சிவப்பரம்பொருள் பிரம்மன் திருமால் உருத்திரன் என்ற மூம்மூர்த்திகளை உருவாக்கி அவர்களுக்கு படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களை அளிக்கின்றார். பேருழிக் காலத்தில் சிவப்பரம்மொருளால் படைக்கப்பட்ட அனைத்தும் அவர்கள் ஒடுங்கும். மூன்று விதமான தொழில்களை செய்த மும்மூர்த்திகளும் சிவபரம்பொருளில் ஒன்றாக ஒடுங்குவார்கள். உலகை மீண்டும் படைக்க விரும்பிய போது தன்னுள் ஒடுங்கி இருந்த மூவரையும் ஒற்றை காலில் நின்று தனது இதயத்திலிருந்து உருத்திரனையும் தனது வலப்பாகத்தில் இருந்து பிரம்மனையும் தனது இடப்பாகத்திலிருந்து திருமாலையும் தோற்றுவித்தார். அப்போது இருந்த திருவடிவமே திரிபாதத்ரிமூர்த்தி திருத்தோற்றம் ஆகும். திரிபாதத்ரிமூர்த்தி வடிவத்தில் பிரம்மனும் திருமாலும் தனது ஒரு கால்களுடன் சிவப்பரம்பொருளுடன் இணைந்து கொள்வார்கள். சிவப்பரம்பொருளின் ஒற்றை காலுகளுடன் அவர்களின் ஒற்றை கால்களும் சேருவதால் மூன்று கால்கள் ஆகின்றன. அதனால் இந்த திருவடிவத்திறகு ஏகபாதத் திருமூர்த்தி என்று பெயர்.
இவ்வாறு லிங்க புராணமும் ஆதித்ய புராணமும் கூறுகின்றன. மகாபாரதத்தில் இந்த வடிவத்தை பற்றி சிறப்பாக கூறுகின்றது. வலப்புறத்தில் பிரம்மன் கமண்டலமும் ஜெபமாலையுடன் இருக்க இடப்புறம் உள்ள திருமால் சங்கு சக்கரத்துடன் இருப்பார் என்று சிவஞானபோதம் என்ற சைவ சித்தாந்த நூல் இவ்வடிவம் பற்றி கூறுகின்றது. இவரது வடிவத்தை திருஇடைமருதூரில் தரிசிக்கலாம்.
சிவபெருமான் உயிர்களுக்கு அருள்வதற்காகவே பிரம்மன் திருமால் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளையும் தோற்றுவித்து படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலையும் சேய்விக்கிறார். சிவபெருமானின் இதயத்தில் இருந்து உருத்திரரும் சிவபெருமானின் இடப்பாகத்திலிருந்து பிரம்மாவும் வலப்பாகத்தில் இருந்து திருமாலும் தோன்றினார்கள். கண்களில் இருந்து சூரியனும் சந்திரனும் மூக்கிலிருந்து வாயுவும் கழுத்தில் இருந்து கணேசரும் இதயத்தின் ஒரு பாகத்தில் இருந்து கந்தனையும் தொந்தியிலிருந்து இந்திரன் குபேரன் வருணன் எமன் ஆகியோரையும் பிரத்யங்கத்தில் இருந்து 50 கோடி தேவர்களையும் ரோமங்களிலிருந்து எண்ணிக்கையற்ற முனிவர்களையும் தோற்றுவித்ததாக சிவாகமங்கள் கூறுகின்றன. இவ்வாறு சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்தும் அவரிடமே ஒடுங்குகின்றன. அதனால் அவரால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்தையும் தாங்கும் மூர்த்தியாக அவர் ஒற்றைக்காலில் நிற்கிறார். இதனால் அவர் ஏகபாதத்ரிமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
மகாபாரத யுத்தத்தின் முடிவில் பாண்டவர்கள் வெற்றி பெற்று முழு பாரத காண்டத்தின் சக்ரவர்த்தியாக யுதிஷ்டிரர் முடிசூட்டப்பட்டார். பேரரசராக இருந்த யுதிஷ்டிரரை மகரிஷி வேத வியாசர் இமயமலையின் தொலைதூர பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மறைந்திருந்த பெரும் செல்வத்தை அவர்களுக்கு வழங்கினார். அஸ்வமேத யாகங்களில் மிகப் பெரிய யாகத்தை ஒவ்வொரு பாண்டவரும் மூன்று வருடங்களாக தொடர்ந்து பதினைந்து வருடங்களாக யாகம் செய்தார்கள். தேவதைகளும் ரிஷிகளும் பித்ருக்களும் மனிதர்களும் யாகத்தின் பலனைப் பெற்று திருப்தி அடைந்தார்கள். தர்மம் முழு மகிமையுடன் பூமியில் செழித்திருந்தது.
பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் தனது அரண்மனைக்கு முன்னால் ஒரு பெரிய மேளம் ஒரு மகாபேரி என்ற மேளத்தை நிறுவி எந்த தேவையாக இருந்தாலும் இங்கு வந்து இந்த மேளத்தை அடித்து தன் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். எங்களால் முடிந்தவரை அதை நிறைவேற்றுகிறோம் என்று தங்களது குடிமக்களுக்கு அறிவித்தார்கள். இதை அறிந்த ஒரு முதிய பிராமணர் சிறிது பொருள் வேண்டி தலைநகரை நோக்கிச் சென்றார். நீண்ட தூரம் பயணித்த அவர் யுதிஷ்டிரனின் அரண்மனையை இரவில் அடைந்தார். மிகுந்த ஆவலுடன் மேளத்தை அடிக்க ஆரம்பித்தார் பிராமணர். உறக்கம் கலைந்த யுதிஷ்டிரன் படுக்கையில் இருந்து எழுந்து யாரோ தனது தேவைக்காக தன்னை அழைப்பதை உணர்ந்தார். மேளம் அடிப்பது எதற்காக என்று விசாரிக்க சில காவலர்களை அனுப்பினார். விரைவில் காவலர்கள் யுதிஷ்டிரரிடம் திரும்பி ஒரு முதியவர் தனிப்பட்ட தேவைக்காக செல்வத்தைப் பெற வந்திருப்பதாக கூறினார்கள். யுதிஷ்டிரர் அதிக தூக்கத்தில் இருந்ததால் நடுஇரவு ஆகி விட்டபடியால் காலையில் அவரது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று பிராமணரிடம் உறுதியளித்து காலையில் வரச் சொல்லி பிராமணரை திருப்பி அனுப்புமாறு காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
யுதிஷ்டிரரின் செய்தியைக் கேட்ட பிராமணர் ஏமாற்றமடைந்து பீமனின் அரண்மனை முன்பாக இருந்த மேளத்தை அடிக்க ஆரம்பித்தார். பீமன் உடனே வெளியே வந்து அந்த முதிய பிராமணருக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். யுதிஷ்டிரரின் அரண்மனை முன்பாக நடந்தவற்றை சொல்லி தனது கோரிக்கையை முன்வைத்தார் பிராமணர். அவருடைய கோரிக்கையைக் கேட்ட பீமன் தற்போது இரவு வெகு நேரமாகி விட்டது. இப்போது கருவூலம் திறந்திருக்காது. உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற காலை வரை காத்திருக்க முடியாது. எனவே இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தனது விலையுயர்ந்த தங்க காப்பை கழற்றி பிராமணரிடம் ஒப்படைத்தார். விலையுயர்ந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்ட அந்தத் தங்கக் காப்பைக் கண்ட பிராமணன் மிகவும் மகிழ்ச்சியடைந்து தன் கிராமத்திற்குத் திரும்பினார்.
