சுலோகம் -63

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #16

நிலையாக இல்லாத ஒன்று எப்போதும் உள்ளது என்று கூறுவது பொருந்தாது. நிலையாக இருக்கும் ஒன்று இல்லை என்று கூறுவதும் பொருந்தாது. இந்த இரண்டைப் பற்றியும் ஞானம் உள்ளவர்கள் உள்ளது உள்ளபடியே அறிந்து கொள்கிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

நம்மால் பார்க்கக் கூடிய உணரக்கூடிய மற்றும் மாறிக் கொண்டே இருக்கக்கூடிய நிலையில்லாத இந்த உடம்பு மற்றும் ஐந்து புலன்களினால் வரக்கூடிய இன்ப துன்பங்கள் எப்போதும் இருக்கும் இதுவே உண்மை என்று நம்புவது தவறானது. ஏனேனில் இது முன்பு இல்லை. தற்போது அனுபவிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே உள்ளது. அனுபவம் முடிந்த பின்பு இருக்காது. மறைந்து விடும் தேடினாலும் கிடைக்காது அழிந்துவிடும். இல்லாத ஒன்றிற்காக வருத்தப்படுகிறாய்.

அடுத்தபடியாக மனித ரீதியில் பார்க்க முடியாத உணர முடியாத எப்போதும் அழியாமல் இருக்கும் இறைவன் மற்றும் இறைவனின் பகுதியான இந்த ஜூவாத்மா இல்லை என்று சொல்வதும் தவறானது. ஞானிகள் தங்கள் தவத்தின் வழியாக இந்த ஜூவாத்மாவை அறிந்து கொண்டு பரமாத்மாவிடம் செல்லும் வழியை ஆராய்ந்து அறிந்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் கண்ட உண்மை என்னவெனில் பரமாத்மாவும் அதன் பகுதியான ஜூவாத்மாவும் நிலையாக இருக்கும் எப்போதும் அழியாத ஒன்று. இதனை ஆராய்ந்து உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டும். எனவே நிலையானதை ஆராய்ந்து தெரிந்து கொண்டு உனது வருத்தத்தை விட்டுவிடு. ஐந்து புலன்களால் பார்க்கப்படும் உணரப்படும் நிலையில்லாதவைகளின் மேல் வருத்தம் கொள்ளாதே என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 88

கேள்வி: ஒரு ஆன்மா எந்த உடலைத் தேர்ந்தெடுக்கிறதோ அந்த உடலுடன் வளர்கிறது. சில உடல்கள் பார்ப்பதற்கு அழகாகவும் ஆரோக்யமாகவும் இருக்கிறது. அதே சமயம் அழகற்றதாகவும் ஆரோக்யமில்லாமலும் இருந்தாலும் ஒரு ஆன்மா ஆன்ம பலத்தைப் பெற்றிருக்கிறது. இவை இரண்டும் உடலை உகுந்த பிறகு எப்படி இருக்கும்?

உடலின் ஏற்ற மாற்றங்கள் ஆன்மாவை பாதிப்பதில்லை. ஆனாலும் கூட இந்த உலகிலே ஆன்மாவைப் பார்க்கின்றவர்கள் யாருமில்லை. உடலைப் பார்த்துதான் எடைப் போடுவார்கள் மதிப்பீடு தருவார்கள். அப்படி ஆன்மா உயர்வாகவும் உடல் பிறரால் மதிக்கப்படாமல் இருக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு ஒரு ஆன்மா தள்ளப்பட வேண்டும் என்றால் அதற்கு ஏற்றாற்போல் பாவ புண்ணியங்கள் இருக்க வேண்டும். சில மகான்களும் ஞானிகளும் விரும்பியே பிறர் தன்னை மதிக்கக்கூடாது என்பதற்காக அழகற்ற தேகத்தை பெறுவதும் உண்டு. அஷ்டாவக்ரர் அப்படித்தான். அஷ்ட வக்ரம் எனப்படும் எட்டு விதமான கோணல்களோடு கூடிய உடம்பைப் பெற்று பிறவியெடுத்தார். அவரைப் பார்ப்பவர்கள் எல்லாம் ஏளனம் செய்தார்கள். அது குறித்து அவர் வருத்தப்படவில்லை. ஏனென்றால் இந்த ஆன்மா பயணம் செய்வதற்கு ஏதோ ஒரு உடல் என்ற அளவில் மட்டும்தான் அதை நினைத்தார். தேகம் (உடல்) அழகாக இருக்க வேண்டும் என்பதைவிட ஆரோக்யமாக இருக்க வேண்டும் என்பதில்தான் மனிதன் கவனம் செலுத்த வேண்டும். தேகத்தை விட ஆன்மா அழகாக இருப்பதே மனிதனுக்கு ஏற்புடையது. ஆன்மாவிற்கு அழகு எது? என்றால் தர்மமும் சத்தியமும் தான். அதை மட்டும் ஒரு மனிதன் வளர்த்துக் கொண்டால் போதும். ஒரு நிலையிலே இந்த தேகத்திற்கு ஏற்படக்கூடிய வயோதிகம் இளமை அழகு அனைத்துமே தேகத்தோடு முடிந்து விடுகிறது. ஆன்மாவை அணுவளவும் பாதிப்பதில்லை.

