குச்சனூர் சனீஸ்வர பகவான்

சனிஸ்வர பகவான் அரூபி வடிவத்தில் சுயம்பு லிங்கமாக பூமியிலிருந்து வளர்ந்து கொண்டேயிருந்தார். அவருக்கு மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலின் தலமரம் விடத்தை மரம். தலமலர் கருங்குவளை மலர் தல இலை வன்னி இலை. வாகனம் காகம். தானியம் எள். திருக்கோவிலின் வளாகத்தில் வினாயகப் பெருமான் முருகன் சந்நிதிகள் உள்ளன. உட்புறமாக லாடசந்நியாசியின் கோயில் உள்ளது. வாய்க்கால் கரையில் சோணை கருப்பனசாமி கோவில் உள்ளது. அதற்குப் பக்கத்தில் கன்னிமார் கோவிலும் நாகர் கோவிலும் உள்ளன. மூலஸ்தானத்திற்கு பின்புறம் விடத்தலை தலமரம் உள்ளது. நாள்தோறும் முக்கால பூஜைகளும் தவறாமல் இக்கோவிலில் நடைபெறுகிறது. தினந்தோறும் பூஜை முடிந்த பின் பிரசாதம் முதலில் காகத்திற்கு வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அன்றைய தினம் தடையாகக் கருதி மீண்டும் பூசாரிகள் மன்னிப்புக் கேட்டு மீண்டும் காகத்திற்கு பிராதத்தை வைப்பார்கள். பிராதத்தை காகம் உண்டபின் தான் பக்தர்களுக்கு பரிமாறப்படும்.

குச்சனூர் பகுதியை சேர்ந்த தினகரன் எனும் மன்னன் ஒருவன் குழந்தையின்றி மனம் வாடிவந்த நிலையில் தனக்குக் குழந்தை ஒன்று அளிக்கக் கோரி தினந்தோறும் இறைவனிடம் வேண்டி வந்தான். ஒரு நாள் வேண்டிக் கொண்டிருந்த போது ஒருநாள் அசரீரி ஒன்று கேட்டது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும் அவனை வளர்த்து வர வேண்டும் என்றும் அதன் பின்பு அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. அந்த அசரீரியில் கூறப்பட்டபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் வந்தான். அந்த மன்னனும் அந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான். அதன் பின்பு அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மன்னனும் அரசியும் அந்தக் குழந்தைக்கு சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர். இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான். மன்னனும் அவனுடைய அறிவுத்திறனுக்கு அவனை மன்னனாக்குவதே சரி என்கிற எண்ணத்துடன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனுக்கே முடிசூட்டினான். இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு சனி தோசம் பிடித்தது. சனி தோசத்தால் தினகரன் பல சோதனைகளுக்கு ஆளாகி மிகவும் துன்பமடைந்தான். தன்னை வளர்த்து மன்னனாகவும் ஆக்கிய தனது வளர்ப்புத் தந்தை அடையும் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால் சனியின் உருவத்தைப் படைத்து தனது தந்தைக்கு வரும் துன்பத்தை நீக்க வேண்டி வழிபடத் துவங்கினான்.

சந்திரவதனன் வழிபாட்டில் மனமிறங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றினார். அவரவர்களுடைய பாவ வினைகளுக்கேற்ப ஏழறை நாழிகை, ஏழறை நாட்கள், ஏழறை மாதங்கள், ஏழறை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன. இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும் தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு அவர்களது நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும். உனது தந்தை முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப இந்தப் பிறவியில் சனி தோசம் பிடித்திருக்கிறார். அவரின் பாவ வினைகளுக்குத் தகுந்தபடி அவருக்குத் துன்பங்கள் வருகின்றன என்றார். சந்திரவதனன் அனாதையாக அந்த வீட்டிற்கு வந்த தன்னை வளர்த்ததுடன் வளர்ப்பு மகனான தன்னை இந்த நாட்டின் மன்னனாகவும் ஆக்கிய அவருக்குக் கொடுக்கும் துனபங்களைத் தனக்கு அளித்து அவருடைய துன்பத்தைக் குறைக்கும்படி வேண்டினான். அவனுடைய வேண்டுதலில் மனமிறங்கிய சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழறை நாழிகைக் காலம் சனி தோசம் பிடிக்கும் என்றும் அந்த ஏழறை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனனும் அதற்கு சம்மதித்தான்.

சனீஸ்வர பகவானும் அதற்கு ஒத்துக் கொண்டு ஏழறை நாழிகை காலத்திற்கு அவனுக்குக் கடுமையான பல துன்பங்களைக் கொடுத்தார். அத் துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதனனின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வர பகவான் இந்த ஏழறை நாழிகை கால சனிதோசம் கூட உன் முற்பிறவியின் வினைகளுக்கேற்ப உனக்கு வந்தது. தங்கள் குறைகளை உணர்ந்து இவ்விடத்திற்கு வந்து என்னை வணங்கும் எவருக்கும் சனி தோசத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன் என்று சொல்லி மறைந்தார். சந்திரவதனனின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு சுயம்புவாகத் தோன்றினார். சனீஸ்வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சந்திரவதனன் சனி பகவானால் பிடித்து அதனால் துன்பப்படும் பிறருக்கும் வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அந்த செண்பக நல்லூரில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற்குக் குச்சுப்புல்லினால் கூரை அமைத்து வழிபாட்டுத் தலமாக்கினான். இதன் பிறகு இந்த செண்பகநல்லூர் குச்சனூர் என்று ஆகிவிட்டது. தினகரன் மான்மியம் என்கிற பழமையான நூலில் இந்த தலத்திற்கான புராண வரலாறு உள்ளது. தேனி நகரிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 13

