நாயன்மார் – 12. ஏயர்கோன் கலிக்காம நாயனார்

சோழ நாட்டில் பெருமங்கலம் என்னும் நகரத்தில் ஏயர் குலத்தினர் சோழருடைய படைத் தலைமை வகிக்கும் பெருமை பெற்றவர்களாக சிறந்து விளங்கினர். அக்குடியில் வாழ்ந்து வந்தவர்களில் கலிக்காமர் என்பவரும் ஒருவர். இவர் பக்தியின் உருவமாகவும் அன்பின் வடிவமாகவும் சிறந்த சிவத்தொண்டராய் விளங்கினார். இவர் மானக்கஞ்சாற நாயனாருடைய மகளைத் திருமணம் செய்து இல்லறத்தை இனிது நடத்தி வந்தார். இச்சிவனடியார் சிவனை சிந்தையில் வைத்து ஐந்தெழுத்து நமசிவாய மந்திரத்தை இடைவிடாமல் எந்நேரமும் ஓதி வந்தார். இவர் வாழ்ந்து வரும் நாளில் இறைவனை சுந்தரர் தனக்காக பரவையாரிடம் (சுந்தரரின் மனைவி) தூது போக விட்ட நிகழ்ச்சி நடந்தது. இச்செய்தியைக் கேள்வியுற்ற கலிக்காமர் மனம் வருந்தினார். இத்தகைய செயல் புரிந்த இவர் தன்னை இறைவனின் தொண்டன் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட வில்லையா? இது எவ்வளவு பாவமான செயல் பொறுக்கமுடியாத அளவிற்கு இந்த செய்தியை கேட்ட பின்னும் என்னுயிர் போகவில்லையே என்று வருந்தினார் கலிக்காமர். இதனால் சுந்தரர் மீது மிகவும் கோபம் கொண்டார். கலிக்காமரின் கடும் கோபத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள் மிகவும் மனம் வாடினார். தன்னால் ஒரு தொண்டருக்கு ஏற்பட்டுள்ள துயரத்திற்கு எப்படி முடிவு காண்பது என்று சிந்தித்தார். தனது தவறினை பொறுத்தருள இறைவனிடம் வேண்டினார். இறைவன் சுந்தரமூர்த்தி நாயனாரையும் கலிக்காமரையும் நண்பர்களாக்க எண்ணம் கொண்டார். அதன்படி இறைவன் கலிக்காமருக்குக் கொடிய சூலை நோயினைக் கொடுத்து ஆட்கொண்டார். கலிக்காமர் சூலை நோயால் மிகவும் துடித்தார். கொடிய கருநாகப் பாம்பின் விஷம் தலைக்கு ஏறினாற்போல் துடித்த கலிக்காமர் மயக்க நிலைக்கு சென்றார். அப்பொழுது இறைவன் உன்னைத் துன்புறுத்துகின்ற சூலை நோயைத் தீர்க்க வல்லவன் சுந்தரனே ஆவான் என்று அசீரிரியாக சொல்லி மறைந்தார்.

இறைவன் சுந்தரரிடம் உடனே நீ சென்று கலிக்காமருக்கு ஏற்பட்டுள்ள சூலை நோயைத் தீர்த்து வருவாயாக என்றார். சுந்தரர் இறைவனை வணங்கிப் பெருமங்கலத்துக்குப் புறப்பட்டார். இறைவன் ஆணைப்படி பெருமங்கலத்திற்குப் புறப்பட்டு வரும் செய்தியை தனது பணி ஆட்கள் மூலம் முன்னதாகவே சொல்லி அனுப்பினார் சுந்தரர். பணி ஆட்கள் கலிக்காமர் இல்லத்தை அடைந்து சுந்தரர் வருகையைப் பற்றிக் கூறினர். ஏற்கனவே புழுப்போல் துடித்துக் கொண்டிருந்த கலிக்காமருக்கு சுந்தரரின் வருகையைப் பற்றிக் கேள்விப்பட்டதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தது. இறைவனை வணங்கியவாறு உடைவாளைக் கழற்றினார். இறைவனே இனிமேலும் நான் உலகில் வாழ விரும்பவில்லை. சுந்தரன் இங்கு வந்து என்னைப் பற்றியுள்ள சூலை நோயைத் தீர்க்கும் முன் எனது உயிரைப் போக்கிப் கொள்வேன் என்று கூறி கலிக்காமர் உடைவாளால் வயிற்றைக் கிழித்துக் கொண்டார். கலிக்காமர் உயிர் பிரிந்ததும் அவரது மனைவி தம் கணவரோடு உயிர் துறந்து அவருடன் இறைவனை சேர்வது என்று உறுதி பூண்டு அதற்குரிய செயலை ஆரம்பிக்கும் தருணத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் ஏவலாளர்கள் வந்து சுந்தரர் வந்து விட்டார் என்று கூறினார்கள். அவர்கள் கூறியதும் கலிக்காமரின் மனைவி தனது துயரத்தை மறைத்து கணவரது உடலை மறைத்து சுந்தரமூர்த்தி சுவாமிகளை இன்முகத்துடன் வரவேற்க தயாரானார்.

சுந்தரர் தன்னுடன் வந்த அன்பர்களுடன் உள்ளே நுழைந்தார். கலிக்காமரின் மனைவி சுந்தரரை வரவேற்றார். மலர் தூவிக் கோலமிட்ட ஆசனத்தில் அமரச் செய்து விதிமுறைப்படி அவரது திருப்பாதங்களைத் தூய நீரால் சுத்தம் செய்து மலர் தூவி வழிபட்டு மகிழ்ந்தார். சுந்தரரும் அம்மையாரின் அன்பிற்குக் கட்டுப்பட்டவராய் அம்மயாருக்கு அருள் செய்தார். சுந்தரர் அம்மையாரை நோக்கி அம்மையே என் நண்பர் கலிக்காமர் எங்குள்ளார்? அவருக்கு இப்பொழுது துன்பம் செய்து வரும் சூலைநோயினைக் குணப்படுத்தி அவரது நட்பைப் பெறும் காலம் வந்து விட்டது அவரை பார்க்க வேண்டும் அவர் இருக்குமிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார். கலிக்காமருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று அங்குள்ளோர்களை சொல்லச் சொன்ன கலிக்காமரின் மனைவி தானும் அவ்வாறே சொன்னார். அதற்கு சுந்தரர் அவருக்கு எவ்விதமான தீங்கும் ஏற்படவில்லை என்றாலும் என் மனம் அவரை காண வேண்டும் என்று துடிக்கிறது. நான் உடனே அவரைப் பார்த்துதான் ஆகவேண்டும் என்றார். கலிக்காமரின் மனைவி வேறு வழியின்றி சுந்தரரை அழைத்துச் சென்று குருதி வெள்ளத்தில் கிடக்கும் கலிக்காமரைக் காண்பித்தார். குடல் வெளிப்பட்டு உயிர் நீங்கி கிடந்த கலிக்காமரைக் கண்டு உள்ளம் பதறிப்போன சுந்தரர் வேதனை தாங்க முடியாமல் கண்களில் நீர்பெருக இறைவனே தியானித்தார். எம்பெருமானே இதென்ன அபச்சாரமான செயல் இவரது இத்தகைய பயங்கர முடிவைக் கண்ட பின்னரும் நான் உயிர் வாழ விரும்பவில்லை. நானும் என் உயிரைப் போக்கிக் கொள்கிறேன் என்று கூறி கலிக்காமர் அருகே கிடந்த உடைவாளைக் கையிலெடுத்தார்.