சடையாச்சி அம்மாள்

திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தர்களில் குறிப்பிடத்தக்கவர் சிவஞானி சடையாச்சியம்மாள். இவரின் சடை பதினாறு அடி நீளமும் ஒரு அடி அகலமும் இருந்தததால் சடையாச்சி அம்மையார் என்ற பெயர் ஏற்பட்டது. இவர் சடை சாமியார் என்றும் அழைக்கப்பட்டு வந்தார். சடையாச்சி அம்மாளின் இயற்பெயர் சண்முகத்தம்மாள். இவரது சொந்த ஊர் ராஜபாளையம் தனது நாற்பதாம் வயதில் தனது சொந்த ஊரில் இருந்து திருவண்ணாமலை வந்த இவர் இல்லற வாழ்க்கையைத் துறந்து துறவு பூண்டவர். திருவண்ணாமலையில் முலைப்பால் தீர்த்தம் பலாமரத்தடி குகை ஆகியவற்றில் வாழ்ந்து வந்தார். அண்ணாமலையாருக்குத் தும்பைப் பூவால் கட்டிய மாலையை தினமும் சாற்றி வந்தார். ஈசனை எண்ணிப் பல மணி நேரம் தியானம் செய்யும் வழக்கம் கொண்டவர். தும்பைப் பூ போட்டால் துன்பம் தீரும் இது சிவனுக்குப் பிரியமானது என்று பக்தர்களுக்கு எடுத்துரைப்பார் சடையாச்சி அம்மாள். வெயில் மழை புயல் காற்று என்று எந்த இயற்கைச் சீற்றத்திற்கும் அஞ்சாமல் தினந்தோறும் கோயிலுக்கு வந்த சடையாச்சி அம்மாள் நடுவில் ஒரு வார காலம் தரிசனம் செய்யக் கோயிலுக்கு வரவில்லை. அம்மைக்கு என்ன ஆனதோ என்று அர்ச்சகர் கவலையுற்றார். அன்று அர்ச்சகர் கனவில் தோன்றிய சிவன் குளத்தில் நீருக்குள் அவர் அமிழ்ந்திருப்பதாக எடுத்துக் கூறினார். குளத்தில் உள்ள படிக்கட்டுகளுக்கு அடியில் உள்ள இடைவெளியில் படுத்த நிலையில் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் சடையாச்சி அம்மையார். ஐந்து நாட்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தபொழுதும் அவர் உயிருடன் மீட்க்கப்பட்டார். அதன் பிறகு பல ஆண்டுகள் வாழ்ந்த இவர் திருவண்ணாமலையிலேயே ஜீவ சமாதி அடைந்தார்.

சுலோகம் -62

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #15

அர்ஜூனா இப்படிப்பட்ட சுக துக்கங்கள் யார் ஒருவனை பாதிப்பதில்லையோ யார் ஒருவன் இரண்டையும் சரிசமமாக எண்ணுகிறானோ அப்படிப்பட்ட மனிதன் உயர்ந்த மோட்சம் பெறும் தகுதி அடைகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் -61 ல் கிருஷ்ணரால் சொல்லப்பட்ட உபதேசத்தை யார் ஒருவன் உணரந்து ஐந்து புலன்களினால் உண்டாகும் சுகத்தால் துள்ளிக் குதிக்காமலும் துன்பத்தால் வருத்தப்படாமலும் இருக்கிறானோ அவன் ஞானியாகிறான். இதனால் அவன் மோட்சம் பெறும் தகுதியை பெறுகிறான் என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 87

கேள்வி: வாகன விபத்தில் ஒரு உயிர் பிரிந்தால் அந்த வாகன ஓட்டிக்கு அதனால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுமா? அல்லது அறியாமல் செய்த தவறு என்று மன்னிக்கப்படுமா?

வேண்டுமென்றே செய்தால் அப்பொழுது பாவத்தின் அளவு 100-க்கு 100 விழுக்காடு தாக்கும். அறியாமல் செய்தால் பாவத்தின் தாக்கம் அந்த அளவு இல்லையென்றாலும் கூட ஓரளவு அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அறியாமையினாலே செய்தேன் என்று கூறினாலும் கூட அந்த பாவத்தின் அளவு ஏதாவது ஒரு வகையில் பாதிப்பாக அமையும். அறியாமல் தொட்டாலும் அறிந்து தொட்டாலும் நெருப்பு சுடத்தானே செய்யும்.

கேள்வி: விருக்ஷங்களிலும் (மரங்கள்)ஆன்மா இருக்கிறது புல்களிலும் ஆன்மா இருக்கிறது. நுண்ணிய கிருமிகளிலும் ஆன்மா இருக்கிறது. அனைத்து ஆன்மாக்களுமே மேன்மையடைந்து முக்தி அடைய வேண்டும் என்று முன்னர் கூறியிருந்தீர்கள். இந்த அறையிலேயே கோடான கோடி கிருமிகள் இருக்கக்கூடும். இந்த நுண்ணிய கிருமிகளாய் பிறப்பெடுக்க வேண்டுமென்றால் அது என்ன கர்ம வினை?

ஒரு சில பாவங்கள் என்பதல்ல. எத்தனையோ வகையான பாவங்களின் தொகுப்புதான் நாங்கள் (சித்தர்கள்) முன்னரே கூறியது போல் ஆன்மாவின் சட்டையாக (உடலாக) மாறுகிறது. ஒரு ஆன்மாவின் சட்டையைப் (உடல்) பொறுத்து அதன் பாவத்தைப் புரிந்து கொள்ளலாம். அதாவது ஒரு ஆன்மாவிற்கு பெரும்பாலும் மனித சட்டை கொடுக்கப் படுகிறதென்றால் பெரும்பாலும் புண்ணிய பலன் இருக்கிறது என்று பொருள். அதற்காக விலங்குகளாகப் பிறந்த அனைத்து ஆத்மாக்களும் முழுக்க முழுக்க பாவிகள் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. அதிலும் விதி விலக்குகள் உண்டு. சில புண்ணிய ஆத்மாக்கள் கூட சில காரணங்களுக்காக விலங்குகளாக பிறவியெடுப்பதும் உண்டு. அவற்றையெல்லாம் விலங்குகள் என்ற வரிசையில் சேர்க்கக்கூடாது. ஆனால் பொதுவாக விலங்குகள் என்று பார்க்கும் பொழுது அறியாமையிலே பிறவிகள் எடுக்கக்கூடிய உயிர்கள் அனைத்துமே கோடான கோடி பாவங்களை நுகர்ந்து தீர்ப்பதற்காக இது போன்ற விலங்குகள் பிறவியைப் பெறுகின்றன.