ராமரை புகழ்ந்து பேசியும் தன்னை அவமானப்படுத்தியும் பேசிய சூர்ப்பனகையின் வார்த்தைகள் கரனின் உள்ளத்தில் சூலம் போல் பாய்ந்து கோபத்தை உண்டு பண்ணியது. சூர்ப்பனகையிடம் ஒரு அற்பனைக்கண்டு நீ இவ்வளவு பயப்படக்கூடாது. அவனை நான் சிறிது நேரத்தில் கொன்று விடுவேன். அவனின் ரத்தத்தை நீ குடிப்பாய். அது வரை காத்திரு என்று யுத்தத்திற்கு கிளம்பினான் கரன். கரனின் வார்த்தைகளால் மகிழ்ச்சி அடைந்த சூர்ப்பனகை நீ தனியாக போக வேண்டாம். உன்னால் முடிந்த வரை படைகளை திரட்டிக்கொண்டு போ என்று கரனிடம் கேட்டுக்கொண்டாள். கரனும் தன்னுடைய படைகள் அனைத்தையும் ஆயுதங்களுடன் போருக்கு செல்ல உத்தரவிட்டான். கரனின் படைத் தலைவனான தூஷணன் தலைமையில் அனைத்து படைகளும் கொடூர ஆயுதங்களுடன் காட்டிற்கு சென்றது. உற்சாகத்துடன் ஓடிய படைகளின் பின்னே கரன் சென்றான்.

ராமரை அழித்தே தீர வேண்டும் என்ற உற்சாகமாக கிளம்பிய ராட்சசர்கள் அனைவருக்கும் செல்லும் வழி எங்கும் அபசகுனங்கள் தென்பட்டது. குதிரைகள் காரணமில்லாமல் நிலை தடுமாறி விழுந்தது. சூரியனை சுற்றி கரிய வட்டம் தோன்றியது. அரசனின் தேரில் மாமிச பட்சியான கழுகு வந்து அமர்ந்து கூச்சல் போட்டது. நரிகள் ஊளையிட்டு பயங்கரமாக கத்தியது. பெரிய உடல் கொண்ட நாரைகள் வானத்தை மறைக்கும் அளவிற்கு கூட்டமாக சென்றது. மேலும் பல அபசகுனங்களை கண்ட ராட்சச படையினர் உற்சாகம் இழந்தனர். கரன் அனைவரையும் உற்சாகப்படுத்தினான். அபசகுனங்களை கவனிக்காதீர்கள். நாம் இதுவரையில் செய்த எந்த யுத்தத்திலும் தோற்றதில்லை. துஷ்டர்களாகிய அந்த மானிட பூச்சிகளை அழித்து விட்டு வெகு சீக்கிரம் நாம் திரும்பி விடுவோம் என்று கர்ஜனை செய்தான். பயத்திலிருந்த சேனை படைகள் மீண்டும் உற்சாகமடைந்து கூக்குரலிட்டு காட்டிற்குள் சென்றார்கள்.

ராமரும் லட்சுமணனும் ராட்சச படையின் கூக்குரலை கேட்டு யுத்தத்துக்கு தயாரானார்கள். ராமர் லட்சுமணனிடம் வருகின்ற ராட்சசர்கள் அனைவரும் இன்று அழிந்து போவது நிச்சயம். நீ சீதையை மலைக்குகையில் பாதுகாப்பாக வைத்துவிட்டு அவளுக்கு காவலாக இரு. வருகின்ற ராட்சச படைகளை நான் ஒருவனே பார்த்துக்கொள்கின்றேன் தற்போது எனக்கு துணையாக நீ தேவையில்லை. விரைவாக சீதையை அழைத்துச் செல் என்று கட்டளையிட்டார் ராமர். லட்சுமணன் சீதையை அழைத்துக்கொண்டு மலைக்குகைக்குள் சென்றான். ராமர் தனியாக யுத்தம் செய்வதை பார்க்க தேவர்களும் கந்தர்வர்களும் ஆகாயத்தில் காத்திருந்தார்கள். ராமர் ஒருவராக இருந்து இவ்வளவு பெரிய ராட்சச சேனையை எப்படி வெற்றி அடையப்போகிறார் என்று ரிஷிகளும் முனிவர்களும் கவலை அடைந்தார்கள். ராமர் வில்லின் அம்புடன் தயாராக காத்திருந்தார். ராட்சச படைகளின் சிம்ம நாதமும் பைரிகை நாதமும் கர்ஜனைகளும் காட்டை நிறப்பி இருந்தது. விலங்குகள் சத்தத்தில் அங்கும் இங்கும் சிதறி ஓடியது. ஆகாயத்தில் மேகக்கூட்டங்கள் சூழ்வது போல் ராமரை ராட்சச படைகள் சூழ்ந்து கொண்டது.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 12

