இறைவனின் கருணையைக் கொண்டு யாங்கள் (சித்தர்கள்) பலருக்கு பலமுறைக் கூறியதுதான். இந்த இன்னவனுக்கும் கூறுகிறோம். ஒரு ஆலயம் சிறப்புற வளர வேண்டுமென்றாலும் அந்த ஆலயம் நல்லவிதமாக கலச விழா காண வேண்டுமென்றாலும் அதற்கும் சில சூட்சும காரணங்கள் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க அந்த ஆலயம் தொடர்பான மனிதர்களும் அந்த ஆலயத்தை சுற்றி வசிக்கின்ற மனிதர்களும் ஒன்றுபட்ட உள்ளத்தோடு இறைவனை வேண்டி முயற்சியில் இறங்கினால் கட்டாயம் பலன் உண்டு. இதுபோல் முன்னர் ஒருவனுக்குக் கூறிய வாக்கையே இன்னவனுக்கும் கூறுகிறோம். மூத்தோனை அதாவது விநாயகப் பெருமானை தமிழகத்தில் உள்ள சிறப்பான ஸ்தலங்கள் (பிள்ளையார்பட்டி திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் போன்ற ஸ்தலங்கள்) சென்று வணங்கினால் தடையகன்று நல்ல முறையிலே அந்த திருப்பணி நடை பெறும். இந்த நிலையிலே தொடர்ந்து முயற்சிகள் சோர்வின்றி செய்ய நலம் உண்டு. ஆசிகள்.
கேள்வி: எந்தக் கோவில் மூத்தோனை (விநாயகப்பெருமானை) வணங்கினால் சிறப்பு? வேகமாகப் பணி நடக்கும்?
இறைவனின் கருணையாலே யாம் (அகத்திய மாமுனிவர்) ஒரு ஆலயத்தைக் குறிப்பிட்டால் அப்படியானால் வேறு ஆலயம் சிறப்பில்லையா? என்று ஒரு மனிதன் வினவுவான். ஆலயம் எப்பொழுதுமே சிறப்புதானப்பா. அந்த ஆலயத்திற்கு எந்த மனோபாவத்தில் மனிதன் செல்கிறான் என்பதைப் பொறுத்துதான் அவனுக்கு இறைவன் அருள் கிட்டுகிறதா? இல்லையா? என்பது புரியும். நாங்கள்(சித்தர்கள்) குறிப்பிட்டதை நன்றாக கவனி. விநாயகப்பெருமானுக்கு என்று பிரசித்தி பெற்ற ஆலயங்கள் அங்கு சில உண்டு. பிரசித்தி பெற்ற என்றால் மனிதர்கள் அறிந்த என்று பொருள். மனிதர்கள் அறியாத ஆலயங்களும் உண்டு. அது குறித்து பின்னர் உரைப்போம்.
பழனியில் இருந்து 20 கிமீட்டரும் உடுமலையில் இருந்து 18 கிமீ துாரத்திலுள்ள கொழுமம் ஊரில் உள்ளது மாரியம்மன் கோவில். மாரியம்மன் அமராவதி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். தரைக்கு மேல் இரண்டரை அடி உயரத்தில் லிங்க வடிவில் காட்சி தருகிறாள் மாரியம்மன். லிங்கத்தின் அடியில் ஆவுடையார் (பீடம்) உள்ளது. அம்பாளுக்குரிய அடையாளங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் அம்பாளாகவே கருதப்பட்டு புடவை கட்டி பூஜை செய்யப்படுகிறது. கருவறையில் அணையா விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.
அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலை வீசிய போது லிங்க வடிவ கல் ஒன்று சிக்கியது. அதை கரையில் போட்டு விட்டு மறுபடியும் மீனவர் வலையை வீசினார். திரும்பவும் அதே கல் வலையில் சிக்கியது. மீனவர் மீண்டும் வலை வீச அந்த கல் வந்து கொண்டே இருந்தது. பயந்து போன அவர் வீட்டிற்கு திரும்பி விட்டார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய அம்பாள் ஆற்றில் லிங்க வடிவில் உனக்கு தரிசனம் தந்தது நான் தான் என்றாள். இத்தகவலை ஊர் மக்களிடம் கூறினார் மீனவர். மக்கள் அனைவரும் ஆற்றங்கரையில் கல்லை தேடிய போது கிடைக்கவில்லை. ஓரிடத்தில் இந்த கல் மண்ணில் புதைந்து சிறிய புடைப்பு போல வெளிப்பட்டிருந்ததைக் கண்டு அவ்விடத்தில் தோண்டினர். எவ்வளவோ தோண்டியும் அடிப்பாகத்தை காண முடியவில்லை. பின் அங்கேயே அம்பாளுக்கு கோயில் கட்டினர். கல் லிங்கம் போல இருந்ததால் அப்படியே பிரதிஷ்டை செய்து அந்த சிவலிங்க வடிவையே அம்பாளாக பாவித்து மாரியம்மன் என பெயர் சூட்டி பூஜைகள் விழாக்கள் நடக்க ஆரம்பித்தன.
