சுலோகம் -153

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-34

ஒவ்வோரு புலனுக்குரிய நுகர்ச்சிப் பொருட்களிலும் விருப்பு வெறுப்புகள் மறைந்து இருக்கிறது. மனிதன் அவ்விரண்டு பிடியிலும் அகப்பட்டு விடக்கூடாது. ஏனெனில் அவ்விரண்டும்தான் இவனுடைய மேன்மைப் பாதையில் இடையூறு விளைவிக்கும் எதிரிகள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

1.கண் – பார்த்தல் 2.காது- கேட்டல் 3.மூக்கு- நுகர்தல் 4.வாய் – பேசுதல் 5.மெய் – உணர்தல் ஆகிய ஐந்து புலன்களின் வழியே ஆசையும் விருப்பமும் ஏற்படுகின்றன. இவற்றை அனுபவிக்கும் போது அவற்றின் நுகர்ச்சிப் பொருளில் விருப்பங்களும் வெறுப்புக்களும் மறைந்து இருக்கிறது. மனிதன் அவற்றை அனுபவிக்கும் போது சில நேரங்களில் விருப்பங்கள் ஏற்படும். சில நேரங்களில் வெறுப்புக்கள் ஏற்படும். இந்த இரண்டிலும் மனிதன் அகப்பட்டு விடக்கூடாது. ஏனெனில் இறைவனை நோக்கி மேன்மை நிலைக்கு செல்ல விரும்பும் மனிதனுக்கு இவை இரண்டும் மிகப்பெரிய எதிரிகளாக இருக்கின்றன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 268

கேள்வி: சில சமயங்களில் (நாம் செய்யும்) மருத்துவம் (முக்கியமாக குழந்தைகளுக்கு) பலனளிக்காது என்ற போதிலும் ஆலோசனைக் கட்டணம் வாங்க வேண்டியிருக்கிறது. இதற்கு என்ன செய்வது?

இறைவனின் கருணையாலே எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் அந்த மருத்துவ முறையை கூடுமானவரை பிழையற ஒரு மனிதன் கற்றுக் கொண்டாக வேண்டும். மருத்துவ முறையைக் கற்றுக் கொண்டு அந்த முறையைக் கையாள்வதற்கு முன்னால் கூடுமானவரை மனித தேகத்தைக் குறித்தும் ஒரு மனிதன் அறிந்து கொள்ள வேண்டும். மனித தேக இயக்கத்தை ஓரளவு அறிந்து கொள்ளாமல் மருத்துவம் பார்ப்பது எம்மைப் பொறுத்தவரை ஏற்புடையது அல்ல. இன்னொன்று எந்த மருத்துவமாக இருந்தாலும் அந்த மருத்துவன் நல்ல மருத்துவ அறிவைப் பெற்றிருந்தாலும் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் நேர்மையாக நடந்து கொண்டாலும் கூட அந்த நோயாளிகளில் யாருக்கு அந்த மருத்துவம் மூலம் பிணி நீங்க வேண்டும் என்கிற விதியமைப்பு இருக்கிறதோ அவனுக்கு நீங்கும். மருத்துவர்கள் சார்பாக செய்ய வேண்டியது கூடுமானவரை நேர்மையான முறையிலே மருத்துவத்தை செயல்படுத்துவது. அடுத்ததாக இதுபோல் மருத்துவத்திலே தலை சிறந்தவனாக எம் சிஷ்யன் போகன் (போகர் சித்தர்) இருந்து கொண்டு இருக்கிறான். அந்த போகனை அன்றாடம் ஒரு நாழிகையாவது (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) எண்ணி வழிபாடு செய்து அந்த மருத்துவம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவதும் ஏற்புடையது. மருந்தினை அல்லது மருத்துவ முறையை ஏற்க வரும் பிணியாளர்களும் இறைவனை வணங்கி போகனை வணங்கி அல்லது அவரவர்கள் மார்க்கத்தில் எது இறை என்று கூறப்பட்டிருக்கிறதோ அந்த இறையை வணங்கி அந்த மருந்தினையோ அந்த மருத்துவ முறையையோ பின்பற்ற வேண்டியது அவசியம். இரை (உணவு) சரியில்லாத பொழுது மாற்று இரை (உணவு) என்பதே மாத்திரை ஆகியதப்பா. ஒரு மனிதனுக்கு விதவிதமான பிணிகள் வருவதின் காரணமே அவனிடம் இன்னமும் பாவங்கள் இருக்கிறது என்று பொருளாகும். எனவே தடைபடாத தர்மத்தாலும் தளராத பக்தியாலும் பாவங்களைக் குறைத்துக் கொண்டு மருத்துவத்தை நாடினால் மருத்துவம் பலிதமாகும்.

கேள்வி: ஒரே பிறவியில் அனைத்து பாவங்களையும் நுகர்ந்து முக்தி பெற சித்தர் வழி யுக்தி கூறி ஆசி:

இறைவன் கருணையால் அப்படியொரு யுக்தி இல்லை என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. தாராளமாக இருக்கிறது. ஆனால் அது யாருக்கு எந்த ஜாதகனுக்கு ஏற்புடையதோ அந்த ஜாதகனுக்கு இறைவனே தந்தருள்வார். எல்லோருக்கும் அது ஏற்புடையது அல்ல. இருந்தாலும் பாவங்கள் குறைய வேண்டும் என்ற உணர்வு ஒரு மனிதனுக்கு வருவதே இறைவனின் கருணை இருப்பதால்தான். எனவே தொடர்ந்து நாங்கள்(சித்தர்கள்) கூறுகின்ற வழிமுறைகளை குறிப்பாக தர்ம காரியங்களை செய்து கொண்டே வந்தாலே போதுமப்பா. மிக எளிதாக மிக மிக சுகமாக பாவங்களைக் கழிப்பதற்கு ஒரு வழி கிட்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 267

கேள்வ : வாஸ்து என்பது உண்மையா? வாஸ்து பிரச்சனைகள் தீர்க்க என்ன வழி?

