மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -9

விதுரர் திருதராஷ்டிரனிடம் பேசிக் கொண்டிருப்பதை கண்ட துரியோதனன் விதுரரிடம் சென்று நீங்கள் எப்போதும் பாண்டவர்களுக்கு உரியவர் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களுக்கு உணவளிக்கும் என்னிடத்தில் உங்களுக்கு நன்றி இல்லை. எப்பொழுதும் என்னை இகழ்ந்து பேசுவதே உங்களுக்குரிய தொழிலாக உள்ளது. கௌரவர்களாகிய எங்களை நீங்கள் வெறுக்கின்றீர்கள். ஆனாலும் நாங்கள் நன்றாக இருக்கின்றோம். உங்களுடைய ஆதரவு பாண்டவர்களுக்கு இருந்தும் சிறிது நேரத்தில் பாண்டவர்கள் ஒன்றும் இல்லாத ஆண்டிகளாகப் போவார்கள். எதிர்காலத்தில் எங்களுக்கு வரும் அழிவை இப்பொழுதே நீங்கள் குறி சொல்கிறீர்கள். ஆனால் நீங்களும் பாண்டவர்கள் உட்பட அனைவரும் அழிவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இதற்கிடையில் இந்த மண்ணுலக வாழ்வை நன்கு பயன்படுத்துவது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும். தயவு செய்து எங்கள் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று துரியோதனன் சூதாட்ட மேடைக்கு சென்றான்.

கபடம் நிறைந்த சகுனியால் பாண்டவர்களுடைய சொத்து முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டது. தோல்வி அடைந்த யுதிஷ்டிரனை கேலி செய்யும் பாங்கில் இன்னும் உன்னிடத்தில் பணயம் வைக்க ஏதேனும் உண்டா என்று சகுனி கேட்டான். அதன் பிறகு யுதிஷ்டிரன் ஆசையை மேலும் தூண்ட துரியோதனன் தாராளமான சலுகை ஒன்றை காட்டினான். இத்தனை நேரம் நீ பணயம் வைத்து இழந்த பொருள்கள் அனைத்தையும் நான் பணயமாக வைக்கிறேன் இதற்கு இணையாக நீ எதையும் வைக்க வேண்டியதில்லை. இப்பொழுது பகடையில் வெற்றி பெற்றால் இவையாவும் உனக்குச் சொந்தம் ஆகும் என்றான். மீண்டும் அவர்கள் விளையாடினார்கள். யுதிஷ்டிரன் மீண்டும் தோற்றுப் போனான்.

கௌரவர்கள் கொள்ளையடிக்க விரும்பிய பொருள்கள் அனைத்தும் சூதாட்டத்தின் மூலம் பெற்றுவிட்டார்கள். துரியோதனன் கூறிய ஆசை வார்த்தையால் மதியிழந்த யுதிஷ்டிரன் தன்னிடத்தில் இன்னும் ஏதோ பணயம் வைக்க பொருள் இருப்பதாக அவனுடைய உள்ளத்தில் தோன்றியது. தம்பிமார்கள் நால்வரும் அவனுக்குச் சொந்தம். ஆகவே சூதாட்ட வெறியினால் தூண்டப் பெற்று தம்பிமார்களையும் பணயம் வைத்தான். அதி விரைவில் அந்த நால்வரையும் சூதாட்டத்தில் இழந்தான். சூதாட்ட வெறியில் சுய அறிவை இழந்த யுதிஷ்டிரன் பிறகு தன்னையே பணயம் வைத்து அதிலும் தோற்றுப் போய் தன்னையும் கௌரவர்களிடம் இழந்தான். மானுடர்களை பணயம் வைப்பது யாராலும் கையாளப்படாத ஒரு நூதனமான முறையாக இருந்தது. கௌரவர்களே இதை எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது யுதிஷ்டிரனை பார்த்து சகுனி திரௌபதியை ஏன் பணயம் வைக்கலாகாது என்று பரிகாசம் பண்ணினான். மூடத்தனமாக திரௌபதியையும் அவன் பணயம் வைத்து இழந்தான். இப்போது பாண்டவர்கள் அறவே கொள்ளை அடிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது சுதந்திரத்தையும் இழந்து அவர்கள் கௌரவர்களுக்கு அடிமைகள் ஆகி விட்டார்கள்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -8

