சுலோகம் -135

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-16

பார்த்தா எவனொருவன் இவ்வுலகில் இவ்வாறு சுழழும் வட்டமாக வைக்கப்பட்ட படைப்பு சக்கரத்திற்கு அனுகூலமாக பின்பற்றி தன் கடமையை ஆற்றவில்லையோ புலன்கள் மூலம் போகங்களில் இன்புற்றிருக்கும் அந்தப் பாவ வாழ்க்கை உடையவன் வீணே வாழ்கிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 133 மற்றும் 134 இல் உள்ளபடி உலகில் படைப்புகள் வட்டமாக சுழன்று கொண்டே இருக்கிறது. இந்த சுழழும் வட்டத்தை பின்பற்றி எவனொருவன் கர்ம யோகத்தில் ஈடுபட்டு தனக்குண்டான கடமையை செய்யாமல் தனது புலன்களின் வழியாக வரும் போகங்களில் ஈடுபடுகிறானோ அவன் தன் பிறவியை வீணடித்துக் கொண்டு பாவ வாழ்க்கை வாழ்பவன் ஆவான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 248

கேள்வி: வலிப்பு நோய் நீங்க மருந்து:

இறைவனின் கருணையாலே வெண்மனம் (திருவெண்காடு) என்கிற ஸ்தலம் இருக்கிறது. புதனுக்கு ஏற்ற ஸ்தலம் என்று கூறுவார்கள். அங்கு சென்று வழிபாடு செய்வதும் அதே போல் மதுரையம்பதி (மதுரை) சென்று அன்னை மீனாளின் (அம்பிகை மீனாட்சியம்மன்) திருவடியை வழிபாடு செய்வதும் இது போக நவகிரக வழிபாடும் தன்வந்திரி வழிபாடும் பக்தி மார்க்கத்திலே இந்த பிணியைக் குறைக்க உதவும். இதோடு அன்றாடம் உச்சிப் பொழுதிற்கு முன்பாக எதாவது அன்று பறிக்கப்பட்ட பசுந்தளிரான கீரைகளை உணவிலே கட்டாயம் ஏற்றுக் கொண்டு வந்தால் தொடர்ந்து இந்த உணவு முறையை விடாப்பிடியாகக் கடைபிடித்தால் இதோடு தக்க மருத்துவம் எடுத்துக் கொண்டால் விரைவில் கர்ம வினையிலிருந்து விடுபட்டு இந்தப் பிணி நீங்கும்.

கேள்வி: பித்தப்பை கற்கள் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது?

இறைவன் அருளால் கர்மாவை ஒதுக்கி வைத்து விட்டு இதற்கு வாக்கைக் கூறுகிறோம். ஏனென்றால் இது போன்ற பிணிகள் வந்துதான் ஆக வேண்டுமென்றால் விதிப்படி வந்துதான் ஆகும். அது ஒரு புறமிருந்தாலும் இக்காலம் உணவு முறையும் உடற்பயிற்சி முறையும் அறவே தடம் மாறி இருக்கின்றன. நல்ல ஆரோக்கியமான உணவை உடல் உழைப்பின்றி ஏற்ற உணவை மனிதன் உண்ணுவதும் உடல் உழைப்பை மனிதன் அலட்சியப்படுத்தியதாலும் ஏற்பட்ட பல்வேறு விளைவுகளில் இதுவும் ஒன்று. எனவே உடலுக்குத் தீமை என்று எது தெரிந்தாலும் அதனை உணர்வுக்கு அடிமைப்பட்டு மனிதன் தொடர்ந்து உண்ணுவதும் இது போன்ற நோய்கள் பெருகக் காரணமாகிறது. அறுசுவை என்பதிலே மனிதன் சிலவற்றை மட்டும் சேர்த்துக் கொண்டு துவர்ப்பையும் கயப்பையும் (கசப்பையும்) விட்டுவிட்டான். அது இரண்டையும் சரிவிகிதமாக சேர்த்துக் கொண்டே வந்தால் பெருவாரியான பிணிகள் ஒரு மனிதனை அண்டாமல் இருக்கும். இக்காலத்திலே யாங்கள் பட்டியலிடத் தேவையில்லை. இந்த சத்சங்கத்தில் கூட பரிமாறப்படுகிறது பல்வேறு விதமான போக உணவுகள். இவற்றையெல்லாம் விட்டு ஒரு யோகியின் உணவு போல் மாற்றிக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் மனிதனின் அறிவுக்கு இது தெரிந்தாலும் அவன் உணர்வு இதனைக் கடைபிடிக்க விடுவதில்லை. சுருக்கமாகக் கூறப் போனால் அனலில் இட்டு சமைத்து உண்ணுகின்ற உணவிலே பெருவாரியானவற்றை விட்டுவிட்டு கொழுப்பைத் தவிர்த்து மனிதன் பசுமை படர்ந்த உணவு வகைகளையும் கூடுமானவரை கனிவகைகளையும் ஏற்றால் நல்ல பலன் உண்டு. இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவது கடினம் என்றால் விளைவுகளுக்கும் மனிதன்தான் பொறுப்பு.

