தாய் தெய்வச்சிலை

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடிக்கு அருகிலிருக்கிறது தாமோட்டூர் கிராமம். இங்குள்ள பசுமை படர்ந்த பயிர் நிலங்களுக்கு நடுவில் கம்பீராக வீற்றிருக்கிறது தாய்தெய்வச்சிலை. கோயில் இல்லை. கோபுரமும் இல்லை. சிலை வழிபாடு நடக்கிறது. 10 அடி உயரம் இருபுறமும் கைகள் போன்ற அமைப்பு வட்டமான தலைப் பகுதியுடன் தாய்தெய்வத்தின் தோற்றம் இருக்கிறது. பெண்களே வளமைக் குரியவர்கள். அதனாலேயே தாய்தெய்வம் என்று சங்க காலத்தில் பெண்களை முன்னிலைப் படுத்தியிருக்கிறார்கள். மூன்றாயிரம் ஆண்டுகள் தொன்மையான இந்தச் சிலை சிந்துசமவெளி நாகரிகத்துக்கு இணையானதொரு பண்டைய கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையோடு ஒத்துப் போவதாக சொல்கிறார்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள். உள்ளூர் மக்கள் இதை கூத்தாண்டவர் என்ற பெயரில் வழிபடுகிறார்கள்.

நெல்லிக்காய் பசவண்ணன் நந்தி

நந்தி மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கோயில். யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்த காரணத்தால் இம்மலைக்கு நந்தி மலை எனப் பெயர் வந்தது. ஆறு கல் தூண்களில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் மையத்தில் ஒரு நந்தி அமர்ந்த நிலையில் உள்ளது. நந்தி சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. நந்தி 10 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்டது. கோவில் சோழர் பாணியில் உள்ளது. கோயிலின் முன்புறம் நெல்லி மரம் உள்ளது. ஆகவே இக்கோயில் நெல்லிக்காய் பசவண்ணா என்று அழைக்கப்படுகிறது. 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக இருக்கலாம் என்று கருத்தப்பட்டுகிறது. சோழர் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டுள்ளது. இடம் நந்தி மலை.

தும்புரு

காசியபர் முனிவருக்கு மூத்த மகனாக மனித உடலும் குதிரை முகமுமாக அவதரித்தவர் தும்புரு. நாரதர் இவருடைய குரு. நாரதரைப் போலவே இசையில் வல்லவர். நாரதரின் இசைக்கு நாரதகானம் என்றும் தும்புருவின் இசைக்கு தேவகானம் என்றும் பெயர். இவர் கந்தர்வர்கள் கின்னரர்கள் கிம்புருடர்கள் ஆகியோரின் தலைவர். இவர்களில் சிலர் பறவை உடலும் மனித முகமும் கொண்டவர்கள்.

ஒரு முறை நாரதர் தும்புருவின் கையில் வைத்து இருந்த பொன்னும் மணியும் பதித்த வீணையைக் கண்டு விவரம் கேட்க பூலோகத்தில் ப்ராசீனபர்ஹி என்ற பேரரசனைப் புகழ்ந்து பாடியதால் கிடைத்தது என்கிறார். நாரதர் கோபத்துடன் இறைவனைத் தவிர நரஸ்துதி கூடாது எனத் தெரியாதா வென்று கேட்டார். தும்புரு பூலோகத்தில் போய் வீழவேண்டுமென்று சாபமும் இட்டார். திருப்பதி திருமலையில் உள்ள கோண தீர்த்தம் என்னும் பகுதியில் தும்புரு வீழ்ந்தார். இதுவும் இறைவனின் திருவுளமே என்று நாராயணனைத் துதித்து இறுதியில் பரமபதம் அடைந்தார். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் அனைவரும் பரமபதம் அடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்து வரமாகப் பெற்றார். அன்று முதல் கோண தீர்த்தம் தும்புருதீர்த்தம் ஆனது. தும்புருவின் கையில் உள்ள வீணையின் பெயர் களாவதி (மகதி). இடம்: சக்கரபாணி கோவில் கும்பகோணம்.

தவளையை காக்கும் பாம்பு

அத்வைதம் தத்துவத்தை பரப்பிய ஆதிசங்கரர் கிபி 788 இல் கேரளாவில் உள்ள காலடியில் பிறந்தார். அவர் அத்வைத சிந்தனையை பரப்ப மடம் அமைப்பதற்கு ஏற்ற இடத்தைத் தேடி சிருங்கேரிக்கு சென்ற போது துங்கபத்ரா நதிக்கரையில் அவரது கவனத்தை ஈர்த்தது ஒரு பாம்பு. சுட்டெரிக்கும் நண்பகல் வெயிலில் பிரசவ வலியில் இருந்த தவளையை காக்க தவளையை வெயில் தாக்காதவாறு நாகப்பாம்பு ஒன்று குடைப்பிடித்த படி படமெடுப்பதை கண்டார். இயற்கையாக பாம்பு தவளையை உணவாக உட்கொள்ளும். ஆனால் இங்கு இயற்கையின் விதிகளை மீறி பகைமை உணர்வை விட்ட பாம்பு தன் உணவான தவளை பிரசவ வலியில் இருப்பதை கண்டு அதன் மீது அன்பை செலுத்தியது. எதிரிகளுக்கு இடையே அன்பைத் தூண்டும் திறன் கொண்ட அந்த இடத்தின் புனிதத்தால் கவரப்பட்ட அவர் அந்த இடத்தில் தனது முதல் மடத்தை நிறுவினார்.
இடம்: கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதியில் அமைந்துள்ளது கோவில் நகரமான சிருங்கேரி. இங்கு இந்த சிற்பம் உள்ளது.

கின்னரர்

கின்னரர் என்பவர்கள் இந்து தொன்ம இயலின்படி இடுப்பிற்கு கீழ் பறவை உருவமும் இடுப்பிற்கு மேல் மனித உருவமும் கொண்ட ஆண் மற்றும் பெண் பாலினத்தவர்கள். இந்து மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களில் கின்னரர்களின் உருவச் சிலைகளும் புடைப்புச் சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படுகிறது. இடம் போரோபுதூர் கோவில். மத்திய ஜாவா மாகாணம் இந்தோனேசியா.

கண்டபேருண்டா

வலிமை கொண்ட இரு தலைகள் கொண்ட பறவையான கண்டபேருண்டா மல்லிகார்ஜூனா கோவிலில் புடைப்புச் சிற்பமாக உள்ளது. 1399 முதல் 1947 வரை மைசூர் சாம்ராஜ்யத்தை ஆண்ட உடையார்களின் அரச முத்திரையாக இந்த வலிமைமிக்க பறவை இருந்தது. தற்போது கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக உள்ளது.