அலங்காரத்தில் நந்தி

சிவபெருமானின் வாகனமான நந்தியின் கழுத்தில் கயிறு ஆரம் மணிமாலை தொங்கல் அனைத்தும் கற் சிற்பத்தில் உள்ளது. இடம் கிக்கேரி. கர்நாடக மாநிலம். 12ம் நூற்றாண்டு.

தியானத் தோட்டத்தில் வினாயகர்

அயர்லாந்தின் கவுண்டி விக்லோவில் உள்ள ரவுண்ட்வுட் அருகே அமைந்துள்ள விக்டர்ஸ் வே தனியாருக்குச் சொந்தமான தியானத் தோட்டம். 22 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த பூங்காவில் கருப்பு கிரானைட் கல்லினால் செதுக்கப்ட்ட விநாயகர் தெய்வங்களின் மூர்த்திகள் உள்ளன.

தியானத் தோட்டம்

அயர்லாந்தின் கவுண்டி விக்லோவில் உள்ள ரவுண்ட்வுட் அருகே அமைந்துள்ள விக்டர்ஸ் வே தனியாருக்குச் சொந்தமான தியானத் தோட்டம். 22 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த பூங்காவில் கருப்பு கிரானைட் கல்லினால் செதுக்கப்ட்ட விநாயகர் சிவன் மற்றும் பிற இந்து தெய்வங்களின் மூர்த்திகள் உள்ளன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 500

கேள்வி: சேஷபுரீஸ்வரர் கோவிலில் எங்கும் இல்லாதபடி அலைமகளும் கலைமகளும் துவார பாலகர்களாக இருக்கிறார்கள். கோஷ்டத்தில் இருக்க வேண்டிய தட்சணாமூர்த்தி உள்ளே சனகாதி முனிவர்களோடு இருக்கிறார்:

இறைவன் கருணையால் சில நுட்பங்கள் இதிலே அடங்கியிருந்தாலும் கூட பொதுவாக இறையின் ஆற்றல் விதவிதமாக வெளிப்படுகிறது. எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்த்துவதுதான் இதன் பொருள். அது ஒருபுறம் இருந்தாலும் அலைமகளும் கலைமகளும் ஒரு இடத்தில் இருப்பது சாத்தியமா? என்று சிந்தித்துப் பார். மாமியாரும் மருமகளும் ஓரிடத்தில் இருக்க இயலுமா? சிந்தித்து பாரப்பா. இருந்தாலும் ஒரே நேரத்தில் மனிதனுக்கு வேண்டிய மூன்று தேவியர்களின் அருளை தரக்கூடிய சிறப்பான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. அங்கு துவார பாலகர்கள் மாறியிருக்கிறார்கள் என்று வேறுவிதமான தத்துவ விளக்கமும் கொண்டிட வேண்டாம். இறையாற்றல் முன்பின்னாக இருந்தாலும் அதும் இறைதான் இதும் இறைதான் என்பதின் பொருள்தான் இது.

