8. அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம் நூலின் எட்டாவது படலமாகும்.

இறைவன் அருளிய வடவைத்தீ என்னும் பசி நோயினால் குண்டோதரன் தடாகை ஏற்பாடு செய்த திருமண விருந்து உணவு முழுவதையும் உண்டான். ஆனாலும் அவனுடைய பசி நோயானது தீராமல் அதிகரித்துக் கொண்டே சென்றது. சொக்கநாதரிடம் சென்று தனது பசி நோயினை போக்கி அருள வேண்டி நின்றான். சொக்கநாதரும் அவன் மீது இரக்கம் கொண்டு உலகிற்கு எல்லாம் உணவளிக்கும் தனது சக்தியான அன்னபூரணியை மனதில் நினைத்தார். உடனே அங்கே தயிர் அன்னத்தினை உடைய நான்கு பெரிய குழிகள் தோன்றின. சொக்கநாதர் குண்டோதரனிடம் பசி நோயால் வாடும் குண்டோதரனே இந்த குழிகளில் உள்ள தயிர் அன்னத்தினை உண்பாயாக என்று அருளினார். இறைவனின் ஆணையின்படி குண்டோதரனும் தன்னுடைய இரு கைகளாலும் அன்னக்குழியில் இருந்த தயிர் அன்னத்தை எடுத்து உண்டான்.

இறைவனின் கருணையால் குண்டோதரனைப் பிடித்திருந்த பசி நோய் மறைந்தது. அன்னக்குழியில் இருந்து உணவினை உண்ட குண்டோதரனின் வயிரானது பருத்து பெரியதானது. உணவினை உண்ட மயக்கத்தால் அவன் பூமியில் வீழ்ந்தான். இங்கும் அங்கும் புரண்டான். சிறிது நேரத்தில் குண்டோதரனுக்கு உண்ட உணவின் காரணமாக தண்ணீர் தாகம் ஏற்பட்டது. உடனே அவன் மதுரையில் நீர் இருக்கும் இடங்களைத் தேடிபோய் நீரினை அருந்தினான். குண்டோதரனின் தண்ணீர் தாகத்தின் காரணமாக மதுரையின் நீர்நிலைகள் வற்றின. ஆனாலும் அவனுடைய தண்ணீர் தாகம் அடங்கவில்லை. அவன் மீண்டும் சொக்கநாதரை சரணடைந்து உலகினை காத்து அருளும் பெருமானே. அடியேனின் பசி நோய் போய் இப்போது தண்ணீர் தாகம் அதிகரித்துள்ளது என்றான். இங்குள்ள நீர் நிலைகளில் உள்ள நீரினை எல்லாம் குடித்த பின்னும் என்னுடைய தாகம் தணியவில்லை. பசி நோயினை போக்கிய தாங்களே என்னுடைய தாகத்தினையும் தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தான்.

சொக்கநாதரும் குண்டோதரனிடம் அன்பு கொண்டு தன் தலையில் சூடியிருந்த கங்கையை நோக்கி பெண்ணே நீ இம்மதுரை மாநகரின் பக்கத்தில் ஒரு பெரிய நதியாக விரைந்து ஓடி வருவாயாக என்று கட்டளை இட்டார். கங்கை சிவபெருமானை நோக்கி முன்னர் பகீரதன் பொருட்டு ஒருமுறை தீர்த்தமாக என்னை அழைத்தீர்கள். இப்போதும் அவ்வாறே அழைக்கிறீர்கள் என்றாள். என்னுள் மூழ்கியவருக்கு பக்தியும் அன்பும் மெய்ஞானமும் வீடுபேறும் பெறுமாறு தாங்கள் எனக்கு திருவருள் புரிய வேண்டும் என்று கங்கை வரம் வேண்டினாள். இறைவனும் அவ்வாறே அருள் புரிந்தார். உடனே கங்கை அளவற்ற வேகத்துடன் பெரிய நதியாக ஆரவாரத்துடன் பெரிய மரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்தது. சிவபெருமான் குண்டோதரனிடம் அந்த நதி நீரில் வை உன்னுடைய கை என்று நீரை பருகக் கட்டளையிட்டார். குண்டோதரனும் ஆற்றின் அருகே சென்று இருகைகளை அந்த நீரில் கை வைத்து வாரிக் குடித்தான். உடனே அவனுடைய தண்ணீர் தாகம் தணிந்தது. குண்டோதரன் கையை வைத்து நீர் குடித்த நதியாதலால் அது வைகை என்று அழைக்கப்பட்டது. தண்ணீர் தாகம் தணிந்த குண்டோதரன் மகிழ்ந்து இறைவனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். ஆனந்தத்தில் பல பாடல்களைப் பாடினான். அவனது பாடல்களைக் கேட்ட சிவபெருமான் அவனை தனது பூதகணங்களுக்கு தலைமை ஏற்கும் பதவியை அவனுக்கு அருளினார்.

சிவபெருமானின் தலையில் இருந்து இறங்கி வந்ததால் வைகை சிவகங்கை என்று அழைக்கப் படுகிறது. தன்னை பருகுபவர்களுக்கு தெளிந்த சிவஞானத்தை அளிப்பதால் இது சிவஞானத் தீர்த்தம் என்றும் காற்றைப் போல் வேகமாக வருவதால் வேகவதி என்றும் மதுரையை சூழ்ந்து வருவதால் கிருத மாலை என்றும் அழைக்கப்படுகிறது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனை சரண் அடைபவர்களை இறைவன் கட்டாயம் காத்து அருளுவார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார். மேலும் மதுரை நகருக்கு வற்றாத வைகை புண்ணிய நதியை இந்த திருவிளையாடல் மூலம் அளித்து அருளினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 426

கேள்வி: இறை மறுப்பாளர்களும் நீண்ட ஆயுளும் புகழும் பெறுவது எப்படி?

இறை உண்டு என்று கூறிக் கொண்டு தவறான செயலை செய்வதை விட இறைவன் இல்லை என்று கூறிவிட்டு நல்ல தொண்டினை செய்வதை இறைவனே விரும்புகிறார். அடுத்ததாக இறை மறுப்பாளர்கள் அல்லது வேறு தவறான காரியங்களை செய்கின்ற மனிதர்கள் ஒருபுறம் இருக்கட்டும். எத்தனையோ அசுரர்கள் தவமாய் தவமிருந்து இறைவனை நேரில் தரிசனம் செய்து பல வரங்களை வாங்குகிறார்கள். அந்த அசுரன் பிறக்கும் பொழுதே தெரியும் அவன் என்ன செய்யப் போகிறான்? என்று. அவன் எதற்காக தவம் செய்கிறான்? என்றும் தெரியும். வரம் கேட்கும் பொழுதும் இறைவனுக்கும் தெரியும் அவன் எதற்காக வரம் கேட்கிறான்? என்ன செய்வான்? என்று. இதெல்லாம் தெரிந்தும் இறைவன் எதற்காக அவனை அனுமதிக்கிறார்? ஒன்று இந்த உலகத்தில் பல்வேறு விதமான அனுபவங்கள் பல்வேறு ஆத்மாக்களுக்கு ஏற்பட்டு அதன் மூலம் கர்மங்கள் குறைய வேண்டும். விதவிதமான மனிதர்கள் விதவிதமான குணங்கள் கொண்ட உயிரினங்கள் இவைகளை எல்லாம் படைப்பது ஒருவகையில் கர்மக் காரணங்கள் இன்னொரு வகையில் இறைவனின் திருவிளையாடல்.