ராமர் லட்சுமணனிடம் சீதைக்கு காவலாக இருந்து அவளை பார்த்துக்கொள். வருபவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தன் வில்லையும் அம்பையும் எடுத்து ராட்சச சேனாதிபதிகளிடம் பேச ஆரம்பித்தார். நாங்கள் ராம லட்சுமணர்கள் அயோத்தியின் ராஜகுமாரர்கள் இக்காட்டில் தபஸ்விகளை போல வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பிறருக்கு தீங்கு செய்வதையே தொழிலாகக் கொண்டு முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் தொந்தரவு கொடுக்கும் உங்களை முனிவர்களின் ஆணைப்படி அழிக்க வில் அம்புடன் வந்திருக்கின்றேன். உயிர் மேல் ஆசையில்லை என்றால் திரும்பி ஓடாமல் என்னை எதிர்த்து போர் செய்யுங்கள். உயிர் மேல் ஆசையிருந்தால் உடனே திரும்பி ஒடி விடுங்கள் என்றார்.

ராமரின் பேச்சைக் கேட்ட பதினான்கு அரக்கர்களும் கோபத்துடன் கடுமையான குரலில் பேச ஆரம்பித்தார்கள். மிகப்பெரிய உருவம் படைத்த எங்களுடைய தலைவரும் இக்காட்டின் அரசருமான கரனின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறாய். எப்போது எங்களது தாக்குதலில் நீ அழிந்து போகப்போகிறாய். நீயோ ஒருவன் நாங்கள் பதினான்கு சேனாதிபதிகளுடன் பல பேர் இருக்கின்றோம். போர்க்களத்தில் எங்களுக்கு எதிராக உன்னால் நிற்கக்கூட முடியாது. சில கணங்களில் உன்னை வீழ்த்தி விடுவோம். போர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கோபத்துடன் கூறிவிட்டு பலவகையான ஆயுதங்களுடன் ராமரை நோக்கி ஒடி வந்தார்கள்.

ராமர் தனது வில்லில் அம்பை பூட்டி யுத்தத்துக்கு தயாரானார். ராட்சசர்கள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை போரில் யாராலும் வெல்ல முடியாத ராமரின் மேல் வீசினார்கள். ராமர் தனது அம்பை ராட்சசர்களின் மீது வரிசையாக எய்தார். ராட்சசர்கள் அனைவரும் மார்பு பிளக்கப்பட்டு உடல் சிதைந்து வேர் அறுக்கப்பட்ட மரம் போல் வீழ்ந்தார்கள். தரையில் வீழ்ந்த ராட்சச சேனாதிபதிகளின் உடலை பார்த்து பயந்த சூர்ப்பனகை பயங்கரமான கூச்சலுடன் அந்த இடத்தை விட்டு ஓடி மீண்டும் கரனிடம் வந்து சேர்ந்து அழுது புலம்பினாள். கரனுக்கு ஒன்றும் புரியவில்லை. யமனைப் போன்ற வீரர்களை அனுப்பினேன். அவர்கள் ராஜகுமாரர்களை அழித்திருப்பார்கள். நீ ஏன் அழுது புலம்புகிறாய் நீ இப்படி புலம்புவதை நிறுத்தி நடந்தவற்றை சொல் என்றான் கரன்.

சேனாதிபதிகள் பதினான்கு பேரை நீ அனுப்பினாய். அவர்கள் அனைவரையும் அந்த அழகிய ராஜ குமாரன் தனது அற்புதமான யுத்தத்தினால் சில கணங்களில் கொன்று விட்டான். அனைவரும் உடல் சிதைந்து இறந்துவிட்டார்கள். உனது காட்டிற்குள் புகுந்த அந்த ராஜ குமாரர்களை உடனே அழித்துவிடு. நீ அவர்களை அழிக்காவிட்டால் அவர்கள் நம்மை அழித்து விடுவார்கள். உன்னை நீ சூரன் என்று சொல்லிக்கொள்கிறாய் இதில் பலன் ஒன்றும் இல்லை. நீ உண்மையான சூரனாக இருந்தால் உடனே யுத்தத்திற்கு கிளம்பி அவர்களை அழித்து நம் ராட்சச குலத்தை காப்பாற்று இல்லையென்றால் அவர்களால் நாம் முற்றிலும் அழிந்து போவோம் என்று கரனின் கோபத்தை சூர்ப்பனகை தூண்டிவிட்டாள்.

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்?

ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து இருட்டத் தொடங்கியது. அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி அம்பை செலுத்தினான். அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து அம்மா என்ற குரல் கேட்டது. ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே யாரையோ தவறுதலாக கொன்றுவிட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான். அங்கு சென்று பார்த்தால் பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான். இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டதே என்று பதைபதைத்த அரசன் உடனே காவலாளிகளை கூப்பிட்டு இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்கவேண்டும். உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான்.

வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர். கடைசியில் ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர். இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில் என்று மன்னனிடம் கூறினார்கள். மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, என்னை மன்னித்துவிடுங்கள். நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை. அறியாமல் நடந்த தவறு இது. போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணிவிட்டேன், தான் சொன்னதைக் கேட்டு அவர்கள் சமாதானாகவில்லை என்று யூகித்துக்கொண்டான். அடுத்த நொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான். அருகே நின்றுகொண்டிருந்த அமைச்சரிடம் இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான். தட்டுக்கள் வைக்கப்பட்டபிறகு அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள் நவரத்தின மாலை முத்தாரம் என அனைத்தையும் வைத்தான். பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி அதை மற்றொரு தட்டில் வைத்தான். மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகிவிட்டேன். நான் தண்டிக்கப்படவேண்டியவன். பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டுவிடுகிறேன். நான் செய்த தவறுக்கு பரிகாரம் இது தான். இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன. அவற்றை எடுத்துக்கொண்டு என்னை மன்னியுங்கள். அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால் மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக்கொள்ளுங்கள் என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன். உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர்.

விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது? மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர். சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகுவெட்டி பேச ஆரம்பித்தான். நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல என் மகனே போய் விட்ட பிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்? நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை. அவர் அளிக்கும் பொன் பொருளையும் விரும்பவில்லை. நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது. தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம் வருந்த வேண்டும் என்று விரும்பினேன். அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மையாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார். அது ஒன்றே எனக்கு போதும். மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும். நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது. அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக்கொண்டால் என் மகனின் உயிருக்கு நான் விலை பேசியது போலாகிவிடும். மன்னர் தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம் என்று கூறி தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் வழியே போய் விட்டான் விறகுவெட்டி.

கருத்து: நாம் தான் அந்த மன்னன் நாம் செய்யும் தவறுகள் தான் அந்த கொலை. அந்த விறகுவெட்டி தான் இறைவன். மன்னன் செய்தது போல் செய்த தவறுக்கு மனம் வருந்தி பரிகாரம் செய்யவேண்டும். இப்படி செய்யும் பரிகாரங்கள் தான் இறைவனால் மன்னிக்கப்பட்டு பலனளிக்கும். எந்திரத்தனமாக பரிகாரங்கள் செய்து விட்டு அதே தவறே மீண்டும் செய்தால் எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் எத்தனை லட்சங்களுக்கு திருப்பணிகள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தராது. செய்த பாவத்திற்கு மனம் திருந்தி மன்னிப்பு கேட்டாலொழிய பாவமன்னிப்பும் கிடைக்காது பரிகாரமும் பலன் அளிக்காது.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி 11

ராமரும் லட்சுமணனும் மாற்றி மாற்றி பேசி தன்னிடம் விளையாடுகின்றார்கள் என்பதை அறிந்த சூர்ப்பனகைக்கு சீதையின் மீது கோபம் வந்தது. சூர்ப்பனகை ராமரிடம் வந்து வயிறு ஒட்டி ஒல்லியாக இருக்கும் சீதையின் மீது உனக்கு காதல் இருப்பதால் தானே என்னுடன் வர மறுக்கிறாய். நீ இல்லாமல் நான் உயிருடன் இருக்க முடியாது. உன்னை விட மாட்டேன். உன்னை அடைந்தே தீருவேன். இப்போதே இந்த சீதையை தின்று விடுகின்றேன். அப்போது நீ என்னை திருமணம் செய்து கொள்வாய். நாம் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்று சீதையின் மீது பாய்ந்தாள் சூர்ப்பனகை. ராமர் சீதையின் அருகே சூர்ப்பனகை வர முடியாமல் நில் என்று அவளை தடுத்தார். விளையாட்டு பெரியதாயிற்று என்று எண்ணிய ராமர் லட்சுமணனிடம் சீதைக்கு ஒன்றும் இல்லை. இந்த ராட்சச பெண்ணுக்கு நல்ல பாடம் கற்பித்து விடு. அவலட்சணமான இந்த ராட்சச பெண்ணின் உடலில் ஒரு குறையை உண்டாக்கிவிடு என்றார். ராமரின் சொல்லுக்காக காத்திருந்த லட்சுமணன் கோபத்துடன் தன் கத்தையை எடுத்து ராட்சசியின் காதையும் மூக்கையும் அறுத்து விட்டான். அகோரமான உருவத்துடன் இருந்த ராட்சசி மேலும் அவலட்சணமாகி வலி பொருக்க முடியாமல் கதறிக்கொண்டே காட்டிற்குள் ஒடி மறைந்தாள்.

அந்த காட்டின் ராட்சச அரசனாக இருக்கும் தனது சகோதரன் கரனிடம் அலறி அடித்து ஒடிச்சென்று கதறினாள் சூர்ப்பனகை. அவளின் நிலையை பார்த்து கோபம் கொண்ட கரன் என்ன ஆயிற்று உடனே சொல். உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை இப்போதே கழுகிற்கும் காக்கைக்கும் இரையாக்குகின்றேன் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு விசாரித்தான். அதற்கு சூர்ப்பனகை அயோத்தியின் மன்னரான தசரதரின் அழகிய குமாரர்கள் இரண்டு பேர் ஒரு பெண்ணுடன் காட்டிற்குள் தபஸ்விகள் வேடத்தில் வந்திருக்கின்றார்கள். அந்த பெண்ணை காரணமாக வைத்துக்கொண்டு என்னை தாக்கி இந்த அக்கிரம காரிந்த்தை செய்துவிட்டார்கள். அவர்களின் ரத்தத்தை குடிக்க ஆசைப்படுகிறேன். இப்போது நீ பார்த்துக்கொண்டிருக்கும் வேலைகளே அப்படியே வைத்து விட்டு முதல் வேலையாக அவர்களை உடனே கொன்று விட்டு அடுத்த வேலையை பார் என்று கதறி அழுதாள்.

