லட்சுமணன் ஊர்மிளை

ராமரும் சீதையும் வனவாசத்துக்குக் கிளம்பினார்கள். அவர்களுக்குச் சேவை செய்ய லட்மணனும் கிளம்பினான். தன் மனைவி ஊர்மிளையிடம் விடை பெற்றுக் கொள்ள அவளது அந்தப்புரத்துக்கு வந்தான் லட்சுமணன். தன் மீது தன் கணவர் கொண்ட பிரியம் ஊர்மிளைக்குத் தெரியும் ஆகையால் இதே பிரியத்துடன் அவர் கானகம் சென்றால் தன் நினைவும் விரகதாபமும் அவரை சரி வர அவர் கடமையைச் செய்ய விடாது அலைக்கழிக்கும் என அவள் வருந்தினாள். ஆகவே அவர் தன்னை வெறுக்கும்படி தான் நடந்து கொள்ளவேண்டும் என நிச்சயித்தாள் ஊர்மிளை. தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு லட்சுமணனை வரவேற்கத் தயாரானாள். லட்சுமணன் கானகம் செல்வதைப் பற்றி கூறியவுடன் தந்தை காட்டுக்குப் போகச் சொன்னது உங்கள் அண்ணனையேத் தவிர உங்களை அல்ல நீங்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும் அண்ணி தான் அண்ணனை மணந்த பாபத்துக்கு அவர் பின்னால் போகிறாள். நானாக இருந்தால் அது கூட போகமாட்டேன். வாருங்கள் என்னுடன் நாம் மிதிலைக்குப் போய் மகிழ்ச்சியாக வாழலாம் என்றாள். லட்சுமணன் கோபத்துடன் நீ இவ்வளவு மோசமானவளா நீ என்னுடன் வர வேண்டாம் என் முகத்திலும் இனி விழிக்க வேண்டாம். இங்கேயே சுகமாகப் படுத்து தூங்கு என் அண்ணனுடனும் அண்ணியுடனும் நான் போகிறேன் என்றான். உங்கள் தூக்கத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் நிம்மதியாகத் தூங்குவேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ஊர்மிளை. அப்படியே ஆகட்டும். எனக் கூறிச்சென்ற லட்சுமணன் ஊர்மிளைக்குத் தன் தூக்கத்தைத் தந்துவிட்ட காரணத்தால் பதினான்கு ஆண்டுகளும் தூங்காமல் ராமனுக்குச் சேவை செய்தான். ஊர்மிளை செய்த தியாகத்தினால் அவளுடைய நினைவும் லட்சுமணனை வாட்டவில்லை. ராம பட்டாபிஷேகம் முடிந்த பிறகு சீதையின் வாயினால் உண்மையை அறிந்த லட்சுமணன் அவளின் தியாக மனமறிந்து ஊர்மிளையை முன்பை விடவும் அதிகமாக நேசித்தான்.

லட்சுமணனின் குணந்தை ஊர்மிளை அறிந்து கொள்ள சீதை ஒரு வழி செய்தாள். பட்டாபிஷேகத்துக்குப் பிறகு ஒரு நாள் தன் கால் கொலுசுகளை ஊர்மிளைக்குப் பரிசாக அளித்தாள் சீதை. அன்றிரவு அவளின் அந்தப்புரத்துக்கு வந்த லட்சுமணனின் பார்வையில் அந்தக் கொலுசுகள் தான் முதலில் பட்டன. தினமும் சீதையின் கால்களை மட்டுமே வணங்கி வந்துள்ள லட்சுமணன் சீதை தன்முன் நிற்பதாகக் கருதி அவள் கால்களில் விழுந்து வணங்கினான். துணுக்குற்றுப் பின்வாங்கிய ஊர்மிளை உண்மையைக் கூற அவளைக் கடிந்து அந்தக் கொலுசுகளை உடனே அண்ணிக்குத் திருப்பித்தர உத்தரவிட்டான் லட்சுமணன். ஊர்மிளையிடம் கொலுசைப் பெற்றுக் கொண்ட சீதை உயர்ந்த கொலுசை அவளுக்குப் பரிசளித்து லட்சுமணன் தன்னிடம் கொண்ட பக்தியை உனக்கு புரிய வைப்பதற்காகவே அவ்வாறு செய்தேன் என்று ஊர்மிளையிடம் கூறினாள்.