பீமசேனன் யுதிஷ்டிரனின் அரண்மனையை நோக்கிச் சென்றான். அங்கு சென்றதும் இடைவிடாமல் மகாபேரி மேளத்தை அடிக்க ஆரம்பித்தார். விண்ணை முட்டும் அளவு சத்தத்தைக் கேட்ட யுதிஷ்டிரர் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து உடனடியாக மேளம் இருக்கும் இடத்திற்கு வந்தார். அங்கு பீமன் மேளத்தை அடிப்பதை பார்த்ததும் ஆச்சரியமடைந்து பீமனிடம் காரணத்தை கேட்டார். ஒரு முதிய பிராமணர் தங்களிடம் உதவி நாடி வந்தார். நாளை காலை திரும்பி வரும்படி கூறினீர்கள். அடுத்த நாள் உயிருடன் இருப்போம் என்று அறிந்த ஒரு மனிதனால் மட்டுமே அவ்வாறு கூற முடியும். தன் தர்மத்தையே ஒரு நாள் தள்ளிப் போட்டீர்கள். அப்படியானால் நீங்கள் நாளை வரை இருப்பீர்கள் என்று அறிந்து கொள்ளும் ஞானத்தை பெற்று விட்டீர்கள் என்று பொருளாகிறது. என் அண்ணன் இப்படிப்பட்ட மிகப்பெரிய ஞானியாக இருக்கிறாரே என்ற மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறேன். அதனால் நான் இந்த மேளத்தை அடிக்கிறேன் என்றான். காரணத்தைக் கேட்ட யுதிஷ்டிரர் குற்ற உணர்வில் ஆழ்ந்தார். தான் எவ்வளவு பெரிய தவறு செய்தேன் என்பதை உணர்ந்தார். பீமனை தழுவிக் கொண்டு நன்றி தெரிவித்ததோடு தர்ம காரியத்தைத் தள்ளிப் போடும் தவறை இனி ஒருபோதும் செய்ய மாட்டேன் என்றார். பீமன் தன் சகோதரனை ஆறுதல்படுத்தி எனது நோக்கம் உங்களை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. தர்மம் செய்யும் போது ஒருபோதும் தாமதம் இருக்கக் கூடாது என்பதற்காக இதனை செய்தேன் என்று புன்னகை செய்தான். பீமனின் உபதேசத்தால் விழித்துக் கொண்ட யுதிஷ்டிரர் அன்றிலிருந்து தர்மப் பாதையிலிருந்து விலகாமல் இருந்து தர்மராஜா ஆனார்.
கேள்வி: திருப்பதி பெருபாள் கோயிலில் உள்ள மூலவர் சிலை முருகன் சிலை என்பது பற்றி:
திருப்பதியில் உள்ளது பெருமாள் அல்ல முருகப்பெருமான் என்ற கருத்துக்கு ஞானிகள் பார்வை வேறு. மனிதர்களின் பார்வை வேறு. அங்கு பெருமாளே அவதாரம் எடுத்தது உண்மை. காலப்போக்கில் பிற தெய்வங்களும் அங்கு இடம் பெற்றதும் உண்மை. எனவே திருப்பதியில் பெருமாளின் முன்பு நின்று முருகனாக எண்ணி வணங்கினால் பெருமாள் கோபித்துக் கொள்ளப் போவதில்லை. பெருமாளாக நினைத்து வணங்கினால் முருகனும் கோபித்துக் கொள்ளப் போவதில்லை.
நம்பிக்கையின் அடிப்படையில் தான் பக்தியே பிறக்கிறது இறைவனை நம்பு என்பதற்காக ஒரு மனிதன் தான் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து ஒதுக்கி கொள்வது என்பது கூடாது. இந்த இறை நம்பிக்கையின் அளவு மூடத்தனமாக ஆகிவிடவும் கூடாது. அதே சமயம் நம்பிக்கையை விட்டு விலகும் வண்ணமும் ஆகி விடக்கூடாது. உடல்நலம் சரியில்லை என்றால் பிரார்த்தனை செய்வதோடு மருந்தினையும் ஏற்க வேண்டும். எப்படி ஒரு மருத்துவன் எழுதிக் கொடுத்த ஒரு மருந்தினை ஒரு பிணியாளன் நம்பிக்கையோடு ஏற்கிறானோ அதேபோலத்தான் ஆலயம் செல்வதும் பிரசாதம் ஏற்பதும் அதோடு எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணமும் இருக்க வேண்டும்.
இறை தரிசனமோ சித்தர்களின் தரிசனமோ கிடைப்பது பிரார்த்தனையினாலும் புர்வ ஜென்ம புண்ணியத்தாலும். பூர்வ ஜென்ம புண்ணியத்தால் தானே நம்பிக்கையும் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பிரார்த்தனையும் ஒருவன் செய்கிறான். அது மட்டுமல்ல எத்தனையோ இடங்களுக்கு இறைவன் சென்று மகான்களின் வடிவிலும் சாதாரண மனிதர்கள் வடிவிலும் வேண்டிய உதவிகளை இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறார். ஆனால் ஒரு கடினம் என்னவென்றால் வந்தது இறை தான் என்று அந்த ஆன்மாவால் புரிந்து கொள்ள முடியாது.
