ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 285

அகத்திய மாமுனிவர் உறுதி படக்கூறும் உண்மைச் சம்பவம். பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தவை:

நம் தமிழகத்திலிருந்து ஒரு குடும்பம் காசிக்குச் சென்று ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது அந்தண குலம் என்பதால் வேதம் ஓதுவதும் குழந்தைகளுக்கு வித்தை போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு நிறைய சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தையானவர் கற்றுத் தருகிறார். மகளும் வளர்கிறாள். மகள் வளர வளர தந்தைக்கு ஒரு கவலை. நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால் நிம்மதியாக இருக்கலாமே என்று. ஆனால் மகளோ பிடிவாதமாக அப்பா நான் இறை சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம் என்று உறுதிபடக் கூறி விட அக்கம் பக்கம் உள்ளவர்களும் அறிந்தவர்களும் கூட அம்மா நீ பெண். தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும் என்று எத்தனையோ அறிவுரைகள் கூறினாலும் காசி விஸ்வநாதர் மீது ஆணை என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறி ஒதுங்கி விடுகிறாள். தந்தையும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து பிறகு வேறு வழியில்லை என்பதால் தன்னிடம் இருக்கக் கூடிய நில புலன்களை எல்லாம் விற்று அம்மா ஒரு வேளை நான் இறந்து போய் விட்டாலும் இந்த செல்வத்தைக் கொண்டு பிறரை நாடாமல் கையேந்தாமல் வாழ்ந்து கொள் என்று ஏற்பாடு செய்து ஒரு பெரிய இல்லத்தையும் வாங்கித் தந்து விட்டு சில காலங்களில் இறந்தும் விடுகிறார். தந்தை எனக்கு சில விஷயங்களை போதித்தார் அவற்றை செயல்படுத்தினால் என்ன? என்று மகளுக்கு ஒரு ஆசை. எனவே பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு இலவசமாக தன் இல்லத்திலே தங்க இடம் தருவதும் உணவு தருவதும் என்று ஒரு அறப் பணியைத் துவங்க காலம் செல்லச் செல்ல இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார் என்று அறிந்து பலர் மருத்துவ உதவி கல்வி உதவி வேண்டும் என்று கேட்க இவளும் செய்து கொண்டே வருகிறாள்.

இறைவனின் திருவுள்ளம் இந்தப் பெண்ணை சோதிக்க எண்ணியது. அந்தக் காசி மாநகரம் முழுவதும் இவள் புகழ் பரவத் தொடங்கியது. அனைத்து செல்வங்களையும் தந்து தந்து ஒரு கட்டத்தில் வறுமை இவளை சூழ்ந்து கொண்டது. இப்பொழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க வேறு வழியில்லை அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் சிறு தொகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள். ஒரு கட்டத்திலே அவர்களும் இவளுக்குக் கடன் தர மறுத்து விடுகிறார்கள். அது மட்டும் அல்லாமல் முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் கொடு என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள். இரவில் படுத்தால் இவளுக்கு உறக்கம் வரவில்லை. சிறு பெண் என்பதால் அச்சமும் ஆட்கொண்டு விட்டது. இந்த வேதனையோடு காசி விஸ்வநாதரை வணங்கி எந்த ஜென்மத்தில் நான் செய்த பாவமோ இப்படிக் கடனாக என்னை இடர் படுத்துகிறது. இறைவா நான் செய்தது சரியோ? தவறோ? தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருந்ததால் என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன். ஊரைச் சுற்றி கடன் வாங்கி விட்டேன். எல்லோரும் கடனை திரும்பக் கேட்கிறார்கள். என்னால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை. அந்த கடன்களை திருப்பிக் கொடுக்கும் சக்தியை கொடு என்றுதான் கேட்கிறேன் என்று மனம் உருகி இறைவனை வணங்கி வேண்டுகிறாள்.

ஒர நாள் ஒரு பழுத்த மகான் இவளைத் தேடி வருகிறார். மகளே கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார். அவரைச் சென்று பார். உனக்கு உதவி கிடைக்கும் என்று அந்த மகான் கூறுகிறார். எனக்கு அவரை அறிமுகம் இல்லை. நான் சென்று கேட்டால் தருவாரா? அல்லது மறுத்து விடுவாரா? என்று அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது. என்றாலும் துறவி கூறியதால் அன்று மாலை அந்த தனவான் இல்லத்திற்குச் செல்கிறாள். அந்த செல்வந்தன் இந்தப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் நேரில் பார்த்தது இல்லை. இருந்தாலும் கூட மிகப் பெரிய ஞான நிலையில் இருப்பவள் என்று கேள்விப்பட்டதால் அவளை உள்ளே அழைத்து அமர வைக்கிறார். அவரைச் சுற்றி ஊர் பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையில் பெண்ணே உனக்கு என்ன வேண்டும்? எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்? என்று செல்வந்தன் கேட்க எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்? என்று செல்வந்தன் கேட்க இவள் தயங்கி தயங்கி தனக்கு ஏற்பட்டுள்ள கடன் மற்ற பிரச்சனைகளைப் பற்றிக் கூறி அக்கால கணக்கின்படி ஐந்து லட்சம் கடன் ஆகிவிட்டது. பலரிடம் கடன் வாங்கியதால் எல்லோரும் இடர் படுத்துகிறார்கள். எனவே நீங்கள் ஐந்து லட்சம் தந்தால் காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது சிறு சிறு பணிகளை செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன். நீங்களோ மிகப்பெரிய செல்வந்தர். ஒரு துறவி தான் என்னை இங்கு அனுப்பினார். என்று தயங்கி தயங்கி கூறுகிறாள்.