ராமரின் பாதுகை

ராமர் சீதையை திருமணம் செய்து கொண்டு அயோத்திக்குத் திரும்பினார். நாட்டு மக்கள் அனைவரும் ராமரை வாழ்த்தி விதவிதமான பரிசுகளை அளித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் இருந்தான். அவன் கைகளில் ராமனுக்கே அளவெடுத்துத் தைத்தது போன்ற அழகான இரு பாதுகைகள் இருந்தன. வரிசையாக ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்த பரிசுப் பொருட்களை தந்துகொண்டிருந்தார்கள். அனைத்தையும் பார்த்த மித்ரபந்துவுக்கு வருத்தம் நேரிட்டது. அனைவரும் விலை உயர்ந்த பரிசுகளைத் தரும் போது நாம் மட்டும் அற்ப காலணிகளையா தருவது என நினைத்தவன் ராமரைப் பார்க்கப் போகாமல் திரும்ப சென்று விடலாம் என்று நினைத்து திரும்பினான். அதனை கவனித்து விட்ட ராமபிரான் அவனை அருகே அழைத்தார். உண்மையான உழைப்பில் உருவான உன் பரிசு தான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்குப் பிரியமானதும் இதுவே என்று ராமர் சொல்ல அவரது அன்பில் நெகிழ்ந்து போனான் மித்ரபந்து. ராமர் வனவாசம் செல்லப் புறப்பட்ட போது வனவாசம் செல்லும் போது எதையுமே எடுத்துச் செல்வது கூடாது. இருப்பினும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்ல எனக்கு அனுமதியுங்கள் என்று கேட்டு அனுமதி வாங்கி தன்னுடன் எடுத்துச் சென்றார் ராமர். கூட்டத்தில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த மித்ரபந்துவை நோக்கி விலை உயர்ந்த எந்தப் பரிசும் எனக்குப் பயன்படவில்லை. நீ அளித்த காலணிகள் தான் என் கால்களைக் காக்கப் போகின்றன என்றார். உண்மை அன்பின் அடையாளமான அந்தப் பாதுகைகளே பின்னர் பரதனால் கொண்டு செல்லப்பட்டு அயோத்தியின் அரியணையில் அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஆட்சியும் செய்தன.

தசரதர் 60000 பெண்களை திருமணம் செய்தது ஏன்?

வேத காலத்தில் காட்டில் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஜமதக்னி முனிவர் சிறந்த தவ ஆற்றல் கொண்டவராக இருந்தார். அந்த ஆற்றலின் மூலமாக சொர்க்கலோக பசுவான காமதேனுவை தனது ஆசிரமத்தில் வளர்த்து வந்தார். அதை கண்ட கார்த்தவீர்யாஜுனன் என்ற அரசன் அந்த காமதேனுவை தனக்கு தருமாறும் அதற்கு இணையான செல்வத்தை தான் தருவதாகவும் ஜமதக்னி முனிவரிடம் கூறினான். அதற்கு ஜமதக்னி முனிவர் மறுப்பு தெரிவிக்க அதை அவரிடமிருந்து பறித்து சென்றான் கார்த்தவீர்யாஜுனன். இதைக் கேள்விப்பட்ட ஜமதக்னியின் புதல்வர் பரசுராமர் கார்த்தவீர்யார்ஜுனனுடன் போரிட்டு அவனை கொன்று அந்த காமதேனு பசுவை மீட்டு வந்து தனது தந்தை ஜமதக்னியிடம் ஒப்படைத்தார். கார்த்தவீர்யாஜுனன் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக அவனது மூன்று புதல்வர்கள் பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவரை 21 முறை வாளால் வெட்டிக்கொன்றார்கள். இதனால் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற பரசுராமர் அந்த மூன்று மகன்களையும் மற்றும் அவனது படைகளையும் சிவ பெருமான் தனக்கு அளித்த கோடரி மூலம் வெட்டி வீழ்த்தினார். மேலும் தனது தந்தை ஜமதக்னி முனிவரை கொடூரமாக கொன்ற சத்திரியர்களான அரசர்கள் மீது பரசுராமருக்கு மிகுந்த வெறுப்பு ஏற்பட்டது. எனவே இந்த நாட்டின் எந்த ஒரு சத்ரிய பரம்பரையின் 21 தலைமுறையினரையும் தான் வெட்டி வீழ்த்தப்போவதாக சபதம் ஏற்று அப்படியே செய்து வந்தார்.

அயோத்திய நகரை அப்போது ஆண்டு வந்த சத்ரிய குலத்தில் உதித்த தசரத சக்ரவத்தி தனது நாட்டை தர்மத்தின் படி ஆட்சி புரிந்து வந்தார். பல போர்களில் வெற்றி பெற்றிருந்த வீரராக தசரதர் இருந்தாலும் பரசுராமரின் போர்திறன் தவசக்தி மற்றும் சிவ பெருமானிடம் அவர் தவமிருந்து பெற்ற கோடரி போன்றவை அவரிடம் இருக்கும் வரை இந்த பூமியில் தான் உட்பட எந்த சத்ரியனும் அவரை வெல்ல முடியாது என்று அறிந்து வைத்திருந்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையை தீர்க்க வழி தேடினார். புதிதாக திருமணம் புரிந்திருக்கும் எந்த ஒரு அரசனையும் போருக்கு அழைக்காமல் அவனை ஆசிர்வதித்து செல்லும் பரசுராமரின் குணம் பற்றி அறிந்தார் தசரதர். பரசுராமரின் பலவீனத்தை தெரிந்து கொண்ட தசரதர் ஒவ்வொரு முறை பரசுராமர் தன்னை போருக்கு அழைக்க நேரில் வரும் போதும் புதிதாக ஒரு பெண்ணை திருமணம் புரிந்து பரசுராமரின் முன்பு தோன்றினார். பரசுராமர் அவரை போருக்கு அழைக்காமல் அவரையும் அவரது புது மனைவியையும் ஆசிர்வதித்து விட்டுச் சென்றார். இப்படி ஒவ்வொரு முறையும் யுத்தம் நடக்காமல் இருக்க பரசுராமர் பார்வையில் படும் போதெல்லாம் ஒரு பெண்ணை புதிதாக திருமணம் செய்து கொண்டு அவர் முன் தோன்றினார். தனது நாட்டு மக்களுக்கு அரசனாக சேவை செய்யும் பொருட்டு தான் உயிருடன் இருக்க வேண்டிய அவசியத்திலேயே தசரதசக்கரவர்த்தி இத்தனை திருமணம் புரிந்தார்.

