ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 611

கேள்வி: இந்த உலகத்தை அழிக்க இறைவன் எண்ணிவிட்டாரா?

மனிதர்கள் குற்றங்கள் செய்தால் தடுப்பதற்கு சிறைச் சாலையை மனிதர்கள் வைத்திருக்கிறார்கள். இந்த சிறைச் சாலையே இல்லாத நிலை என்றாவது வந்து விடுமா? அப்படி என்றால் குற்றங்களே இல்லாத மனிதர்கள் இருக்கிறார்கள் என்று பொருளாகிவிடும். அதைப் போல ஆன்மாக்கள் செய்கிற தவறுகளுக்கு இந்த உலகில் பிறந்து ஏற்கனவே செய்திட்ட பாவங்களுக்கு தண்டனையாக அல்லது ஒரு விதமான துன்ப அனுபவத்தை நுகர்ந்து அந்த பாவங்களை கழிப்பதற்காகத்தான் பிறவிகள் தரப்படுகின்றன. அது விலங்கு பிறவியோ மனிதப் பிறவியோ தேவ பிறவியோ இந்த பிறவியாக இருந்தாலும் ஏற்கனவே சேர்த்த புண்ணியத்தையும் நுகர வேண்டும். பாவத்தையும் நுகர வேண்டும். அப்படி நுகர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட எத்தனையோ கூடங்களுள் இந்த பூமியும் ஒன்று. எனவே இப்போதைக்கு குற்றங்களே இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை என்பதால் இந்த பூமி என்னும் சிறைச் சாலையை ஒட்டுமொத்தமாக அழிக்க இறைவன் என்னும் எண்ணவில்லை. அப்படி ஒரு சூழலும் நிகழாது. பகுதி பகுதியாக அழிவுகள் ஏற்படும். அதற்கு காரணம் வேறு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 610

கேள்வி: திருப்பதியைப் பற்றி:

திருப்பதியைப் பற்றி எத்தனையோ மகத்துவங்கள் எல்லாம் கூற வேண்டுமப்பா. பெருமாளின் அம்சம் அங்கு இருக்கிறது என்பது உண்மை. அங்குள்ள வராகர் சன்னிதியில் வணங்கினால் குழந்தைகளின் புத்தி கூர்மைக்கு உதவும். அச்சன்னதியில் ஹயக்ரீவரும் அன்னை கலைவாணியும் அரூபமாக இருந்து தவம் செய்வதுண்டு. பெருமாளை வணங்குவதற்கு முன் வராஹரை வணங்க வேண்டும். திருப்பதி என்பது சாட்சாத் பூலோக வைகுண்டம் தான்.

சிவ வடிவம் – 47. அசுவாருடமூர்த்தி

பாண்டிய மன்னன் குதிரைக்காக மாணிக்கவாசகரை துன்புறுத்த மாணிக்கவாசகர் சிவபெருமானை தஞ்சம் அடைந்தார். சிவபெருமான் தமது சிவகணங்களை குதிரை வீரர்களாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி அவற்றின் சிறப்பைக் கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றார் இறைவன். அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்து விட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டு மாணிக்க வாசகரை மேலும் துன்புறுத்தினான். மீண்டும் மாணிக்கவாசகர் சிவபெருமானை தஞ்சம் அடைய சிவபெருமானின் திருவிளையாடலால் பாண்டிய மன்னன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது. மன்னவா வாதவூரரின் பெருமையை உலகுக்கு தெரிவிக்கும் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய் என்று அக்குரல் சொல்லிற்று. மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்த மன்னன் அவரை விடுவித்தான்.

மாணிக்கவாசகர்க்காக நரிகளை பரிகளாக்கி அதன் தலைவனாக சென்று வந்த கோலமே அசுவாருட மூர்த்தியாகும். திருப்பெருந்துறையில் உள்ள ஸ்ரீ யோகாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆத்மநாத சுவாமி கோயிலில் உள்ள பஞ்சாட்சர மண்டபத்தின் தூண் ஒன்றில் இந்த மூர்த்தியின் சிற்பம் உள்ளது.

