ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 25

ராமரிடம் தூம்ராசன் மற்றும் வஜ்ரதம்ஷ்ட்ரன் என்ற இரண்டு வலிமை மிக்க ராட்சசர்கள் அனுமனாலும் அங்கதனாலும் கொல்லாப்பட்டார்கள் என்ற செய்தியை சொன்னார்கள். அதனால் மனம் மகிழ்ந்த ராமர் அனுமன் அங்கதன் இருவரின் வீரத்தையும் பாராட்டினார். வஜ்ரதம்ஷ்ட்ரன் அங்கதனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி ராவணனுக்கு வந்து சேர்ந்தது. இந்திரனுக்கு நிகரான வீரன் வஜ்ரதம்ஷ்ட்ரன் அவனை சிறுவனான அங்கதன் கொன்றான் என்ற செய்தியை ராவணனால் நம்ப முடியவில்லை. மிகவும் அதிர்ச்சி அடைந்தான். பின்பு பிரஹஸ்தனை பார்த்த ராவணன் அஸ்திர சாஸ்திரத்திலும் யுத்தத்தில் நிபுணனாகிய அகம்பனை வரச்சொல் என்று உத்தரவிட்டான். அரசவைக்கு வந்த அகம்பனிடம் வலிமைமிக்க ராட்சச வீரர்களாக தேர்வு செய்து ஒரு சேனையை உருவாக்கிக் கொள். அவர்களுடன் சென்று ராமரையும் லட்சுமணனையும் அழித்து வெற்றியுடன் திரும்பி வா என்று கட்டளையிட்டான் ராவணன். மாயங்கள் தெரிந்த வலிமைமிக்க ராட்சச வீரர்களாக தேர்வு செய்த அகம்பன் யுத்தத்திற்கு கிளம்பினான். அப்போது அவனை சுற்றி அபசகுனங்களாக நிகழ்ந்தது. இதனை அகம்பனும் ராட்சச வீரர்களும் ஒரு பொருட்டாகவே கருதாமல் யுத்தத்திற்கு சென்றார்கள். ராட்சசர்கள் எழுப்பிய கர்ஜனை விண்ணை முட்டி எதிரொலித்தது.

ராமரை வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்து சென்ற அகம்பனும் அவனது படை வீரர்களுக்கும் வானர படை வீரர்களுக்கும் பெரும் சண்டை நடந்தது. இருதரப்பிலும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். யுத்தகளம் முழுவதும் ரத்த ஆறு ஓடியது. வானர வீரர்கள் கைகளையே ஆயுதமாக வைத்து பெரிய பாறைகளை தூக்கிப் போட்டும் மரங்களே வேரோடு பிடுங்கி எறிந்தும் ராட்சசர்களை குவியல் குவியலாக கொன்றார்கள். அதனால் கோபமடைந்த அகம்பனன் வாரன வீரர்களிடம் தனது மாய அஸ்திர வித்தைகளை காட்டி அழிக்க ஆரம்பித்தான். அகம்பனின் மாய அஸ்திரத்தை எதிர்க்க இயலாமல் வானர வீரர்கள் ஓடத் துவங்கினார்கள். இதனை கண்ட அனுமன் வானர வீரர்களுக்கு ஆதரவாக அங்கு வந்து அகம்பனை எதிர்த்து யுத்தம் செய்தார். அனுமனுக்கும் அகம்பனுக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. அகம்பன் தனது மாயத்தினால் ஒரே நேரத்தில் பதினான்கு அம்புகளை அனுமன் மீது எய்தான். அம்புகள் உடலை துளைக்க ரத்தத்தினால் அனுமனின் உடல் நனைந்தது. இதனால் கோபம் கொண்ட அனுமன் தன் உடலை பெரிதாக்கிக் கொண்டார். மிகப்பெரிய மரத்தை வேரோடு பிடுங்கி தன் வலிமை முழுவதையும் பயன்படுத்தி அகம்பனின் தலையில் அடித்தார். அகம்பன் அங்கேயே இறந்தான். அகம்பன் இறந்து விட்டான் என்ற அறிந்த ராட்சச வீரர்கள் இலங்கை கோட்டைக்குள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். அகம்பனை அழித்த அனுமனை வானர வீரர்கள் போற்றி வாழ்த்தி ஆரவாரம் செய்தார்கள். வெற்றிக்கு துணை நின்ற அனைத்து வானர வீரர்களையும் கௌரவப்படுத்திய அனுமன் பலத்த காயத்தினால் ஓய்வெடுக்க அமர்ந்தார். அனுமனின் உடம்பில் அகம்பனின் அம்புகள் தாக்கி ரத்தம் வழிந்த இடத்தில் எல்லாம் வானர வீரர்கள் துணியால் சுற்றினார்கள்.

ராமர் லட்சுமணன் சுக்ரீவன் விபீஷணன் அனைவரும் அனுமனின் அருகில் வந்து போற்றி வாழ்த்தினார்கள். தேவ கணங்களும் வானில் நின்று அனுமனுக்கு மலர் தூவி வாழ்த்தினார்கள். அகம்பன் அனுமனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி ராவணனுக்கு மிகவும் துக்கத்தை ஏற்படுத்தியது. கவலை கொண்ட ராவணன் தனது கவலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கோபத்துடன் கத்த ஆரம்பித்தான். ராட்சசர்களின் சத்தத்தை கேட்டாலே பயந்து ஓடும் இந்த வானரங்களுக்கு இத்தனை வலிமையா என்று தன் கோட்டையின் பாதுகாப்பு சரியாக உள்ளதா என்று பார்ப்பதற்க்காக பிரஹஸ்தனுடன் கிளம்பி கோட்டையை சுற்றிப் பார்த்தான். அனைத்து பாதுகாப்புகளும் சரியாக உள்ளதில் திருப்தி அடைந்த ராவணன் இந்தப் பிரச்சணையை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 24

ராமரும் லட்சுமணனும் நாக பாணத்தில் இருந்து பிழைத்து விட்டார்கள். மீண்டும் யுத்தம் செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள் என்று மிகவும் பதறியபடி ராட்சச ஒற்றர்கள் ராவணனிடம் கூறினார்கள். இதனை கேட்ட ராவணன் நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது. நாக பாணத்தில் இருந்து இது வரை யாரும் தப்பித்தது கிடையாது. இந்த ராம லட்சுமணர்கள் எப்படி தப்பித்தார்க்கள். இந்திரஜித்தின் நாக பாணம் வீணாகப் போனது என்றால் நமக்கு ஆபத்து இருக்கிறது. இந்த செய்தி உண்மையாக இருந்தால் நாம் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மிகவும் கவலையுடன் பேசினான். சிறிது நேரத்தில் ராவணனின் கர்வம் தலை தூக்கியது. நாம் ஏன் ராமரை பார்த்து பயப்பட வேண்டும் என்று தூம்ராசன் என்ற ராட்சசனை அழைத்தான் ராவணன். மகா பலசாலியான நீ இருக்க நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும். உனக்கு தேவையான படைகளையும் ஆயுதங்களையும் திரட்டிக் கொண்டு போய் ராமரையும் இந்த வானர படைகளையும் அழித்து வெற்றியுடன் திரும்பி வா என்று உத்தரவிட்டான் ராவணன். தூம்ராசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அரசன் தனக்கு மிகப்பெரிய கவுரவத்தை அளித்திருக்கிறார் என்று பெருமைப் பட்டுக் கொண்டான். தனக்கு தேவையான படைகளை திரட்டிக் கொண்டு வானரங்களுடன் யுத்தம் செய்ய புறப்பட்டான்.

