சாயா சோமேஸ்வரர் ஆலயம்

மூலவர் சோமேஸ்வரர் லிங்க வடிவில் இருக்கிறார். இங்கு மூன்று கருவறைகள் ஃ வடிவில் அமைந்துள்ளன. சிவன் விஷ்ணு சூரியன் ஆகிய மூவருக்கும் முக்கோண அமைப்பில் அமைந்த ஆலயம் இது. இக்கோவிலின் மூன்று கருவறைகளில் ஒன்றுக்கு பிரம்ம கருவறை என்றும் மீதி இரண்டுக்கு லங்க கருவறை என்றும் பெயர் என்று கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது. பிரதான கோவிலில் உள்ள சோமேஸ்வரர் லிங்கத்தின் மீது நாள் முழுவதும் ஒரு நித்திய நிழல் இருப்பதால் இந்த கோவிலுக்கு சாயா சோமேஸ்வரர் கோயில் என்று பெயர் வந்தது. சாயா என்பது நிழலை குறிக்கும். இந்த கோயிலுக்கு எதிரில் ரங்க மண்டபம் என்ற அர்த்த மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தூண்களை கொண்ட ஆச்சர்யமான சிற்ப வேலைப் பாடுகள் உள்ளன. இது நேரடியாக சூரிய ஒளி படுமாறு அமைந்துள்ளது. இது திரிகூடலாயம் (மூன்று சன்னதி வளாகம்) என்று அழைக்கப்படுகிறது. மூன்று ஆலயங்களும் சிக்கலான செதுக்கப்பட்ட தூண்களுடன் ஒரு பொதுவான மண்டபத்தை பகிர்ந்து கொள்கின்றன. இந்த சிற்பங்கள் மகாபாரதம் இராமாயணம் போன்ற புராணங்களின் காட்சிகளை சித்தரிக்கின்றன. இந்தக் கோயிலின் விமானம் பிரமிடுகளை ஒத்துள்ளது. இக்கோவிலை சூரியனின் மனைவியான சாயாதேவி வழிபடுவதாக தல வரலாறு சொல்கிறது. சாயா என்பதற்கு நிழல் என்று பொருள். அதன் படியே சூரியனுக்கான சுவாமி சன்னிதியின் எதிரே சூரியன் பயணம் செய்ய ஏழு குதிரைகளுடன் கூடிய பீடம் மட்டுமே அமைந்துள்ளது. சிலை வடிவம் இல்லை.

அறிவியலின் படி எந்த ஒரு பொருளின் மீது சூரிய ஒளி பட்டாலும் அந்த பொருளின் நிழல் அதற்கு முன்பு விழும் பின் சூரியன் நகர நகர அந்த நிழலும் நகரும். ஆனால் இந்த கோயிலில் லிங்க கருவறையில் லிங்கத்தின் பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது. ஆனால் காலையில் எந்த இடத்தில் இந்த நிழல் இருந்ததோ சூரியன் மறையும் வரை அதே இடத்தில் இருக்கிறது. இந்த நிழல் சூரியனின் நகர்விற்கேற்ப நகர்வதில்லை. இந்த கருவறைக்கு முன் நான்கு தூண்கள் உள்ளன இதில் எந்த தூணின் நிழல் கருவறைக்குள் விழுகிறது என்றும் தெரியவில்லை. எந்த தூணின் பின் நின்றாலும் நம் நிழல் விழாமல் தூணின் நிழலே விழுகிறது. ஆனால் பிரம்ம கருவறைக்கு முன் நின்று பார்த்தால் பிரம்மனுக்கு நான்கு தலை என்பதை சொல்லும் விதமாக நம் நிழல் நான்காக விழுகிறது அதுவும் எதிர் திசையில் விழுகிறது. இது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.

கோவிலின் கிழக்கே வற்றாத திருக்குளம் உள்ளது. கோவிலின் வாசல் மூன்று புறம் இருந்தாலும் தெற்கு வாசலை நோக்கியே ஆலய நுழைவு வாசல் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கியபடி சாயா சோமேஸ்வரர் காட்சி தருகிறார். எதிரில் நந்தி பலிபீடம் உள்ளது. ஆலயத்திற்கு வடக்கு நோக்கிய விஷ்ணு சன்னிதி மேற்கு நோக்கிய சூரியன் சன்னிதி இருக்கின்றன. இவ்வாலயத்தில் அமைந்திருந்த விஷ்ணு சூரியன் நந்திகள் அம்பாள் சிலைகள் டெல்லி சுல்தானியர்களின் காலத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்பின் சிதைவால் அங்கு பீடங்கள் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கருவறை முன்புறம் விநாயகர் முருகன் பீடங்கள் அமைந்துள்ளன. கருவறையில் ஐந்து படிகள் கீழே சாயா சோமேஸ்வரர் பூமியோடு தன்னைப் பிணைத்துக் கொண்டு லிங்கத் திருமேனியில் நமக்கு காட்சியளிக்கிறார். சிவன் விஷ்ணு சூரியன் சன்னிதிகளின் எதிரே மையமாக நான்கு நாற்பட்டை வடிவத் தூண்கள் அமைந்துள்ளன. இந்தத் தூண்களின் கற்கள் அபூர்வமானதாக உள்ளன. இதில் மகாபாரதம் ராமாயணம் சிற்பங்கள் வெகு நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. ஆலயத்தில் விநாயகர் குமாரசுவாமி சாயா சோமேஸ்வரர் மகாவிஷ்ணு சூரியன் யோகினி மாதா நடராஜர் பைரவர் காளிக்கா மாதா ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளன. ஆலய வளாகத்தில் தனியே சிறிய சிவாலயம் ஒன்றும் உள்ளது. தல மரமாக அவதம்பர் என்ற அபூர்வ மரம் உள்ளது. இதில் தத்தாத்ரேயர் தவமியற்றி உள்ளார்.