குதிரையாறும் அமராவதியும் இணையும் உயரமான கோட்டை போன்ற இடத்தில் இருந்து ஊரைக் காப்பதால் கோட்டை மாரி என்றும் பெயர் உள்ளது. குமண மன்னர் ஆட்சி செய்த பகுதி என்பதால் இவ்வூர் குமணன் நகர் என அழைக்கப்பட்டது. இங்கு வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் குழுமூர் எனவும் அழைக்கப்பட்டு காலப்போக்கில் அதுவே மருவி கொழுமம் என்று ஆனது.
கேள்வி: கோவில்களில் சிலர் பிரசாதம் வாங்க மறுக்கிறார்கள். ஏனென்றால் கொடுப்பவர்களின் கர்மாக்கள் தங்களைத் தாக்கி விடும் என்று கூறுகிறார்கள் இதனால் பல இடங்களில் மனஸ்தாபம் ஏற்படுகிறது. இதை இப்படி சரி செய்வது?
அடுத்த முறை அனைவருக்கும் கனகத்தை (தங்கத்தை) தானமாக பிரசாதமாக கொடுத்துப்பார். யாருமே மறுக்க மாட்டார்கள். பிரசாதத்தைப் பெறுவதால் பெறுகின்றவனுக்கு எந்தவிதமான பாவமும் தோஷமும் வராதப்பா. இது எல்லாம் அறியாமை மனிதர்களால் ஏற்கப்படுவது. இந்த நிலையிலே பிரசாதத்தைப் பெறுவது என்பது ஒரு உயர்ந்த நிலைதான். உண்மையில் இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட்ட பொருள் அது (நிவேதனம்) செய்யப்படுவதற்கு முன்னால் சாதம். அது நிவேதனம் ஆன பிறகு பிரசாதம் ஆகிவிடுகிறது. எனவே இதைப் பெறுவதால் எந்தவிதமான கடினமோ கஷ்டமோ பெறுபவனுக்கு வருவதில்லை. எனவே தாராளமாகப் பெற்றுக் கொள்ளலாம். பெறவில்லை என்றாலும் கூட அது குறித்து ஒரு தவறான எண்ணமும் இல்லாமலிருந்தால் அதுவே போதும்.
கேள்வி: அத்வைதத்தை எப்படி நடைமுறைக்குக் கொண்டு வருவது?
எல்லாவற்றையும் சுருக்கமாக குறுக்கு வழியில் கூறுவதற்கு உண்மையில் வாய்ப்பு இல்லையப்பா. ஒரு வகையில் எல்லாம் எளிமை போல் தோன்றினாலும் இன்னொரு வகையில் மனிதனுக்கு எல்லாம் கடினமாகத்தான் இருக்கும். ஏன் என்றால் மனிதனின் மனம் முழுக்க தேகம் சார்ந்த விஷயமாகவே இருக்கிறது. கண் முன்னால் வைத்துக் கொண்டு இதனை விடு என்றால் மனிதனால் முடியாது. மெல்ல மெல்ல முயற்சி செய்துதான் மேலேற வேண்டும். இதற்கு வேறு வழியில்லை. இதற்கு ஒரே வழி தொடர்ந்து பக்தி மார்க்கம் ஒன்றுதான் இக்காலத்தில்.
ஒரு மனிதன் தன்னுடைய கர்ம இந்திரியங்களை வெளித் தோற்றத்தில் அடக்கி வைத்திருப்பது போல் இருந்து கொண்டு மனதினால் அந்த புலன் நுகர் பொருட்களை நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவன் பொய்யானவன் ஆவான்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
உடலின் செயல்களான பார்ப்பது கேட்பது உணர்வது பேசுவது நுகர்வது நடப்பது கைகளால் செய்யபடுபவை போன்ற செயல்களை வெளிப்புற தோற்றத்தில் செயல் படுத்தாமல் இருந்து விட்டு ஆனால் அந்த புலன்களினால் ஏற்படும் இன்பங்களை நினைத்துக் கொண்டே மனதை அடக்கி விட்டேன். அமைதி அடைந்து விட்டேன். ஞானத்தை பெற்று விட்டேன் என்று சொல்பவனின் செயல் ஒன்றும் எண்ணம் வேறுமாக இருக்கிறது. ஆகையால் இவன் பொய்யானவன் ஆவான். மேலும் பாவங்களை செய்தவன் ஆகிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
எந்த மனிதனும் எக்காலத்திலும் ஒரு கணம் கூட செயல் புரியாமல் இருப்பதில்லை. ஏனெனில் இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் தொழில் புரிய வைக்கின்றன.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இந்த உலகில் பிறந்தவர்கள் எழுவது உட்காருவது நடப்பது உண்பது தூங்குவது விழிப்பது நினைப்பது சிந்திப்பது என்று எதேனும் ஒரு செயலை செய்து கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அனைத்து உயிர்களும் சத்வ ரஜோ தாமஸ குணங்களால் ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றும் இயற்கையாகவே ஏதேனும் செயலை மனிதனை செய்ய தூண்டிக் கொண்டே இருக்கும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
ஆனால் இது அஞ்ஞானிகளுக்கு மட்டுமே பொருந்தும். இறைவனை உணர்ந்த ஞானிகளுக்கு பொருந்தாது. இறைவனை உணர்ந்த ஞானிகள் கர்ம யோகத்தின் வழி செல்லாமல் ஞான யோகத்தின் வழியாக செல்வார்கள். இவர்கள் சத்வ ரஜோ தாமஸ குணங்களால் மனம் பாதிக்கப்படாமல் உறுதியான அசையாத மனதை உடையவர்களாக இருப்பார்கள்.