மனைக்கும் மனையிலே அமையும் மனைக்கும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. அதே சமயம் ஒருவரின் ஜாதகப் பலனை ஒட்டிதான் இந்த மனை அமையும். ஜாதகத்திலே யோகமான மனை அமைய வேண்டும் என்றால் அவன் முயற்சி செய்யாமலேயே குறைந்த வாஸ்து குற்றங்கள் கொண்ட மனை அமையும். இல்லையென்றால் ஒரு தவறான விதி முறைப்படி கட்டப்பட்ட மனைதான் அமையும். மனிதன் எத்தனைதான் திட்டமிட்டு இந்த வாஸ்து விதிமுறைகளை பின்பற்றி இல்லம் கட்டினாலும் கூட 100 க்கு 100 இந்த புவியிலே வாஸ்து என்பதை மனிதர்களால் கடைபிடிக்க இயலாது. இந்த நிலையிலே வேடிக்கையாக யாங்கள் (சித்தர்கள்) கூறுகிறோம். ஒட்டு மொத்த பாரதத்தை ஒரு மனை என்று பார்த்தால் மனையின் வடக்கு எவ்வாறு இருக்க வேண்டுமென்று ஓரளவு மனையடி சாஸ்திரம் அறிந்தவருக்குத் தெரியும். வடக்கு அங்கே பரந்த வெளியாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே வடக்கே இமயமலை அல்லவா இருக்கிறது? அதே தமிழ் மண்ணிலே எடுத்துப் பார்த்தால் அங்கே கடல் இருக்கக் கூடாத இடத்திலே இருக்கிறது. வேறு வகையில் பார்த்தால் மதுரையம்பதியில் (மதுரை) ஆளுகின்ற எம் அன்னை மீனாளின் ஆலயத்திலே எங்கே இருக்கிறது தீர்த்தம்? வட கிழக்கிலா இருக்கிறது? எனவே மனிதர்கள் இதை அதிகமாக (மனதிலே) போட்டு சிந்தை தடுமாற்றம் கொள்ள வேண்டாம் என்றே நாங்கள் கூறுகிறோம். இதில் உண்மை இருக்கிறது. அதற்காக இதை நோக்கிய எப்பொழுதும் சென்று கொண்டிருக்க வேண்டாம். அதை விடுத்து புண்ணிய செயலை செய்வதும் பக்தி வழி செல்வதும் ஏற்புடையதாக இருக்கும்.

கேள்வி: ஜோதிடத்தில் குருபகவான் ஸ்தானத்தில் இருந்தால் பலமா? அல்லது அவர் பார்வையினால் பலமா?

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஸ்தான பலமும் உண்டு. திக்பலமும் உண்டு. திருஷ்டி(பார்வை) பலனும் உண்டப்பா. அது ஜாகத்திற்கு ஜாதகம் மாறுபடும். என்றாலும் பொதுவான விதியென்றால் குருபகவானின் பார்வை விழுகின்ற அந்த ராசிக்கே முழு பலன் சேரும்.

சுலோகம் -152

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-33

ஆத்ம ஞானம் உடையவன் கூட தனது இயல்புக்கு ஏற்றபடியே பழகுகிறான். அனைத்து உயிரினங்களும் தங்களின் இயற்கையான இயல்பின்படியே நடக்கின்றன. இவற்றை சாஸ்திரங்கள் என்ன செய்ய இயலும்?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தனது ஆத்மாவை அறிந்து கொண்டவன் ஆத்மாவின் இயல்புக்கு ஏற்றபடியே செயல்படுகிறான். ஆத்மாவை அறிந்து கொள்ளாத மற்ற உயிரினங்களும் தங்களின் உடலுக்கும் ஆசைக்கும் ஏற்றபடியே செயல்படுகின்றன. இந்த இரண்டு செயல்பாடுகளையும் சாஸ்திரங்கள் கட்டுப்படுத்துவதில்லை. ஏனெனில் ஆத்மாவை அறிந்து கொண்டவனுக்கு சாஸ்திரம் தேவையில்லை. ஆத்மாவை அறியாதவர்கள் தன் கர்மாக்களின் வழியாகவும் ஆசையின் வழியாகவும் செல்வதினால் இவர்கள் சாஸ்திரங்களை கடைபிடிப்பதில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 266

கேள்வி: பிரம்மச்சர்யம் க்ருஹஸ்தம் வானப்ரஸ்தம் சன்யாசம் இவற்றை விளக்க வேண்டும்:

எந்தவொரு மனிதனாக இருந்தாலும் இது போன்ற நிலைகளை பருவ காலங்களால் அவன் தாண்டித்தான் வர வேண்டியிருக்கிறது. எனவே ஒருவன் நல்ல ஒழுக்கமுள்ள மனிதனாக இருக்கும் பட்சத்தில் திருமணம் என்ற சுப நிகழ்வு நடக்கும்வரை பிரம்மச்சர்யத்தை கடைபிடித்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. பிறகு அவன் இல்லற தர்மத்தை கடைபிடிக்க வேண்டியிருக்கிறது. ஒரு நிலைக்கு மேல் இல்லற கடமைகள் பூர்த்திக்குப் பிறகு அவன் அடுத்தடுத்த நிலைக்கு சென்று இறுதியாக அந்த சன்யாச நிலையை எய்துதான் ஆக வேண்டியிருக்கிறது. ஆனால் இவையெல்லாம் வெறும் பாவங்களால் மட்டுமே ஆகுவதல்ல. மனோ நிலையில் இதுபோல் ஒரு சூழல் நன்றாக பதியாதவரை இவை வெறும் அலங்கார வார்த்தையாகத்தான் இருக்கும். எனவே இந்த ஒரு ஒழுங்கு முறையை முறையாக தாண்டுவது என்பது மனிதனுக்கு என்றுமே கடினமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் இந்த நிலை கூட எல்லோருக்கும் பொருந்தி வருமா? என்று பார்த்தால் அதுவும் வினைகளின் குறுக்கீடால் தாறுமறாகத்தான் மனித வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இருந்தாலும் ஒரு மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் எப்படி வாழ்ந்தாலும் நாங்கள் கூறுவது போல பாவ கர்மாவை கழிப்பதற்கு பிறவி எடுத்திருக்கிறோம் என்ற ஒரு விழிப்பு நிலையோடு வாழக் கற்றுக் கொண்டு விட்டால் பிறகு அவன் தொடர்ந்து பாவங்களை செய்யாமல் கூடுமானவரை புண்ணியங்கள் செய்கின்ற ஒரு நிலை வந்துவிடும். இப்படியொரு நிலையை எய்திய பிறகு அவன் இல்லறத்தில் இருந்தாலும் துறவறத்தில் இருந்தாலும் தாயுமானவன் கூறியது போல் இல்லறம் துறவறம் இரண்டும் மேன்மையே. எப்பொழுது? நாட்டமனைத்தும் நடுவே வைத்தால் இல்லறம் துறவறம் இரண்டும் மேன்மையே என்று கூறியது போல் ஆகிவிடும். எனவே ஒருவன் எந்த நிலையில் இருக்கிறான்? என்பதை விட எந்த சூழலில் இருக்கிறான்? என்பதை விட எந்த மனோ பாவத்தில் இருக்கிறான்? என்பதே சாலச் சிறந்தது.

கேள்வி: ஆத்திசூடியில் வரும் வீடுபேறு கூற்றை விளக்கிக் கூற வேண்டும்:

முன்னர் கூறிய வாக்குதானப்பா. விடுதல் இந்த மாய உலகின் வாழ்விலிருந்து விடுதல். அந்த விடுதல்தான் பிறகு வீடுபேற்றிற்கு வழிவகுக்கிறது. அதாவது முக்திக்கு வழி வகுக்கிறது. அதைப் பெறுவதற்கு உண்டான வழியில் செல் என்பதுதான் இதற்கு பொருள்.

சுலோகம் -151

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-32

எந்த மனிதர்கள் இந்த கொள்கைகளில் குறை காண்பவர்களாக இந்தக் கருத்துக்களை ஏற்று நடப்பதில்லையோ அவர்கள் தங்களின் அறிவை இழந்து சீரழிந்து போவார்கள் என்பதை அறிந்து கொள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மேலே கொடுக்கப்பட்ட அனைத்து சுலோகங்களிலும் சொல்லப்பட்ட கருத்துக்களில் குறைகளைச் சொல்லி இந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் அதற்கு எதிர் மறையாக நடந்து கொள்பவர்கள் தங்களின் அறிவையும் இழந்து தங்கள் பிறவிக் கர்மங்களை தீர்த்துக் கொள்ள முடியாமல் மேலும் பல பிறவிகளை சேர்த்துக் கொண்டு சீரழிந்து போவார்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 265

கேள்வி: துறவறத்தில் காவியின் முக்கியத்துவம் குறித்து விளக்கியருள வேண்டும்:

மீண்டும் மீண்டும் நாங்கள் கூற வருவது எப்படியாவது ஒரு மனிதன் புற அடையாளங்கள் மூலம் தன் அகத்தை தூய்மைப்படுத்த முயற்சி செய்கின்ற முறைகளில் ஒன்றுதான் இன்னவன் கூறிய காவி ஆடை. ஆனால் காலப் போக்கில் புற அடையாளங்கள் வெறும் கெளரவத்திற்காகவும் மதிப்பிற்காகவும் ஆகிவிட்ட நிலையிலே நாங்கள் கூறுவது போல உள்ளம் பண்படாத நிலையிலே உள்ளம் பண்படாத நிலையிலே உள்ளம் பக்குவப்படாத நிலையிலே உள்ளம் பற்றற்ற தன்மையை அடையாத நிலையிலே ஒருவர் காவி அணிந்தால் என்ன? அணியா விட்டால் என்ன?. அல்லது வேறு சில மனிதர்கள் எண்ணலாம். எப்படியாவது இது போன்ற அடையாளங்களை அணிந்து கொண்டு இந்த அடையாளங்கள் இருக்கிறதே என்பதற்காகவாவது தவறு செய்யாமல் நாங்கள் இருக்கலாம் அல்லவா? என்று கூறலாம். அந்த ஒரு நல்ல எண்ணத்தில் ஒருவன் முயற்சி செய்தால் இது போன்ற புற அடையாளங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். மற்றபடி புற அடையாளங்கள் குறித்து சித்தர்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் ஏதும் இல்லையப்பா.

கேள்வி: மறதி சோம்பல் தூக்கமின்மை – இவை நீங்க என்ன செய்ய வேண்டும்?