ஸ்ரீமன் நாராயணர்

அந்தணர் ஒருவர் கலகை என்பவளுடன் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சாந்த குணமுடையவர். கலகை அந்தணருக்கு எதிர்மறையாக இருந்தார். இவள் கணவர் வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்வாள். இதனால் வெறுப்படைந்த அந்தணர் வீட்டை விட்டு வெளியில் கிளம்பிச் சென்றார். அவ்வாறு செல்லும்போது வழியில் அந்தணரை பார்த்து ஐயா எங்கே போகிறீர்? ஒருவர் என்று கேட்டார். மனைவியின் துன்பம் என்னால் தாங்க முடியவில்லை. அதனால் வீட்டைவிட்டு வெளியேறி போகின்றேன் என்றார். வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்கிறாள். வேண்டும் என்பதை வேண்டாம் என்று செய்கிறாள். அன்பரே நான் சொல்லும்படி கடைப்பிடியுங்கள். உங்களுக்கு வேண்டாம் என்பதை வேண்டும் என்று சொல்லுங்கள் என்றார். இதைக் கேட்டு மகிழ்ந்த அந்தணர் வீட்டுக்குச் சென்று கலகை இன்று நான் சாப்பிடமாட்டேன் என்றார். சாப்பிடு என்று உணவை கோபத்துடன் கொடுத்தாள். இவ்வாறு அந்தணர் கலகையிடம் வேண்டும் என்பதை வேண்டாம் என்று கூறியும் வேண்டாம் என்பதை வேண்டும் என்று கூறியும் சுகமாக வாழ்ந்து வாழ்ந்தார். ஒருநாள் அந்தணர் மனைவியிடம் கலகை நாளை என் தந்தையாருடைய சிரார்த்தம். வீடு வாசல் மெழுகாதே. நீராடாதே. சமைக்காதே என்ற கூறினார். அவள் எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்து வைத்தாள். பிண்டப் பிரசாதத்தை ஜலதாரையில் கொட்டுமாற சொல்லியருக்க வேண்டும். அவர் சற்றுக் கவனக்குறைவாக பிதுர் பிரசாதத்தைச் சுத்தமான நீரில் கொட்டுமாறு கூறிவிட்டார். அவள் அதைக் கொண்டு போய் அசுத்தமான தண்ணீரில் கொட்டிவிட்டாள். அந்தணர் கோபத்தில் எனக்கு ஆயிரமாயிரம் குற்றங்கள் செய்தும் அத்தனையும் பொறுத்துக்கொண்டேன். பிதுர்களின் தூய பிரசாதத்தை ஜலதாரை தண்ணீரில் கொட்டினாயே இது எவ்வளவு பெரிய பாவம் கலகை. அதனால் கலகை என பெயர் பெற்ற நீ அலகையாகப் (பேய்) போகக் கடவது என்று சாபமிட்டார். அந்த சாபத்தால் அவள் பெண் பேயாக மாறினாள். அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து வேதனைப்பட்டாள்.

தர்மாங்கதர் என்ற ஓர் முனிவர் கங்கைக்கரையில் ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை செபித்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார்.
கங்கைக் கரையில் ஜபம் செய்து கொண்டிருந்த தர்மாங்கதரை இந்த பெண் பேய் பிடிக்கச் சென்றது. அப்போது முனிவர் கமண்டலத் தண்ணீரை ஓம் நமோ நாராயணாய என்று தெளித்தார். அந்த மந்திர நீரால் அவளது பாவமும் சாபமும் விலகிவிட்டன. அவள் அவருடைய அடிமலர் மீது வீழ்ந்து தொழுது தர்மாங்கதரே நான் கலகை என்ற பெயருள்ள பெண். கணவனுக்கு குற்றங்கள் செய்த பாவத்தால் அவருடைய சாபத்தால் பேயாக அலைந்து திரிந்து பல துன்பங்களை அனுபவித்தேன் என்று அழுதாள். அதற்கு தர்மாங்கத முனிவர் அழாதே. நான் தோன்றிய நாள் முதல் இன்று வரை செய்த தவத்தில் பாதி உனக்கு தருகிறேன் இதன் பலனாக இனி நீ பல இன்பங்களை அனுபவிப்பாய் என்று அருளினார். உடனே வைகுண்டத்திலிருந்து வந்த பொன்மணி விமானம் இருவரையும் வைகுண்டத்துக்கு அழைத்து சென்றது.