யுதிஷ்டிரன் கூறிய அனைத்தையும் கேட்ட சகுனி உன்னிடத்தில் நாடு மற்றும் செல்வத்தில் பற்று அதிகரித்து உள்ளது. க்ஷத்திரியனுக்கு உண்டான தைரியம் இல்லாமல் துரியோதனின் அறைகூவலுக்கு அஞ்சி ஓடுகின்றாய் என்றான். அதைக்கேட்ட யுதிஷ்டிரனுக்கு கோபம் உருவெடுத்தது. பொருளில் நீ வைத்திருக்கின்ற பற்றுதல் என்னிடத்தில் இல்லை. உன்னுடைய அறைகூவுதலுக்கு நான் இணங்குகின்றேன். யாரோடு நான் விளையாட வேண்டும் எதை பணயமாக வைக்க வேண்டும் என்று சகுனியிடம் கேட்டான். அதற்கு துரியோதனன் பணயமாக நீ எதை வைக்கின்றாயோ அதற்கு சரிசமமானதை நானும் பணயமாக வைக்கின்றேன். எனக்காக என் மாமா சகுனி பகடையை ஆடுவார் என்றான். பொருளை பணயம் வைப்பது ஒருவன் அவனுடைய பிரதிநிதியாக மற்றொருவன் விளையாடுவது பகடை விளையாட்டின் சட்டதிட்டம் ஆகாது. இந்த சட்டத்திற்கு மாறாக நீ விளையாட தீர்மானித்து இருக்கின்றாய். ஆனாலும் உன்னுடைய விருப்பப்படி விளையாட்டை துவங்குவோம் என்று யுதிஷ்டிரன் சூதாட அமர்ந்தான். யுதிஷ்டிரன் இவ்வாறு கூறியது கௌரவர்களுக்கு பிரதகூலமாக அமைந்தது.

சூதாடும் மண்டபத்திற்குள் பார்வையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தார்கள். பீஷ்மர், விதுரர். கிருபாச்சாரியார், துரோணாச்சாரியார், போன்ற பெரு மக்களும் அங்கு இருந்தனர். திருதராஷ்டிரனும் அங்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு இந்த விளையாட்டில் ஊக்கம் மிக இருந்தது. பகடை விளையாட்டு துவங்கியது. யுதிஷ்டிரன் தன்னிடம் இருந்த நகைகள் ரத்தினங்கள் தங்கம் ஆகியவைகளை பணயமாக வைத்து பகடையை உருட்டினான். ஆனால் பகடை அவனுக்கு பலிதமாகவில்லை. அடுத்தபடியாக சகுனி பகடையை உருட்டினான். பகடையை உருட்ட உருட்ட இதோ வெற்றி இதோ வெற்றி என்று அவன் கூறிக்கொண்டே இருந்தான். அதற்குப் பிறகு வைத்த பணத்தை எல்லாம் யுதிஷ்டிரன் இழந்து கொண்டே வந்தான். ஒவ்வொரு தடவையும் சகுனி வென்று கொண்டே இருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் இருந்த பெரிய செல்வங்கள் எல்லாம் துண்டு துண்டாக கௌரவர்கள் வசம் கவர்ந்து எடுக்கப்பட்டன. இந்நிலைமையை பார்த்து யுதிஷ்டிரனுக்கு விவேகம் வந்திருக்க வேண்டும். ஆனால் சூதாட்ட வெறியில் விவேகத்தை இழக்கலானான். மந்திர சக்தி வாய்ந்த மாந்திரீகனாக மாறி சகுனி செயல்பட்டான். யுதிஷ்டிரன் பணயம் வைக்கும் பொம்மையாக மயங்கிப் போனான்.

இந்த அக்கிரமத்தை மேலும் பார்த்துக்கொண்டு சகித்துக் கொள்ள முடியாமல் விதுரர் திருதராஷ்டிர மன்னனை அணுகி பாண்டவர்கள் உங்களுடைய தம்பியின் புதல்வர்கள். துரியோதனன் அவர்களை சூதாடும் பாங்கில் கொள்ளையடிக்க நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள். பேராசையின் வேகத்தால் நீங்களும் உங்களுடைய மகனும் அறிவை இழந்து விட்டீர்கள். இந்த சூதாட்டத்தின் விளைவாக குரு வம்சம் அழிந்து பட்டுப்போகும். நீங்கள் மரணமடைவதற்கு முன்பே உங்களுடைய மக்களெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி உங்களுக்கு கேட்கும் தௌர்பாக்கிய நிலை உங்களுக்கு உண்டாகும் என்றார். ஆனால் இந்த எச்சரிக்கையை பேராசை பிடித்த திருதராஷ்டிர மன்னன் கண்டு கொள்ளவில்லை.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -7

பாஞ்சால நாட்டில் பாண்டவர்கள் இருக்கும் பொழுது அவர்களை அழைத்து வர விதுரருக்கு திருதராஷ்டிரர் கட்டளையிட்ட போது மகிழ்ச்சியுடன் சென்ற விதுரர் இப்பொழுது திருதராஷ்டிரன் ஆணைப்படி இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அஸ்தினாபுரத்திற்கு பாண்டவர்களை அழைத்து வர தயங்கினார். ஆயினும் அரசனுடைய ஆணைக்கு உட்பட்டு விதுரர் அங்கு சென்றார். பாண்டவர்கள் கருத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கும் விதுரருடைய வருகை யுதிஷ்டிரனுக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் அவருடைய முகத்தில் அமைந்திருந்த கவலையை யுதிஷ்டிரன் கவனித்து விட்டான். அவரின் கவலைக்கு காரணம் என்ன என்று கேட்ட பொழுது அதற்கு அஸ்தினாபுரம் அருகே புதிய சபை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் பகடை விளையாட பாண்டவர்களை திருதராஷ்டிரன் அழைக்கிறார் என்று விதுரர் விஷயத்தை விளக்கி கூறினார்.