இன்னொன்று எல்லாம் இந்த உலகத்தில் ஒரே வகையாக இருந்தால் எதையும் பயன்படுத்த முடியாது. பரிபூரண ஞானநிலை பெற்று இறையோடு ஒன்றிவிட்டால் ஒன்றும் தேவையில்லை. இந்த உலகிலே விதவிதமான விஷயங்கள் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. குற்றம் செய்கின்ற ஒருவன் ஒரு பொருளை எடுத்து விடுகிறான். பொருளை இழக்க வேண்டும் அதனால் துன்பப்பட வேண்டும் என்பது பொருளை இழந்தவன் கர்மா. சிறையில் அடைபட்டு துன்பம் அடைய வேண்டும் என்பது இவன் கர்மா. இந்த குற்றவாளியை துரத்தி சென்று பிடிக்க வேண்டும் என்பது தீது அடக்கும் துறை சார்ந்தவனின் கர்மா. இவர்களை பிடித்து நீதிமன்றத்திலே நிறுத்தி தண்டனை வாங்கித் தர வேண்டும். நீதிமன்றம் இயங்க வேண்டும் என்பது அவர்களின் கர்மா. எனவே மின்சாரத்தை கடத்தக் கூடிய பொருள் எப்பொழுதெல்லாம் தேவையோ அப்பொழுதே மின்சாரத்தைக் கடத்தாத பொருளும் தேவை. மின்சாரத்தை கடத்தாத பொருள் இருந்தால்தான் மின்சாரத்தை கடத்துகின்ற பொருளை நாம் பயன்படுத்த முடியும். எனவே இறைவன் இருக்கிறார் என்று கூறுகின்ற மனிதர்கள் இருக்கின்ற அதே உலகில் இறைவன் இல்லை எனும் மனிதன் இருந்தால்தான் இறைவனின் பெருமையை உணர முடியும். இவையனைத்தும் இறைவனின் லீலையே.

7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் நூலின் ஏழாவது படலமாகும்.

சுந்தரேஸ்வரர் மீனாட்சி திருமண நிகழ்விற்கு வந்திருந்த அனைவரும் வெள்ளியம்பலத்தில் நிகழ்ந்த இறைவனாரின் திருநடனத்தினைக் கண்டு களித்தனர். பின்னர் அனைவரும் அறுசுவையுடன் கூடிய திருமண விருந்தினை உண்டனர்.  திருமண விருந்தினை உண்டவர்களுக்கு பாக்கு தாம்பூலத்துடன் பரிசுப் பொருட்களையும் தடாதகை வழங்கினார். அப்போது சமையல்காரர்கள் தடாதகையிடம் விரைந்து சென்று அம்மையே திருமண விருந்திற்கு தயார் செய்த உணவு வகைகளில் ஆயிரத்தில் ஒரு பங்கு உணவு கூட காலியாகவில்லை. இப்போது என்ன செய்வது? என்று கேட்டனர். இதனைக் கேட்ட தடாதகைக்கு இத்தனை பேர் உணவு உண்ட பின்னும் திருமண உணவு மீதி இருக்கிறதா என்ற ஆச்சர்ய எண்ணத்தோடு அதிகமாக உணவு ஏற்பாடு செய்திருக்கிறோம் என்ற கர்வமும் தொற்றிக் கொண்டது. சமையல்காரர்கள் கூறியதைக் கேட்ட தடாதகை சுந்தரேசரிடம் சென்று ஐயனே திருமணத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வந்தனர். அவர்களுக்காக அறுசுவையுடன் கூடிய திருமண விருந்து தயார் செய்யப்பட்டது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட திருமண விருந்து உணவினை அனைவரும் சாப்பிட்ட பின்பும் ஆயிரத்தில் ஒரு பங்கு உணவு கூட காலியாகவில்லை. வேறு யாரேனும் தங்களைச் சார்ந்தவர்கள் உணவு அருந்தாமல் இருந்தால் அவர்களை உணவு உண்ண அனுப்பி வையுங்கள் என்று பெருமையும் கர்வமும் பொங்க கூறினாள்.

தடாதகை கர்வத்துடன் கூறியதைக் கேட்ட சிவபெருமான் ஒரு திருவிளையாடலை நிகழ்த்த எண்ணினார். அவர் தடாதகையை நோக்கி புன்னகையுடன் உலகில் பெறுதற்கரிய செல்வங்களை எல்லாம் நீ பெற்று உள்ளாய். கற்பக விருட்சமும் உன்னுடைய செல்வ செழிப்பிற்கு முன்பு தோற்றுவிடும். உன்னுடைய செல்வத்தின் அளவினை அறிவிக்கவே இவ்வளவு உணவினை தயார் செய்ய சொல்லியுள்ளாய். ஆனாலும் அறுசுவை திருமண விருந்தினை உண்ண பசியால் களைப்படைந்தோர் யாரும் எம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதே உண்மை. நான் இப்போது என்ன செய்வது? என்று கேட்டு விட்டு பின் பக்கத்தில் நின்றிருந்த குண்டோதரனுக்கு வடவைத்தீ என்னும் பசிநோயினை உண்டாக்கினார். பசி நோய் வந்ததும் குண்டோதரன் பசியால் தளர்ந்த உடலுடன் ஐயனே எனக்கு பசிக்கிறது என்றான். இதனைக் கேட்ட இறைவனார் தடாதகை எனது குடையினைத் தாங்கிவரும் இந்த பூதகணத்திற்கு ஒரு பிடி உணவு என்று கூறினார். இதனைக் கேட்ட மீனாட்சி ஒரு பிடி உணவு என்ன வயிறு நிறைய திருமண விருந்தினை குண்டோதரன் உண்ணட்டும் என்று கர்வத்துடன் கூறினாள். குண்டோதரனும் பசியோடு திருமண விருந்து நடைபெறும் இடத்தினை நோக்கிச் சென்றான்.