காட்டில் இருக்கும் ராஜகுமாரர்களை இருவரையும் கொன்று விட்டு அவர்களின் உடலை இங்கே உடனே கொண்டு வாருங்கள். அவர்களுடன் இருக்கும் பெண்ணையும் கட்டி இங்கே அழைத்து வாருங்கள். தாமதம் வேண்டாம் உடனே கிளம்புங்கள் என்று கரன் தனது ராட்சச சேனாதிபதிகளுக்கு உத்தரவிட்டான். பதினான்கு சேனாதிபதிகள் தங்கள் படை பரிவாரங்களுடன் கிளம்பினார்கள். அவர்களுக்கு ராமர் இருக்கும் இடத்தை காட்டி ராஜகுமாரர்களின் ரத்தத்தை குடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சூர்ப்பனகையும் அவர்களுடனேயே வந்தாள். தூரத்தில் ராம லட்சுமணர்களை கண்டதும் அதோ பாருங்கள் என்னை துன்புறுத்தியவர்கள் அங்கே இருக்கின்றார்கள் அவர்களை உடனே கொன்று விடுங்கள் என்று சூர்ப்பனகை கத்தினாள். சூர்ப்பனகை கத்திய சத்தத்தில் ராட்சச கூட்டம் ஒன்று தங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை ராமர் அறிந்து கொண்டார்.

நிறம் மாறும் அசலேஷ்வர் மஹாதேவ்

சிவ பெருமான் லிங்கவடிவில் இருக்கிறார். இவரது பெயர் அசலேஷ்வர் மஹாதேவ். லிங்கமானது காலை நண்பகல் இரவு ஆகிய மூன்று வேளைகளில் வெவ்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறது. சிவலிங்கம் ஒரு நாளைக்கு மூன்று வேலை என காலை நேரத்தில் சிவப்பு நிறமாகவும் உச்சிப் பொழுதில் அடர்ந்த குங்குமப்பூ நிறத்திலும் பொழுது சாய்கையில் சற்று நிறம் மங்கிய நிலையிலும் இந்த லிங்கம் தரிசனம் தருகிறது. 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அக்கோவிலில் கலர் மாறுவது வருடத்தின் அனைத்து நாட்களிலும் நிகழ்கிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியுள்ளது. இந்த லிங்கத்தின் உயரம் இதுவரையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் அடிப்பகுதி ஆயிரம் அடிகளையும் தாண்டி பாதாளத்தில் புதைந்து உள்ளது. சிவன் அடிமுடி காண முடியாதவர் என்பதை இது உணர்த்துகிற ஆலயமாக விளங்குகிறது. அச்சலேஷ்வர் என்பது சமஸ்கிருத வார்த்தை அச்சால் என்ற சமஸ்கிருத வார்த்தையை பிரதிபலிக்கும் ஒரு வார்த்தையாகும். இதற்கு நகரவோ அசையவோ முடியாது என்று பொருள். சிவபெருமானின் அனைத்து கோவில்களிலும் சிவபெருமானை முழு லிங்கமகாகவோ அல்லது சிலை வடிவாகவோ வணங்கப்படுவார். இக்கோவிலில் இருக்கும் லிங்கம் சிவபெருமானின் கட்டைவிரலாக பாவித்து வணங்கப்படுகிறார். இந்த கோயில் 9 ஆம் நூற்றாண்டில் பர்மர் வம்சத்தால் கட்டப்பட்டது. பின்னர் 1452 ல் மஹாராண கும்பம் என்பவர் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பி அதற்கு அச்சல்கர் என்று பெயரிட்டார்.

இங்குள்ள நந்தி சிலை தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஐந்து வித்தியாச உலோகங்களின் கலவையால் 4 டன் எடையில் செய்யப்பட்டது. இக்கோவில் வரலாற்றின்படி இங்கிருக்கும் நந்தி முஸ்லீம் படையெடுப்பாளர்களின் படையெடுப்பிலிருந்து பலமுறை கோயிலைப் பாதுகாக்திருக்கிறது. கோவிலை கொள்ளையடிக்க வரும் போது ஒவ்வொரு முறையும் மறைந்திருக்கும் தேனீக்கள் படைகளை கொட்டி கோயிலை பல முறை காப்பாற்றியுள்ளன. இக்கோவில் இருக்கும் இடத்தில் ராஜபுத்திரர்களும் ரிஷிகளும் முனிவர் பெருமக்களும் இங்கு தவம் செய்திருக்கிறார்கள். வசிஷ்ட மகரிஷி தனது மனைவி அருந்ததி மற்றும் தனது காமதேனுப் பசுவுடன் இங்கு தங்கியிருந்து தவம்புரிந்து வேள்விகள் இயற்றியிருக்கிறார். அற்புதா என்ற பெயர் கொண்ட நாகம் ஒன்று சிவபெருமானின் வாகனமான நந்திதேவரின் உயிரைக் காப்பாற்றியது. இச்சம்பவம் நடைபெற்ற இடமான இந்த மலை அற்புதா காடுகள் என்ற பொருளில் அற்புதாரண்யம் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்தப் பெயர் திரிந்து அபு பர்வதம் என்றும் பின்னர் மவுன்ட் அபு என்றும் மாறிப்போனது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு மாவட்டமான தோல்பூர் ஆக்ராவில் இருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவிலும் ஜெய்பூரில் இருந்து 276 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கிருந்து 60 கிலோ மீட்டர் தூரம் மலைப் பாதை வழியாக மவுன்ட் அபு கடந்து பயணித்தால் அசலேஷ்வர் மஹாதேவ் கோவிலை அடையலாம்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி 10