ஸ்ரீமன் நாராயணர் தர்மாங்கதரைப் பார்த்து நீங்கள் பூவுலகில் ஆதித்தர் குலத்தில் பிறந்து தசரதன் என்ற பெயர் பெற்று அறுபதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்வீர்களாக. உனக்கு நான் மகனாகப் பிறந்து ராமன் என்ற பெயருடன் விளங்கி ராவணனை வதம் செய்து நாட்டுக்கு நலம் செய்வேன். கலகை நீ கேகய நாட்டில் அசுவபதி என்ற மன்னனுக்கு மகளாகப் பிறந்து கைகேயி என்ற பெயருடன் வளர்வாய். தர்மாங்கதருடைய தவத்தில் பாதி பெற்றதனால் கௌசலை வயிற்றில் நான் பிறந்தாலும் என்னை நீ அன்பு மகனாக வளர்ப்பாயாக. சமயம் வரும்பொழுது ராவண வதத்திற்காக என்னைக் கானகம் போகச் செய்வாய் என்றார். திருமாலுடைய சக்கரம் பரதனாகவும் சங்கு சத்துருக்கனாகவும் ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பிறக்குமாறு ஸ்ரீமன் நாராயணர் கட்டளை இட்டருளினார்.

ராம நாமத்தின் மகிமை

ராமா நாம சங்கீர்த்தனம் பாடியபடி வீதியில் பஜனை கோஷ்டி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர் இதை ஒரு போதும் விற்காதே ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார் என்றார். அவனும் அப்படியே செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய் எமதர்மராஜன் முன் நிறுத்தினார்கள். அவரும் அவனுடைய பாப புண்ணிய கணக்கை பரிசீலித்து ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய் அதற்காக என்ன வேண்டுமோ கேள் என்றார். ராம நாமத்தை உபதேசித்த ஞானி அதை விற்காதே என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால் அதற்கு விலை கூற மறுத்து ராம நாமத்திற்கு நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ அதைத் தாருங்கள் என்றான். திகைத்த எமதர்ம ராஜா ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது என்று எண்ணி இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும் வா இந்திரனிடம் போகலாம் என்றார். நான் வருவதென்றால் பல்லக்கில் தான் வருவேன் அத்துடன் பல்லக்குத் தூக்குபவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் சம்மதமா என்றான். இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால் ராம நாமம் மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும் அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று எண்ணிய எமதர்ம ராஜா அதற்கு சம்மதித்து அவனை பல்லக்கில் உட்கார வைத்து சுமந்து கொண்டு இந்திரனிடம் சென்றார். இந்திரனோ ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது பிரம்மதேவரிடம் கேட்போம் வாருங்கள் என்றார். எமதர்மனோடு இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன் என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான். அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு பிரம்மாவிடம் சென்றனர். அவரும் ராம நாம மகிமை சொல்ல என்னால் ஆகாது வைகுண்டம் போய் அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள் என்று சொல்ல அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.

மகா விஷ்ணுவிடம் சென்ற அவர்கள் இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது அதற்காக இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை என்றனர். இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா என்று சொல்லி பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான்.

தசரதரின் நான்கு பிள்ளைகள்

தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால் அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. நான்கு பிள்ளைகளும் நான்கு தர்மத்தை கடைபிடித்து வாழ்ந்தார்கள் தர்மம் நான்கு வகைப்படும். அவை 1.சாமான்ய தர்மம் 2. சேஷ தர்மம் 3. விசேஷ தர்மம் 4. விசேஷதர தர்மம்

  1. சாமான்ய தர்மம் – பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இத்தகைய சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக் காட்டினான் ராமர்.
  2. சேஷ தர்மம் – சாமானிய தர்மங்களை ஒழுங்காகச் செய்து கொண்டு வந்தால் கடைசியில் ஒரு நிலை வரும். அந்த நிலையில் பகவானுடைய பாதங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற நினைப்பு ஏற்படும். இத்தகைய தர்மத்துக்கு சேஷ தர்மம் என்று பெயர். இதைப் பின்பற்றிக் காட்டினான் லட்சுமணன்.
  3. விசேஷ தர்மம் – தூரத்தில் இருந்து கொண்டே எப்போதும் பகவானின் சிந்தனையாகவே இருப்பது விசேஷ தர்மம். இது சேஷ தர்மத்தைக் காட்டிலும் கடினமானது. இதைக் கடைப்பிடித்துக் காட்டியவன் பரதன்.
  4. விசேஷதர தர்மம் – பகவானை விட அவருடைய அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முக்கியம் எனக் கருதுவது விசேஷதர தர்மம். சத்ருக்னன் பாகவத உத்தமனாகிய பரதனுக்குத் தொண்டு செய்தே கரையேறி விட்டான். ஆக இந்த நான்கு தர்மங்களையும் ராமாவதாரத்தில் நான்கு புத்திரர்கள் மூலம் உலகுக்கு எடுத்துக் காட்டவே தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.

ராமாயணம் இறுதிப் பகுதி

ராமாயண காவியத்தின் இறுதியில் ராமாயணத்தை கேட்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று வால்மீகி முனிவர் அருளியிருக்கிறார்.

