ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 620

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒரே பிறவியில் ஞானம் அடைந்தவர்கள் என்று யாருமே கிடையாது. இறை மனது வைத்தால் வேண்டுமானால் அப்படி அமையலாம். பல பிறவிகள் எடுத்து அனுபவங்களை நுகர்ந்து பல்வேறு கர்மாக்களை கழித்த பிறகுதான் ஞானம் என்பது சித்திக்கும். உண்மையான ஞானத்தை அடைந்து விட்டால் ஒரு மனிதன் யாருடனும் பேச மாட்டான். அவன் பேசுவதற்கும் கேட்பதற்கும் எதுவும் இல்லை. பார்ப்பதற்கு உணர்வதற்கும் எதுவும் இல்லை. அவனுக்கு தேவையுமில்லை. அவன் தேவையும் யாருக்கும் இல்லை. இதுதான் ஞானத்தின் உச்ச நிலையாகும். அதை அடைவதற்குத்தான் அனைத்து வழிபாடுகளும் சடங்குகளும் புறச் செயல்களும் கூறப்பட்டுள்ளன. விட்டு விடுதல் சகித்துக் கொள்ளுதல் எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளுதல் எத்தனை துன்பத்திலும் இறைவனை இகழாமல் இருத்தல் ஞானத்தை இப்படித்தான் விளக்கம் தரலாமே ஒழிய இதுதான் என்று தனியாக உனக்கு காட்ட முடியாது. ஏனென்றால் நீ ஞானமாகி விட்டால் அப்போது நீயே இருக்க மாட்டாய்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 619

கேள்வி: கிரகங்கள் நன்மை செய்ய என்ன செய்ய வேண்டும்?

இறைவனை வணங்கினாலே ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை பிறக்கும். தன்னை விட ஒரு பெரிய உயரிய சக்தியின் அருள் நமக்கு கிடைக்கிறது என்ற தைரியம் பிறக்கும். இறைக்கு பிடிக்காததை செய்யக் கூடாது என்ற எண்ணம் வரும். அவன் நல்லவனாக மாறும்பொழுது எல்லா கிரகங்களும் நன்மையைத்தான் செய்யும்.

சிவ வடிவம் – 54. சக்கரதானமூர்த்தி

குபன் என்றும் மன்னன் முன்னொரு சமயம் உலகம் முழுவதையும் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்காக திருமால் ததீசி எனும் முனிவரை எதிர்த்து யுத்தம் செய்தார். யுத்தம் நடைபெறும் போது திருமாலால் தாக்குப் பிடிக்க முடியாத நிலை வந்தது. திருமால் தனது சக்ராயுதத்தை அனுப்பினார். சக்ராயுதம் முனிவரின் வஜ்ஜிரக் கையில் பட்டு திரும்ப திருமாலிடமே சரணடைந்தது. உடன் திருமால் தன்னைப்போல் ஒரு உருவத்தை மாயையால் உருவாக்கினார். அதனைக் கண்ட முனிவர் தனது பாத கட்டை விரலை அசைத்தார். அந்த அசைவிலிருந்து பல திருமால்கள் உருவானார்கள். இதனைக் கண்ட திருமால் இம்முனிவர் தம்மைவிட வலிமை வாய்ந்தவர் என்று அவரிடம் சரணடைந்து விடைபெற்றார்.