சத்வ குணம் – சாத்வீகம்
சத்வ குண இயல்புகள் – நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம். மன அடக்கம். புலன் அடக்கம். துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை). விவேகம். வைராக்கியம். தவம். வாய்மை. கருணை. மகிழ்ச்சி. நம்பிக்கை பாவம் செய்வதில் கூச்சப்படுதல். தானம் பணிவு மற்றும் எளிமை.
சத்வ குண பலன்கள்
சத்வ குணத்திலிருந்து தன் செயல்களைப் பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது. பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது சாத்வீக குணமாகும். சத்வ குணமுடையோன் தெய்வத் தன்மை பெற்று விழிப்பு நிலையில் மேலுலகங்களை அடைகிறான்.
2. ரஜோ குணம் – இராஜசம்
ரஜோ குண இயல்புகள் – ஊக்கம் ஞானம் வீரம் தருமம் தானம் கல்வி ஆசை முயற்சி இறுமாப்பு வேட்கை திமிர் தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது வேற்றுமை எண்ணம் புலனின்பப் பற்று சண்டைகளில் உற்சாகம் தன் புகழில் ஆசை மற்றவர்களை எள்ளி நகையாடுவது பராக்கிரமம் பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ராஜசமாகும்.
ரஜோ குண பலன்கள்
ரஜோ குணப் பெருக்கினால் அசுரத்தன்மையும் செயல் புரிவதில் ஆர்வமும் இன்பப் பற்றும் இறப்பிற்குப் பின் மனித உடலையும் அடைகிறான்.
3. தமோ குணம் – தாமசம்
தமோ குண இயல்புகள் – காமம் வெகுளி மயக்கம் கலக்கம் கோபம் பேராசை பொய் பேசுதல் பிறரை இம்சை செய்தல் யாசித்தல் வெளிவேசம் சிரமம் கலகம் வருத்தம் மோகம் கவலை தாழ்மை உறக்கம் அச்சம் சோம்பல் காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும் பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் தாமச குணங்கள் ஆகும்.
தமோ குண பலன்கள்
தமோ குணத்திலிருந்து சோம்பல் உண்டாகிறது. தமோ குணப்பெருக்கினால் இராட்சசத் தன்மையும் மோகமும் அதிகரிகின்றது. தமோ குணத்தினால் தூக்க நிலையும் உண்டாகிறது. தமோ குணத்தால் மறுபிறவியில் விலங்கு மரம் செடி கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது.
கேள்வி: முருகனிடம் எனக்கு அன்பு அதிகம். ஏற்கனவே அவர் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். தற்பொழுது 6 மாதமாக அகத்தியம் பெருமானை வணங்கிக் கொண்டு இருக்கிறேன். அவரும் கேட்ட உடனேயே சில விஷயங்களை எனக்கு செய்து தந்திருக்கிறார். இந்த இருவரின் அன்பும் எப்பொழுதுமே குறையாமல் நான் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் என் ஆசை.
இறைவனின் கருணையாலே இன்னவன் யாது கூறினான்? முருகப் பெருமானிடம் அன்பு அதிகம் என்று. இதற்காகக் கவலைப்பட வேண்டியது அன்னையர்கள்தான். நாங்கள் அல்ல. வள்ளியும் தெய்வானையும்தான் இதைக் குறித்து கவலைப்பட வேண்டுமே தவிர நாங்கள் அல்ல. ஆயினும் இவன் பக்தி தொடர தொடர்ந்து இளையவனை (முருகப்பெருமான்) வணங்கி வர இவன் நலம் பெற தொடர்ந்து இறை வழியில் வர நல்லாசிகள் கூறுகிறோம்.
கேள்வி: பரிணாமத் தொடர்தான் பிறவித் தொடரா சந்ததி தொடரா? அல்லது இறந்த மனிதன் மீண்டும் பிறவி எடுக்கிறானா?