ராமரை எதிர்க்கப் புறப்பட்ட தூம்ராசன் முதலில் அனுமனை எதிர்த்து யுத்தம் செய்தான். யுத்தத்தில் இரு தரப்பில் இருந்தும் ஏராளமானவர்கள் இறந்தார்கள். அனுமனுக்கும் தூம்ராசனுக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. தூம்ராசன் தன்னுடைய முள்ளால் ஆன கதையில் அனுமனின் தலையில் தாக்கினான். அதனை பொருட்படுத்தாத அனுமன் பெரிய மலையை தூக்கி தூம்ராசன் மீது போட்டார். தூம்ராசன் மலையின் அடியில் உடல் பாகங்கள் நசுங்கி இறந்து போனான். இதனை கண்ட ராட்சச வீரர்கள் யுத்த களத்திலிருந்து பயந்து ஓடினார்கள். தூம்ராசனுடன் நடத்திய யுத்தத்தில் அனுமன் மிகவும் களைப்படைந்திருந்தார். அனுமனை வானர வீரர்கள் மிகவும் போற்றிக் கொண்டாடினார்கள். இதனால் மேலும் உற்சாக மடைந்த அனுமன் தனது களைப்பை பொருட்படுத்தாமல் மீண்டும் யுத்தம் செய்ய ஆரம்பித்தார். தூம்ராசன் அனுமனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி ராவணனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மனம் கலங்கிய ராவணன் இதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மிகவும் கோபத்துடன் பெரு மூச்சு விட்டு மாய வித்தைகள் செய்யும் வஜ்ரதம்ஷ்ட்ரனை அழைத்தான். மாய வித்தைகளில் வலிமையான நீ உனக்கு தேவையான படைகளையும் ஆயுதங்களையும் திரட்டிக் கொண்டு போய் ராமரையும் இந்த வானர படைகளையும் அழித்து வெற்றியுடன் திரும்பி வா என்று உத்தரவிட்டான் ராவணன். வஜ்ரதம்ஷ்ட்ரன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தனக்கு தேவையான படைகளை திரட்டிக் கொண்டு வானரங்களுடன் யுத்தம் செய்ய புறப்பட்டான்.

ராமரை எதிர்க்கப் புறப்பட்ட வஜ்ரதம்ஷ்ட்ரன் தெற்கு வாசல் வழியாக கிளம்பினான். அப்போது வானத்தில் இருந்து அவனுக்கு முன்பாக பெரிய நெருப்புக் கங்குகள் விழுந்தன. நரிகள் ஊளையிட்டன. கொடிய விலங்குகள் ஓலமிட்டன. பல ராட்சச வீரர்கள் கால் இடறி கீழே விழுந்தார்கள். பல அபசகுனங்களை கண்ட வஜ்ரதம்ஷ்ட்ரன் பயந்தாலும் தன்னை தைரியப்படுத்திக் கொண்டு முதலில் அங்கதனிடம் யுத்தம் செய்தான். யுத்தத்தில் வஜ்ரதம்ஷ்ட்ரன் மிகப்பெரிய மாயங்கள் செய்து வானர வீரர்களை பயமுறுத்திக் கொன்றாலும் வானர வீரர்கள் எதற்கும் அஞ்சாமல் யுத்தம் செய்து பல ராட்சச வீரர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தார்கள். வஜ்ரதம்ஷ்ட்ரன் மாயங்கள் செய்து தன்னுடைய வில்லில் இருந்து ஒரே நேரத்தில் பல அம்புகளை அங்கதன் மீது எய்தான். அம்புகளால் தாக்கப்பட்ட அங்கதன் பெரிய மரங்களையும் பெரிய பாறைகளையும் இடைவிடாமல் வஜ்ரதம்ஷ்ட்ரன் மூது தூக்கிப் போட்டுக் கொண்டே இருந்தான். மரங்கள் மற்றும் பாறைகளுக்கு நடுவில் சிக்கிய வஜ்ரதம்ஷ்ட்ரன் மயக்கம் அடைந்தான். அவனது மயக்கம் தெளியும் வரை ஓய்வெடுத்த அங்கதன் அவனது மயக்கம் தெளிந்ததும் அவனை தனது கதை ஆயுதத்தால் தாக்கி கொன்றான். இந்திரனுக்கு நிகரான வலிமையுள்ள வஜ்ரதம்ஷ்ட்ரன் அங்கதனால் கொல்லப்பட்டு விட்டான் என்று வானரவீரர்கள் அங்கதனை போற்றி கொண்டாடினார்கள்.

தொடரும்………

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 23

ராமர் துயரத்துடன் இருப்பதை பார்த்த விபீஷணன் அவருக்கு ஆறுதல் சொல்ல தனது ராட்சச சுயரூபத்தில் அங்கு வந்தான். இதனை கண்ட வானர படைகள் இந்திரஜித் மீண்டும் திரும்பி வந்து விட்டான் என்று எண்ணி சிதறி ஓட ஆரம்பித்தார்கள். இதனை கண்ட சுக்ரீவன் ஏன் வானர வீரர்கள் சிதறி ஒடுகின்றார்கள் என்று குழப்பமடைந்து அங்கதனை பார்த்து கேட்டான். அங்கதனும் புரியாமல் விழித்தான். அவர்களின் அருகில் விபிஷணன் வந்ததை பார்த்ததும் அவர்களுக்கு புரிந்தது. விபீஷணனின் பெரிய ராட்சச உருவத்தை பார்த்து இந்திரஜித் வந்து விட்டான் என்று ஓடுகின்றனர் என்பதே உணர்ந்த சுக்ரீவன் ஜாம்பவான் மூலமாக வானர வீரர்களிடம் வந்திருப்பது விபீஷணன் என்று புரிய வைத்து அனைவரையும் அமைதிப் படுத்தினான். விபீஷணன் ராம லட்சுமணர்களின் மீது நாக பாணம் பாய்ந்து கிடப்பதை பார்த்து காரியம் அனைத்தும் கெட்டு விட்டது இனி என்ன செய்வது என்று கண்ணீர் வடித்தான். இதனை கண்ட சுக்ரீவன் விபீஷணனுக்கு ஆறுதல் கூறினான். தனது உறவினன் சுஷேணனே அழைத்து ராம லட்சுமணர்களை கிஷ்கிந்தைக்கு அழைத்துச் செல்லுங்கள். நான் அந்த ராவணனே அழித்துவிட்டு சீதையை அழைத்து வருகிறேன் என்றான் சூக்ரீவன். அதற்கு சுஷேணன் ராம லட்சுமணர்களின் காயத்திற்கு மூலிகை மருந்துகள் இருக்கிறது. மூலிகைகள் இருக்கும் இடம் நம்மில் பலருக்கு தெரியும். அனுமனிடம் சொன்னால் மூலிகையை உடனே கொண்டு வந்து விடுவார். அதனை வைத்து விரைவில் ராம லட்சுமணர்களே குணப்படுத்தி விடலாம் என்றான். அப்போது காற்றின் சத்தம் அதிகமானது சத்தத்திற்கு நடுவே மிகப்பெரிய கருடன் ஒன்று பறந்து வந்தது.