விலங்களுக்கு அதன் செயல்களுக்கு முழுக்க முழுக்க அதன் பாவங்களைக் கழிப்பதற்குண்டான நிலைதான் இருக்கிறது. புதிதாக புண்ணியத்தை சேர்த்து கொள்ள இயலாது. புதிதாக பாவத்தையும் சேர்த்துக் கொள்ள இயலாது. உதாரணமாக ஒரு நூறு பிறவி ஆடாக பிறந்து அது தன் உயிரை மனிதனின் அசுரத்தனத்தால் தன்னைக் கொன்று உண்ணக்கூடிய மனிதனுக்கு தன் உடல் பயன்படவேண்டும் என்ற விதி பெற்று அந்த ஆடு பிறக்கும் பொழுது அதனுடைய கர்மாவானது அதன் கழுத்தில் இருக்கிறது. நாங்கள் அடிக்கடி கூறுவது போல அதனை வெட்டுகின்ற கத்தியானது அதன் கர்மாவைக் குறைக்கிறது. ஆடு கத்திக் குறைக்கிறது. எனவே இப்படி பிறவியெடுத்து பிறவியெடுத்து அதன் பாவங்கள் தீர்ந்த பிறகு அடுத்த தேகத்தை (உடலை) நோக்கி செல்கிறது. இப்படி மேலேறி மேலேறி ஒரு தினம் அல்லது ஏதாவது ஒரு பிறவியிலே மனிதனாக அல்லது மனித சட்டை (உடல்) கொடுக்கப்பட்டு சற்றே சிந்தனையாற்றலும் கொடுக்கப்படுகிறது. ஆனால் எதற்காக கொடுக்கப்படுகிறது? இன்னும் மேலேறி செல்ல வேண்டும். மனிதனாக புனிதனாக மாமனிதனாக மகானாக ஞானியாக முனிவனாக சித்தனாக அல்லது தேவனாக கந்தர்வனாக. ஆனால் இந்த இடத்திற்கு வந்த பிறகு மனிதன் தன் செயலால் மீண்டும் கீழ் நோக்கியும் செல்கிறான் அல்லது மேல் நோக்கியும் செல்கிறான். கீழ் நோக்கி செல்லாதே என்று வழிகாட்டத்தான் எம் போன்ற மகான்களை இறைவன் படைத்து அருளாணை இட்டிருக்கிறார்.

அம்மணி அம்மாள்

திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற ஊரில் கோபால்பிள்ளை ஆயிஅம்மாள் தம்பதிக்கு 1735 ஆம் ஆண்டு மார்கழி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர் அருள்மொழி. இவருக்கு தாண்டவம்பிள்ளை என்ற அண்ணன் ஒருவரும் இருந்தார். அருள்மொழி சிவபெருமான் மீது அளவற்ற பக்தியைக் கொண்டிருந்தார். தினமும் ஊதுவத்தி ஏற்றி வைத்து சாம்பிராணி வைத்து ஓம் நமச்சிவாய என்று மந்திரத்தை சொல்லிக் கொண்டே தினமும் தியானம் செய்வார். வீட்டிற்கு வெளியே சென்றாலும் யாரும் இல்லாத இடத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தபடியே இருப்பார். பழங்கள் காய்கள் என்று இயற்கை உணவை மட்டுமே சாப்பிட்டார். தான் அமருகின்ற இடம் எந்த இடமாக இருந்தாலும் அங்கு தண்ணீர் தெளித்து தூய்மை செய்த பின்னரே அமர்வார். இதனைக் கண்ட பெற்றோர் இவள் வயது பெண்கள் எல்லாம் தோழிப் பெண்களோடு விளையாடிக் கொண்டும் காட்டில் வேலை செய்து கொண்டும் இருக்கிறார்கள். இவள் மட்டும் அமைதியுடன் எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறாளே எங்கிருந்து வந்தது இந்தப் பெண்ணிற்கு இவ்வளவு பக்தி என்று குழப்பத்துடனே இருந்தார்கள். இவளுக்கு திருமணம் செய்து வைத்தால் அனைத்தும் சரியாகும் என்ற எண்ணத்தில் வரன் பார்க்க ஆரம்பித்து சொந்த மாமன் மகனை மணமகனாகப் பேசி முடித்தார்கள் தாய் தந்தை மற்றும் உறவினர்கள். ஒரு நாள் அருள்மொழியை பெண் பார்க்க வருவதாகவும் தயாராக இருக்கும்படியும் தாய் கூறினார். துடித்துப் போனாள் அருள்மொழி என்ன செய்வது? என்று தெரியாமல் திகைத்தாள். நான் இதற்காக பிறவி எடுக்கவில்லை என்று எவ்வளவோ பேசிப் பார்த்தாள் பயனில்லை. பரிசம் போட்டுவிட்டால் எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று பயந்தாள்.

ஓம் நமச்சிவாய மந்திரத்தை சொல்லியபடி திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற தெளிவான மனதோடு கால் போன போக்கில் வேகமாக நடக்கத் துவங்கினாள். வீட்டிலிருந்து 1 கிமீ தூரத்தில் உள்ள கோமுட்டிக் குளத்தின் முன் சென்று நின்றாள். எல்லாம் உன் செயல் என்று இறைவனை நினைத்து மந்திரத்தை உச்சரித்தபடி அந்தக் குளத்தில் குதித்து விட்டாள் அருள்மொழி. குளத்தைச் சுற்றி இருந்த வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அவள் விழுந்ததைப் பார்த்து ஓடி வந்தார்கள். குளத்தில் குதித்துத் தேடிப் பார்த்தார்கள். அவளது தாய் தந்தை அழுதபடியே குளத்தின் அருகில் அமர்ந்து விட்டார்கள். குளத்திற்குள் அவள் எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. அனைவரும் எவ்வளவோ சொல்லியும் அவளது தாய் தந்தை குளக்கரையை விட்டு நகர மாட்டேன் என்று குளத்தைப் பார்த்தபடி அங்கேயே இருந்தார்கள். மூன்று நாள் சென்றது. மூன்றாவது நாள் குளம் திடீரென சல சலத்தது. தாயும் தந்தையும் ஆர்வத்தோடு அருகே சென்று பார்த்தார்கள். அங்கே தேஜசான முகத்துடன் உயிருடன் வெளிவந்தாள் அருள்மொழி. செய்தியே கேள்விப்பட்டு ஊரில் உள்ளவர்கள் அனைவரும் கூடிவிட்டார்கள். அனைவருக்கும் அங்கிருந்த குளக்கரை மணலை எடுத்து கொடுத்தாள் அருள்மொழி. அது அவல் பொரியாக பிரசாதமாக மாறி அனைவரின் கையில் இருந்தது. தனக்கு சிவபெருமானே குருவாக இருந்து யோக நிலையைக் கற்றுத் தந்ததாகவும் தான் ஒரு பெண் சித்தராக மாறி விட்டதாகவும் கூறிய அருள்மொழி தன் பெயர் அம்மணி அம்மாள் என்றும் கூறினாள். திருமணப் பேச்சை அதோடு விட்டார்கள் தாய் தந்தையர். சில நாட்கள் தியானம் பூஜைகள் என்று அமைதியாக சென்றது.