எதில் மனிதனுக்கு ஆர்வம் இருக்கிறதோ அதை மறப்பதில்லை. எதில் ஆர்வமில்லையோ அது மறந்து போகிறது. எனவே மனிதன் தவிர்க்க முடியாத செயலை செய்யும் பொழுது பிடிக்காத சூழ்நிலையை கூட எதிர் கொள்ளப் பழகுகிறான். ஆனால் அவனுக்குப் பிடித்தமான விஷயமென்றால் எதையும் தாங்கிக் கொள்ளப் பழகுகிறான். எனவே மனிதர்கள் தங்கள் மனதை பக்குவப்படுத்தி செய்துதான் ஆக வேண்டிய சூழல் என்றால் அதற்கு ஏற்றாற் போலும் வேறு வழியில்லாமல் செய்கின்ற அந்த தன்மையையும் ஆய்ந்து பார்த்து எது எப்பொழுது முக்கியம்? எது சாத்தியம்? எது அசாத்தியம்? என்றெல்லாம்? என்றெல்லாம் ஆய்வு செய்து தன்னை தெளிவாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். பலவிதமான சிந்தனை தடுமாற்றங்கள் ஒரு கணம் ஒரு செயல் செய்யும் பொழுது சிந்தனை அங்கில்லாமல் போவதுதான் மறதிக்கு அடிப்படை காரணம். எனவே தாறுமாறான ஒழுங்கற்ற பொருள்கள் இல்லமெங்கும் சிதறியிருந்தால் அந்த இல்லம் பார்ப்பதற்கு அழகாய் இராது. பொருள்கள் அழகாக வரிசையாக அடுக்கப்பட்டிருந்தால் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். அந்தப் பொருள் தேவைப்படும் சமயம் எங்கு இருக்கிறது? என்று தேடுவதற்கும் எளிமையாக இருக்கும். அதைப் போல தொடர்ந்த எண்ண ஓட்டமான மனதிலே தாறுமாறான எண்ணங்கள் இருப்பதுதான் ஒருவனின் குழப்பத்திற்கும் மறதிக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். தேவையற்ற எண்ணங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தேவையான எண்ணங்களையெல்லாம் அழகாக அடுக்கி வைத்திருந்தால் மறதி என்பது ஒரு பொழுதும் வராது.

சுலோகம் -150

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-31

எந்த மனிதர்கள் குற்றங்குறை காணாதவர்களாக சிரத்தை உடையவர்களாக என்னுடைய கொள்கையை பின்பற்றுகிறார்களோ அவர்களும் அனைத்து கர்மங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மேலே கொடுக்கப்பட்ட அனைத்து சுலோகங்களிலும் சொல்லப்பட்ட கருத்துக்களில் குற்றம் குறைகள் சொல்லாமல் சிரத்தையுடன் நம்பிக்கையுடன் பின்பற்றி நடப்பவர்கள் அனைவரும் தங்களது அனைத்து கர்மங்களில் இருந்தும் விடுபடுவார்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 264

கேள்வி: சிறு குழுந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய் குணமடைய மருத்துவ முறைகள் பரிகாரம்:

இறைவனின் கருணையாலே பிணியாகட்டும் வேறு துன்பமாகட்டும் ஒரு மனிதனுக்கு குழந்தைப் பருவத்தில் அல்லது மத்திய காலத்தில் வருகிறது என்றாலே அதுவும் ஒரு வகையான பாவ வினைகளின் எதிரொலிதான். இது ஒருபுறமிருக்கட்டும். வழக்கம் போல் பரிபூரண வழிபாட்டோடு அதிகமதிகம் தர்ம காரியங்களை செய்வதும் வினைப் பயனால் வறுமையில் வாடுகின்ற குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை தேடிச் சென்று அந்தக் குடும்பமும் குழந்தையும் எண்ணிப் பார்க்க முடியாத மிக மிக உயர்வான கனி வகைகளையும் உயர்ந்த நெய்யினால் தயாரிக்கப்பட்ட சுவையான பண்டங்களையும் தொடர்ந்து வழங்கி வருவதும் இது போன்ற தர்ம காரியங்களை இன்னும் தொடர்ந்து செய்து வருவதும் கட்டாயம் நல்லதொரு பலனைத் தரும். அதோடு இஷ்ட தெய்வத்தை வணங்குவது ஒரு புறமிக்க நவக்கிரங்களை வணங்கி அதிலே இந்த இனிப்புக்கு காரகத்துவம் பெற்ற சுக்ர பகவானையும் வணங்கி வந்தால் கட்டாயம் வினையினால் வந்த பிணியாக இருந்தாலும் மருந்திற்கும் கட்டுப்படும் பிறகு மட்டுப்படும். பிறகு அதனால் எதிர்விளைவுகள் இல்லாமல் போகும்.

கேள்வி: உத்தம் ஆன்மீக உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் 9 உடல்கள் இருப்பதாகவும் தினசரி வாழ்க்கையில் இந்த 9 உடல்களிலும் மாறி மாறி வாழ்வதாகவும் சொல்லப்படுவது பற்றி:

தேகம் தேகத்திற்குள் இருக்கின்ற உயிர் அல்லது ஆத்மா இது தொடர்பாக மனிதன் தாம் தாம் உணர்ந்தவற்றை அவ்வப் பொழுது கூறிவிட்டு செல்கிறான். அவைகள் அனைத்தும் உண்மையென்றோ அல்லது அனைத்தும் பொய் என்றோ எம்மால் கூறவியலாது. சில உண்மைகளும் உண்டு. சில உண்மைக்கு மாறான கருத்துக்களும் உண்டு. ஏனென்றால் அந்தந்த ஆத்மா எந்த அளவிற்கு அதனைப் புரிந்து கொண்டதோ அதனையே சிலருக்கு போதிக்கிறது. எனினும் கூட நீ கூறியது போல அந்த எண்ணிக்கை நவத்தை (ஒன்பது) தாண்டியும் கூட தேகத்தின் பரிணாமம் இருக்கிறதப்பா. அவையெல்லாம் பல விதமான சூட்சும தேகம் என்று அழைக்கப்படுகிறது. அவை ஆத்மாவின் விதவிதமான வடிவங்கள் என்று சுருக்கமாக நீ இத்தருணம் வைத்துக் கொள். இது குறித்து விளக்கமாக தக்க காலத்தில் கூறுவோம்.

