகக் கூறினோம்.

ஒருவன் வினவலாம் விநாயகரை வணங்கினால் கடன் சுமை குறையாதா? சிவபெருமானை வணங்கினால் கடன் சுமை குறையாதா? அம்பாளை வணங்கினால் கடன் சுமை குறையாதா? என்று தாராளமாக. தெய்வத்தின் எந்த வடிவத்தை வணங்கினாலும் பிரச்சினை தீரும் என்றாலும் விநாயகருக்குரிய வடிவம் என்று வரும் பொழுது இதுபோல் பைரவர் வழிபாட்டை குறிப்பாக யாங்கள் எடுத்து விளக்கியிருக்கிறோம். இதுபோல் மட்டுமல்லாது தில யாகத்தை முறைப்படி நன்றாக தெய்வ சமுத்திர கோட்டத்திலே சென்று செய்வதும் ஒரு முறை செய்தால் போதாது. குறைந்த பட்சம் வருடம் ஒரு முறையாவது செய்து கொண்டே இருப்பதும் கடன் சுமை குறைவதற்கு தக்கதொரு வாய்ப்பாக இருக்கும். எல்லாவற்றையும் விட பொது நல செயலுக்காக ஒருவன் கடன் பட்டால் இறைவன் தலையிட்டு அந்தக் கடனை நீக்க முன் வரலாம். சுயநலமாய் ஒருவன் கடன் படும்பொழுது அந்தக் கர்ம வினையை அவன் நுகர்ந்துதான் ஆகவேண்டும். இதோடு மட்டுமல்லாமல் வாய்ப்புள்ள அன்பர்கள் இன்னும் இன்னும் கடனை குறைக்க வேண்டுமென்றால் பசு போன்ற உயிரினங்களுக்கு உணவளிப்பதும் அதும் இயலாதவர்கள் சிறு சிறு உயிரினங்களுக்கு உணவளிப்பதுமாக இருக்கும் பட்சத்திலும் கடன் சுமை குறையும். சுக்ர வாரம் அதிகாலையிலே இல்லத்தை சுத்தி செய்து அதுபோல் மகாலட்சுமி வழிபாட்டை தொடர்ந்து செய்வதாலும் குபேர வழிபாட்டை செய்வதாலும் நவகிரக வழிபாட்டை செய்வதாலும் குறிப்பாக சுக்ர வழிபாட்டை செய்வதாலும்கூட கடன் சுமை படிப்படியாகக் குறையும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 363

குருநாதர் அருளிய பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நலம் எண்ணி நலம் உரைத்து நலம் செய்ய நலமே நடக்கும் என்று காலகாலம் எமை நாடும் மாந்தர்களுக்கு யாம் இயம்பிக்ல கொண்டே இருக்கிறோம். ஆயினும் கூட நலம் எண்ணுவதும் நலம் உரைப்பதும் நலம் செய்வதும் மாந்தர்களிடையே குறைந்து கொண்டேதான் வருகிறது.

இதுபோல் தன்முனைப்பும் மன குழப்பமும் இதோடு மற்றவர்களோடு தம்மை ஒப்பிட்டு பார்த்து வாழக் கூடிய வாழ்வு நிலையும் அகங்காரமும் எப்பொழுதுமே மனிதனிடம் குடிகொண்டு இருந்தால் அவனால் யாங்கள் கூறுகின்ற நல்ல கருத்தையெல்லாம் ஏற்று செயல்படுத்த இயலாது. விதி அங்ஙனம் இருந்தாலும் சிறிதளவாவது இறைவனை எண்ணி மதியை பயன்படுத்தி தேவையற்ற எதிர்மறை குணங்களையெல்லாம் விட்டுவிட்டு கூடுமானவரை மௌனத்தையும் மற்ற மனிதர்களால் மன உளைச்சல்கள் ஏற்படும் பொழுதெல்லாம் பொறுமையை கடைபிடித்து பொறுமையோடு வாழ்ந்து எவ்விதமான விவாதங்களும் செய்யாமல் தம் தம் கடமைகளை செய்து கொண்டே இருந்தாலே இறை வழி என்பது மிகத் தெளிவாக புலப்படும்.