யுதிஷ்டிரனுக்கு இந்த சூழ்ச்சியின் உட்கருத்து உடனே விளங்கியது. பல தீமைகளுக்கு காரணம் சூதாட்டம் என்பது அவனுக்குத் தெரியும் அவன் மேலும் விசாரித்த போது சகுனியும் இன்னும் சில திறமை வாய்ந்தவர்கள் அந்த விளையாட்டில் கலந்து கொள்வார்கள் என்பது தெரிந்தது. பகடை விளையாட்டில் யுதிஷ்டிரன் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் இருந்தான். விளையாட்டில் ஈடுபடும்படி மன்னராகிய பெரியப்பாவிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. அவருடைய உத்தரவுக்கு அடிபணிவது தன் கடமை என யுதிஷ்டிரன் எண்ணினான். மேலும் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள அவன் கடமைப் பட்டிருந்தான். க்ஷத்திரர்களை விளையாட்டுப் போட்டிக்கு கூப்பிட்டால் அதற்கு மறுப்பு கூறுவது முறை ஆகாது. அழைப்பை ஏற்றுக் கொள்வதே முறை. இவ்வாறு வடிவெடுத்து வந்த சூழ்நிலைகள் யுதிஷ்டிரனுக்கு கேடுகாலமாக உருவெடுக்க ஆரம்பித்தது. அமைதியாக இதனை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழி எதுவும் அவனுக்கு தெரியவில்லை. தெய்வச் செயலாக வருவது வரட்டும் என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய உற்றார் உறவினருடன் அவன் அஸ்தினாபுரம் புறப்பட்டுச் சென்றான்

தன் தம்பியாகிய பாண்டுவின் புதல்வர்களை திருதராஷ்டிர மன்னன் பேரன்புடன் வரவேற்றான். வசதிகள் நிறைந்த மண்டபங்களில் ஆங்காங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். உள்ளன்போடும் ஊக்கத்தோடும் கௌரவர்கள் அவர்களோடு நடந்து கொண்டனர். அவர்களுக்கிடையில் இருந்த மன வேறுபாடுகள் எல்லாம் அறவே அகற்றப்பட்டது போன்று தென்பட்டது. அத்தகைய அமைப்பே பாண்டவர்களை அழிப்பதற்கு முதல் சூழ்ச்சியாக இருந்தது.

பாண்டவர்களை படுகுழியில் ஆழ்த்தும் துர்தினமும் வந்தது. புதிதாக அமைக்கப்பட்டிருந்த சபாமண்டபத்தை பார்க்க அழைத்துச் சென்று அதன் அமைப்பு அவர்களுக்கு காட்டப்பட்டது. அதன் பிறகு பொழுது போக்காக பகடை விளையாடலாம் என்று சகுனி சொன்னான். யுதிஷ்டிரனுக்கு அந்த விளையாட்டின் மீது சிறிது நாட்டம் இருந்தது. எனினும் அதை குறித்து அவன் இப்பகடை விளையாட்டு ஏமாற்றுவதற்கென்றே அமைந்துள்ளது. பிறரை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சூதாட்டம் மனிதனுடைய பகுத்தறிவை விரட்டுகிறது. அது மதுபானத்திற்கு நிகரான மயக்கத்தை உண்டு பண்ணவல்லது என்று யுதிஷ்டிரன் சகுனியிடம் சொன்னான்

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -6

அஸ்தினாபுரத்திற்கு கௌரவர்கள் திரும்பிப் போய்க் கொண்டிருந்த பொழுது பாண்டவர்கள் படைத்திருந்த சௌபாக்கியங்களைப் பார்த்து தனக்கு வந்துள்ள பொறாமை குறித்து துரியோதனன் கர்ணனிடமும் சகுனியிடமும் விவாதித்தான். பாண்டவர்களின் நிறைந்த செல்வத்தையும் பரந்த சாம்ராஜ்யத்தையும் தங்களது சுய முயற்சியினால் தானே பெற்றுள்ளார்கள் என்று சகுனி துரியோதனனுக்கு சமாதானம் சொன்னான். துரியோதனன் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பாண்டவர்கள் அடைந்த முன்னேற்றத்தையும் செல்வப் பெருக்கையும் தன்னால் பார்த்து சகித்துக்கொள்ள முடியவில்லை. எதிரிகளின் ஆக்கத்தை பார்த்துக் கொண்டு இருப்பதை விட மாய்ந்து போவதே மேல் என்று வெளிப்படையாக துரியோதனன் சகுனியிடம் சொன்னான். இப்பொழுது சகுனியின் துர்புத்தி வெளியாயிற்று. பாண்டவர்களை வெல்ல நம்மால் இயலாது. ஆக சூதாடுவது ஒன்றே சரியான உபாயமாக இருக்கும். யுதிஷ்டிரனுக்கு சூதாட்டத்தில் பயிற்சி போதாது. ஆயினும் அவன் அதை ஓரளவு சூதாட விரும்புகின்றான். சூதாட்டத்தில் எனக்கு வேண்டியவாறு திறமை உள்ளது. ஆகையால் சூதாடி பாண்டவர்களை ஏமாற்றி நாடு நகரம் அவர்களது செல்வம் அனைத்தையும் வாங்கிவிடலாம் என்று சகுனி துரியோதனனிடம் கூறினான். துரியோதனனும் இதனை ஆமோதித்தான்.

