சிவ வடிவம் -35. காலந்தகமூர்த்தி (கால சம்ஹாரர்)

காலன் என்றால் யமன். சம்ஹாரர் என்றால் அழித்தவர். காலனை அழித்தவர் என்று பொருளில் கால சம்ஹாரர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு காலாந்தகர், காலாரி, கால சம்ஹார மூர்த்தி, காலகாலர், கூற்றினையுதைத்தவர், அந்தகனுக்கந்தகர் என்று பல பெயர்கள் உண்டு.

கௌசிக முனிவரின் மகனான மிருகண்டு ரிஷியும் அவரது மனைவி மருத்மதியும் சிறந்த சிவபக்தர்கள். சிவபெருமானிடம் ஆண் குழந்தை வேண்டும் என வேண்டி பிரார்த்தித்தார்கள். இறைவன் அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்து அவர்களுக்கு இரண்டு விருப்பங்களைக் கொடுத்தார். ஒன்று குறுகிய ஆயுளுடன் ஒரு புத்திசாலி மகனைப் பெறலாம் அல்லது குறைந்த புத்திசாலித்தனம் கொண்ட நீண்ட ஆயுளுடன் ஒரு மகனைப் பெறலாம். குறுகிய ஆயுளாக இருந்தாலும் புத்திசாலி மகன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளின்படி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டார்கள். அவனுக்கு 12 வயது வரை ஆயுள் இருந்தது.

மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தியுடன் இருந்தான். தான் வளர வளர பெற்றோர் ஆனந்தப்படாமல் வருத்தப்பட்டுக் கொண்டுள்ளார்களே என்ன காரணம் என்றுக் கேட்டான். பெற்றோர்களும் அவனது வரத்தைப் பற்றிக் கூறினர். மார்க்கண்டேயன் பெற்றோரை சமாதனம் செய்து தாம் பூரண ஆயுளுடன் இருக்க சிவபெருமானை நோக்கி தவமிருந்து வெற்றியுடன் திரும்புவதாக கூறி காசி சென்றார். அங்கு மணிகர்ணிகை அருகே ஒரு சிவலிங்கத்தைப் பூஜித்து வந்தார். சிவபெருமான் அவரது பூஜைக்கு மகிழ்ந்து எமபயம் நீங்க வரமளித்தார். பின் ஊர் திரும்பிய மார்க்கண்டேயன் அங்கும் தனது வழிபாட்டைத் தொடர்ந்து மகாமிருத்யுஞ்சய மந்திரத்தையும் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தார். அவரது 16 வது வயது ஆயுள் முடிவடையும் சமயத்தில் மார்க்கண்டேயன் திருக்கடவூர் சிவன் கோயிலுக்கு வந்து அங்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அமிர்தகடேஸ்வரரை வழிபட்டுக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்தான் எமதூதன். மார்க்கண்டேயரின் பூஜை பலனால் எமதூதனால் அருகே நெருங்கக் கூட முடியவில்லை. பின்னர் சித்ரகுப்தனும் எமனது மந்திரியான காலனையும் அனுப்பினான். ஆனால் மார்க்கண்டேயனை நெருங்க முடியவில்லை. முடிவாக எமனே வந்தார். மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை உறுதியுடன் தழுவிக் கொண்டான். ஆனாலும் எமன் மார்க்கண்டேயனை இழுக்க மார்க்கண்டேயனோடு சிவலிங்கமும் வந்தது. உடனே சிவபெருமான் தோன்றி எமனை இடக்காலால் எட்டி உதைத்தார். மார்க்கண்டேயனை நித்ய சிரஞ்சீவியார்க்கி என்றும் பதினாறு என்று வரமளித்தார். மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை உதைத்த கோலமே காலந்தகமூர்த்தி ஆகும்.