திருமண விருந்து நடைபெறும் இடத்தினை அடைந்த குண்டோதரன் அங்கிருந்த சமைத்த அறுசுவை உணவுகளை எல்லாம் ஒரு நொடியில் விழுங்கினான். பின் அங்கிருந்த காய்கறிகள் பழங்கள் கரும்பு தேங்காய் அரிசி நவதானியங்கள் சர்க்கரை என கண்ணில் பட்ட எல்லா உணவுப் பொருட்களையும் உண்டான். அப்போதும் அவனின் பசி நோய் தீரவில்லை. இவ்வளவு சாப்பிட்டும் குண்டோதரன் வயிறு ஒட்டிப் போயே இருந்தது.  அவன் வயிற்றில் இருந்த அக்கினி அனைத்து உணவையும் நொடிப்பொழுதில் பஸ்மமாக்கியது. இன்னும் ஏதாவது உண்ணத் தாருங்கள் என்று அங்கிருந்த சமையல்காரர்களிடம் கேட்டான். அதனைக் கேட்ட சமையல்காரர்கள் தடாதகையிடம் குண்டோதரன் உணவுகள் அனைத்தையும் விழுங்கியதையும் இன்னும் உண்ண உணவு வேண்டும் என்று கேட்டதையும் பற்றிக் கூறினர். இதனைக் கேட்ட தடாதகை சுந்தரேசரிடம் சென்று தயங்கியபடி எப்படித் தொடங்குவது என்று தயங்கி நின்றாள். இறைவன் ஒன்றும் தெரியாதவர் போல தடாகையிடம் குண்டோதரன் சாப்பிட்டு முடித்து விட்டானா? மற்ற பூதங்களுக்கு ஆள் அனுப்பி இருக்கிறேன்.  இதோ வந்து விடுவார்கள் சற்று பொறுத்துக் கொள் என்றார் இறைவன். இதனைக் கேட்ட தடாகை ஐயனே நான் என்னுடைய செல்வத்தால் உலகத்தினர் அனைவருக்கும் உணவளிக்க முடியும் என்று கர்வம் கொண்டிருந்தேன். ஆனால் தாங்கள் ஒரு பிடி உணவு சாப்பிடச் சென்ற குண்டோதரனின் பசியை என்னால் போக்க இயலவில்லை. என்னை மன்னியுங்கள் என்று கூறி சிவபெருமானே சரணடைந்தாள்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவியே ஆனாலும் தன் செல்வத்தை எண்ணிக் கர்வம் கொள்ளக் கூடாது கர்வம் கொண்டால் உள்ளதும் அளிந்து போகும் என்ற கருத்தை அனைவருக்கும் அறிந்து கொண்டு யாரும் கர்வம் கொள்ளக் கூடாது என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 425

கேள்வி: காரணமின்றி காரியம் இல்லை. இதற்கு இறை விளக்கம் தருக:

இறைவனின் கருணையாலே எல்லா காரியங்களுக்குப் பின்னாலும் காரணம் இருக்கிறது. ஆனால் அந்தக் காரணத்தை மனிதன் ஏற்றுக் கொள்வதுதான் கடினமாக இருக்கிறது. ஏனென்றால் மனிதன் முழுக்க முழுக்க உடல் ரீதியாக வருகின்ற எந்த துன்பத்தையும் அவன் அனுபவித்து தீர்க்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. அது அனுமதிக்கவுமில்லை. ஆனால் உடல்ரீதியாக ஒரு மனிதனுக்கு ஒரு துன்பம் வருகிறது என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. புரிவதுபோல் கூறவேண்டும் என்றால் அம்மை நோய் ஒரு குழந்தையை தாக்கிவிட்டால் அது துன்பம். அந்தக் குழந்தை துடிக்கும். பெரியவர்களை தாக்கினாலும் சிறியவர்களை தாக்கினாலும் துன்பம்தான். வெம்மையின் மிகுதியால் இந்தப் பிணி தாக்குவதாக கூறப்படுகிறது. ஒருவித நுண் கிருமியால் இந்த நோய் வருவதாக விஞ்ஞான அறிவு மனிதனுக்கு சொல்லித் தந்திருக்கிறது. இந்த நோய் மனிதனை தாக்கினால் துன்பம். இது மனிதனுக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்த நோய் ஒரு மனிதனை தாக்கிய பிறகு அந்த மனிதனுக்குள் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகுகிறது என்பது உண்மை. இதுவும் விஞ்ஞானம் கூறுகிறது. எனவே எந்தவொரு துன்பத்திற்குப் பின்னாலும் ஒரு மனிதனுக்கு நன்மையை தரக்கூடிய ஒரு நிகழ்வு இருக்கும் என்பதே உண்மையாகும். இதை பொறுமையோடு சிந்தித்துப் பார்த்தால் ஒரு மனிதனுக்கு புரியும். பொறுமை இல்லையென்றால் காரணமில்லாமல் இந்த துன்பம் வந்திருக்கிறது என்பதுபோல் தோன்றும்.

இப்படிக் கூறினால் ஒரு மனிதனுக்கு வேறுவிதமான ஐயம் வரும். எல்லாம் சரி குருதேவா ஒரு தாய் தந்தைக்கு நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் இருக்கிறது. பல்வேறு ஆலயங்கள் சென்று பிரார்த்தனை செய்து தர்மங்களை செய்து ஒரு குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள். அன்போடும் ஆசையோடும் வளர்க்கிறார்கள். இருபது வயது வளர்ந்த பிறகு அந்தக் குழந்தை திடீரென நோய் வாய்பட்டோ விபத்திலோ இறந்து விடுகிறது. தாய் தந்தைக்கு துக்கம் தாங்க முடியவில்லை. கதறுகிறார்கள் அழுகிறார்கள். இதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இந்த துன்பத்திற்கு என்ன நியாயம் இருக்கும்? இந்த துக்கம் அவர்களைவிட்டு என்றுமே நீங்காதே? இன்னும் இதுபோல பல நிகழ்ச்சிகள் மனித வாழ்க்கையிலே நீக்க முடியாத துன்பமாக இருக்கிறதே? இதை எப்படி எடுத்துக் கொள்வது? இந்த இடத்தில்தான் கர்மாவை ஒரு மனிதன் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை பிறந்து ஆசையோடும் அன்போடும் வளர்க்கப்பட்ட பிறகு தாய் தந்தையரை விட்டு பிரிகிறது என்றால் அங்கே மூன்று ஆத்மாக்களின் கர்மா இணைக்கப்படுகிறது. அதற்குப் பின்னாலும் பலவிதமான கர்மக் கணக்கு இருந்தாலும் புரிவதற்காக சுருக்கமாக கூறுகிறோம். முதலில் அந்தக் குழந்தையை பிரிந்து துக்கப்பட வேண்டும் என்று அந்த தாயின் கர்மாவும் தந்தையின் கர்மாவும் இருக்கிறது.

6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இறைவன் வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் நூலின் ஆறாவது படலமாகும்.