ராமர் லட்சுமணர்களின் அருகே வந்த கருடன் இருவரையும் தடவிக் கொடுத்தது. உடனே இருவரின் மீதிருந்த அம்புகள் அனைத்தும் மறைந்தது. கருடன் இருவரின் உடலில் இருந்த காயங்கள் மீது தடவிக் கொடுத்தான். இருவரின் மேலிருந்த காயங்கள் அனைத்தும் மறைந்து மிகவும் பலத்துடனும் பொலிவுடனும் எழுந்து அமர்ந்தார்கள். ராமர் லட்சுமணன் எழுந்ததை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவனை அணைத்துக் கொண்டார். வானர வீரர்கள் அனைவரும் ராம லட்சுமணர்கள் எழுந்ததை பார்த்து மகிழ்ந்து ராம லட்சுமணர்கள் வாழ்க என்று கோசமிட்டார்கள். ராமர் முன்னை விடவும் உற்சாகமாய் இருப்பதை உணர்ந்து மிகவும் ஆச்சரியமடைந்தார். கருடனை பார்த்து தாங்கள் யார் என்று கேட்டார் அதற்கு கருடன் நான் உனக்கு நண்பன். இந்திரஜித் தன்னுடைய மாயத்தினால் பாம்புகளை அம்புகளாக்கி உங்கள் மீது எய்தான். பாம்புகளின் விஷத்தன்மையால் இருவரும் கட்டப்பட்டு இருந்தீர்கள். உங்கள் தவ சக்தியின் மிகுதியால் உங்களால் கண் விழிக்க முடிந்தது. பாம்புகளின் சத்ருவான கருடனான என்னை கண்டதும் பாம்புகள் ஓடிவிட்டது. நீ தொடர்ந்து யுத்தம் செய்யலாம் உனக்கு வெற்றி உண்டாகும். நான் யார் என்பதை நேரம் வரும் போது சொல்கிறேன். இப்போது யுத்தத்தில் உங்களுடைய கவனத்தை செலுத்துங்கள் நான் வருகிறேன் என்று கருடன் அங்கிருந்து சென்றது.

ராம லட்சுமணர்கள் மீண்டும் தங்களின் முழுமையான பலத்துடன் யுத்தம் செய்ய வருகின்றார்கள் என்று தெரிந்ததும் வானர படைகள் தங்கள் பயத்தை விட்டு உற்சாகத்துடன் யுத்தம் செய்ய ஆயத்தமானார்கள். ஆராவாரத்துடன் சென்ற வானர படைகள் ராவணனின் கோட்டையை தாக்க ஆரம்பித்தார்கள். கோட்டைக்கு வெளியே வானரர்களின் ஆரவாரத்தை கேட்ட ராவணன் ஆச்சரியப்பட்டான். அருகில் இருந்தவர்களிடம் ஏன் இந்த வானர படைகள் உற்சாகத்துடன் நம்மை நெருங்கி வருகின்றார்கள். ராம லட்சுமணர்கள் நாக பாணத்தால் மயங்கிக் கிடக்கிறார்கள் விரைவில் இறந்து விடுவார்கள். இதனை நினைத்து கவலைப்பட வேண்டியவர்கள் மகிழ்ச்சியுடன் யுத்தத்திற்கு வருகின்றார்கள். இதற்கு ஏதேனும் காரணம் இருக்கும் அது என்ன என்று தெரிந்து கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 22

ராம லட்சுமணர்கள் இந்திரஜித்தால் அழிக்கப்பட்டார்கள் என்ற செய்தியை இலங்கை முழுவதும் பரப்ப ராவணன் உத்தரவிட்டான். ஒரு ராட்சசியை அழைத்து ராமர் லட்சுமணர் இருவரும் அவர்களுடைய வானர சேனைகளும் யுத்த பூமியில் இறந்து கிடக்கிறார்கள் என்ற செய்தியை சீதையிடம் போய் சொல்லுங்கள். அவளை எனது பறக்கும் புஷ்பக விமானத்தில் அழைத்துச் சென்று ராமர் லட்சுமணர்கள் இறந்து கிடப்பதை காண்பியுங்கள். இனி ராவணனைத் தவிர வேறு வேறு யாரும் சீதைக்கு ஆதரவு இல்லை என்று அவளுக்கு புரிய வையுங்கள் என்று சொல்லி அனுப்பினான். ராட்சசிகளும் ராவணன் கட்டளை இட்டபடி சீதையை ராமர் இருக்கும் இடத்திற்கு புஷ்பக விமானத்தில் அழைத்துச் சென்றார்கள். தரையில் அசைவற்று இருக்கும் ராமர் லட்சுமணனை பார்த்த சீதை ஒரு கணம் திடுக்கிட்டாள். ராவணன் மாயத்தின் மூலமாக வஞ்சகமாக நம்மை ஏமாற்ற பார்க்கிறானா என்ற சந்தேகம் சீதைக்கு எழுந்தது. ராமர் அருகில் அவருடைய வில்லும் அம்பும் இருப்பதை பார்த்த சீதை காண்பது உண்மை தான் என்று நம்ப ஆரம்பித்தாள். பிற்காலத்தை பற்றி அறிந்து கொள்பவர்கள் தன்னுடைய வருங்காலத்தை பற்றி சொல்லியது அனைத்தும் பொய்யா? கணவர் இறந்து போவார் சிறு வயதில் விதவையாவாய் என்று யாரும் சொல்லவில்லையே. நீண்ட காலம் மகாராணியாய் வாழ்வாய் என்றும் உனக்கு குழந்தைகள் பிறக்கும் என்று அவர்கள் சொல்லியது அனைத்தும் பொய்யாகப் போனதே. உங்களது அஸ்திர வித்தைகள் எல்லாம் எங்கே போனது. உங்களை யாரும் வெல்ல முடியாது என்றார்களே அதுவும் பொய்யாகிப் போனதே. இனி நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை. இப்போதே எனது உயிரை விட்டு விடப்போகிறேன் என்று சீதை கண்ணீருடன் அழுது புழம்பினாள். அருகில் இருந்த திரிசடை என்ற ராட்சசி சீதையிடம் பேச ஆரம்பித்தாள்.

ராமர் லட்சுமணன் முகத்தை நன்றாக பாருங்கள் அவர்கள் இறக்கவில்லை. அவர்களின் முகத்தில் தெய்வீக பொலிவு அப்படியே இருக்கிறது. இறந்திருந்தால் அவர்களின் முகம் வேறு மாதிரி இருக்கும். அவர்கள் மாய அஸ்திரத்தின் வலிமையால் மயக்கத்தில் இருக்கிறார்கள். விரைவில் எழுந்து விடுவார்கள். அவர்களை சுற்றி இருக்கும் வானர வீரர்களை பாருங்கள் யாரும் பயந்து ஓடவில்லை. ராமர் விரைவில் எழுந்து விடுவார் என்று அவரை சுற்றி தைரியத்துடன் இருக்கிறார்கள் என்றாள். ராட்சசியின் இந்த வார்த்தைகள் சீதையின் காதுகளில் அமிர்தம் பாய்வது போல் இருந்தது. மீண்டும் தனது தைரியத்தை பெற்று அமைதியானாள். உடனே ராட்சசிகள் மீண்டும் சீதையை அசோக வனத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். ராமரை நினைத்த படி இருந்த சீதை ராவணன் அழிவான். விரைவில் ராமர் வந்து தன்னை மீட்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.

