ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -21

தசரதர் கௌசலையிடமும் சுமித்ரையிடமும் பல வருடங்களுக்கு முன்பு தான் சிறுவனாக இருந்த போது நடந்த நிகழ்ச்சி ஒன்றை சொல்ல ஆரம்பித்தார். சிறுவயதில் பலவகையான வில்வித்தைகளை கற்றேன். அதில் ஒன்று சத்தம் வரும் திசையை நோக்கி குறி பார்த்து அம்பு எய்வது. அதில் தேர்ச்சி பெற்றேன். ஒரு முறை காட்டிற்கு வேட்டையாட சென்றிருந்தேன். நீண்ட நேரம் வேட்டையாடியதில் இரவு வந்துவிட்டது. ஆற்றில் இரவு தண்ணீர் குடிக்க விலங்குகள் வரும். தண்ணீர் குடிக்கும் போது தண்ணீரின் சத்தத்தை வைத்து விலங்குகளை நோக்கி அம்பு செலுத்தி பரீட்சித்துப்பார்க்கலாம் என்று காத்திருந்தேன். ஒரு யானை தண்ணீர் குடிக்கும் சத்தம் போல் கேட்டது. உடனே சத்தத்தை வைத்து குறிபார்த்து அம்பு எய்தேன். என்னுடைய அம்பு சரியான குறியை தாக்கியது. ஆஆஆ என்று ஒருவனின் சத்தம் கேட்டது. மனிதக்குரல் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லையே தண்ணீர் எடுக்க வந்த என்னை கொன்று விட தீர்மானித்துவிட்டார்களே என்று பரிதாபக்குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி சென்றேன்.

அங்கு ஒரு தபஸ்வி உடல் முழுவதும் ரத்தம் படிந்த கரையோடு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரது கண்களில் இருந்து வீசிய ஒளி என்னை சுடும் போல் இருந்தது. என்னை யார் கொல்ல துணிந்தார்கள். நான் விரதவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எனது தந்தைக்கும் தாய்க்கும் கண் தெரியாது. நான் இறந்தவுடன் இனி எப்படி அவர்கள் எப்படி வாழ்வார்கள் என்று புலம்பினான். அவர் முன்னிலையில் சென்றதும் பாவி நீயா என் மீது அம்பெய்தாய். உன்னால் நான் இறக்கப்போகிறேன். நான் தண்ணீர் கொண்டு வருவேன் என்று கண்ணில்லாத என்னுடைய தாய் தந்தையர் வீட்டில் எனக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். நான் இங்கே இறப்பதே என் தாய் தந்தைக்கு தெரியாமல் போய்விடும். தெரிந்தாலும் அவர்களால் இங்கு வர இயலாது. நீ யார் என்று கேட்டார். நான் இந்நாட்டின் அரசன் யானை நீர் அருந்திக் கொண்டிருக்கின்றது என்று எண்ணி அம்பெய்தேன் இருட்டில் நீ தான் என்று தெரியாமல் செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு என்றேன். அதற்கு அவன் என்னுடைய தாய் தந்தையரிடம் சென்று அவர்களிடம் சரண்டைந்துவிடுங்கள். இல்லையென்றால் அவரின் கோபம் என்னை எரித்துவிடும் என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டான்.

தருமப்படி அவர் சொல்வதே சரியானது என்று முடிவு செய்து அவர்களின் இருப்பிடம் தேடிச்சென்றேன். அவரின் பெற்றோர் மிகவும் வயோதிகர்களாகவும் நகர முடியாதவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் சாப பயத்தினால் மிகவும் தயங்கி அவர்களிடம் நடந்தவைகள் அனைத்தையும் சொல்லி உங்கள் திருஉள்ளம் எப்படியோ அதன்படி எனக்கு சாபம் கொடுங்கள் மகா பாதகத்தை செய்த நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன் என்றேன். தந்தை பேச ஆரம்பித்தார். நீ செய்தது மிகப்பெரிய பாவம். ஆயினும் தெரியாமல் செய்தாய். தைரியமாக என்னிடம் வந்து சொல்லவும் செய்தாய். ஆகையால் பிழைத்தாய். எங்களை அங்கே அழைத்துச்செல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள். அவர்களை அங்கே தூக்கிசென்றேன். மகனுக்குரிய சடங்குகளை செய்துவிட்டு சிதை முட்டினார்கள். நாங்கள் அனுபவிக்கும் புத்ர சோகத்தை நீயும் அனுபவிப்பாயாக என்று சொல்லிவிட்டு அவர்களும் சிதையில் இறங்கி உயிர் நீத்தார்கள். அவரின் சாபமே என்னை இந்த புத்ர சோகத்தில் தள்ளிவிட்டது. முதியவர்களுக்கு புத்ர சோகத்தை உண்டாக்கிய பாவம் இப்போது என்னை கொல்ல போகிறது என்று மயக்கமடைந்தார்.

கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்

நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள். பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன. வேதவியாசர் அருளிய நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.