குருவாயூரப்பன்

கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணர் கோவில். மூலவர் உன்னி கிருஷ்ணன். சிறுவனானக இருக்கும் இவருக்கு கண்ணன் உண்ணிக் கண்ணன் (குழந்தை கிருஷ்ணன்) உண்ணிக் கிருஷ்ணன் பாலகிருஷ்ணன் மற்றும் குருவாயூரப்பன் என்று இவருக்கு பல பெயர்கள் உள்ளது. நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார் கிருஷ்ணர். மேலிரண்டு கரங்களில் சங்கு சக்கரமும் கீழிரண்டு கரங்களில் கதையும் தாமரையும் கொண்டு துளசி முத்து மாலைகள் கழுத்தில் தவழ கிரீடம் மகர குண்டலம் கேயூரம் கங்கணம் உதர பந்தனம் பூண்டு வலப்பக்க மார்பில் ஸ்ரீவத்ஸம் எனும் சந்தனமும் வைஜயந்தி மாலையும் கௌஸ்துப மணியும் அணிந்து திருக்காட்சி தருகிறார். கருவறைக்கு வடகிழக்கே வருண பகவானால் ஏற்படுத்தப்பட்ட கிணறு அமைந்துள்ளது. இந்த நீர்தான் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. பரிவார தேவதைகளுக்கு பூஜை நடப்பது போல் தினமும் இந்த கிணற்றுக்கும் பூஜை நடக்கிறது. இந்தக் கிணற்றில் எந்நாளும் தீர்த்தம் குறைந்ததில்லை. இந்தப் புண்ணிய தீர்த்தத்துக்குள் எண்ணற்ற சாளக்கிராம கற்களும் சிலைகளும் உள்ளன. கோவிலில் ஆதி சங்கராச்சாரியார் அவர்களால் வரையறுக்கப்பட்ட பூசை முறைகள் மற்றும் தாந்தரிக வடிவில் சென்னாஸ் நாராயணன் நம்பூதிரி காலம் 1427 ம் ஆண்டு அவர்களால் எழுதி குறிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றியும் இந்த கோவிலில் இறை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கோயிலுக்கு எதிரில் கிருஷ்ண பகவான் மஞ்சுளால் என்ற அரசமர வடிவில் அருள்பாலிக்கிறார்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்ய தேசக் கோவில்களில் இக்கோவில் இல்லை என்றாலும் திருமாலை வணங்குபவர்களால் மிகவும் புனிதமானதாக போற்றப்பட்டு வருகிறது இத்திருக்கோயில். கிருஷ்ண அவதாரத்திற்கு சற்று முன் அன்னை தேவகி மற்றும் தந்தையார் வாசுதேவருக்கு குருவாயூர் கோயிலில் உள்ளவாறே தரிசனம் கொடுத்துள்ளார் கிருஷ்ணர். இதனால் இந்த இடம் தென் இந்தியாவின் துவாரகா என்றும் அழைக்கப்படுகிறது. குரு பகவானும் வாயுபகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் குருவாயூர். குரு + வாயு = குருவாயூர். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் மையால் செய்யப்பட்டது இந்த கிருஷ்ணரின் சிலை. இந்த சிலையை கிருஷ்ணரே செய்ததாகவும் ஒரு வரலாறு உள்ளது. கோவிலில் கிழக்கு வாசல் மேற்கு வாசல் என்று இரண்டு பிரதான வழிகள் இருந்தாலும் கிழக்கு நோக்கிய வாசல்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் தங்கத் தகடுகள் வேயப்பட்ட 33.5 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பத்தின் இருபுறமும் 13 அடுக்குகளுடன் 7 மீட்டர் உயரமுள்ள தீபஸ்தம்பம் உள்ளது. இதன் வட்ட அடுக்குகளில் விளக்குகள் ஏற்றப்படும். கருவறையைச் சுற்றி வெளிச்சுவர்களில் மரச் சட்டங்களில் சுமார் 3000 பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும். கொடிக்கம்பத்துக்கு வடமேற்கே கிருஷ்ணனை துவாரகையில் இருந்து எடுத்து வந்து பிரதிஷ்டை செய்த குரு பகவான் மற்றும் வாயு பகவானின் பலிபீடங்கள் உள்ளன.

கிருஷ்ணர் அவதார காரியம் முடிந்ததும் வைகுந்தம் ஏகுவதற்கு ஆயத்தமானார். அப்போது அவருடைய நண்பரும் சீடருமான உத்தவர் கிருஷ்ணா நீங்கள் இல்லாத உலகைக் கற்பனை கூடச் செய்ய முடியவில்லையே என்றார். அதற்கு கிருஷ்ணர் உத்தவா அவதார காரியம் பூர்த்தியானது என் இருப்பிடம் திரும்புவதுதானே முறை? என்றார். உடனே உத்தவர் இருந்தாலும் நீங்கள் இல்லாமல் எங்களால் எப்படி இருக்க முடியும்? நாங்கள் என்ன செய்வோம்? என்று கவலையுடன் கிருஷ்ணரிடம் வேண்டினார். கவலையை விடு உத்தவா நான் இல்லாத குறையை இதோ இந்த விக்கிரகம் தீர்த்து வைக்கும் என்று தன்னைத் தானே சிலையாக வடித்த கிருஷ்ணர் இந்த சிலையை தனது பக்தரான உத்தவரிடம் கொடுத்தார். எனது அவதார முடிவில் ஏழு நாட்களுள் துவாரகையைக் கடலில் மூழ்கி விடும். அப்போது இந்த விக்கிரகம் கடலில் மிதந்து உன்னிடம் வந்து சேரும். அதனை தேவ குரு பிரகஸ்பதியான குருபகவானிடம் ஒப்படைத்து அவர் விரும்பும் இடத்தில் பிரதிஷ்டை செய்ய சொல்ல வேண்டும் என்று கிருஷ்ணர் உத்தவரிடம் கூறினார். கிருஷ்ணர் சொன்னது போலவே அனைத்தும் நடந்தது. வாயு பகவான் புயலாய் மாறினார் மழை கொட்டினார். கடல் துவாரகைக்குள் புகுந்தது. உத்தவரிடம் இருந்த சிலை கடலில் மிதந்து உத்தவரிடம் வந்து சேர்ந்தது. அவர் அதனை குரு பகவானிடம் ஒப்படைக்க குரு பகவான் அதை எடுத்துச் சென்று பூலோக சொர்க்கமான குருவாயூரில் பிரதிஷ்டை செய்தார். குருவும் வாயுவும் இவ்விதம் கிருஷ்ணரின் சிலையை பிரதிஷ்டை செய்தனர். குருவுக்கும் வாயுவுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்த ஊர் குருவாயூர் என பெயர் பெற்றது.