இறைவன் திருவருளால் அப்போது ஏயர்கோன் கலிக்காம நாயனார் உயிர் பெற்று எழுந்தார். கணப்பொழுதில் தெளிவு பெற்று நடந்ததை அறிந்தார். உடைவாளால் தம்மை மாய்த்துக் கொள்ளப் போகும் சுந்தரரைப் பார்த்து மனம் பதறிப்போனார். உடை வாள் சுந்தரரை தாக்காமல் பிடித்துக் கொண்டார் கலிக்காமர். ஐயனே இதென்ன முடிவு? உங்கள் தோழமையின் உயர்வை உணராமல் என்னையே நான் அழித்துக் கொண்டதோடு உங்களது வாழ்க்கைக்கும் பெரும் பாவம் புரிந்துவிட்டேன். ஐயனே இறைவனின் அன்பிற்குப் பாத்திரமான உங்கள் மீது பகைகொண்டு நெறி தவறிய என்னை மன்னித்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சுந்தரர் எம்பெருமானின் திருவருளை எண்ணி மகிழ்ச்சியுடன் கலிக்காம நாயனாரை ஆரத்தழுவிப் பெருமிதம் கொண்டார். கலிக்காமரும் சுந்தரரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். கலிக்காமரின் மனைவியும் மட்டிலா மகிழ்ச்சி பூண்டார். மானக்கஞ்சாரர் மகளான கலிக்காமர் மனைவியின் பக்தியை சுந்தரர் பெரிதும் போற்றினார். இறைவனின் திருவருள் கருணையினால் கலிக்காமரும் சுந்தரரும் தோழர்களாயினர். இருவரும் சேர்ந்து சிவயாத்திரை செல்ல எண்ணினர். ஒருநாள் பெருமங்கலப் பெருமானைப் பணிந்து இருவரும் புறப்பட்டனர். திருப்புன்கூர் என்னும் திருத்தலத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருக்கும் திருசடை அண்ணலின் திருவடிகளைப் பணிந்து துதித்தனர். சுந்தரர் அந்தனாளன் எனத் தொடங்கும் பதிகத்தைச் சுந்தரத் தமிழில் பாடினர். அங்கியிருந்து புறப்பட்டு இருவரும் திருவாரூரை வந்தடைந்து பூங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் புற்றிடங்கொண்ட பெருமானின் பொற்பாதங்களைப் போற்றிப் பணிந்தனர். கலிக்காம நாயனார் சுந்தரருடன் பரவையார் இல்லத்தில் சில காலம் தங்கினார். இருவரும் திருவாரூர்த் தியாகேசப் பெருமானை வழிபட்டு மகிழ்ந்தனர். கலிக்காமர் சுந்தரரிடம் விடைபெற்றுக்கொண்டு பிரிந்து செல்ல மனமில்லாத நிலையில் தமது ஊருக்குப் புறப்பட்டார். அங்கு பற்பல திருத்தொண்டுகள் புரிந்து சிவபெருமான் திருவடியைச் சேர்ந்து இன்புற்றார்.

குருபூஜை: எயர்கோன் கலிக்காம நாயனாரின் குருபூஜை ஆனி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 9

ராமரிடம் அனுமன் தொடர்ந்து பேசினார். எதிரிகள் கூட்டத்தில் இருந்து ராட்சசன் ஒருவன் வந்ததும் அவனை எப்படி நம்புவது என்று பலரும் வந்தவர்களை சந்தேகத்தோடு பார்த்தார்கள். சிறிது நாள் அவர்களை சேர்த்துக் கொண்டு கண்காணிக்கலாம் என்றும் அவர்களின் குணத்தை அறிந்து பின்பு சேர்த்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். சரணடைந்தவர்களை சேர்த்து கொண்ட பிறகு அவர்கள் மேல் சந்தேகப்படுகிறோம் என்று தெரிந்தாலே நம் மீதான நம்பிக்கை குறைந்து விடும். முன்பு நம்மிடம் நடந்து கொண்டது போல் விசுவாசமாக அவர்களால் நடந்து கொள்ள முடியாது. இது இயற்கையாக அனைவருக்கும் இருக்கும் சுபாவம். நாம் அவர்களிடம் ஏதோ குற்றத்தை தேடுகிறோம் என்று சுதந்திரமாக இல்லாமல் நம்மிடம் பயத்துடனே இருப்பார்கள். ஒருவன் பொய் பேசினால் அவனது முகம் காட்டிக் கொடுத்து விடும். இது நீதி சாஸ்திரம் சொல்லும் உண்மை. வந்திருக்கும் ராட்சசர்களின் முகத்தையும் பேச்சையும் பார்க்கும் போது அவர்கள் உண்மையை பேசுகின்றார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது. அவர்கள் மீது எனக்கு எந்த விதமான சந்தேகமும் வரவில்லை. ராவணனின் பராக்கிரமத்தை முழுவதுமாக அறிந்தவன் விபீஷணன். ஆனாலும் ராவணன் தங்களிடம் தோல்வி அடைவான் என்பதை தன் அறிவின் மூலம் உணர்ந்து கொண்டான்.

ராமர் யாராலும் வெற்றி பெற முடியாத வாலியை அழித்து சுக்ரிவனிடம் ராஜ்யத்தை கொடுத்தார் என்பதை விபீஷணன் நன்கு அறிவான். அதன்படி ராவணனை நீங்கள் அழித்த பிறகு இலங்கைக்கு விபீஷணனை அரசனாக்கி விடுவீர்கள் என்ற திட்டத்தில் தற்போது உங்களை சரணடைய வந்திருக்கிறான் என்பது என்னுடைய கருத்து. விபீஷணன் அவ்வாறு திட்டமிட்டு நடந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஏனெனில் இத்திட்டத்தில் அவன் ராவணனுக்கு எதிராக வஞ்சகம் ஒன்றும் செய்யவில்லை. தான் பிறந்த நாடு அழியாமல் பாதுகாக்கும் நன்மை கருதி தர்மத்தின் படியே நடந்து கொள்கிறான். விபீஷணன் உண்மையில் உங்களை சரணடைய வந்திருக்கிறான் என்றே நான் எண்ணுகிறேன். ஆகவே வந்திருக்கும் ராட்சசர்களின் மீது சந்தேகப்படாமல் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என்னுடைய கருத்து. என்னுடைய புத்திக்கு எட்டிய வரை சொன்னேன். தாங்கள் எப்படி சொல்கிறீர்களோ அதன் படியே செய்து கொள்ளலாம் என்று பேசி முடித்தார் அனுமன்.