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் ரவியை (சூரியன்) வணங்கு. பிறவியின் ரகசியம் புரியுமப்பா. இது போல் இயம்புங்கால் பலரும் பலவிதமாகக் கூறலாம். யாங்கள் (சித்தர்கள்) இத்தருணம் கூறுவதை புரிந்து கொள்ள முயற்சி செய். இந்த தேகத்தோடு இருப்பது ஒரு பிறவி. இந்த தேகம் பூர்த்தியடைந்து இந்த தேகத்தை விட்டுவிட்ட ஆத்மா அதன் கர்ம பாவங்களின் அடிப்படையிலும் இறைவன் இடும் அருளாணையின்படியும் இன்னொரு தேகத்திற்குள் அதாவது இன்னொரு அன்னை வயிற்றுக்குள் புகுந்து பிறவி எடுப்பதையே பிறவி என்று நாங்கள் (சித்தர்கள்) கூறுகிறோம். ஏனைய கருத்துக்களைக் குறித்து எமக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லை. அது அவனவன் மனோபாவத்தைப் பொறுத்தது. எனவே இதை நன்றாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்.
தேடுவது என்பது ஒரு வார்த்தைக்காகக் கூறுவது. உண்மையில் தேடுவதும் ஒன்றுதான். தேடப்படுவதும் ஒன்றுதான். இவை இரண்டும் ஒன்று என்கிற உணர்வு வரும்வரை ஒன்று ஒன்றை தேடிக் கொண்டே தான் இருக்கும். அந்தத் தேடல் எப்பொழுது பூர்த்தி அடைகிறது? என்பது தேடுகின்ற அதற்கே தெரியாத ஒரு நிலையாகும். எனவே அதுவரை தேடிக் கொண்டு இருப்பதுதான் தேடுகின்ற பொருளின் பணியாகும். தேடத் தேடத்தான் தேடுதல் என்ன? என்பதே தேடுகின்ற பொருளுக்கே தெரியுமப்பா. தேட வேண்டும் தேட வேண்டும் என்ற அந்த வேட்கை (விருப்பம்) இருக்கும் வரை தேடுகின்றது எதைத் தேட வேண்டுமோ அதைத் தேடிக் கொண்டே இருக்கும். ஒரு வேளை தேட வேண்டியதைத் தேடாமல் வேறு எதையாவது தேடினாலும் அது தேட வேண்டியது இல்லை என்று தேடுகின்ற அதற்குத் தெரிந்த பிறகு எதைத் தேட வேண்டுமோ அதைத் தேடிக் கொண்டே செல்லும். எப்பொழுது அந்தத் தேடுதல் நிற்கிறதோ அப்பொழுதும் தேடுவதும் தேடப்படுகின்ற பொருளும் ஒன்று என்பது ஒரு நிலையான காட்சியாக மாறும். அது வரை தேடு தேடு தேடு தேடிக் கொண்டே இரு என்பதுதான் எமது வாக்கு.
கேள்வி: ஆன்மா இருதய குகையில் இருப்பதாக பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது அது குறித்து:
காற்று எப்படி ஒரு இடத்தில்தான் இருக்கிறது என்று கூற முடியாதோ பரந்த வான்வெளி இந்த இடத்தில்தான் இருக்கிறது. இந்த இடத்தில் இல்லை என்று எப்படிக் கூற முடியாதோ அப்படித்தான் ஆன்மா என்பதும் இறைவனைப் போல தேகமெங்கும் நீக்கமற பரவியிருக்கிறது. சில குறிப்பிட்ட இடங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது புரிய வைப்பதற்கான ஒரு குறியீடான முயற்சி. அங்கும் இருக்கிறது. எங்கும் இருக்கிறது என்பதே உண்மையாகும்.
கர்மங்கள் செய்ய ஆரம்பிக்காமல் இருப்பதாலேயே மனிதன் செயலற்ற நிலையை அடைவதில்லை. கர்மங்களை செய்யாமல் துறப்பதாலேயே சித்தியை அதாவது சாங்கிய யோகத்தை அடைவதில்லை.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
கர்மங்கள் செய்தால்தானே பாவம் அல்லது புண்ணியம் வருகிறது. அதனை செய்யாமல் இருந்தால் எதுவுமே வராது அனைத்தையும் துறந்து அமைதியை அடைந்து ஞானத்தை பெற்று இறைவனை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில் கர்மங்களை செய்ய ஆரம்பிக்காமல் இருந்தால் அமைதியையும் பெற முடியாது. இவர்கள் ஞான யோகத்தின் வழியாக இறைவனையும் அடைய முடியாது. ஏனெனில் இதனை செய்தால் இது கிடைக்கும் இதனை விட்டால் இது கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்புடன் கர்மங்களை துறப்பதினால் பலன் இல்லை என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
நவகோடி சித்தர்புரம் என அழைக்கப்படும் திருவாவடுதுறையில் சித்தஞான யோக சாதனை செய்து வந்த போகரின் சீடர்களில் ஒருவர் திருமாளிகைதேவர். சைவ ராஜதானியாகிய திருவாவடுதுறை ஆதீனத் திருமடத்தின் சந்நிதி விசேஷங்கள் இரண்டு. ஒன்று ஆதீன பரமாசாரியர் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் சந்நிதி. இன்னொன்று சித்தர் திருமாளிகைத்தேவர் சந்நிதி. இவ்விருவர் சமாதிக் கோயில்களும் திருமடத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ளன. திருமாளிகைத் தேவர் மாளிகை மடம் இருந்த இடத்திலேயே அவரது சமாதிக் கோயிலை ஒட்டி நமச்சிவாய மூர்த்திகள் சமாதிக் கோயிலுடன் இணைந்த குருமடம் பிற்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனமாக வளர்ந்தது என்பது வரலாறு.