அந்த செல்வந்தர் யோசிக்கிறார். இவள் மிகப்பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது. ஆனால் இப்பொழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லட்சம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். தர முடியாது என்றால் இவள் மனம் வேதனைப்படும். நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும். எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும் என்று எண்ணி அந்த செல்வந்தர் மிக சாமார்த்தியமாகப் பேசுகிறார். பெண்ணே நான் கூறுவதை நீ தவறாக எண்ணக்கூடாது. உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார். நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும் நீர்த் தடங்களை அமைப்பதும் கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய். பாராட்டுகிறேன். ஆனால் உனக்கென்று கொஞ்சம் செல்வத்தை வைத்துக் கொள்ள வேண்டாமா? சரி உன் செல்வத்தை தர்மம் செய்தாய். ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி தர்மம் செய்தாய்? கடன் வாங்கும் முன் என்னைக் கேட்டாயா? சரி நீ செய்தது எல்லாம் நியாயம் என்றாலும் இப்படி தர்மம் செய்த நீயே நடு வீதிக்கு வந்து விட்டாய். எப்படி உன்னால் என்னிடம் வாங்கிய கடனை திருப்பித் தர முடியும்? அடுத்ததாக நான் கடன் கொடுத்தால் அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய். எதை நம்பி நீ கேட்கின்ற அந்த தொகையை நான் தர முடியும்? அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது? என்று அந்த செல்வந்தர் கேட்கிறார்.

இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி அய்யா நீங்கள் கூறுவது உண்மைதான். ஏதோ ஒரு ஆர்வத்தில் செய்து விட்டேன். அடமானம் வைக்க என்னிடம் எதுவுமில்லை. உங்களிடம் கோடி கோடியாக செல்வம் இருக்கிறது என்று ஊர் மக்கள் சொல்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதியைத்தான் கேட்கிறேன். காசி விஸ்வநாதர் மீது ஆணை. எப்படியாவது சிறுக சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள் என்று கேட்கிறாள். மன்னித்து விடு பெண்ணே அடமானம் இல்லாமல் நான் எதுவும் தருவதற்கு இல்லை என்று செல்வந்தர் கூற அந்தப் பெண் சற்று யோசித்து விட்டு அய்யா உங்களுக்கே தெரியும். உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். நானும் என் தந்தையும் ஆங்காங்கே பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறோம் என்று. தங்களின் மாளிகை முன்பு இருக்கக் கூடிய ஊர் பொதுக் குளம் கூட அடியேன் கட்டியதுதான். இந்த நீரை தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏன்? விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன. இவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா? என்றாலும் இந்த பொதுக் குளத்தை எதையும் எண்ணி அடியேன் அமைக்கவில்லை. இருப்பினும் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தத் திருக்குளத்திலே நாளைக் காலை சூரிய உதயத்தில் இருந்து யாரெல்லாம் நீர் பருகுகிறார்களோ அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன். ஐந்து லட்சத்திற்கு உண்டான அசல் வட்டிக்கு சமமான புண்ணியம் எப்பொழுது உங்களிடம் வந்து சேருகிறதோ அப்பொழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் கொள்ளலாமா? அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன் என்று கேட்க அந்த செல்வந்தர் சிரித்துக் கொண்டே பெண்ணே ஏதாவது ஒரு பொருளைத்தான் அடமானம் வைக்க முடியும். புண்ணிய பாவங்களை அல்ல. ஒரு பேச்சுக்கு நீ கூறியபடி நீரைப் பருகுவதால் ஏற்படும் புண்ணியம் என் கணக்குக்கு வருவதாக வைத்துக் கொண்டாலும் புண்ணியம் அரூபமானது. கண்ணுக்குத் தெரியாதது. உன் கணக்கில் இருந்து புண்ணியம் என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது? என்று கேட்கிறார்.

அய்யா அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும் படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள் என்று அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே குளக்கரையில் கருங்கல்லால் ஆன சிவ லிங்கத்தைக் காட்டி எம்பிரானே அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக் காட்டக் கூடாது. என்றாலும் கடனிலிருந்து தப்பிக்க இந்த அபவாதத்தை செய்கிறேன். தேவரீர் இந்த திருக்குளத்தின் அடியில் இருக்க வேண்டும். எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து அசலும் வட்டியுமான புண்ணியம் இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதோ அப்பொழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும் என்று கூறி பல முறை பஞ்சாட்சரம் கூறி வணங்கி அடியாட்களின் துணை கொண்டு அந்த சிவலிங்கத்தை கடினப்பட்டுத் தூக்கி திருக்குளத்தின் நடுவே இடுகிறாள். சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது. பிறகு அந்த செல்வந்தரைப் பார்த்து அய்யா நீரின் உள்ளே இருப்பது வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சாட்சத் சிவபெருமான்தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். யாரெல்லாம் நீரைப் பயன் படுத்துவார்களோ எத்தனை காலம் ஆகுமோ? எனக்குத் தெரியாது. ஆனால் எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ அப்பொழுதே இந்த சிவலிங்கம் மிதக்கும் என்று கூறுகிறாள்.