அப்பர் திருஞானசம்பந்தர் சுந்தரர் மூவரும் தேவரம் பாடல்களில் இக்காட்சியை மிகவும் சிறப்பாக பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் தனது திருவாசகத்தில் பல இடங்களில் இத்திருவுருவம் பற்றி சிறப்பாக பாடியுள்ளார். திருமூலரும் மாளிகை தேரும் இந்த வடிவை சிறப்பாக தங்களது நூலில் கூறியுள்ளார்கள். குங்கிலியக் கலச நாயனால் புராணத்திலும் காரைக்கால் அம்மையாரின் பாடல்களிலும் சிவபெருமான் யமனை உதைத்த வரலாறு உள்ளது. கம்பர் ராமாயணத்தின் விபீஷணன் அடைக்கல படலத்தில் சிவபெருமான் எமனை மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்ததை கூறியுள்ளார்.

அம்சுமத் போதகத்தின் படி காலனை இடக்காலால் மிதித்த சிவ பெருமானுக்கு மூன்று கண்கள் நான்கு கைகளுடன் சில உருவங்களில் எட்டு கைகளுடன் இருப்பார். நான்கு கரங்களுடன் இருப்பவர் வலக்கையில் உள்ள சூலம் காது வரை சென்றிருக்கும். இன்னோரு வலது கையில் பரசு அல்லது அருட்குறிப்பு இருக்கும். இடது முன் கரத்தில் சூசிக் குறிப்புடனும் பின் கரம் மலர் குறிப்புடன் இருக்கும். எட்டு கரங்கள் உள்ள உருவத்தில் வலது கரத்தில் சூலம் பரசு வச்சிரம் கட்கமுகமும் இடது கரத்தில் இரண்டில் கேடகமும் பாசமும் விசுமயசூசி முத்திரையுடன் இருக்கும். சிவனது வலது பாதம் தாமரையின் மீதும் இடது கால் எமனுடைய தலை மீதும் இருக்கும்.

காமிய ஆகமத்தின் படி சிவபெருமானின் இடது பாதம் எமனை உதைத்துக் கொண்டும் வலது பாதம் எமனுடைய தலையிலும் இருக்கும். சிவனின் வலக்கரங்களில் சூலமும் பரசும் இருக்கும். இடக்கரங்களில் நாகபாசமும் சூசிக் குறிக்கும் காணப்படும். சிவனுடைய கண்களும் அவர் ஏவும் சூலமும் எமனது கழுத்தை நோக்கியவாறு இருக்கும். சிவன் லிங்கத்தில் இருந்து எழுந்து வருவது போலவும் மார்க்கண்டேயன் சிவனை வணங்கிக் கொண்டிருப்பது போலவும் எமன் கீழே விழுவது போலவும் இருக்கும்.

திருக்கடவூரில் நின்ற கோலத்தில் இது உருவத்தின் செப்பு திருமேனி உள்ளது. இது தவிர பட்டீஸ்வரம் திருச்செங்காட்டங்குடியிலும் வடிவ சிற்பங்கள் உள்ளது. மேலும் பல சிவாலயங்கள் உள்ள கோபுரங்களில் சுதை சிற்பமாக இந்த வடிவங்கள் உள்ளது. இது தவிர பல ஆலய தூண்களிலும் வடிவங்கள் உள்ளன. சுவர் சித்திரங்களாக இவ் வடிவினை பல சிவன் கோயில்களிலும் காணலாம். சிதம்பரத்தில் திருமூலநாதர் சன்னதியின் வெளிச்சுவரில் 25 மகேஸ்வர வடிவங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் பருநாடகங்கள் என்ற பெயரில் நாடகமாக வரலாற்றை நடித்துக் காட்டுகின்றனர்.

வாமனன்

சங்ககால ஏடுகளில் விஷ்ணு பகவானின் பிறந்த நாளும் வாமணன் அவதரித்த நாளும் ஒன்றுதான் என குறிப்புகள் கூறுகின்றன. மகாபலி என்ற அசுர குலத்தில் தோன்றிய மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும் போது திருமால் வாமனனாக (குள்ளமான உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் மகாபலி. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.