ராமரின் உடல் நாக பாணத்தினால் தைக்கப்பட்டு காயங்கள் பலமாக இருந்தாலும் தனது ஆத்ம பலத்தாலும் தனது சக்தியாலும் கண் விழித்த ராமர் அருகில் இருந்த லட்சுமணனை பார்த்து அலறினார். உன்னை இழந்த நான் இனி எப்படி வாழ்வேன். நான் வாழ்ந்து என்ன பயன்? என்னுடன் காட்டிற்கு வருவேன் என்று வந்து எனக்கு பல சேவைகள் செய்து இப்போது எனக்காக உனது உயிரையும் கொடுத்து விட்டாயே. உன்னைப் போன்ற வீரர்களை இனி பார்க்க முடியாது. நான் இனி எப்படி அயோத்திக்கு செல்வேன். அன்னை கோசலை சுமித்திரை கைகேயிக்கு என்ன பதில் சொல்வேன் என்று கதறினார். அருகில் இருந்த சுக்ரீவனிடத்தில் ராமர் பேச ஆரம்பித்தார். இலங்கையின் அரசனாவாய் என்று விபீஷணனுக்கு நான் கொடுத்த உறுதி மொழி பொய்யானது. நீங்கள் எனக்கு கொடுத்த உறுதிமொழியின் படி இத்தனை நாட்கள் என்னுடன் இருந்து சத்தியத்தை காப்பாற்றினீர்கள். என்னால் பல வானர வீரர்கள் இறந்து விட்டார்கள். இனி எனக்காக யாரும் உயிரை விடவேண்டாம். உங்கள் படைகளை கிஷ்கிந்தைக்கு அழைத்துச் செல்லுங்கள். நான் இங்கேயே எனது உயிரை விட்டு விடுகிறேன் என்று தனது தைரியத்தை இழந்த ராமர் கவலையுடன் கூறினார்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 21

ராமர் வாழ்க லட்சுமணன் வாழ்க ராம லட்சுமணர்களுக்கு வெற்றி என்ற கர்ஜனையுடன் வானர சேனைகள் இலங்கை நகரத்திற்குள் முன்னேறிச் சென்றார்கள். இதனை கண்ட ராவணன் பெரும் ராட்சசர்களின் படையை அனுப்பி வைத்தான். சங்குகள் பேரிகைகள் முழங்க ராட்சச வீரர்களும் கடல் அலைகள் போல் கிளம்பி வானர வீரர்களை கொடூரமான ஆயுதங்களை கொண்டு தாங்கினார்கள். ராட்சச படைகளுக்கும் வானர படைகளுக்கும் பெரும் யுத்தம் தொடங்கியது. வானர வீரர்கள் பெரிய பாறைகளையும் மரங்களை வேரோடு பிடுங்கி ராட்சசர்கள் மீது தூக்கி வீசி தாக்கினார்கள். இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் இறந்தார்கள். யுத்த பூமி முழுவதும் ரத்தமும் சதையும் பரவிக் கிடந்தது. ஒரு பக்கம் அங்கதனும் இந்திரஜித்தும் மறு பக்கம் ப்ரஜங்கன் என்ற ராட்சசனும் விபீஷணனுடைய மந்திரி சம்பாதிக்கும் இடையே கடுமையாக சண்டை நடந்தது. மறு பக்கம் அனுமனுக்கும் ராட்சசன் ஜம்புமாலிக்கும் லட்சுமணன் ராட்சசன் விருபாக்ஷனுக்கும் சண்டை நடந்தது. இன்னோரு பக்கம் நீலனும் ராட்சசன் திகும்பனும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்திரஜித்தின் குதிரைகளை கொன்ற அங்கதன் ரதத்தையும் உடைத்து எறிந்தான். அங்கதனின் வீரத்தை கண்ட வானரர்கள் மிகவும் உற்சாகமாக சண்டையிட்டார்கள். இதனால் கோபமடைந்த இந்திரஜித் அதற்கு பதிலடியாக தனது மாய வித்தைகளை காட்டி மறைந்திருந்து யுத்தம் செய்து அங்கதனை அடித்து காயப்படுத்தினான். இந்திரஜித் இருக்கும் இடத்தை வானர வீரர்களால் காணமுடியவில்லை. இந்திரஜித் மறைந்திருந்து அம்புகள் எய்து வாரன வீரர்களின் உற்சாகத்தை குலைத்தான். இந்திரஜித் செய்த மாய யுத்தத்தினால் வானர வீரர்கள் தங்களின் தைரியத்தை சிறிது இழக்கத் தொடங்கினார்கள்.

ராமரை தாக்க அவரின் அருகில் நெருங்க முடியாத ராட்சசர்கள் ராமரை அம்புகளால் தாக்கத் தொடங்கினார்கள். ராட்சசர்களின் அனைத்து அம்புகளுக்கும் பதிலடி கொடுத்த ராமர் மறுபக்கம் தனது அம்புகளால் கூட்டம் கூட்டமாக ராட்சசர்களை அழித்துக் கொண்டிருந்தார். அன்றைய பகல் முழுவதும் நடந்த யுத்தம் இரவிலும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. இந்திரஜித் தனது மாய வித்தையின் மூலம் மறைந்திருந்து ராம லட்சுமணர்களின் மீது நாக பாணத்தை ஏய்தான். இதனால் ராம லட்சுமணர்கள் இருவரும் நாக பாணத்தால் கட்டுண்டு அசைய முடியாமல் கீழே விழுந்தார்கள். வானர சேனைகள் ராம லட்சுமணர்களை சூழ்ந்து கொண்டு கவலையுடன் இருந்தார்கள். இதனால் யுத்தம் நின்றது. இந்திரஜித் ராட்சச படை வீரர்களை பாராட்டி விட்டு அரண்மனைக்கு வெற்றிக் கொண்டாடத்தோடு திரும்பினான். ராவணனிடம் சென்ற இந்திரஜித் ராம லட்சுமணர்கள் அழிந்தார்கள். இனி எதிரிகளால் எந்த பயமும் இல்லை என்று கூறினான். இதனைக் கேட்ட ராவணன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தனது மகனின் வீரத்தை பாராட்டி கட்டி அணைத்து புகழ்ந்தான்.