விதியை வெல்ல வேண்டும் என்கின்ற ஒரு விதி ஒருவனுக்கு இருந்தால் விதியை வெல்லலாம். பற்றற்ற ஞானிகளால் தான் விதியை வெல்ல முடியும். எனவே விதி நன்றாக இருக்கும் வண்ணம் வாழ்ந்து விட்டுப் போவதே விதியை வெல்லும் மார்க்கமாகும்.
தேவலோகத்து அரசன் நான் என்ற அகந்தையுடன் இந்திரன் திருக்கைலைக்குச் சென்று சிவபெருமானை வணங்கி வர கிளம்பினான். இதனை அறிந்த சிவபெருமான் அவனது அகந்தையை அழிக்க அவன் வரும் வழியில் துவாரபாலகராக உருமாறி நின்றிந்தார். இந்திரன் அவரிடம் நான் இப்போது ஈஸ்வரனைச் சந்திக்க இயலுமா எனக் கேட்டான். சிவபெருமான் எதுவும் பதில் கூறாமல் வாய்மூடி அமைதியாக இருந்தார். இதனால் கோபம் கொண்ட இந்திரன் தன் வச்சிராயுதத்தால் அவரைத் தாக்கினார். வச்சிராயுதம் தவிடு பொடியானது. கோபமடைந்த சிவபெருமான் ருத்ரவடிவம் கொண்டார். உண்மை அறிந்த இந்திரன் பயந்து போய் தன்னுடைய அகந்தை அழிந்து அவரிடம் மன்னிக்க வேண்டினான். கருணையே வடிவான பரம்பொருள் அவனை மன்னித்து அவனுக்கு விடை கொடுத்து அனுப்பினார். தனது கோபத்தை எடுத்து கடலில் எறிந்துவிட்டு கைலாயம் சென்றடைந்தார். கடலில் விழுந்த கோபக்கனல் ஒரு வலிமை மிக்க அரக்க குழந்தையாக உருவெடுத்தது. இந்த குழந்தையை கடலரசன் எடுத்து வளக்க ஆரம்பித்தான். தான் வளர்க்கும் அந்தக் குழந்தைக்கு பெயர் வைக்க பிரம்மனிடம் கொடுத்தான். குழந்தையைத் தன் மடிமீது வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்த பிரம தேவரின் தாடியைப் பிடித்து இழுத்தது குழந்தை. பிரம்மன் வலி தாளாமல் கண்ணீர் சிந்த அது குழந்தையின் மேல்பட்டது. கடல் நீர் பட்டதாலும் பிரம்மனின் கண்ணீர் பட்டதாலும் அக்குழந்தைக்கு ஜலந்தரன் என பெயரிட்டார் பிரம்மர். ஜலந்தரன் என்ற சொல்லுக்கு ஜலம் தரித்தவன் என்றும் தண்ணீரால் தாங்கப் பெற்றவன் என்றும் பொருள்.
கடுமையான தவம் செய்து பிரம்மரிடம் பல வரங்கள் பல பெற்றான் ஜலந்தரன். அரக்கர்களுடன் சேர்ந்து மொத்த உலகத்தையும் வெற்றி பெற்றான். மிகப்பெரிய நகரம் ஒன்றை அமைத்து அதற்கு ஜலந்தரபுரம் எனப் பெயரிட்டான். அதில் இருத்து மொத்த உலகத்தையும் அரசாட்சி செய்த ஜலந்தரன் காலநேமி என்பவரின் மகள் பிருந்தையை மணந்து இன்பமாக வாழ்ந்து வந்தான். தன் வரத்தின் பலத்தாலும் உடல் வலிமையாலும் ஆணவம் கொண்ட ஜலந்தரன் தேவர்களை எல்லாம் துன்புறுத்தத் தொடங்கினான். இவன் வருகையைக் கேட்டதும் தேவர்கள் எல்லாம் அஞ்சி ஓடத் தொடங்கி கயிலை மலையில் அடைக்கலம் புகுந்தனர். இதனை அறிந்து மிகக்கோபங் கொண்டு போர்க் கோலம் தாங்கி கயிலை மலையை நோக்கி செல்ல ஆயத்தமானான். இதனைப் பார்த்த அவன் மனைவி பிருந்தை சிவபெருமானின் பெருமைகளை எல்லாம் எடுத்துக் கூறி கைலை மலையை நோக்கிப் போருக்கு செல்லக் கூடாது என்று வேண்டி நின்றாள். ஆனாலும் கயிலை சென்றான் ஜலந்தரன்.