செல்வந்தரோ நகைத்து அம்மா சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே. இல்லை. நம்புங்கள் சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும். இதைக் கல் என்று பார்க்காதீர்கள். பகவான் என்று பாருங்கள் என்று அந்தப் பெண் உறுதியாகக் கூறுகிறாள். செல்வந்தர் யோசிக்கிறார். இவளோ புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து பணம் தர மாட்டேன் என்றால் நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும். மேலும் இவள் கேட்பது மிகச் சிறிய தொகை. அது மட்டுமல்லாது இவள் கூறுவது மெய்யா? பொய்யா? என்பதை சோதிக்க நமக்கு இது நல்ல தருணம். ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால் இவள் புண்ணியவதி என்பதை நானும் ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும். மாறாக நடந்தால் இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும். என்று எண்ணி அவள் கேட்ட தொகையைத் தருகிறார். அதைப் பெற்றுக் கொண்டு வீடு சென்று யார் யாருக்கு தர வேண்டுமோ அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு இறைவா உன்னை நம்பித்தான் இந்த பெரும் தொகையை கடனாக வாங்கி இருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே என்று வேண்டிக் கொண்டு உறங்கச் செல்கிறாள்.

இங்கே செல்வந்தரோ அவசரப்பட்டு விட்டோமோ? ஏமாந்து தனத்தைக் கொடுத்து விட்டோமோ? என்று உறக்கம் வராமல் எப்பொழுது விடியும்? என்று பார்த்து விடிந்ததும் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு கையில் ஒரு ஏடும் எழுத்தாணியும் வைத்துக் கொண்டு ஒரு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன? என்று குறித்துக் கொண்டே வாருங்கள். எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்து விட்டு இவரும் வீட்டின் மேல் விதானத்தில் அமர்ந்து கொண்டு குளக்கரையை பார்வையிடத் துவங்குகிறார். காலை மணி ஆறு ஆகிறது. காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று குளத்து நீரை அருந்தி விட்டு மேலே செல்கிறது. அவ்வளவுதான். குபுகுபுவென சாம்பிராணி குங்கும மணத்தோடு பகவான் (சிவலிங்கம்) மேலே வந்து மிதக்கிறார். அவ்வளவுதான். அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கி விட்டது. ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே ஐந்து லட்சத்திற்கு சமம் என்றால் அந்த புண்ணியவதி செய்த அறப்பணிக்கு முன்னால் என் செல்வம் அத்தனையும் வீண் என்பதை புரிந்து கொண்டு என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே செல்வம்தான் நிலையானது என்று இருந்தேன். அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லோரும் வந்து பாருங்கள் என்று கூற ஊரே சென்று பார்த்தது. அதன் பிறகு தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து தானும் கடைவரை(கடைசி வரை) தர்மம் செய்து வாழ்ந்தார். இது 300 400 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 284

கேள்வி: மேலைத் தவத்தளவே ஆகும் தான் பெற்ற செல்வம் என்னும் ஔவையாரின் வாக்கைப்பற்றிக் கூறி அனுக்ரஹம் செய்ய வேண்டும்:

செல்வம் என்றால் பொருள் செல்வத்தையல்ல. அருள் செல்வத்தையே ஔவைப் பிராட்டி கூறி அருளியிருக்கிறாள். முற்பிறவியில் செய்த தவம் அல்லது நல்ல சத்காரியங்களின் விளைவாகத்தான் அடுத்தடுத்த பிறவிகளில் நல்ல ஆன்மீக வாழ்க்கை இயல்பாகவே ஒருவனுக்கு அமைகிறது. எனவே தான் ஒரு மனிதனின் பார்வைக்கு வேண்டுமானால் ஒரு பிறவி என்பது நீண்ட காலம் போல் தெரியும். ஆனால் மகான்களுக்கும் இறைவனுக்கும் ஒருவனின் பிறவி என்பது ஒரு கணப்பொழுது போல் தெரியும். எனவே தான் வாழுகின்ற பொழுதும் இந்த வாழ்க்கை தாண்டி அடுத்த பிறவிக்கும் ஒரு மனிதன் இப்பொழுதிலிருந்தே நல்ல விஷயங்களை பேசியும் செய்தும் பழகி வந்தால் இந்தப் பிறவியும் இனி அடுத்து வரும் பிறவியும் அருள் வாழ்க்கைக்கு செல்வதற்குண்டான சூழலை ஏற்படுத்தும். கடினப்பட்டு ஏற்படுத்திக் கொள்வது என்பது ஒரு வகை. இயல்பாகவே நல்ல குடும்பத்தில் சாத்வீக குடும்பத்தில் தர்மத்தில் நாட்டமுள்ள குடும்பத்தில் சத்தியத்தில் விருப்பமுள்ள குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அது இயல்பாகவே நல்லவனாக வளர்வது எத்தனை எளிதோ அத்தனை ஒரு எளிதான நிலை ஏற்படும். ஆனால் பாவங்கள் அதிகமாக சேர்த்து விட்ட ஆத்மாவிற்கு இது போன்ற வாய்ப்பு அந்த பாவங்கள் தீரும் வரை இயல்பாக அமைவது என்பது கடினம். எனவேதான் அந்த அருட்செல்வத்திற்கு வேண்டிய தவத்தை அதாவது தவம் என்றால் கண்ணை மூடி செய்வது மட்டுமல்ல. வாழுகின்ற வாழ்க்கை முறையில் கடுமையான நிலையிலும் சத்தியத்தைக் கடைப்பிடிக்கின்ற அந்த நிலையைத்தான் தவம் என்று கூறுவது உண்டு. எனவே அப்படி வாழ்ந்தால் அது அருட்செல்வத்தை சேர்த்துத் தரும் என்பதே பொருளாகும்.