கோவில் ஆலய வளாகத்தில் 7 நந்திகள் முகலாயர்களால் தலை வெட்டப்பட்ட நிலையிலும் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி அளிக்கின்றன. அதில் முதல் நந்தியை கழுத்தில் கைகளால் தடவிப் பார்த்தால் உயிருள்ள நந்தியைத் தழுவுவது போன்று இருக்கும். இது முன்னோர்களின் கலைத் திறமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த கோயில் முக்கோன வடிவிலும் கருவறை விமானம் பிரமிடு அமைப்பிலும் கட்டப்பட்டு உள்ளது. 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் பனகால் பிராந்தியத்தில் தெலுங்குச் சோடர்களும் குண்டூரு சோழர்களும் காக்கத்தியப் பேரரசின் முதலாம் பிரதாபருத்திரன் ஆகியோரின் காலத்தில் கட்டப்பட்டது. ஐதராபாத்திலிருந்து 100 கிமீ தொலைவில் தெலுங்கானா மாநிலம் நல் கொண்டா அருகில் அமைந்துள்ளது சாயா சோமேஸ்வரர் கோயில். பனகல் என்ற ஊரின் தென்பகுதியில் சாயா சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 255

கேள்வி: ஜேஷ்டா தேவியைப் பற்றி முழுமையாக சொல்லுங்கள்:

இறைவனின் கருணையால் யாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல பரம் பொருளின் வெவ்வேறு வடிவங்கள் விதவிதமான தெய்வ நாமத்தில் விளங்கி மனிதர்களின் தேவைக்கு ஏற்ப அருளைத் தருகிறது. ஒரே மனிதன் தந்தையாக சகோதரனாக கணவனாக அலுவலகத்தில் அதிகாரியாக எப்படியெல்லாம் உருமாற்றம் அடைகிறானோ அப்படிதான் பரம் பொருள் விதவிதமான வடிவங்களில் மனிதர்களுக்கு அருளை வாரி வழங்குகிறது. இதுபோல் நிலையிலே துயில் (தூக்கம்) தொடர்பான பிரச்சனைகள் அமைதியற்ற மனம் கொண்டவர்கள் நல்ல முறையிலே வழிபட வேண்டிய தெய்வ வடிவம் இன்னவன் வினவிய (கேள்வி கேட்டவர்) தேவியின் வடிவமாகும். இந்த அளவிற்கு இதனைப் புரிந்து கொண்டு இந்த வழிபாட்டில் கவனம் செலுத்தினால் நன்மையைத் தரும்.

கேள்வி: அயல்நாடு (செல்லும்) ஆசை நிறைவேற வேண்டும்:

கேது பகவானை வணங்கலாம். நவகிரக வழிபாட்டை செய்யலாம். கருடாழ்வாரை வணங்கலாம். அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கலாம். இயல்பாகவே ஜாதகத்தில் ஆழி (கடல்) தாண்ட வேண்டும் என்ற நிலை இருக்கும் மனிதர்களுக்கு சிறிய முயற்சியினால் வெற்றி வந்து விடுகிறது. இல்லையென்றால் சற்று அதிகமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. இப்படிதான் வேண்டும் என்பதை விட இறைவா கடல் தாண்டி செல்ல வேண்டும். அதுபோல தேசம் பார்க்க வேண்டும். அங்கும் சென்று பொருள் ஈட்ட வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது. இது எனக்கு ஏற்றதென்றால் நிறைவேற்றித் தா. இதனால் நன்மையை விட தீமை அதிகம் விளையும் என்றால் நீயே தடுத்து விடு என்று இறையிடமே இந்த பிரச்சனையை ஒப்படைத்து பிராத்தனை செய்வதே ஏற்புடையது.

சுலோகம் -141

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-22

அர்ஜூனா எனக்கு மூவுலங்களில் செய்ய வேண்டிய கடமை என்பது ஏதும் கிடையாது. நான் அடையாதது ஏதும் இல்லை. நான் அடையக் கூடியதும் ஏதும் இல்லை. இப்படி இருந்தாலும் எனது கர்மங்களை நான் தொடர்ந்து இயற்றி வருகிறேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மூன்று உலகங்களான மேலோகம் பூலோகம் பாதாளலோகம் ஆகிய மூன்று லோகங்களிலும் நான் செய்தே ஆக வேண்டும் என்ற எனக்கான கடமைகள் என்று எதுவும் இல்லை. ஆசைப்பட்டும் ஆசைப்படாமலும் அடைய வேண்டியது அனைத்தையும் நான் அடைந்து விட்டேன். இனிமேல் நானாக சென்று அடைய வேண்டியது என்றும் எதுவும் இல்லை. ஆனாலும் உலகத்தின் நன்மைக்காக நான் செய்ய வேண்டிய செயல்களை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறேன்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 254

அகத்திய மாமுனிவர் கூறும் கதை:

இறைவன் அருளால் ஒரு சிறிய காதையை (கதை) கூறுகிறோம் புரிந்து கொள்ளப்பா. உங்களில் பலருக்கு இராமாயணம் தெரிந்திருக்கும். அதிலே குகன் எனப்படும் ஒரு பாத்திரம் இருக்கிறது. அந்த குகன் யார் தெரியுமா? அதற்கு முந்தைய முந்தைய பிறவி ஒன்றில் ஒரு மிகப் பெரிய ஞானியின் சீமந்த புத்திரன் செல்ல புத்திரன். மிகப்பெரிய ஞானியின் பிள்ளையான இவனும் பால்ய வயதிலேயே பரிபூரண ஞானத்தை பெற்றவன். முருகனின் பரிபூரண அருளைப் பெற்றவன். ஒரு முறை ஒரு முக்கியமான பிரச்சனைக்காக அந்த ஆசிரமத்தை அடுத்துள்ள தேசத்து மன்னன் தன் பரிவாரங்களுடன் அந்த முனிவரை பார்க்க வருகிறான். அச்சமயம் ஆசிரமத்தில் முனிவர் இல்லை. வெளியே ஸ்தல யாத்திரை சென்றிருக்கிறார். பால்ய வயது முனிகுமாரன் மட்டும் அங்கே அமர்ந்திருக்கிறான். வந்த மன்னன் (உன்) தந்தையில்லையா? என்று வினவுகிறான். அமருங்கள் என்று கூறி முனிகுமாரன் (அந்த மன்னனுக்கு) உபசரணை செய்த பிறகு தந்தை இங்கு இல்லை வெளியே சென்றுவிட்டார் என்று கூறுகிறான். சரி நான் பல்வேறு குழப்பத்திற்காக (இங்கு) வந்தேன். உன் தந்தை வந்தவுடன் (மீண்டும்) வந்துக் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அரசன் எழ தவறாக எண்ண வேண்டாம் அரசே என்னிடம் உங்கள் ஐயத்தைக் கூறுங்கள். முடிந்தால் நான் தீர்த்து வைக்கிறேன். என் தந்தையின் உபதேசம் ஓரளவு எனக்கு இருக்கிறது. இறைவன் அருளைக் கொண்டு நான் தீர்த்து வைக்கிறேன் என்றான் முனிகுமாரன்.