  1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். [பாகவத புராணம் 12.2.1]
  2. கலியுகத்தில் பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும் சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும். [பாகவத புராணம் 12.2.2]
  3. ஆண்களும் பெண்களும் வெறும் உடல் சுகத்திற்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள். தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். [பாகவத புராணம் 12.2.36)
  4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலி குருமார்களை நம்பி வழிதவறி செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார். [பாகவத புராணம் 12.2.4]
  5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான். [பாகவத புராணம் 12.2.5]
  6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்று அறியப்படுவான். முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும். [பாகவத புராணம் 12.2.6]
  7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். [பாகவத புராணம் 12.2.7]
  8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள்.[பாகவத புராணம் 12.2.9]
  9. கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும் சிக்கிக் கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.10]
  10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில் மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும். [பாகவத புராணம் 12.2.11]
  11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். [பாகவத புராணம் 12.3.42]
  12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். [பாகவத புராணம் 12.3.41]
  13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். [பாகவத புராணம் 12.3.38]
  14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால்கொடுத்தபசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும். நன்றிகடன் மறக்கப்படும். [பாகவத புராணம் 12.3.36]
  15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழி பெயர்க்கப்படும். அரசியல்வாதிகள் மக்களை மெல்ல மெல்ல பல விதமாக கொடுமை செய்வார்கள். போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். [பாகவத புராணம் 12.3.32]

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -20

அயோத்தியில் தசரதர் தேரோட்டி சுமந்திரனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார். ஒரு வேளை மனதை மாற்றிக்கொண்டு ராமர் சுமந்தரனோடு திரும்பி வந்துவிடுவான் என்ற மனக்கோட்டையில் இருந்தார். அயோத்தி நகரை சுமந்திரன் நெருங்கினான். வழக்கமாக நகரத்தில் இருந்து வரும் சத்தம் ஒன்றும் இல்லாமல் பாழடைந்த ஊரைப்போல அமைதியாக இருந்தது அயோத்தி. ரதம் கோட்டை வாயிலை நெருங்கியதும் மக்கள் சுமந்திரனிடம் ராமர் எங்கே அவரை எங்கே விட்டீர்கள் என்று கேட்டுக்கொண்டே அவனை சுற்றிக்கொண்டார்கள். ராமர் கங்கை கரையில் ரதத்தை விட்டு இறங்கி என்னை அயோத்திக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். மூவரும் கங்கை கரையை கடந்து வனத்தில் தனியாக நடந்து சென்று விட்டார்கள் என்றான் சுமந்திரன். மக்கள் அனைவரும் கதறி அழ ஆரம்பித்தார்கள். பெண்களின் அழுகை சத்தம் ராஜவீதிகள் முழுவதும் சுமந்தரனுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. துக்கத்தினால் தனது முகத்தை மறைத்துக்கொண்டு அரண்மனைக்குள் நுழைந்தான் சுமந்திரன்.

தசரதரின் அறைக்குள் நுழைந்தான் சுமந்திரன். அங்கே குற்றுயிராக இருந்த தசரதரிடம் ராமர் சொல்லி அனுப்பிய செய்தியை சொல்லினான் சுமந்திரன். தசரதர் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தார். அப்போது கௌசலை தசரதரைப்பார்த்து கடுமையாக பேசினாள். உங்கள் சத்தியத்தை காப்பாற்ற வனத்திற்கு மகனை அனுப்பிவிட்டீர்கள். என்னுடைய துக்கத்தில் யார் பங்கெடுத்துக்கொள்வார்கள். உங்களுடைய துக்கத்தை பார்த்து நான் ஆறுதல் அடைந்து கொள்ளமுடியுமா? இங்கு கைகேயி இல்லை நீங்கள் பயப்பட வேண்டாம். தைரியமாக பேசுங்கள். உலகமே வியக்கும் வண்ணம் வீரனாக இருக்கும் என் மகனை காட்டில் விட்டு வந்த தங்கள் தேரோட்டி வந்து நிற்கின்றார். அவரிடம் ஒன்றும் பேசாமல் இருக்கின்றீர்கள். ராமர் எங்கே எப்படி இருக்கின்றார் என்று விசாரியுங்கள் என்று கோபமாக கூறினாள். புத்திர சோகத்தில் இருக்கும் தசரதரின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் கௌசலை கடுமையாக பேசினாள்.