கேள்வி: விருத்தாச்சலத்தில் (கடலூர் மாவட்டம்) அவ்வைப் பிராட்டி மூத்தோனை வணங்கி கயிலையை அடைந்ததைப் பற்றியும் அமிர்த சஞ்சீவினி பற்றியும் கூறி அனுக்ரஹம் செய்ய வேண்டும்:

கோவில் உள்ள ஊர் விருத்தாச்சலம். கடலூர் மாவட்டம். திருக்கோவில் விருத்தகிரீஸ்வரர் ஆலயம்

மிக மிக உயர்வான சிறப்பான ஆலயம். தடை நீங்க பிள்ளையை (வினாயகர்) சென்று வணங்க ஏற்றதொரு ஆலயமப்பா. இதோடு இங்கும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்கு வழி இருக்கிறது. பிற அற்புத விஷயங்களை தக்க காலத்தில் கூறுவோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 283

கேள்வி: அன்பே சிவம் விளக்கம்:

இறை அன்பு உருவமாக இருக்கிறது. அல்லது உலகத்தின் ஒட்டு மொத்த கருணையும் அன்பும் சேர்ந்தால் அதுதான் இறை என்பதன் பொருள்தான் இது. ஆனால் மனிதர்களுக்கு பல்வேறு துன்பங்கள் வரும் சமயம் இறைவன் அன்பு மயமானவன் இறைவன் கருணை கொண்டவன் என்றால் ஏற்க முடியவில்லையே? எனக்கு ஏன் இத்தனை இடர் வருகிறது? என்ற ஐயம் (சந்தேகம்) இருக்கிறது. அவனவன் வினைகளை உணர்ந்து கொண்டால் கர்மாக்களை புரிந்து கொள்ள முயற்சி செய்தால் பிறவிகளை புரிந்து கொள்ள முயற்சி செய்தால் அப்பொழுது புரியும் இறைவன் அன்பு மயமானவன் என்று. பல பிறவிகளில் சேர்த்த பாவங்களையெல்லாம் சிறிது சிறிதாகத்தான் நுகர இறைவன் அனுமதிக்கிறார் என்றாலே அதுவே இறைவனின் கருணையாகும். ஒட்டு மொத்தமாக ஒரே கணத்தில் ஒரு மனிதனின் பாவங்களையெல்லாம் அவன் நுகர வேண்டும் என்றால் அதை விட கடுமையான தண்டனை உலகினில் வேறு எதுவும் இல்லை. சில காலம் அரவணைப்பு சில காலம் சந்தோஷம் சில காலம் துயரம் என்று மாறி மாறித்தான் இறைவனும் தருகிறார். மனிதர்கள் எத்தனை கொடுமைகள் செய்தாலும் இந்தப் பூமியை எத்தனை பாழ் படுத்தினாலும் எத்தனை இடர் படுத்தினாலும் எத்தனை கீழ்த்தரமாக நடந்து கொண்டாலும் மீண்டும் அரவணைத்துக் கொள்கிறாரே? எனவே அந்த இறை அல்லது சிவம் அன்பு என்பதில் இரு வேறு கருத்து ஏதும் இல்லையப்பா.

கேள்வி: சரணாகதி தத்துவத்தை விளக்கிக் கூற வேண்டும்:

விடம் (விஷம்) அருந்து என்று குருவோ அல்லது குரு வடிவமாக இறை வந்து கூறினால் இது விடமாயிற்றே? (விஷமாயிற்றே) இது அருந்தினால் உயிர் போய் விடுமே? விடத்தை (விஷத்தை) யாராவது அருந்துவார்களா? அவன்தான் கூறினான் என்றால் இவனுக்கு எங்கே போயிற்று புத்தி? அவன் தான் குரு என்று கூறினால் இவனுக்கு இறைவன் புத்தியைத் தந்திருக்கிறானே? மறுத்திருக்க வேண்டாமா? என்றெல்லாம் அறிவு கூறினாலும் கூறியது அல்லது குருவாக நம்பிய அந்த உன்னதமான ஆத்மா கூறியது என்பதால் அதனை அப்படியே எந்தவிதமான காரண காரியங்கள் பாராமல் எவன் ஏற்கிறானோ அதுதான் பரிபூரண சரணாகதி தத்துவத்தை நோக்கி செல்கின்ற நிலையாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 282

கேள்வி: திருமண தடை இருக்கும் பெண்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

இறைவன் அருளாலே பல்வேறு ஆண்களுக்கு திருமண தோஷம் இருப்பதால் திருமணத் தடை ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு பெண்களுக்கு திருமண தோஷம் இருப்பதால் திருமணத் தடை ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் வருத்தம் கொள்கிறார்கள். இதை தோஷம் என்று நாங்களும் கூறினாலும் கூட வேடிக்கையாகக் கூறுகிறோம் இதை ஒரு வகையான வரம் என்றுதான் அனைவரும் நினைத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே திருமணம் ஆகியிருக்கக் கூடிய ஆண்களையும் பெண்களையும் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாமா? என்று ஒரு முறைக்குப் பலமுறை கேட்டு விட்டு இதுபோல் பரிகாரங்களை செய்வது திருமண ஆகாத இளைஞர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும். இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் திருமண நிகழ்வு குறித்து யாம் கூற வருவது யாதென்றால் சிலருக்கு மிக மிக சிறிய வயதிலேயே மணம் நிகழ்ந்து விடுகிறது. சிலருக்கோ எல்லா வகையான தக்க சூழல் இருந்தும் திருமணம் என்பது தடைபட்டுக் கொண்டே செல்கிறது. பொதுவாக ஒவ்வொரு விதமான ஜாதகத்திலும் திருமணத் தடைக்கு விதவிதமான தோஷங்கள் காரணமாக இருந்தாலும் ஒட்டு மொத்தமாக அதனை களத்திர தோஷம் என்று ஜோதிடம் கூறுகிறது.