அஸ்தினாபுரம் திரும்பிய பிறகு துரியோதனன் விரைந்து தனது தந்தையிடம் சென்றான். பாண்டவர்களின் செல்வம் தம்முடைய செல்வம் மற்றும் இரு தரப்பினரிடமும் படைத்திருந்த ராஜ்யங்களில் உள்ள பாகுபாடுகளை தந்தையிடம் அவன் விளக்கிக் கூறினான். நம்மை விட பலமடங்கு இந்திரப்பிரஸ்தம் மேலோங்கி மிளிர்ந்து இருக்கின்றது. அவர்களை போரில் வெற்றி பெற்று இந்திரப்பிரஸ்தத்தை நம்மால் பெற இயலாது. ஆகவே இந்த இந்திரப்பிரஸ்தத்தை சூதாடி அதிகரித்துக் கொள்ள அனுமதி தாருங்கள் என்று தந்தையின் அனுமதியை துரியோதனன் வேண்டி நின்றான்.

திருதராஷ்டிரன் இதற்கு முதலில் சம்மதிக்கவில்லை. துரியோதனன் கூறிய அனைத்திற்கும் தடை போட்டார். ஆனால் துரியோதனின் பிடிவாதத்திற்கும் சினத்திற்கும் சூழ்ச்சிக்கும் இறுதியில் திருதராஷ்டிரன் சம்மதித்தார். சூதாடுவதற்க்காக மாளிகை ஒன்றை விரைவில் கட்டுவதற்கு ஏற்பாடு ஆயிற்று. அத்திட்டம் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டது. திருதராஷ்டிரன் பாண்டவர்களை அழைத்து வரும்படி விதுரருக்கு உத்தரவிட்டார். புதிதாக கட்டியுள்ள மண்டபத்தில் உற்றார் உறவினர்களோடு அளவளாவி விளையாடுவது அந்த அழைப்பின் நோக்கம் என்றான். ஆனால் இந்த ஏற்பாடு விதுரருக்கு பிடிக்கவில்லை. பாண்டவர்களும் கௌரவர்களும் அவரவர்களுடைய ராஜ்யத்தில் மகிழ்வுடன் வாழ்ந்து இருக்கின்றனர். பகடை விளையாட பாண்டவர்களை கூப்பிடுவlன் வாயிலாக பகையும் வேற்றுமையும் வளரும். இந்த விளையாட்டு வினையாக முடியும் என்று விதுரர் எச்சரிக்கை செய்தார். ஆனால் திருதராஷ்டிரன் அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை. அரசகுமாரர்கள் ஓய்வு நேரங்களில் பொழுதுபோக்காக பகடை விளையாடுவது பழக்கம் என்றும் புதிதாக கட்டப்பட்டு இருக்கின்ற மண்டபத்தை பார்க்க பாண்டவர்களை அழைத்து வர வேண்டும் என்று விதுரருக்கு திருதராஷ்டிரன் உத்தரவிட்டான்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -5

கிருஷ்ணன் சிசுபாலனுடன் சண்டையிட போகிறேன் என்று சொல்லி சிசுபாலனை நோக்கி செல்வதை பார்த்து அரசர்கள் அனைவரும் ஸ்தம்பித்து போனார்கள். யுதிஷ்டிரன் துயரத்தில் இருந்தான். பீஷ்மர் புன்னகையுடன் இருந்தார். கிருஷ்ணன் சிசுபாலன் மீது கொண்டிருப்பது கோபம் அல்ல. அனுக்கிரக மூர்த்தியாக நின்று கொண்டு சக்கராயுதத்தை சிசுபாலன் மீது கிருஷ்ணன் ஏவினான். சக்கராயுதம் சூரியப் பிரகாசத்தோடு வெட்டவெளியில் சுழன்று சென்று சிசுபாலனுடைய தலையை அவன் உடம்பில் இருந்து விடுவித்தது. சக்கராயுதம் பிறகு கிருஷ்ணன் கையில் வந்து அமர்ந்தது. சிசுபாலனுடைய மேனியிலிருந்து ஒளி ஒன்று கிளம்பி கிருஷ்ணனின் பாதங்களில் வந்து ஒதுங்கியது. இந்த சிசுபாலன் வேறு யாருமில்லை வைகுண்டத்தில் துவார பாலகர்களாக இருந்த ஜயன் விஜயன் ஆகிய இருவருள் இவன் முன்னவன் ஆவான். மகாவிஷ்ணுவின் ஆணைக்கு உட்பட்டு அவருக்கு எதிராக எடுத்த மூன்றாவது பிறவியை முடித்துக் கொண்டு அவன் கிருஷ்ணனிடம் தஞ்சம் அடைந்தான்.