சுமந்திரன் கௌசலையிடம் சமாதானமாக பேசினான். தேவி மனக்குழப்பத்தை விட்டு தைரியமாக இருங்கள். அயோத்தில் இருப்பது போலவே ராமர் வனத்திலும் ஆனந்தத்துடன் இருக்கிறார். லட்சுமணன் ராமருக்கு பணிவிடைகள் செய்து தன் தரும வாழ்க்கையின் பயனை அடைந்து வருகிறார். சீதை பிறந்தது முதல் காட்டில் இருந்ததைப்போலவே ராமருடன் சந்தோசத்துடன் இருக்கிறாள். உதய சந்திரனைப்போலவே சீதையின் முகத்தில் அழகு சிறிதும் குறையவில்லை. குழந்தையை போல் பயம் இல்லாமல் விளையாடிக்கொண்டிருக்கின்றாள். வனவாசத்தில் அவர்களை பார்ப்பது அரண்மணை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பவர்களை பார்ப்பது போலவே இருக்கிறது. நான் சொல்வது எல்லாம் உண்மை. உலகத்திற்கு ஒரு பாடமாக தருமத்தை வாழ்ந்து காண்பிக்கின்றார்கள். அவர்களின் தவம் உலகத்தில் பெரும் புகழுடன் என்றென்றும் நிற்கும் என்று கௌசலையை ஒருவாறு சமாதானப்படுத்தினான். கௌசலை சமாதானமடைந்தாலும் தசரதரை நிந்தித்துக்கொண்டே இருந்தாள்.

மகிழ்ச்சி

புத்தர் தனது சீடர்களை மக்களுக்கு தனது உபதேசங்களை ஊர் ஊராக சென்று சொல்லுமாறு அனுப்பினார். அதில் காஷ்யபருக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லவில்லை. காஷ்யபர் நேரடியாய் கெளதமரிடமே சென்று கேட்டார். நான் எந்த ஊருக்கு செல்ல வேண்டும். புத்தர் சிரித்தபடி சொன்னார். உனது விருப்பம் நீயே தேர்வு செய் என்றார். ஒரு ஊரின் பெயரை சொல்லி அங்கு தான் செல்ல விரும்புவதாக சொன்னார் காஷ்யபர். சீடனைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டவராய் கேட்டார் புத்தர். அங்கே வாழும் மனிதர்கள் மிகவும் முரடர்கள். கொஞ்சம் கூட பக்தியோ தியான உணர்வோ இல்லாதவர்கள் அந்த பொல்லாதவர்களிம் போக விரும்புகிறாயா என்று கேட்டார் புத்தர். ஆமாம் அங்கு செல்லவே விரும்புகின்றேன் என்றார் காஷ்யபர். உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். இந்த மூன்று கேள்விக்கும் சரியான பதில் சொல்லிவிட்டால் நீ போகலாம் என்றார் புத்தர்.

அந்த ஊருக்குள் சென்ற பிறகு உன்னை வரவேற்பதற்கு பதில் அவமானப்படுத்தினால் என்ன செய்வாய் என்று கேட்டார் புத்தர். மிகவும் மகிழ்ச்சியடைவேன் ஏனென்றால் அவர்கள் என்னை அடிக்கவில்லை என்று. அவமரியாதையோடு நிறுத்திக் கொண்டார்களே என்று இறைவனுக்கு நன்றி சொல்லி எனது பணியை ஆரம்பிப்பேன் என்றார்.

ஒருவேளை அவர்கள் உன்னை அடித்தால் என்ன செய்வாய் என்று கேட்டார் புத்தர். என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். வெறுமனே அடித்ததோடு நிறுத்திக் கொண்டார்களே என்று இறைவனுக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சியடைவேன் என்றார்.

ஒருவேளை உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய் என்று கேட்டார். மேலும் மகிழ்ச்சியடைவேன். மொத்தமாக இந்த வாழ்க்கையில் இருந்தே எனக்கு சுதந்திரம் தந்துவிட்டார்கள். இனி எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லையே என்றார் காஷியபர்.

நீ எங்கும் செல்ல முழுத்தகுதி பெற்றவன். நீ போய்வா காஷியபா என்று ஆசிர்வதித்து அனுப்பினார் புத்தர். எந்தச் சூழலையும் மகிழ்ச்சியாக அணுகக் கற்றுக் கொண்டால் அனைத்தையும் மகிழ்ச்சியாகவே காண முடியும்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -19

பரத்வாஜர் முனிவரின் ஆசிரமத்துக்குள் வந்த மூவரையும் ஆசிரமவாசிகள் தக்க மரியாதை செய்து வரவேற்றார்கள். ராமர் உலக நன்மைக்காக அரிய பல பெரிய செயல்களை செய்ய அவதரித்திருக்கிறார் என்று பரத்வாஜ முனிவர் அறிந்திருந்தார். வந்த மூவரையும் வரவேற்ற பரத்வாஜர் அங்கு வந்த காரணத்தை கேட்டுக்கொண்டார். அவர்களுக்கு சித்ரகூடம் என்னும் மலையைப் பற்றி சொன்னார். தெய்வீக இடத்திற்கு நிகரானது என்று அந்த இடத்தின் பெருமையை சொல்லி ஆத்ம சாதனங்கள் செய்ய ஏற்ற இடம் அங்கு செல்லுங்கள் என்றார். சித்ரகூடத்திற்கு செல்லும் வழி அடர்ந்த காட்டுப்பகுதி என்றும் அதனை கடப்பதற்கான வழிமுறைகளையும் செல்லும் வழியில் இருக்கும் சில சிறப்பு வாய்ந்த இடங்களைப்பற்றியும் கூறினார் பரத்வாஜர். அன்று அரவு அங்கு தங்கி விட்டு அதிகாலையில் பரத்வாஜர் ஆசிரமத்தில் இருந்து சித்ரகூடம் என்னும் இடத்திற்கு கிளம்பினார்கள்.