மகாபாரதப் போருக்குப் பின் நீண்ட காலம் ஆட்சி புரிந்த பரீட்சித்து மன்னன் தட்சகன் என்ற பாம்பால் கடிபட்டு மரணமடைந்தார். அதனால் அவரது மகனான ஜனமேஜயன் சர்ப்பங்கள் அனைத்தின் மீதும் கோபமுற்று சர்ப்ப யாகம் செய்து உலகத்தில் உள்ள அனைத்து நாகமும் யாகத் தீயில் விழுமாறு செய்தான். அதனைக் கண்ட அஸ்தீகம் என்ற முனிவர் ஜனமேஜயனிடம் மன்னா இந்தக் கொடிய யாகத்தை நிறுத்து. ஒரு பாவமும் அறியாத ஆயிரக்கணக்கான சர்ப்பங்களைக் கொல்லாதே என்றார். உடனே முனிவரின் வார்த்தையை மன்னர் ஏற்க யாகம் நிறுத்தப்பட்டது. ஆனால் பாம்புகளைக் கொன்ற பாவத்தால் ஜனமேஜயன் தொழு நோயால் பீடிக்கப்பட்டான். சில காலம் கழிந்து கேரள தேசத்தில் தமது ஆசிரமத்தில் பரசுராமர் ஜனமேஜயனுடன் உரையாடினார். ஜனமேஜயா உனது இக்கொடிய நோய் விரைவில் குணமடைய ஆசி கூறுகிறேன் என்றார். அந்த சமயத்தில் உத்தவர் கேட்டுக் கொண்டபடி தேவகுரு பிருஹஸ்பதியும் வாயு பகவானும் சேர்ந்து கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்யத் தகுந்த இடத்தைத் தேடியவாறு கேரள நாட்டிற்கு வந்தார்கள். தற்போது குருவாயூர் கோவில் இருக்கும் இடத்தை பார்த்த இருவரும் இந்த இடம் இவ்வளவு ரம்மியமாக இருக்கிறதே என்று பிரமித்து கூறினர். நம் சுவாமியை இங்கேயே பிரதிஷ்டை செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள். இருவரும் பரசுராமரின் ஆசிரமத்திற்கு வந்தார்கள். பரசுராமர் அவர்களை வரவேற்று உபசரித்தார். பரசுராமரே இந்த கிருஷ்ணரின் விக்கிரகத்தை இங்கு பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்திருக்கிறோம். இங்கு பிரதிஷ்டை செய்ய தக்க இடத்தைக் காட்டுங்கள் என்று கேட்டார்கள். மூவரும் சரியான இடத்தை பார்த்துக் கொண்டிருந்த போது ருத்ர தீர்த்தத்தின் அருகே சிவபெருமான் உமையுடன் வீற்றிருந்தார். மூவரும் அவரைப் பணிந்து வணங்கி நின்றார்கள். அப்போது சிவபெருமான் இங்கேயே விஸ்வகர்மா உதவியுடன் ஒரு கோவில் எழுப்பி இந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள். அனைவருக்கும் சேமம் உண்டாகட்டும் என்று ஆசி வழங்கினார். அதன்படி கோவில் எழுப்பப்பட்டது. கிருஷ்ணரின் விக்கிரகத்தை குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்தார்கள். கிருஷ்ணரின் விக்கிரகத்திற்கு சிவபெருமானே அபிஷேகம் செய்தார். சிவபெருமான் அதனருகில் உள்ள ஓர் இடத்தில் எழுந்தருளி மம்மியூர் மகாதேவர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஆரம்பித்தார்.

பரசுராமர் ஜனமேஜயனை அழைத்து ஜனமேஜயா உன் நோய் நீங்க பக்தியுடன் நீ தினமும் இந்த புஷ்கரணியில் நீராடு. கிருஷ்ணரைக் குறித்து தவமியற்று. குருவாயூரப்பனின் திருவருளால் நீ விரைவில் குணமடைவாய் என்று கூறினார். கிருஷ்ணனரையும் மம்மியூர் மகாதேவரையும் அன்னை பார்வதியையும் தினமும் ஜனமேஜயன் வழிபட்டு வந்தார். சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் கிருஷ்ணன் குருவாயூரப்பனாக அவர் முன் தோன்றி ஜனமேஜயா உனது தவம் பலித்தது. இனி உன் நோய் குணமாகி விடும் என்று கூறினார். நோய் முற்றிலும் நீங்கிய ஜனமேஜயன் சிறந்த முறையில் ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து குருவாயூரப்பனுக்குச் சிறந்த கோயில் ஒன்றைக் கட்டி முடித்தார். பின்பு மக்களிடம் உடல் நலம் குன்றியவர்கள் இந்த புஷ்கரணியில் நீராடிப் பக்தியுடன் குருவாயூரப்பனை வழிபட்டு வந்தால் அவர்களது நோய் நீங்கிவிடும் என்று அறிவித்தார்.

மேப்பத்தூர் ஸ்ரீநாராயண பட்டத்திரிக்கு வந்திருந்த கடுமையான வாத நோயைக் குணப்படுத்தினார் குருவாயூரப்பன். பட்டத்திரி குருவாயூரப்பனைப் பற்றி எழுதிய 1036 பாடல்கள் கொண்ட ஸ்ரீநாராயணீயம் கிருஷ்ணரின் லீலைகளை மிகச் சிறப்பாக விளக்குகிறது. ஒவ்வொரு பாடலையும் எழுதி முடிந்தவுடன் பட்டத்திரி குருவாயூரப்பனிடம் இப்படி லீலை செய்தாயா? என்று கேட்பார். அதற்கு குருவாயூரப்பன் தலை அசைத்துச் சம்மதம் தெரிவிப்பார். ஆலயத்தில் உள்ள நமஸ்கார மண்டபத்தில் அமர்ந்து நாராயணீயம் எழுதினார் நாராயண பட்டத்ரி. அவர் அமர்ந்து எழுதிய இடத்தைப் புனிதமாகக் கருதி அங்கு எவரும் அமர்வதில்லை. நாராயண பட்டத்ரியுடன் குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல்.