ராமாயண கதையை தேவர்களும் சித்தர்களும் கந்தர்வர்களும் ரிஷிகளும் நித்தியம் கேட்கின்றனர். ராமாயணம் எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அனுமன் அதனை கேட்டபடி இருப்பார். சூரிய உதயத்தின் போது அல்லது சூரியன் மறையும் போது கட்டுப்பாட்டுடன் நியமத்துடன் ராமாயணத்தை படிக்க வேண்டும். அவ்வாறு தினந்தோறும் படிப்பவர்கள் புதல்வர்கள் மற்றும் உற்றார் உறவினரோடு மகிழ்ச்சியாக உலகில் வாழ்வார்கள். ஆரோக்கியமான ஆயுளையும் நல்ல சௌபாக்யத்தையும் அடைவார்கள். புத்திரன் இல்லாதவர்கள் நல் புத்திரனைப் பெறுவார்கள். தனம் இல்லாதவர்கள் நல்தனத்தை பெறுவார்கள். சிரார்த்த காலத்தில் அறிஞர்களைக் கொண்டு ராமாயணத்தை சொல்ல வைக்க வேண்டும். இதனால் இதனை கேட்பவர்களுக்கு தங்களின் பற்றுக்களும் ஆசைகள் நீங்கி சொர்க்கம் செல்வார்கள். தினந்தோறும் ஒரு ஸ்லோகமாவது படித்தால் அன்றாடம் செய்யும் பாபங்களிலிருந்து விடுபடலாம். ஒரு அத்தியாயத்தை தினந்தோறும் பக்தியுடன் ராம சிந்தனையோடு படிப்பவர்கள் நூறு அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறுவார்கள். இருபதினாயிரம் வாஜபேய யாகம் (தலைமை குருவாக பதவி ஏற்றுக் கொள்ளும் போது செய்யப்படும் யாகம்) செய்த பலனை அடைவார்கள். இதைக் கேட்பவர்களும் அதே பலனை அடைவார்கள். பிரயாகம் தீர்த்தங்கள் புண்ணிய கங்கை நதி நைமிசம் போன்ற அடர்ந்த காடுகள் ஆகிய அனைத்திற்குத் சென்று கிடைக்கும் பலனை ராமாயணத்தைக் கேட்பதாலேயே பெறுவார்கள். கிரகண சமயத்தில் துலா பாரமாக தங்கம் தானம் செய்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் ராமாயணத்தை பக்தியுடன் கேட்பவர்களும் படிப்பவர்களும் பெற்று எல்லா விதமான பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு லோகம் செல்வார்கள். எந்த வித கெட்ட எண்ணமும் இல்லாமல் பக்தியுடன் ராமாயணத்தை நினைப்பவர்கள் தீர்காயுள் பெற்று ஆயுள் முடியும் தறுவாயில் விஷ்ணு லோகம் செல்வார்கள்.

ராமாயணத்தை கதாகலட்சேபமாக சொல்பவர்களுக்கு அல்லது கதைகளாக சொல்பவர்களுக்கு உடை உணவு இருப்பிடம் பசு போன்றவற்றை தாராளமாக கொடுக்க வேண்டும். இதை படித்து சொல்பவர்கள் திருப்தியாக மகிழ்ச்சியாக இருந்தால் சர்வ தேவதைகளும் மகிழ்ச்சியடைவார்கள். இதனால் தானம் கொடுப்பவர்களுக்கு நீண்ட ஆயுளோடு சொர்க்கத்தையும் அடைவார்கள். ராமாயணத்தை ஒரு காண்டத்தின் முழு பகுதியையோ அரை பகுதியை கேட்பவன் கூட பிரம்மலோத்திற்கு சென்று அங்கு பிரம்மாவினால் மரியாதையுடன் வரவேற்கப்படுவான். எல்லோருக்கும் மங்களம் உண்டாகட்டும். ராமாயணத்தை படித்து ராம நாமத்தை சொல்லி இறைவனின் திருவடியை அடைவோம். ராம ராம ராம ராம ராம.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 52

ராமர் அனுமனிடம் பேச ஆரம்பித்தார். உன் விருப்பப்படியே இந்த உலகத்தில் ராம கதை இருக்கும் வரை என் நாமம் உலகில் உள்ளவரை நீயும் இருப்பாய் மகிழ்ச்சியுடன் இரு என்று ஆசிர்வதித்தார். அதற்கு அனுமன் உங்கள் கட்டளைப்படியே உங்கள் நாமத்தை செபித்தபடி உலகில் இருப்பேன் என்றார். ராமர் அயோத்தியில் இருந்து கிளம்பி சரயூ நதியை நோக்கிக் கிளம்பினார். வேதியர்கள் மந்திரங்கள் சொல்ல அவர்களைப் பின் தொடர்ந்து ராமர் முன்னே சென்றார். அவரைப் பின் தொடர்ந்து அனைவரும் சென்றார்கள். பல பறவைகள் அவர்களுக்கு மேலே பறந்து பின் தொடர்ந்து வந்தது. பல வகையான விலங்குகளும் இந்த கூட்டத்தின் பின்னே வந்தது. சரயூ நதிக்கு ராமர் வந்து சேர்ந்தார். சரயூ நதியில் தண்ணீர் சுழல் சுழலாக சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பிரம்மா உட்பட பல தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் இங்கு வந்து சேர்ந்தார்கள். ராமர் மேலுலகம் செல்லத் தயாராக வந்து நின்ற இடத்தில் தேவர்கள் வந்த திவ்ய விமானங்கள் கோடிக் கணக்கில் இருந்தன. ஆகாயமே திவ்ய ஜோதி பரவி பிரகாசமாக இருந்தது. தேவர்கள் வானத்தில் இருந்து பூமாரி பொழிந்தனர். ராமர் சரயூ நதியில் கால் வைத்தவுடன் நூற்றுக்கணக்கான கந்தர்வர்களும் தேவ கணங்களும் வாத்யங்களை முழங்கினர். பிரம்மா ராமரிடம் பேச ஆரம்பித்தார். விஷ்ணுவான ராம உனக்கு மங்களம். உனது காலம் இன்றுடன் முடிகிறது. தாங்கள் தான் உலகுக்கு கதி. இதனை உணர்ந்தவர்கள் பூலோகத்தில் இல்லை. நினைத்து பார்க்க முடியாத உங்களின் அவதாரங்களை யாரலும் அறிந்து கொள்ள முடியாது. நீ இந்த உடலை விட்டு உனது இருப்பிடமான வைகுண்டத்திற்கு வந்து உனது இயல்பான சாரீரத்தை எடுத்துக்கொள் என்றார்.