திருவிடைமருதூரைப் பூர்வீகமாக உடைய ஐந்து கோத்திரத்தார் மரபில் ஒன்றான சைவராயர் மரபில் அவதரித்தவர் திருமாளிகைதேவர். 9 ம் திருமுறையாக விளங்கிடும் திருவிசைப்பாவில் நான்கு திருப்பதிகங்கள் திருமாளிகைத்தேவர் அருளிச் செய்தவை ஆகும். திருவிசைப்பா அருளிச் செய்த இவரின் காலம் 9 ம் நூற்றாண்டு. திருமாளிகைதேவர் காலையில் எழுந்ததும் தன் குல வழக்குப்படி அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு கோவிலுக்கு சென்று சிவா பெருமானையும் அம்பிகையையும் வணங்கி விட்டு சுவாமிக்குப் படைத்த நெய்வேத்யம் செய்த பிரசாதத்தை மட்டுமே சாப்பிடுவது தினசரி வழக்கம். இவர் சோழர்களின் தீட்சா குருவாக விளங்கினார். அரண்மனையில் பணி புரிந்தாலும் எப்பொழுதும் சிவபெருமானையே நினைத்துக் கொண்டிருப்பார். போகர் திருவாவடுதுறைக்கு வந்திருந்ததை அறிந்த திருமாளிகைத்தேவர் அவரிடம் உபதேசம் பெற சென்று போகரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். திருமாளிகைத்தேவரின் பக்குவ நிலையை உணர்ந்த போகர் அவருக்கு ஞான நிலையை உபதேசித்தார். போகரின் வழிகாட்டுதல் படியே திருமாளிகைத்தேவர் தன் தவ வாழ்கையை நடத்தியதால் திருமாளிகைத் தேவரின் உடல் தங்கம் போல் ஜொலித்தது. ஒருநாள் போகர் தம்முடைய பாதுகையைத் திருமாளிகைத் தேவரிடம் கொடுத்து இதனைப் பூசித்துக் கொண்டு திருவாவடுதுறைத் தலத்திலேயே இருந்து அன்பர்களுக்கு அருள் வழங்கு என ஆணை தந்து தான் அத்தலத்தை விட்டுத் திருப்புகலூருக்குச் சென்றார். திருமாளிகைத்தேவர் குரு ஆணைப்படி அத்தலத்திலேயே அடியார்கள் பலரோடு மாசிலாமணிசுவரர் கோயிலுக்குத் தென்புறம் திருமடம் ஒன்று அமைத்துக் கொண்டு தங்கியிருந்தார்.
திருமாளிகைத் தேவருக்கு போகர் நடராசப் பெருமானைப் பூசை செய்யும் செயல் முறைகளை உபதேசித்துள்ளார். குருவிற்கு பணிவிடை செய்திடும் பொருட்டும் சிவபூஜை செய்திடும் பொருட்டும் மேலும் இரண்டு கரங்களைக் தமது தவ வலிமையால் உருவாக்கிக் கொண்டு நான்கு கரங்களுடன் தமது பணிகளை தொடர்ந்தார். சிறந்த சிவஞானியரான இவர் அழகும் பொலிவும் நிறை திருமேனியராய்த் திகழ்ந்தார். திருமாளிகைத் தேவரின் உடல் தங்கம் போல் ஜொலித்தது. அந்த ஊரில் திருமணம் நடந்து பல வருடங்கள் குழந்தைகள் இல்லாத பெண்கள் சிலர் குழந்தை வரம் வேண்டி இவரின் முன்பு நின்றார்கள். அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவரருளால் அப்பெண்களுக்குக் குழந்தைப் பேறு கிட்டியது. திருமாளிகைத் தேவரின் அருளால் பிறந்த குழந்தைகள் அவரைப் போன்றே நான்கு கையுடன் இருப்பதைக் கண்டு அப்பெண்களின் கற்பு நெறியில் அவர்களது கணவர்கள் சந்தேகமடைந்தார்கள். அச்சமயம் பல்லவ மன்னன் காடவர்கோன் கழற்சிங்கருக்கு (காடவர்கோன் கழற்சிங்கன் காலம் கிபி 825 – 850) கப்பம் கட்டும் சிற்றசர்களில் ஒருவரான நரசிங்கர் திருவாவடுதுறைக்கு அருகில் இருக்கும் பேட்டையில் தங்கினார். இவ்வழியே போகும் பொழுதெல்லாம் அவர் இங்கு தங்கியதால் இவ்விடம் நரசிங்கன்பேட்டை என்ற பெயர் பெற்றது. இது திருவாவடுதுறைக்கு அருகில் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நரசிங்கர் வந்திருந்ததை அறிந்த சிலர் நரசிங்க அரசனிடம் புகார் செய்தார்கள். இதை கேட்டு கோபம் கொண்ட அரசன் திருமாளிகைத்தேவரைப் கட்டி இழுத்து வாருங்கள் என்று தனது வீரர்களுக்கு ஆணையிட்டார். அரசனின் ஆணைப்படி சென்ற வீரர்கள் திருமாளிகைத் தேவரை நெருங்கிய பொழுது அவர்களின் நோக்கத்தை அறிந்த திருமாளிகைத் தேவர் ம் ஆகட்டும் கட்டிக் கொண்டு செல்லுங்கள் என்று கூறினார். திருமாளிகைத் தேவரின் மந்திரம் போன்று மென்மையாக ஒலித்த அந்த சொற்கள் வீரர்களை மயக்கியதால் வீரர்களே தங்களை தாங்களே கட்டிக் கொண்டு நரசிங்கர் முன்னால் பொய் நின்றார்கள்.