உலகத்தின் இறைவனான சுந்தரேஸ்வரருக்கும் உமையம்மையாகிய தடாதகைக்கும் மதுரையில் திருமணம் இனிது நிறைவேறியது. திருமணம் முடிந்தவுடன் திருமணத்திற்கு வந்திருந்த மன்னர்கள் தேவர்கள் முனிவர்கள் உள்ளிட்ட அனைவரையும் விருந்துக்கு மதுரையின் அரசரான சுந்தரேஸ்வரர் அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பினை ஏற்று அனைவரும் பொற்றாமரைக் குளத்தில் நீராடி விருந்து சாப்பிட வந்தார்கள். திருமண விருந்தில் பங்கேற்க வந்தவர்களுள் பதஞ்சலியும் வியாக்கிரதபாதரும் அடங்குவர். இவ்விருவரும் தில்லை பொன்னம்பலத்தில் உள்ள தில்லை அம்பலவாணரின் திருநடனத்தினை வழிபட்ட பின்பு தான் உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். இப்போது திருமணத்திற்காக மதுரை வந்திருந்தவர்கள் இறைவனான சுந்தரேஸ்வரரிடம் எங்களின் தந்தையே நாங்கள் பொன்னம்பலத்தில் தாங்கள் ஆடியருளும் திருநடனத்தை தரிசித்த பின்புதான் தினமும் உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டுளோம் தற்போது திருநடனத்தை காணாமல் எப்படி உணவருந்த இயலாது என்றார்கள்.

முனிவர்கள் கூறியதைக் கேட்ட சுந்தரேஸ்வரர் உலகம் என்ற மனிதனுக்கு அழகிய தில்லை இதயம் என்றால் மதுரை துவாத சாந்தத் தானம் ஆகும். ஆதலால் தில்லை பொன்னம்பலத்தில் நிகழ்த்திய திருநடனத்தை இம்மதுரையில் யாம் செய்து காட்டுவோம் என்று கூறினார். அதனைக் கேட்ட முனிவர்கள் இருவரும் கருணைக் கடலே உலகம் என்ற மனிதனுக்கான ஏனைய உறுப்புக்கள் யாவை? என்று வினவினர். அதற்கு இறைவனார்

மூலாதாரம் கமலாயம் எனப்படும் திருவாரூர். அங்கே நான் தியாகராஜ மூர்த்தியாய் அருள் புரிகின்றேன். சுவாதிஷ்டானம் திருவானைக்காவல் அங்கே ஜம்புகேசுவர மூர்த்தியாய் அருள் புரிகின்றேன். மணிபூரகம் திருவண்ணாமலை அங்கே அருணாசல மூர்த்தியாய் அருள் புரிகின்றேன். அனாகத சக்கரம் சிதம்பரம் அங்கு நான் சபாபதியாக அருள் புரிகின்றேன். விசுக்திஸ்தானம் தக்ஷிண கைலாசமெனப்படும் திருக் காளஹஸ்தி அங்கே நான் காளத்திநாதனாக அருள் புரிகின்றேன். ஆக்ஞாஸ்தனம் (புருவ மத்தியம்) காசி அங்கே நான் விசுவநாத மூர்த்தியாக அருள் புரிகின்றேன். திருக்கைலாயம் பிரம்மரந்திரம் (சுழிமுனையின் உச்சியாகிய இடம்) அங்கே நான் ஸ்ரீகண்ட பரமேஸ்வரனாக அருள் புரிகின்றேன். இம்மதுரை துவாத சாந்தம் (உச்சிக்கு மேற் பன்னிரெண்டு அங்குல அளவில் உள்ள பாகம்) ஆகும் இங்கு சுந்தரேஸ்வரனாக அருள் புரிகிறேன் என்று கூறினார். பின் முனிவர்களோடு திருக்கோவிலினுள் சென்றார். அங்கே பொன்னாலாகிய விமானத்தின் கீழ்புறத்தில் வெள்ளியம்பலம் தோன்றியது. அதன்மேல் மாணிக்க பீடம் ஒன்று தோன்றியது. ஒளி வீசிக் கொண்டிருந்த வெள்ளியம்பல மாணிக்க பீடத்தின் மேல் பாரின் இருளை அகற்றும் ஒளிக்கதிர் போல் அடியர்களின் அஞ்ஞானமாகிய இருளை விரட்டும் பொருட்டு ஞானஒளியின் வடிவாய் சிவபெருமான் தோன்றினார்.

திருநந்தீஸ்வரர் மத்தளம் கொட்ட திருமால் இடக்கை என்னும் இசைக் கருவியை வாசிக்க தும்புரு நாரதர் இருவரும் இசைப்பாட்டு பாடினர். கலைமகள் சுருதி கூட்ட பிரம்மதேவர் யாழினை மீட்டி கீதங்கள் பாடினார். சிவகணங்கள் மொந்தை தண்ணுமை என்னும் கருவிகளை முழங்கினர். இறைவனார் பெரிய விழிகளைக் கொண்ட முயலகன் மேல் அவன் விழிகள் பிதுங்குமாறு முதுகின் மேல் வலது காலினை ஊன்றி காட்சியளித்தார். இறைவனாரின் வலது மேற்கையில் உடுக்கையும் இடது மேற்கையில் தீச்சுவாலையும் காணப்பட்டது. அவரின் வலகீழ்கை அடைக்கலம் தந்தவாறும் இடதுகீழ்க்கை குஞ்சித பாதத்தைக் காட்டியாவாறும் இருந்தன. அவரின் கூந்தல் மற்றும் ஆடைகள் காற்றில் அசைந்தவாறு இருந்தன. அழகிய கண்களைக் கொண்ட உமையம்மை ஒருபுறம் ஒதுங்கி நிற்க அவ்வம்மையைப் பார்த்த வண்ணம் இதழ்களில் புன்னகையை ஏந்தி இறைவனார் திருநடனம் புரிந்தார். சுந்தரேஸ்வரர் ஆடல்வல்லானாக வெள்ளியம்பலத்தில் ஆடிய நடனத்தைக் கண்ட முனிவர்களாகிய பதஞ்சலியும் வியாக்கிரதபாதரும் நெஞ்சுருகி நின்றனர். தங்களின் பிறவிப் பயனை அடைந்துவிட்டோம் என்று எண்ணினர். பதஞ்சலி வியாக்கிரதபாதர் மட்டுமல்லாது திருமணத்திற்கு வருகை புரிந்த பிற முனிவர்கள் அரசர்கள் தேவர்கள் கந்தவர்கள் கிம்புருடர்கள் யோகிகள் உட்பட எல்லோரும் இறைவனாரின் திருக்கூத்தினை கண்டு களித்தனர்.