ராமர் சராயூ நதிக்குள் இறங்கி நின்றார். அவரைத் தொடர்ந்து பரதனும் சத்ருக்கனனும் மக்கள் வானரங்கள் கரடிகள் என மொத்தம் முப்பதாயிரம் பேர் நதிக்குள் இறங்கினார்கள். அப்போது தேவர்கள் ஆதித்யர்கள் மருத்கணங்கள் ரிஷிகள் தேவகணங்கள் கந்தர்வர்கள் நாகர்கள் யட்சர்கள் தைத்யர்கள் தானவர்கள் ராட்சசர்கள் அனைவரும் நினைத்ததை சாதித்த பூர்ணமானவரே என்று போற்றி புகழ்ந்து வணங்கி நின்றார்கள். அப்போது ராமர் பிரம்மாவிடம் பேச ஆரம்பித்தார். இங்கு இருக்கும் மக்களில் எனக்காக ஆசைகளை துறந்து நான் எனும் எண்ணத்தை விட்டு ராம நாமத்திலேயே எண்ணத்தை வைத்து என்னுடனே இருக்க வேண்டும் என்று என்னை நம்பி வந்திருக்கும் அனைவருக்கும் தேவலோகத்தில் இடம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பிரம்மா உன்னை நம்பி பின் தொடர்ந்து வருபவர்கள் உன் விருப்பப்படி அவரவர்களுக்கு உண்டான மேல் உலகை அடையட்டும் என்று ஆசிர்வதித்தார். உன்னை நினைத்து உன்னுடன் வந்த பறவைகள் உட்பட அனைத்து ஜீவன்களும் மற்றொரு பிரம்மலோகம் போன்ற மேல் உலகில் வசிக்கட்டும் என்று ஆசிர்வதித்தார். உனது அவதாரத்திற்காக இந்த பூமியில் பிறந்த வானரங்களும் கரடிகளும் எந்த தேவனின் அம்சமாக பூமியில் தோன்றினார்களோ அந்த தேவதைகளுடனே அவர்கள் சேருவார்கள் என்று ஆசிர்வதித்தார். உடனே சராயூ நதி பொங்கி ராமருடன் சராயூ நதியில் இறங்கியவர்கள் அனைவரையும் தனக்குள் கொண்டு சென்றது. ராமர் தனது வைகுண்டத்திற்கு சென்றார். ராமரின் இரண்டு பகுதிகளான பரதனும் சத்ருக்கனனும் வைகுண்டம் சென்று லட்சுமணனுடன் சேர்ந்து ராமருடன் சேர்ந்தார்கள். சுக்ரீவன் சூரிய மண்டலத்திற்கு சென்றான். மக்கள் அனைவரும் அவரவர்களுக்கு உரிய பித்ரு லோகத்திற்கு சென்றார்கள். வானரங்களும் கரடிகளும் தேவலோகத்தின் பிரகாசமான தேவ சரீரத்துடன் ஒளி மயமாகி நின்றார்கள்.

ராமாயணம் சரித்திரம் உத்தர காண்டம் இந்த பகுதியோடு இந்த மகா காவியம் நிறைவு பெறுகிறது.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 51

ராமர் தனது அரசவையை கூட்டி வசிஷ்டரையும் தன் மந்திரிகள் மற்றும் நீதி முறைகளை அறிந்த அறிஞர்களையும் பரதனையும் வரவழைத்தார். நான் இந்த உலகத்தை விட்டு செல்வதற்கான நேரம் நெருங்கி விட்டது. அதனால் அயோத்தி நகருக்கு அரசனாக பரதனை முடிசூட்டி ராஜ்யத்தில் அமர வைக்க முடிவு செய்திருக்கிறேன். இனி அயோத்திக்கு அரசனாக பரதன் இருப்பான். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டார். ராமரின் உத்தரவைக் கேட்டு திகைத்து நின்ற அனைவரும் செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். ராஜ்யம் என்ற சொல்லையே கேட்கப் பிடிக்காதவனாக பரதன் பேச ஆரம்பித்தான். சொர்க்கமே ஆனாலும் நீங்கள் இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன். நீங்கள் இல்லாத ராஜ்யத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன். ராஜ்யத்தின் மீது எனக்கு எந்த ஆசையும் இல்லை. இப்போது ராஜ்யத்தை ஆள்வதற்கு குச லவர்கள் இருக்கிறார்கள். அதற்கான தகுதியும் அவர்களுக்கு இருக்கிறது. அயோத்தியை இரண்டாகப் பிரித்து கோசல தேசத்திற்கு குசனையும் உத்தர தேசத்திற்கு லவனையும் அரசனாக்கி முடி சூட்டி வைத்து விடலாம். தாங்கள் செல்லும் இடத்திற்கு நானும் உங்களுடன் வந்து விடுகிறேன் என்றான் பரதன். பரதனின் கோரிக்கையை ராமர் ஏற்றுக் கொண்டார்.