இக்கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

சேஷமூலை சேஷபுரீஸ்வரர் கோயில்

திருவாரூரில் மணக்கால் ஐயம்பேட்டையில் என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. நான்கு வேதங்கள் படித்த பண்டிதர்கள் வாழ்ந்த ஊர் ஆகையால் சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றது. சோழர்காலத்தில் மணக்கால் ஐயம்பேட்டை என பெயர் மறுவியது. மிகவும் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மூலவர் சேஷபுரீஸ்வரர். சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். அம்பாள் அந்தப்புரநாயகி பாலதிரிபுரசுந்தரி. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் சிவக்குளத்து தீர்த்தம். கோயில் பிரகாரத்தில் விநாயகர் இருக்கிறார். தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரராக ஆண்பாதி பெண்பாதியாகவும் ஒரு கையில் வளையல் காலில் சிலம்பு கால் விரளில் மெட்டி ஒரு பக்கம் ஆபரணங்களுடன் அருள்பாலிக்கிறார். சனகாதி முனிவர்கள் அருகில் உள்ளனர். அவரை பார்த்த வண்ணம் நந்தி பகவான் இருக்கிறார். சண்டிகேஸ்வரர் பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். இத்திருக் கோயிலில் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் விநாயகர் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் மகாமண்டபமும் எதிரில் மடப்பள்ளியும் அமைந்துள்ளது. சண்டிகேஸ்வரர் நுழைவுவாயிலில் சரஸ்வதியும் லட்சுமியும் துவார பாலகர்களாக அருள் பாலிக்கிறார்கள். பலிபீடம் மற்றும் நந்தியும் ஒன்றாக அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் மனிதனுக்கு வேண்டிய பார்வதி (வீரம்) சரஸ்வதி (அறிவு) லட்சுமி (செல்வம்) மூன்று தேவியர்களின் அருளை தரக்கூடிய சிறப்பான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

இந்திரனின் வெண்கல சிலை

இந்திரன் ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டு அமைதியான தியானத் தோரணையில் அமர்ந்திருக்கிறார். தேவேந்திரன் என்றும் அழைக்கப்படும் இந்திரன் இந்து மதத்தில் தேவ லோகத்தின் தலைவனாகவும் பௌத்தத்தில் ஒரு பாதுகாவலராகவும் சமண மதத்தில் உயர்ந்த சொர்க்கத்தின் ராஜாவாகவும் இருக்கிறார். இவர் ஜீயஸ் மற்றும் வியாழன் போன்ற மேற்கத்திய கடவுள்களுடன் ஒத்த சக்திகளையும் புராணங்களையும் பகிர்ந்து கொள்கிறார். புத்த புராணங்களில் ஒரு முக்கிய நபராக இருக்கிறார் இந்திரன். புத்தரின் பிறப்புடன் தொடர்புடையவராக இருக்கிறார். அதுமட்டுமின்றி நேபாளத்தில் ஒரு சுதந்திர தெய்வமாக வணங்கப்படுகிறார். நேபாளத்தைச் சேர்ந்த இந்த 16 ஆம் நூற்றாண்டு சிலை தற்போது சிக்காகோ கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 499

கேள்வி: அரசாங்கம் செய்ய வேண்டிய சேவைகளை தனியார் செய்து கொண்டிருக்கிறது. தனியார் செய்ய வேண்டிய வியாபாரத்தை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. இதுஅப்படியே மாறி விட்டது. உதாரணமாக கல்வி என்ற சேவையை அரசாங்கம் மட்டுமே செய்ய வேண்டும் அதை தனியார் செய்கிறார்கள். மது விற்பனை தனியார் செய்ய வேண்டும் அதனை அரசாங்கம் செய்கிறது. இது எப்போது மாறும். இதற்கு ஏதாவது வழி உண்டா?

இறைவனின் கருணையாலே இதுபோல் இயம்புவது யாது என்றால் யாங்கள் பலமுறை சிலருக்கு கூறியதை நினைவூட்டுகிறோம். ஒரு தீய பழக்கம் அது தப்பு மதிமயக்கும் பானத்தை அருந்துவது என்பது எக்காலத்திலும் சித்தர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பழக்கம்தான். ஆனால் இதே பழக்கத்தை வைத்திருக்கும் மேல் தேசத்தை மனிதர்கள் என்றாவது இதனால் பாதிக்கப்படுகிறார்களா? அங்கு யாராவது இந்த மதிமயக்கம் பானத்தின் அங்காடிகளை எல்லாம் மூட வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்களா? அதற்காக அதனை யாங்கள் அங்கீகரிக்கவில்லை. எனவே எந்த ஒரு தீய பழக்க வழக்கமும் தனிமனித வாழ்க்கையை அந்த சமுதாயத்தை பாதிக்காத வண்ணம் கல்வியை அறிவை ஒழுக்கத்தை செயல்பாட்டை தொழிலை சமுதாயத்தை பாதிக்காத நிலையில் வைத்துக் கொண்டால் எல்லாவற்றையும் மனிதன் ஏற்றுக் கொள்ளலாம். அந்த அளவிற்கு இல்லாமல் வெறும் மிருகக் குணம் கொண்டு வாழ்கின்ற மனிதர்களுக்கு கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன.