அரசன் தனக்கும் தன் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சனைகளையும் தன் எதிரிகளின் தொல்லைகளையும் தன் உடல் உபாதைகள் குறித்தும் சிலவற்றை கூறுகிறான். என்ன பிராத்தனை செய்தும் எத்தனையோ யாகங்கள் வழிபாடுகள் செய்தும் இந்த பிரச்சனைகள் தீரவில்லை என்றுதான் இங்கு வந்தேன். மிக எளிதான பிரச்சனை மன்னா நீ தேவையில்லாமல் குழப்பம் கொண்டிருக்கிறாய். நாளை அதிகாலையிலே எழுந்து குடும்பத்தோடு ஏனைய மந்திரி பிரதானிகளோடு நீராடி வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ என்று மூன்று முறை கூறு. அனைத்தும் சரியாகிவிடும் என்று முனிகுமாரன் கூற மிக்க மகிழ்ச்சி என்று அரசன் சென்று விடுகிறான். அவனுக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும் முனி குமாரனாயிற்றே (அவர் சொன்னபடியே) சொல்லுவோம் என்று அதிகாலை எழுந்து அவ்வாறே செய்கிறான். என்ன ஆச்சர்யம் அந்த நாட்டிலே சுபீக்ஷம் வந்து விடுகிறது. மழை பொழிகிறது. அனைத்தும் சரியாகி விடுகிறது. மன்னனுக்கு ஒரே ஆச்சர்யம் சந்தோஷம். எத்தனையோ பெரிய பெரிய பூஜைகள் செய்தும் நடக்கவில்லையே? இந்த இளம் பிள்ளை கூறியது நடந்து விட்டதே? அவருக்கு நன்றி கூறுவோம் என்று எண்ணி உடனடியாக தன் படை பரிவாரங்களோடு அந்த ஆசிரமத்திற்கு மீண்டும் வருகிறான். அப்பொழுது அந்த முனிகுமாரனின் தந்தை அங்கு இருக்கிறார். இந்த மன்னனைக் கண்டவுடன் அந்த முனிகுமாரன் தந்தையே நேற்றைய தினம் இவர்தான் வந்திருந்தார் என்று கூற தன் ஞான திருஷ்டியின் மூலமாக அங்கு நடந்த அனைத்தையும் புரிந்து கொண்டு நலமாய் வாழ்வாய் என்று அரசனை வாழ்த்தி அனுப்பி விட்டு கடும் சினத்தோடு அந்த பிள்ளையைப் பார்த்து நீ முழு மூடன். உனக்கு அந்த இறைவனின் பெருமை தெரியவில்லை. முருகப் பெருமானின் அருமை புரியவில்லை. நீ பூமிக்கு சென்று மிக மிக தாழ்ந்த நிலையிலே பிறந்து அந்த முருகனின் பெயரைக் கொண்டு மகாவிஷ்ணு என்று இராமாவதாரம் எடுக்கிறாரோ அப்பொழுது அவருக்கு சேவை செய்து பிறகு மேலே வா என்று சபித்து விடுகிறார். முனிகுமாரன் அஞ்சி விடுகிறான்.

தந்தையே நான் பிழை ஏதும் செய்யவில்லையே? (எதற்கு இந்த தண்டனை?) என்ன குற்றம் செய்தேன்? மகா பெரிய பாவத்தை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறாயே? என்று ஞானி கூற என்ன? என்று அந்த சேயவன் (மகன்) கேட்க அரசன் வந்தானா? வந்தார் தந்தையே (தன்) பிரச்சனைகளை கூறினானா? கூறினார் தந்தையே (அதற்கு) நீ என்ன கூறினாய்? அதிகாலையிலே எழுந்து ஸ்நானம் செய்து வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ என்று மூன்று முறை கூறும்படி கூறினேன். இங்குதான் நீ மகா பெரிய பாவத்தை செய்துஙவிட்டாய். உனக்கு முருகன் மீது நம்பிக்கையே இல்லையே? ஏன்? ஒரு முறை சொன்னால் முருகன் தீர்க்க மாட்டாரா? பாவத்தை போக்க மாட்டாரா? ஒரு குளிகை தின்றால் தீரக்கூடிய வியாதிக்கு தேவையில்லாமல் மூன்று குளிகைகள் கொடுத்திருக்கிறாயே? நீ முருகப்பெருமானின் அருமையை உணராததால் மாபெரும் தவறு செய்துவிட்டாய் என்று கடிந்து கொண்டார். சற்று இந்த காதையை (கதை) நினைவூட்டப்பா. ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஜபத்தை விட உள்ளன்போடு ஆத்மார்த்தமாக பரிசுத்த இதயத்தோடு ஒரே ஒரு முறை இறை நாமத்தை ஜபித்தால் இறை தரிசனம் உண்டு. ஆனால் இறை தரிசனம் வேண்டும் என்கிற அந்த எண்ணம் தீவிரமடைந்து லோகாயம் எல்லாம் போக வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜபித்தால் கட்டாயம் இறை துவாபர யுகத்தில் மட்டுமல்ல த்ரேதா யுகத்தில் மட்டுமல்ல இந்த கலியுகத்திலும் காட்சி தருவார் என்பது உறுதி. இருந்தாலும் யாமும் லகரம் (லட்சம்) ககரம் (கோடி) மந்திரங்களை ஜெபி என்று கூறுவதன் காரணமே மனித மனம் ஒரு ஒழுங்குக்கு கட்டுபடாததால் (அப்படி) கூறிக் கொண்டே இருந்தால் என்றாவது ஒரு நாள் அந்த திருவின் நாமத்தை மனம் வாக்கு காயம் (உடல்) 72000 நாடி நரம்புகள் பரவ கூறுவான் என்று தானப்பா நாங்களும் கூறுகிறோம். எனவே கூறிக் கொண்டேயிரு. இறைவன் கருணையால் அது ஏதாவது ஒரு நிலையில் சித்திக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 253