இந்திரன் முதலானோர் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்கள். சிவபெருமானும் அபயமளிக்கும் திருக்கரத்தை காட்டி அஞ்சவேண்டாம் என அருள் செய்தார். ஒரு அந்தணராக உருவம் மாறி ஜலந்தரன் முன்னே சென்று அவனுடன் பேசலானார். அவன் தான் கைலைக்குச் செல்லும் எண்ணத்தைக் கூறினான். அதற்கு அவரும் அவர் கைலைக்குச் செல்வது ஒருபுறம் இருக்கட்டும் தான் சொல்லும் சிறு வேலையைச் செய்ய முடியுமா? என்று கேட்டார். ஆணவத்துடன் எதையும் செய்து முடிக்கும் பேராற்றல் தனக்கு உண்டு என்று கூறினன். உடனே அந்த அந்தணர் தன் கால் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டமிட்டு அந்த வட்டத்தைப் பெயர்த்து எடுத்து அவன் தலைமேல் தாங்க வேண்டும் என்று கூறினார். ஜலந்தரன் அதைக் கேட்டு சிரித்துவிட்டு அந்த வட்டத்தை அனாயாசமாகப் பெயர்க்கக் தொடங்கினான். ஆனால் அவனால் அது எளிதில் முடியவில்லை. தன் வலிமை அனைத்தையும் பயன்படுத்தி பெயர்த்து தன் இரு கரங்களாலும் உயரத் தரக்கிப் பிடித்து தலைக்குமேல் தாங்கினான். உடனே அது அவன் உடலை இரு கூறுகளாகப் பிளந்தது சக்கரம். அவனது உடலில் இருந்து சோதி வடிவமாக இறைவன் திருக்கரத்தில் சென்று அமர்ந்தான்.
ஜலந்தரன் அழிந்ததால் அனைவரும் ஆனந்தப்பட்டனர். தேவர்கள் தங்களுக்கு உண்டான அவரவர் பதவியை மீண்டும் பெற்றார்கள். தேவர்கள் துயர்துடைக்க சலந்தரனை வதம் செய்த மூர்த்தியே ஜலந்தர வத மூர்த்தி ஆவார்.
ஒரு மனிதன் எமக்கு பிரியமானவன் எமது வழியில் வருபவன் என்றால் எமது வார்த்தைகளை உள்நிறுத்தி செவி கேட்டு செயல் நடத்திக் காட்ட வேண்டும். ஒரு செல்வந்தன் இருக்கிறான் அவன் தனக்கு பிரியமான ஒரு உதவியாளனை அழைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு செல்லும் பொழுது அவனுக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் அவன் உதவியாளனுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆயினும் அந்த உதவியாளன் தவறுகள் ஏதேனும் செய்தால் அவனை அழைத்துச் சென்ற செல்வந்தருக்கு தானே அந்த கேவலம் ஏளனமும். அதுபோலத்தான் மிகப்பெரிய மகான்களின் உன்னத கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கும் எமக்கு எமது வழியில் வருபவன் என்று கூறிக்கொண்டு எமது வாக்கின் தன்மையை பிரதிபலிக்காமல் இருந்தால் அது எமக்கு ஏற்புடையதாக இராது. எம்மையும் ஏளனப்படுத்துவதாகும். அப்படிப்பட்டவர்களுக்கு யாங்கள் பெயரளவுக்குத்தான் வாக்குகளை தருவோமே ஒழிய ஆத்மார்த்தமாக அல்ல. புத்தி சொல்லித் திருந்தவில்லை என்றால் அவன் விதிப்படி வாழட்டும் என்று விட்டுவிடுவோம்.
காலம் இடம் சூழல் சுற்றி உள்ள மனிதர்கள் வறுமை வளமை இல்லம் தொழில் இதில் எது சிக்கலாக இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு அறம் சத்தியம் இறை பிரார்த்தனையை மறவாதே. இவற்றை பின்தொடர்ந்து கொண்டே வா. யாம் உன் அருகில் இருந்து கொண்டே இருப்போம். ஆசிகள் சுபம்.