முனிவர்கள் ஆடல்வல்லானை நோக்கி உலக இயக்கங்களுக்கு காரணமானவரே தாங்களின் திருநடனத்தைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து விட்டோம். அடியேன்களின் வேண்டுகோளினை ஏற்று வெள்ளியம்பலத்தில் தாங்கள் ஆடிய திருநடனத்திற்கு முதல் வணக்கம் என்றனர். ஊழிமுதல்வனே உயிர்களின் பிறவிக்கடலினை தீர்ப்பவனே அடியார்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைக்கும் எங்கள் தந்தையே உங்களுக்கு வணக்கம். இறைவனாரின் இடதுபாகத்தில் உறைந்திருக்கும் உமையம்மைக்கு வணக்கம் என்று பலவாறு போற்றி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினர். இறைவனின் திருநடனத்தினைக் கண்டு மகிழ்ந்து போற்றிய பதஞ்சலி வியாக்கிரதபாதர் ஆகியோர்களை நோக்கி இறைவனார் நல்லது. நீங்கள் விரும்பியது என்ன? என்று வினவினார். அதனைக் கேட்ட இருவரும் எங்களின் இறைவா. தாங்கள் இவ்வெள்ளியம்பலத்தினுள் எப்போதும் திருநடனத்தினை நிகழ்த்தி உயிர்களை மாயையிலிருந்து விடுபடச் செய்து அவைகளுக்கு நற்கதி அளிக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொண்டார்கள். அதற்கு சுந்தரேஸ்வரர் செந்தமிழை வளர்த்து ஓங்கச் செய்யும் இப்பாண்டிய நாடு செய்த தவப்பயனின் காரணமாக நீங்கள் விரும்பிய வரத்தினை அளித்தோம் என்று அருளினார்.

பதஞ்சலி முனிவர் சுந்தரேஸ்வரரிடம் முக்காலமும் ஆனவரே ஆதியே எம்பெருமான தங்களின் திருநடனத்தைக் நேரே கண்டு களித்த அனைவருக்கும் இப்பூமியில் மீண்டும் பிறவாத ஒப்பற்ற சிவகதியை அடைய அருள்புரிய வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமானும் அதற்கு இசைந்து அருள்புரிந்தார். இதனைக் கேட்ட சிவகணத்தவர் சிவபெருமானை கொண்டாடி மகிழ்ந்தனர். முனிவர்கள் ஆனந்தம் அடைந்தனர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

மதுரையில் வெள்ளியம்பலம் அமைத்து அந்த வெள்ளியம்பலத்தில் மாணிக்க பீடம் அமைத்து அதன்மீது இறைவன் திருநடனம் ஆடி உலகிற்கு நன்மை அளித்துள்ளார். அண்டத்திலுள்ள அனைத்திலும் இறைவன் இருப்பது போல் இந்த பிண்டத்திலும் இறைவன் அனைத்து பாகங்களிலும வீற்றிருந்து திருவிளையாடல் புரிகிறார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 424

கேள்வி: வ்யதிபாத யோகம் மற்றும் மூதாதையர் வழிபாடு பற்றி:

இறைவனின் கருணையாலே நல்விதமாய் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் சாபங்கள் தோஷங்கள் பாவங்கள் அவற்றையும் அந்த குடும்பத்தில் எந்த ஆத்மா குழந்தையாக பிறக்கிறதோ அதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதற்கும் அது பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அந்த வகையிலே அந்த வழிமுறையிலே வரக் கூடிய பாவங்களையெல்லாம் குறைத்துக் கொள்ள தோஷங்களை சாபங்களை நீக்கிக் கொள்ள செய்யக் கூடிய விதவிதமான வழிபாடுகள்தான் இன்னவன் கூறியது. இந்த வழிபாட்டோடு பரிபூரண எதிர்கால வழிபாட்டிலே வெறும் சுயநலமாய் இந்த உலக வாழ்விற்காக வாழாமலும் ஒரு மகானும் ஞானியும் இறைவனும் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும்? என எண்ணுகிறார்களோ அப்படி வாழ்வதற்குண்டான மனோபாவம் வளர்வதற்கு உண்டான வழிபாடும் இவை இரண்டுமே. எனவே பூர்வீக தோஷங்களை பாவங்களை குறைத்துக் கொண்டால்தான் எதிர்கால வாழ்வு செம்மையாக இருக்கும். அதற்குண்டான வழிபாட்டின் தன்மைதான் இரண்டையும் குறிக்கிறது.

5. தடாதகை பிராட்டியாரின் திருமணப் படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் தடாதகை பிராட்டியாரின் திருமணப் படலம் நூலின் ஐந்தாவது படலமாகும்.

அங்கயற்கண்ணி என்ற தடாகை பாண்டிய நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று நீதிவழியில் ஆட்சி செய்தார். தடாதகையின் அன்னையான காஞ்சன மாலை தன் மகளின் ஆட்சித் திறனைப் பார்த்து மெய்சிலிர்த்தாள். திருமண வயதை தன் மகள் எட்டியதை உணர்ந்த அத்தாய் தன் மகளிடம் அழகும் அறிவும் உடைய உனக்கு திருமணம் இன்னும் கைகூடவில்லை என்று தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள். மலையத்வஜனும் இறந்துவிட்டான். அதனால் தாயான காஞ்சன மாலைக்கு இரட்டிப்புக் கவலையாகி விட்டது. இதையறிந்த தடாதகை அம்மா இங்கேயே இருந்தால் உன் எண்ணம் நிறைவேறாது.  நான் திக்விஜயம் என்ற பெயரில் பலநாடுகளும் சுற்றி வருகிறேன். எனக்குப் பிடித்த மணாளனை அறிந்து வருகிறேன் என்று தாயிடம் விடை பெற்று நான்கு குதிரைகள் பூட்டிய மீன்கொடி பறக்கும் தேரில் ஏறிக்கொண்டு நால்வகை சேனையுடன் புறப்பட்டாள். பூவுலகில் பல மன்னர்களை வெற்றி பெற்றாள். அடுத்தப்படியாக எட்டுத் திக்குகளையும் வெற்றி பெறப் புறப்பட்டாள். 

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தன் அமைச்சர்களையும் படைகளையும் ஜெபிக்க செய்து அவர்களுக்கு திவ்வியமான பார்வையையும் வானில் செல்லும் சக்தியையும் அளித்தாள் தடாதகை. பின் கிழக்கே அமராவதி சென்று இந்திரனை வென்று அவன் பரிசாக அளித்த காமதேனு கற்பகத்தரு சிந்தாமணி எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு தென்கிழக்கு திசைக்குச் சென்று அக்கினியை வென்று அவன் காணிக்கையாக அளித்த தங்கக் கட்டிகளுடன் தெற்கே வந்து யமனைப் போரில் வென்று அவன் தந்த வெகுமதிகளுடன் தென்மேற்கே நிருதியை ஜெயித்து மேற்கிலே வருணனையும் வடமேற்கில் வாயுவையும் வடக்கே சோமனையும் வென்று அருள்புரிந்து வடகிழக்கில் கைலாயம் நோக்கி வந்தாள்.