ராமர் லட்சுமணனிடம் நீ முன்னால் சென்று சீதை கேட்கும் பூக்கள் கனிவகைகளை பறித்துக்கொடுத்து முன்னால் செல். ஆயுதத்துடன் பாதுகாப்பாக பின்னால் நான் வருகிறேன் என்றார். லட்சுமணன் செடி கொடிகளை வெட்டி வழி எற்படுத்திக்கொண்டே முன்னால் சென்றான். லட்சுமணனுக்கு பின்னால் சீதையும் அவளுக்கு பாதுகாப்பாக ராமர் பின்னால் சென்றார். செல்லும் வழியில் இருக்கும் பறவைகள் விலங்குகள் செடி கொடிகளைப்பற்றியும் மலர்களைப்பற்றியும் கேள்விகள் கேட்ட வண்ணம் சென்று கொண்டிருந்தாள் சீதை. அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டே ராமர் அவள் பின்னால் வந்து கொண்டிருந்தார். மூவரும் உல்லாச பயணம் செல்வது போல மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது பரத்வாஜர் குறிப்பட்ட பெரிய ஆலமரம் ஒன்று வந்தது. அந்த ஆலமரத்தடியில் பரத்வாஜர் வழிகாட்டுதலின்படி சீதை பூஜைகள் செய்து பிரார்த்தனை செய்தாள். நடுவே ஆறு ஒன்று குறிக்கிட்டது. பரத்வாஜர் கூறியபடி மரக்கட்டைகளை வைத்து சிறிய ஓடம் செய்து அதில் பயணித்து சித்ரகூட மலை அடிவாரத்தை அடைந்தார்கள். .

சித்ரகூடத்தில் வண்ணப்பூக்களும் செடிகளும் பூத்துக்குலுங்கின. பூக்கள் மலர்ந்து உதிர்ந்து நடக்கும் இடமெல்லாம் பூக்களாக இருந்தது. அந்த இடத்தை பார்க்க பார்க்க அந்த இடத்தின் அழகு கூடிக்கொண்டே சென்றது. பழங்களும் கிழங்குகளும் நிறைய வளர்ந்திருந்தது. நீர் அருந்துவதற்கு மிகவும் சுவையுள்ளதாக இருந்தது. இந்த இடத்திலேயே குடில் அமைத்து தங்கிவிடலாம் என்றார் ராமர். சீதையும் லட்சுமணனும் அமோதித்தார்கள். லட்சுமணன் எல்லா வசதிகளுடன் காற்றுக்கு அசையாத பெரிய மழையை தாங்கும் வலிமை கொண்ட குடிலை கட்டி முடித்தான். ஐன்னலும் கதவுகளுடன் காற்றோட்டம் மிகுந்த வீடாக இருந்தது. சித்ரகூட மலைபிரதேசத்தில் நதிக்கரை ஓரத்தில் இந்திரன் சொர்க்கத்தில் வசிப்பது போல் மகிழ்ச்சியுடன் தங்கள் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தை ஆரம்பித்தார்கள்.

கர்மயோகம்

ஒரு காட்டில் சுதீவர் என்ற முனிவர் கடுந்தவம் செய்து வந்தார். அந்தப் பக்கம் வந்த இரு காட்டுவாசிகளில் ஒருவன் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மற்றொருவன் தவத்திலிருந்த முனிவரை எழுப்பி உதவி கேட்டான். தன் தவம் கலைந்த கோபத்தினால் முனிவர் காட்டுவாசியை சாம்பலாகப் போகும்படி சபித்தார். உடனே அந்தக் காட்டுவாசி எரிந்து சாம்பலாகிவிட்டான். மயக்கம் தெளிந்து எழுந்த மற்றொருவன் தனது தோழனின் நிலையைக் கண்டு கதறி அழுதான். இதற்குள் கோபம் தணிந்த முனிவரிடம் மற்றொரு ஆள் சாபத்தை நீக்குமாறு வேண்ட எனக்கு சாபம் கொடுக்கத் தெரியுமே தவிர சாபத்திலிருந்து மீட்கத் தெரியாது. நான் என் குருவிடம் அதைக் கற்று வருகிறேன். நீ அதுவரை உன் நண்பனின் சாம்பலை பத்திரமாகப் பாதுகாத்து வா என்று சொல்லிவிட்டு தன் குருவைத் தேடிச் சென்றார் சுதீவர். தன் குருவிடம் சென்று நடந்தவற்றை விளக்கி பரிகாரம் கேட்டார் சுதீவர். அதற்கு குரு மனிதனின் முதல் விரோதி அவனது கோபம்தான். நீ கொடுக்கும் சாபத்தினால் உன் தவவலிமை குறைந்து விடும். உன் தவவலிமை முழுதும் தியாகம் செய்தால் உன் சாபத்தைத் திரும்பப் பெறலாம் என்றார். அதற்கு சுதீவர் இணங்காமல் வேறு யோசனை சொல்லும்படிக் கேட்டார். சுதீவா விஷ்ணுபுரத்தில் மாதவன் என்ற புண்ணியாத்மா இருக்கிறான். அவன் இல்லறத்தில் இருப்பவன். அவனிடம் சென்று அவன் புண்ணியத்தில் ஒரு பகுதியை தானமாகப் பெற்றுக்கொள். அதைக் கொண்டு அந்தக் காட்டுவாசியை உயிர்ப்பிக்கலாம் என்றார்.

