வேணுகோபால்

பத்து முதல் பதினான்காம் ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் இன்றைய கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய ஹொய்சாளர்களின் ஆட்சியின் போது பல கோயில்கள் கட்டப்பட்டது. இதில் ஒன்று மைசூர் அருகே உள்ள சோமநாதபுராவில் உள்ள 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கேசவா கோயில் உள்ளது. இக்கோயிலில் புல்லாங்குழல் வாசிக்கும் வேணுகோபாலனின் சிற்பம் உள்ளது.

பத்து கை வினாயகர்

பத்துக் கைகள் கொண்ட நடனம் ஆடும் விநாயகரின் சிதிலமடைந்த இந்த சிற்பம் மத்தியபிரதேசம் கஜுராஹோ அருங்காட்சியகத்தில் உள்ளது. 10 – 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

வாயு பகவான் வெவ்வேறு அவதாரங்கள்

ஒரே சிற்பத்தில் ஹனுமன் பீமன் மத்வாச்சாரியார். வெவ்வேறு யுகங்களில் வாயுபகவானின் வெவ்வேறான அவதாரங்கள். அனுமன் ஸ்ரீராமரிடமும் பீமன் கிருஷ்ணரிடமும் மத்வாச்சாரியார் வேதவியாசரிடமும் பக்தி கொண்டவர்களாக திகழ்ந்தனர். இடம் உடுப்பி கர்நாடக மாநிலம்.

அஜைக்க ஏகபாதர்

அஜ என்றால் பிறப்பில்லாதவர் என்றும் ஏகபாதர் என்றால் ஒரு காலுடையவர் என்றும் பொருள். ஒரு கால்களையுடைய இவர் பிறப்பில்லாத நிலையை அடைந்தார். இடம் பிகானேர் அருங்காட்சியகம் ராஜஸ்தான்.

இலகுலீசர்

சிவநெறியின் உட்பிரிவுகளுள் ஒன்றான பாசுபத சைவத்தை தோற்றுவித்தவர். குஜராத் மாநிலம் காயாரோஹனம் எனும் இடத்தில் முதன் முதலில் தோற்றுவித்தவர். இவரின் சமயத் தத்துவங்கள் பாசுபத சைவம் என்று பெயர் பெற்றன. இவர் சிவபெருமானின் 28 ஆவது அவதாரமாகக் கருதப்படுபவர். இவரது சீடர்கள் கௌசிகர் கார்கி கௌதமன் ஆகியோரால் இந்தியா முழுவதும் பரப்பப்பட்ட பாசுபத சைவம் தமிழகத்தில் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வளரத் தொடங்கியது. இந்த சைவத்தை பின்பற்றுபவர்கள் விபூதியை உடல் முழுவதும் பூசிக்கொள்வர். சாம்பலில் படுத்து உறங்கி சாம்பலில் நடனமாடி மாலைகளை அணிந்து கொள்வார்கள். லகுலீச பாசுபத சைவம் சார்ந்த கோயில்களில்தான் இவர்கள் தங்குவார்கள். சிற்பத்தில் லகுலிஷா நிர்வாண யோகியாக உள்ளார். 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிற்பம் உஜ்ஜைன் மத்தியப் பிரதேசத்தில் உள்ள திரிவேணி அருங்காட்சியகத்தில் உள்ளது.

கருடாழ்வார்

பாம்புகளுடன் கூடிய தலை மற்றும் கைக்கவசத்துடன் அஞ்சலி முத்திரையில் 11ஆம் நூற்றாண்டு கருடாழ்வாரின் சிதிலமடைந்த சிற்பம். இடம் இந்திய அருங்காட்சியகம். மேற்குவங்காளம் கொல்கத்தா.

சதுர்புஜ பைரவர்

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள இந்து பௌத்த சிங்கசாரி கோவிலில் இருந்து சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சதுர்புஜ பைரவரின் கற்சிற்பம். நான்கு கரங்களில் சூலம் உடுக்கை குத்துவாள் மற்றும் உடைந்த கபாலம் ஏந்தியுள்ளார். முண்டமாலையுடன் கபாலத்தின் மீது தன் வாகனமான நாயுடன் கம்பீரமாக நிற்கின்றார்.