சங்கு சக்கரத்துடன் முருகர்

ஒருமுறை அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே அவர்களை அழிக்க சிவபெருமான் முருகபெருமானை அழைத்து அசுரர்களை வதம் செய்ய உத்தரவிட்டார். முருகர் அசுரர்களை வதம் செய்ய கிளம்பும் போது சிவபெருமானும் தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தார்கள். அப்போது திருமால் தனது சங்கு சக்கரத்தை கொடுத்து ஆசி புரிந்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகபெருமான் அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் முருகன் கைகளில் கேடயம் வில் அம்பு சாட்டை கத்தி சூலாயுதம் வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர் கல்யாண சுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். அவர் அருகில் வள்ளி தெய்வானை உள்ளனர். மயில் இடது புறமாக திரும்பி நிற்கிறது. இடம்: அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோவில். அழகாபுத்தூர் தஞ்சாவூர் மாவட்டம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 609

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒருவனின் கைரேகையை பார்த்தே அவனுடைய திசா புக்தியைக் கூறி விடலாம். ஒருவனின் கண்களைப் பார்த்தே ஜாதகத்தை அளந்து விடலாம். ஒருவனின் ரோமத்தை வைத்தே அவன் இன்ன லக்னத்தில் பிறந்திருக்கிறான் என்று கூறிவிடலாம். இதையெல்லாம் தாண்டி ஒருவனை சந்திக்கும்போது அப்பொழுது அவனை சுற்றி நடக்கின்ற நிமித்தங்களை வைத்தே அவன் எதற்காக வந்திருக்கிறான் என்று கூறி விடலாம். நுணுக்கங்களுக்கும் அடிப்படை மனப்பக்குவம். எனவே மனதிலே உள்ள லோகாயத்தை தூக்கி விட்டெறி. நீயும் சகலத்தையும் கற்று தேர்ந்து ஒரு பரிசுத்த உன்னத நிலைக்கு செல்லலாம்.

சிவ வடிவம்- 46. குருமூர்த்தி

திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும் சிவஞானவதிக்கும் மாணிக்கவாசகர் மகனாகப் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவரை மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அமைச்சராகப் பதவி அமர்த்தினார். தன் புலமையால் தென்னவன் பிரமராயன் எனும் பட்டத்தையும் பெற்றார். உயர்ந்த பதவி செல்வம் செல்வாக்கு எல்லாம் இருந்த போதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு செய்து வந்தார்.

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான். மாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறையில் உள்ள அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவிலை அடைந்தார். அங்கே ஓரு மரத்தின் அடியில் சிவபெருமான் மானிட வடிவு எடுத்து கையில் ஏடுகள் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவர் முன்பு சென்று மாணிக்கவாசகர் தங்கள் கரத்தில் இருப்பது என்னவென்று கேட்க அவர் சிவஞான போதம் என்றார். (இது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் அல்ல) சிவம் என்பதும் ஞானம் என்பதும் போதம் என்பதும் என்னவென்று அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன் என்றார் மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்கு போதித்து திருவடி தீட்சையும் கொடுத்தார் குரு வடிவத்தில் வந்த சிவபிரான். தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்து விட்டார் மாணிக்கவாசகர்.

பாண்டிய மன்னன் ஒற்றர்களிடம் அரசனின் ஆணை தாங்கிய ஓலை கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகரை அழைத்துவரக் கட்டளையிட்டான். மாணிக்கவாசகரோ குருவின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை என்று கூறி அந்த ஓலைச்சுவடியை குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குரு ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து குதிரைகள் வர இப்போது நல்ல நாளில்லை ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல் என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார். சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்து கொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் எங்குமே குதிரைகள் தென்படவில்லை என்ற செய்தியோடு திரும்பினர். ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை.

பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை ஒற்றர்கள் மூலம் பிடித்து சுட்டெரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார். உடனே சிவபெருமான் தமது சிவகணங்களை குதிரை வீரர்களாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றி விடுவித்தான். குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி அவற்றின் சிறப்பைக் கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.

அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்து விட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூரரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான். மாணிக்கவாசகர் வெயிலில் நின்றதும் சிவபெருமான் கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார். கரையை உடைத்துக் கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கி விட்டது. உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்க வேண்டும் என்று முரசு அறிவிக்கிறான். ஊரில் உள்ள அனைவரும் வீட்டுக்கு ஒருவர் செல்கின்றனர். வந்திக் கிழவி எனும் ஒருவள் மட்டும் தன் வீட்டில் யாருமில்லாததால் யோசித்துக் கொண்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய் அதற்கு கூலியாக நான் விற்கும் பிட்டில் உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது வேலையைத் தொடங்குகிறார். அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான்.

மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும் படவே பாண்டியன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது. மன்னவா வாதவூரரின் பெருமையை உலகுக்கு தெரிவிக்கும் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய் என்று அக்குரல் சொல்லிற்று. மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்த மன்னன் அவரை விடுவித்தான். திருவாதவூரரர் அரசவையை விட்டு திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் சிவபுராணம் திருச்சதகம் முதலிய பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு உத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். பல சிவ தலங்களுக்கும் சென்று பல பாடல்களை இயற்றினார்.

சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி தாங்கள் யாரோ என்று வாதவூரார் கேட்டார். நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை எழுத வந்தேன். நீங்கள் பாடுங்கள் அவற்றை நான் எழுதுகிறேன் என்று கூறினார் வேதியர். அதற்கு ஒப்புக்கொண்ட மாணிக்கவாசகர் பாட பல செய்யுட்களை எழுதி முடித்தார் வேதியர். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார். முடித்ததும் ஓலைச்சுவடியின் முடிவில் மாணிக்கவாசகன் ஓத சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையொப்பமிட்டு ஓலைச் சுவடிகளைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த தில்லை அந்தணர் ஒருவர் அவ்வோலைகளை எடுத்துப் பார்க்க அது திருவாசகமும் திருக்கோவையும் கொண்ட சுவடிகளாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த தில்லை அந்தணர்கள் இதன் பொருள் என்ன என்று வாதவூரரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்தில் நடராஜர் முன்பாக அழைத்துச் சென்ற வாதவூரர் இந்தப் பாடல்களின் பொருள் இவரே என்று கூறி நடராஜரைக் காட்டி விட்டு நடராஜர் இருக்கும் மூலஸ்தானத்தினுள் சென்று மறைந்தார். சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு குருவாகத் தோன்றி திருவடி தீட்சை கொடுத்து உபதேசம் செய்த உருவமே குருமூர்த்தி ஆகும்.

கிளி முகம் கொண்ட யோகினி உமாதேவி

தாந்த்ரீக வழிபாடு முறையின் யோகினியான கிளி முகம் கொண்ட பெண் தெய்வமான உமாதேவி இவள். ஒரு ஆட்டுக் குட்டியின் முகத்தைக் கொண்ட குழந்தையைப் பிடித்துக் கொண்டு காட்டுப் பன்றியின் மீது கம்பீரமாக அமர்ந்திருக்கிறாள்.

காலம் 11 – 12 ஆம் நூற்றாண்டு இடம் ஹிராபூர் புவனேஸ்வரில் கண்டெடுக்கப்பட்ட இந்த பழமையான சிலை தற்போது குவாலியர் மாநில அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சிவ வடிவம் – 45. கிராதமூர்த்தி (வேட மூர்த்தி)