சுதீவர் மாதவனைத் தேடிச் சென்றார். செல்லும் வழியில் மிக அழகான ஒரு இளம் பெண் தென்பட்டாள். அவள் அழகிலே கிறங்கிப் போய் அவளையே உற்றுப் பார்க்க அதனால் கோபமடைந்த அந்தப் பெண் முனிவரான நீ என் போன்ற பெண்ணை இப்படி உற்றுப் பார்க்கலாமா உனக்கு வெட்கமாக இல்லையா என்றுகேட்டதும் சுதீவருக்குக் கடுங்கோபம் உண்டாயிற்று. பெண்ணே உன் அழகினால் தானே உனக்கு இவ்வளவு கர்வம் நீ அழகற்ற அவலட்சணமான பெண்ணாக மாறுவாய் என்று சபிக்க அந்தப் பெண்ணும் அவ்வாறே மாறிவிட்டாள். பிறகு சுதீவர் விஷ்ணுபுரத்தை அடைந்தார். வழியில் ஒரு இளைஞனிடம் மாதவனது வீட்டுக்கு வழி கேட்டார். அதற்கு அவன் மாதவனுடைய பெண் மிக அழகானவள். அதனால்தான் அவன் வீட்டுக்கு வழி கேட்கிறாயா உன்னைப் போன்ற முனிவருக்கு இது தேவையா என்று திமிராகக் கேட்டான். அவனை ஊமையாக வேண்டும் என்று சுதீவர் சபித்துவிட்டு மாதவனின் வீட்டைக் கண்டு பிடித்தார். சுதீவரை மாதவன் வரவேற்று அமரச் செய்தார். என் குரு தங்களை ஒரு புண்ணியவான் என்றார். நீங்கள் அப்படி என்ன தவம் செய்து என் குருவே புகழும்படி புண்ணியம் சம்பாதித்தீர்கள் என்று கேட்டார். காலையில் எழுந்து என் நித்திய கடன்களை முடித்து விட்டு வீட்டு வேலைகளிலும் வெளி வேலைகளிலும் பங்கேற்கிறேன். எல்லாருக்கும் என்னாலான உதவிகளைச் செய்கிறேன். கோபம், பொறாமை, ஆசை இவற்றை விட்டொழித்து மனதினாலும் வாக்கினாலும் உடலினாலும் பலருக்கும் நன்மை புரிகிறேன் என்றார் மாதவன்.

பூஜை புனஸ்காரம் தவம் இவை எதுவுமே செய்யாமல் இவனுக்கு எப்படி புண்ணியம் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் சுதீவர் நீங்கள் கடவுளை தியானம் செய்வது கிடையாதா என்றார். கடவுள் என்னிலும் இருக்கிறார். மற்றவர்களிடமும் இருக்கிறார். சகல உயிர்களிலும் இருக்கிறார். அவரைத் தனியாக பூஜையோ தியானமோ ஏன் செய்ய வேண்டும்? மற்றவர்களுக்கு உதவி செய்தாலே அது கடவுளுக்காக செய்யப்படும் பூஜை, தியானம், தவம் அனைத்தும் ஆகும் என்றார் மாதவன். சுதீவருக்கு மாதவன் தன்னை ஏளனம் செய்கிறார் எனத் தோன்றியது. நீங்கள் நான் செய்யும் தவமெல்லாம் வீண் வேலை என்று பொருட்படக் கூறுகின்றீர்களா என்று கோபத்துடன் சுதீவர் கேட்டார். சுவாமி நான் உங்களைப் பற்றியோ உங்கள் தவத்தைப் பற்றியோ குறை கூறவில்லை. நான் என்னுடைய கருத்தைக் கூறுகிறேன் என்றார் மாதவன் பணிவுடன். கோபத்துடன் குதித்து எழுந்தார் சுதீவர். உன்னைப் போன்ற நாஸ்திகனை மன்னிக்கவே கூடாது. இந்த நிமிடத்திலிருந்து நீ கண்பார்வை இழந்து நடக்க முடியாமல் படுக்கையில் வீழ்வாய் என்று சாபமிட்டார். மாதவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை. மீண்டும் மாதவன் பணிவுடன் சுவாமி சாந்தம் அடையுங்கள். உங்களைப் போன்ற மகான் கோபம் அடையும்படி நான் பேசியது தவறுதான் என்று மன்னிப்புக் கேட்டார். மாதவா என் சாபம் உனக்குப் பலிக்கவில்லை ஏன் என்று கேட்டார் சுதீவர்.