ராமருக்கு அனுமன் சொன்ன கருத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மேலும் பலரும் பல விதங்களில் ஆலோசனைகளை சொன்னார்கள். அனைவரது கருத்துக்களையும் பொறுமையாக கேட்ட ராமர் பேச ஆரம்பித்தார். வந்திருக்கும் ராட்சசர்கள் நட்பு நாடி சரணடைய வந்திருப்பதாக சொல்கிறார்கள். சரணம் என்று சொல்லி என்னிடம் வந்தவர்களை ஒதுக்கித் தள்ளக் கூடாது என்பது என்னுடைய தர்மம். எனக்கு நண்பனாக வந்திருந்து எனக்காக இத்தனை வேலைகளை செய்யும் நீங்கள் அனைவரும் இதனை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் வந்தவர்கள் வஞ்சகம் செய்து ஏமாற்ற வரவில்லை என்று முழுமையாக தெரிந்து விட்டால் அவர்களிடம் குற்றம் காண கூடாது என்றார். இதனை கேட்ட சுக்ரீவன் சமாதானமடையாமல் தனது வருத்தத்தை ராமரிடம் தெரிவித்து தனது கருத்தை தெரிவித்தான். தங்களது கருத்துப்படி இந்த ராட்சசன் நல்லவனாகவே இருக்கலாம். ஆனால் தனது சொந்த அண்ணன் ஆபத்தில் சிக்கிய இந்த சமயத்தில் அவனைக் கைவிட்டு நம்மிடம் நட்பு வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்திருக்கிறான். இது போல் நாம் ஆபத்தில் சிக்கி இருக்கும் போது நம்மையும் இது போலவே கைவிட்டு செல்வான். இவனை எப்படி நம்புவது அண்ணன் ஆபத்திலிருக்கும் போது கைவிட்டு வந்தவனால் நம்மையும் கைவிட மாட்டான் என்று எப்படி நம்புவது என்றான் சுக்ரீவன்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 8

ராமர் அனைவரின் கருத்தை கேட்டதும் முதலில் அங்கதன் பேச ஆரம்பித்தான். ராமரை சரணடைகிறேன் என்று நமது பகைவன் கூட்டத்தில் இருந்து சில ராட்சசர்கள் வந்திருக்கிறார்கள். இவர்கள் தானாக வந்தார்களா இல்லை ராவணனால் திட்டமிடப்பட்டு அனுப்பப்பட்டார்களா என்று நமக்கு தெரியாது. இதனை தெரிந்து கொள்ளாமல் இவர்களை அழிப்பது தவறு. இவர்களை சேர்த்துக் கொண்டால் பின்நாளில் நமக்கு ஏதேனும் அபாயம் இவர்களால் வந்தாலும் வரலாம். இவர்களை பற்றி உடனடியாக ஒரு தீர்மானத்திற்கு வர முடியாது. சில நாள் இவர்கள் இங்கே இருக்கட்டும். இவர்கள் நடவடிக்கைகளை கண்காணிக்கலாம். எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்று பார்க்கலாம். இவர்களின் செயல் நல்ல படியாக இருந்தால் நம்மோடு சேர்த்துக் கொள்ளலாம். சந்தேகத்தை ஏற்படுத்தினால் அதன் பிறகு விசாரித்து இவர்கள் வஞ்சகமாக ஏமாற்ற வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் அழித்து விடலாம் என்று அங்கதன் பேசி முடித்தான். அதன் பிறகு சபரன் பேச ஆரம்பித்தான். இவர்களை நம்மோடு சேர்த்துக் கொள்வது எனக்கு சரியானதாக இருக்கும் என்று தோன்றவில்லை. முதலில் நம்மிடம் இருக்கும் சாமர்த்தியமான ஒற்றர்களை வைத்து இவர்களை சோதித்து அதன் பிறகு முடிவு செய்யலாம் என்றான்.

ராமர் ஜாம்பவானைப் பார்த்தார். ஜாம்பவான் பேச ஆரம்பித்தார். ராட்சசர்கள் நல்ல எண்ணத்துடன் வந்திருக்கிறார்களா வஞ்சக எண்ணத்துடன் வந்திருக்கிறார்களா என்று சோதித்து பார்த்து அறிந்து கொள்வது என்பது கடினமான காரியம். ராவணன் நமக்கு மிகப்பெரிய பகைவன். அவனிடம் இருந்து பிரிந்து வந்துவிட்டதாக சொல்கிறார்கள். இவர்களின் பேச்சு எனக்கு சிறிது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனை எப்படி நாம் நம்புவது. இலங்கை செல்ல இன்னும் நாம் கடலை தாண்டவில்லை. அதற்குள்ளாக ராமரை சரண்டைகிறேன் என்று சொல்கிறார்கள். இதற்குறிய காரணத்தை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ராவணன் ஏற்கனவே வஞ்சகம் செய்து ஏமாற்றியிருக்கிறான். மீண்டும் அது போல் நடக்க விடக்கூடாது. ஆகவே இவர்களை நம்முடன் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது என்னுடைய கருத்து என்று சொல்லி முடித்தார் ஜாம்பவான். மயிந்தன் பேச ஆரம்பித்தான். சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை தள்ளி வைப்பது என்பது நல்லவர்கள் செய்யும் சரியான செயல் இல்லை. அவர்களை நம் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதை நம் அறிவின் மூலம் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ராவணனிடமிருந்து இவர்கள் பிரிந்து வந்தது உண்மையாக கூட இருக்கலாம். இதனை சோதித்து பார்த்து அறிந்து கொள்ளும் திறமையானவர்கள் நமக்குள் இருக்கிறார்கள் என்று சொல்லி முடித்தான்.

ராமர் அனுமனை பார்த்தார். ராமர் தன்னுடைய அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள விரும்புகிறார் என்பதை உணர்ந்த அனுமன் பேச ஆரம்பித்தார். தங்களின் யோசனைக்கு முன்பு சிறப்பான யோசனையை யாரால் சொல்ல முடியும். தங்கள் முன்பு யோசனை சொல்லும் வல்லவர்கள் யாரையும் நான் இந்த பூலோகத்தில் காணவில்லை. தாங்கள் என்னிடம் கேட்பதினால் எனக்கு தோன்றியதை இங்கு தெரிவிக்கிறேன். விபீஷணன் வஞ்சகம் செய்து ஏமாற்ற விரும்பி இருந்தால் மறைமுகமாகவே வந்திருக்கலாம். ஆனால் நேரடியாக இங்கு வந்து தைரியத்துடன் அனைவரின் முன்பும் நின்று இலங்கையில் நடந்தவற்றை சொல்லி உங்களை பார்க்க அனுமதி கேட்கிறான். நடந்தவைகள் அனைத்தையும் விபீஷணன் சொன்ன பிறகு ஒற்றர்கள் இவர்களிடம் தனியாக விசாரிக்க ஒன்றும் இல்லை. ஏற்கனவே இலங்கை சபைக்கு நான் சென்றிருந்த போது அங்கிருக்கும் அனைவரும் ராவணனுக்கு ஆதரவாகவும் தர்மத்திற்கு எதிராகவே பேசினார்கள். அப்போது ராவணனை எதிர்த்து தர்மத்திற்கு ஆதரவாக பேசியவர் இந்த விபீஷணன். இதனை நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன். தர்மத்திற்கு எதிராக செயல்பட்ட ராவணனுக்கு விபீஷணன் புத்திமதி சொல்லி இருக்கிறான். அதை ராவணன் கேட்காமல் விட்டான். அவனை எதிர்த்து தங்களின் பராக்கிரமத்தை அறிந்து உங்களை விபீஷணன் சரணடைய வந்திருக்கிறான். இதில் சந்தேகப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