தன் நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினான் மகாபலி. அதன்படி ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள். இதனை நினைவு கூர்ந்து மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த சிற்பம் அமைந்துள்ள இடம் பாதாமி குடைவரை கோவில் கர்நாடக மாநிலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 598

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

எம்மை நாடும் மனிதர்கள் இன்னும் பக்குவப்பட வேண்டும். எங்கள் கருத்துக்களை உள்வாங்கி உள்வாங்கி அவரவர்கள் சுய ஆய்வு செய்து சித்தர்கள் யாங்களே கூறினாலும் கூட அவற்றிலே மெய்ப்பொருள் எந்த அளவிற்கு இருக்கிறது என்று ஆய்ந்து தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மனம் செம்மையாக வேண்டும். மனம் உயர வேண்டும். மனம் விரிவடைய வேண்டும். மனம் ஆழமாக இருக்க வேண்டும். மனம் மணக்கின்ற மனமாக இருக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட மனதிலே தான் இறை வந்து அமரும்.

கேசி வதம்

கேசி என்பவர் ஒரு அரக்கனாவார். பல்வேறு வடிவங்கள் எடுக்கும் திறன் பெற்ற கேசி கம்சனின் தூண்டுதலின் பேரில் கண்ணனைக் கொல்வதற்கு கோகுலத்திற்கு குதிரை வடிவத்தில் சென்றார். இவர் அரக்கன் என்பதை அறிந்த கண்ணன் குதிரையில் வடிவத்தில் இருந்த கேசியிடம் சண்டையிட்டு குதிரையின் வாயைப் பிளந்து கேசியைக் கொன்றான். இது கேசிவதம் ஆகும். கேசியை வதம் செய்த இடம் தற்போது கேசிகாட் என்று அழைக்கப்படுகிறது. கேசியை வென்றதினால் கண்ணன் கேசவன் என்று பெயர் பெற்றார். இந்த சிதிலமடைந்த சிற்பம் தற்போது இருக்கும் இடம்: மெட்ரோபாலிட்டன் அருங்காட்சியகம் நியூயார்க் நகரம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 597

கேள்வி: கோயிலில் எத்தனை முக தீபங்கள் ஏற்ற வேண்டும்?

கோயிலில் எத்தனை முக தீபங்கள் வேண்டுமானாலும் ஏற்றலாம். தீபத்திலே முகங்களின் எண்ணிக்கை அதிகமாக பூர்வீக தோஷம் குறையும் இது அடிப்படை. ஆனாலும் ஒவ்வொரு மனிதனுனின் அன்றாட கலியுக வாழ்க்கையில் நடைமுறை என்ற ஒன்று உள்ளது. அதிக எண்ணிக்கையில் தீபங்களை வாங்கி ஏற்றக் கூடிய வாய்ப்பும் சூழலும் இடவசதியும் இருந்தால் எந்த ஒரு மனிதனும் தீபங்களை ஏற்றலாம். அதில் பயன் உண்டு. இறையருளும் கூடும். ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதன் புதிதாக ஒரு தீபத்தை பெறும் பொழுது பஞ்சாட்சரம் ஓதித்தான் அதைக் கையில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

சிவ வடிவம் – 34. வீணாதட்சிணாமூர்த்தி

சிவபெருமான் தட்சிணாமூர்த்தி என்ற வடிவத்தில் குருவாக வந்து அனைவருக்கும் அருள் செய்தார். அப்போது யாழிசை இசைப்பவரான நாரதரும் சுக்ர முனிவரும் தும்புரு முனிவரும் தாங்கள் இசை ஞானத்தை உணர சாம வேதத்தை இசையுடன் வீணையில் ஏற்றிப் பாடி தங்களுக்கு அருள் புரிய வேண்டினார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வீணையைப் பற்றியும் வீணையின் இசைக் கலையைப் பற்றியும் கூறினார். எந்த வகையான மரத்திலேயே வீணை செய்ய வேண்டும். அதனால் என்ன பலன் என்றும் எந்த மரத்தில் வீணை செய்யக்கூடாது அதனால் என்ன இசைக் குற்றம் ஏற்படும் என்றும் விளக்கிக் கூறினார்.