சுவாமி காட்டுவாசி அழகான இளம்பெண் வழியில் நீங்கள் கண்ட இளைஞன் ஆகியோருக்கு சாபம் கொடுத்ததினால் தங்கள் தவவலியை போய்விட்டது. எனக்கு மட்டுமில்லை இனி நீங்கள் யாருக்கு சாபம் கொடுத்தாலும் அது பலிக்காது. போகட்டும் நீங்கள் என்னிடம் பெற வந்த புண்ணியத்தின் ஒரு பகுதியை உங்களுக்கு இப்போது நான் அளிக்கிறேன். அந்தப் புண்ணியத்தினால் நீங்கள் சாபமிட்டவர்கள் எல்லாருக்கும் இந்தக் கணத்திலிருந்து சாபம் நீங்கிவிடும். உங்கள் தவவலிமையை இந்த வினாடியிலிருந்து நீங்கள் மீண்டும் பெற்று விட்டீர்கள். நீங்கள் விரும்பினால் இப்போது எனக்கு சாபம் கொடுக்கலாம். அது பலிக்கும் என்றார். தனது செய்கைகளினால் அவமானம் அடைந்த சுதீவர் மாதவனுக்கு நன்றி கூறிவிட்டு மவுனமாக தன் குருவைத் தேடிச் சென்றார். வரும் வழியில் தான் சாபமிட்டவர்கள் மறுபடியும் தன் நிலைக்கு மாறி இருப்பதை அவர் கண்டார். தனது குருவிடம் நடந்தவற்றைக் கூறி அதற்கு விளக்கம் கேட்டார். தவத்தினால் பல சக்திகளை அடையலாம். கர்ம யோகத்தில் தன் கடமையைச் சிறப்பாக செய்பவனும் அனைவரையும் இறைவனாக பாவித்து உதவி செய்வதையே லட்சியமாகக் கொண்ட ஒரு மனிதன் ஒரு தவயோகியை விட அதிகப் புண்ணியம் செய்தவன் ஆகிறான் என்றார். குருவே இப்போது மாதவன் தான் செய்த புண்ணியத்தை தானம் செய்து விட்டான். ஆகையால் அவனுடைய சக்தியும் குறைந்து விடுமா என்று சுதீவர் சந்தேகம் கேட்டார். மற்றவர்களுக்காகத் தன் புண்ணியத்தையே தானம் செய்தால் அதுவே பெரிய புண்ணியம். மாதவனின் சக்தி குறையவில்லை. முன்னைவிட இப்போது அதிகமாகி விட்டது என்றார் குரு. குருவே கோபத்தை குறைத்து நான் மீண்டும் காட்டுக்குத் தவம் புரியச் செல்கிறேன் என்னை ஆசிர்வதியுங்கள் என்று கூறி விடைபெற்றார் சுதீவர்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -18

லட்சுமணன் குகனிடம் மூன்று உலகத்தையும் யுத்தம் செய்து தனதாக்கிக்கொள்ளும் வல்லமை பெற்ற என் அண்ணன் புல் தரையில் படுத்து ஓய்வெடுக்கிறார். ஜனகர் மகாராஜாவின் புதல்வி சீதை சுகத்தை மட்டுமே அனுபவித்தவர். இப்போது தரையில் படுத்திருக்கிறாள். ராமனை வனத்திற்கு அனுப்பிய பின்பு அயோத்தி நகரம் எப்படி பிழைக்கப்போகிறதோ தெரியவில்லை. அரண்மனை முழுவதும் பெண்களின் அழுகுரலே கேட்டுக்கொண்டிருக்கும். ராமரை பிரிந்த துக்கத்தில் என் அன்னையர்கள் சுமத்ரையும் கௌசலையும் எப்படி உயிரோடு இருக்கின்றார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. வனத்திற்கு போ என்று தந்தை சொல்லிவிட்டார். அனால் அவர் ராமனை பிரிந்த துக்கத்தில் இனி உயிர் பிழைத்திருப்பது கடினமே. பதினான்கு வருடம் வனவாசம் இப்போது தான் ஆரம்பித்திருக்கின்றது. வனவாசம் முடிந்து நாங்கள் அரண்மனைக்கு திரும்பி செல்லும் போது யார் இருப்பார்கள் யார் இருக்க மாட்டார்கள் என்றே தெரியாது. இவ்வளவு துக்கத்தில் இருக்கும் எனக்கு தூக்கம் வரவில்லை என்றான். லட்சுமணன் கூறியதை கேட்ட குகனும் கண்ணீர் விட்டான். இருவரும் தூங்காமல் ராமருக்கும் சீதைக்கும் காவலாக இருந்து இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