இதுபோல நிலையிலே பொதுவாக இது குறித்து இந்தத் தருணத்திலே பரிகாரங்களை தெரிந்து கொள்ள விரும்பும் சேய்கள் (பிள்ளைகள்) நவக்ரக தம்பதியரை நாடிச்சென்று இயன்றவரை நல்ல முறையில் வழிபாடு செய்வதும் வழிபாடு என்றால் என்ன? என்று அடுத்து ஒரு வினா வரும் சமயத்திலே வாய்ப்பு உள்ளவர்கள் மனம் உள்ளவர்கள் உயர்வான பொருள்களைக் கொண்டு அபிஷேகமோ நல்ல நறுமணமிக்க மலர் ஆரங்களை சாற்றி வழிபாடு செய்வதும் வாய்ப்பு உள்ளவர்கள் மனம் உள்ளவர்கள் ஏழை ஆண் பெண்களுக்கு திருமண உதவி செய்வதும் ஆலயங்களில் தெய்வத் திருமண விழா வைபவம் நிகழும் பொழுது அதில் இயன்ற அளவு பங்கெடுத்துக் கொள்வதும் இந்தத் திருமண தோஷம் நிவர்த்தி ஆவதற்கு வழியாகும். இவையெல்லாம் கடினம் என்று எண்ணக் கூடியவர்கள் அருகில் உள்ள ஆலயம் சென்று குறைந்த பட்சம் ஏக மண்டலம் (48 தினங்கள்) ஒரு பொழுது விரதத்தோடு சப்த வதன தீபம் அதாவது ஏழு முக நெய் தீபம் இறைவனுக்கோ இறைவிக்கோ பொதுவாகவே கூறுகிறோம். சிவன் ஆலயமாக இருந்தாலும் மகாவிஷ்ணு ஆலயமாக இருந்தாலும் மகாலட்சுமி ஆலயமாக இருந்தாலும் அம்பாளாக இருந்தாலும் எந்த இறை வடிவமாக இருந்தாலும் பரிபூரண சரணாகதியோடு சப்த வதன நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும் தீபம் ஏற்ற இயலாத நிலையிலே தக்கதொரு மலர் ஆரம் (மாலை) தெய்வ ரூபத்திலே திருவடி(பாதம்) வரை அந்த மலர் ஆரம் இருக்கும் வண்ணம் தொடர்ந்து சுக்ர வாரம் (வெள்ளிக்கிழமை) அல்லது மங்கள வாரம் (செவ்வாய்க்கிழமை) அல்லது அவரவர்கள் ஜென்ம நட்சத்திரம் வருகின்ற பொழுது இது எதுவும் நடைமுறையில் சாத்தியம் இல்லாதவர்கள் இயன்ற பொழுது சென்று வழிபட்டு வர கட்டாயம் திருமண தோஷம் அகன்று நல்விதமாய் திருமணம் நடப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

தொழில் தோஷமோ திருமண தோஷமோ அல்லது திருமணம் நடந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கக்கூடிய தம்பதியரோ இதுபோல் வழிபாட்டை செய்யலாம். இந்த தருணத்திலே யாங்கள் (சித்தர்கள்) மீண்டும் மீண்டும் கூறுகிறோம். கேட்கின்ற மனிதர்களுக்கு இது அயர்வைத் தரலாம். சலிப்பைத் தரலாம். இருந்தாலும் கூற வேண்டியது எமது கடமை என்பதால் கூறுகிறோம். ஒரு மனிதனின் துன்பங்களுக்கு அவன் மட்டுமே காரணம் என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும். பிறர் மூலம் ஒரு துன்பம் வருவது போல் தோன்றினாலும் அதற்கு மூல காரணம் என்றோ செய்த வினை என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொண்ட பிறகு கூடுமானவரை மனம் வாக்கு (சொல்) காயம் (உடல்) இவற்றால் பிறருக்கு எந்தவிதத் துன்பமும் செய்யாமல் வாழப் பழக வேண்டும். வெறும் வார்த்தைதானே என்று வார்த்தையால் பேசி யாரையும் துன்புறுத்தாமல் கூடுமானரை பேசினால் இறை நாமம் அல்லது சத்செயல் அல்லது நாம சங்கீர்த்தனம் அல்லது ஏற்புடைய சொல் என்று வைத்துக் கொண்டு இயன்றளவு உடல் ரீதியாகத் தொண்டும் வாய்ப்பும் மனமும் உள்ளவர்கள் தனம்தனை இழந்தாவது தர்மத்தையும் சேர்த்துக் கொண்டால் கட்டாயம் எல்லா வகையிலும் வருகின்ற துன்பம் குறையும். ஆனால் இது நான் ஈட்டிய பொருள். நான் எதற்கு பிறருக்குத் தர வேண்டும்? என்ற மனப்பான்மையோடு இருப்பவர்கள் அவன் செய்த பாவம் அவன் வறுமையில் வாடுகிறான். அதில் தலையிட்டு அவன் விதியை நான் ஏன் மாற்ற வேண்டும்? என்று விதண்டாவாதம் செய்பவர்கள் இப்படியே எல்லோருக்கும் எல்லாவற்றையும் இலவசமாகத் தந்தால் அவன் சோம்பி இருக்க மாட்டானா? என்று அறிவு பூர்வமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசக்கூடியவர்கள் அவரவர்கள் வழியில் செல்லலாம்.