திருமாளிகைத் தேவரின் செயலைக் கேட்ட அரசன் மேலும் கோபமுற்று சிந்தையை மயக்கும் அந்த கொடியவனை நீ போய் சிதைத்து விடு. அவன் இனி உயிருடன் இருக்கக் கூடாது என்று தன் தளபதிக்கு உத்தரவிட்டார். தளபதியும் திருமாளிகைத்தேவரின் தலையை சீவிக் கொண்டுத் தான் வருவேன் என்று நரசிங்கரிடம் வீர வசனம் பேசிவிட்டுச் சென்றார். தளபதியைப் பார்த்தவுடன் திருமாளிகைத் தேவர் என் தலையை வெட்டுவதற்காகத் தானே வந்தீர்கள் சரி வெட்டிக் கொண்டு போங்கள் என்று அமைதியாகக் கூறினார். உடனே வீரர்கள் ஒருவருகொருவர் வெட்டிக் கொண்டு இறந்தார்கள். தப்பிப் பிழைத்த இரண்டொருவர் அரசனிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள். அரசன் திருமாளிகைத் தேவர் தன்னைப் போல் மந்திரம் தெரிந்தவர் என்று நினைத்துக் கொண்டு அவன் மந்திரம் என்னிடம் பலிக்காது நானே சென்று அவனை ஒழித்து விடுகிறேன் என்று கிளம்பினார்.
திருவாவடுதுறை மாசிலாமணிசுவரர் கோவிலின் மதிர் சுவற்றின் மேல் நான்குப் புறமும் காவல் இருந்த நந்திகள் உயிர் பெற்று எழுந்து இறைவன் முன்பாக இருக்கும் நந்தி தேவரின் உடலில் புகுந்து பூதகணங்களாக வெளிப்பட்டது. அரசர் திருமாளிகைதேவர் இருக்கும் ஊரின் அருகில் வந்ததும் பூதகணங்கள் வந்த படைகளை அழித்தன. மந்திரியையும் அரசரையும் கட்டி திருமாளிகைத் தேவரின் முன்னால் நிறுத்தின. அரசரின் முன்பாகவே அந்த பூதகணங்கள் இறைவன் முன்பு இருக்கும் நந்தி உருவத்துள் புகுந்து மறைந்தன. ஆனால் திருமாளிகைத் தேவரோ நடந்தவற்றிகும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போல் சிவனே என்று அமைதியாக உட்கார்ந்திருந்தார். இந்த நிலை அரசர் நரசிங்கருக்கு அவரின் ஞான உண்மைகளை உணர்த்தியது. உடனே மன்னர் பெருமானே தங்கள் அருமையை அடியேன் அறியவில்லை. சாதாரண மந்திரவாதி என்று நினைத்து பெரும் தவறு செய்துவிட்டேன் என்னை மன்னியுங்கள் என்று அழுதார். அரசரை அமைதிப் படுத்திய திருமாளிகைத் தேவர் நரசிம்மா இடைவிடாமல் நாம் எதை நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அது நம் நெஞ்சில் பதிந்து நிற்கும் இது உலகின் இயல்பு. பெண்கள் என்னை அன்போடு நினைத்தனர். அதன் விளைவாகவே அவர்களின் குழந்தைகள் என்னைப் போல் இருந்தன. யார் மீதும் தவறு இல்லை. அரசனான நீ புகார் கொடுத்தவர்களின் சொல்லை கேட்டாயே தவிர பிரதிவாதியான என்னை ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லையே. அதனால் தான் உனக்கு இவ்வளவு தொல்லைகளும் நடந்தன என்று கூறி அரசரையும் அமைச்சரையும் விடுவித்தார். இதனால் திருமாளிகைத் தேவர் உத்தமர் என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர். இவ்வாறு அவரது புகழ் அந்த நாடு முழுவதும் பேசப்பட்டு வெகுவாகப் பரவியது. இந்த வரலாற்றிற்கு சான்றாக இன்றும் திருவாவடுதுறை மாசிலாமணிசுவரர் கோவிலில் மதில் மேல் நந்திகள் இல்லாதிருப்பதை நாம் காணலாம். மதில் மேல் இருந்த அனைத்து நந்திகளும் இறைவன் முன் இருக்கும் நந்தியுடன் கலந்ததால் தான் பெரிய நந்தி உருவானதாக திருவாவடுதுறை மாசிலாமணிசுவரர் கோவிலின் தல வரலாறு கூறுகின்றது. நந்தியின் முன்பாக இருக்கும் தூணில் நரசிங்க அரசன் மற்றும் அவரது அமைச்சரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