ராஜசூய யாக்ஞம் மங்களகரமாக முடிந்தது என்று கூற முடியாது. வேந்தர்களில் பலர் அதிருப்தி அடைந்திருந்தனர். பொருந்தாத சில சகுனங்கள் தென்பட்டன. உலகுக்குக் கேடு காலம் வந்து கொண்டிருக்கின்றது என்று ரிஷிகள் கூறினர். இத்தகைய சூழ்நிலையில் யுதிஷ்டிரன் சக்கரவர்த்திக்கு எல்லாம் சக்கரவர்த்தி என்னும் பட்டத்தைப் பெற்றான்.

துரியோதனன் சகுனி கர்ணன் ஆகிய கௌரவர்கள் அஸ்தினாபுரத்திற்கு உடனே திரும்பிப் போகவில்லை. மயனால் அமைக்கப்பட்டு இருந்த மாளிகையை நன்கு ஆராய்ந்து பார்க்க அவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் தங்கியிருந்தார்கள். பாண்டவர்களும் அவர்களை அன்புடன் உபசரித்து வந்தார்கள். விருந்தினர்களாக தங்கியிருந்த அவர்களை மகிழ்விக்க பல பல இடங்களை காட்டினார்கள். இந்த மாளிகையினுள் வியப்புக்குரிய வேலைப்பாடுகள் பல இருந்தது. அவர்கள் அவைகளை கூர்ந்து கவனித்துப் பார்த்தார்கள். நீண்ட நடைபாதை ஒன்றின் வாயிலாக நடந்து கொண்டிருந்த பொழுது துரியோதனன் தடாலென்று தண்ணீருக்குள் விழுந்து முழுவதும் நனைந்து போனான். ஏனென்றால் தண்ணீரின் மேற்பரப்பில் முற்றிலும் நிலம் போன்று தென்பட்டது. வேறு ஒரு இடத்தில் துரியோதனன் வாயிலின் மேல் படியின் மீது தலையை மூட்டிக் கொண்டான். அதற்குக் காரணம் வாயில்படி இருந்தும் அது கண்ணுக்குப் புலனாகவில்லை. இதைப்போன்ற வியப்புக்குரிய அமைப்புகள் பல அந்த மாளிகையினுள் அமைந்திருந்தது. கௌரவர்கள் ஏமாற்றம் அடைந்த பொழுதெல்லாம் நகைப்புக்கு ஆளானார்கள். அவர்கள் இதனை விளையாட்டாக பொருட்படுத்தவில்லை. வெறுப்புடனும் பொறாமையுடனும் பார்த்தார்கள். ஆனால் அதை துரியோதனன் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. விளையாட்டாக எடுத்துக் கொண்டது போன்று பாசாங்கு பண்ணினான்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -4

ராஜசூய யாக்ஞம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் முதல் மரியாதைக்கு ஏற்றவர் யார் என்னும் வினா எழுந்தது. பாட்டனாராகிய பீஷ்மரும் பாண்டவர்களும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். வந்திருந்தவர்களில் கிருஷ்ணனை தலை சிறந்தவன். கிருஷ்ணனுக்கே முதல் மரியாதை செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய தெளிவான முடிவு. அதன்படியே சகோதரர்கள் மிக இறைவனாகிய சகாதேவன் கிருஷ்ணனுக்கு பாத பூஜை செய்து பிறகு புஷ்பங்களை கொண்டு வழிபாடு செலுத்தினான்.

ராஜசூய யாக்ஞம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் சிசுபாலன் என்பவன் எழுந்து நின்றான். கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை செய்வதைப் பார்த்து உரத்த குரலில் கடகடவென்று சிரித்தான். அடுத்தபடியாக பீஷ்மரையும் யுதிஷ்டிரனையும் பொருந்தாத பொன் மொழிகள் பேசி அவமானப்படுத்தினான். அதன் பிறகு கிருஷ்ணனையும் ஆடு மேய்ப்பவன் என்று கூறி அவமானப்படுத்தினான். தெய்வ பொலிவுடன் இருந்த இடம் திடீரென்று கீழ்நிலைக்கு மாறியது குறித்து யுதிஷ்டிரன் திகைத்துப் போனான். பீமன் கோபாவேசத்துடன் குமுரிக் கொண்டிருந்தான் சகாதேவனுடைய கண்கள் செக்கசெவேல் என்று நிறம் மாறின. அவரவர் பாங்குக்கு ஏற்ப அவையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் வெவ்வேறு விதங்களில் மனம் குழப்பினர். ஆனால் பீஷ்மர் கிருஷ்ணர் இருவர் மட்டும் எக்காரணத்தை முன்னிட்டும் குழப்பம் இல்லாத சாந்தமூர்த்திகளாக அமர்ந்திருந்தனர்.