கேள்வி: பிரம்மஹத்தி தோஷம் என்ற ஒன்று இருக்கிறதா? இருக்கிறது என்றால் அதற்கு என்ன பரிகாரம்?

இறைவன் கருணையாலே பொதுவாக பிராம்மணர்களைக் கொல்வதால் ஏற்படும் தோஷம் பசுக்களை கொல்வதால் ஏற்படும் பாவம் அல்லது தோஷம் பிரம்மஹத்தி தோஷம் என்று வழங்கப்பட்டாலும் கூட அது ஒரு குறியீடு. தவறே செய்யாத அப்பாவிகளுக்கு செய்த இடர் துன்பம் உச்சக்கட்ட பாவமாக பாவம் மீண்டும் தோஷமாகத் தொடர்வதுதான் பிரம்மஹத்தி தோஷம் எனப்படுவது. பிரம்மாவை ஹத்தி செய்தால் என்ன பாவம் வருமோ அத்தனை பாவம் வரும் என்று ஒரு குறியீடாகக் கூறப்படுவது. எனவே இது உடலுக்கு மட்டும் செய்த தீங்கல்ல. பிறர் மனதை புண்படுத்தியிருந்தாலும் அதனாலும் இது போன்ற தோஷங்கள் ஒரு மனிதனைத் தொடரும். தொடர்ந்து இறை வழிபாடும் இடைமருதூர் (திருவிடைமருதூர்) போன்ற ஆலயங்களுக்குச் சென்று இயன்ற வழிபாடுகள் செய்வதும் தொடர்ந்து அறக்காரியங்களில் ஈடுபடுவதும்தான் இதற்குத் தக்க பிராயச்சித்தமாகும்.

கேள்வி: தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக என்றாவது சாத்தியக் கூறுகள் உண்டா?

ஏன் அப்படி வரவேண்டும் என்று உன்னொத்து பலர் அப்படி எதிர்பார்க்கிறார்கள்? (அனைவரும் அந்த அருள் மொழியால் இறையருளைப் பெறுவதற்காக ஆட்சி மொழியாக வரவேண்டும் என்பதால்). ஏனைய மொழிகள் அவ்வாறு வந்தால் என்ன நட்டம் வந்து விடப் போகிறது?

சுலோகம் -140

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-21

உயர்ந்த மனிதன் எதைச் செய்கிறானோ ஏனையோரும் அதனையே செய்வார்கள். அவன் எதனைச் சிறந்தது என்று கூறுகிறானோ மனித சமுதாயம் அனைத்தும் அதையே பின்பற்றி நடக்கிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 136 இல் சொல்லப்பட்டபடி குறிப்பிட்டு சொல்லப்படும் உயர்ந்த மனிதர் எதனை செய்கிறாறோ அது சிறந்தது நன்மையானது என்று அவரை நம்பும் மக்களும் அப்படியே செய்வார்கள். அவர் சிறப்பானது இதனை செய்யுங்கள் என்று சொல்லும் கருத்தையும் அப்படியே பின்பற்றி நடப்பார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 252

கேள்வி: எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட குலதெய்வம் தெரியவில்லை. அவர்களின் தலைமுறைக்கு பிறகு வந்தவர்கள் பழனி முருகனை குலதெய்வமாக சில காலம் கழித்து சப்த கன்னிமார்களை குலதெய்வமாக வழிபட்டிருக்கிறார்கள். இப்பொழுது நாங்கள் எந்த குலதெய்வத்தை வழிபடுவது? மேலும் வழிபாடு செய்துவிட்டு நேராக வீட்டிற்குதான் வரவேண்டுமா?

இறைவனின் அருளைக் கொண்டு யாம் கூறுவது யாதென்றால் கும்பிடும் தெய்வமெல்லாம் குலதெய்வம் என்று வைத்துக் கொள்ளலாம். தவறொன்றுமில்லை. எப்படியாவது தெய்வ நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்குதான் முன்னோர்கள் குலதெய்வம் என்ற ஒன்றை வகுத்து வைத்தார்கள். குலதெய்வத்தை வணங்கு என்று நாங்களும் கூட சில சமயம் கூறுவோம். அதற்கு சில காரணங்கள் இருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு குலதெய்வம் என்பது பல தலைமுறைகளுக்குப் பிறகு மாறிப் போவது என்பது இயல்பு. இது மிகப்பெரிய குற்றமோ தோஷமோ அல்ல. இருந்தாலும் இன்னவளைப் (கேள்வி கேட்ட பெண்மணி) பொருத்தவரை சப்த மாதர்கள் சப்த கன்னியர்களை குல தெய்வங்களாக வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். அதற்காக பழனி முருகனை வணங்க வேண்டாம் என்பது பொருளல்ல.