ராம லட்சுமணர்கள் நாக பாணத்தின் சக்திக்கு கட்டுப்பட்டு மயக்கத்தில் கிடக்கிறார்கள். பல வானர வீரர்கள் இறந்து விட்டார்கள். பலர் காயமடைந்து விட்டார்கள். முதல் நாள் யுத்தத்தில் மிகப்பெரிய பின்னடைவை கண்ட சுக்ரீவன் நாம் யுத்தத்தில் தோல்வி அடைந்து விட்டோம் என்று எண்ணிக் கொண்டு கவலையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் அமர்ந்து விட்டான். இதனை கண்ட விபீஷணன் சூக்ரீவனிடம் சென்று நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். நீங்கள் தைரியத்தை இழந்தால் வானர வீரர்களும் தைரியம் இழந்து விடுவார்கள். ராம லட்சுமணர்களின் முகத்தை பாருங்கள் இன்னும் அவர்களின் பொலிவு அப்படியே முகத்தில் இருக்கிறது. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து மறுபடியும் யுத்தம் செய்ய கிளம்பி விடுவார்கள் என்று சூக்ரீவனுக்கு தைரியத்தை கொடுத்தான் விபீஷணன். சூக்ரீவனும் விபீஷணனும் வானர வீரர்கள் தைரியத்தை இழக்காமல் இருக்க சிதறிப் போயிருந்த வானர வீரர்களை ஒன்று படுத்தி உற்சாகப் படுத்தினார்கள். அனைத்து வானர வீரர்களும் ஒன்று பட்டு ராம லட்சுமணர்கள் விழிப்படைய காத்திருந்தார்கள்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 20

ராமர் உயிரோடு தான் இருக்கிறார். ராவணன் நம்மை ஏமாற்றுவதற்காக தான் இது போல் மாய வேலைகளை செய்திருக்கிறான் என்று உணர்ந்த சீதை மிகவும் புத்துணர்ச்சி அடைந்தாள். ராமர் தனக்கருகில் வந்து விட்டார் விரைவில் அவரை நாம் பார்க்க போகிறோம் என்று மகிழ்ச்சி அடைந்தாள் சீதை. சரமை சீதையிடம் மேலும் சில தகவல்களை கூறினாள். ராவணனிடம் அரசவையில் மந்திரிகள் பலரும் உறவினர்களும் சீதையை ராமரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் ராவணன் யாருடைய பேச்சையும் கேட்பதற்கு தயாராக இல்லை. ராமரை எதிர்த்து யுத்தம் செய்து யுத்தத்தில் உயிரை வேண்டுமானாலும் விடுவேன் ஆனால் ராமரை நான் வணங்கி நிற்க மாட்டேன் என்று ராவணன் தீர்மானமாகச் சொல்லி விட்டான். விரைவில் யுத்தம் ஆரம்பித்து விடும். உனக்கு இனி எந்த அபாயமும் இல்லை. இனிமேல் உன்னிடம் ராவணன் எதை சொன்னாலும் நம்பாதே. ராவணன் சொல்லும் அனைத்தும் உன்னை ஏமாற்றும் செயலாகவே இருக்கும். ராவணன் செய்யும் எந்த செயலையும் கண்ணால் கண்டாலும் நம்பாதே. அனைத்தும் மாயமாகவே இருக்கும். ராவணன் இங்கு வருகிறான் என்று தெரிந்தால் உடனே எச்சரிக்கையுடன் இருந்து கொள் என்று சொல்லி முடித்தாள். சரமை சொல்லி முடித்ததும் வானர படைகளின் பேரிகைகளும் சங்குகளின் ஒலிக்கும் சத்தங்கள் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டதும் ராவணன் விரைவில் ராமரால் அழியப் போகிறான் என்று சீதை மகிழ்ந்தாள். யுத்தம் செய்ய நாங்கள் வந்திருக்கிறோம் என்ற வானரங்களின் சங்கு பேரிகையின் பெரும் சத்தத்தை கேட்ட ராட்சசர்கள் பலர் பயந்து நடுங்கினார்கள்.

ராமர் தனது கடல் போன்ற வானரப் படைகளுடன் இலங்கையின் நான்கு புறமும் சூழ்ந்து கொண்டார் என்ற செய்தியை ராவணனுக்கு அவனது படை வீரர்கள் கூறினார்கள். அப்போது ஏற்கனவே பயந்து போயிருந்த ராட்சச மந்திரிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இதனை கண்ட ராவணன் இதற்கு முன்பு நடந்த யுத்தங்களில் எல்லாம் உங்ளது பராக்கிரமத்தை காட்டி பல வெற்றிகளை கொடுத்துள்ளீர்கள். ஆனால் இப்போது ராமரை பார்த்து இப்படி பயப்படுகிறீர்கள். இந்த பயம் தான் உங்கள் முதல் எதிரி. ராமர் சாதாரண மானிடன் அவர் மேல் இருக்கும் இந்த பயத்தை விட்டு உங்கள் வலிமையை காட்டி யுத்தம் செய்து நமது ராட்சச குலத்திற்கு பெருமை தேடிக் கொடுங்கள் என்று சொல்லி முடித்து தனது கோட்டையின் உச்சிக்கு சென்று இலங்கையை சுற்றி நிற்கும் வானர படைகளை பார்வையிட்டான் ராவணன் எப்போதும் பச்சை பசேல் என்று இருக்கும் இலங்கை இப்போது மரம் செடி கொடிகள் எதுவும் தெரியாமல் வானர படைகள் நிறைந்து செம்மையாக காட்சி கொடுத்தது. இத்தனை பெரிய வலிமை மிக்க வானர படையை எப்படி அழிப்பது என்று ராவணன் கவலையில் ஆழ்ந்தான்.

ராமர் சீதையை நினைத்து ஒரு முறை சிந்தித்தார். தினந்தோறும் எதிரியின் சித்தரவதையில் பதைபதைக்கும் எண்ணங்களோடு பயத்துடன் இருக்கும் சீதையை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இலங்கை நகரத்தின் உள்ளே செல்ல யுத்தம் செய்ய ஆரம்பிக்கலாம் என்று ராமர் வானர வீர்ரகளுக்கு கட்டளையிட்டார். ராமரின் ஆணையை எதிர்பார்த்துக் காத்திருந்த வானர படைகள் உற்சாகமடைந்தனர். சங்கு பேரிகை முழங்க அலைமோதிக் கொண்டு முன்னேறினார்கள். அவர்களின் சத்தம் விண்ணை முட்டி எதிரோலித்தது. முதலில் இலங்கை நகரத்தை மதில் சுவர் போல் பாதுகாத்த மலைகளையும் மதில் சுவர்களையும் தங்கள் கைகளினாலேயே உடைத்து நொறுக்கினார்கள். உடைத்த மலைகளின் மண் குவியல்களை நகரத்தை சுற்றி நீர் நிறைந்திருந்த அகழியின் மேல் போட்டு அகழியை மூடினார்கள். தங்கத்தாலும் வைர வைடூரியங்களினாலும் செய்யப்பட்ட நுழைவாயில் கதவுகளை உடைத்து எறிந்தார்கள்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 19

ராமரைப் பற்றிய தகவலை விபீஷணனின் மனைவியான சரமை சீதைக்கு எடுத்துச் சொன்னாள். ராமர் இலங்கைக்கு பெரும் வானர படையுடன் வந்திருக்கிறார். அவருடன் எனது கணவர் விபீஷணனும் சென்று சேர்ந்து விட்டார். வந்திருப்பவர்கள் யாராலும் எதிர்த்து வெற்றி பெற முடியாத வலிமையுள்ளவர்கள் என்று ராவணனுக்கு அவனது ஒற்றர்கள் தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஆகையால் நீ ராவணனால் விரைவில் ராமரிடம் ஒப்படைக்கப்படுவாய் இல்லையென்றால் ராவணனை ராமர் யுத்தத்தில் வெற்றி பெற்று உன்னை அழைத்துச் செல்வார் என்று சீதைக்கு தோழி போல் இருந்து அவளுக்கு ஆறுதல் கூறினாள் சரமை. இதை கேட்ட சீதை ராமரை விரைவில் பார்க்க போகிறோம் என்று பேரானந்தம் அடைந்தாள்.