ராமரிடம் வசிஷ்டர் பேச ஆரம்பித்தார். மக்களைப் பார். இவர்களின் விருப்பம் என்ன என்று தெரிந்திருந்து கொள். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யாதே என்றார். உடனே ராமன் சபையில் இருந்த மக்களிடம் நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டான். அனைவரும் ஏகோபித்த குரலில் நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களுடன் நாங்களும் வருகிறோம். உங்களின் இறுதிக்காலத்தையும் தாண்டி உங்களுடன் இருக்க விரும்புகிறோம். நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களை பின் தொடர்ந்து நாங்களும் வருகிறோம் எங்களை தடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். மக்களின் விருப்பத்தை ராமர் ஏற்றுக் கொண்டார். பரதனின் யோசனைப்படி கோசல தேசத்துக்கு குசனையும் உத்திர தேசத்துக்கு லவனையும் அரசனாக்கி அனைத்து பொறுப்புகளையும் அவர்களிடம் ஒப்படைத்தார்.

ராமர் தனது தூதர்களை அழைத்து சத்ருக்னன் இருக்கும் மதுராம் என்ற நகருக்கு சென்று அயோத்தியில் நடந்த நடக்கப் போகும் செய்திகளை அவனிடம் சொல்லி சத்ருக்கனனை அழைத்து வருமாறு கட்டளையிட்டார். தூதர்கள் மூன்று நாள் பிரயாணம் செய்து மதுராம் நகரை அடைந்தார்கள். சத்ருக்னனிடம் லட்சுமணன் அயோத்தியை விட்டு சென்றதையும் ராமர் இவ்வுலகத்தை விட்டு செல்ல இருப்பதையும் தங்களை ராமர் சந்திக்க விரும்புகிறார் ஆகையால் தாங்கள் அயோத்திக்கு உடனடியாக வர வேண்டும் என்று ராமர் செய்தி அனுப்பினார் என்று தெரிவித்தார்கள். இதனைக் கேட்ட சத்ருக்கனன் தானும் ராமருடன் தானும் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தான். தான் ஆட்சி செய்து வந்த மதுராம் நகரை இரண்டாக பிரித்து தனது மகன்களான சுதாகு சுருதசேனன் இருவரையும் அரசனாக்கினான். சேனைகள் செல்வங்கள் அனைத்தையும் இருவருக்கும் சமமாக பிரித்து அளித்து விட்டு ராமரைப் பார்க்க வேண்டும் என்று விரைவாக அயோத்தி வந்த சேர்ந்தான் சத்ருக்கனன். தனது வணக்கத்தை ராமருக்கு தெரிவித்த சத்ருக்கனன் என் புதல்வர்களுக்கு ராஜ்யத்தை பிரித்துக் கொடுத்து விட்டேன். நானும் உங்களுடனேயே வருகிறேன் என்னை தடுக்காதீர்கள் என்றான். ராமரும் சத்ருக்கனனுக்கு அனுமதி கொடுத்தார். ராமர் உலகை விட்டு செல்லப் போகிறார் என்ற செய்தி கேட்டு சுக்ரீவன் தனது பரிவாரங்களுடனும் வீபீஷணன் தனது பரிவாரங்களுடனும் வந்து சேர்ந்தார்கள். சுக்ரீவன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். அங்கதனை எனது ராஜ்யத்திற்கு அரசனாக்கி விட்டுத்தான் வந்திருக்கிறேன். நானும் உங்களுடனேயே வருகிறேன் என்றான். ராமரும் சிரித்துக் கொண்டே சுக்ரீவா நீ என் நண்பன். நீ வேறு நான் வேறல்ல. நாம் இருவரும் சேர்ந்தே செல்வோம் என்றார். விபீஷணனிடம் ராமர் பேச ஆரம்பித்தார். மக்கள் உள்ள வரை நீ இலங்கையில் பேசப்படுவாய். மக்களுக்காக நீ தொடர்ந்து உனது ராஜ்யத்தை ஆட்சி செய் என்று கேட்டுக் கொண்டார். விபீஷணனும் ராமரிடம் அப்படியே செய்வதாக வாக்கு கொடுத்தான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 50