ராமர் வந்திருந்த ராட்சச பெண்ணை பார்த்து நீ யார்? உனது பெயர் என்ன? உன்னைப்பார்த்தால் ராட்சச பெண் போல் தெரிகிறது. இங்கு எதற்கு வந்திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு ராட்சச பெண் ராவணனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றாயா? ராவணனின் சகோதரி நான். எனது பெயர் சூர்ப்பனகை. விச்ரவஸினுடைய மகனும் ராட்சசர்களின் அரசன் ராவணன் அவனின் சகோதர்களான விபீஷணனும் கும்பகர்ணனும் மகா பலசாலிகள். தவிர இக்காட்டின் அரசனான கரணும் தூஷணனும் என் சகோதரர்கள் ஆவார்கள். இவர்களின் அதிகார பலம் மிகவும் பெரியது. நினைக்கும் எதையும் செய்யும் பலமும் அதிகாரமும் பெற்றவர்கள். ஆனால் நான் அவர்களுக்கு கட்டுப்பட்டவள் அல்ல. என் விருப்ப்படி தான் எதையும் செய்வேன். இந்த வனத்தில் என்னைக் கண்டால் அனைவரும் பயப்படுவார்கள். உன்னைக் கண்டதும் உன் மேல் நான் காதல் கொண்டுவிட்டேன். இனி நீ தான் என் கணவன். இந்த பூச்சியை போலிருக்கும் இந்த பெண்ணை கட்டிக்கொண்டு ஏன் அலைகிறாய். இக்காட்டில் உனக்கு தகுந்த மனைவி நான் தான். என்னுடன் வந்து மகிழ்ச்சியாய் இரு. என் உருவத்தை பார்த்து பயப்படாதே. எனக்கு உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்தி உண்டு. உனக்கு பிடித்தாற் போல் அழகாக என் உருவத்தை மாற்றிக்கொள்கிறேன். நீயும் நானும் வாழ்வதற்கு உனது தம்பியும் உனது மனைவியும் தடையாய் இருந்தால் இப்போதே அவர்களை தின்று முடித்து விடுகின்றேன். எதற்கும் யோசிக்காதே உடனே என்னுடன் வந்துவிடு என்றாள் சூர்ப்பனகை.

ராமர் சூர்ப்பனகை பேசிய அனைத்தையும் கேட்டு சிரித்துவிட்டு லட்சுமணனுடன் விளையாட எண்ணம் கொண்டார். அரக்கியே எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இவள் எனது மனைவி என்னுடனேயே இருக்கிறாள். என்னை ஆசைப்பட்டு நீ அடைந்தால் இரண்டாவது மனைவியாவாய். உனக்கு துன்பம் மிகவும் வரும். இரண்டு மனைவிகள் இருவருக்குமே தொந்தரவு வரும். எனது தம்பியை என்னை போலவே அழகிலும் வலிமையிலும் பலசாலி. இன்னும் திருமணம் ஆகாமல் தனியாக இருக்கின்றான். உனக்கு தகுந்த கணவனாக இருப்பான் அவனிடம் சென்று கேட்டுப்பார் என்றார்.

ராமர் சொன்னபடி சூர்ப்பனகையும் லட்சுமனணிடம் தனது ஆசையை தெரிவித்தாள். தனது அண்ணன் தன்னுடன் விளையாடுவதை அறிந்த லட்சுமணன் தானும் விளையாட்டில் சேர்ந்து கொண்டான். சூர்ப்பனகையிடம் பைத்தியக்காரி நீ ஏமாந்து போகாதே. நான் எனது அண்ணனுக்கு அடிமையாக இருந்து பணி செய்து கொண்டிருக்கின்றேன். நீ என்னை திருமணம் செய்தால் நீயும் என்னுடன் அடிமையாக இருந்து பணி செய்ய வேண்டும். நீயோ ராஜகுமாரி என்னைப்போன்ற அடிமையுடன் சேர்ந்து நீ வாழலாமா? அண்ணன் மனைவியை பற்றி கவலைப்படாதே. எனது அண்ணனை திருமணம் செய்து கொண்டு இரண்டாவது மனைவியாக மகிழ்ச்சியுடன் இருப்பாய் என்றான். சூர்ப்பனகை மீண்டும் ராமரிடம் வந்தாள்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 9