சுலோகம் -134

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-15

கர்மம் பிரம்மத்தில் இருந்து தோன்றுகிறது என்று உணர்ந்து கொள். பிரம்மம் அமிர்தத்தில் இருந்து தோன்றுகிறது. ஆகையால் எங்கும் நிறைந்த பிரம்மம் வேள்வியில் நிலை பெற்றது .

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கர்மமானது உயிர்களின் ஆசைகளுக்கு ஏற்ப பிரம்மத்தில் இருந்து உருவாகிறது. பிரம்மமானது அமிர்தத்தில் இருந்து தோன்றுகிறது. (அமிர்தம் என்று சொல்லப்படுவது இங்கு வேள்வியாகும்) ஆகையால் பிரம்மமானது சுலோகம் 129 ல் சொல்லப்பட்டபடி மனிதர்கள் தினந்தோறும் செய்யும் கர்மங்களின் வேள்விகளில் நிலை பெற்று இருக்கிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 247

கேள்வி: காவிரி பிரச்சனை எப்போது தீர்க்கப்படும்?

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புகிறோம் அப்பா. மனிதர்கள் இருக்கும் வரையிலும் எதாவது மனிதர்குள்ளே பிரச்சனைகளும் பிணைப்புகளும் அல்லது சிக்கல்களும் இருந்து கொண்டேதான் இருக்கும். காரணம் காலந்தோறும் மாறலாம். ஆனால் மனிதர்களிடையே பகைமையும் கருத்து வேறுபாடுகளும் இருந்து கொண்டே தான் இருக்கும். எனவே தனி மனித ஒழுக்கம் தனி மனித பண்பாடு வளராத வரை இதை எதனாலும் யாராலும் தீர்க்க இயலாது. இது மனித ரீதியான பார்வை. விதியும் கர்மாவும் எப்படி அமைக்கப்பட்டு இருக்கிறதோ அப்படிதான் மனித மனம் செல்லும். இருந்த போதிலும் யாங்கள் இறையிடம் பிராத்தனை வைத்து இந்த சமாதான லோகம் என்றும் இருக்க வேண்டும். அப்படியொன்று இருக்க வேண்டும் என்று அன்றாடம் தவம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். இங்குள்ள மனிதர்களும் அங்குள்ள மனிதர்களும் எல்லா மனிதர்களும் இறைவனருளால் படைக்கப்பட்டவர்கள். இந்த உலகம் மட்டுமல்லாது அனைத்தும் இறைவனருளால் படைக்கப்பட்டவை. எனவே இதில் யாரும் ஆண்டானும் இல்லை. யாரும் அடிமையும் இல்லை. எல்லோருக்கும் எல்லாம் போது என்கிற உணர்வு ஒவ்வொரு தனி மனித மனதிலும் வர வேண்டும். அப்படி வருவது கடினம் என்றாலும் வர வேண்டும் வர வேண்டும் என்று எப்பொழுதுமே இறையிடம் வரம் வேண்ட அந்த வரம் வர வேண்டும் என்று யாமும் இத்தருணம் நல்லாசி கூறுகிறோம்.

கேள்வி: எந்த மந்திரங்கள் ஜெபிக்கலாம்?