திருகையாலயத்தை தடாகை அடைந்த செய்தியை திருநந்திதேவர் இறைவனான சிவபெருமானிடம் தெரிவித்தார். சிவபெருமானும் தம் சிவகணங்களை அனுப்பி தடாதகையுடன் போரிடச் செய்தார். சிவகணங்களுடன் நடந்த போரில் தடாதகை எளிதில் வெற்றி வாகை சூடினார். தடாதகையின் வெற்றியை திருநந்திதேவர் கயிலைநாதனிடம் தெரிவித்தார். இதனைக் கேட்ட சிவபெருமான் நாக வில்லைக் கையில் ஏந்தி இடப வாகனத்தில் போர் களத்துக்கு எழுந்தருளினார். இறைவனை நேரில் கண்டதும் தடாதகையின் தனங்களில் ஒன்று மறைந்தது. உடனே தடாகையின் மாயை அகன்று தன்னுடைய நினைவு வந்தது. இறைவனின் மேல் அன்பு மிகுந்து வெட்கத்தில் தலைகுனிந்தார். இக்காட்சியினை கண்ட அமைச்சர் சுமதிக்கு தடாதகை பற்றிய இறைவனின் திருவாக்கு நினைவுக்கு வந்தது. உடனே அவர் தடாகையிடம் அம்மையே சிவபெருமானான இப்பேரழகனே தங்களின் மணவாளன் என்று கூறினார். அதனைக் கேட்ட மீனாட்சி அம்மையார் பேரன்பு பெருக நின்றார்.

இறைவன் தடாகையிடன் நீ திக்விஜயத்தின்போது என்று புறப்பட்டாயோ அன்று முதல் யாமும் உம்மை தொடர்ந்து வந்தோம். உன்னை திங்கள்கிழமை அன்று நல்ல முகூர்த்தம் கூடிய பொழுதில் திருமணம் செய்ய வருவோம். நீ தற்போது உன் நகரமாகிய மதுரைக்கு செல் என்று திருவாய் மலர்ந்து அருளினார். இறைவனிடம் அன்பினையும் உயிரினையும் வைத்த தடாகை தன் படைகளுடன் மதுரைக்குத் திரும்பினார். மதுரை திரும்பிய தடாகை தன் அன்னையான காஞ்சன மாலையிடம் நடந்தவைகள் அனைத்தையும் கூறினார். இதனைக் கேட்டு மகிழ்ந்த காஞ்சன மாலை தடாகையின் திருமணச் செய்தியை எல்லோருக்கும் தெரிவிக்கும்படி அமைச்சர்களிடம் கூறினார். தடாகையின் திருமணம் பற்றிய செய்தியானது யானையின் மீது அமர்ந்து மணமுரசு மூலம் பாண்டிய நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டு அரசர்களுக்கும் மீனாட்சி திருமணம் பற்றிய ஓலைகள் அனுப்பப்பட்டன.

தடாகையின் திருமணம் பற்றி அறிந்ததும் மக்கள் தங்கள் வீடுகளையும் நகரங்களையும் அலங்கரித்தனர். திருமணத்திற்கான மண்டபம் பொன்னாலும் நவமணிகளாலும் உண்டாக்கப்பட்டது. திருமணத்திற்கு வருகை தருவோர் அமர இருக்கைகள் தயார் செய்யப்பட்டன. திருமணத்தை எல்லோரும் பார்த்து மகிழும் வண்ணம் திருமண மண்டபத்தின் நடுவில் மணமேடை அமைக்கபட்டு அலங்கரிக்கப்பட்டது. சிவபிரானின் திருமணச் செய்தியை அறிந்த தேவர்கள் அனைவரும் கையிலையில் அர அர என்று துதித்தனர். பின்னர் நந்திதேவரின் அனுமதியுடன் இறைவனை கண்டு வணங்கினர். குபேரன் இறைவனை அழகான மணமகனாக அலங்கரித்தார். குண்டோதரன் குடைபிடிக்க இறைவனார் இடப வாகனத்தில் ஏறி மதுரை நகரின் வெளியே எழுந்தருளினார். இறைவனான சிவபெருமான் மதுரை நகரின் புறத்தே எழுந்தருளி இருப்பதை அறிந்த காஞ்சன மாலை பாண்டிய நாட்டு அமைச்சர்களுடன் சென்று அவரை வரவேற்றாள். காஞ்சன மாலை இறைவனாரிடம் உலக இயக்கத்திற்கு காரணமானவரே தாங்கள் தடாதகையை மணம் செய்து பாண்டிய நாட்டை ஆள வேண்டும் என்று விண்ணப்பித்தாள்.

இறைவனும் அவ்வாறே ஆகுக என்று காஞ்சன மாலைக்கு அருள்பாலித்தார். பின் மதுரை நகரில் அமைந்திருந்த திருமண மேடைக்கு இறைவன் சொக்கநாதாராக எழுந்தருளினார். தடாகையை பெண்கள் அலங்காரம் செய்து மணமேடைக்கு அழைத்து வந்து மணமகனான சுந்தரேஸ்வரரின் அருகில் அமர்த்தினர். தடாகை உலக அன்னையாக மீனாட்சியாக காட்சி கொடுத்தாள். திருமால் மீனாட்சியை தாரை வார்த்து சொக்கநாதருக்கு கொடுக்க மீனாட்சி சொக்கநாதர் திருமணம் இனிது நிறைவேறியது. பின்னர் இறைவன் காஞ்சன மாலைக்கு கொடுத்த வாக்கின்படி மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இறைவனார் நடுவூர் என்னும் ஊரினை உருவாக்கினார். அதில் இம்மையிலும் நன்மை தருவார் என்னும் சிவாலயத்தை ஏற்படுத்தினார். பின் இம்மையிலும் நன்மை தருவாரை வழிபாடு நடத்தினார். இம்மையிலும் நன்மை தரும் இறைவனனான சிவபெருமான் வழிபட்ட இடம் என்ற பெருமையை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலை சாரும். இக்கோவில் தற்போது மதுரையின் நடுவே அமைந்துள்ளது. பின் சிவபிரானார் பாண்டிய நாட்டின் அரசனாக நீதிநெறி தவறாமல் ஆட்சி செய்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

மதுரையை ஆண்ட இறைவன் தமிழுக்கு முதல் சங்கத்தை ஏற்படுத்தி தானே அதற்கு தலைவராகவும் இருந்து தமிழின் பெருமையை அனைவரும் அறியச் செய்தார். உலக மக்கள் இந்த பிறவியிலேயே நன்மை பெற வேண்டும் என்று இம்மையில் நன்மை தருவார் ஆலயத்தை ஏற்படுத்தி அருளியிருக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 423

கேள்வி: ஏகாதச ருத்ர பூஜைக்கான ஆலயத்தைப் பற்றி கூறுங்கள்:

இறைவனின் கருணையாலே எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் மனம் ஒன்றி வரிசை க்ரமமாக விநாயகர் துவங்கி பரிபூரணமாக 11 என்றாலும்கூட 111 எண்ணிக்கையிலே மறை ஓதுபவர்களை வைத்துக் கூட தாராளமாக செய்யலாம். இங்குதான் செய்ய வேண்டும் அங்குதான் செய்ய வேண்டும் என்பதெல்லாம் ஏதுமில்லை. எந்த இடத்தில் வாய்ப்பும் சூழலும் அமைகிறதோ அங்கு தாராளமாக செய்யலாம். ஒரு குறிப்பிட்ட ஆலயத்தில் செய்தால்தான் பலன் என்பதை யாங்கள் ஒருபொழுதும் கூற விரும்பவில்லை.

4. தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம் நூலின் நான்காவது படலமாகும்.

பாண்டிய நாட்டை மலயத்துவசன் அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவன் சூரசேனன் என்னும் சோழ அரசரின் மகளான காஞ்சன மாலையை திருணம் செய்தான். ஆனால் இத்தம்பதியருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. இதனால் மலயத்துவசன் அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான். தொண்ணூற்று ஒன்பது யாகங்கள் முடிந்த நிலையில் இந்திரன் இப்பாண்டியன் நூறு யாகங்களை முடிப்பானாகில் நொடிப்பொழுதில் இந்திரப்பதவி அவனுக்கு போய்விடும் என்று எண்ணி மலயத்துவசன் முன் தோன்றினான். பாண்டியனே நீ நற்புத்திரப்பேற்றினை விரும்பினாய். ஆதலால் உலக இன்பத்தை அளிக்கக் கூடியதும் நற்புத்திரபேற்றினை வழங்கக்கூடிய புத்திர காமேஷ்டி செய் என்று கூறி தன்னுலகத்தை அடைந்தான்.

பாண்டியனும் இந்திரனின் வழிகாட்டுதலின்படி புத்திர காமேஷ்டி யாகத்தை தொடங்கினான். யாகத்தின் பலனாக தலையின் இடதுபுறத்தில் கொண்டையுடன் கையில் கிளி வைத்துக் கொண்டு காலில் சதைங்கை அணிந்து முகம் நிறைய புன்னகையைச் சிந்தியவாறே மூன்று வயதினை ஒத்த சிறுமியாக உலக நாயகியான உமையம்மை மூன்று தனங்களுடன் தோன்றினார். அக்குழந்தையின் கண்கள் மீன்களைப் போன்று நீண்டு அழகாக இருந்தன. ஆகையால் அங்கயற்கண்ணி என்ற பெயரில் அழைக்கப்பட்டாள். அவள் தன் சின்னஞ்சிறு கால்களால் நடை நடந்து காஞ்சன மாலையின் மடியில் போய் அமர்ந்தாள். தன்னுடைய சின்னச்சிறிய செவ்விதழ்களால் காஞ்சனமாலையை அம்மா என்று மழலை மொழியில் அழைத்தாள். அதனைக் கண்டதும் காஞ்சன மாலை குழந்தை வடிவில் இருந்த உலக அன்னையை வாரி எடுத்து அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள்.

குழந்தையைக் கண்ட மலயத்துவசன் மனதில் மகிழ்ச்சி கொண்டான். இருப்பினும் கவலை ஒன்று அவனை வாட்டியது. புத்திர பேற்றினை விரும்பி புத்திர காமேஷ்டி செய்த தனக்கு தான் விரும்பியபடி ஆண் குழந்தை தோன்றாமல் மூன்று தனங்களுடன் கூடிய பெண் குழந்தை தோன்றியதுதான் அவனுடைய கவலை ஆகும். மலயத்துவசன் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சோமசுந்தரக் கடவுளை வழிபட்டான். தன்னுடைய மனக்குறையை இறைவனிடம் விண்ணப்பித்தான். இறைவனும் அவ்வரசனுக்கு மட்டும் கேட்குமாறு திருவாக்கு ஒன்றினைக் கூறினார். பாண்டியனே கலங்காதே. உன்னுடைய அன்பு புதல்விக்கு தடாதகை எனப் பெயரிட்டு எல்லா கலைகளையும் கற்பித்து அவளுக்கு ராணியாக முடிசூட்டு. அவளுக்கு ஏற்ற கணவனை அவள் காணும் போது அவளுடைய ஒரு தனம் தானே மறைந்து விடும். எனவே மனம் வருத்தம் கொள்ள வேண்டாம் என்று சொக்கநாதர் கூறினார். இறைவனின் திருவாக்கினை கேட்ட மலயத்துவசன் கவலை நீங்கி மனத்தெளிவு பெற்றான்.

மீனாட்சி அம்மையின் திருவதாரம் நிகழ்ந்து விட்டது என்று அகத்தியர் மற்ற முனிவர்களுக்கு கூறினார். அம்முனிவர்கள் அகத்தியரிடம் மலையரசனும் பல நாட்கள் வருந்தி தவம் இயற்றியே உலக அன்னையை தம் மகளாக பெற்றிருக்கிறான். தற்போது அன்னை பாண்டியனின் திருமகளாக இப்பூமியில் இறைவனை விட்டுவிட்டு தனியே தோன்றக் காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அகத்தியர் விச்சுவாவசு என்ற கந்தவர்வனின் மகளான விச்சாவதி உமையம்மையின் மீது மிக்க அன்பு கொண்டு இருந்தாள். ஒரு நாள் தனது தந்தையிடம் உமையம்மையின் அருளைப் பெற வழிபட வேண்டிய தலம் என்ன? என்று கேட்டாள். அதற்கு விச்சுவாவசுவும் துவாத சந்தம் எனப்படும் மதுரை சிறந்த இடம் என்று கூறினார். விச்சாவதியும் மதுரையை அடைந்து பல விரத முறைகளை மேற்கொண்டு தை மாதத்தில் அங்கையற்கண்ணி இறைவியின் சந்நதியை அடைந்து யாழினை இசைத்து அம்மன் பற்றிய இனிய பாடல்களை பாடினாள். அப்போது அங்கையற்கண்ணி அம்மை மூன்று வயது குழந்தையாக விச்சாவதிக்கு காட்சி தந்தாள். விச்சாவதியிடம் அங்கையற்கண்ணி உன் விருப்பம் என்ன? என்று கேட்டாள். விச்சாவதியும் தாயே நின் திருவடியில் நீங்காத அன்பினை நான் எப்போதும் பெற்றிருக்க வேண்டும். என்று கேட்டாள். அங்கையற்கண்ணி மேலும் இன்னும் வேறு என்ன வேண்டும் என்று கேட்டாள். அதற்கு விச்சாவதி அம்மையே தற்போது காட்சி தருகின்ற திருவுருவத்திலேயே என்னிடம் தோன்ற திருவருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாறள். அதனை கேட்ட அங்கையற்கண்ணி பாண்டியனின் மரபிலேயே மலயத்துவசன் தோன்றுவான். நீ அவனுடைய மனைவியாய் வருவாய். யாம் அப்போது இத்திருவுருவத்தியேயே உனது தவப்புதல்வியாய் உன்னிடம் வருவோம் என்று அருளினார். விச்சாவதியின் தவப்பயனால் உலக அன்னை மதுரையில் தடாதகையாகத் தோன்றினாள். என்று அகத்தியர் சொல்லி முடித்தார்.