திருமால் வைத்திருந்த சக்கரத்தின் வரலாறு. ஒரு சமயம் பிரளயத்தால் உலகம் முழுதும் அழிந்தது. இறைவன் மீண்டும் ஒரு புதிய உலகைப் படைக்க பிரம்மாவையும் திருமாலையும் உண்டாக்கினார். அவர்கள் இருவரிடமும் படைத்தல் மற்றும் காத்தல் தொழிலை ஒப்படைத்தார். காத்தல் தொழிலுல் செய்வதற்காக திருமால் இறைவனிடம் ஆயுதம் ஒன்று வேண்டினார். சிவபெருமான் தனது முக்கண்களால் சூரிய சந்திர ஒளியைக் கொண்டு கதை ஒன்றும் சக்கரம் ஒன்றும் கொடுத்தார். உடன் பார்வதி தன்பங்கிற்கு தனது முகத்தினால் ஒரு சங்கும் கண்களால் பத்மமும் உருவாக்கி அவை தாங்குவதற்கு இருகரங்களையும் உருவாக்கிக் கொடுத்தார். காத்தல் தொழில் செய்ய இறைவன் கொடுத்த சக்கராயுதம் ததீசி முனிவரிடம் தோற்றதால் அதனை விட வலிமையான ஆயுதத்தை சிவபெருமானிடம் இருந்து பெற வேண்டும் என்று திருமால் எண்ணினார். யாராலும் அழிக்க முடியாத சலந்தரனை அழிக்க சிவபெருமான் தனது கால் கட்டை விரலால் பூமியில் ஒரு சக்கரம் வரைந்து அதனை ஆயுதம் ஆக்கி சலந்தரனை அழித்தார். அது போல் ஒரு ஆயுதத்தை பெற வேண்டும் என்று முடிவு செய்து கடுமையான தவம் செய்ய ஆரம்பித்தார். தினந்தோறும் ஆயிரம் தாமரைகளால் சிவபெருமானை பூஜித்தார். ஒருநாள் ஆயிரம் தாமரைகளில் ஒன்றை சிவபெருமான் மறைத்தார். பூஜை செய்து கொண்டிருக்கும் போது ஒரு மலர் இல்லாததைக் கண்ட திருமால் தனது கண்களில் ஒன்றைப் பிடுங்கி எடுத்து இறைவனுக்கு சமர்ப்பித்து அன்றைய தனது பூஜையை முடித்தார். கமலம் என்றால் தாமரை. தனது கண்ணை தாமரை மலராக எண்ணி இறைவனுக்கு அர்ச்சித்ததால் சிவபெருமான் அவரை கமலக்கண்ணன் என்றழைத்து அவரின் விருப்பப்படி சுதர்சன சக்கர ஆயுதத்தை கொடுத்தார். யாரையும் எதிர்த்து வெற்றி பெறும் வலிமை கொண்ட சுதர்சன சக்கரத்தை திருமாலின் சிவபக்திக்காகக் கொடுத்ததால் சிவபெருமானுக்கு சக்கர தான மூர்த்தி எனப் பெயர் ஏற்பட்டது.

அதர்வண வேத உபநிடாதமான சரபோப நிடதத்திலும் மகாபாரதத்திலும் காஞ்சி புராணத்திலும் சிவபெருமானிடம் திருமால் சக்கரம் பெற்ற வரலாறு உண்டு. சக்கரதான மூர்த்தியின் திருவடியில் சிவபெருமான் நான்கு கைகளுடன் சடாமகுடம் தரித்துக் காணப்படுகிறார். வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்டு சாந்தமாக அமர்ந்திருப்பார். இரு கரங்களிலும் மானும் டங்கமும் இருக்கும். முன் வலது கரத்தில் சக்கரம் இருக்கும். சிவபெருமானின் பக்கத்தில் உமையமை அமர்ந்திருக்கிறாள். வலப்பக்கத்தில் பிரம்மாவும் எதிராக திருமாலும் வழிபட்டுக் கொண்டு நிற்பார்கள். இவ்வடிவ அமைப்பு உத்தரகாமிய ஆகமத்தில் உள்ளது. காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும் மீனாட்சி அம்மன் கோவிலிலும் இத்திருவுருவம் உள்ளது. திருவழிமிழலை திருக்கோயிலில் இவ்வடிவத்தின் செப்புத் திருவுருவம் உள்ளது.