அம்மணி அம்மாளின் இல்லத்தில் உள்ள அனைவரும் ஒரு நாள் அண்ணாமலையாரை தரிசிக்க நடை பயணமாக திருவண்ணாமலை புறப்பட்டார்கள். பல மணி நேர பயணத்துக்குப் பிறகு தெரிந்த அண்ணாமலையின் கம்பீரம் அம்மணி அம்மாளுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது. அனைவரும் கோயிலை வந்தடைந்து பிராகாரங்களை வலம் வந்து அண்ணாமலையார் சந்நிதி முன்பு போய் நின்றார்கள். அங்கே இறைவனின் திருமேனியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்ட அம்மணி அம்மாள் அர்ச்சகர் தந்த விபூதியை அள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டார். உண்ணாமுலை அம்மன் உள்ளிட்ட எல்லாத் தெய்வங்களின் திருச்சந்நிதி தரிசனமும் முடிந்தாயிற்று. எல்லோரும் வெளியே வந்தார்கள். ஊருக்குப் புறப்படத் தயாராகி அருள்மொழி வா புறப்படலாம் என்று தாயார் அழைத்தார். அம்மா நான் ஊருக்கு வரவில்லை எனக்கு திருவண்ணாமலை மிகவும் பிடித்துப் போய்விட்டது. நான் இங்கேயே இருந்து விடுகிறேன் என்றார் அம்மணி அம்மாள். வயதுக்கு வந்த பெண்ணை எப்படியம்மா தனியாக விட்டுப்போக முடியும்? உன் விருப்பப்படி உன்னை விட்டுச் சென்றால் ஊரார் நமது குடும்பத்தை கேலி பேசுவார்களே யாத்திரை சென்ற இடத்தில் பெண்ணை விட்டுவிட்டு வந்துவிட்டாள் என்றல்லவா புரளி பேசுவார்கள்? அப்படி ஒரு கெட்டப் பெயர் உன்னால் எனக்கு ஏற்பட வேண்டுமா என்று அழுதார் அம்மணி அம்மாளின் தாயார். எதைப்பற்றியும் கவலைப்படாத அம்மணி அம்மாள் அண்ணாமலையாரின் பரவசத்திலேயே லயித்து வரவில்லை என்று முடிவோடு இருந்தார். அவரது தாயும் தந்தையும் பிறகு சமாதானமாகி தனது உறவினர் வீட்டில் அவரைச் சிறிது காலத்துக்குப் பாதுகாப்பாக ஒப்படைத்து விட்டு சென்னசமுத்திரம் புறப்பட்டுச் சென்றார்கள்.

அம்மணி அம்மாள் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபடியே அண்ணாமலையாரை தரிசிக்க தினமும் கோயிலுக்கு வந்து விடுவார். பெரும்பாலான நேரங்கள் அண்ணாமலையார் சந்நிதியிலேயே கழித்தார் நாட்கள் வேகமாக நகர்ந்தன. திருவண்ணாமலையிலேயே நிரந்தரமாகத் தங்கி துறவியாக மாறிவிட்டார் அம்மணி அம்மாள். தினமும் அண்ணாமலையாருக்கு தொண்டு செய்வதும் கிரிவலம் செல்வதுமாக இருந்தார். திருவண்ணாமலை வடக்கு கோபுரம் முற்றுப் பெறாமல் அடித்தளத்துடன் இருப்பதை எண்ணிக் கொண்டே இருந்தார் அம்மணி அம்மாள்.

திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர் மூன்றாம் வீர வல்லாள மகாராஜா. தற்போது திருவண்ணாமலை கோவிலுக்கு இருக்கும் வல்லாள மகாராஜா என்ற பெயருடைய கோபுரத்தை நிர்மாணித்தவர். இவர் கோவிலின் வடக்கு கோபுரம் கட்ட வேண்டும் என்று அடித்தளம் அமைத்தார். அதன் பின்பு அவர் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த கோபுரத்தை அவரால் தொடர்ந்து கட்ட முடியவில்லை. பல வகையில் தடைகள் வந்து கொண்டே இருந்தது. இதனால் வருத்தமடைந்த வல்லாள மகாராஜா திருவண்ணாமலையில் இருந்த ஒரு சித்தரிடம் இதுபற்றிக் கேட்டார். அதற்கு அவர் இந்த கோபுரத்தை உன்னால் கட்ட முடியாது. சரியான நேரம் வரும் போது இதனைக் கட்ட இறைவன் அருளால் ஒரு பெண் வருவாள் அவளாளே இந்த கோபுரம் கட்டி முடிக்கப்படும் என்று கூறினார். அதன் பின் வடக்கு கோபுரம் இறைவனின் விருப்பப்படி நடக்கட்டும் என்று விட்டுவிட்டார். அதன் பிறகு வந்த எத்தனையோ பேர் அந்த கோபுரத்தைக் கட்ட முயற்சி செய்தார்கள் அனைத்தும் முயற்சியுடனே நின்றது.

