யம சண்டிகேசுவரர்

தமிழகத்தில் சில சிவாலயங்களில் சண்டிகேசுவரராக யமதர்மர் உள்ளார். திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் திருவாரூர் போன்ற சிவாலயங்களில் யமதர்மர் சண்டிகேசுவரராக உள்ளார். இவருக்கு யமசண்டிகேசுவரர் என்று பெயர். அனைத்து சிவத்தலங்களிலும் ஒரு சண்டிகேஸ்வரர் மட்டுமே சிவ தியானத்தில் ஆழ்ந்திருப்பார். திருவாரூரில் மட்டும் இரண்டு சண்டிகேஸ்வர்கள் உள்ளார்கள். முதலாமவர் ஆதி சண்டிகேஸ்வரர். இவர் தியானத்தில் இருப்பார். மற்றொருவர் யம சண்டிகேஸ்வரர். திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்கள் என்பதால் யமனுக்கு இவ்வூரில் வேலை இல்லை. இவ்வூரில் பிறந்தவர்களின் காலக் கணக்கை சண்டிகேஸ்வரரே கவனிக்கிறார். ஆகவே இங்கு யமதர்மர் சண்டிகேஸ்வரர் ஆனார் என்கிறது தல புராணம்.

நந்தி

நான்கு சிங்கங்கள் மீது வீற்றிருக்கும் பீடத்தில் அமர்ந்திருக்கும் நந்தி பகவான். இடம் ஐந்நூற்றீசுவரர் பெரியநாயகியம்மன் திருக்கோவில் மாத்தூர் காரைக்குடி.

உயிரோட்டமுள்ள நந்தி

சிவசைலம் பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் கோவில் திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நந்தி சிலையின் முதுகில் உளியால் ஏற்பட்ட ஒரு தழும்புள்ளது.

ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சாபம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு விமோசனமாக சிவசைலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு எதிராக ஒரு நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படி இந்திரன் தேவர்களின் சிற்பியான மயனை அழைத்து நந்தி விக்கிரகம் ஒன்றை நிர்மாணிக்க கூறினான். சிற்ப சாத்திரங்களை முறைப்படி கற்ற மயனும் சிவசைலம் வந்து இந்திரன் கூறியபடி சிற்ப சாத்திர விதிமுறைப்படி ஓர் அழகிய நந்தியை உருவாக்கினான். சிற்ப சாத்திரங்களின் அனைத்து விதிகளின் படியும் முழுமையாக விளங்கிய அந்த கல் நந்தி இறுதியில் உயிர் பெற்று அங்கிருந்து செல்ல எழ முயற்சித்தது. மயன் தன் கையில் இருந்த உளியால் நந்தியின் முதுகில் அழுத்த நந்தி அவ்விடத்திலேயே நிலையாக தங்கியது. இதனால் நந்தியின் வலது கால் சற்று உயர்த்தப்பட்ட நிலையிலும் மற்ற மூன்று கால்கள் வளைந்திருக்கிறது. உளியினால் மயன் அழுத்திய தழும்பை இன்றும் இந்த நந்தியின் மீது பார்க்க முடியும். இந்த நந்தியின் உடம்பில் இருக்கும் அணிகலன்களும் அது தன் வாலை பின்னங்கால் வழியாக வளைத்து வைத்திருப்பதும் அதன் அழகிற்கு மேலும் மெருகு ஊட்டுகின்றன.

சிவனை வழிபடும் கிளி

திருவாருரில் உள்ள திருவீழிமிழலை சிவத்தலத்தில் இன்றும் கிளி சுவாமியை வழிபட்டு செல்வதற்காக அக்காலத்திலேயே தனியாக கட்டுமானத்தில் ஒரு ஓட்டை வைத்திருக்கிறார்கள். இப்பொதும் இந்த ஓட்டை வழியாக கிளி வந்து வழிபட்டு செல்கிறது.

இராமானுஜரின் குருவான பெரிய நம்பிகள்

ஒரு சமயம் இராமானுஜரின் குருவான பெரிய நம்பிகள் பிராமணர் அல்லாத ஒருவருக்கு ஈமக் கடன்களைச் செய்தார். அதனால் அவ்வூரில் இருந்த பிராமணர்களும் அவரது உறவினர்களும் அவரை வெறுத்து ஒதுக்கினர். இதைக் கேட்ட இராமானுஜர் குரு காரணம் இல்லாமல் எதனையும் செய்ய மாட்டார். ஆகவே அந்த காரணத்தை தெரிந்து கொள்ள அவர் இல்லம் சென்றார். இராமானுஜர் வந்த காரணத்தை அறிந்து கொண்ட குரு பெரிய நம்பிகள் அதற்கான காரணத்தை கூறினார்.