திருமாளிகைத்தேவர் தமது காலத்தில் பல அற்புதங்கள் செய்திருக்கிறார். ஒரு நாள் போகரும் திருமாளிகைத் தேவரும் கோவிலில் சிவ தரிசனம் முடிந்து பிரசாதமான பயற்றஞ் சுண்டல் பெற்றுக் கொண்டு வெளியேறும் பொழுது தீவட்டி பிடிப்பவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அதனால் அவரை எழுப்ப வேண்டாம் என்று திருமாளிகைத் தேவரே குருவிற்கு தீவட்டிப் பிடித்துக் கொண்டு சென்றார். அருள்துறை என்னும் திருமடத்தை நெருங்கியதும் தீவட்டிப் போதும் இங்கேயே நில். என்று சொல்லி விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் போகர் திருமடத்துக்குள் சென்றார். குரு வார்த்தையே வேதவாக்கு என்று திருமாளிகைத் தேவர் பொழுது விடியும் வரை ஒரு கையில் பயற்றஞ் சுண்டலும் மறு கையில் தீவட்டியும் வைத்துக் கொண்டிருந்ததால் காலை அனுஷ்டாங்களை செய்ய தூய்மையான வேறு இரண்டுக் கைகளை உண்டாக்கி முடித்துக் கொண்டார். அச் சமயம் போகர் திருமாளிகை எங்கே என கேட்க திருமாளிகைத் தேவர் சுவாமி அடியேன் இங்கே இருக்கிறேன் என்று வீதியில் இருந்து குரல் கொடுத்தார். ஏன் உள்ளே வரலாமே என்று குருநாதர் கூறியவுடன் திருமாளிகைத் தேவர் உள்ளே போனார். இரவெல்லாம் விழித்திருந்த சீடரின் குரு பக்தி போகரை வியக்க வைத்தது. அதன் பிறகே தீவட்டி பிடிப்பவர் வந்தார். குருநாதரின் கட்டளைப்படி தீவட்டியை அவரிடம் ஒப்படைத்தார் திருமாளிகைத் தேவர். திருமாளிகைத் தேவரின் கையில் இருந்த பயற்றஞ் சுண்டல் வேகாத பயிராக மாறியதால் அதை ஆட்கள் மூலம் நிலத்தில் விதைத்தார். சில நாட்களில் அவை முளைத்துச் செழித்தன. இதைப் பார்த்த ஊர்மக்கள் திருமாளிகைத் தேவரை சித்தர் என்று நம்பினர்.
திருமாளிகைத் தேவர் ஒரு நாள் வழக்கம் போல் காவிரியில் குளித்து அனுஷ்டாங்களை முடித்து பூக்களைப் பறித்துக் கூடையில் நிரப்பி அபிஷேகத்துக்கான நீர் குடத்துடன் கோவிலை நோக்கி சென்றார். ஒரு குறுகலான பாதையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரில் சவப் பறை முழங்க பிண ஊர்வலம் வரக்கண்டார். அதைப் பார்த்த திருமாளிகைத் தேவர் மனம் குழம்பி அருகில் இருந்த விநாயகரைத் துதித்து விக்னேசா என் மனம் கொண்ட விக்கினத்தைக் களை என்று வேண்டி இறைவனுக்கு அபிஷேகம் செய்ய கொண்டு வந்த திருமஞ்சனக் குடத்தையும் பூக்கூடையையும் மேல் நோக்கி வீசி அந்தரத்தில் நிற்கும்படி செய்து விட்டு பாடையில் இருந்த பிணத்தை நோக்கிப் பார்த்தார். இவ்விநாயகர் கொட்டு தவிர்த்த விநாயகர் என்ற பெயரில் இன்றும் அருள் பாலிக்கிறார். பிணமானது மீண்டும் உயிர் பெற்றெழுந்து நடந்து சென்று இவரைக் கடந்து சிறிது தூரம் சென்று மீண்டும் உயிரை விட்டது. திருமாளிகைத் தேவர் சிவ சிவ என்றபடி அங்கிருந்து நகர்ந்தார். இவர் கோவிலை நோக்கி நடக்க திருமஞ்சனக் குடமும் பூக்கூடையும் ஆகாயத்தில் மிதந்தபடி கோவில் வரை வந்து அவரின் கைகளில் வந்து சேர்ந்தது. அன்றிலிருந்து திருமாளிகைத் தேவர் காவிரியில் நீராடி விட்டுத் திரும்பும் பொழுது தீர்த்தக் குடத்தையும் பூக் கூடையையும் ஆகாயத்தில் வீசிவிட்டு வேகமாக நடப்பார். அவையும் ஆகாயத்தில் அவரைத் தொடர்ந்து வரும். பூஜை செய்யும் இடம் வந்ததும் திருமாளிகைத் தேவர் தன் இரண்டு கையையும் நீட்டுவார். அவை அவர் கைகளில் வந்து சேரும். பின்பு பூஜைகளை செய்வார்.