அம்மணி அம்மாளிடம் வடக்குக் கோபுரத்தை கட்டும் பணியைத் தொடங்கு என்று ஈசன் ஒருநாள் உத்தரவிட்டார். அம்மணி அம்மாள் இறைவனின் பரிபூரண அருளைப் பெற்றிருந்தாலும் முதலில் அவருக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது. ஆனாலும் இறைவனின் ஆணையை நிறைவேற்ற முடிவு செய்து அதற்கான பணியை ஆரம்பித்தார். அம்மணி அம்மாளின் ஆற்றலை அறிந்து வியந்த வணிகர்களும் பொதுமக்களும் தங்களால் இயன்றதைக் கொடுத்தார்கள். சேர்ந்த பணத்தைக் கொண்டு கோபுரம் கட்டும் வேலையை அவர் ஆரம்பித்தார். ஒரு நாள் அந்த ஊரில் இருந்த ஒரு வியாபாரியின் வீட்டிற்கு சென்ற அம்மணி அம்மாள் கோபுரம் கட்டும் பணிக்கு தங்களால் இயன்றதை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அம்மணி அம்மாளைப் பற்றி தெரியாத அந்த வியாபாரி அவரின் எளிமையான துறவித் தோற்றத்தைக் கண்டு இவர் ஏமாற்றுகிறாறோ என்ற எண்ணத்தில் பணம் கொடுக்க விரும்பாமல் பணம் ஏதும் தற்போது என்னிடம் இல்லை என்றார். இதனைக் கேட்ட அம்மணி அம்மாள் குறிப்பிட்ட பணத்தை அளவாக சொல்லி இந்த பணம் தற்போது உன்னுடைய பணப் பெட்டியில் உள்ளது. சரியாக இருக்கிறதா பார்த்துச் சொல் என்றார். அம்மணி அம்மாள் சரியாக சொன்னதைக் கேட்டு திகைத்த வியாபாரி இவர் ஏமாற்றுக்காரர் இல்லை மிகப்பெரிய ஞானி என்பதை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல் தன்னால் இயன்றவரை கோபுரம் கட்டும் பணிக்கு பணத்தை கொடுத்தார். கோபுரம் ஒவ்வொரு நிலையாக கட்டி முடிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்து நிலைகள் வரை கட்டி முடிக்கப்பட்டபோது அம்மணி அம்மாளுக்கு மீண்டும் பணம் தேவைப்பட்டது. பொது மக்களிடமும் வணிகர்களிடமும் திரும்ப திரும்ப எத்தனைத் தடவைதான் பண உதவியும் பொருள் உதவியும் கேட்க முடியும்? எனவே மைசூர் மகாராஜாவிடம் போய் பொன் பொருள் உதவிகள் கேட்க அவர் தீர்மானித்தார் மறுநாளே மைசூருக்கு பயணமானார்.

அம்மணி அம்மாள் மைசூர் அரண்மனையை அடைந்தபோது வாசலில் நின்ற வாயிற்காப்பாளன் அவரின் எளிமையான கோலத்தைப் பார்த்து சந்தேகம் அடைந்து உள்ளே விட மறுத்தான். அம்மணி அம்மாள் அரண்மனை வாயிலின் ஒரு ஓரமாக அமைதியாக அமர்ந்தார் காலையில் வந்தவர் மதியம் வரை ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை உள்ளே தர்பார் மண்டபத்திற்கு லகிமா ஆற்றலால் உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று வந்து விடும் சக்தியைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றார். அதே சமயத்தில் அரண்மனை வாசலில் வாயில் காப்பாளனால் தடுக்கப்பட்ட இடத்திலும் அம்மணி அம்மாள் இருந்தார். ஆக ஒரே நேரத்தில் தனது சக்தியால் இரண்டு இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் காட்டினார். உரிய அனுமதியின்றி ஒரு பெண் தன் அருகே வந்து நிற்பதைக் கண்டதும் மகாராஜா மிகவும் ஆச்சரியமடைந்தார். நீ யார்? எப்படி உள்ளே வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். அம்மணி அம்மாள் தன்னைப் பற்றியும் திருவண்ணாமலை ஆலயத்தில் கோபுரம் கட்டி வரும் தகவலையும் சொல்லி அந்த கோபுரப் பணியை நிறைவு செய்ய பொன்னும் பொருளும் கேட்க வந்தோம். வாயிற்காப்பாளன் தன்னை உள்ளே விட மறுத்ததால் ஒரே நேரத்தில் 2 இடங்களில் தோன்றும் சித்தாடல் மூலம் உள்ளே வந்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் மைசூர் மகாராஜா நம்ப முடியாமல் வாயிற்காவலனை வரச் சொல்லி உத்தரவிட்டார். மகாராஜா இருக்கும் அவைக்குள் வந்த வாயிற் காவலன் சற்று அதிர்ச்சியுடன் அம்மணி அம்மாளைப் பார்த்து நான் உங்களை உள்ளே விடவில்லையே வெளியில் தானே அமர்ந்திருந்தீர்கள். உள்ளே எப்படி வந்தீர்கள்? என்றான். உடனே மகாராஜா நீண்ட நேரமாக அந்த அம்மாளுடன் தான் பேசிக் கொண்டிருப்பதாக கூறி விட்டு வாயிற் காவலனுடன் விறுவிறுவென வாசல் பகுதிக்கு வந்தார். அங்கும் ஒரு ஓரமாக அம்மணி அம்மாள் அமர்ந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது சபைக்குள் இருந்த அம்மணி அம்மாள் மாயமாய் மறைந்திருந்தார்.