இதுபோல் யாம் மென்மேலும் நல் உபதேசங்களை கூறும் பொழுதெல்லாம் இவைகள் நல்ல விஷயங்கள்தான். ஆனால் நடைமுறையில் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே? என்று பல மனிதர்கள் எண்ணுகிறார்கள். நடைமுறையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய மிக மிக எளிதான அனைவராலுமே பின்பற்றக்கூடிய விஷயம் என்றால் பெரும்பாலும் அதில் தவறும் பாவமும்தான் இருக்கும். புண்ணியமும் தர்மமும் சத்தியமும் பலகீனமான மனிதர்களால் அத்தனை எளிதாக பின்பற்ற முடியாது. அதிக மனோதிடம் இருக்கும் மனிதனால்தான் அதிக அளவு பாவங்களற்ற பிறவிகளால்தான் அவற்றை கடைபிடிக்க இயலும் என்பதை புரிந்து கொண்டு ஒரு மனிதன் தன்னைத்தானே எடை போட்டு பார்த்து தன்னால் சரியான வழியை நோக்கி போக முடியவில்லை என்றால் சரியான விஷயம் என்று தெரிந்தும் பின்பற்ற முடியவில்லை என்றால் அத்தனை பலகீனமாக இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு மெல்ல மெல்ல தன்னை மாற்றிக் கொள்ள முயல வேண்டும். எனவே இதுபோல் கருத்தை மனதிலே வைத்துக்கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

நெய்யாற்றங்கரை கிருஷ்ணன்

கேரளாவில் நெய்யாற்றின் கரையில் கேரளக் கட்டுமான முறையில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோவிலில் சதுர வடிவக் கருவறையில் பஞ்சலோகத்தால் செய்யப் பெற்ற சடைமுடியுடன் சிறுவன் வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். மேற்கு நோக்கிப் பார்த்தபடி நின்ற கோலத்தில் இருக்கும் இறைவன் தன்னுடைய இரு கரங்களிலும் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு இருக்கிறார். பால கிருஷ்ணனாக கையில் வெண்ணெய்யுடன் இருப்பதால் இந்த கிருஷ்ணர் நவநீதகிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறார். கோவிலின் வளாகத்தில் கணபதி தர்மசாஸ்தா மற்றும் நாகராஜா ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. கோயில் கிபி 1750 – கிபி 1755 க்கு இடையில் அப்போதைய சுதேச நாடான திருவிதாங்கூரின்  மன்னரான அனிஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மரால்  கட்டபட்டது.

இளவரசர் அனுசம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்பவர் திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராகப் பதவியேற்க இருந்தார். அவர் மன்னராவதை விரும்பாத சிலரும் தாங்கள்தான் மன்னர் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பிய சிலரும் ஒன்றாகச் சேர்ந்து மார்த்தாண்ட வர்மாவைக் கொல்வதற்குப் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து வந்தனர். எதிரிகளின் அந்த சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டிருந்த இளவரசர் ஒரு நாள் அவர்களிடம் சிக்கிக் கொள்ள நேரிட்டது. பகைவர்களிடம் இருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இளவரசர் மார்த்தாண்ட வர்மா அங்கிருந்து தப்பியோடினார். அவரைக் கொல்வதற்கு முயன்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய இளவரசர் நெய்யாற்றின் கரையை வந்தடைந்தார். அங்கிருந்து அவருக்குத் தப்பிச் செல்ல வேறு வழி தெரியவில்லை. உடனே அவர் தான் மறைந்து கொள்வதற்கு நல்லதொரு இடத்தைத் தேடினார். அப்போது அங்கு புல்லாங்குழலுடன் வந்த ஒரு சிறுவன் அங்கிருந்த பலா மரப்பொந்து ஒன்றைக் காட்டி அதனுள் சென்று மறைந்து கொள்ளும்படிச் சொன்னான். பயத்துடன் இருந்த இளவரசரும் அந்தச் சிறுவன் சொன்ன பலாமரப் பொந்திற்குள் சென்று மறைந்து உயிர் தப்பினார். சிறிது காலம் பகைவர்களுக்குத் தெரியாமல் மறைந்து வாழ்ந்த இளவரசர் பின்னாளில் பகைவர்களை வென்று மன்னராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ஒருநாள் அவர் கனவில் தோன்றிய கிருஷ்ணர் தானே நெய்யாற்றின் கரையில் சிறுவனாக வந்து பலா மரப்பொந்தில் மறைந்து கொள்ளச் செய்து காப்பாற்றியதாகவும் தனக்கு அங்கே கோவில் ஒன்றைக் கட்டி வழிபடும்படியும் சொல்லி மறைந்தார். மன்னரும் தன் உயிரைக் காப்பாற்றிய கிருஷ்ணனுக்கு, தான் கண்ட சிறுவன் வடிவிலேயேச் சிலை அமைத்து நெய்யாற்றின் கரையில் கிருஷ்ணருக்கு ஒரு கோவிலைக் கட்டினார்.