அதிகாலையில் எழுந்த ராமர் குகனிடம் கங்கை நதிக்கரையை கடக்க ஒரு ஓடத்தை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டார். குகனும் தன் பணியாட்களிடம் சொல்லி ஓடம் ஒன்றை ஏற்பாடு செய்தார். மூவரும் கங்கை நதிக்கரையை கடக்க ஓடத்தில் ஏறினார்கள். குகன் ஓடத்தை செலுத்தினான். சீதை கங்கையை பிரார்த்திக்க ஆரம்பித்தாள். அனைனையே எங்கள் பதினான்கு வருட விரதம் முடிந்ததும் உன்னை கடந்து அயோத்திக்கு திரும்பி செல்ல அருள்புரிவாயாக என்று வேண்டிக்கொண்டாள். கங்கையின் மறுகரையை குகன் கடந்தான். குகனுக்கு தர வேண்டிய கூலிக்காக சீதை தன் மோதிரத்தைக் கொடுத்தாள். இதைக் கண்ட குகன் சுவாமி நாம் இருவரும் ஒரு தொழில் செய்பவர்கள். ஆற்றைக் கடக்க வைக்கும் ஓடக்காரன் நான். பிறவிக் கடலைக் கடக்க உதவும் ஓடக்காரர் நீங்கள். ஒரே தொழில் செய்யும் ஒருவருக்கொருவர் கூலி வாங்குவது தர்மம் ஆகாது என மோதிரத்தை வாங்க மறுத்தான். அவனது அன்பைக் கண்ட ராமர் உன்னையும் சேர்த்து தசரதருக்கு ஐந்து பிள்ளைகள் ஆகி விட்டோம் என்று உளமார வாழ்த்தினார்.

மூவரும் யார் துணையும் இன்றி முதன் முறையாக காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தார்கள். ராமர் லட்சுமணனிடம் நீ தான் இனி எங்களுக்கு காவல் படை என்றார். லட்சுமணனும் நீங்கள் முன்னால் செல்லுங்கள். உங்களை தொடர்ந்து அண்ணி சீதை வரட்டும் அவர்களை தொடர்ந்து நான் வருகிறேன். வனவாசத்தில் உங்களுக்கு கடினங்கள் ஏதும் வராமல் முடிந்தவரை பார்த்துக்கொள்கிறேன் என்றான். லட்சுமணா இக்காட்டின் அருகில் பரத்துவாஜர் முனிவரின் ஆசிரமம் உள்ளது. அவரிடம் சென்று அவரின் ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கொண்டு பதினான்கு வருட வனவாசத்தை எங்கு கழிப்பது என்று அவருடைய யோசனையை கேட்டு அதன் படி நடந்து கொள்ளலாம் என்றார். லட்சுமணனும் ஆமோதிக்க அங்கிருந்து மூவரும் கிளம்பி பரத்துவாஜர் முனிவரின் ஆசிரமத்துக்கு சென்று சேர்ந்தார்கள்.

சிவன் சொத்து குல நாசம் இதன் அர்த்தம்

சிவன் சொத்து என்பது சுக்கிலம் ஆகும். சதா காலமும் சிவன் சொத்தான சுக்கிலத்தை பூமியை நோக்கி கீழே விழச் செய்யாமல் சேமித்து யோக பயிற்சியின் மூலம் குண்டலினியை மேலே எழச்செய்து சகஸ்ரதளத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். பிரம்மச்சரியத்தால் கட்டி உச்சந்தலையை நோக்கி சுக்கிலத்தை உயர்த்தி உள் நாக்கில் அமிர்தத் துளிகளாய் விழ வைக்க வேண்டும். அதன்பின்னர் சாதகனுக்கு அஷ்டமா சித்திகள் கிடைக்கும். இவ்வாறு சுக்கிலத்தை ஒருவன் மேல் நோக்கி எழுப்பினால் அவனால் இல்லறத்தில் ஈடுபட்டு குழந்தை பாக்கியம் பெற முடியாது. அவனது வம்சம் அவனுடனேயே அழிந்துவிடும். இதனால்தான் சிவன் சொத்து குல நாசம் என்று சொன்னார்கள்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -17

ரதத்தில் அன்று முழுவதும் பயணப்பட்டு கங்கா நதிக்கரையை அடைந்தார்கள். அயோத்திக்கு திரும்பி போகும்படி தேரோட்டி சுமந்திரனுக்கு ராமர் கட்டளையிட்டார். சுமந்திரன் ராமரை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். சுமந்திரனுக்கு ஆறுதல் சொன்ன ராமர் நாங்கள் மூவரும் மகிழ்ச்சியுடனேயே வனம் செல்கின்றோம் என்பதை அரண்மனையில் இருக்கும் அனைவரிடமும் தெரிவித்துவிடு என்றும் கைகேயியினால் நடைபெற்ற அந்த சம்பவங்களால் மனவருத்தம் ஏதும் அடையவில்லை என்று கைகேயியிடம் சொல்லிவிடு என்றும் சொல்லி ராமர் சுமந்திரனுக்கு விடை கொடுத்தார். மிகுந்த துயரத்துடன் காலி ரதத்தை ஒட்டிக்கொண்டு சுமந்திரன் திரும்பிச்சென்றான்