நாயன்மார் – 11. எறிபத்த நாயனார்

கொங்கு நாட்டிலே உள்ள கருவூரிலே பிறந்தார் எறிபத்தர். அந்த ஊரில் ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைனை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்து வந்தார். சிவனடியார்களுக்கு ஓர் பிரச்சனை என்று வந்தால் முதலில் அங்கு வந்து அவர்களுக்கு உதவுவார். அடியார்களுக்கு தீங்கு கொடுப்பவர்களுக்கு பரசு என்னும் கோடாலி ஆயுதத்தால் எறிந்து தண்டிப்பார். அதனால் அவர் கையிலே எப்பொழுதும் கோடலி ஆயுதம் இருக்கும். கோடாலியை எறிவதனால் அவருடைய இயற்பெயர் மாறி எறிபத்தர் என்ற பெயரால் அனைவராலும் அழைக்கப்பட்டார். அந்த ஊரில் சிவகாமியாண்டார் என்ற முதியவர் தினந்தோறும் கோவிலுக்கு சென்று இறைவனுக்கு பூக்களை கொடுப்பது வழக்கம். இறைவனுக்காக பூக்கள் பறித்து மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு அணியச் செய்வதில் அவருக்கு விருப்பம் அதிகம். விடியற்காலையிலேயே எழுந்து தான் அமைத்த நந்தவனத்திற்கு சென்று பயபக்தியுடன் மலர்களைப் பறிப்பார். அவற்றின் மேல் தன் மூச்சுக் காற்றுக் கூடப்படாதவாறு வாயைக் கட்டிக் கொண்டு அதை எடுத்து வருவார். ஒரு நாள் வழக்கம் போல் ஒரு கூடை நிறைய மலர்களை ஏந்தி திருக்கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மதம் கொண்ட பட்டத்து யானை அவர் கையில் வைத்திருந்த பூக்கூடையைத் தாக்கி தன் துதிக்கையால் கீழே போட்டது. மலர்களெல்லாம் கீழே சிதறின. இறைவனுக்கான மலர்களை யானை பாழ் செய்து விட்டதே என எண்ணி வருந்திய சிவகாமியாண்டார் கோபம் கொண்டு தன் கையில் இருந்த தடியால் யானையை அடிக்க ஓடினார். சிவகாமியாண்டார் யானையின் பின்னே ஓடிக் களைத்து கீழே விழுந்து விட்டார். பின் மெல்ல எழுந்த சிவகாமியாண்டார் கீழே சிதறிய பூக்களைப் பார்த்துத் துக்கம் தாளாமல் வாய்விட்டுப் புலம்பினார்.

அடியார் ஒருவரின் அழுகுரல் சத்தத்தை கேட்ட எறிபத்தர் உடனடியாக அங்கே வந்து நடந்தவற்றை கேட்டு அறிந்து கோபம் கொண்டார். யானை இருக்குமிடம் நோக்கி ஓடிய எறிபத்தர் பட்டத்து யானையின் முன் நின்றார். யானை அவரை தாக்க வந்தபோது கையிலிருந்த கோடாரியால் ஓங்கி வீசினார். பூக்கூடையை கீழே போட்ட யானையின் தும்பிக்கை துண்டாக கீழே விழுந்தது. உடனே யானையும் பிளறிக் கொண்டே கீழே விழுந்து இறந்தது. சிவகாமியாண்டாரின் துயரத்தை கண்ட எறிபத்தருக்கு இன்னும் கோபம் தீரவில்லை. இறைவனுக்கான பூக்களை கீழே தள்ளிவிட்ட யானையின் பாகனையும் அவனுக்கு உதவியாக வந்த காவலாளிகளின் மீதும் தன் கோடாரியை எறிந்து வீழ்த்தினார். போர்க்களக் காட்சி போல் யானை ஒரு பக்கம் விழுந்து கிடக்க ஒரு பக்கம் காவளாரிகள் இறந்து கிடந்தனர். அரசு சேவகர்கள் உடனே அரண்மனைக்குச் சென்று பட்டத்து யானையையும் உடன் இருந்த பாதுகாவலர்களையும் ஒருவன் கொன்று விட்டான் என்று புகழ்ச்சோழன் அரசனிடம் தகவலை அளித்தார்கள். புகழ்ச்சோழன் அரசன் சிவாலயங்களைப் பாதுகாப்பது சிவனடியார்களுக்கு வேண்டிய நன்மைகளை செய்து தொண்டுகளில் ஈடுபட்டிருந்தான். காவலாளிகள் கூறிவற்றைக் கேட்ட அரசன் பகைவர்களின் சதிச் செயல் என்று எண்ணி கோபமடைந்தான். தனது சேனைத் தலைவர்களுடன் தானும் சம்பவ இடத்திற்குச் சென்றான். யானை இறந்து கிடந்தது அருகில் எறிபத்தர் நின்று கொண்டிருந்தார். பகைவர்கள் ஓடியிருக்கவேண்டும் என எண்ணி அவர்கள் எங்கே என்று கேட்டான். இதோ இங்கே நிற்கிறாரே இவர் தான் யானையைக் கொன்றார் என்று எறிபத்தரைக் காட்டி அருகில் இருந்தவர்கள் கூறினர்கள். அவரைப் பார்த்த அரசன் எதிரியின் செயல் ஒன்றும் இல்லை. இந்த அடியவருக்குக் கோபம் உண்டாகும்படி ஏதோ நேர்ந்திருக்கிறது என்று யூகித்தான்.

யானை இந்த அடியவரை ஒன்றும் செய்யாமல் கடவுள் தான் காப்பாற்றினார் என்று மனதில் நினைத்து ஆறுதல் அடைந்து எறிபத்தர் முன் கண்ணீர் மல்க அவர் காலில் வீழ்ந்தான். தங்கள் உள்ளம் வருந்தும்படி அடியவருக்கு தீங்கு நடந்திருக்கிறது. அந்தத் தீங்குக்குப் பிராயச் சித்தமாக யானையையும் பாகனையும் தண்டித்தது விட்டீர்கள். இது போதாது யானைக்கு உரியவனான என்னையும் கொல்வதே முறையாகும். தங்களின் புனிதமான கோடாரியால் என்னைக் கொல்ல வேண்டாம் என்று தனது வாளை வாளை எடுத்து அவரிடம் நீட்டி என்னையும் கொன்று விடுங்கள் என்றான் அரசன். ஓர் சிவனடியாருக்கு நடந்த தீங்கை பெரிதாக எண்ணி அரசர் வருந்துவதை உணர்ந்த எறிபத்தர் தான் அரசரை கொல்லவில்லை என்றால் அரசன் தன்னை தானை வாளால் அறுத்துக் கொள்வாரோ என்று பயந்து அரசனிடமிருந்த அந்த வாளை உடனே வாங்கிக் கொண்டார். அதைக் கண்ட சோழன் முகம் மலர்ந்து எறிபத்தர் தம்மேல் வாளை வீசுவதற்கு ஏதுவாகப் பணிந்து நின்றார். சிவனடியார்கள் மீது இத்தனை அன்பு செய்யும் அரசர் இருக்கும் போது நாமே யானையை கொன்று தவறு செய்து விட்டோமோ என்று எண்ணிய எறிபத்தர் நானே குற்றவாளி இந்தக் குற்றத்துக்கு தண்டனையை நானே அளித்துக் கொள்கிறேன் என்று மனதில் புலம்பி கையிலிருந்த வாளைத் தன் கழுத்தில் வைத்து அறுத்துக் கொள்ளப்போனார். அரசன் என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள் என்று அவர் கையிலிருந்த வாளைப் பறித்தான். எறிபத்தர் அசையாமல் நின்றிருந்தார். அப்போது இறைவனின் அசீரீரி குரல் கேட்டது. இறைவன் மீதும் அடியவர்கள் மீதும் உங்களுக்கு இருக்கும் பக்தியின் வலிமையை உலகிற்கு காட்டவே இந்த நிகழ்ச்சியை நடத்தினோம் என்று அசீரீரி குரல் கேட்டது. அதே சமயத்தில் கீழே விழுந்த யானையும் பாகனும் இறந்த காவலாளிகளும் உயிர் பெற்று எழுந்தனர். சிவகாமியாண்டாரின் பூக்கூடை பூக்களால் நிறைந்தது. அனைவரும் சிவபெருமானின் கருணையையும் அடியவர்களின் அன்பையும் உணர்ந்து ஆரவாரித்தனர்.