கொன்றை கருங்காலி மரங்களில் வீணை செய்ய வேண்டும். அவற்றில் இசை இலக்கணம் சம்பந்தப்பட்ட பேரியாழ் மகரயாழ் சகோடயாழ் செங்கோட்டியாழ் என்ற நான்கு வகை வீணைகளையும் செய்யலாம். இதில் பேரியாழுக்கு 21 நரம்பும் மகரயாழுக்கு 17 நரம்பும் சகோடயாழுக்கு 16 நரம்பும் செங்கோட்டியாழுக்கு 7 நரம்பும் இருக்க வேண்டும். மேலும் இலக்கணப்படி யாழிற்கு பண்ணல் பரிவட்டனை ஆராய்தல் தைவரல் செலவு விளையாட்டு கையூழ் குறும்போக்கு என்ற எட்டு வகை இலக்கணப்படியே இசை எழுப்ப வேண்டும். முக்கியமாக வீணையுடன் பாடும் போது உடல் குற்றம் இல்லாமலும் பாடலில் குற்றம் இல்லாமலும் இசையில் குற்றம் இல்லாமலும் ஒரு பாடல் அமைய வேண்டும்.

இவ்வாறாக வீணையைப் பற்றியும் இசையைப் பற்றியும் வீணையை வைத்து பாடும் பாடல்களைப் பற்றியும் அதன் உட்பிரிவுகளைப் பற்றியும் எடுத்துரைத்து விரிவாகக் கூறி அந்த வீணையை தோளின் மீது வைத்து இசையெழுப்பி பாடிக் காட்டினார் குருவாக வந்தருளிய தட்சணாமூர்த்தி. இதனைக் கண்டு கேட்ட அனைவரும் ஆனந்தப்பட்டனர். நாரதர் சுக்ர முனிவர் தும்புரு முனிவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வீணையுடன் காட்சி தருவதால் அவர்க்கு வீணா தட்சிணாமூர்த்தி என்றப் பெயர் உண்டானது.

காமிக ஆகமத்தின் படி இத்திருவுருவம் வீணையை வாசிப்பதற்காக இவர் இடது கரத்தை உயர்த்தி வலது கரத்தை தாழ்த்திக் வைத்துக் கொண்டு வீணையின் தலைப் பகுதியை இடது கையினாலும் கீழ்ப்பகுதியை வலது கையினாலும் பிடித்திருக்கிறார். வீணையில் ஒலி எழுப்பும் பகுதி இவரது வலது தொடையின் மீது வைக்கப்பட்டிருக்கிறது. பின் வலக்கரம் வீணையை மீட்டிக் கொண்டிருக்கிறது. முகம் சந்தர்சண முத்திரையுடைய கையை பார்த்துக் கொண்டிருக்கிறது. இவரை சூற்றிலும் முனிவர்களும் சித்தர்களும் பூதங்களும் விலங்குகளும் தேவர்களும் அமர்ந்திருப்பார்கள். புலித்தோலின் மீது அமர்ந்தும் நின்றும் காட்சியளிப்பார். சில கோயில்களில் உள்ள திருவுருவங்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

அச்சுமத்பேத ஆகத்தின் படி இவரது இடது பாதம் உத்குடியாசன அமைப்பில் இருக்கும். வலது பாதம் தொங்கிக் கொண்டிருக்கும். இவரது காலடியில் முயலகன் இருப்பார். இவ் வடிவத்தில் மூன்று கண்களுடனும் நான்கு கரங்களுடனும் காட்சி அளிக்கிறார். முன் இரு கரங்களும் வீணையை பற்றிப் பிடித்திருக்கும். பின்னால் உள்ள வலது கரம் ருத்ராட்ச மாலையையும் பின்னால் உள்ள இடது கரம் தீயை அல்லது நாகத்தை ஏந்தி இருக்கும். சடாபாரம் சடாபந்தம் சடா மண்டலம் சடாமகுடம் அல்லது பட்டபந்தத்தால் கட்டப்பட்ட சடைகளை உடையவராக இருப்பார். சடையில் கங்காதேவியின் புன்னகையுடைய முகம் இருக்கும். இவரது இடது காதில் சங்க பத்திரமும் வலது காதில் குண்டலமும் காணப்படும். கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து வெண்மையான ஆடைகளுடன் புலித்தோலை அணிந்து பலவகைப்பட்ட ஆபரணங்களையும் அணிந்து புன்சிரிப்புடன் இருப்பார்.

பல சிவாலயங்களில் வீணை ஏந்திய திருவுருங்கள் வெவ்வேறு வடிவங்களிலும் வெவ்வேறு தோற்றங்களிலும் காணப்படுகிறது. திருச்சிக்கு அருகேயுள்ள லால்குடியிலும் துடையூரிலும் அமைந்துள்ள சிவன் கோயிலில் வீணா தட்சிணாமூர்த்தி இருக்கிறார்.