பஞ்சவடியின் அழகைக் கண்ட மூவரும் மெய்சிலிர்த்தார்கள். ராமர் லட்சுமணனிடம் தங்குவதற்கு சரியான இடத்தில் குடிலை அமைக்க வேண்டும் என்று சொன்னார். அதன்படியே லட்சுமணனும் குடிலைக் கட்டுவதற்கு சிறப்பான இடத்தை தேர்வு செய்து குடில் அமைப்பதற்குத் தேவையான பொருட்களைக் காட்டிற்குள் தேடி எடுத்து வந்து குடிலைக் கட்டி முடித்தான். குடிலின் அழகைப் பார்த்த ராமர் இவ்வளவு அழகான குடிலை அமைத்த நீ எனக்கு நமது தந்தையைப் போல தெரிகிறாய் என்று கூறி ஆனந்தக் கண்ணீருடன் லட்சுமணனைக் கட்டி அனைத்தார்.

பஞ்சவடியில் சில காலம் சென்ற பிறகு பனிக்காலம் ஆரம்பித்தது. மூவரும் நதிக்கரையை நோக்கிச் சூரிய நமஸ்காரம் செய்வதற்கும் தண்ணீர் எடுத்து வருவதற்கும் சென்றார்கள். அப்போது ராமருக்கு பரதனைப் பற்றிய நினைவு வந்தது. ராமர் லட்சுமணனிடம் நாம் இந்தக் காட்டில் குளிரில் வாழ்வது போலவே பரதனும் அனுபவிக்க வேண்டிய சுகங்களையெல்லாம் விட்டுவிட்டு நம்மைப் போலவே தரையில் உறங்கி விரத வாழ்க்கையை வாழ்கின்றான் என்று கூறினார். அதைக் கேட்ட லட்சுமணன் ராமரிடம் பரதனின் குணங்களைப் பார்த்தால் நமது தந்தையாரின் குணங்களைப் போலவே இருக்கின்றது. மக்கள் தாயைப் போலவே மகன் இருப்பான் என்று சொல்வார்கள் ஆனால் பரதன் விஷயத்தில் தவறாக இருக்கின்றது. குரூரம் குணம் கொண்ட கைகேயிக்கு பரதன் எப்படிப் பிறந்தான் என்று கூறி வியந்தான். ராமர் லட்சுமணனிடம் கைகேயியைப் பற்றி குறை கூற வேண்டாம். பரதனைப் பற்றி நீ கூறிய அனைத்தும் உண்மையே எனக்கு பரதனின் ஞாபகமாகவே இருக்கிறது அவனை இப்போதே பார்க்க வேண்டும் என்றும் தோன்றுகின்றது. எப்போது நாம் நால்வரும் ஒன்றாக அமர்ந்து உரையாடுவோம் என்று காத்திருக்கிறேன். நாம் நால்வரும் ஏற்கனவே ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடியதில் பரதனின் அமிர்தம் போன்ற பேச்சு இன்னமும் என் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்றார்.

நதிக்கரையில் பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் தர்ப்பணம் செய்துவிட்டு தெய்வீக ஒளிவீச மூவரும் குடிலுக்குத் திரும்பி வந்தார்கள். குடிலில் மூவரும் இதிகாச கதைகளைச் சொல்லி உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராமரின் முகம் பூரண சந்திரனைப் போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது. அந்த நேரத்தில் ராட்சசப் பெண் ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். தேவர்களைப் போன்ற அழகுடன் ஒருவர் இருக்கிறாரே என்று வியந்து ராமரின் மேல் மோகம் கொண்டு பேச ஆரம்பித்தாள். தவசிகளைப் போல உடை தரித்துக் கொண்டு மனைவியையும் அழைத்துக் கொண்டு வில்லும் அம்புமாக ராட்சசர்கள் வாழும் காட்டிற்குள் நீ எதற்காக வந்திருக்கிறாய்? யார் நீ? உண்மையைச் சொல் என்று கூறினாள். தசரத மகாராஜாவின் மூத்த குமாரன் நான். என்னை ராமன் என்று அழைப்பார்கள். அருகில் இருப்பது என் தம்பி லட்சுமணன். எனது மனைவியின் பெயர் சீதை. என் தாய் தந்தையரின் உத்தரவின் படி தர்மத்தைக் காப்பாற்ற இந்தக் காட்டில் வனவாசம் செய்ய வந்திருக்கின்றேன் என்று கூறினார்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 8