பிராமணர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட முறைப்படி பிராமணன் ஒருவன் பிராமணன் அல்லாதவனுக்கு ஈமக் கடன்கள் செய்வது என்பது பொருத்தமற்ற செயல் தான். இதனை பிராமணர்கள் வகுத்த விதிகள் ஏற்றுக் கொண்டாலும் அதனை அற நூல்கள் ஏற்றுக் கொள்ளாது. அறம் என்பது என்ன என்று தெரியுமா? சான்றோர்கள் உலகியலில் எவ்வாறு தர்மத்திற்குக்கு ஏற்ப நடந்து கொண்டார்களோ அதுவேதான் அறம் எனப்படும். பறவை குலத்தில் பிறந்த ஜடாயுவுக்கு இராமன் இறுதிச் சடங்கினைச் செய்தான். சத்ரிய குலத்தில் பிறந்த தர்மர் நான்காம் வருணத்தில் பிறந்த விதுரரைப் போற்றி வழிபட்டார். உண்மை பக்தனுக்கு சாதி ஏது? மதம் ஏது? என்னால் ஈமக் கடன்கள் செய்து தீயில் இடப்பட்டவன் என்னை விட பக்தியில் பல மடங்கு சிறந்தவன். அவனுக்கு இறுதிக் கடன் செய்து நான் பெரிய பேற்றினை பெற்றுள்ளேன் என்றார். பெரிய நம்பிகளின் பதிலைக் கேட்டு இராமானுஜர் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்று அவரை விழுந்து வணங்கினார்.

அகத்தியர்

அகத்தியரின் விரல்களை தாண்டி வளர்ந்த நகங்களைக் கூட தத்ரூபமாக செதுக்கியுள்ளார்கள் சிற்பிகள். 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிற்பம் லக்கிசாராய் மாவட்டம் பீகார் மாநிலத்தில் உள்ளது.

அஜைக்க ஏகபாதர்

அஜ என்றால் பிறப்பில்லாதவர் என்றும் ஏகபாதர் என்றால் ஒரு காலுடையவர் என்றும் பொருள். ஒரு கால்களையுடைய இவர் பிறப்பில்லாத நிலையை அடைந்தார். இடம் பிகானேர் அருங்காட்சியகம் ராஜஸ்தான்.

இலகுலீசர்

சிவநெறியின் உட்பிரிவுகளுள் ஒன்றான பாசுபத சைவத்தை தோற்றுவித்தவர். குஜராத் மாநிலம் காயாரோஹனம் எனும் இடத்தில் முதன் முதலில் தோற்றுவித்தவர். இவரின் சமயத் தத்துவங்கள் பாசுபத சைவம் என்று பெயர் பெற்றன. இவர் சிவபெருமானின் 28 ஆவது அவதாரமாகக் கருதப்படுபவர். இவரது சீடர்கள் கௌசிகர் கார்கி கௌதமன் ஆகியோரால் இந்தியா முழுவதும் பரப்பப்பட்ட பாசுபத சைவம் தமிழகத்தில் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வளரத் தொடங்கியது. இந்த சைவத்தை பின்பற்றுபவர்கள் விபூதியை உடல் முழுவதும் பூசிக்கொள்வர். சாம்பலில் படுத்து உறங்கி சாம்பலில் நடனமாடி மாலைகளை அணிந்து கொள்வார்கள். லகுலீச பாசுபத சைவம் சார்ந்த கோயில்களில்தான் இவர்கள் தங்குவார்கள். சிற்பத்தில் லகுலிஷா நிர்வாண யோகியாக உள்ளார். 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிற்பம் உஜ்ஜைன் மத்தியப் பிரதேசத்தில் உள்ள திரிவேணி அருங்காட்சியகத்தில் உள்ளது.

திருநாளைப்போவார்

திருநாளைப்போவார் என அழைக்கப்படும் நந்தனார். இவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்து ஆதனூரில் பிறந்தவர். ஞானஒளி வீசும் தெய்வீக தோற்றத்துடன் பொன்னொளி வீச தில்லை நடராஜரின் திருவடிகளில் இரண்டரக் கலந்தார்.