இட்டமான (விருப்பமான) தெய்வத்தின் ரூபத்தை மனதிலே தரித்து எந்தவொரு மந்திரத்தையும் உருவேற்றலாம். ருத்ராட்சத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஓம் நமோ நாராயணா என்று சொல்லக்கூடாது என்று நாங்களும் கூறவில்லை. இறையும் கூறவில்லை. எதை வேண்டுமானாலும் வைத்துக் கொண்டு எந்த மந்திரத்தையும் மனமார மனம் ஒன்றக் கூறலாம். அதில் கட்டாயம் ஆன்ம உயர்வு உண்டு.

அகத்தியர் கோவில்

அகத்தியருக்கு அவரது மனைவி லோபமுத்திரையுடன் திருநெல்வேலியிலிருந்து 30 கிமீ தூரத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பிரதான வீதியில் அமைந்துள்ளது கோவில். கிழக்கு பார்த்த தனிச் சந்நிதியில் லோபமுத்திரை தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார். கருவறையில் அகத்தியர் நின்ற கோலத்தில் வலக்கை சின்முத்திரை காட்ட இடக்கையில் ஏடு ஏந்தியுள்ளார். கழுத்தில் லிங்கத்துடன் மாலை ஜடாமகுடம் மார்பில் பூணூல் மீசை தாடியும் அமைந்துள்ளது. இவருக்கு எதிரில் நந்தியும் பிரகாரத்தில் சண்டிகேசுவரரும் இருக்கின்றார்கள். உற்சவர் அகத்தியர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் வலது கையில் நடு விரல்கள் இரண்டையும் மடக்கி பக்தர்களை அழைத்த கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியரின் தேவி லோபமுத்திரை இரு கரங்களுடன் வலக்கரத்தில் பூச்செண்டு ஏந்தியுள்ளார். நவராத்திரி விழாவின் போது 9 நாட்களும் லோபமுத்திரைக்கு விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது. ஆலய முகப்பில் நந்தி கொடி மரம் ஆகியவை உள்ளன. கருவறையின் வலப்புறம் இருவரின் அழகிய வண்ண ஓவியங்கள் உள்ளன. தென்புறம் தனிச் சந்நிதியில் தட்சிணாமூர்த்தியும் மேற்கே அகத்தியர் லோபமுத்திரையின் அழகிய பெரிய உற்சவத் திரு வுருவங்களும் செப்புப் படிமத்தில் காட்சியளிக்கின்றன. அடுத்து நடராஜர் சிவகாமியின் அழகிய பெரிய செப்புப் படிமங்களும் உள்ளன. கன்னி மூலை விநாயகரும் உள்ளார். கிழக்கே உள்ள பெரிய வெளி மண்டபத்தின் முன்புறம் அகத்தியரின் சுதை உருவம் உள்ளது. சிவனுக்குரிய பூஜை முறைப்படியே அகத்தியருக்கும் பூஜை நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் 4 கால பூஜை நடக்கிறது.

கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணம் நடந்த போது பூமியை சமப்படுத்த அகத்தியர் தென்திசை நோக்கி வந்தார். பொதிகை மலைக்குச் செல்லும் வழியில் அவர் பல இடங்களில் சிவபூஜை செய்தார். இவ்வூரிலுள்ள காசிபநாதரை பூஜித்து விட்டு பொதிகை மலைக்கு கிளம்பினார். அப்போது அவருக்கு பசி எடுத்தது. அவ்வேளையில் அகத்தியரை தரிசிக்க சிவபக்தர் ஒருவர் வந்தார். அவரிடம் தனக்கு அமுது படைக்கும்படி கேட்டார் அகத்தியர். அவர் தன் இருப்பிடத்திற்கு சாப்பிட அழைத்தார். அகத்தியர் அவரிடம் தான் ஒரு புளிய மரத்தடியில் காத்திருப்பதாகச் கூறினார். சிவபக்தரும் அன்னம் எடுத்து வரக்கிளம்பினார். அவர் வருவதற்கு தாமதமாகவே அகத்தியர் சாப்பிடாமலேயே பொதிகை மலைக்குச் சென்று விட்டார். அதன் பின் சிவபக்தர் சாதமும் அரைக்கீரையையும் சமைத்து எடுத்து வந்தார். அகத்தியர் சென்றதைக் கண்ட அவர் அகத்தியர் உணவை சாப்பிடாமல் தான் இருப்பிடம் திரும்பமாட்டேன் என சபதம் கொண்டார். அகத்தியரை வேண்டி தவமிருந்தார். சிவபக்தரின் பக்தியை மெச்சிய அகத்தியர் அவருக்கு காட்சி கொடுத்து அன்ன அமுது சாப்பிட்டார். இந்த நிகழ்வு நடந்த இடத்தில் பிற்காலத்தில் அகத்தியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்விற்கு சான்றாக இக்கோவிலில் இன்றும் அன்னம் படைத்தல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்னம் படைத்தல் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் அவரவர் வீடுகளிலிருந்து சோறு பொங்கி எடுத்து வந்து கோவிலில் உள்ள ஒரு அறையில் அதைக் குவித்து வைத்து மூடிவிடுகின்றனர். மறுநாள் காலை அந்த அறையைத் திறந்து பார்த்தால் உணவுக் குவியலில் காலடித் தடம் காணப்படுகிறது. தனக்குப் படைத்த உணவை அகத்தியரே இங்கு வந்து ஏற்றுக் கொண்டதற்கான சான்றாக இந்த காலடித்தடம் இருக்கிறது. பின்னர் இந்தப் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

பாண்டி நாட்டுக்கு வந்து பாண்டிய மன்னர்களுக்கு குலகுருவாக அகத்தியர் விளங்கினார் என்ற செய்தி கிபி 10-ஆம் நூற்றாண்டில் மூன்றாம் ராசசிம்ம பாண்டியன் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட சின்னமனூர் செப்பேடுகளில் வடமொழிப் பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காளிதாசர் எழுதிய ரகுவம்சத்திலும் அகத்தியரின் சிஷ்யன் பாண்டியன் என்னும் குறிப்பு உள்ளது. இவற்றால் அகத்தியருக்கும் பாண்டிய மன்னருக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொள்ளலாம்.

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்

  1. ஆறுமுகம்: ஈசானம் தத்புருஷம் வாமதேவம் அகோரம் சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
  2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம். மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
  3. குமரன்: மிக உயர்ந்தவன். இளமையை எப்போதும் உடையவன். பிரம்மச்சாரி ஆனவன்.
  4. முருகன்: முருகு என்றால் அழகு என்று பொருள். முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
  5. குருபரன் : கு – அஞ்ஞான இருள் ரு – நீக்குபவர். ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும் அகத்தியருக்கும் அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
  6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.
  7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
  8. கந்தன்: கந்து – யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் கந்தன் தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
  9. கடம்பன்: கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
  10. சரவணபவன்: சரம் – நாணல். வனம் – காடு. பவன் – தோன்றியவன். நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
  11. சுவாமி: சுவம் – சொத்து. எல்லா உலகங்களையும் எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
  12. சுரேசன்: தேவர் தலைவன் சுரேசன்.
  13. செவ்வேள்: செந்நிறமுடையவன் ஞானச் செம்மை உடையவன்.
  14. சேந்தன்: செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
  15. சேயோன்: சேய் – குழந்தை குழந்தை வடிவானவன்.
  16. விசாகன்: விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
  17. வேலவன் வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக ஞான வடிவாக விளங்கும் வேல் கூர்மை அகலம் ஆழம் என்னும் மூன்றும் உடையது.
  18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
  19. சுப்ரமணியன்: சு – மேலான பிரம்மம் – பெரிய பொருளிலிருந்து நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
  20. வள்ளற்பெருமான்: முருகன் மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும் விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும் வேலின் மூலம் ஞான சக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும் முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
  21. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
  22. மயில் வாகனன்: மயில் – ஆணவம். யானை – கன்மம். ஆடு – மாயை. இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
  23. சோமாஸ்கந்தன்: சிவன் உமை முருகன் மூவர் சேர்ந்த வடிவம் சோமாஸ்கந்தன். உலக நாயகர்களாம் அம்மைக்கும் அப்பனுக்கும் இடையில் முருகன் அமர்ந்த திருக்கோலம். சோமாஸ்கந்தன் ஆனந்தத்தின் வடிவம்.

தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால் இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும். இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 246

கேள்வி: முற்பிறவியில் செய்த பாவங்களை நீக்குவதற்கு என்ன செய்வது?

இறைவனின் கருணையாலே ஒரு வார்த்தைக்குக் கூறுவதுதானப்பா. சென்ற பிறவியில் செய்தது இந்தப் பிறவியில் தாக்குகின்றது என்று. அது உண்மைதான். ஆனால் அதற்காக இந்தப் பிறவியில் யாரும் பாவமே செய்யாமல் இருக்கிறார்களா? இல்லையே. இந்தப் பிறவியிலும் தவறு மேல் தவறு செய்துவிட்டு அதற்கு சமாதானமும் கூறிக் கொண்டுதான் எம்முன்னே வந்து அமர்கிறார்கள். நீ இந்த பாவங்களை செய்து விட்டு வந்திருக்கிறாய். எம்முன்னே அமராதே. எழுந்து செல் என்று நாங்கள் கூறுவது அத்தனை சிறப்பாக இராது என்பதால்தான் பொதுப்படையாக சென்ற பிறவி பாவம் என்று கூறி வைக்கிறோம். அதே சமயம் ஒரு மனிதன் செய்கின்ற பாவத்தால் எத்தனை ஆத்மாக்கள் எத்தனை காலம் பாதிக்கப்படுகிறது? என்பதைப் பொறுத்தும் அந்த பாவம் முதல் பாவமா? அதாவது முன்னர் அந்த ஆத்மா இவனுக்குத் தீங்கு செய்ததால் அதற்கு பிரதிபலனாக இவன் ஒரு செயல் செய்து அந்த ஆத்மாக்கள் பாதிக்கப்பட்டனவா? அல்லது புதிதாக இவன் எடுத்த முடிவால் செயலால் அந்த ஆத்மாக்கள் பாதிக்கப்பட்டனவா? என்பதையெல்லாம் பார்த்து ஒரு மனிதன் செய்கின்ற செயல் அல்லது அந்த செயலால் ஏற்படுகின்ற விளைவு எத்தனை மனிதர்களுக்கு எத்தனை காலம் எந்தவிதமான கடினங்களைத் தந்திருக்கிறது? என்பதை பார்த்து அதே அளவு அதற்கு சமமான ஒரு பிரதிபலனை செய்த மனிதன் நுகரும் வரை ஒரு பாவம் கூட ஒரு மனிதனை விட்டு செல்லாது. ஆனால் குறுக்கு வழி எதாவது இருக்கிறதா? என்றால் ஏதுமில்லை. பெரும்பாலான பாவங்கள் மனிதன் அறிந்தே செய்வது. சில பாவங்கள் அறியாமல் செய்வது.

பதவி இருக்கிறதே என்ற மமதையில் செய்வது. தன்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது என்ற ஆணவத்தில் செய்வது தன் உடலில் பலம் இருக்கிறது என்று செய்வது. இப்படியெல்லாம் செய்துவிட்டு பிறகு அழுவதால் கூக்குரலிடுவதால் பலனென்ன? எனவே மெல்ல மெல்ல நுகர்ந்துதான் பாவங்களை அனுபவிக்க வேண்டும். ஆனால் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு முதலில் ஒரு மனிதன் செய்ய வேண்டியது இனி விழிப்புணர்வோடு இருந்து கடுகளவு கூட பாவ எண்ணங்கள் இல்லாமலும் செய்யாமலும் வாழ முயற்சி செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் அதிகம் அதிகம் அதிகம் அதிகம் புண்ணிய காரியங்களை தர்ம காரியங்களை செய்ய வேண்டும். அன்றாடம் ஒரு ஆலயமாவது சென்று மனம் ஒன்றுபட்டு வழிபாடு செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து கடைபிடித்தால் நல்ல பலன் உண்டு.