பட்டத்ரி: நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனப் பொருள் எது?
குருவாயூரப்பன்: நெய்ப் பாயசம்.
பட்டத்ரி: ஒருவேளை நெய்ப்பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால்?
குருவாயூரப்பன்: அவலும் வெல்லமும் போதுமே.
பட்டத்ரி: அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால் என்ன செய்வது?
குருவாயூரப்பன்: வெண்ணெய் வாழைப்பழம் பால் தயிர் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு.
பட்டத்ரி: மன்னிக்க வேண்டும் பகவானே இப்போது நீ சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?
குருவாயூரப்பன்: துளசி இலைகள் அல்லது உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்.
பட்டத்ரி: அதுவும் என்னிடம் இல்லை என்றால்?
குருவாயூரப்பன்: எனக்கு நைவேத்தியம் செய்விக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும். வேறு ஒன்றும் வேண்டாம்.

குருவாயூரப்பன் கோயிலில் ஒருமுறை தீ விபத்து ஏற்பட்ட போது அங்குள்ள மரச்சுவர்கள் தூண்கள் ஆகியன சேதமடைந்தன. பிறகு பிரஸன்னம் மூலம் கிடைத்த உத்தரவுப்படி மறுபடியும் தூண்கள் மற்றும் சுவர்களைக் கருங்கற்களால் நிர்மாணிக்கத் தீர்மானித்தனர். அதற்காக தமிழ்நாட்டில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர். விஷ்ணுவின் தசாவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்களுடன் கூடிய பத்து தூண்கள் தயாராயின. அதில் கிருஷ்ணாவதாரத்தை குறிக்க ஒரு தூணில் கம்ச வத காட்சியை வடித்திருந்தார் சிற்பி. அந்த தூணை வைக்க தீர்மானித்திருந்து இடத்தில் ஒரு நாள் சிறுவன் ஒருவன் தலைமைச் சிற்பியிடம் வந்து கிருஷ்ணனை வேணுகோபாலனாகச் செதுக்கியிருக்கும் தூணை இங்கு வையுங்கள் என்றான். அப்படி ஒரு சிற்பத்தை நாங்கள் இது வரை வடிக்கவில்லையே என்றார். உடனே சிறுவன் சிற்ப வேலை நடக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று கிருஷ்ணர் வேணுகோபாலனாக விளங்கும் தூணைக் காட்டினான். வியப்படைந்த சிற்பி திரும்பிப் பார்த்த போது சிறுவனைக் காணவில்லை. வந்தது குருவாயூரப்பனே என்பதை உணர்ந்த தலைமைச் சிற்பி அந்தத் தூணையே அங்கு நிறுவினார்.

மேல்சாந்தி என்றால் தலைமை குருக்கள் என்று பொருள். முக்கியமான பூஜைகள் அலங்காரங்கள் அர்ச்சனை மற்றும் அபிஷேகங்களை செய்பவர் மேல்சாந்தி. இவரைத் தவிர மற்றவர்களுக்கு மூல விக்கிரகத்தைத் தொடும் உரிமை கிடையாது. கோயிலின் மேல்சாந்தி விடியற்காலை இரண்டரை மணிக்கே ஸ்ரீகோயிலின் கருவறைக்குள் நுழைந்து விடுவார். மேலும் உச்சி பூஜை முடியும் 12.30 மணி வரை பொட்டுத் தண்ணீர்கூட அருந்த மாட்டார். அப்படி ஒரு ஆசார முறை இங்கே கடைப் பிடிக்கப்படுகிறது. ஒரு மேல்சாந்தி தொடர்ந்து ஆறு மாத காலமே பணி புரிய வேண்டும். இந்த ஆறு மாத காலமும் குருவாயூர் கோயிலை விட்டு அவர் வெளியே எங்கும் செல்லக்கூடாது. கோவிலின் உள்ளே தங்குவதற்குத் தனி இடம் வழங்கப்படும். இந்த ஆறு மாத காலமும் பிரம்மச்சர்ய விரதம் அவசியம். கீழ்சாந்தி எனப்படுபவர் உதவி அர்ச்சகர். விளக்கு ஏற்றுவது அபிஷேகத்துக்குப் புனித நீர் எடுத்துத் தருவது மலர் மாலைகளை எடுத்துத் தருவது நைவேத்தியம் தயாரிப்பது இவை கீழ்சாந்தியின் வேலை. தந்திரி எனப்படுபவர்கள் வேத மந்திரம் கற்றவர்கள். பூஜைகளைத் தந்திர முறையில் செய்வதால் இவர்கள் தந்திரிகள் ஆனார்கள். பல முக்கியமான நிகழ்வுகளுக்கு ப்ரஸ்னம் பார்த்துத் தீர்மானிப்பது தந்திரிகள்தான்.