குருபூஜை: எறிபத்தர் நாயனாரின் குருபூஜை மாசி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 7

ராமரின் வலிமையை அறியாத உங்களிடம் நான் அவரின் பராக்கிரமத்தை எவ்வளவோ சொல்லியும் நீங்கள் கேட்காமல் இந்த சபையில் என்னை மிகவும் அவமானப்படுத்தி விட்டீர்கள். இனி நான் இங்கிருக்க விரும்பவில்லை. உங்கள் காதுக்கு இனிமையாக பேசுபவர்களின் பேச்சே உங்களுக்கு பிடித்திருக்கிறது. எனது பேச்சு உங்களுக்கு பிடிக்கவில்லை. ஏதேனும் வகையில் ராமரிடமிருந்து உங்களையும் உங்கள் நாட்டையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு துணை நின்று தீயவற்றை செய்வதை விட இங்கிருந்து சென்று தர்மத்தின் பக்கம் நிற்பதையே விரும்புகிறேன் நான் செல்கிறேன் என்ற விபீஷணன் ராமர் லட்சுமணன் இருக்குமிடம் நோக்கி ஆகாய மார்க்கமாக சென்றான். விபீஷணனுக்கு ஆதரவாக மேலும் நான்கு ராட்சசர்கள் சேர்ந்து கொண்டார்கள். கடலின் கடற்கரையில் இருந்த வானரங்கள் கடலுக்கு மேலிருந்து ஆகாய மார்க்கமாக பெரிய வடிவத்தில் ஐந்து ராட்சசர்கள் வருவதை பார்த்தார்கள். இதனை கண்ட வானரங்கள் சுக்ரீவனிடத்தில் விரைவாக சென்று ராட்சசர்கள் சிலர் ஆகாய மார்க்கமாக வருவதை தெரிவித்தார்கள். இதனைக் கண்ட சுக்ரீவன் கடற்கரைக்கு வந்து வருபவர்கள் ராட்சசர்கள் நம்மைக் கொல்ல ராவணன் அனுப்பியிருப்பான் நம்மை அழிக்க வருகிறார்கள் என்றார். இதனை கேட்ட வானரங்கள் தங்களது ஆயுதங்களுடன் தயாரானார்கள். உத்தரவு கொடுங்கள் இப்போதே அவர்களை அழித்து விடுகிறோம் என்று ஆர்ப்பரித்தனர். வானரங்களின் ஆர்ப்பரிப்பை கேட்ட விபீஷணன் சிறிதும் பயமின்றி அவர்கள் முன்நிலையில் வந்து நின்று பேச ஆரம்பித்தான்.

ராமரிடமிருந்து சீதையை தூக்கிச் சென்ற ராவணனது தம்பி விபீஷணன் நான். ராவணன் செய்த செயல்கள் அனைத்தும் தர்மத்திற்கு எதிரானது. எனவே சீதையை ராமரிடம் கொடுத்து விட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரை சரணடையுங்கள் என்று தர்மத்தை எவ்வளவோ எடுத்து சொல்லி பலமுறை மன்றாடினேன். நான் சொல்வதை கேட்காமல் சபை நடுவில் என்னை மிகவும் அவமானப் படுத்திவிட்டான் ராவணன். எனவே எனது நாடு மக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு ராமரை சரண்டைய இங்கு வந்து நிற்கிறேன். இந்த செய்தியை ராமரிடம் தெரிவித்து அவரை சந்திக்க அனுமதி பெற்றுக் கொடுங்கள் என்று சொல்லி முடித்தான். அனைத்தையும் கேட்ட சுக்ரீவன் தனது வானரங்களிடம் வந்திருப்பவர்களை தாக்காதிருங்கள் ராமரிடம் உத்தரவு பெற்று விட்டு வருகிறேன் என்று ராமர் இருக்குமிடம் சென்றான்.

ராமரிடம் சென்ற சுக்ரீவன் ராவணனின் தம்பி என்று சொல்லி ஒரு ராட்சசனும் அவனுக்கு துணையாக நான்கு ராட்சசர்களும் தங்களை சரணடைய வந்திருக்கிறார்கள். ராட்சசர்கள் மிகவும் ஏமாற்றுக்காரர்கள். அவர்களை நம்பக்கூடாது. அவர்களை ஏதோ சதி வேலை செய்யும் நோக்கில் ராவணன் தான் நம்மிடம் அனுப்பியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நம்மிடம் புகுந்து நமக்குள் இருக்கும் ஒற்றுமையை குலைப்பதற்காக ஏதேனும் சதி வேலை செய்யலாம். அல்லது நாம் அசந்திருக்கும் சமயம் நம்மை கொல்ல முயற்சிக்கலாம். இவன் சரணடைய வந்திருக்கிறேன் என்று சொன்னாலும் இவன் நமது எதிரி ராவணனின் தம்பி என்பதை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அவனையும் அவனுடன் வந்திருப்பவர்களையும் அழித்து விடலாம் என்பது என்னுடைய கருத்து. இதைப் பற்றி நீங்கள் நன்கு ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். எங்களுக்கு உத்தரவு கொடுங்கள் இப்போதே வந்திருப்பவர்களை அழித்து விடுகிறேன் என்றான் சுக்ரீவன். அனைத்தையும் கேட்ட ராமர் நீதி சாஸ்திரம் அறிந்த சுக்ரீவன் வந்திருப்பவர்களை பற்றி தனது கருத்தை சொல்லி விட்டார். நெருக்கடியான சமயத்தில் சுற்றத்தார்கள் நண்பர்களது யோசனை மிகவும் முக்கியம் எனவே உங்களது கருத்துக்களையும் சொல்லுங்கள் என்று தன்னை சுற்றியிருப்பவர்களின் கருத்தை ராமர் கேட்டார். ஒவ்வொருவராக தங்களின் கருத்தை சொல்ல ஆரம்பித்தார்கள்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 6