இந்த ஜீவ அருள் ஓலையிலே வாக்கைக் கேட்க வேண்டும் தொடர்ந்து இந்த வழியில் வர வேண்டும் என்றால் யாங்கள் (சித்தர்கள்) கூறுகின்ற வழிமுறை நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கலாம். சில சமயம் அறிவுக்கு புறம்பு போல் தோன்றலாம். இவற்றையெல்லாம் நினைத்து மனம் குழப்பம் அடையாமல் எமது வழியில் வந்தால் தொடர்ந்து பாவ வினைகளிலிருந்து விடுபட்டு மெல்ல மெல்ல ஒவ்வொரு மனிதனும் எதிர்பார்க்கின்ற நிம்மதி என்பது கிட்டும் இறைவனருளால்.

சுலோகம் -159

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-40

புலன்கள் மனம் புத்தி இவையெல்லாம் இந்தக் காமத்தின் இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் காமம்தான் மனம் புத்தி புலன்களைக் கொண்டு ஞானத்தை மறைத்து மனிதனை மோகத்தில் உட்படுத்துகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

பார்த்தல் கேட்டல் சுவைத்தல் நுகர்தல் உணர்தல் என்ற ஐம்புலன்கள் மற்றும் மனம் புத்தி ஆகிய இந்த மூன்றும் மனிதனின் அதிகாரத்திற்கு உட்பட்டு இருப்பதால் இதில் ஆசைகள் தனது இருப்பிடமாக இருந்து கொண்டு செயல்படுகிறது. இந்த ஆசை தனது இருப்பிடமான புலன்கள் மனம் புத்தி வழியாக செயல்பட்டு ஞானத்தை மறைத்து உண்மை எது என்று தெரிந்து கொள்ள விடாமல் மனிதனை மயக்கத்தில் வைக்கிறது.

ஆசைகள் ஐம்புலன்கள் மனம் புத்தியின் வழியாக மனிதனிடம் போகங்களில் சுகம் உள்ளது என்று ஆசைகாட்டி மனித சக்திகளை மங்கச் செய்து பாவச்ல செயல்களில் ஈடுபடுத்தி மனிதனை வீழ்ச்சி அடையச் செய்கிறது. ஆகவே இறைவனை அடைய விரும்பும் மனிதன் ஐம்புலன்கள் மனம் புத்தி ஆகியவற்றிலிருந்து வரும் ஆசைகளை உடனடியாக விரட்டி அடித்து அழித்து விட வேண்டும். இயலவில்லை என்றால் செயல்பட விடாமல் தடுத்து வைக்க வேண்டும். இந்த ஆசைகள் வீட்டிற்குள் புகுந்து விட்ட பகைவனைப் போல் மனித பிறவி என்ற விலை மதிப்பற்ற செல்வத்தை வீணடித்து விடும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 281

கேள்வி: ஒரு ஆன்மாவிற்கு ஒரு பிறவி ஏற்படும் பொழுது அதன் மொத்த தொகுப்பாக பல கோடி பிறவிகளின் தொகுப்பாக அமையுமா? அல்லது ஒரு குறிப்பிட்ட கர்மாவைக் கழிப்பதற்காக ஒரு பிறவியும் இன்னும் பல பிறவிகளும் வேண்டியிருக்குமா?

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் பிறவிகளின் சூட்சுமம் கர்மாக்களின் சூட்சுமம் ஒரு பிறவியில் ஒரு ஆத்மா நுகருகின்ற கர்மக் கணக்கின் சூட்சுமம் இறை மட்டும் அறிந்த ரகசியமப்பா. இருந்தாலும் இறை நிலைக்கு சமமான ரிஷிகளும் ஞானிகளும் ஓரளவு உணர்ந்தாலும் அது தெய்வீக ரகசியம் என்பதால் பொதுவாக சராசரி மனிதர்கள் அறிவது கடினம். அப்படி அறிய முயற்சி செய்தாலும் குழப்பம்தான் மிஞ்சும். இருந்தாலும் பொதுவாக குறிப்புக்காக கூறுகிறோம். சில ஆத்மாக்கள் ஒரு குறிப்பிட்ட பாவத்தையே கழிப்பதற்கே ஒரு பிறவியல்ல பல்வேறு பல் நூறு பல்லாயிரம் பிறவிகள் எடுக்க நேரிடும். சில ஆத்மாக்கள் பலவிதமான பாவங்களை நுகர்வதற்கு பல நூறு நூறு நூறு பிறவிகள் எடுக்க நேரிடும். இது அந்தந்த தனிப்பட்ட ஆத்மாவின் கர்மக்கணக்கிற்கும் அதை எப்படி அந்த ஆத்மா நுகர வேண்டும்? என்று இறைவன் தீர்மானிக்கிறாரோ அதைப் பொறுத்தும் அமைவதாகும்.