சிவ வடிவம் – 53. கௌரி வரப்ரதமூர்த்தி

பிரம்மாவை நோக்கி அசுரன் ஒருவன் கடுமையான தவமிருந்தான். தவத்தின் பலனால் அவனுக்கு காட்சி கொடுத்த பிரம்மாவிடம் பார்வதிதேவியின் உடலிருந்து தோன்றியப் பெண்ணைத் தவிர வேறொருவரால் எனக்கு அழிவு வரக்கூடாது என்று வரம் வாங்கினான். வரத்தின் பயனால் தேவர்கள் இந்த உலகத்தில் இருப்பவர்கள் யாரும் தன்னை அழிக்க முடியாது என்று அனைவரையும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். அசுரனின் கொடுமை அதிகரிக்க அவனது கொடுமையை தாங்க முடியாத தேவர்கள் பிரம்மாவிடம் ஆலோசனை கேட்டார்கள். பிரம்மா தேவர்களுடன் சிவபெருமானிடம் சென்று அசுரனை அழிக்க கேட்டுக் கொண்டார். சிவபெருமான் பார்வதி தேவியை பார்த்து காளியே வருக என்றார். உடனே பார்வதி தேவியின் உடலில் இருந்து கருமையான நிறத்துடன் காளி தேவி வெளிப்பட்டாள். சிவபெருமானிடம் எம்மை அழைத்த காரணம் என்ன? என்று கேட்டு தனது கருமை நிறத்தை மாற்றி பொன்னிறமாக மாற்றிக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டாள். அதற்கு சிவபெருமான் காளியிடம் இமயமலையில் தவமியற்று. அனைத்திற்கும் காரணம் உனக்கே தெரியும் என்றார். காளிதேவியும் இமயமலையில் தவம் செய்தாள். தவத்தின் பலனால் தேவி தனது கருமை நிறம் நீங்கி பொன்நிறத்தைப் பெற்றாள். பொன்நிறத்துடன் இருந்த தேவியிடம் சிம்ம வாகனத்தை கொடுத்த பிரம்ம அசுரனை அழிக்க கேட்டுக் கொண்டார். பொன் நிறத்துடன் சிம்ம வாகனத்தில் அசுரனை அழித்த தேவியானவள் துர்கை தேவி என பெயர் பெற்றாள். பொன் நிறத்துடன் தனது போர்க்கோலம் நீக்கி மீண்டும் சிவபெருமானிடம் சென்ற தேவி கௌரி எனப் பெயர் பெற்றாள். பொன் நிறத்துடன் வந்த தேவியை சிவபெருமான் ஏற்றுக் கொண்ட திருவடிவமே கௌரிவரப்ரதமூர்த்தி ஆகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 618

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

பல்வேறு தருணங்களில் யாங்கள் மெளனமாக இருக்கிறோம் என்றால் அது போன்ற மௌனம் பல்வேறு தெய்வீக சூட்சுமத்தை உடையது. மனிதர்களால் சட்டென்று புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கக் கூடியது. நாங்கள் மௌனமாக இருக்கிறோம் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கும். வாக்கை உறைக்கிறோம் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கும். பல்வேறு தருணங்களில் உரைத்தாலும் எதிரே அமர்ந்திருக்கும் அதுபோல் மனிதன் பல்வேறு பிறவிகள் கடந்துதான் இறைவனை நோக்கி வரப்போகிறான் என்று தெரிந்த பிறகு இறைவன் கட்டளை இல்லாமல் நாங்கள் வாக்கை கூறுவதில்லை. அதனால்தான் இன்னும் பல்வேறு மனிதர்களுக்கு நாடியின் சூட்சுமம் புரிவதில்லை. இதை புரிந்து கொள்வதற்கும் புரிந்து அதன் வழியில் வருவதற்கும் கூட சில புண்ணியங்கள் தேவைப்படுகிறது.

முடிவு நிச்சயமாக உறுதியாக வெற்றி என்றால்தான் இறங்குவேன் என்பது மனிதனின் இயல்பு. முடிவு எதுவாக இருந்தாலும் அது இறைவனின் விருப்பம் என்று எண்ணி செயல்படுவது என் போன்ற மகள்கள் மகான்களின் இயல்பு.

Life’s highest grace is to see, to know, to hear and to commune with a living satguru. A devotee falls humbly at his guru’s feet, prayerful that training, protection and perhaps initiation may come. The satguru’s mind is on Śiva within, who blesses with a garland of coral jasmine flowers.