ராமரை பற்றி தனக்கு தெரிந்ததை வைத்து அவரது குணத்தை அளந்தான் ராவணன். சீதை எப்படியாவது தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு விட்டால் ராமர் அவமானமடைந்து நம்மை எதிர்க்காமல் இங்கிருந்து சென்று விடுவார் யுத்தம் நடக்காது. நம்மை எதிர்த்து சென்ற விபீஷணனும் திரும்பி வந்து விடுவான். ராமர் ராவணனை எதிர்க்க தைரியம் இல்லாமல் திரும்பி சென்று விட்டார் என்று உலகம் முழுவதும் நம்முடைய புகழ் மேலும் பெருகும் என்று ஒரு திட்டம் திட்டினான் ராவணன். மாயக்கார ராட்சசனான வித்யுபுஜ்ஜிவனை வரவழைத்த ராவணன் அவனிடம் உனக்கு அனைத்து மாய வித்தைகளும் தெரியுமல்லவா நான் சொல்வது போல் நீ நடந்துகொள் என்றான். நான் சீதையிடம் சென்று ராமர் ராட்சசர்களால் கொல்லப்பட்டு விட்டார் என்று சொல்லுவேன் அந்த நேரம் நீ ராமரின் தலையைப் போலவே ஒரு உருவத்தை உனது மாயத்தால் செய்து அங்கு கொண்டு வந்து சீதையின் முன்பு வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். மாயக்கார ராட்சசனும் அதற்கு சம்மதம் தெரிவித்து அங்கிருந்து சென்றான். ராவணன் சீதையின் இருக்கும் அசோக வனத்திற்குள் நுழைந்தான். ராமர் வந்து விடுவார் என்ற மகிழ்ச்சியுடன் இருந்த சீதையிடம் தனது வஞ்சகமான ஏமாற்றும் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தான் ராவணன். இலங்கையின் கடலுக்கு எதிர்புறம் இருக்கும் கடற்கரையில் ராமரும் அவரது வானர படைகளும் களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது எனது ராட்சச படை வீரர்கள் கடல் தாண்டி சென்று ராமர் உட்பட பலரைக் கொன்று விட்டார்கள். தலைமை இல்லாத வானர படைகள் சிதறி ஓடி விட்டார்கள். இனி மேலும் ராமர் வந்து உன்னை அழைத்துச் செல்வார் என்று கற்பனையில் இருக்காதே. எனது சொல்லுக்கு கட்டுப்பட்டு இந்த இலங்கையின் தலைவியாகி சுகமாக மகிழ்ச்சியுடன் இரு என்று சொல்லி ஒர் ராட்சசசியை அழைத்தான் ராவணன். வெளியில் காத்திருக்கும் வித்யுபுஜ்ஜிவனை இங்கே அழைத்து வா என்று கட்டளையிட்டான்.

ராமர் இலங்கைக்குள் வந்து விட்டார் என்று நமக்கு தோழியான சரமை சொல்லி விட்டாள். ஆனால் ராமர் இலங்கைக்கு உள்ளே நுழைவதற்கு முன்பே கடற்கரையில் வைத்தே கொன்று விட்டோம் என்று ராவணன் சொல்லுகிறான். இதில் ஏதோ ஏமாற்றுத் தனம் இருக்கிறது என்பதை சீதை உணர்ந்தாள். ஆனாலும் ராமர் இறந்து விட்டார் என்ற செய்தி அவளின் உள்ளத்தை நிலை குழைய வைத்தது. ராமரை நினைத்து சீதை அழுது புலம்பினாள். அப்போது உள்ளே நுழைந்த மாயக்கார ராட்சசன் ராமரின் தலையைப் போலவே தனது மாயத்தினால் செய்த ராமரின் தலையை கொண்டு வந்து சீதையின் முன்பாக வைத்தான். அதனைப் பார்த்த சீதை மூர்ச்சை அடைந்து மயக்கமடைந்து விழுந்தாள். அதே நேரம் ராமர் கோட்டையை நெருங்கி விட்டார்கள் என்றும் உடனே அரசவைக்கு வந்து ஆலோசனை சொல்ல வேண்டும் என்று ராவணனுக்கு தகவல் வந்தது. உடனடியாக அங்கிருந்து கிளம்பி அரண்மணைக்கு சென்றுவிட்டான் ராவணன். சீதை மயக்கமடைந்து விட்டாள் என்ற செய்தியை கேட்ட விபீஷணனின் மனைவி சரமை உடனே அங்கு வந்து சீதைக்கு மயக்கத்தை தெளிய வைத்து ராவணனின் ஏமாற்றுத் தனத்தை விளக்கமாக எடுத்துச் சொல்லி ஆறுதல் கூறினாள். இந்த ராமரின் தலை மாயத்தால் செய்யப்பட்டது அருகே சென்று பார் என்றாள். சீதை ராமரின் தலைக்கு அருகே சென்றதும் அந்த தலை தானாகவே புகை போல் காற்றில் கரைந்து விட்டது.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 18

ராமரையும் அவரது ஆயுதங்களின் வலிமையையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த இலங்கை நகரத்தை அழிக்க ராமருக்கு யாருடைய துணையும் தேவை இல்லை. எந்த படைகளும் தேவை இல்லை. தான் ஒருவரே தனியாக நின்று தனது அம்பின் மூலம் எதிர்க்கும் அனைவரையும் அழிக்கும் வல்லமை பெற்றவர் ராமர். சுக்ரீவனுடைய வானரப்படைகளின் வலிமையை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எல்லா தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்து வந்து தாக்கினாலும் இந்த வானரங்களை அழிக்க முடியாது. இந்த வானரங்களின் எண்ணிக்கையை சொல்ல முடியாது. பல யோசனை தூரத்திற்கு கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள். இந்த கூட்டத்தின் எல்லையை பார்க்க முடியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவர்களின் கூட்டம் நீண்டு கொண்டே இருக்கிறது. இப்போதே யுத்தம் செய்ய வேண்டும் என்று வானர படைகள் உற்சாகத்துடன் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது வரையில் தாங்கள் ராமரிடம் விரோதமாக இருந்து விட்டீர்கள். இனி மேலும் இந்த விரோதம் தொடர்ந்தால் இலங்கை அழிவது நிச்சயம். நாங்கள் அவர்களின் வலிமையை கண்ணால் பார்த்து விட்டோம் ஆகையால் சொல்கிறோம். உளவு பார்த்துக் கொண்டிருக்கும் போது விபீஷணனிடம் நாங்கள் சிக்கிக் கொண்டோம். அவர் எங்களை ராமரிடம் அழைத்துச் சென்றார். இனி பிழைக்க மாட்டோம் அழிந்தோம் என்று நினைத்த நாங்கள் ராமரின் கருணையினால் தப்பிப் பிழைத்து இங்கு வந்து சேர்ந்தோம் என்று ராமர் சொன்ன செய்தியையும் ராவணனிடம் சொல்லி இனி என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து செயல்படுங்கள் என்று தலை குனிந்தபடியே நின்றார்கள்.

