மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -8

பாண்டவர்கள் தெய்வீகம் நிறைந்த பல இடங்களைப் பார்த்த பிறகு கைலாச கிரியை அடைந்தனர். சாந்திக்கு உறைவிடமாக அந்த இடம் திகழ்ந்து கொண்டிருந்தது. பத்ரிகாஸ்ரமம் என்னும் புண்ணிய ஸ்தலம் அந்த வட்டாரத்தில் இருந்தது. அந்த இடம் நரன் நாராயணன் என்னும் ரிஷிகள் பண்டைய காலத்தில் தவம் செய்த இடம். அங்கு சில காலம் தங்கினார்கள்.

பத்ரிகாஸ்ரமம் இருக்கும் காட்டில் இயற்கை எழிலுடன் இருந்தது. ஒரு நாள் காலையில் தரையில் முளைத்திருந்த செடிகளில் மலர்ந்திருந்த விதவிதமான நிறங்களை உடைய மலர்களை பார்த்து திரௌவுபதி மகிழ்வுற்று இருந்தாள். அப்பொழுது வடகிழக்கு திசையிலிருந்து அடித்த காற்றானது ஓர் அற்புதமான மலரை அங்கு கொண்டுவந்து போட்டது. அந்த மலர் மிக்க அழகுடனும் நறுமணத்துடனும் இருந்தது. திரௌபதி அதை எடுத்து பீமனிடம் காட்டி இந்த மலர் வளர்ந்து இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து சில மலர்களை கொண்டு வந்து கொடுக்கும்படி அவள் அவனிடம் வேண்டிக் கொண்டாள். அவளுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைக்க பீமனும் உற்சாகமாய் காட்டிற்குள் புறப்பட்டுப் போனான். யானை ஒன்று புதர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு சஞ்சரிப்பது போன்று இருந்தது பீமனுடைய நடை. அவன் போன போக்கை முன்னிட்டு பறவைகளும் விலங்குகளும் நாலா பக்கமும் பரந்து ஓடின.

பருத்த மேனியுடன் குரங்கு ஒன்று காட்டு வாழை மரங்கள் நிறைந்திருந்த இடத்தில் படுத்திருப்பதை பீமன் பார்த்தான். பெரிய அந்த குரங்கை தூங்கத்தில் இருந்து எழுப்ப இடி இடித்தார் போல் பீமன் கத்தினான். உறக்கத்திலிருந்த குரங்கு ஒரு கண்ணை சிறிது திறந்து பார்த்தது பண்புள்ள ஒரு பெருமகன் போன்று நீ தோன்றுகின்றாய். ஆனால் ஒரு பாமரன் போன்று வனத்தில் வசித்து வரும் உயிரினங்களை நீ உபத்திரவப் படுத்துகிறாய். அனைத்து உயிர்களிடத்திலும் ஒழுங்காக நடந்து நடந்து கொள்வதே அறச்செயல் என்று குரங்கு கூறியது. அதற்கு பீமன் நீ சொல்வது எனக்கு புரிகிறது. ஆனால் நான் அவசரமாக போய்க் கொண்டிருக்கிறேன். தயவு செய்து நான் செல்வதற்கு எனக்கு வழி விடு என்று கூறினான். அதற்கு குரங்கு நான் மிகவும் களைத்துப் போய் அரைத்தூக்கத்தில் இருக்கிறேன். என்னால் எழுந்து கொள்ள இயலாது. என்னை குதித்து தாண்டி கொண்டு நீ போகலாம் என்று அனுமதி கொடுத்தது.

என்னை விட நீ வயதில் முதிர்ந்தவனாக இருக்கின்றாய். உன்னை தாண்டி செல்வது மரியாதை ஆகாது. நீ என்னை விட இளையவனாக இருந்தால் அனுமன் கடலைத் தாண்டியது போன்று நான் உன்னை தாண்டி இருப்பேன். ஆனால் என்னால் இப்பொழுது அப்படி செய்ய இயலாது என்று கூறினான். அப்படியானால் ஒரு பக்கம் எனது வாலை ஒதுக்கி தள்ளி வைத்துவிட்டு உனக்கு தேவையான பாதையை அமைத்துக் கொண்டு செல் என்று குரங்கு கூறியது. ஒரு வயது முதிர்ந்த குரங்குக்கு வரம்பு கடந்த மரியாதை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று பீமன் எண்ணிக்கொண்டு அந்த குரங்கின் வாலை தன் இடக்கையால் தூக்கி வைக்க அவன் முயன்றான். ஆனால் குரங்கின் வாலை தூக்க அவனால் இயலவில்லை. பிறகு இரண்டு கைகளாலும் தூக்க முயன்றான். தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தினான். வால் அசையவில்லை. பீமனுக்கு தன்னுடைய வாழ்நாளில் ஏற்பட்ட முதல் தோல்வி இது.

தொடரும்……….

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.