சிசுபாலன் பேசுவதை நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தான். அனைவரையும் அவமானப்படுத்தி கொண்டே இருந்தான். பொருந்தாத பொருந்தாத சொற்களைக் கூறி கிருஷ்ணனையும் பாண்டவர்களையும் அவமானப் படுத்திக் கொண்டே இருந்தான். அடுத்தபடியாக ஆட்சேபனை தெரிவிக்கும் பொருட்டு சபையை விட்டு வெளியேறினான். அவனுடைய செயலுக்கு உடந்தையாய் இருந்த வேறு சில வேந்தர்களும் அவனோடு வெளியேறினர். வெளியே நின்று கொண்டு சிசுபாலன் கிருஷ்ணனுக்கு சிறிதாளவாவது ஆண்மையை இருந்தால் அவன் என்னோடு சண்டைக்கு வரட்டும் என்று அறைகூவினான்.

கிருஷ்ணர் சபையில் எழுந்து நின்று அனைவரையும் பார்த்து இந்த ராஜசூய யாக்ஞம் இனிதே நிறைவேற வேண்டும் என்று நான் பெருமுயற்சி எடுத்துக் கொண்டேன். ஆனால் இந்த சிசுபாலன் என்னை அவமானபடுத்துகின்றான். அவன் என் மீது சொல்லும் நூறு அவமானங்களை சகித்துக் கொண்டு இருப்பேன் என்று அவனுடைய அன்னைக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன். இப்பொழுது அவமானத்தின் எண்ணிக்கை நூறுக்கும் மேல் சென்று விட்டது. மேலும் அவனோடு நான் சண்டையிட வேண்டும் என்று அழைக்கின்றான். அவனோடு சண்டையிடப் போகிறேன் என்று கிருஷ்ணன் சிசுபாலனின் நோக்கி சென்றார்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -3

கிருஷ்ணன் அர்ஜுனன் பீமன் மூவரும் ஜராசந்தனைப் பற்றி கூறியவற்றைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன் ஜராசந்தனை கொல்வதற்கு அனுமதி வழங்கினான். இப்பொழுது கிருஷ்ணனும் பீமனும் அர்ஜுனனும் வழிப்போக்கர்கள் போன்று மாறுவேடம் அணிந்து ஜராசந்தன் இருக்கும் மகத நாட்டிற்கு சென்றனர். நள்ளிரவில் அரண்மனைக்கு சென்று ஜராசந்தனை துவந்த யுத்தத்திற்கு வரும்படி அழைத்தனர்.

மூவரையும் பார்த்த ஜராசந்தன் பீமனே மூவருள் என்னுடன் சண்டையிட தகுதியானவன் என்று கூறி பீமனோடு சண்டையிட துணிந்தான். இருவருக்குள் சண்டை நெடுநேரம் நிகழ்ந்தது. பிறகு பீமன் ஜராசந்தனை இரண்டாக கிழித்து தரையில் போட்டான். ஆனால் இரண்டாக கிழிந்த ஜராசந்தனின் இரண்டு பகுதிகளும் மீண்டும் ஒட்டிக்கொண்டது. ஜராசந்தன் உயிர் பெற்று எழுந்து புதிதாக சண்டையிட துவங்கினான். இருவருக்குள் சண்டை நடந்து கொண்டிருந்த போது கிருஷ்ணன் வைக்கோல் ஒன்றை எடுத்து அதை இரண்டாக கிழித்து அதனை மாற்றி தரையில் போட்டான். அதை பார்த்த பீமனுக்கு விஷயம் விளங்கியது. அவன் ஜராசந்தனை மீண்டும் இரண்டாக கிழித்து உடலை மாற்றி போட்டான். இப்போது கிளிந்த இரண்டு பகுதிகளும் ஒட்டவில்லை அத்தோடு ஜராசந்தன் அழிந்தான்.

சிறையிலிருந்த அனைத்து ராஜகுமாரர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஜராசந்தனின் மகன் மகத நாட்டிற்கு அரசனாக்கப்பட்டான். சண்டையில் வெற்றி வீரர்களாக மூவரும் இந்திரப்பிரஸ்தத்திற்கு திரும்பினார். யுதிஷ்டிரன் அவர்களின் பராக்கிரமத்தை பெரிதும் பாராட்டினான். மகத நாட்டில் தாங்கள் புரிந்த வீரச் செயலை துவாரகா வாசிகளுக்கு எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் துவாரகாவிற்கு புறப்பட்டான்.

ராஜசூய யாக்ஞம் சிறப்பாக நடைபெற பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் ஆகிய யுதிஷ்டிரனின் நான்கு சகோதரர்களும் நான்கு திசைகளில் சென்று ஆங்காங்கு இருந்த அரசர்களின் நட்பையும் செல்வத்தை பெற்றார்கள். எடுத்த காரியம் நன்கு நிறைவேற்றப் பெற்று நால்வரும் தங்கள் தலைமை பட்டணத்திற்கு வெற்றியுடன் திரும்பினார்கள். அரசர்கள் அனைவரும் ராஜசூய யாக்ஞத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அஸ்தினாபுரத்தில் இருந்த முதியோர்களும் தாயாதிகளும் அந்த யாக்ஞத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தம் சொர்கம் போன்று இருந்தது. ராஜசூய யாக்ஞம் அற்புதமாக நிறைவேறியது. பாண்டவர்களிடம் மேன்மையும் மகிமையும் மிளிர்ந்தது. இதன் காரணமாக கௌரவர்களிடம் வெறுப்பும் பொறாமையும் உருவெடுத்தது. ராஜசூய யாக்ஞம் இனிது நிறைவேறியது. வந்திருந்த விருந்தினர்களுக்கு வந்தனையும் வழிபாடும் செலுத்துவது கடைசி நிகழ்ச்சி ஆகும்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -2