சிவ வடிவம் – 52. ஏகபாதமூர்த்தி

சங்கார காலத்தில் சிவ பெருமானால் படைக்கப்பட்ட அனைத்தும் அவருள் ஒடுங்கிய பின் அவர் தனித்து நிற்பதால் சிவபெருமானுக்கு ஏகபாத மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. பேருழிக் காலத்தில் உலகங்களும் உலகங்கத்தில் உள்ள அனைத்து உயிர்களும் சிவ பரம்பொருளுக்குள் ஒடுங்குகின்றன. இறைவனிடம் சரிசமமாக இருக்கும் தேவியும் அவரிடம் ஒடுங்கி விடுவார். அனைத்தும் தனக்குள் ஒடுங்கியதும் சிவபெருமான் ஏகபாத மூர்த்தியாக நிற்கிறார். இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும் வேதங்களும் கூறுகின்றன. எத்தனை சர்வசிருஷ்டி ஊழிக்காலங்கள் வந்தாலும் அனைத்தும் இவரிடமே ஆரம்பிக்கின்றன. இவரிடமே முடிகின்றன. இவரிமிருந்தே அனைத்து விதமான சக்திகளும் பிறக்கின்றன. இவரிடமே தஞ்சமடைகின்றன.

இத்திருவுருவின் வலது கரத்தில் சூலமும் இடது கரத்தில் மழுவும் முன் வலக்கையில் காக்கும் குறிப்பும் இடக்கையில் அருளல் குறிப்பும் இருக்கிறது. இவர் புலித்தோலை அணிந்து மணிகளால் ஆன மாலைகளை அணிந்து சடையில் சந்திரனையும் கங்கையையும் அணிந்து காணப்படுகிறார். விஸ்வகர்மா சிற்ப சாத்திரம் என்ற நூல் ஏகபாதமூர்த்திக்கு 16 கரங்கள் உண்டு என்று சொல்கிறது. கம்பரும் ஸ்ரீவில்லிபுத்தரும் தமது காவியங்களில் ஏகபாதமூர்த்தியின் சிறப்புகளை கூறியுள்ளார்கள். அனைத்துக் காலங்களிலும் எல்லாவுலகமும் இவரது திருவடியின் கீழ் இருப்பதால் இவர் ஏகபாத மூர்த்தி என்று பெயர் பெற்றார். தப்பளாம் புலியூரில் உள்ள கோயிலில் அருள்பாலிக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 617

கேள்வி: வாழ்வியல் துன்பங்களுக்கு தீர்வு என்ன?

இறைவனின் கருணையை கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் காலகாலம் வாழ்வியல் துன்பங்களுக்கு தீர்வு தேடி மாந்தர்களில் சிலர் எம்மை நாடுவது உண்டு. துன்பங்கள் எல்லாம் ஒரு கணப் பொழுதில் அல்லது விழி மூடி விழி திறப்பதற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே மனிதனின் நோக்கமாக இருக்கிறது. அணுவளவும் துன்பமே இல்லாமல் வாழ வேண்டும். சதாசர்வ காலமும் இன்பமும் சாந்தியும் வாழ்வில் நிலவ வேண்டும் என்பதே மனிதர்களின் எண்ணமாக இருக்கிறது. இதை தவறு என்று நாங்கள் கூற மாட்டோம். ஆனால் இந்த இன்பமும் நிம்மதியும் இந்தந்த விகிதத்தில் தான் இருக்க வேண்டும் என்று மனிதன் எதிர்பார்க்கிறானே. அந்த எதிர்பார்ப்பு தான் குறையாக மாறிவிடுகிறது. எனவே மனிதன் எதிர்பார்க்கின்ற நீடித்த இன்பமும் நிலைத்த சாந்தியும் இறைவனின் பாதாரவிந்தங்களை சரணடைந்து இறையோடு சாயூச்சியமோ சாரூபமோ சாலோகமோ சாமீபமோ ஏதாவது ஒரு ஆன்ம பரிணாம வளர்ச்சி நிலை அடைந்தால் ஒழிய மனிதனுக்கு கிட்டாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 616