கோவிலின் ஒரு பகுதியில் மன்னர் மார்த்தாண்ட வர்மா மறைந்திருந்ததாகச் சொல்லப்படும் பலா மரம் வேலியிட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மரத்தை அங்கிருப்பவர்கள் மலையாள மொழியில் அம்மாச்சி பிலாவு (தாய் மரம்) என்று அழைக்கின்றனர். இந்த ஆலயத்தில் சித்திரை விசு கிருஷ்ண ஜெயந்தி ஓணம் பண்டிகை நவராத்திரி மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான மண்டல பூஜை நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட் காட்டியின்படி மீனம் (பங்குனி) மாதம் பத்து நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் நெய்யாற்றில் இறைவனுக்கு ஆறாட்டு விழா நடத்தப்படுகிறது. கோவிலின் பூஜைகள் நிறைவடைந்தவுடன் கிருஷ்ணரின் கைகளில் சிறு சிறு வெண்ணெய் உருண்டைகளை வைத்து வழிபட்டுப் பக்தர்களுக்குத் தருகின்றனர். இந்த வெண்ணெய் உருண்டைகள் பல்வேறு நோய்களுக்கு அருமையான மருந்தாக உள்ளது. கோவிலின் வடக்குத் திசையின் கீழ்ப் பகுதியில் நெய்யாறு ஓடுகிறது.

இக்கோவிலில் நிறுவுவதற்காக முதலில் மரத்தால் ஆன சிலை ஒன்றுதான் செய்யப் பட்டிருக்கிறது. அந்தச் சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக நெய்யாற்றின் வழியாக ஒரு படகு மூலம் கொண்டு வரப்பட்டது. அப்போது அந்தப் படகு ஆற்றுக்குள் ஓரிடத்தில் நகராமல் நின்று விட்டது. அங்கிருந்தவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் படகை சிறிது கூட நகர்த்த முடியாமல் போனது. குறிப்பிட்ட நாளில் கோவிலில் இறைவன் சிலையை நிறுவ விரும்பிய மன்னர் தற்போது ஆலயத்தில் இருக்கும் பஞ்சலோகத்தாலான கிருஷ்ணர் சிலையை உருவாக்கி அதை பிரதிஷ்டை செய்தார்.

அகத்திய முனிவர் மலை உச்சியில் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அகத்தியக் கூடம் என்றழைக்கப்படும் அந்த இடத்தில் அகத்திய முனிவர் பல வேள்விகளைச் செய்து கொண்டிருந்தார். அவருடைய வேள்விக்காகக் கொண்டு வரப்பெற்ற நெய் அங்கிருந்த பெரிய பானைகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அந்தப் பானைகளில் இருந்த நெய் நிரம்பி வழிந்து பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. நெய்யே ஆறாக ஓடியதால் இந்த ஆற்றுக்கு நெய்யாறு என்று பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் அப்பகுதியில் ஏற்பட்டக் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இறைவன் கிருஷ்ணரை வேண்ட அவர் அகத்தியக் கூடத்தில் இருந்து வெளியேறி ஓடிக் கொண்டிருந்த நெய் ஆற்றினைத் தெளிந்த நீராக மாற்றி ஓடச் செய்தார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 362

கேள்வி: விஷ்ணுவின் ஐந்து ஆயுதங்கள் பற்றி:

இறைவனுக்கு ஆயுதங்கள் இருப்பது என்பது மனிதர்களுக்காக கூறப்பட்ட விஷயங்கள். உண்மையில் இதனை தத்துவமாகத்தான் பார்க்க வேண்டும். மனிதன் ஆயுதம் எடுப்பதையே நாங்கள் அநாகரீகம் என்று கூறும் பொழுது இறைவன் ஆயுதம் எடுப்பதையா நாங்கள் ஆதரிப்போம்? அல்லது இறை அதை ஒத்துக்கொள்ளுமா? எனவே உண்மையான ஆயுதம் மனிதனுக்கு அவனின் மனோபலம்தான். இறைவனை பொறுத்தவரை நீக்கமற நிறைந்திருக்கும் சக்தி. எதை எண்ணினாலும் அதை செய்து முடிக்கும் ஆற்றல் இறைவனுக்கு இருக்கும் பொழுது ஒரு ஆயுதத்தின் துணை கொண்டுதான் வெற்றியை தேட வேண்டும் என்ற நிர்பந்தம் அங்கே இல்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 361

கேள்வி: பெண் சித்தர்கள் இருக்கிறார்களா?

சித்தம் நிலைத்து பேதங்கள் அற்ற தன்மையிலே அங்கு ஆணும் இல்லை பெண்ணும் இல்லை என்பதை புரிந்து கொள். இருந்தாலும் ஒரு குறியீட்டிற்காக நீ கேட்பதால் பெண் சித்தர்கள் எக்காலத்திலும் உண்டு. ஆண் வடிவத்தில் இருக்கின்ற பலரும் பெண் சித்தராகக் கூட இருப்பார்கள். சில காரணங்களுக்காக ஆணின் தோற்றத்தை எடுத்து அலைந்து கொண்டிருப்பார்கள்.

பால கோபால கிருஷ்ணர்

கிருஷ்ணரின் வளர்ப்புத் தாயான யசோதா தேவி பால கோபால கிருஷ்ணரின் சிலையை வைத்திருந்தார். இந்த சிலையை கிருஷ்ணர் கன்வ முனிவரிடம் ஒப்படைத்தார். பால கோபால கிருஷ்ணருக்கு கன்வ முனிவர் கேரள மாநிலம் காசர்கோட்டில் கோவில் எழுப்பினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 360

கேள்வி: நல்ல ஆத்மாவாக இருக்கும் ஒருவன் தனக்கு முன் ஜென்ம பாவங்களால் இப்பிறவியில் ஏற்படும் இன்னல்களால் விரக்தி உண்டாகி மேலும் மேலும் தவறு செய்யக் கூடுமல்லவா?

இறைவன் அருளால் சென்ற ஜென்மத்தில் நிறைய பாவங்களை செய்து அதற்குண்டான தண்டனைகளை இந்த ஜென்மத்தில் எவன் நுகரவேண்டும் என்று தலையிலே எழுதப்பட்டிருக்கிறதோ அவன் அதை நுகர்ந்து கொண்டிருப்பான். தண்டனைகளையும் மீறி நல்லவனாக வாழ வேண்டும் என்று எவன் தலையில் எழுதப்பட்டிருக்கிறதோ அவன் தண்டனைகளை அடைந்தாலும் நன்மைக்குரிய குணங்களை விடமாட்டான். மேலும் மேலும் பாவங்கள் செய்ய வேண்டும் என்று எவன் தலையில் எழுதப்பட்டிருக்கிறதோ அவன் அப்படித்தான் வாழ்வான். எனவே எப்படி பார்த்தாலும் விதிதான் அங்கு முன்னே நிற்கிறது. இதையும் மீறி ஒருவன் மேலே வர வேண்டும் என்றால் பக்தியும் தர்மமும் மட்டும்தான் அவனை காப்பாற்றும். மனித சக்திக்கு அப்பாற்பட்டு எத்தனையோ நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பொதுவாக மனிதனே இந்த பஞ்ச பூதத்தால் ஆன உடலை உகுத்து விட்டால் அவன் ஆத்மா எங்கு வேண்டுமானாலும் செல்லும். மனித உடல் எடுத்த பிறகுதான் அதற்கு வடிவம் எடை காலம் தூரம் நாழிகை அளவு எல்லை தேவைப்படுகிறது. உதாரணமாக இந்த அடைப்பான் தாழிட்டிருந்தால் மனிதனால் வெளியே செல்ல முடியாது. திறந்தால்தான் வாசல் வழியாக வெளியேற முடியும். ஆனால் இவனுக்குள் இருக்கின்ற ஆத்மா சுவரோ கல்லோ மரமோ கதவோ அல்லது மேற்கூரையோ எதற்குள் வேண்டுமானாலும் புகுந்து மறுபக்கம் சென்று விடும். இதே ஒரு அதிசயமில்லையா?