ராமருடைய வலிமை சாமர்த்தியம் ஆயுதப்பயிற்சி அவரிடம் உள்ள அஸ்திரங்கள் என அனைத்தையும் விபீஷணன் சபையில் அனைவரின் முன்பும் தைரியமாகச் எடுத்துச் சொன்னான். ராமரிடம் இருந்து நீங்கள் தூக்கிக் கொண்டு வந்த சீதை ஒரு விஷப் பாம்பு. சீதை அமைதியாக இருப்பது போலவே தங்களுக்கு இருக்கும். ஆனால் அவளால் தான் அழிவு உங்களை தேடி வரும். அவளை ஏன் தூக்கி வந்தீர்கள். இப்பொழுது உங்களுடைய முதல் கடமை அவளை ராமரிடம் திருப்பி அனுப்புவது மட்டுமே. இதைச் செய்யாவிட்டால் நாம் அழிந்து போவோம் இது நிச்சயம். இதனை பல முறை இந்த சபையிலும் உங்களிடமும் எடுத்துச் சொல்லி விட்டேன். இதனால் என் மீது நீங்கள் எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் பரவாயில்லை. நான் சொல்வதை சிறிது கேட்டு அதன் பிறகு முடிவெடுங்கள். நீங்கள் தவறான பாதையில் செல்வதை தடுத்து உங்களுக்கு வரப்போகும் அபாயத்தை சுட்டிக்காட்டி உங்களையும் இந்த ராட்சச குலத்தையும் காப்பாற்ற வேண்டியது எனது என்னுடைய கடமை ஆகும். இப்போதும் உங்களுக்கு சிறிது அதிஷ்டம் இருப்பதினால் தான் ராமர் இன்னும் இங்கு வரவில்லை. ராமர் வருவதற்குள் சீதையை நீங்கள் திருப்பி அனுப்பிவிட்டு ராமரை சரணடைந்தால் நீங்கள் காப்பாற்றப்பட்டு சுகமாக இந்த ராஜ்யத்தை ஆளலாம். எனவே தான் இதனை மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் என்று அனைவர் பேசியதையும் எதிர்த்து பேசினான் விபீஷணன்.

ராமருக்கு சாதகமாகவே நீங்கள் பேசுகின்றீர்கள் என்று இந்திரஜித் கத்தினான். ராவணனின் தம்பியாக இருந்து கொண்டு நீங்கள் இப்படி பேசுவதை கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது. நம்முடைய குலத்தின் பெருமையும் சக்தியையும் தெரிந்த நீங்கள் இவ்வாறு பேசுவதை இந்த சபை ஏன் இன்னும் அமைதியுடன் கேட்டுக் கொண்டிருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் உங்கள் குலத்தை மறந்து உங்களின் சிறுமையான குணத்தை காண்பிக்கிறீர்கள். உங்களுடைய பேச்சை ஒரு நாளும் அங்கிகரிக்க முடியாது. இந்திரனையும் அவனது தேவ கணங்களையும் எதிர்த்து நான் வெற்றி பெற்றிருக்கிறேன். நம்மைக் கண்டு இந்த உலகம் பயப்பட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டு மானிடர்களை பார்த்து நாம் பயப்பட வேண்டுமா? இந்த சபையில் உங்களது பேச்சு எனக்கு அவமானமாக இருக்கிறது என்று சொல்லி அமர்ந்தான் இந்திரஜித். விபீஷணன் பேச ஆரம்பித்தான்.

ராமர் லட்சுமணன் இருவரும் மானிடர்கள் என்று சொல்லாதே இந்திரஜித். நீ பாலகன் அவர்களை பற்றி அறிந்து கொள்ளும் அளவுக்கு உனக்கு அனுபவமும் அறிவும் போதாது. உன் தந்தையின் ராட்சச படைகளை பின்னால் வைத்துக் கொண்டு நீ பெற்ற வெற்றியினால் இப்படி பேசுகிறாய். ராவணனுக்கு மகனாக பிறந்தும் நீ அவரை அழிக்க வந்த சத்ரு என்றே நான் நினைக்கிறேன். ராமர் யுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால் அவருக்கு எந்த படையும் தேவையில்லை. ராமரும் அவரது தம்பி லட்சுமணனும் எத்தனை பெரிய படைகள் வந்தாலும் அவர்கள் இருவர் மட்டுமே நின்று அனைத்து படைகளையும் எதிர்த்து அழிக்கும் வல்லமை கொண்டவர்கள். இந்த சபையில் அரசனுக்கு நல்ல யோசனை சொல்லக் கூடியவர்களே இப்போது அவருக்கு அழிவைத் தரும் யோசனையை சொல்கிறார்கள். ஏன் என்று எனக்கு புரியவில்லை. இந்த விசயத்தில் நான் சொல்வதும் எனது முடிவும் ஒன்று மட்டுமே. சீதையை விரைவில் ராமரிடம் அனுப்பி வைத்துவிட்டு நம்மை காப்பாற்றிக் கொள்ளவேண்டும். எனது பேச்சை நீங்கள் அனைவரும் புறக்கணித்தால் பின்பு துன்பப்படுபவர்கள் நீங்களே ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்று பேசி முடித்தான் விபீஷணன். அனைத்தையும் கேட்ட ராவணனுடைய கோபம் அதிகமானது. எனது தம்பி என்று இது வரை உனது பேச்சை கேட்டுக் கொண்டு பொறுமையாக இருந்தேன். வேறு ஒருவனாக இருந்தால் பேசிய நேரத்தில் இங்கேயே கொன்றிருப்பேன். ராட்சச குலத்தை அவமானப் படுத்துவதற்கு என்றே பிறந்தவன் நீ என்று ராட்சசன் விபீஷணனை திட்டினான்.

நாயன்மார் – 10. உருத்திர பசுபதி நாயனார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் துறையூருக்கு அருகில் அமைந்துள்ள ஓரூர் திருத்தலையூர். வேதியர் மரபில் தோன்றிய அருளாளர் உருத்திர பசுபதி. சிவபெருமனின் மீது அளவில்லாத அன்பு கொண்டிருந்தார். வேதத்தின் கண் மலர் என போற்றப்படும் உருத்திர மந்திரத்தை தினந்தோறும் ஓத வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்து வந்தார். தினந்தோறும் ஊரில் உள்ள திருக்கோயிலின் தாமரைக் குளத்தில் காலையில் தொடங்கி மாலை வரையிலும் கழுத்தளவு தண்ணீரில் நின்று கைகள் இரண்டையும் தலைக்கு மேல் கூப்பி உருத்திர மந்திரத்தை நியதிப்படி சிவனை எண்ணியபடியே செபித்து வந்தார். பின்பு மாலைப் பொழுதிற்கு மேல் உருத்திர மந்திரத்தை பாராயணம் செய்து வந்தார். பல காலம் உருத்திர மந்திரத்தை மனதை ஒருமைப்படுத்தி செபித்து வந்த நிலையில் வேத நாயகனான சிவபெருமான் மிகவும் மகிழ்ந்து சிவபதம் அளித்தருளினார்.