இந்திரப்பிரஸ்தத்தில் புதிதாக கட்டப்பட்ட சபா மண்டபத்தை பார்வையிட்ட பிரமுகர்களில் மிக முக்கியமானவர் நாரத மகரிஷி. அவர் மூவுலகையும் சென்று பார்த்தவர். விண்ணுலகம் ஆகட்டும் மண்ணுலகம் ஆகட்டும் எங்குமே இதற்கு ஈடான சபா மண்டபத்தை தான் பார்த்ததில்லை என்று அவர் யுதிஷ்டிரனிடம் கூறினார். இத்தகைய மண்டபம் ஒன்றை அமைத்த பிறகு அதில் ராஜசூய யாக்ஞம் நடத்துவது தான் பொருத்தம் என்று வேந்தனாகிய யுதிஷ்டிரனிடம் அவர் தெரிவித்தார். ராஜசூய யாக்ஞம் நடத்துவதின் வாயிலாக யுதிஷ்டிரன் அரசர்களுக்கெல்லாம் அரசன் ஆவான். பல பிரமுகர்களும் நாரதரின் கருத்தை ஆமோதித்தனர். ஆனால் சாந்தமூர்த்தியாகிய யுதிஷ்டிரன் அனைவரும் சொல்லும் இந்த கருத்தில் ஊக்கம் செலுத்தவில்லை. இதைப்பற்றி தான் கிருஷ்ணனோடு கலந்து பேசுவதாகவும் கிருஷ்ணன் கருத்துப் படியே நடந்து கொள்ளப்போவதாகவும் யுதிஷ்டிரன் அனைவரிடமும் தெரிவித்தார்.

கிருஷ்ணன் இந்திரப்பிரஸ்தத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி கிருஷ்ணனும் விரைவில் இந்திரப்பிரஸ்தம் வந்து சேர்ந்தான். பாண்டவர்களுக்கு எப்பொழுதும் உதவியாக இருந்த கிருஷ்ணனிடம் ராஜசூய யாக்ஞம் நடத்துவதைப் பற்றிய முக்கிய பிரமுகர்கள் கூறிய கருத்து சொல்லப்பட்டது. அனைத்தையும் கேட்ட கிருஷ்ணன் பாராளும் அனைத்து அரசர்களும் ஒத்துக் கொண்டால்தான் ராஜசூய யாக்ஞம் சாத்தியமாகும். மகத நாட்டு அரசனாகிய ஜராசந்தன் நமக்கு எதிரி. உன்னை சக்கரவர்த்தியாக அவன் அங்கீகரிக்க மாட்டான். விருஷ்ணியர்களுக்கு தொல்லை கொடுப்பதே அவனுடைய பொழுது போக்கு. அவனுடைய தொல்லைகளால் விருஷ்ணியர்கள் மதுராவை காலி செய்து விட்டு துவாரகையில் குடியேறி இருக்கிறார்கள். எண்பத்து ஆறு அரசர்களை அவன் சிறை பிடித்து வைத்திருக்கின்றான். இன்னும் 14 பேரை சிறை பிடிப்பது அவனது திட்டம். பிறகு அரசர்கள் நூறு பேரை பலி கொடுப்பது அவனுடைய திட்டம். அத்தகைய கொடூர அரசனை கொன்றால் மட்டுதே ராஜசூய யாக்ஞம் சாத்தியமாகும் என்று கிருஷ்ணன் தெரிவித்தான்.

அரசர்களுக்கெல்லாம் அரசனாக சக்கரவர்த்தியாக இருந்து ஏகாதிபத்தியம் செலுத்துவதற்கு தனக்கு சிறிதேனும் எண்ணமில்லை என்று யுதிஷ்டிரன் தன்னுடைய எண்ணத்தை கிருஷ்ணனிடம் தெரிவித்தான். தான் அமைதியாக நாடாளுவதும் மற்றவர்களை அமைதியாக நாடாள விட்டு விடுவதும் என்னுடைய குறிக்கோள் என்று கூறினார். அதற்கு பீமன் இந்த சோம்பலை நான் வெறுக்கின்றேன். கொடியவர்களை வென்றாக வேண்டும். என்னுடைய உடல் வலிமையும் கிருஷ்ணனுடைய அறிவோம் அர்ஜுனனுடைய திறமையும் ஒன்று கூடினால் ஜராசந்தனை வெல்ல முடியும் என்றான். பீமனுடைய கருத்தை அர்ஜுனனும் ஆமோதித்தான். திறமையை முறையாக கையாள விட்டால் அது வீணாக போகிறது. வல்லவன் ஒருவன் ஏனோதானோவென்று வாழ்ந்திருப்பது முறையாகாது. ஜராசந்தனுடைய ஆக்கிரமிப்பை அடக்குவது நம்முடைய கடமையாகும் என்று அர்ஜுனன் தெரிவித்தான். இறுதியாக கிருஷ்ணன் ஜராசந்தன் கொல்லப்பட வேண்டியவன். அவன் கொல்லப்பட்டால் தவறு ஏதும் செய்யாத 86 சிற்றரசர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப் படுவார்கள் என்று கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் கூறினார்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -1