ராமர் சொன்ன செய்தியை கேட்ட ராவணன் கோபமடைந்து கடுமையான வார்த்தைகளால் தூது சென்ற ராட்சசர்களை திட்ட ஆரம்பித்தான். தேவர்கள் கந்தர்வர்கள் தானவர்கள் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும் உலகமே எனக்கு எதிராக நின்றாலும் சீதையை ராமருடன் அனுப்ப மாட்டேன். ஒற்றர்களாக சென்ற நீங்கள் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டு பயத்தினால் இப்படி பேசுகிறீர்கள். கோழைகளே எந்தப் பகைவனாலும் என்னை வெற்றி பெற முடியாது என்றான். ராமரின் வலிமையை பற்றி அனைவரும் ஒரே மாதிரி சொல்வதில் கவலைப்பட்ட ராவணன் தன் ஆரம்ப காலத்தில் செய்ய யுத்தங்கள் அனைத்திலும் வெற்றி பெற்ற கர்வத்தினால் தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் இருந்தான். அரண்மனை மாளிகையின் உச்சிக்கு சென்ற ராவணன் தன் மந்திரிகளுடன் கோட்டையை சுற்றி இருக்கும் வனார படைகளின் அணிவகுப்பை பார்த்தான். ஒற்றர்களிடம் சுற்றி நிற்பவர்கள் யார் யார் என்று கேட்டான். ஒற்றர்கள் ராமர் லட்சுமணன் சுக்ரீவன் என்று அனைவரையும் தனித்தனியாக காட்டி படைகளின் தலைவர்களையும் அவர்களின் வலிமையையும் கூறினார்கள்.

எதிரியின் பராக்கிரமத்தை சொல்லும் ஒற்றர்களை பார்த்து கோபம் கொண்ட ராவணன் ராமரின் பராக்கிரமத்தையும் சுக்ரீவன் தனி ஒருவனாக வந்து தன்னை தாக்கி விட்டு சென்றதையும் அனுமன் தனியாக வந்து இலங்கை நகரத்தையே அழித்துவிட்டுச் சென்றதையும் சிறுவனான வாலியின் புத்திரன் அங்கதனின் திறமையையும் நினைவு படுத்திக்கொண்டான். சீதையை திருப்பி அனுப்ப அவனது கர்வம் இடம் கொடுக்க இயலவில்லை. யுத்தம் செய்யாமல் இருக்க வேறு ஏதேனும் வழிகள் இருக்கிறதா என்று யோசனை செய்ய ஆரம்பித்தான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 17

ராமரிடம் வந்த அங்கதன் ராவணனின் அரண்மனையில் நடந்த அனைத்தையும் கூறினான். இதனை கேட்ட ராமர் வானர படைகளிடம் யுத்தத்திற்கு தயாராகும்படி கூறினார். கோட்டையை வானர படைகள் நெருங்கியது. ராமர் லட்சுமணனிடம் இந்த இலங்கையின் அழகை பார்த்தாயா என்று அதன் அழகை பார்த்து ரசித்தபடியே அருகில் சென்றார். ராமருக்கு சீதையின் ஞாபகம் வந்தது. நாம் இவ்வளவு பெரிய படையுடன் வந்து விட்டோம் என்று சீதைக்கு இந்நேரம் தெரிந்திருக்குமா என்று சிந்தனை செய்தபடியே படைகளை அணிவகுக்கும் பணியில் ஈடுபட்டார். கோட்டையின் நான்கு புறமும் யார் யார் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று ராமர் நிர்ணயித்தபடி அனைவரும் அணிவகுத்து நின்றனர். ராவணன் அனுப்பிய இரண்டு ஒற்றர்களும் வானரர்கள் போல் தங்கள் உருவத்தை மாற்றிக் கொண்டு வானர படைகளுக்குள் கலந்து வேவு பார்த்தார்கள். எவ்வளவு வானர வீரர்கள் இருக்கிறார்கள் என்று இவர்களால் கணக்கெடுக்க இயலவில்லை. காடு மலைகள் அனைத்திலும் வானர வீரர்கள் குவிந்திருந்தார்கள். மேலும் கடலில் உள்ள பாலத்தின் வழியாகவும் கூட்டம் கூட்டமாக இருந்தார்கள். இரு ராட்சச ஒற்றர்களையும் வீபிஷணன் கண்டு பிடித்து விட்டான். வானர வீரர்களிடம் சொல்லி அவர்களை பிடித்து ராமரிடம் அழைத்துச் சென்றான் விபீஷணன்.

ராமரிடம் சென்ற இரண்டு ராட்சசர்களும் மிகவும் பயந்த படியே பேசினார்கள். எங்களது பெயர் சுகன் மற்றும் சாரணன். நாங்கள் தூதுவர்களாக எங்களது அரசரால் அனுப்பப்பட்டோம். எங்களை விட்டு விடுங்கள் என்று அவரை கைகூப்பிய படியே நின்றனர். ராமர் ராட்சசர்களை பார்த்து சிரித்தபடியே பேசினார். எங்களது கையில் சிக்கிக் கொண்டோமே என்று பயப்படாதீர்கள். ஆயுதங்கள் இல்லாமல் இருக்கும் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம். உங்கள் அரசர் சொன்னபடி எங்களது படைகளின் எண்ணிக்கையை சரியாக எண்ணிப் பார்த்து விட்டீர்களா? எங்களது வலிமை ஆயுதங்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொண்டு விட்டீர்களா? இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் விபீஷணனை உங்களுடன் அங்கு அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு தேவையான செய்தியை மறைக்காமல் விபீஷணன் சொல்லுவார். முழுமையாக பார்த்து விட்டு அனைத்தையும் தெரிந்து கொண்டு உங்கள் அரசரிடம் போய் சொல்லுங்கள். உங்கள் உளவு செய்தியுடன் அப்படியே நான் சொல்லும் செய்தியையும் சேர்த்து உங்கள் அரசரிடம் சொல்லுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தார். எந்த பலத்தின் மேல் நம்பிக்கை வைத்து சீதையை தூக்கி வந்தாயோ அதே பலத்தை உனது படை வீரர்களோடு வந்து உன்னால் முடிந்த வரை காட்டி என்னுடன் யுத்தம் செய். நாளை காலையில் எனது அம்புகள் இந்த இலங்கை நகரத்தை அழிக்கத் தொடங்கும். அதை உனது கண்களால் பார்ப்பாய். அதன் பிறகு பெரிய ராட்சச படையுடன் இருக்கும் உன் மீது எனது கட்டுக் கடங்காத கோபத்தை எனது அம்புகள் வழியாக காட்டுவேன். எனது அம்பின் வலிமையின் முன்பு உனது வலிமையை காட்டி முடிந்தால் தப்பித்துக்கொள் இச்செய்தியை ராவணனிடம் சொல்லி விடுங்கள் என்று சொல்லி முடித்தார்.