குருபூஜை: நாயனாரின் குருபூஜை புரட்டாசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 5

ராமரிடம் இருந்து சீதையை நான் தூக்கி வந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு ஒரு வானரம் இங்கு வந்து நாசம் செய்ததும் இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் அபசகுனங்களும் உங்கள் அனைவருக்கும் தெரியும். பலர் என்னிடம் சீதை இங்கு வந்ததினால் தான் இப்படி நடக்கறது. எனவே சீதையை ராமரிடம் அனுப்பி விடுமாறும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கேட்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் என்னை வற்புறுத்துகின்றனர். ராமரிடம் சீதையை நான் திருப்பி அனுப்ப முடியாது. ராமரிடம் நான் மன்னிப்பும் கேட்க முடியாது. ராமர் வந்து தன்னை மீட்பான் என்று சீதை நம்பிக் கொண்டு இருக்கிறாள். ராமரால் கடல் தாண்டி இங்கு வருவது இயலாத காரியம். மீறி வந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலையும் இல்லை பயமும் இல்லை. நம்மை தாக்கலாம் என்று ராமரும் லட்சுமணனும் வானரங்களுடன் கடற்கரையில் இருந்து கடலை எப்படி தாண்டலாம் என்ற யோசனை செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை அங்கேயே அழிக்கும் வழிகளை நீங்கள் சொல்லுங்கள் இத்தனை நாட்கள் தம்பி கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்தான் ஆகவே இது பற்றி பேசவில்லை. இப்போது தம்பி கும்பகர்ணன் சபைக்கு வந்து விட்டான் எனவே இதுபற்றி நன்றாக யோசித்து உங்கள் ஆலோசனைகளை சொல்லுங்கள் என்று பேசி முடித்தான் ராவணன். கும்பகர்ணன் பேச ஆரம்பித்தான்.

ராமர் லட்சுமணனின் மீது உங்களுக்கு விரோதம் இருந்தால் நீங்கள் முதலில் அவர்களை எதிர்த்து யுத்தம் செய்து வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவர்களை அழித்திருந்தால் வெற்றி வீரரான உங்களுடன் சீதை தானகவே வந்திருப்பாள். அதை விட்டுவிட்டு யாரையும் ஆலோசனை கேட்காமல் நீங்களாகவே ஒரு பாவ காரியத்தை செய்துவிட்டு ராமரின் பகையை சம்பாரித்துக் கொண்டு விட்டீர்கள். இப்போது காலம் தாண்டிய பின்பு ஆலோசனை சொல்லுங்கள் என்று கேட்கிறீர்கள். நீதி சாஸ்திரம் அறிந்த அரசனுக்குரிய உத்தம காரியத்தை செய்யாமல் நீதி சாஸ்திரம் அறியாத மூடனைப் போல் செய்து விட்டீர்கள் என்று ராவணனின் மேல் எந்த பயமும் இல்லாமல் தைரியமாக சொல்லி அமர்ந்தான் கும்பகர்ணன். அனைவரின் முன்பும் தம்பி இப்படி பேசி விட்டானே என்று ராவணனின் முகம் வாடியது. ராவணனின் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருந்த கும்பகர்ணனால் ராவணனின் முகம் வாடியதை பொறுக்க முடியவில்லை. தன்னுடைய கடினமான சொல்லால் தான் அண்ணன் முகம் வாடி விட்டது என்பதை உணர்ந்த கும்பகர்ணன் பழையதை பேசி இனி பிரயோஜனம் இல்லை. இனி நடக்க வேண்டியதை பார்ப்போம். இனி அண்ணனுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

ராமரின் வல்லமையும் அவர் ஒரு சிறந்த வில்லாளி என்றும் அவர் பெற்ற வரங்களும் கும்பகர்ணனுக்கு நன்றாக தெரியும். ராவணனுக்கு எதிராக எந்த ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது என்ற முடிவில் இருந்த கும்பகர்ணன் மற்றவர்களை போல் ராவணனை பெருமைப்படுத்தி ராவணனுக்கு தைரியத்தை கொடுத்து பேசினான். நீங்கள் முன்னால் செய்ய வேண்டியதை பின்னாலும் பின்னால் செய்ய வேண்டியதை முன்னாலும் தவறாக செய்து கொண்டு இருக்கிறீர்கள். ஆனாலும் இனி நீங்கள் பயப்பட வேண்டாம். இந்த ராமரை நான் எனது வலிமையால் எதிர்த்து யுத்தம் செய்து வெற்றி பெறுவேன். ராமரது அம்புகள் என் மீது ஒன்றிரண்டாவது படும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு ஒன்றும் ஆகாது. ராமரை அழித்து அவரது ரத்தத்தை குடித்துவிட்டு உங்களுக்கு செய்தி அனுப்புவேன். நீங்கள் என்ன முடிவு எடுக்கின்றீர்களோ அதற்கு நான் கட்டுப் படுகிறேன் என்று கும்பகர்ணன் பேசி முடித்தான். ராவணனுடைய பிரதான ஆலோசகன் பிரஹஸ்தன் ராவணனுடைய பலத்தை எடுத்துச் சொல்லி உங்களை எதிர்த்து இது வரை யாரும் வென்றது இல்லை. இனி வெற்றி பெறப் பொவதும் இல்லை என்று ராவணனை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினான். ராவணன் உற்சாகமடைந்தான். குபேரனை எதிர்த்து வெற்றி பெற்றவன் நான் என்னை எதிர்த்து யார் இங்கே வந்து வருவார்கள் என்று ஆர்ப்பரித்தான். ராவணனின் பேச்சில் சபையில் உள்ளவர்கள் ஆராவாரம் செய்தார்கள்.

நாயன்மார் – 9. இளையான்குடி மாறன் நாயனார்

இராமநாதபுரம் பரமக்குடியிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் மைல் தொலைவில் உள்ள ஊர் இளையான்குடி. அங்கு வேளாளார் குலத்தில் பிறந்தவர் இளையான்குடி மாறன். விவசாயத்தை தொழிலாக செய்து வந்தார். மிகுந்தச் செல்வந்தராய் இருந்தார் இளையான்குடி மாறன். இறைவன் மேலும் அவரின் அடியார்கள் மேலும் அளவில்லாத அன்பு கொண்டவராக இருந்தார். அடியவர்களுக்கு உணவு அளிப்பதை இறைவனுக்கு செய்யும் பெரும் தொண்டாகவும் இறைவனுக்கு செய்யும் வழிபாடாகவே செய்து வந்தார். அடியவர்கள் விரும்பும் அறுசுவை உணவை தயாரித்து பரிமாறி மகிழ்ந்தார். அவரின் பக்தியை அனைவருக்கும் உணர்த்த இறைவன் முடிவு செய்து அவரை சோதிக்க ஆரம்பித்தார். அவரின் செல்வம் அனைத்தும் கரைய ஆரம்பித்தது. அடியவர்களுக்க்கு உணவு அளிக்க கடன் பெற்றும் சொத்துக்ளை விற்றும் தொண்டு செய்து வந்தார். சிறிது நாளில் மிகவும் ஏழ்மை நிலைக்கு மாறினார். ஆனாலும் அடியவர்களுக்கு உணவு அளிப்பதை தொடர்ந்து செய்து வந்தார்.