பாரதப் போரில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்க் கொண்டிருந்தனர். அங்கே அவர்களின் குறைளை கேட்கவும் ஆலோசனைக் கூறவும் மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றிப் பேச வியாசமுனிவர் பாண்டவர்கள் இருந்த காட்டுப் பகுதிக்கு சென்றார். அங்கே பலவகையில் இன்னல்பட்டுக் கொண்டிருந்த பாண்டவர்களுக்கு தேவையான ஆறுதலையும் ஆலோசனைகளையும் கூறினார். அப்போது கௌரவர்களைப் போரில் வெல்வதற்கு வேண்டிய சக்தி வாய்ந்த அஸ்திரத்தைப் பெற சிவபெருமானை நோக்கி தவமியற்றச் சொன்னார். அவரது அறிவுரைப்படி குறிப்பிட்ட நல்ல நாளில் தவம் செய்ய அர்ஜூனன் இமய மலையை அடைந்தான். அங்கே வசிக்கும் முனிவர் ரிஷிகள் தேவகணத்தினரின் ஆசியுடன் அங்கு சிவபெருமானை மனதில் நினைத்து தவம் செய்ய ஆரம்பித்தான். அர்ஜூனனின் தவத்தை சோதிக்க இந்திரன் விரும்பினான். ஆகவே தேவலோக நாட்டியக் கன்னிகளை அனுப்பி தவத்தைக் கலைக்கும்படி செய்தான். அவர்கள் அர்ஜூனன் முன்பு பலவித நாட்டியமாடியும் தவம் கலையவில்லை.

அர்ஜூனனின் தவப் பலனால் சிவபெருமான் வேடராகவும் பார்வதி தேவி வேடுவச்சியாகவும் முருகன் குழந்தையாகவும் வேதங்கள் நான்கும் வேட்டை நாய்களாகவும் தேவகணங்கள் வேடுவக் கூட்டமாகவும் மாறியது. அர்ஜூனன் தவம் செய்யும் இடத்தை அடைந்தனர். அங்கே அர்ஜூனனின் தவத்தை கலைக்க முகாசுரன் பன்றியாக மாறி வேகமாக வந்தான். இதனைக் கண்ட சிவபெருமான் பன்றி மீது அம்பு ஏய்து அசுரனை கொன்றார். அப்போது தவம் கலைந்த அர்ஜூனன் வேடுவக் கோலத்தில் இருந்த இறைவனை பார்த்ததும் தன்னை எதிர்க்க வந்திருக்கிறார் என்று எண்ணி சிவனுடன் யுத்தம் புரிந்தான். பின் அர்ஜூனனுக்கு சிவபெருமான் தம்பதி சமேதராய் காட்சிக் கொடுத்தார். இறைவனிடம் யுத்தம் புரிந்தமைக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவரை சரணடைந்த அர்ஜூனன் பாசுபத அஸ்திரத்தை சிவனிடமிருந்து பெற்றான். அர்ஜூனனுடன் அர்ஜூனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுக்க வந்த இறைவன் ஏற்ற வேடுவ வடிவமே கிராத மூர்த்தியாகும்.

குடவாசல் அருகே அமைந்துள்ள தலம் திருக்கொள்ளம் புதூர் கோயிலி வில்வாரண்யேஸ்வரர் என்ற பெயரில் கிராத மூர்த்தி அருள்பாலிக்கிறார். கேரளாவில் அமைந்துள்ள வேட்டைக்கொருமகன் ஆலயங்கள் வேடுவக் கோலத்தில் ஈசனை மூலவராகக் கொண்ட கோயில்களாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 608

கேள்வி: வள்ளல் தன்மை என்றால் என்ன?

எனக்கு வேண்டும் என்று எடுத்து வைத்துக் கொண்டு தருவது ஒரு சராசரி நிலைமை. எனக்கு இல்லை என்றாலும் நாளை நான் கடுமையாக பாதிக்கப்படுவேன் என்றாலும் தன்னுடைய குடும்பம் பாதிக்கப்பட்டாலும் என்ன நிலைமை ஏற்பட்டாலும் பாதகமில்லை. இன்று இந்த கணம் குறிப்பாக யாருக்காவது பயன்படும் என்றால் உடனடியாக அதை தருவதை தவிர வேறெதுவும் இல்லை. அடுத்த கணம் உயிர் இருக்குமோ? இருக்காதோ? நாளை நடப்பதை யார் அறிவார்? அடுத்த கணம் மனம் மாறலாம். எனவே சட்டென்று உடனடியாக தந்து விட வேண்டும். யோசித்து தந்தால் அது தர்மம் அல்ல. அந்த தர்மத்தில் குறை வந்துவிடும். ஒருவன் வாய்விட்டு உதவி என்று கேட்ட பிறகு தருவது கூட சற்றே குறைந்த தர்மம்தான். பிறர் குறிப்பறிந்து எவன் கொடுக்கிறானோ அவன்தான் உயர்ந்த தர்மவான். உயர்ந்த வள்ளல்.