இறைவனின் திருவாக்குப்படி தாடாகை என்ற பெயரை குழந்தைக்கு சுட்டி மனைவியுடன் அரண்மனை திரும்பிய மலயத்துவசன் தனக்கு குழந்தை பிறந்ததை உலகெங்கும் அறிவிக்கச் செய்தான். தடாதகை பற்றிய இறைவனின் திருவாக்கினை மன்னன் தன்னுடைய நம்பிக்கைக்கு உரிய அமைச்சர் சுமதியிடம் மட்டும் சொன்னான்.தடாதகை என்ற சொல்லுக்கு மாறுபட்டவள் என்பது பொருள் ஆகும். தடாதகையும் போர் கலைகள் உள்ளிட்ட எல்லா கலைகளையும் கற்று குமரிப்பருவத்தை எய்தினாள். தடாதகை பிராட்டியார் குமரிப் பருவத்தை அடைந்ததும் மலயத்துவசன் தன் அமைச்சரான சுமதி என்பவரிடம் கலந்தாலோசித்து நல்லதொரு நாளில் தடாதகை பிராட்டியாருக்கு பாண்டிய நாட்டு அரசியாக திருமுடி சூட்டினான். சில நாட்களில் மலயத்துவசன் விண்ணுலகத்தை அடைந்தான்.

தடாதகையும் தான் கற்ற கல்வியின்படி நாட்டினை சிறப்புற ஆட்சி செய்தார். மீனானது பார்வையாலே தன் குஞ்சுகளுக்கு உணவினை ஊட்டி பாதுகாப்பது போல தடாதகையும் தம் குடிமக்களைப் பாதுகாத்து அரசாண்டார். மீன் போன்ற கண்களைக் கொண்டு அரசியாக அரசாண்டதால் மீனாட்சி என்றும் அங்கயற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறார். அம்+ அயல்+கண்ணி = அங்கயற்கண்ணி. அம் என்றால் அழகிய கயல் என்றால் மீன் கண்ணி என்றால் கண்களை உடையவள். அழகிய மீன்போன்ற கண்களை உடையவள். தடாதகை பிராட்டியார் கன்னிப் பருவத்தில் முடிசூடி பாண்டிய நாட்டை ஆண்டமையால் பாண்டியநாடு கன்னிநாடு என்னும் பெயர் பெற்றது. மீனாட்சி அம்மனின் அவதாரம் மதுரையில் நிகழ்ந்த காரணத்தை இப்படலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவியானவள் தன் அடியவர்களின் விருப்பதிற்கு ஏற்க அவர்களுக்கு குழந்தையாகவும் வருவாள் என்பதையும் தடாதகை பாண்டிய நாட்டின் அரசியாகி மதுரை அரசாட்சி செய்தன் மூலம் ஆணுக்குப் பெண் சமம் என்பதை இப்படலத்தில் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 422

கேள்வி: உச்சிஷ்ட கணபதி ஜேஷ்டாதேவி வழிபாடு பற்றி:

இறைவனின் கருணையாலே நல்விதமாய் இதுபோல் இந்த வழிபாட்டை குறித்து மனிதர்களின் கருத்து எப்படியிருந்தாலும் அதனையும் நாங்கள் ஏற்கிறோம். ஆனாலும் கூட பல்வேறு மன உளைச்சல் காரணமாக பூர்வ ஜென்மத்தில் பலரின் தூக்கம் கெடுவதற்கு காரணமாக வாழ்ந்த மனிதர்கள் இந்த ஜென்மத்தில் அத்தனை எளிதாக தூங்க இயலாது. எனவே நல்லவிதமான தூக்கம் இல்லையே? அதனால் உடலில் பலவிதமான உபாதைகள் வருகிறதே? என ஏங்கித் தவிப்பவர்கள் ஜேஷ்டாதேவியை வழிபாடு செய்யலாம். அதோடு மட்டுமல்ல தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமலும் தூங்கக் கூடாத நேரத்தில் தூக்கம் வருவதும் தோஷம்தான். அதற்கும் இந்த வழிபாடு முக்கியம். இது எல்லாவற்றையும் விட தூக்கம் என்பது வெறும் உடல் சார்ந்த ஓய்வு மட்டுமல்ல. இந்த உலக துக்கங்களில் இருந்து விடுபட்டு நிரந்தரமாய் தூங்கக் கூடிய அந்த தூக்கமும் நல்விதமாய் வருவதற்கும் ஜேஷ்டாதேவி வழிபாடு உதவும்.

அதைப் போல மூலாதார குண்டலினி யோக சக்தியை எத்தனை முயன்றாலும் எத்தனை பயிற்சி எடுத்தாலும் ஒன்றும் புரிவதில்லை என்று எண்ணக் கூடியவர்கள் இன்னவன் வினவிட்ட விநாயகப் பெருமானை நல்விதமாக வழிபட வழிபட கட்டாயம் அந்த ஆற்றல் ஏற்படுவதோடு எதைத் தொட்டாலும் தடை தடை வந்து கொண்டே இருக்கிறது எத்தனை கவனமாக திட்டமிட்டு முடிவெடுத்தாலும் தடை வந்து கொண்டே இருக்கிறது எல்லாவற்றையும் விட ஒருசில நேரங்களில் முடிவெடுக்கவே முடியவில்லை. இதை எடுப்பதா? அதை எடுப்பதா? இப்படி செய்தால் இந்தவிதமான பிரச்சினை வருகிறது. அப்படி ஒரு முடிவு எடுத்தால் வேறு விதமான பிரச்சினை வருகிறது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகின்ற மனிதர்களும் இதுபோல் விநாயகப் பெருமானை வணங்க நலமாம். இவ்வாறு இந்த விநாயகப் பெருமானை வணங்கினால் இது கிடைக்கும். வேறு விநாயகப் பெருமானை வணங்கினால் கிடைக்காது என்று எண்ணவேண்டாம். ஆத்மார்த்தமாக எங்கு சென்று வழிபாடு செய்தாலும் மேற்கூறிய பலன்கள் உண்டு. அங்கே மனம்தான் முக்கியம்.