அம்மணி அம்மாள் சாதாரண பெண் அல்ல என்பதை மகாராஜா புரிந்து கொண்டார். அம்மணி அம்மாள் வடிவில் அண்ணாமலையாரே வந்து விட்டதாக கருதினார் நன்கு உபசரித்தார். பட்டுப்புடவை ஒன்று பரிசளித்தார். பிறகு தனது குதிரைகள் மற்றும் ஓட்டகங்கள் நிறைய பொன்னும் பொருளும் ஏற்றி கோபுரத்தைக் கட்டி முடிக்குமாறு அம்மணி அம்மாளை மகாராஜா கேட்டுக் கொண்டார். மகாராஜா கொடுத்த அனைத்து பொன் பொருளுடன் மஞ்சவாடிக் கணவாய் என்ற இடத்தை கடந்த பொழுது ஒரு கொள்ளையர்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டார்கள். அம்மணி அம்மாள் அவர்களிடம் இந்த பொன் பொருள் அனைத்தும் சிவனுடையது ஆகவே தொடதீர்கள் என்று எச்சரித்தார். இதனை காதில் வாங்காத கொள்ளையர்கள் குதிரைகள் ஒட்டகம் மேல் இருந்த பொன் பொருளை கொள்ளை அடிக்கும் நோக்கில் தொட்டதும் அனைவரின் கண்களும் தெரியாமல் போனது. பயந்து திருந்திய கொள்ளையர்கள் அம்மணி அம்மாளை சரணடைந்து மன்னிக்கும் படி கேட்டுக் கொண்டார்கள். அம்மணி அம்மாளும் அவர்களை மன்னித்து தன்னிடம் இருந்த விபூதியை கொள்ளையர்களிடம் கொடுத்தார். விபூதியை பெற்ற கொள்ளையர்கள் தங்களின் நெற்றியில் பூசிக் கொண்டதும் அனைவரின் பார்வையும் மீண்டும் திரும்பி அண்ணாமலையாரின் பெருமையை தெரிந்து கொண்டார்கள். அதன்பின் அனைவரும் அம்மணி அம்மாளுடன் திருவண்ணாமலை வந்து கோவில் கோபுரத்தை கட்ட உதவி செய்ய வேண்டும் என்று அவருடனேயே புறப்பட்டார்கள்.

அம்மணி அம்மாள் திருவண்ணாமலை அருகை உள்ள மசார் என்ற கிராமத்தின் வழியாக வந்து கொண்டிருந்த போது ஒட்டகங்கள் தண்ணீர் தாகத்தில் அங்கு இருந்த நீரை குடித்துக் கொண்டிருந்தது. இதனை அங்கு பார்த்த ஒருவர் ஒரு ஒட்டகத்தின் மீது உள்ள மூட்டையை பிரித்துப் பார்த்தார். மூட்டை நிறைய வெள்ளிப் பணத்தைக் கண்டதும் மூட்டையை அப்படியே எடுத்துக் கொண்டு தனது வீட்டில் பூமிக்கு அடியில் பதுக்கி வைத்தார். வெள்ளிப் பணம் இருந்த மூட்டை இல்லாமல் ஒட்டகம் மட்டும் மற்ற ஒட்டகத்துடன் திருவண்ணாமலை சென்று சேர்ந்தது. அம்மணி அம்மாள் திருவண்ணாமலை வந்து சேர்ந்ததும் கொண்டு வந்த பொன் பொருளை சரி பார்த்தார். ஒரு ஒட்டகத்தில் இருந்த மூட்டை மட்டும் காணாமல் இருந்ததைக் கண்டதும் தனது தியானத்தின் வழியாக என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டார். அடுத்த நாள் அம்மணி அம்மாள் மசார் கிராமத்திற்கு சென்று வெள்ளிப் பணம் பதுக்கி வைக்கப்படிருந்த வீட்டிற்கு சென்று அங்கிருந்தவரிடம் நடந்தவற்றை அப்படியே கூறி அனைத்தும் சிவன் சொத்து ஆகவே பூமிக்கு அடியில் பதுக்கி வைத்திருக்கும் மூட்டையை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். வெள்ளிப்பணத்தை பதுக்கி வைத்தவர் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும் தனக்கு ஒன்றும் தெரியவே தெரியாது என்று சாதித்துக் கூறினார். அதனைக் கேட்ட அம்மணி அம்மாள் நீ பதுக்கி வைத்திருக்கும் பொருள் அனைத்தும் சிவனுடையது. அது உனக்கு பயன்படாது என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அம்மணி அம்மாள் சென்றதும் தான் பதுக்கி வைத்திருந்த மூட்டையை வெளியே எடுக்க அந்த மனிதர் பூமியை தோண்டினார். அங்கு மூட்டை இருந்த இடத்தில் சாம்பல் மட்டுமே இருந்தது. அந்த வெள்ளிப்பணம் என்ன ஆனது என்று அம்மணி அம்மாள் யாரிடமும் சொல்லவில்லை.

அம்மணி அம்மாள் மைசூர் மகாராஜா கொடுத்த பொன் பொருட்களைக் கொண்டு கோபுரத்தின் 6-வது மற்றும் 7-வது நிலைகளை எளிதாகக் கட்டி முடித்தார். இன்னும் 4 நிலைகள் கட்ட வேண்டும். பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்தார். அண்ணாமலையாரே வழி காட்டுங்கள் என்று ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டார். அப்போது அண்ணாமலையார் அவர் கனவில் தோன்றி கோபுர வேலையைத் தொடர்ந்து செய் தினமும் வேலை முடிந்ததும் பணியாளர்களுக்கு விபூதியை அள்ளிக் கொடு என்றார். அதன்படியே கோபுர வேலை நடந்தது. தினமும் மாலை பணியாட்களுக்கு சம்பளத்துக்கு பதில் அம்மணி அம்மாள் திருநீறை அள்ளிக் கொடுத்தார். விபூதி அவரவர்கள் செய்த வேலைக்கு ஏற்ற கூலியாக பணமாக மாறியது. வேலை செய்யாமல் இருப்பவர்களின் கையில் கொடுக்கப்பட்ட விபூதி விபூதியாகவே இருந்தது. இப்படி கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. இதன் மூலம் மனதில் துணிச்சலும் இறை அருளும் இருந்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதை அம்மணி அம்மாள் செய்து காட்டினார்.