அர்ஜுனனுடைய உதவியால் மயன் என்னும் அரக்கன் உயிர் பிழைத்தான். அதற்கு தக்கதொரு கைமாறு செய்ய மயன் விரும்பினான். தங்களுக்கு ஏதேனும் செய்ய விரும்புகிறேன் என்று அர்ஜுனனுடைய அனுமதியை வேண்டி நின்றான். தங்களுக்கு என்ன தேவை கேளுங்கள் என்றான். அதற்கு அர்ஜுனன் பிறருக்கு செய்யும் பணிவிடைக்கு கைமாறாக எதையும் ஏற்றுக் கொள்ளுதல் இல்லை என்பது நான் கடைபிடிக்கும் கோட்பாடு ஆகும். ஆகையால் உன்னிடமிருந்து எம்மால் எதையும் ஏற்க இயலாது என்று கூறிவிட்டான். ஆனால் மயன் விட்டபாடில்லை மிகவும் வற்பறுத்தினான். அதற்கு அர்ஜுனன் கிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்துதல் பொருட்டு மயனே கிருஷ்ணனிடம் அனுப்பி வைத்தான். கிருஷ்ணன் மயனை யுதிஷ்டிரனிடம் அனுப்பி உன்னுடைய ஆசையை யுதிஷ்டிரன் வழியாக தீர்த்துக்கொள்ளுமாறு அனுப்பி வைத்தார். கடைசியாக மயன் யுதிஷ்டிரன் முன்பு வந்து தான் ஒரு கைதேர்ந்த சிற்பி என்றும் என்னுடைய சிற்பத் திறனுக்கு அறிகுறியாக இந்த இந்திரப் பிரஸ்தத்தில் சபா மண்டபம் ஒன்று அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டினான். வேண்டியவர்க்கு வேண்டியதை வழங்கும் யுதிஷ்டிரன் சபா மண்டபம் அமைக்க அனுமதி கொடுத்தான். அந்த மண்டபம் எப்படி இருக்க வேண்டும். அதன் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்பது அனைத்தும் மயன் விருப்பப்படியே நடக்கட்டும் என்று யுதிஷ்டிரன் கூறிவிட்டான். நல்ல நாள் அன்று சபா மண்டபம் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.

கிருஷ்ணன் இந்திரப் பிரஸ்தத்திற்கு வந்து நெடு நாள் ஆயிற்று. எனவே தன்னுடைய மைத்துனர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு துவாரகை கிளம்ப ஆயத்தமானார். பாண்டவர்களுக்கு அவனை விட்டு பிரிய மனம் இல்லை. வருத்தத்துடன் நின்றிருந்தனர். மானசீகமாக தான் எப்பொழுதும் அவர்களோடு இருந்து வருவதாக பாண்டவர்களுக்கு ஆறுதல் கூறினான். பின்பு எப்பொழுதெல்லாம் கிருஷ்ணரின் தேவை ஏற்படுமோ அப்போது அழைத்தால் உடனடியாக அவர்களின் முன்னிலையில் வருவதாக கிருஷ்ணன் வாக்கு கொடுத்தான். இரு தரப்பிற்கும் இடையில் இத்தகைய உடன்படிக்கை ஏற்பட்ட பின்பு அவ்விடத்தை விட்டு கிருஷ்ணன் புறப்பட்டுச் சென்றான்.

மயன் தன்னுடைய சிற்ப வேலைக்காக கைலாய கிரிக்கு வடபுறத்தில் இருந்த பிந்துசரஸை நோக்கி சென்றான். அங்கு அமைந்திருந்த ரத்தினங்களையும் ஏனைய அரிய பெரிய பொருட்களையும் ஏராளமாக சேகரித்துக் கொண்டு அவன் திரும்பி வந்து சேர்ந்தான். கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கொண்டு சபா மண்டபம் கட்டுவதற்கு பயன்படுத்தினான். பீமனுக்கு அவன் பெரிய கதை ஒன்றும் கொண்டு வந்து சேர்த்தான். அர்ஜுனனுக்காக தேவதத்தம் எனும் சங்கையும் எடுத்து வந்திருந்தான். 14 மாதங்களில் அந்த அரிய சபா மண்டபம் கட்டும் வேலை பூர்த்தியாயிற்று. சபா மண்டபம் அதிசயங்களுள் தலைசிறந்த அதிசயமாக இருந்தது. அந்த வேலைப் பாட்டை காண்பதற்கு அக்கம் பக்கத்தில் இருந்து ஏராளமான அரசர்கள் வந்தார்கள். ஆனால் கௌரவர்கள் மட்டும் அந்த இடத்தை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. பொறாமையே அதற்கு காரணமாக இருந்தது.

தொடரும்……………