இன்னொன்று பொதுவாக மனிதரிடம் ஒரு தவறான நம்பிக்கை இருக்கிறது. ஒரு தவறு என்றில்லை. எத்தனையோ தவறுகளில் ஒரு தவறு ஏதாவது ஆலயம் அல்லது குலதெய்வ ஆலயம் சென்று விட்டால் நேரடியாக இல்லம்தான் வர வேண்டும் வேறு எங்கும் செல்லக் கூடாது என்று. அப்படியெல்லாம் ஏதுமில்லை. தாராளமாக ஆலயம் சென்றுவிட்டு வேறு சில பணிகளையும் பார்க்கலாம். தவறொன்றும் இல்லை. ஆனால் உள்ளூரிலே ஒரு பிராய்ச்சித்தம் என்று செல்லும் பொழுது வேறெங்கும் செல்லாமல் நேரடியாக ஆலயம் சென்று விட்டு பிறகு மற்ற பணிகளைப் பார்ப்பது நல்ல பலனைத் தரும். அதாவது ஆலயத்தை நோக்கி செல்லும் பொழுது முதலில் ஆலயம் என்ற ஒரு நியதியை வகுத்துக் கொண்டால் அது மிக சிறப்பான பலனைத் தரும்.

கேள்வி: மனிதர்களாக வகுத்துக் கொண்டதுதான் ஜாதி மதம் என்று சொன்னீர்கள். ஆனால் சில ஜாதகத்தை ஜோதிடர்கள் பார்த்து இந்த ஜாதகர் இந்த ஜாதியை சேர்ந்தவரைதான் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறுகிறார்கள். அது எப்படி?

இறைவன் அருளால் ஜாதகத்தைப் பார்த்து ஜாதியைக் கூறுவது என்பது அல்ல. அதுபோல கூறுவது என்னவென்றால் இது போன்ற குணங்களைக் கொண்ட சமூகத்தை சேர்ந்த வரன் தான் கிடைக்கும் என்று கூறலாமே தவிர மற்றபடி ஜாதியை நாங்கள் கூறவில்லை. ஜாதியையும் ஜாதகம் குறிப்பதில்லை.

சுலோகம் -139

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-20

ஐனகர் முதலிய ஞானிகளும் பற்றில்லாமல் கர்மங்களை செய்ததின் மூலமாக சிறந்த பேற்றை அடைந்தார்கள். அவ்விதமே உலகத்தின் நலனை நன்கு மனதில் கொண்டு நீயும் கர்மங்களை செய்வது தான் உனக்கு உரிய செயலாகும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

பற்றில்லாமல் தனக்குண்டான கடமையை செய்ததற்காக ஜனகர் போன்றவர்கள் இவ்வுலகத்திலும் மேலுலகத்தில் சிறந்த பேற்றை அடைந்தார்கள். இவர்களை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டும் உலகத்தின் நன்மை கருதியும் நீ பற்றில்லாமல் கர்மங்களை செய்வது உனக்கு உரிய செயலாகும்.

108 திவ்யதேசத்தில் 78 வது திருக்குறுங்குடி

திருமாலுக்கு ஆழ்வார்கள் மங்களாசனம் பாடிய திவ்ய தேசம் கோவில்களில் 78 வது இக்கோவிலாகும். வராக அவதாரத்தில் திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி தனது மிகப் பெரிய வராக வடிவத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி என்று பெயர் பெற்றது. மூலவர் நின்றநம்பி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவன் நின்றநம்பிக்கு குறுங்குடி நம்பி மலைமேல் நம்பி என்ற வேறு பெயர்களும் உண்டு. குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு குரங்கச் சேத்திரம் என்ற பெயரும் உண்டு. 1.நின்ற 2.அமர்ந்த 3.நடந்த 4.கிடந்த 5.இருந்த என்று ஐந்து நிலைகளிலும் இக்கோவிலில் பெருமாள் காட்சி தருகிறார். தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார். தீர்த்தம் திருப்பாற்கடல் பஞ்சதுறை சிந்துநதி. விமானம் பஞ்சகேதக விமானம். இந்த கோயிலில் தாயாருக்கு தனி சன்னதி இருந்தாலும் அர்ச்சனை கிடையாது. கோவிலில் இறைவனுக்கு நேராக இருக்கும் கொடிமரம் சிறிது விலகி உள்ளது. நின்ற நம்பி கிடந்த நம்பி என்ற இரு சன்னதிக்கு இடையில் சிவன் மற்றும் பைரவர் சன்னதி உள்ளது. கோவில் மூலவரான அழகிய நம்பிக்கு பூஜை நடக்கும் போது இங்குள்ள சிவனுக்கும் பூஜை நடந்து விட்டதா? என்பதை அறிய சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பர்க்கு குறையேதும் உண்டா? என்று பட்டர் கேட்பார். அதற்கு குறை ஒன்றும் இல்லை என பட்டர்கள் பதில் அளிப்பார்கள். இது இன்றும் நடைமுறையில் உள்ளது.