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

உலகியல் வாழ்விற்காக கடுமையாக ஒருவன் போராடக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. கடுமையாக ஒருவன் உழைக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. அந்த செயலின் காரணமாக மறந்தும் பாவத்தை சேர்க்கக்கூடாது என்பதுதான் என்பது கோட்பாடு. கூடுமானவரை யாரையும் பாதிக்காமல் யார் மனதையும் புண்படுத்தாமல் தத்தம் கடமைகளை நேர்மையான ஆற்றி அன்றாடம் இறை நாமாவளியை ஆழ் மன நிலையில் நிறுத்தி சிந்தித்து ஒரு மனிதன் வாழ்ந்தாலே தேடுகின்ற நிம்மதியும் சந்தோசமும் அவனைப் பின் தொடரும். இறைவனின் அருளாசியும் வந்து சேருமப்பா. இதை சரியான விகிதாசாரத்தில் புரிந்து கொண்டு எந்த விதமான காழ்ப்பு உணர்ச்சிக்கும் இடம் தராமல் எம் வழியில் வர முயற்சி செய்தால் இறைவன் அருளை கொண்டு யாமே அதுபோல் மனிதனை கரை சேர்ப்போமப்பா.

சிவ வடிவம் – 51. திரிபாதத்ரிமூர்த்தி

சிவப்பரம்பொருள் பிரம்மன் திருமால் உருத்திரன் என்ற மூம்மூர்த்திகளை உருவாக்கி அவர்களுக்கு படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களை அளிக்கின்றார். பேருழிக் காலத்தில் சிவப்பரம்மொருளால் படைக்கப்பட்ட அனைத்தும் அவர்கள் ஒடுங்கும். மூன்று விதமான தொழில்களை செய்த மும்மூர்த்திகளும் சிவபரம்பொருளில் ஒன்றாக ஒடுங்குவார்கள். உலகை மீண்டும் படைக்க விரும்பிய போது தன்னுள் ஒடுங்கி இருந்த மூவரையும் ஒற்றை காலில் நின்று தனது இதயத்திலிருந்து உருத்திரனையும் தனது வலப்பாகத்தில் இருந்து பிரம்மனையும் தனது இடப்பாகத்திலிருந்து திருமாலையும் தோற்றுவித்தார். அப்போது இருந்த திருவடிவமே திரிபாதத்ரிமூர்த்தி திருத்தோற்றம் ஆகும். திரிபாதத்ரிமூர்த்தி வடிவத்தில் பிரம்மனும் திருமாலும் தனது ஒரு கால்களுடன் சிவப்பரம்பொருளுடன் இணைந்து கொள்வார்கள். சிவப்பரம்பொருளின் ஒற்றை காலுகளுடன் அவர்களின் ஒற்றை கால்களும் சேருவதால் மூன்று கால்கள் ஆகின்றன. அதனால் இந்த திருவடிவத்திறகு ஏகபாதத் திருமூர்த்தி என்று பெயர்.

இவ்வாறு லிங்க புராணமும் ஆதித்ய புராணமும் கூறுகின்றன. மகாபாரதத்தில் இந்த வடிவத்தை பற்றி சிறப்பாக கூறுகின்றது. வலப்புறத்தில் பிரம்மன் கமண்டலமும் ஜெபமாலையுடன் இருக்க இடப்புறம் உள்ள திருமால் சங்கு சக்கரத்துடன் இருப்பார் என்று சிவஞானபோதம் என்ற சைவ சித்தாந்த நூல் இவ்வடிவம் பற்றி கூறுகின்றது. இவரது வடிவத்தை திருஇடைமருதூரில் தரிசிக்கலாம்.

திருமந்திரம்

திருமந்திரம் வரலாறு
திருமந்திரம் பாடல்கள் விளக்கத்துடன்
திருமந்திரம் பாடல்கள் இசை வடிவில்
திருமூலர் வரலாறு
திருமூலர் வழிபாட்டு பாடல் வீடியோவுடன் kvnthirumoolar.com இந்த பக்கத்தின் வலைதளத்தில் பார்க்கலாம்.