ஒரு கோடி தேவர்கள் சிற்பங்களாக

உனகோடி என்பதன் நேரடி பொருள் ஒரு கோடிக்கு ஒன்று குறைவு (9999999) என்று பொருளாகும். இது ஒரு வங்காள மொழிச் சொல் ஆகும். இது ஒரு பழமையான சைவத்தலமாகும். இங்கு பாறைகளில் புடைப்புச் சிற்பங்களும் கற்சிற்பங்களும் காட்சியளிக்கின்றன. இந்த சிற்ப உருவங்கள் இரண்டு வகைகளாக உள்ளன. ஒன்று பாறையில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள். இரண்டு கல் சிற்பங்கள். கல்லில் வெட்டப்பட்ட சிற்பங்களுக்கு மத்தியில் சிவனின் தலையும் பிரம்மாண்டமான விநாயகர் சிற்பமும் சிறப்பாக குறிப்பிடப்பிடத்தக்கன. கால பைரவர் என அழைக்கப்படும் இந்த சிவனின் சிலை சுமார் 30 அடியைவிட உயரமானதாக உள்ளது. இதில் கலை நயமிக்க சிவனின் தலை மட்டும் சுமார் 10 அடி உயரம் உள்ளது. சிவன் சிலையின் இருபக்கத்திலும் இரு பெண் தெய்வங்களின் முழு உருவங்கள் உள்ளன. அதில் ஒன்று சிங்கத்தின் மேல் அமர்ந்த துர்க்கை. அருகே நந்தி உருவமும் உள்ளது. நந்தி உருவம் அரைப்பகுதி தரையில் புதைந்துக் காணப்படுகிறது. இது போன்ற பல்வேறு கல் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த செதுக்கல்கள் அழகிய நிலப்பரப்பு வனப்பகுதியில் அமைந்துள்ளன சுற்றிலும் பசுமையான தாவரங்கள் உள்ளன. இது சிற்பங்களுக்கு அழகு சேர்க்கிறது. திரிபுரா மாநிலத்தில் உனகோடி அகர்தலாவில் இருந்து வடகிழக்கில் 178 கிமீ தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் உள்ள எல்லாச் சிற்பங்களும் குல்லு கம்ஹார் என்று சிற்பியால் வடிக்கப்பட்டவை. அவர் பார்வதியின் பக்தர். பார்வதியும் சிவபிரானும், சிவகணங்களுடன் இந்த வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது தன்னையும் அழைத்துச் செல்லும்படி வேண்டினார் இந்தச் சிற்பி. ஈசனால் இதை ஏற்க முடியவில்லை. பக்தனின் கோரிக்கையை நிறைவேற்ற விரும்பிய அன்னை பக்தனுக்கு ஒரு நிபந்தனை விதித்தாள். இரவு முடிவதற்குள் ஒருகோடி உருவங்களைச் செதுக்கச் சொன்னாள். பார்வதியின் அருளால் விடிவதற்குள் கோடிக்கு ஒன்று குறைவாகவே சிற்பி செதுக்கி முடித்தார்.

இந்த சிற்பங்களுக்கு இன்னோரு புராண கதையும் சொல்லப்படுகிறது.

சிவபெருமான் ஒரு கோடி தேவர்களுடன் காசிக்குச் செல்லும் வழியில் இந்த இடத்தில் இரவு தங்கினார். பின் அனைத்து தேவர்களையும் சூரியன் உதிக்கும் முன் எழுந்து காசிக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். காலையில் சிவனைத் தவிர வேறு யாரும் சோம்பல் காரணமாக எழுந்திருக்கவில்லை. எனவே அனைவரையும் கற்களாக மாறும்படி சபித்து விட்டு காசிக்கு தானே தனியாக புறப்பட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் பிரபலமான அசோகாஷ்டமி மேளா என அழைக்கப்படும் ஆயிரக்கணக்கான பயணிகள் கலந்து கொள்ளும் திருவிழா ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.