கேள்வி: மாந்தர்களுக்குப் (மனிதர்களுக்கு) புரியும் வண்ணம் அற்புதங்கள் நடத்திக் காட்டுகிறேன் என்று கூறியிருக்கிறீர்கள். அது எப்பொழுது நடக்கும்?

அற்புதம் என்று கூறி அதனை அற்புதமாய் செய்வதைவிட அற்புதம் இது என்று உணரும் வண்ணம் செய்வதே யாங்கள் (சித்தர்கள்) எப்பொழுதுமே விரும்புகிறோம். எனவே ஒன்றை அற்புதமாய் செய்து விட்டோம் என்று நாங்கள் (சித்தர்கள்) அற்பமாய் கூறாமல் நடப்பதெல்லாம் அற்புதம் என்று உணரும் வண்ணம் சேய்களை (பிள்ளைகளை) மாற்றுதே அற்புதமப்பா.

சுலோகம் -158

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-39

அர்ஜூனா திருப்தி அடையாத நெருப்பைப் போன்றதும் காமம் என்ற வடிவத்தில் உள்ளதும் ஞானிகளுக்கு என்றுமே பகைவனுமாகிய இந்த காமத்தினால் மனிதனுடைய ஞானம் மறைக்கப் பட்டிருக்கிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

நெருப்பில் எவ்வளவு நெய்யையும் விறகையும் போட்டாலும் நெருப்பானது போதும் என்று சொல்லாமல் மேலும் அதிகமாக எரிந்து கொண்டே இருக்கும். நிறையவும் நிறையாது. அது போலவே இறைவனை உணர்ந்த ஞானிகளுக்கு என்றுமே பகைவனாக இருக்கும் இந்த ஆசைகளை எவ்வளவு அனுபவித்தாலும் மேலும் இந்த ஆசைகளை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும் வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த ஆசை என்ற பகைவனும் அதன் விளைவாக வரும் கோபம் என்ற பகைவனும் மனிதனுடைய ஞானத்தை மறைத்து வைக்கிறது.

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100

11 முகம் கொண்ட முருகன்

முருகன் 11 தலை 22 கைகளுடன் அருள்மிகு சுவாமிநாத சுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இராமநாதபுரம் குண்டுக்கரை பகுதியில் இக்கோவில் உள்ளது. சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பு முருகன் இத்தலத்துக்கு வந்த முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். மற்ற கோயில்களில் எல்லாம் பிரணவ மந்திரத்தின் பொருள் கூற முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால் இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. முருகனே சிவன் சிவனே முருகன். இருவரும் ஒருவரின்றி வேறில்லை என்பதற்கேற்ப இங்கு தகப்பன் சுவாமி குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிப்பது மிகச்சிறப்பான அம்சமாகும். கோயிலுக்குள் 18 திருக்கரத்துடன் கூடிய 7 அடி உயர துர்க்கை சிலையும் உள்ளது.

300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்த போது இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும் உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார். ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமி மலையானின் பெயரான சுவாமிநாதன் என்று பெயர் சூட்டினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 280

கேள்வி: பைரவர் வழிபாடு கால வைரவர் வழிபாடு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு இந்த மூன்று வழிபாடுகளையும் ஒரே மாதிரி செய்யலாமா? மேலும் தேய்பிறை அஷ்டமி வளர்பிறை அஷ்டமி இதில் எது உகந்தது?

அம்மாவை வணங்கு. தாயை வணங்கு என்று கூறினால் எல்லாம் ஒன்றுதானப்பா. பைரவர் என்றால் சிவனின் அம்சம்தான். இந்த பைரவருக்கு 64 வடிவங்கள் இருப்பதாக இப்பொழுது மனிதர்கள் எண்ணியிருக்கிறார்கள். 108 க்கும் மேற்பட்ட பைரவர் வடிவங்களும் வழிபாடுகளும் இருந்தது உண்மை. தற்சமயம் சில வைரவ வழிபாடுகள் மட்டும் இந்தப் பூவுலகில் இருக்கிறது. எனவே எந்த பைரவரை உள்ளன்போடு எப்படி வழிபட்டாலும் நன்மைதான். பொதுவாக அஷ்டமியில் லோகாய காரியங்களை செய்யாமல் இறைவனை வணங்குவது தொண்டுகள் ஆற்றுவது மனிதனுக்கு ஏற்றது. அவனுடைய கடுமையான பாவ தோஷங்கள் வெளிப்படக்கூடிய தருணங்களில் அஷ்டமியும் நவமியும் ஒன்று என்பதால்தான் முற்காலத்திலே லோகாய செயலையெல்லாம் செய்ய வேண்டாம் என்று கூறினார்களே தவிர ஏதோ அஷ்டமியும் நவமியும் தீமை பயக்கக்கூடிய தினமாக மனிதன் எண்ணி விடக்கூடாது. ஒரு மனிதனுக்கு சந்திராஷ்டமம் என்றால் அன்றும் அந்த தினங்களில் அவன் இறை வழிபாடும் தர்ம காரியங்களும் தொண்டும் செய்து வருவது ஏற்புடையதாக இருக்கும். இதுபோல் நிலையிலே எந்த காலமாக இருந்தாலும் பைரவரை உள்ளன்போடு வழிபடலாம். அது மட்டுமல்லாது நல்விதமாய் தீப வழிபாடோ மலர் கொண்டு வழிபாடோ அல்லது ஏதும் இயலாதவர்கள் மனமொன்றி பிராத்தனையோ செய்து வரலாம். இதற்கு அஷ்டமி வரை பொறுத்திருக்க வேண்டியதில்லை. அன்றாடமும் வணங்கலாம். அவரவர்கள் வாய்ப்பு போலவும் வணங்கலாம். எல்லா காலத்திலும் இறைவனை வணங்கலாம். இறைவனை வணங்க காலம் தேவையில்லை. அவனவன் உள்ளம் பக்குவம் அடைந்தால் அதே போதும்.