சுலோகம் -133

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-14

உயிரினங்கள் அனைத்தும் உணவில் இருந்து உண்டாகிறது. உணவு மழையில் இருந்து உண்டாகிறது. மழை வேள்வியில் இருந்து உண்டாகிறது. வேள்வி கர்மங்களில் இருந்து உண்டாகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சாப்பிடும் உணவானது இரத்தமாக மாறி இரத்தம் ஆணுக்கு சுக்கிலமாகவும் பெண்ணுக்கு திரோணிதமாகவும் மாறும். இரு உயிரினமும் இச்சையினால் ஒன்று சேரும் போது புதிய உயிரினங்களின் உடல் உருவாகிறது. ஆகவே உயிரினங்களின் உடல் அனைத்தும் உணவில் இருந்து உண்டாகிறது. உணவானது மழையில் இருந்து உண்டாகிறது. மழையானது வேள்வியில் இருந்து உண்டாகிறது. வேள்வியானது உயிர்கள் இயற்றுகின்ற கர்மங்களில் இருந்து உண்டாகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 245

கேள்வி: இறையை அடைவதற்கு ஸ்தூல வடிவில் குரு அவசியமா? அல்லது தனிப்பட்ட முயற்சியினாலேயே இறையை அடைய முடியுமா?

இறைவன் கருணையாலே யார் இருளை நீக்குகிறாரோ அவர் குரு. யார் பிறவித் தளையை நீக்குவதற்கு வழி காட்டுகிறாரோ அவர் குரு. இது ஒரு புறம் இருக்க ஒன்றை உணர்ந்து கொள்ள ஒன்றை கற்றுக் கொள்ள எது காரணமாக இருக்கிறதோ அது அனுபவமோ நிகழ்வோ சக உறவோ நட்போ இதன் மூலம் தக்க பாடம் கற்றுக் கொண்டோம். இனி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற உணர்வு எத்தருணம் யார் மூலம் அல்லது எதன் மூலம் ஒரு மனிதனுக்கு வருகிறதோ அனைத்தும் குருதான். எனவே புறத்தோற்றத்தில் குருவைத் தேடுவதை விட மானசீகமாக இறைவனை வணங்கி குறிப்பாக இறைவனை குரு தக்ஷிணாமூர்த்தி ரூபத்திலே வணங்கி வந்தால் குரு தொடர்பான ஐயங்கள் நீங்கும். மனதில் உள்ள இருள் நீங்கும். மனித வடிவில் குருவைத் தேட வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. எத்தனைதான் உயர்ந்த புண்ணியங்கள் செய்து பலருக்கு ஆன்மீக வழி காட்டுகிறேன் என்று ஒரு ஆத்மா பிறந்தாலும் இங்கு வந்த பிறகு சிறிது சேற்றைப் பூசிக் கொள்ளத்தான் செய்கிறது. எனவே அவன் 90 நல்ல விஷயங்களை போதித்து சில தவறான விஷயங்களை போதித்து விட்டால் அதைக் கேட்கின்ற மனிதனுக்கும் அந்தத் தவறு பாடமாகப் பதிந்து விடும். எனவே மனித விடிவில் பலரை சென்று பார்ப்பதை தவறு என்று கூறவில்லை. எல்லாம் கேட்டு விட்டு பிறகு இறைவனை மானசீகமாக வணங்கி எது நல்லது? எது அல்லது? என்பதை இறைவா நீ உணர்த்து என்று இறைவனிடம் சரணாகதி அடைவதே மெய்யான குருவிற்கும் குருவின் போதனைக்கும் ஏற்ற வழியாகும்.

கேள்வி: பிறவி தோறும் வரும் வாசனை காமம் குரோதம் (கோபம்) லோபம் (பேராசை) போன்றவற்றைக் கடக்க வழி:

வைராக்யத்தால் மட்டும்தான் கடக்க இயலும்.

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை.

  1. மச்ச அவதாரம்

தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.

  1. கூர்ம அவதாரம்

மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.

  1. வராக அவதாரம்

ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.

  1. நரசிம்ம அவதாரம்

எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம் .

  1. வாமண அவதாரம்

ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.

6.பரசுராம அவதாரம்

வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.

  1. ராம அவதாரம்

திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.

  1. பலராம அவதாரம்

இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.

9.கிருஷ்ணஅவதாரம்

முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.

  1. கல்கி அவதாரம்

இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும் தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.