ஒரு மழைக் காலத்தில் இரவு நேரத்தில் ஒரு அடியவர் வேடத்தில் இளையான்குடி மாறன் வீடு வந்து சேர்ந்தார். இளையான்குடி மாறனும் அவர் துணைவியரும் அவர்களுக்கே உணவு இல்லாமல் படுத்திருந்தார்கள். மழையில் நனைந்தபடியே வந்த அடியாரை வரவேற்று அவரின் ஈரமேனியைப் போக்க உடைகள் கொடுத்து உதவினார்கள். இளையான்குடி மாறன் மனைவியிடம் அடியவரின் பசியைப் போக்க என்ன செய்யலாம் என ஆலோசித்தார். அவர் மனைவி கணவரிடம் இன்று நம் சிறுவயலில் பயிர் செய்து வைத்த செந்நெல்லை எடுத்து வந்தால் அதைக் கொண்டு உணவு செய்யலம் என்றார். அதன்படி இளையான்குடி மாறன் மழையில் வயல் வெளிக்குச் சென்றார். அங்கு அன்று விதைத்த முளை நெல் மழையினால் மிதந்து கொண்டு இருந்தது. அதனை ஒன்று சேர்த்து கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்தார். வீட்டின் பின்புறம் சென்று உள்ள குழி நிரம்பாத குறும் பயிரான கீரையைக் கொண்டு வந்து கொடுத்தார். அடுப்பு எரிக்க இருந்த விறகு இல்லை என்பதை இளையான்குடி மாறனிடம் தெரிவித்தார். உடனே இளையான்குடி மாறன் குடிசையின் விட்டத்தில் உள்ள கட்டையே ஒடித்து கொடுத்தார். இவற்றையெல்லாம் வைத்து அடியரின் பசியைப் போக்க சுவை உணவாக மாற்றிய அம்மையார் தன் உணவு தயாராகி விட்டது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் அடியவரை அழைக்கலாம் என்றார். இருவரும் அடியவரின் அருகில் சென்று அடியவரை அழைத்ததும் அடியவர் இருந்த இடம் பேரொளியாக மாறியது. இருவரும் திகைத்து நின்றனர். பேரோளியில் இருந்து இறைவன் அப்பனும் அம்மையுமாக இடப வாகனத்தில் காட்சியளித்து அன்பனே அடியவர்களுக்கு உணவளிப்பதையே எனக்கு செய்யும் வழிபாடாக செய்த நீயும் உனது மனைவியும் என் பெரும் உலகமாகிய சிவலோகத்தினை அடைந்து பேரின்பம் அனுபவித்திருப்பாயாக என்று அருள் செய்து மறைந்தருளினார்.

குருபூஜை: இளையான்குடி மாறன் நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 4

ராமரிடம் இருந்த சீதையை பிரித்து இங்கு கொண்டு வந்ததில் இருந்து இலங்கை நகரத்தில் அபசகுனங்கள் நிறைய தெரிகிறது. ஹோமங்கள் செய்யும் போது எரியும் அக்னி எரிய வேண்டிய முறையில் எரியவில்லை. சரியான மந்திரங்களை சொல்லி ஆகுதிகளையும் நெய்யையும் அக்னியில் போட்டாலும் அக்னி எரிவதில்லை. பூஜை செய்யும் இடங்களில் பாம்புகள் நிறைய காணப்படுகிறது. இறைவனுக்கு படைக்க செய்யும் உணவுகளை இறைவனுக்கு படைக்கும் முன்பாகவே அதில் எறும்புகள் வந்து மொய்க்கிறது. பசுக்கள் சரியாக பால் கரப்பது இல்லை. நமது அரண்மணையில் உள்ள யானைகள் குதிரைகள் கோவேறு கழுதைகள் என அனைத்து விலங்குகளும் ஆரோக்கியம் இல்லாமல் கிடக்கின்றது. சரியாக உண்ணாமல் விபரீதமாக நடந்து கொள்கின்றன. விலங்குகளுக்கு செய்யும் வைத்தியங்கள் எதுவும் பலன் அளிக்கவில்லை. காக்கைகள் நகரத்தின் உயரமான இடங்களின் மேல் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து விபரீதமாக கத்துகின்றன. கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. நரிகள் ஊருக்குள் புகுந்து ஊளையிடுகின்றன. காட்டு மிருகங்கள் நகரத்திற்குள் நடமாடுகின்றன. சகுனம் சொல்லும் அறிஞர்கள் இந்த அபசகுனங்களின் அறிகுறிகளை பார்த்து அதற்கு அர்த்தம் சொல்வது அனைவருக்கும் கவலையை உண்டாக்கி இருக்கின்றது. இவையெல்லாம் நமக்கு மிகப்பெரிய அபாயத்தையும் நஷ்டத்தையும் குறிக்கின்றது. இதை நாம் அலட்சியம் செய்யக்கூடாது. சீதையைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். அவளை இங்கு கொண்டு வந்தது முதல் இந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் மற்றவர்களையும் விசாரித்து கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நான் சொன்னதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் என் மீது கோபித்துக் கொள்ளாதீர்கள்.

ராமரை பகைத்துக் கொள்வதினால் நமக்கு லாபம் ஒன்றும் இல்லை. சீதையை திருப்பி அனுப்பிவிட்டு நாம் சுகமாக வாழ்வோம் என்று மிகப் பணிவுடன் விபீஷணன் ராவணனிடம் கூறினான். அதற்கு ராவணன் சீதையைத் திருப்பி தரும் பேச்சுக்களை இங்கு பேச வேண்டாம். அது ஒரு நாளும் முடியாது. ராமரை நான் ஒரு எதிரியாகவே காணவில்லை. ராமரின் மேல் எனக்கு ஒரு பயமும் இல்லை நீ போகலாம் என்றான். ராவணன் சீதையை திருப்பி அனுப்பக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தாலும் தன்னுடைய ஆசை நிறைவேறவில்லையே என்று மிகவும் வருந்தினான். தான் செய்யும் காரியத்திற்கு தன்னுடைய உறவினர்களும் தவறாக பேசுகின்றார்களே என்று தனது மன அமைதியை இழந்தான் ராவணன். அதனை யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் சபையை கூட்டி ஆலோசனை செய்தான். இழந்த மன அமைதியை மீண்டும் பெறுவதற்காக சபையை கூட்டி ஆலோசனை என்ற பெயரில் தன்னை மற்றவர்கள் பெருமையாக பேசுவதை கேட்டு ஆறுதல் அடைந்தான் ராவணன். தனது அகங்காரத்தால் சிறிய காரியத்துக்கு கூட சரியான யோசனை செய்ய இயலாமல் முடிவெடுக்க முடியாமல் திணறினான் ராவணன்.

ராமரை பற்றி விவாதிக்க மீண்டும் தனது மந்திரி சபையை கூட்டினான். இந்த முறை நகரத்தில் உள்ள அனைத்து ராட்சச குழுக்களின் தலைவர்களும் வர வேண்டும் என்று கட்டளையிட்டான். அரண்மனையில் ராட்சச தலைவர்களால் நிரம்பியது. ராவணன் பேச ஆரம்பித்தான். எல்லா விதத்திலும் நீங்கள் திறமைசாலிகள். இந்த மந்திரி சபையில் உள்ளவர்கள் எந்த விதமான சிக்கலான காரியத்திற்கும் சரியான யோசனை சொல்லும் சக்தி வாய்ந்தவர்கள் நீங்கள். இதுவரை நீங்கள் ஆலோசித்து சொன்ன அனைத்தும் நமக்கு நன்மையை அளித்திருக்கிறது. இதுவரையில் நாம் செய்த யுத்தங்களும் அதற்கு நீங்கள் சொன்ன அனைத்து ஆலோசனைகளும் நமக்கு பல வெற்றிகளை கொடுத்திருக்கிறது. நாம் இது வரையில் தோல்விகளை கண்டதில்லை. இப்பொழுது உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன்.