குருவாயூரை கிபி 1766 ஆண்டில் மைசூரை சார்ந்த ஹைதர் அலி கோவிலை கைப்பற்றினார். கோவிலை விடுவிக்க அவர் 10000 பானம்ஸ் பணம் அபராதமாக கேட்டார். இந்த அபராதத் தொகை கட்டப்பட்டு மீட்கப்பட்டது. ஆனால் அப்பொழுது நிலவிய சூழ்நிலை காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் வருவது குறைந்தது மேலும் கோவிலுக்கு வழங்கப்பட்ட அரிசியும் நிறுத்தப்பட்டது. மீண்டும் கிபி 1789 ஆண்டில் திப்பு சுல்தான் சமோரின் நாட்டின் மேல் படையெடுத்தான். கோவிலை அழிவிலிருந்து காப்பாற்ற மூலவர் கிருஷ்ணர் விக்ரஹம் பூமியின் அடியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டது. கோவிலின் உற்சவர் விக்ரஹம் மல்லிச்சேரி நம்பூதிரி மற்றும் கக்காத் ஒத்திகன் ஆகியோர்களால் அம்பலப்புழை என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. திப்பு சுல்தான் சிறிய கோவில்களை யாவும் அழித்தான் மேலும் பெரிய கோவிலுக்கும் தீ வைத்தான். ஆனால் இறைவன் அருளால் சரியான வேளையில் மழை பொழிந்து தீ அணைக்கப்பட்டு கோவில் காப்பாற்றப்பட்டது. திப்பு சுல்தான் கிபி 1792 ஆம் ஆண்டில் நடந்த ஆங்கிலேயர்கள் மற்றும் சமொரினுக்கு எதிரான போரில் தோல்வி அடைந்தான். ஆகையால் செப்டம்பர் 17 ம் தேதி 1792 அன்று உற்சவ மூர்த்தி திரும்பவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. உள்ளநாடு பணிக்கர்மார்கள் 1825 முதல் 1900 வரை சுமார் 75 வருடங்களுக்கு கோவிலை பாதுகாத்து வந்தார்கள். செம்பகேசரி நம்பூதிரி மற்றும் தேஷவர்மன் நம்பூதிரி போலவே பணிக்கர்மார்களும் தமது அனைத்து உடமைகளையும் சொத்து மற்றும் சேவைகள் புரிவது அனைத்தையும் கோவிலுக்கே அற்பணித்தார்கள். அப்படியாக அவர்களுடைய உதவியுடன் நித்ய பூஜைகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் நிகழ்ச்சிகள் உற்சவங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 1859 முதல் 1892 வரை சிற்றம்பலம் விளக்குமடம் கூத்தம்பலம் மற்றும் சாஸ்தா ஆலயம் போன்றவை புதுப்பிக்கப்பட்டு அதன் கூரைகளை செம்பு தகடுகளால் மாற்றியமைக்கப்பெற்றன. 1900 ஆம் ஆண்டில் கொந்தி மேனன் என்ற அதிகாரி கோவிலில் சடங்குகள் மற்றும் வணங்குவதற்கான புராண நியம நிஷ்டைகளை ஏற்பாடு செய்து அதை நன்கு செய்வதற்கும் கோவிலின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கைகளை எடுத்தார். அவர் கோவிலுக்கான பெரிய மணியை கட்ட ஏற்பாடுகள் செய்தார் மேலும் கூலக் களஞ்சியம் என அறியப்படும் சேமிப்பு கிடங்கை புதுப்பித்தார். 1928 ஆம் ஆண்டில் குருவாயூர் கோவிலின் நிர்வாகம் மீண்டும் சமோரின் குடும்பத்தினரிடம் மாற்றப்பட்டது. கொடிக்கம்பம் 1952 ஆம் ஆண்டில் தங்கத்தால் போர்த்தப்பட்டது.

ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு குருவாயூரப்பன் மிகவும் விருப்பமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை கோவிலுக்கு அழைத்துச் செல்ல யாருமில்லை. பண வசதியும் இல்லை. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும் அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் ஆசை இருந்தது. அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து நன்கு கழுவி துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள். ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் நடை பயணமாகவே புறப்பட்டாள். கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயணம் செய்தாள். ஒரு மண்டல காலம் பயணம் செய்து கோவிலை அடைந்தாள்.

கோவிலை அடைந்த சமயம் கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன் தன் பக்தியை வெளிப்படுத்த கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அந்த நாளிலே இந்த வயதான பெண்மணியும் வந்திருந்தாள். கூட்டம் அதிகமாக இருந்த படியால் தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. வயதான பெண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது. அதே சமயம் கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் என்ன ஆயிற்று? என்று பதறினர். கோவில் பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் குருவாயூரப்பனிடமே ப்ரஸன்னம் கேட்டான். அப்பொழுது கர்ப்பக்கிரகத்தில் இருந்து நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும் என்று அசரீரி கேட்டது. உடனே அங்கிருந்த அனைவரும் கீழே சிதறிக் கிடந்த குண்டு மணிகளை பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயதான பெண்மணியிடம் கொடுத்த அரசர் அவளிடம் மன்னிப்பும் கேட்டான். அவளை சகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவள் ஆசையுடன் குண்டு மணிகளை அப்பனிடம் சமர்ப்பித்ததும் யானையின் மதம் அடங்கியது. அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது.

பட்டத்திரி குருவாயூரப்பனைப் பற்றி எழுதிய 1036 பாடல்கள் கொண்ட ஸ்ரீநாராயணீயம் கிருஷ்ணரின் லீலைகளை மிகச் சிறப்பாக விளக்குகிறது. பூந்தானம் என்ற மகான் மலையாளத்தில் எழுதிய ஞானப்பானை நூல் குருவாயூரப்பனது மகிமைகளை விவரிக்கின்றன. நாரத புராணத்தின் குருபாவன புர மகாத்மியம் என்ற பகுதியில் குருவாயூரின் மகிமைகளை விவரிக்கிறது. ஞானிகளான மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி பக்த சிரோன்மணி வாசுதேவன் நம்பூதிரி போன்றோர் குருவாயூரப்பனை மகா விஷ்ணுவாக வழிபட்டனர். பூந்தானம் வில்வமங்களன் மானதேவன் குரூர் அம்மையார் ஆகியோர் பாலகிருஷ்ணனாக வழிபட்டனர். 14 ஆம் நூற்றாண்டின் கோகசந்தேசம் என்ற தமிழ் வரலாற்று படைப்பில் குருவாயூரைப் பற்றிய வரலாற்று செய்திகள் உள்ளது.