ராமர் விபீஷணனிடம் ஆயுதங்கள் இல்லாமல் இருக்கும் இவர்களை விட்டு விடுங்கள் என்றார். விடுபட்ட இரண்டு ராட்சசர்களும் ராமரிடம் தாங்கள் நிச்சயம் இந்த யுத்தத்தில் வெற்றி பெறுவீர்கள் என்று தங்களையும் அறியாமல் வாழ்த்து கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்கள். ராவணனிடம் சென்ற ஒற்றர்கள் தாங்கள் தெரிந்து கொண்டதை சொல்ல ஆரம்பித்தார்கள். ஒரே நோக்கத்திற்காக ராமர் லட்சுமணன் சுக்ரீவன் விபீஷணன் நால்வரும் ஒன்று கூடி இருக்கிறார்கள். அவர்களின் வலிமையை சொல்ல வேண்டுமானால் இந்த நான்கு பேரின் வலிமையை கணக்கிட்டால் இவர்கள் நால்வர் சேர்ந்தால் இந்த இலங்கை நகரத்தையே தனியாக தூக்கி வேறு இடத்தில் வைத்து விடுவார்கள். அவ்வளவு வலிமையானவர்கள். இதற்கு எந்த படை பலமும் இவர்களுக்கு தேவையில்லை.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 16

ராமர் சுக்ரீவனிடம் நீ செய்த இந்த செயலால் உனது வீரத்தையும் பராக்கிரமத்தையும் பார்த்து நான் வியப்பும் மிக்க மகிழ்ச்சியும் அடைகிறேன். ஆனால் அரசனாக இருப்பவன் எதிரிக்கு யுத்தம் செய்ய வருகிறேன் என்று முன் அறிவிப்பு இல்லாமல் இப்படி திடீரென்று தாக்குதல் செய்யக்கூடாது. இது தர்மத்திற்கு விரோதமானது. மேலும் உடன் இருப்பவர்களுடன் ஆலோசனை செய்யாமல் இது போல் அபாய காரியத்தில் ஈடுபடக்கூடாது. இது அரசனுக்கு நன்மையானதல்ல. எனவே இனிமேல் இப்படி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சுக்ரீவன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. உங்களை கேட்காமல் நான் சென்றது தவறு தான். தங்களுக்கும் சீதைக்கும் வஞ்சகம் செய்து ஏமாற்றிய ராவணனை கண்டதும் என்னுடைய கோபம் மேலோங்கி விட்டது. கோபத்தை என்னால் கட்டுப்படுத்த முடியாமல் இப்படி செய்து விட்டேன். இனி மேல் இப்படி நடக்க கொள்ளமாட்டேன் என்று ராமரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான் சூக்ரீவன்.

ராமர் வானர வீரர்களுக்கு கட்டளையிட்டபடி ராவணனின் நகரத்தை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். அங்கதனை அழைத்த ராமர் ராவணனிடம் இப்போது நீ தூதுவனாக செல்ல வேண்டும் என்று ராவணனிடம் பேச வேண்டியதை அங்கதனிடம் சொல்லிக் கொடுத்தார். தவத்தினால் நீ பெற்ற வரங்களினாலும் சக்திகளினாலும் கர்வம் கொண்டு துஷ்டனாகி பாவங்கள் பலவும் செய்து விட்டாய். இந்த உலகத்தில் உள்ளவர்களை மிகவும் துன்புறுத்தி விட்டாய். இறுதியாக ராமரின் மனைவியை ஏமாற்றி அவளை தூக்கிவந்து பெரும் பாவத்தை சேர்த்துக் கொண்டாய். இப்போது உனக்கு இறுதி எச்சரிக்கை செய்கிறோம். ராமரின் மனைவியை ராமரிடம் ஒப்படைத்துவிட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரிடம் சரணடைந்து உனது உயிரை காப்பாற்றிக் கொள். இல்லையென்றால் ராமரின் அம்பில் நீ அழிந்து விடுவாய். உனது வலிமையின் மேல் நம்பிக்கை வைத்து யுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீ இருந்தால் இறுதியாக உன்னுடைய இந்த இலங்கையை ஒரு முறை சுற்றிப் பார்த்துகொள். யுத்தத்தில் நீ வெற்றி பெறுவாய் என்று உன்னை நம்பி உனக்கு சாதகமாக யுத்தம் செய்ய வருபவர்கள் ஒருவர் கூட தப்பிப் பிழைக்க மாட்டார்கள். இறுதியில் உனக்கு ஈமக்கிரியைகள் செய்யக் கூட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே உனது ஈமக்கிரியைகளை நீயே செய்து கொண்டு உனது கோட்டையை விட்டு வெளியே வந்து ராமரிடம் யுத்தம் செய். ராமர் யுத்தத்திற்கு தயாராக உனது கோட்டை வாயிலில் காத்திருக்கிறார். உன்னை அழித்ததும் இந்த இலங்கைக்கு விபீஷணன் அரசனாக இருப்பான். இந்த இலங்கையை ஆட்சி செய்யவும் இந்த மக்களை காப்பதற்கும் தகுதியானவன் விபீஷணன். ராமர் அவனுக்கு ஏற்கனவே இலங்கையின் அரசன் என்று பட்டாபிஷேகம் செய்துவிட்டார் என்று ராவணனிடம் தூதுவனாக நான் கூறிய இந்த செய்திகளை சொல்லி விட்டுவா என்று ராமர் அங்கதனை அனுப்பினார்.

ராமரின் கட்டளைப்படி கிளம்பிய அங்கதன் ஒரே தாவலில் ராவணனின் கோட்டைக்குள் நுழைந்து அரசவைக்குள் சென்றான். அங்கிருந்த ராவணனிடம் மிகவும் கம்பீரமாக பேச ஆரம்பித்தான் அங்கதன். வாலி யார் என்று உனக்கு தெரிந்திருக்கும். அந்த வாலியின் மகன் நான். எனது பெயர் அங்கதன். ராமரின் தூதுவனாக வந்திருக்கிறேன் என்று ராமர் கூறிய அனைத்து செய்திகளையும் ராவணனிடம் சொல்லி முடித்தான். அங்கதன் சொன்னதை கேட்ட ராவணன் கோபம் கொந்தளிக்க இந்த வானரத்தை பிடித்து கொல்லுங்கள் என்று கத்தினான். அதிபயங்கரமான ராட்சர்கள் பெரிய உருவத்தை எடுத்து அங்கதனை பிடித்து கயிற்றினால் கட்ட முயற்சித்தார்கள். உடனே அங்கதன் ராட்சசர்களோடு ஒரே தாவலில் ஆகாயத்திற்கு தாவி பிடித்திருந்த ராட்சசர்களை உதறித் தள்ளி உதைத்துத் தள்ளினான். அங்கதனை விட்ட ராட்சசர்கள் அனைவரும் கீழே விழுந்தார்கள். அதனை கண்ட ராட்சசர்கள் அனைவரும் ஒரு வானரத்திற்கே இத்தனை வலிமை என்றால் வந்திருக்கும் அனைத்து வானரங்களின் வலிமையையும் ஒன்று சேர்த்தால் எவ்வளவு வலிமை இருக்கும் அவர்களை எப்படி எதிர்த்து வெற்றி கொள்வோம் என்று பயந்தனர். அனைவரின் பயத்தை கண்ட ராவணன் இதனை ஒரு அபசகுனமாக கண்டு பெரு மூச்சுவிட்டான்.