திருமாளிகைத் தேவரிடம் ஒரு நாள் போகர் நான் புகலூருகுக் கிளம்புகிறேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பினார். குருநாதர் போகரின் பாதுகைகளை அவரின் ஆணையின்படி பூஜித்து வந்த அவர் மாசிலாமணி ஈசரை வழிப்படுவதும் குரு தேவரின் பாதுகைகளை பூஜை செய்வதும் வலியப் போய் அடுத்தவருக்கு உபதேசம் செய்வதும் நல்வழிக் காட்டுவதுமாக இருந்தார். ஒருநாள் திருமாளிகைத் தேவர் திருவீழிமிழலைக்குப் சென்று சிவ ஆலயத் தத்துவங்களை விளக்கும் வகையில் ஒரு தேரை உருவாக்கி அதன் மேல் சுவாமியை வைத்தார். மக்கள் எல்லோரும் கூடி தேரை இழுக்க தேர் நகரவில்லை. மக்கள் கவலையில் ஆழ்ந்தார்கள். திருமாளிகைத் தேவர் தேரின் வடங்களை அவிழ்த்து விட்டு தனக்கும் தேருக்குமாக ஒரு சதாரணமான கயிற்றை கட்டி மாட வீதிகளை வலம் வந்தார். மேலும் பல அற்புதங்களாக கொங்கணர் சித்தருடைய கமண்டலத்தில் இருக்கும் என்றும் வற்றாத நீரினை வற்றச் செய்திருக்கிறார். மயானத்தில் எரிந்து கொண்டிருக்கும் சடலத்தின் புகையினை நறுமணம் கமழும் படிச் செய்திருக்கிறார். திருமாளிகைதேவரின் அற்புதங்கள் அனைத்தையும் தொகுத்து தொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணிய முனிவர் பாடல்களாக பாடியுள்ளார்.
திருமாளிகைத் தேவர் சொன்ன உபதேசங்களில் ஒன்று. நமது மூக்கில் உள்ள இரண்டு துவாரங்களில் வலது துளை சிவம் இடது துளை சக்தி. சனி ஞாயிறு செவ்வாய்க் கிழமைகளில் சிவத் துளையின் வழியாகவும் திங்கள் புதன் வெள்ளிக் கிழமைகளில் சக்தித் துளையின் வழியாகவும் சுவாசம் வெளிப்பட வேண்டும். வியாழக் கிழமைகளில் மட்டும் வளர்பிறையாக இருந்தால் சக்தித்துளை வழியாகவும் தேய்பிறையாக இருந்தால் சிவத்துளையின் வழியாகவும் சுவசாம் வெளிப்பட வேண்டும்.
திருமாளிகைத் தேவர் திருவாவடுதுறையில் தனது குருவான போகரின் திருவடிகளுக்கு பின்னால் யோக நிலையில் அமர்ந்து தவம் புரிந்த இடத்திலேயே முக்தி பெற்று அருள்பாலித்து வருகின்றார். இன்றும் கோமுக்தீஸ்வரருக்கு பூஜைகள் பூர்த்தியான பிறகு அச்சிவாசாரியராலேயே மடாலயத்தில் திருமாளிகைத் தேவருக்கு ஆராதனைகள் நிகழ்த்தப் பெறுவதும் அதன் பின்னரே நமச்சிவாய மூர்த்திகளுக்கு வழிபாடுகள் நிகழ்த்தப் பெறுவதும் மாகேஸ்வர பூஜை நடை பெறுவதும் தொன் மரபாக உள்ளது. கோமுக்தீஸ்வரர் ஆலயத்து வருடாந்திர தை ரதசப்தமி உற்சவத்தில் துவஜாரோஹணத்திற்கு முன்தினம் இரவு திருமாளிகைத்தேவர் உற்சவம் நடைபெறும். கோயிலில் சம்பிரதாய பூஜைகளை ஏற்றருளிய பின்னர் திருமடத்திற்கு எழுந்தருளும் திருமாளிகைத் தேவரை திருமடத்து வாயிலில் ஸ்ரீலஸ்ரீகுருமகாசந்நிதானம் அவர்கள் எதிர்கொண்டு வரவேற்பார்கள். பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க திருமடத்தில் பிரவேசித்து உபச்சாரங்களை அவர் ஏற்றருளி கோயிலுக்கு திரும்ப ஏகும் நிகழ்வுகள் நடத்தப் பெறும்.