துர்கை

நடனத் தோரணையில் ஒய்யாரமாக நிற்கின்ற துர்கை என்று அழைக்கப்படும் கொற்றவை. இடம் சோமேஸ்வரர் கோவில் தும்கூர் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

சிவ வடிவம் – 33. யோக தட்சிணாமூர்த்தி

பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க நால்வரும் வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப் பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார். யோகத்தினை உணர்ந்து கொள்ள தானே யோக நிலையில் இருந்து காட்டினார். இவ்வாறு சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக யோக நிலையில் இருந்த தருணத்தினை யோக தட்சிணாமூர்த்தி என்று வழங்குகின்றனர்

சிந்து சமவெளியில் நடத்தப்பட்ட ஆழ்வாராய்சியின் போது சுண்ணாம்பு கல்லால் ஆன யோகியின் சிலை கிடைத்துள்ளது. அத்துடன் அங்கு மரத்தாலும் களிமண்ணாலும் செதுக்கப்பட்ட முத்திரைகள் ஏராளமாக கிடைத்துள்ளன. இவை பல்வேறு வகையில் காணப்படுகின்றன. தட்சிணாமூர்த்தியின் உருவம் மூன்று வகையாக காணப்பட்டது. இதில் யோக தட்சிணாமூர்த்தி வடிவத்தில் அவரது பாதம் இரண்டும் சுவஸ்திகாசன அமைப்பில் இருக்கிறது. முன் இடக்கையை மடி மீது யோக அமைப்பில் வைத்திருக்கிறார். பின் இடக்கையை மார்புக்கருகில் யோகா முத்திரையுடன் வைத்திருக்கிறார். பின் வலக்கையில் ருத்ராட்ச மாலையும் முன் இடக்கையில் தாமரையும் வைத்திருக்கிறார். அவரது பார்வை மூக்கின் நுனியை பார்த்துக் கொண்டிருக்கும். அவரைச் சுற்றி முனிவர்கள் அமர்ந்திருப்பார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 596

கேள்வி: விதியை மதியால் வெல்ல முடியுமா?

விதியை மதியால் ஆய்வு செய்யலாம். ஆட்சி செய்ய இயலாது. அது போல் விதி மதி என்பதையெல்லாம் தாண்டி பிரார்த்தனை என்ற எல்லைக்கு வந்து விடு. அது உன்னை கால காலம் காத்து நிற்கும். சென்றது செல்ல இருப்பது என்றெல்லாம் பாராமல் உள்ளுக்குள் பார்த்து பழகு. பழக பழக விதி உனக்கு சாதகமாக மாறும். பக்குவம் பெறுவதற்குத் தான் அனுபவங்கள். அந்த அனுபவங்கள் தான் மனோ பலத்தை அதிகரிக்கும் வழியாகும். மனோபலம் இல்லாது தெய்வ பலம் கூடாது. மனோ பலத்தை உறுதி செய்யவும் வளர்த்துக் கொள்ளவும் துன்பங்களை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். அதுபோலத்தான் பல்வேறு சோதனைகளும் வேதனைகளும் மனிதனை விரட்டுகின்றன. இவற்றைக் கண்டு மனம் தளராது எதிர்த்து இறை அருளோடு போராடினால் இறுதியில் நலமே நடக்கும். உனது வாழ்விலும் கடை வரையிலும் நலமே சேரும். இது போல் இயன்ற பிரார்த்தனைகளை தர்மங்களை செய்து கொண்டு எமது வழியில் தொடர்வதை தொடர்க. யாவும் நலமே நடக்கும். பூரண நல்லாசிகள்

வாமன அவதாரம்

மூவுலகத்தையும் அளந்த வாமன அவதாரமெடுத்த பெருமான் மூன்றாவது அடியை எங்கு வைக்க எனக் கேட்க மகாபலிச்சர்க்கரவர்த்தி தனது தலையின் மேல் மூன்றாவது அடியை வைத்துக் கொள்ளச் சொன்ன காட்சி. இடம் திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோவில் மயிலாடுதுறை.