கங்கா நதிக்கரையின் அழகை அனுபவித்துக்கொண்டே மூவரும் நடந்தார்கள். கங்கை நதியில் ஓரிடத்தை கண்ட ராமர் இங்கு மிகவும் அழகாக இருக்கிறது இன்று இரவு நாம் இங்கை தங்கலாம் என்று சொன்னார். மூவரும் ஓர் மரத்தடியில் அமர்ந்தார்கள். அப்போது அந்த பிரதேசத்தின் தலைவனாக இருந்த குகன் ராமரின் மேல் அபார அன்பு கொண்டவன். ராமர் லட்சுமணன் வந்திருப்பதை அறிந்ததும் தன் பரிவாரங்களுடன் அவர்களை தரிசிக்க வந்தான். தூரத்தில் குகன் வருவதை அறிந்த ராமர் தானே குகனிடம் சென்று குகனை கட்டி அனைத்தார். குகனுடைய உபசாரங்கள் அபாரமாக இருந்தது. பலவிதமான உணவு பண்டங்களை குகனின் ஆட்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள். ராமரின் தவகோலத்தை கண்ட குகன் அயோத்தி உங்களுக்கு எப்படியோ அதேபோல் இந்த நகரமும் உங்களுடையது ஆகும். நீங்கள் இங்கு வசதியாக இருந்து கொள்ளலாம். பதினான்கு வருடங்களையும் தாங்கள் இங்கே இருந்து எங்களுடனேயே கழித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றேன் என்றான் குகன்.

ராமர் குகனிடம் பதினான்கு வருடங்கள் தவவாழ்க்கை முறையை வாழுவதாக எண்ணி இருக்கின்றேன். தவவாழ்க்கை விரதத்தில் கனிகளை தவிர்த்து வேறு எதையும் உண்ணக்கூடாது. உன் அன்புக்கு கட்டுப்பட்டு கனிகளை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். இங்கே இருந்து உங்கள் உபசாரங்களை பதினான்கு வருடங்களும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால் அது நான் கொண்ட சத்தியத்தில் இருந்து விலகுவது போலாகும். ஆகவே தன்னால் இங்கு இருக்க முடியாது நாளை இங்கிருந்து கிளம்பிவிடுவோம் என்றார்.

ராமருக்கும் சீதைக்கும் மரத்தடியில் புல்களை பரப்பி அன்று இரவில் தூங்க ஏற்பாடு செய்தான் லட்சுமணன். குகன் லட்சுமணிடம் நீங்கள் தூங்க தனியாக இடம் ஏற்பாடு செய்திருக்கின்றேன். இந்த இடத்தில் என்னை மீறி யாரும் வரமாட்டார்கள். எந்த பயமும் இல்லை. நீங்கள் நிம்மதியாக தூங்குங்கள் நான் காவலுக்கு இருக்கின்றேன் என்றான்.

மனம்

புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். ஒரு சீடன் குழப்பத்துடனே இருந்தான். சீடன் குழப்பத்தில் இருப்பதை உணர்ந்த புத்தர் செல்லும் வழியில் ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார். சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார். சீடன் செல்லும் முன்பே ஒரு மாட்டு வண்டி அந்த நீர் வழியாகச் சென்றது. சீடன் சென்று பார்த்த போது நீர் கலங்கியிருந்தது. இதை எப்படி புத்தருக்குக் கொடுப்பது என்று அவன் திரும்பி வந்து புத்தரிடம் விவரம் சொன்னான். சிறிது நேரம் கழித்து அந்த நீரை கொண்டுவா என்றார். அவன் சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தான். நீர் சிறிது தெளிந்திருந்தாலும் இன்னும் கலங்கலாகவே இருந்தது. அவன் திரும்பி வந்து புத்தரிடம் சொன்னான். சிறிது நேரம் சென்றது. புத்தர் மீண்டும் அவனைப் போய் வரச் சொன்னார்.

இம்முறை சென்று பார்த்தபோது நீர் தெளிவடைந்திருந்தது. எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தான். புத்தர் அந்தச் சீடனைப் பார்த்துச் சொன்னார் அந்த நீர் தெளிவதற்காக நீ ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருந்தாய். கலங்கிய நீரை அப்படியே விட்டு விட்டாய். நேரம் சென்றதும் நீர் தானே தெளிந்து விட்டது. உன் மனமும் இது போன்றதுதான். குழப்பம் ஏற்படும் போது மனதை அப்படியே விட்டுவிட்டு அமைதியாக இரு. சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளியும்.

மன அமைதியைப் பெறக் கடினமாக பயிற்சிகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அமைதியாக இருந்தாலே போதும் மனம் தானே குழப்பத்தில் இருந்து விடுபடும் – புத்தர்.