ராமனிடம் துர்வாச முனிவர் வந்திருப்பதாக உடனடியாகச் சென்று சொல். இல்லை என்றால் ராமருடன் சேர்த்து இந்த நாட்டையும் மக்களையும் உன்னையும் உங்களைச் சார்ந்த உறவினர்களையும் உங்களுடைய சந்ததிகளையும் சேர்த்து அனைத்தையும் என் தவ பலத்தால் பொசுக்கி விடுவேன் என்றார். அதி பயங்கரமாக துர்வாச முனிவரிடமிருந்த வந்த வார்த்தைகளை கேட்டதும் லட்சுமணன் திடுக்கிட்டு நின்றான். லட்சுமணன் சிறிது நேரம் யோசித்தான். ராமரின் கட்டளைப்படி என் ஒருவனுக்கு மரணம் வந்தால் பரவாயில்லை. நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்ட லட்சுமணன் ராமரின் அறைக்குள் சென்று செய்தியைத் தெரிவித்தான். லட்மணன் சொன்னதைக் கேட்டதும் ராமர் யமதர்மர் வேடத்தில் இருந்த முனிவரை அனுப்பி விட்டு துர்வாசரை வணங்கி வரவேற்று என்ன காரியம் சொல்லுங்கள் என்று கேட்டார். இன்றுடன் நான் ஆயிரம் வருடங்கள் உணவு அருந்தாமல் தவம் செய்து முடித்திருக்கிறேன். அதனால் இப்போது எனக்கு நல்ல உணவு வேண்டும். உன்னால் முடிந்தவரை எனக்கு உணவு கொடுக்க ஏற்பாடு செய் என்றார். இதைக் கேட்ட ராமர் அவசரமாக முனிவரின் உணவிற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அமிர்தத்திற்கு இணையான அந்த உணவை உண்ட துர்வாச முனிவர் திருப்தி அடைந்தார். ராமரை வாழ்த்தி விட்டு தன் ஆசிரமத்திற்கு சென்றார். துர்வாச முனிவர் சென்றபின் யமதர்மரின் எச்சரிக்கை ராமருக்கு ஞாபகம் வந்தது. அதனை நினைத்து மிகவும் வேதனைக்குள்ளானார். தலை குனிந்தபடி என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார். யமதர்மரின் எச்சரிக்கை சொல் திரும்பத் திரும்ப ராமரின் மனதில் வந்து அலைக்கழித்தது.

ராமரின் மனநிலையை அறிந்து கொண்ட லட்சுமணன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். கொடுத்த வாக்கை நிறை வேற்றாத அரசர்கள் நரகம் செல்வார்கள் என்பது நியதி. எனக்குத் தண்டனை கொடுங்கள். முனிவருக்கு கொடுத்த வாங்கின் படி மரண தண்டனையே எனக்கு கொடுத்து தர்மத்தை காப்பாற்றுங்கள். என்னைப் பற்றி வருந்தாதீர்கள். என்னுடைய மரணம் பிரம்மாவால் நான் பிறக்கும் போதே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதை யமதர்மர் நிறைவேற்ற காத்திருக்கிறார். நான் இறந்த பிறகு சில நாட்கள் மனம் மிகவும் வருத்தமாகத் தான் இருக்கும். அதன் பிறகு அனைத்தும் சரியாகி விடும் என்றான். மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளான ராமர் குல குரு வசிஷ்டரை வரவழைத்து நடந்தவைகள் அனைத்தையும் கூறி ஆலோசனை கேட்டார். ராமரிடம் வசிஷ்டர் பேச ஆரம்பித்தார். அரசன் கொடுத்த வாக்கை நிறைவேற்றியே ஆகவேண்டும். கொடுத்த வாக்கை மீறுவது தர்மத்திற்கு புறம்பானது. அரசன் ஒருவன் தர்மத்தை மீறினால் அந்த நாடும் நாட்டு மக்களுக்கும் பெரிய கேடுகள் வந்து சேரும். அதனால் லட்சுமணனை தியாகம் செய்து உன்னுடைய தர்மத்தை நிலைநிறுத்து என்றார்.

ராமர் தீவிரமாக யோசனை செய்து ஒரு முடிவு செய்து லட்சுமணனை வரவழைத்தார். முனிவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதனால் இப்போது உன்னை எனது தம்பி என்ற நிலையில் இருந்து தியாகம் செய்கிறேன். உன்னை கொல்வதை விடவும் என்னை விட்டு நீ பிரிந்திருப்பது மரண தண்டனையை விடக் கொடுமையானது என்று எண்ணுகிறேன். அதனால் அதனை அனுபவிக்க நீ உடனே நாட்டை விட்டு வெளியேறு இனி என்னை பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்றார். ராமர் சொன்னதைக் கேட்ட லட்சுமணன் மனம் வேதனை அடைந்து கண்களில் நீர் தழும்ப அங்கிருந்து வெளியேறினான். தன் வீட்டுப் பக்கம் செல்லாமல் நேராக சரயூ நதிக்கரை சென்று நீரில் மூழ்கி தன் சுவாசத்தை வெளி விடாமல் அடக்கிக் கொண்டான் லட்சுமணன். மூச்சை அடக்கி நீரினுள் கிடந்தவனைப் பார்த்து இந்திரனுடன் வந்த தேவ கணங்களும ரிஷிகளும் பூமாரி பொழிந்தனர். இந்திரன் லட்சுமணனைத் தூக்கி தேவலோகத்தில் சேர்ப்பித்தான். விஷ்ணுவின் நான்கில் ஒரு பாகம் வந்து சேர்ந்து விட்டது என்று தேவர்கள் எல்லோரும் மகிழ்ந்து கொண்டாடினார்கள்.