கேள்வி: மதிய உணவை ஒரு சிறந்த யோகிக்கு வழங்கினால் ஒருவருடைய பூர்வ வினை கழிந்து மறு பிறப்பு இல்லாத நிலையை அடைவார்கள் என்ற கருத்து பற்றி:

தொடர்ந்து எல்லோரையும் யோகியாகப் பார்ப்பது ஒன்றுதான் இதற்கு ஏற்ற வழியாகும். எல்லோருக்கும் வழங்கிக் கொண்டே போவதுதான் சிறப்பு அப்பா. குறிப்பாக இன்ன ஆலயம் செல் இன்ன திதியில் செல் இந்த நட்சத்திரத்தில் செல் இந்தக் கூட்டத்திலே மூன்றாவது வரிசையில் நான்காவதாக அமர்ந்திருக்கிறானே அவன்தான் யோகி என்றால் மனிதன் என்ன செய்வான்? அவனை மட்டும் நன்றாக கவனித்து விட்டு வருவான். இது சுயநலம் இல்லையா? எல்லோருக்கும் உதவ வேண்டும். எல்லோருக்கும் இயன்றதை செய்ய வேண்டும். பிறகு அது தன்னால் யோகியின் கரங்களுக்கு சென்று சேரும். யோகியை யாரும் தேட வேண்டாம். மெய்யான அன்பர்களை நாடி யோகி எனப்படுபவன் தன்னால் வருவான்.

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி கோட்டப்பன் என்னும் திருப்பெயரில் ஒரு பீடத்தில் அமர்ந்து ஒரு காலை மற்றொன்றின் மீது ஏற்றி தலையை சிறிது உயர்த்தி சாய்ந்தபடி வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். வசீகரமான பார்வையுடன் நான்கு கைகளிலும் பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. ஒளிரும் வெள்ளிக் கிரீடம் தலையில் உள்ளது. விஷ்ணு சிவலிங்கம் மற்றும் தேவி சிலைகளும் இதே சன்னதியில் செதுக்கப்பட்டுள்ளன.

இக்கோவில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள முள்ளூர்கரா இரயில் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் முள்ளூர்கர பஞ்சாயத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமான இருநிலம்கோட்டில் அமைந்துள்ளது. பிரதான சாலைக்கு மிக அருகில் பழமையான சிவன் கோவில் இது. இது கேரள அரசின் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. இக்கோவில் குகைக் கோயிலாக விளங்கி வருகின்றது. ஒரு குகைக்குள் ஒரு சிறிய குன்றின் கீழ் விளிம்பில் பாறையில் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த குகை இருக்கும் குன்று 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் திடமான பாறைகளுடன் அமைந்துள்ளது.

இக்கோவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறியப்படாமல் இருந்தது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சில கிராமவாசிகள் தற்செயலாக இதைக் கண்டுபிடித்தனர். ஒரு நாள் மழை பெய்து கொண்டிருந்த போது ஒரு பெண் தொழிலாளி குகைக்குள் சென்றார். அங்கே அவள் அரிவாளைக் கூர்மைப்படுத்த ஆரம்பித்தாள். அப்போது அவள் விரலில் ஒரு சிவப்பு திரவத்தைக் கண்டு தன் கை வெட்டப்பட்டு இரத்தம் வருகிறது என்று பயந்து தன் கையில் காயத்தை தேடினாள். கையில் காயங்கள் ஒன்றும் இல்லை. சிகப்பு திரவம் வரும் இடத்தை தேடினாள். பதட்டத்துடனும் ஆர்வத்துடனும் அவள் அரிவாளைக் கூர்மைப்படுத்திய பாறைப் பகுதியைக் கவனித்தாள். அந்த திரவம் மெதுவாக துளிதுளியாக பாறையில் இருந்து வெளியேறுவதைக் கண்டாள். அவளின் பதட்டம் அதிகரித்தது. அவள் கிராம மக்களிடம் ஓடிச் சென்று நடந்த சம்பவத்தைப் பற்றி சொன்னாள். அவர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்தார்கள். அவர்கள் பாறைத் தளத்தைக் கண்டு பிடித்து கவனமாகப் பார்த்தார்கள். அதே திரவம் வெளி வருவதைக் கண்டார்கள். புதர்களில் இருந்த புல் மற்றும் புதர்களை மெதுவாகவும் கவனமாகவும் அகற்றத் தொடங்கினார்கள். இறுதியில் தட்சிணாமூர்த்தி தெய்வத்தின் முழு வடிவத்தைக் கண்டதும் திகைத்து பரவசத்தில் ஆழ்ந்தனர். கூப்பிய கரங்களுடன் இறைவனுக்கு வணக்கம் செலுத்தி பூஜைகள் செய்தார்கள். பிரதான கோவிலுக்கு மிக அருகில் சிறிய தேவி கோவில் உள்ளது. இங்கு வழிபடப்படும் அம்மன் கந்தன்காளி என்று அழைக்கப்படுகிறார்.