பெரிய சிவாலயங்களில் விஷ்ணுவுக்கு தனி சன்னதி உள்ளதைப் போல இத்திருக்கோவிலில் சிவனுக்கும் பைரவருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு மகேந்திரகிரி நாதர் என்றும் பக்கம் நின்ற பிரான் என்றும் பெயர். திருக்குறுங்குடி நம்பி கோவிலைக் காக்கும் தெய்வமாக பைரவர் இங்கு இருக்கிறார். பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை சிவபெருமான் இந்தத் திருக்குறுங்குடி தலத்தில் போக்கிக் கொண்டார் என்பதால் அவருடைய அம்சமான பைரவர் அந்த நற்பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்வாறு இங்கு காவல் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார். இந்த கால பைரவருக்கு இடது பக்கத்தில் ஒரு விளக்குத் தூண் உள்ளது. இதன் மேல் பகுதியில் பைரவரின் முகத்தின் அருகில் ஒரு விளக்கும் கீழ்ப் பகுதியில் இன்னொரு விளக்கும் உள்ளது. இவை தவிர இரண்டு சர விளக்குகளும் உண்டு. இந்த நான்கு விளக்குகளிலும் உள்ள தீபம் ஒளி சிந்தி பைரவரின் முழு ரூபத்தையும் தெளிவாகக் காட்டுகின்றன. மேலே உள்ள விளக்கின் தீபத்தின் ஜ்வாலை மட்டும் காற்று பட்டது போல் அசைகிறது. பிற மூன்று விளக்கு ஜ்வாலைகளும் சீராக எந்தச் சலனமுமில்லாமல் எரிந்து கொண்டிருக்கின்றன. மேல் விளக்கு தீபத்தின் ஜ்வாலை மட்டும் எப்படி அசைகிறது? அது பைரவரின் மூச்சுக் காற்று அந்த தீபத்தில் மட்டும் படுவதினால் ஏற்படும் அசைவு ஆகும். பைரவர் மூச்சை இழுக்கும் போது ஜ்வாலை அவரை நோக்கித் திரும்பியும் விடும் போது எதிர் திசையில் விலகியும் அசைகிறது. அது போல் அவரது கண்கள் தீப ஆராதனை ஒளியில் அசைவதை இப்போதும் நேரில் கண்டு தரிசிக்கலாம்.

இந்த பைரவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் பைரவரின் மூச்சுக்காற்றில் அசையும் தீபத்தின் வீடியோவையும் பார்க்க கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்தி இவருக்கு தொல்லை கொடுத்தார்கள். ராமானுஜர் இத்தல இறைவனை வேண்டியதால் கருடராழ்வார் நம்பூதிரிகளிடமிருந்து அவரை மீட்டு இத்தலத்திற்கு தூக்கி வந்தார். ராமானுஜர் இத்தலத்திற்கு வந்தபோது இத்தல இறைவன் நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சமஸ்காரம் செய்து உபதேசம் பெற்றார் என்பது வரலாறு. உபதேசம் பெற்றதும் அவருக்கு ராமானுஜர் வைத்த பெயர் வைஷ்ண நம்பி என்பதாகும். திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்க பெருமாளிடம் மோட்சம் கேட்டபோது திருக்குறுங்குடி போ அங்கு மோட்சம் கிடைக்கும் என்றார். திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது இத்தலத்தில் தான். ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயல்கிறான். அப்போது விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டார். அப்போது பூமித்தாய் இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வராகமூர்த்தியிடம் கேட்டார். அதற்கு வராக மூர்த்தி இசையால் இறைவனை அடையலாம் என்றார். அதனை நிருபிக்கும் விதமாக இறைவன் நம்பாடுவான் என்ற பக்தரின் வரலாறு உள்ளது.

நம்பாடுவான் என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் இசைக்கருவி வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தல இறைவனை தரிசிக்க வருகிறார். வழியில் பசியோடு இருந்த பிரம்ம ராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாக கூறினான். நம்பாடுவான் தற்போது இறைவனுக்கு விரதம் இருப்பதாகவும் நம்பியை தரிசித்து விரதத்தை முடித்து விட்டு வந்து பிரம்ம ராட்சசனுக்கு இறையாவதாக கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட பிரம்ப ராட்சசன் நம்பாடுவன் அங்கிருந்து செல்ல அனுமதித்தான். அவரிடமிருந்து விடை பெற்று வந்த நம்பாடுவன் கோயிலின் வாயிலில் நின்று நம்பியை தரிசிக்க முயற்சிக்கும் போது கோவிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது. ஆயினும் பக்தி சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்டினார். நம்பியும் நம்பாடுவானுக்கு தரிசனம் கொடுக்க எண்ணி கொடிமரத்தை நகரச் சொல்லினார். அதன்படியே கொடிமரம் நகன்று நம்பியை நம்பாடுவான் தரிசிக்க வழி கொடுத்தது. இதனால் நம்பியைத் தரிசித்த நம்பாடுவான் மகிழ்ச்சியாக பிரம்ம ராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அப்போது வயதானவர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன் நம்பாடுவானை தடுத்து நிறுத்தி அந்தக் காட்டில் ஒரு பிரம்ம ராட்சசன் வாழ்வதாகவும் அந்த வழியாக செல்பவர்களை தின்று விடுவதாகவும் கூறினார். நம்பாடுவான் அவரிடம் முன்பு பிரம்ம ராட்சசனுக்குத் தான் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அதன்படி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தான் அந்தக் காட்டுக்குள் செல்வேன் என்று சொல்லிவிட்டு காட்டிற்குள் சென்றார். ராட்சசனைத் தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் ராட்சசனைக் கண்டு தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும் இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறினார். ஆனால் பிரம்ம ராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டது என நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் வழிபட்ட பின் கோவிலில் பெற்ற பிரசாதத்தின் பாதி பழத்தை சாப்பிடுமாறு பிரம்ம ராட்சசனுக்குக் கொடுத்தார் அதை சாப்பிட்ட பிரம்ம ராட்சசன் இறைவனின் பிரசாதத்தை சாப்பிட்ட பலனால் சாபத்தால் தான் பெற்ற பிரம்ம ராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்று தன் முற்பிறவு வடிவத்தைப் பெற்றான். இந்த வரலாற்று சம்பவத்தை நினைவில் வைத்திருக்க இப்போதும் இங்கு கொடிமரம் விலகி இருப்பதை இப்போதும் காணலாம்.

இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால் தெய்வநாயகன் மற்றும் வரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும் என்ற அசரீரி கேட்டான். அசரீரியின்படி அந்த இடத்தை தோண்ட அந்த தெய்வ ரூபங்கள் கிடைத்தது. அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக ஒரு வரலாற்று செய்தி உள்ளது. இந்த கோவிலில் தினசரி 1.விஸ்வரூபம் 2.காலசந்தி 3.உச்சி காலபூஜை 4.சாயரட்சை 5.அத்தாழம் 6.அர்த்தசாமம் ஆகிய ஆறு கால பூஜைகள் நடந்து வருகிறது. ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவம் கார்த்திகை மாதம் ஏகாதசி திருவிழாக்கள் நடந்து புரட்டாசி நவராத்திரி விழாவும் இங்கு பிரசித்திப் பெற்றது ஆகும். விழாவின் போது தினசரி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்படும். கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு கருட சேவை நடத்தப்படுகிறது. பகலில் நம்பி சுவாமிகளுக்கு திருமஞ்சனமும் இரவில் கருட சேவை உற்சவமும் இடம்பெறும். திருவாலித் திருநகரில் பிறந்த திருமங்கை என்ற மன்னன் தலங்கள் பல சென்று திருமாலைப் பாடி வழிபட்டவன் இங்கு வந்து முக்தியடைந்துள்ளார். ராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த அழகிய நம்பி தான் நம்மாழ்வாராக அவதரித்தார். பெருமாளின் தரிசனம் கண்டவர்கள் சிவபெருமான் கஜேந்திரன். நம்மாழ்வார் 13 பாசுரம் பெரியாழ்வார் 1 பாசுரம் திருமழிசையாழ்வார் 1 பாசுரம் திருமங்கையாழ்வார் 25 பாசுரங்களும் பாடியுள்ளனர்.

சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில்.

சோளிங்கர் சோளிங்கபுரம் என்று தற்போது வழங்கப் பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப் பெற்றுள்ளது. இதனை பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம். புராண நூலின் படி இம்மலையின் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பதும் கால அளவின் ஒரு கூறு. அசலம் என்றால் மாலை. நரசிம்ம பெருமாள் இரண்ய வதத்தை முடித்துக் கொண்டு பாற்கடலுக்கு செல்லும் வழியில் அகத்தியருக்கு கடிகை மாத்திரைப் பொழுது காட்சியளித்ததால் கடிகாசலம் எனப் பெயர் பெற்றது. நரசிம்மர் குடிகொண்டுள்ளதால் சிம்மபுரம் எனவும் சோழர்கள் நாட்டின் எல்லையாக ஒரு காலத்தில் இது இருந்ததால் சோழ சிம்மபுரம் என அழைக்கப்பட்டது.

சோளிங்கர் மலையில் 750 அடி உயரத்தில் 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் மலை குன்றின் மீது 200 அடி நீளம் 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இக்கோயில் அமைந்துள்ளது. யோக நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மாலை அணிந்து கொண்டு சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன் இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப் பட்டையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு அக்காரக்கனி என்ற பெயரும் உள்ளது. நாச்சியார் அம்ருதவல்லித் தாயார் என்ற திருநாமத்தோடு அழைக்கப் படுகிறாள். உலக உயிர்களைக் காப்பதற்கு உரிய முறையில் பெருமாளுக்கு உதவுவதால் அம்ருதவல்லி என வழங்கப்படுகிறாள். ஆரம்பத்தில் மலை ஏறும் வழியில் தாயாருக்கு தனிச் சன்னதி இருந்தது. சில காலத்திற்கு முன் அந்த சன்னதி சிதிலமடைந்த போது தாயார் மலை மீது கொண்டு தனி சன்னதியில் வைக்கப்பட்டாள். அக்கார அடிசல் எனும் விசேஷப் பாயசம் நரசிம்மருக்கு படைக்கப் படுகிறது. வெள்ளிக் கிழமைகளில் பெருமாளுக்கும் தாயாருக்கும் பால் தயிர் தேன் சர்க்கரை நெய் ஆகியவற்றைச் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டின் 11 மாதங்கள் யோக நிலையில் தரிசனம் தரும் நரசிம்மர் கார்த்திகை மாதம் முழுவதும் கண் திறந்த நிலையில் அருள் பாலிக்கிறார்.

இம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய குன்றில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 406 ஏறிக் கடக்க வேண்டும். இந்த ஆஞ்சநேயர் நரசிம்மரைப் போலவே யோக நிலையில் நான்கு திருக்கரங்களுடன் ஒரு கையில் சங்கு ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெப மாலையுடன் அமர்ந்திருக்கிறார். ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை அம்ருதவல்லித் தாயாரிடம் கூறினால் அவர் நரசிம்மரிடம் அதை பரிந்துரைப்பார். நரசிம்மர் அக்கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி ஆஞ்சநேயரிடம் கூறுவார். எனவே இங்கு தாயார் பெருமாள் பின்பு ஆஞ்சநேயர் என தரிசிக்க வேண்டும். தீர்த்தம் தாயார் பெயரால் அம்ருத தீர்த்தம் என்றும் பெருமாள் பெயரால் தக்கான் குளம் மற்றும் பாண்டவ தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. கோவிலில் வைகாசை ஆகமம் முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது. யோகநரசிம்மருக்கும் தாயாருக்கும் வெள்ளிக் கிழமை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். யோக ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

பொதுவாக பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வார்கள். ஆனால் இங்கு கருவரையில் மூலவர் மட்டுமே அருள் பாலிக்கிறார். உற்சவர் பக்தோசித பெருமாள் சுதாவல்லி அமிர்தவல்லி எனும் தனது இரு தேவியருடன் மலை அடிவாரத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் தனிக் கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் மற்றும் சுதாவல்லி தாயார் தனித்தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்கள். அமிர்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன. உற்சவர் பக்தவத்ஸல பெருமாள் பக்தர்களை அன்போடு அரவணைத்துச் செல்வதால் பக்தவத்ஸலன் எனப்படுகிறார். உசிதம் என்றால் விருப்பம் எனப்படும். பக்தர்கள் விருப்பப்படி அருளவல்லவர் ஆகையால் பக்தோசிதப் பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். அருளுவதில் தக்கவராக இருப்பதால் தக்கான் எனவும் அழைக்கப்படுகிறார். நாயக்கர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.

ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம் இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து ராமரை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார். இதனை கண்ட ராமர் அனுமனிடம் நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக என அருளினார். அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

வட மதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்த இந்திரத்துய்மன் என்ற அரசர் கடுமையான கோபம் கொண்டவர். எதற்கு எடுத்தாலும் இவருடைய வாய் பேசாது. அவர் கையில் இருக்கும் போர்வாள் தான் பேசும். இப்படி சினம் கொண்ட அரசர் ஸ்ரீ நரசிம்மரின் தீவிர பக்தர். அரசர் இந்திரத்துய்மன் நரசிம்மரை வணங்குவதால் நரசிம்மரை போல் கோபம் அதிகம் ஏற்படுகிறது. அதனால் அரசரை ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க சொல்லலாம் என்று அமைச்சர்களுக்குள் பேசி அதை பக்குவமாக அரசருக்கு எடுத்து சொல்ல ஒரு அமைச்சர் மன்னரிடம் சென்றார். அரசரிடம் சென்ற அமைச்சர் நரசிம்மரை வணங்கினால் வீரம் கிடைக்கும். அது போலவே ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கினால் செல்வம் செல்வாக்கு கிடைக்கும். வாழ்க்கைக்கு தேவையானது முக்கியமானது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை தரக் கூடியவர் ஸ்ரீயோக நரசிம்மர் என்ற அமைச்சரின் பேச்சு அரசருக்கு ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க வேண்டும் என்ற மன மாற்றத்தை தந்தது. ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க தொடங்கினார் இந்திரத்துய்மன். ஒரு நாள் அரசர் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றார். மான் ஒன்று பொன்னை போன்று ஜொலித்தது. அதை கண்ட அரசர் அந்த மானை தன் அரண்மனைக்கு அழைத்து செல்ல விரும்பி மானை பிடிக்க நினைத்தார். ஆனால் அந்த மானை பிடிக்க முடியவில்லை. பொன் மான் மன்னருக்கு விளையாட்டு காட்டியது. இதனால் சோர்வடைந்த மன்னர் ஒர் இடத்தில் களைப்பாக அமர்ந்தார். அப்போது அந்த பொன் மான் மன்னர் கண் முன்னே ஒரு ஜோதியாக மாறி ஆஞ்சநேயனாக காட்சி கொடுத்து நான் என்றும் உனக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கூறி மறைந்தார். யோக நரசிம்மரின் அருளால்தான் தமக்கு அஞ்சனேயர் ஆசி கிடைத்திருக்கிறது என்று ஆனந்தம் கொண்ட அரசர் மகிழ்ந்து அனுமனுக்கு அதே இடத்தில் கோயில் கட்டினார். பிற்காலத்தில் வந்த சோழர்கள் அங்கு கற்கோவிலாகக் கட்டனார்கள்.

இங்கு பிறந்த தொட்டாச்சார்யர் ஆண்டு தோறும் காஞ்சி சென்று வரதராஜப்பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை உடல் நிலை சரியில்லாத இவரால் காஞ்சி செல்ல முடியவில்லை. இங்கு உள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி பெருமாள் கோயிலில் நடக்கும் கருட சேவையை நினைத்து பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார். உடனே பெருமாள் கருட வாகனத்தில் இங்கு உள்ள நரசிம்ம குளத்தில் தரிசனம் தந்தார். இன்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளி தொட்டாச்சார்யருக்கு அருள் பாலிக்கிறார். இந்தக் குளத்தில் நீராடினால் பிரம்மதோஷம் கூட நீங்கும் என்று புராண நூல்கள் குறிப்பிடுகிறது. முன்பு இத்தலத்தில் பெருமாளுடன் சிவனும் கோவில் கொண்டிருந்தார். தொட்டாச்சாரியார் என்பவரே பின்பு சிவனை தனிக்கோவிலில் எழுந்தருளச் செய்ததாக வரலாறு சொல்லப் படுகிறது.

நாரயணன் எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண் கூடாக வெளிப்படுத்திய அவதாரம் அது மட்டுமில்லாமல் சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க உதவிய அவதாரமும் ஆகும். பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர் வசிஷ்டர் கஸ்யபர் அத்திரி மகரிஷி ஜமத்கனி கவுதமர் பரத்வாஜர் ஆகிய சப்த ரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். விஸ்வாமித்திரர் இம்மலையில் ஒரு நாழிகை (24 நிமிடம்) நேரம் நரசிம்மரை துதித்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். இந்த ஆலயத்தில் ஒரு நாழிகை நேரம் இருந்தாலே அனைத்து துன்பமும் விலகும். இங்கு ஒரு நாழிகை நேரம் (24 நிமிடம்) தங்கியிருந்து நரசிம்மனை தரிசித்தால் அனைத்தும் கிடைக்கும் என புராண நூல்கள் சொல்லுகின்றன. அவ்விதம் திருக்கடிகை செல்ல முடியாதவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகையை மனதில் நினைத்து நரசிம்மரைச் சிந்தித்தாலே பலன் உண்டு என்கிறார் அஷ்டப் பிரபந்தம் பாடிய பிள்ளைப் பெருமாளையங்கார். இங்கு தானம் தர்மம் செய்வது கயிலையில் தானம் தர்மம் செய்வதற்கு சமமானது. இந்தக்குளத்தில் நீராடினால் பிரம்மதோஷம் கூட நீங்கும் என்று புராண நூல்கள் குறிப்பிடுகிறது. பராங்குச சோழனால் இக்கோவில் கட்டப்பட்டது. வடமொழியில் பிரம்மகைவர்த்த புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய வரலாறுகள் உள்ளது. நம்மாழ்வார் பேயாழ்வார் திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் பெற்றத் தலம் இது. ஸ்ரீமந்நாத முனிகளும் மணவாள மாமுணியும் ராமானுஜரும் திருக்கச்சி நம்பிகளும் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்.