ராமர் சீதை லட்சுமணன் மூவரும் அகத்தியர் சொன்ன வழியை பின்பற்றி பஞ்சவடி இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். பஞ்சவடிக்கு அருகில் செல்லும் போது பெரிய கழுகைக் கண்டார்கள். அதன் வடிவத்தைக் கண்டு அது ராட்சசனாக இருக்க வேண்டும் என்று எண்ணி ஆயுங்களை எடுத்தார் ராமர். மூவரையும் பார்த்த கழுகு வந்திருப்பவர்கள் தசரதரின் சாயலாகத் தெரிகிறதே என்று எண்ணி யார் நீங்கள் என்று கேள்வி கேட்டது. அதற்கு ராமர் நாங்கள் அயோத்தி ராஜகுமாரர்கள். எங்கள் தந்தை பெயர் தசரதர். நாங்கள் அகத்தியரின் வழிகாட்டுதலின் பெயரில் பஞ்சவடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். கழுகு வடிவத்தில் இருக்கும் நீ யார் என்றார். அதற்கு கழுகு கருட பகவானுடைய தம்பி அருணனின் மகன் நான். எனது பெயர் ஜடாயு. எனக்கு சம்பாதி என்ற தம்பி இருக்கின்றான். நான் உங்கள் தந்தை தசரதரின் நெருங்கிய நண்பர் என்றது ஜடாயு. தனது தந்தையின் நண்பர் என்ற சொல்லை கேட்ட ராமர் காட்டில் மிகப்பெரிய துணையாக ஜடாயு இருக்கிறார் என்று மகிழ்ச்சியடைந்து ஜடாயுவை கட்டி அணைத்தார்.

ஜடாயு ராமரிடம் எனது நண்பர் தசரச மன்னர் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தது. சத்திய நெறியை விட்டு தவறக்கூடாது என்கின்ற உறுதியில் மிகவும் துன்பத்தின் உச்சியில் எனது தந்தை சொர்க்கம் சென்று விட்டார் என்று வருத்ததுடன் கூறினார் ராமர். இதனைக் கேட்ட ஜடாயு கண்களில் நீர் வழிய துயரப்பட்டு ராமரின் அருகில் அமர்ந்தது. தசரதர் உடலாகவும் நான் உயிராகவும் இருந்தோம். யமன் என் உயிரை விட்டுவிட்டு தசரதரின் உயிரை எப்படி கொண்டு சென்றான்? என்று ராமர் தந்தை இழந்த துயரத்தை மறுபடியும் ஞாபகமூட்டும்படி பேச ஆரம்பித்தது ஜடாயு. உங்களை எனது தந்தையின் உருவில் உங்களை காண்கின்றோம் என்று ராம லட்சுமணர்கள் இருவரும் ஜடாயுவுக்கு மரியாதை செலுத்தினார்கள். தசரதர் மேலுலகம் சென்றதும் நீங்கள் அயோத்தையை ஆட்சி செய்யாமல் இங்கு என் தபஸ்விகளை போல் உடை அணிந்து கொண்டு இக்காட்டில் வந்து கொண்டிருக்கின்றீர்கள் யார் உங்களை அயோத்தியில் இருந்து காட்டிற்கு துரத்தியது சொல்லுங்கள் அவனை இப்போதே ஒழித்து தள்ளுகிறேன் என்றது ஜடாயு.

லட்சுமணன் நடந்த அனைத்தையும் விவரமாக சொன்னான். அனைத்தையும் கேட்ட ஜடாயு தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற இத்தனை வருடங்கள் காட்டில் தபஸ்விகளை போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். ராமா உன்னை சத்தியத்தின் உருவமாக காண்கின்றேன் என்று சொல்லிய ஜடாயு சீதையை பார்த்து யார் இந்த பெண் என்றது. இவள் ஜனகரின் மகள் பெயர் சீதை எனது மனைவி என்றார் ராமர். மகிழ்ந்த ஜடாயு பஞ்சவடியில் தங்கியிருக்கும் நீங்களும் லட்சுமணனும் காட்டிற்கு வேட்டைக்கு செல்லும் போது நான் சீதைக்கு துணையாக இருப்பேன் என்றது. ஜடாயுவிடம் விடைபெற்று மூவரும் அங்கிருந்து கிளம்பி பஞ்சவடி வந்து சேர்ந்தார்கள்.

வார்த்தைகள்

மகான் ஒருவர் கிராமத்திற்கு வந்திருந்தார். அக்கிராமத்தில் ஒருவர் பலநாட்களாக நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க மகான் அவர் வீட்டிற்கு வந்தார். மகான் வந்ததை அறிந்த நோயாளியின் நண்பர்களும் உறவினர்களும் அவரது வீட்டிற்கு வந்தனர். வாடிய உடலோடும் மனமும் சோர்வுற்ற நிலையிலும் இருந்தார் நோயாளி. இதைப் பார்த்த மகான் நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வோம் எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும் உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். இறைவனின் அருளால் நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும் என்று மகான் ஆசிர்வதித்தார்.

அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். குரு சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான். வெறும் வார்த்தைகள் அவரை எப்படி குணப்படுத்தும் வெறும் வார்த்தைகள் மாற்றத்தை ஏற்படுத்துமா? என கூறி சிரித்தான். அதற்கு அந்த மகான் இந்த கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள் மூடன் மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார். இதைக் கேட்டதும் அவன் நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையேல் உங்களை அடித்து விடுவேன் என்று அடிக்கப் பாய்ந்தான்.

பதற்றமே இல்லாத அந்த மகான் முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே. அவை உங்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி உங்களை கோபம் கொண்டவராக மாற்றி விட்டது. இந்த சொற்கள் உங்களை எப்படி தூண்டி கோபம் கொள்ள வைக்கிறதோ அதேபோல் இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்த நல்ல சொற்களால் இவரின் உடலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார். கோபம் கொண்ட நாத்திகன் மகானிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.