வெண்கல வினாயகர்

உலகின் மிக உயரமான விநாயகர் சிலை தாய்லாந்தின் க்லோங் குவானில் உள்ளது. 39 மீட்டர் உயரத்தில் வெண்கலத்தால் ஆன விநாயகர் இவர். இவர் கையில் 4 கைகள் உள்ளன. மேல் வலது கையில் பலாப்பழம் மேல் இடது கையில் கரும்பு கீழ் வலது கையில் வாழைப்பழம் கீழ் இடது கையில் மாம்பழம் வைத்திருக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 359

கேள்வி: அரங்கனைப் பாடும் வாயால் குரங்கினை பாடமாட்டேன் என்று ஒரு ஆழ்வார் சொல்லியிருக்கிறார். ஞான நிலையில் இருப்பவர்கள் இப்படி பேதம் பார்க்கலாமா?

பக்தி மேலீட்டால் கூறப்படுகின்ற வார்த்தைக்கெல்லாம் தவறாக பொருளை எடுத்துக் கொள்ள கூடாது. என் குழந்தை ராஜா என்று தாய் அரவணைத்து பாராட்டும் பொழுது உண்மையில் குழந்தை ராஜாவாகி விடுகிறதா என்ன? பாசத்திலும் அன்பிலும் கூறப்படுகின்ற கூற்றாகத்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது இதுபோல் வார்த்தைகளுக்கெல்லாம் நேருக்கு நேர் பொருள் கொள்ளக் கூடாது. இதனை அருள் நிலையில் பார்த்து சூட்சுமமான பொருளை பழகிக் கொள்ள வேண்டும். எனவே ரங்கனாகிய பெருமாளை ரங்கனாகிய விஷ்ணுவை ரங்கனாகிய கண்ணனை ரங்கனாகிய ராமனை பாடுகின்ற வாயால் குரங்கினை பாடமாட்டேன் என்றால் குரங்கு போல் அலைபாயும் கொண்ட மனம் கொண்ட மன்னர்களை மனிதனை பாட மாட்டேன் என்ற ஒரு பொருளும் உண்டு.

அதுபோல் தலைவனை பாடும் வாயால் அதுபோல் தொண்டனைக் கூட நான் பாட மாட்டேன். ஆஞ்சனேயர் என்னதான் ஆத்மார்த்தமான தொண்டனாக இருந்தாலும் நான் தலைவனுக்குள்ளேயே தொண்டனை பார்ப்பதால் ஆஞ்சனேயரைக் கூட நான் பாடமாட்டேன் என்று கூட பக்தி மேலீட்டால் கூறியதாக ஒரு பொருள் கொள்ள வேண்டுமே தவிர இதற்கு சராசரி பொருளை கொள்ளுதல் கூடாது.

ஔவையாரை கயிலைக்கு தமது துதிக்கையால் தூக்கியருளிய கணபதி

சுந்தரர் வெள்ளை யானை மீதேரியும் அவர் தோழராரன சேரமான் பெருமாள்நாயனார் குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஔவையாரையும் உடன் வருமாறு அழைத்தனர். ஔவையார் தானும் கைலாயம் செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்ய ஆரம்பித்தார். ஔவையாருக்கு விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும் கயிலைக்கு தான் அழைத்து செல்வதாகவும் அருளினார். ஔவையார் பொறுமையாக தொடர்ந்து விநாயகர் அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஔவையாரை கணபதி தனது துதிக்கையால் சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கையிலை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் விநாயகர் சந்நிதிக்கு முன்புறம் புடைப்புச் சிற்பமாக இந்த வரலாறு காணப்படுகிறது. காலம் 10 ஆம் நூற்றாண்டு.