அம்மணி அம்மாளின் விடாமுயற்சியைக் கண்டு ஆங்கிலேயர்களும் வியந்து நின்றனர். 171 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட அந்த கோபுரம் கிழக்கில் உள்ள ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அம்மணி அம்மன் கோபுரத்திலும் ராஜகோபுரத்திலும் ஒரே மாதிரி தலா 13 கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தெற்கில் உள்ள திருமஞ்சன கோபுரமும் (157 அடி) மேற்கில் உள்ள பேய் கோபுரமும் (144 அடி) வடக்கு கோபுரத்தை விட உயரம் குறைந்ததாகும். (மேற்கு கோபுரம் என்று அழைக்கப்பட்டது பின்நாளில் பேச்சு வழக்கில் மருவி மேக்கோபுரம் என்று மாறியது. பிறகு அது பேக்கோபுரம் என்று பேசப்பட்டது. கடந்த நூற்றாண்டில் பேக்கோபுரம் என்பதை மக்கள் தவறாக பேசி பேசியே பேய்க்கோபுரம் என்று அழைக்க தொடங்கி விட்டனர்.) திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரத்துக்கு அடுத்தப்படியாக பெரிய கோபுரத்தைக் கட்டி சாதனை படைத்ததால் அந்த கோபுரத்தை அனைவரும் அம்மணி அம்மன் கோபுரம் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். நாளடைவில் அந்த பெயரே நிலைத்து நின்றது. இந்தக் கோபுரம் கட்டி முடித்ததும் கோபுரத்துக்கும் ஆலயத்துக்கும் அம்மணி அம்மாள் தாமே முன்நின்று கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

அம்மணி அம்மாள் பிறந்த சென்ன சமுத்திரம் பக்கத்தில் வளையம்பட்டு கிராமத்தில் உள்ளவர்களை ஒரு விதமான வியாதி தாக்கியது. மக்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். எந்த விதமான மருந்துகளுக்கும் அந்த வியாதி சரியாகவில்லை. அங்குள்ளவர்கள் அம்மணி அம்மாளிடம் வந்து இந்த வியாதி போவதற்கு ஏதேனும் ஒரு வழி சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். தியானத்தில் சிறிது நேரம் அமர்ந்த அம்மணி அம்மாள் அந்த ஊருக்கு சென்று அந்ந ஊரின் அமைப்பையே மாற்றி அமைத்தார். ஊருக்கு வெளியே சுடுகாடு அமையுமாறு மாற்றி ஊரின் நுழைவுப் பகுதியையும் மாற்றி அமைத்தார். ஊருக்குள் இருந்த ஒரு புராண காலத்து வினாயகர் கோவிலில் ஒரு பலா மரத்தையும் நட்டு வைத்தார். அதன் பின் அந்த ஊரில் இருந்த வியாதி மறைந்து போனது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இன்றும் அந்த வினாயகர் கோவில் உள்ளது.

அம்மணி அம்மாள் பிறந்த சென்ன சமுத்திரத்தில் அம்மணி அம்மாள் கட்டிய குளம் ஒன்று இன்றும் உள்ளது. அந்த குளத்தை சுற்றி அவர் நட்டு வைத்த மரங்கள் இன்றும் உள்ளது. குளத்தின் அருகில் அவருக்கு தனியாக கோவில் கட்டி இன்றும் வழிபட்டு வருகிறார்கள். அம்மணி அம்மாள் விபூதி வைத்திருந்த சிறிய டப்பா மற்றும் அவரது மோதிரம் மைசூர் ராஜா அவருக்கு கொடுத்த புடவை மற்றும் அவர் உபயோகப்படுத்திய சில பொருட்கள் இன்றும் அங்கு உள்ளது. அம்மணி அம்மாள் துறவி போல் வாழ்ந்து பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு திருநீறு கொடுத்து நோய் தீர்த்தார். திருநீறு மூலம் பல அற்புதங்கள் நிகழ்த்தினார். அம்மணி அம்மாள் பூமிக்குள் புதைந்திருக்கும் புதையலையே அறிந்து கொள்ளும் வல்லமை வாய்ந்தவர். திருநீறு மூலம் அற்புதங்கள் செய்து புகழ் பெற்ற அம்மணி அம்மாள் தன் 50 வது வயதில் 1785 ஆம் ஆண்டு தைப்பூசம் தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8 வது லிங்கமான ஈசான்ய லிங்கம் எதிரில் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் சூட்சுமமாக திருவண்ணாமலையில் இருந்து அருளிக் கொண்டிருக்கிறார்.

அம்மணி அம்மாள் திருவண்ணாமலையில் வாழ்ந்த இடம்

சுலோகம் -61

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #14

குந்தியின் மைந்தனே புலன்கள் தொடர்பு கொள்ளும் பொருட்கள் மூலமாக வெப்பம் மற்றும் குளிர் போன்றவை உடலுக்கு துன்பம் மற்றும் சுகத்தை அளிக்கின்றன. அவை வந்து போவது இயற்கையாகவே நடக்கிறது. விரைவில் அவை அனைத்தும் அழிந்து விடும் தன்மையுடையவை அநித்யமானவை ஆகவே பாரத நீ அவற்றை பொறுத்துக் கொள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உடம்பில் உள்ள கண் காது மூக்கு வாய் உணர்ச்சி ஆகிய ஐந்து புலன்களும் தன்னை சுற்றி உள்ளவற்றோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்புடனேயே இருக்கிறது. உணர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் வெயில் அதிகமான காலங்களில் ஏற்படும் வெப்பம் உணர்ச்சி மூலமாக உடலுக்கு துன்பத்தை கொடுக்கும். இதே வெயில் குளிர் காலத்தில் உடலுக்கு சுகத்தை கொடுக்கும். குளிர் அதிகமான காலங்களில் ஏற்படும் குளிர் உணர்ச்சி மூலமாக உடலுக்கு துன்பத்தை கொடுக்கும். இதே குளிர் வெயில் காலத்தில் உடலுக்கு சுகத்தை கொடுக்கும். சில நாட்களில் அந்த இன்பமும் துன்பமும் மறைந்தும் போகிறது. இது போல் மீதமுள்ள 4 புலன்களின் வழியாகவும் இன்பமும் துன்பமும் ஏற்பட்டாலும் அவை சில மணி நேரத்தில் மறைந்து அழிந்து விடுகிறது. தன்னை சுற்றி உள்ள பொருட்களுடன் ஏதேனும் வகையில் புலன்கள் தொடர்பு கொண்டு இன்பத்தையும் துன்பத்தையும் கொடுக்கின்றன. விரைவில் இந்த இன்பமும் துன்பமும் அழிந்தும் போகின்றது. இது இயற்கையானது நிரந்தரமில்லாதது. ஆகவே அர்ஜூனா நீ பார்ப்பவைகள் கேட்பவைகள் நுகர்பவைகள் உணர்பவைகள் ஆகிய அனைத்தும் சிறிது நேரத்தில் அழிந்து போகும் இவற்றை பொறுத்துக் கொள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 86