இது ஒருபுறம் இருந்தாலும் கூட ஒரு சமுதாயம் என்பது ஒரு கனி என்று வைத்துக் கொள்வோம். முன்பே கூறியது போல அந்தக் கனி கெட்டு விட்டால் அதிலிருந்து எந்த ஒரு துண்டங்களை அறுத்தாலும் அந்த துண்டமும் கெட்டுப்போன துண்டங்களாகத்தான் இருக்கும். எனவே சமுதாயத்தில் இருந்து அந்த சமுதாயத்தை ஆள வருகின்ற மனிதன் சரியில்லை என்றால் அந்த ஒட்டுமொத்த சமுதாயம் சரியில்லை. இதிலே யாராவது ஒரு தனிமனிதனை மட்டும் குற்றம் கூறி எந்தவிதமான பலனும் இல்லை. இது அறிவு பூர்வமான சிந்தனை. கர்ம பார்வையிலே பார்க்கும் பொழுது ஒரு சமுதாயம் இந்த மாதிரியான ஒரு சூழலில் இருக்க வேண்டும் என்று விதி அமைப்பு இருக்குமானால் அப்படித்தான் அந்த சமுதாயம் இருக்கும் என்பது நிலையாகும். பரிபூரண பக்தியும் ஞானத் தெளிவும் வளர்த்துக்கொள்ள மனிதன் முயற்சி செய்தால் இன்னவன் கூறிய நிலை தன்னால் மாறிவிடும். ஒவ்வொரு மனிதனுமே இது தக்கது இது தகாதது. இதனை ஏற்கலாம் இதனை ஏற்க கூடாது என்று எந்த இடத்தில் அறிவை பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் அறிவை பயன்படுத்தி எந்த இடத்திலேயே உணர்வை பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் உணர்வே பயன்படுத்தி சரியான முறையிலே நேர்மையான குணத்தோடு வாழ முயற்சி செய்தால் கட்டாயம் எதிர்பார்த்த நற்பலன்கள் ஏற்படும். ஏற்பட விரைவில் வாய்ப்பும் இருக்கிறது சற்று முயற்சி செய்தால் போதும். கல்வி என்ற பெயரில் அறிவை திணிப்பதை விட ஒழுக்கத்தை திணித்தால் தனிமனித கட்டுப்பாட்டை திணித்தால் பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற போதனையை திணித்தால் எதிர்கால சமுதாயம் சிறப்பாக வளரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 498

கேள்வி: நேர்மையாக கடுமையாக எவ்வளவு உழைத்தாலும் அதற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்து:

இறைவனின் கருணையால் பிறரின் நேர்மையான உழைப்பை உறிஞ்சி ஒரு பிறவியிலே வாழ்ந்தவர்கள் மற்ற பிறவியில் நேர்மையாக உழைத்து உழைத்து களைத்து போக வேண்டும் என்ற சாபத்தை பெற்று வருகிறார்கள். இந்த சாபத்தில் இருந்து வெளியே வருவதற்கு அன்றாடமோ அல்லது அனலி வாரம் என்று சொல்லப்படும் ஞாயிறு தோறுமோ அல்லது அவரவர்களின் ஜென்ம நட்சத்திரம் மாதம் தோறும் வருகின்ற தினத்தன்று 108 முறை நவகிரகங்களை வலம் வந்து அதுபோல் 108 எள் எண்ணை தீபம் ஏற்றி வழிபாடு செய்து தன்னுடைய மனதில் உள்ள குற்றங்களை குறைத்துக் கொண்டால் கட்டாயம் எதிர் பார்த்த நற்பலன் கிட்டும்.