கேள்வி: அன்னை தெரசாவைப் பற்றிக் கூறுங்கள் ஐயனே

தொண்டுங்கள் தொடர்ந்து செய்கின்ற எல்லோரையும் இறைவன் அருள் பெற்ற சேய்கள் என்று நாங்கள் கூறுவோம். எனவே நல்லதொரு வழிகாட்டக்கூடிய நூற்றுக்கணக்கான ஞானிகள் இல்லாத தேசத்திலிருந்தும் கூட ஒரு சில மகான்கள் வாழ்ந்த வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய அந்த தேசத்திலிருந்து கூட இப்படி உன்னதமான தொண்டை செய்யக்கூடிய ஒரு நங்கை வந்திருக்கிறாள் என்றால் அது பாராட்டப்படக்கூடிய விஷயம். இந்த சேவை இல்லாததால்தான் இந்து மதம் என்று அழைக்கப்படுகின்ற இந்த மார்க்கம் களங்கப்பட்டு இருக்கிறது. எப்பொழுது சேவையும் பிராத்தனை எனப்படும் பக்தியும் பிரிந்து நிற்கிறதோ அந்த மார்க்கம் வளராது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த இந்து மார்க்கமானது வளர வேண்டும் என்று ஆசைப்படக்கூடிய மனிதர்கள் ஜாதி மத வேறுபாடுகளைக் களைந்து சேவைகளை அதிகப்படுத்தினால் கட்டாயம் இந்த மார்க்கம் உயர்ந்த மார்க்கமாக மாறும். உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட ஆனால் கருத்துக்களைப் பின்பற்றாத மனித கூட்டம் கொண்ட ஒரு மார்க்கம் இது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 85

கேள்வி: ஒரு ஆராய்ச்சியாளர் சர்க்கரை வியாதி மற்றும் சிறுநீரக பிரச்சனை போன்றவற்றை நாமே எளிய வழியில் குணப்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை தேவையே இல்லை என்று கூறுகிறார். இது குறித்து விளக்கம் தர வேண்டும்.

இறைவன் அருளால் முன்பே நாங்கள் கூறியிருக்கிறோம். மனிதன் தன் தேகத்தை பார்க்கின்ற விதம் வேறு. நாங்கள் பார்க்கின்ற விதம் வேறு. ஒரு கருவி போல் தன் தேகத்தைப் பார்த்து அதில் பழுது ஏற்பட்டுவிட்டால் இதற்கு இதுதான் காரணம் என்று கண்டுபிடிப்பது மனித விஞ்ஞானம். அதை அடுத்தடுத்து வருகின்ற மனிதன் மாற்றிக் கொள்ளக்கூடும். ஆனால் அவன் கூறுகின்ற காரணம் எதனால் வருகிறது? என்று பார்த்தால் மீண்டும் அங்கே கர்மவினையைதான் குறிக்கிறது. இன்னும் புரியாத வியாதிகள் எதிர்காலத்தில் வரப்போகிறது. இவையனைத்தும் மனித உடலை பங்கப்படுத்தி அவனை துன்பத்தில் ஆழ்த்துவதற்காக மட்டும் என்று எண்ணிவிடக்கூடாது. எதற்காக இந்த துன்பம் நமக்கு வந்திருக்கிறது? என்று அவன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது ஏன் நம் உடலை வாட்டுகிறது? இதிலிருந்து தப்பித்துக் கொள்ளக்கூடிய உபாயம் என்ன? இதற்கு என்ன வகையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்? என்று பார்ப்பது ஒரு வகை இன்னொன்று நாம் எப்படி வாழ்கிறோம்? என்னென்ன தவறுகள் செய்கிறோம்? எந்தத் தவறும் செய்யாமல் வாழ முயற்சி செய்தால் இந்தப் பிணி நம்மை விட்டு போகுமா? என்று பார்க்க வேண்டும். எனவே ஒரு மனிதனுக்கு துன்ப அனுபவம் எந்த வகையில் வந்தாலும் சிந்தித்துப் பார்க்க இறைவன் அவனுக்கு கட்டளையிடுகிறார் என்பதுதான் பொருள். இதுபோன்ற வியாதிகள் இருப்பது உண்மை. வியாதிகளே இல்லை என்ற கூற்றை நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்கு முறையான சிகிச்சையும் இறை வழிபாடும் ஏழை நோயாளிக்கு தக்க மருத்துவ உதவியும் பிற உதவியும் செய்வதால் இது போன்ற வியாதிகள் தரும் கர்ம பாவங்களிலிருந்து தப்பிக்கலாம்.

சுலோகம் -60

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #13

ஜீவாத்மா இருக்கும் இந்த உடல் எவ்வாறு இளமை வாலிபப்பருவம் பின்பு முதுமை ஏற்பட்டு மரணமடைகிறதோ அப்படியே அதற்கு வேறு உடலும் வந்து சேர்கிறது. இவ்விசயத்தில் தீரன் கலங்கமாட்டான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஜீவாத்மா இருக்கும் இந்த உடல் பிறந்ததும் குழந்தைப் பருவம் அதன் பிறகு இளமைப் பருவம் அதன்பிறகு முதுமைத் தன்மை அடைந்து இந்த உடலில் இருக்கும் உயிர் என்ற மூச்சுக்காற்று நின்று விடுகிறது. அப்போது அந்த உடலில் இருந்த ஜீவாத்மா வெளியே வந்து வேறு உடலை எடுத்துக் கொள்கிறது. இப்படியாக ஜீவாத்மா இறைவனுடன் கலக்கும் வரை பல உடல்களை எடுத்துக் கொள்கிறது. ஜீவாத்மா எத்தனை உடல்களை எடுத்தாலும் அதற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஜீவாத்மா அழிவதில்லை நித்யமாக எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட மன உறுதியுள்ளவர்கள் இதனைக் கண்டு கலங்குவதில்லை இந்த கருத்தை கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு விளக்குகிறார்.