51. சங்கப்பலகை கொடுத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சங்கப்பலகை கொடுத்த படலம் ஐம்பத்தி ஒன்றாவது படலமாகும்.

வங்கிசேகர பாண்டியன் மதுரையை நல்லாட்சி செய்த போது பிரும்மதேவன் தன் மனைவியரான காயத்ரி சாவித்திரி சரஸ்வதியுடன் காசிக்கு யாகம் செய்ய வந்தார். லிங்கப் பிரதிஷ்டை செய்தார். அந்த லிங்கம் பிதாமகேஸ்வர லிங்கம் என பெயர் பெற்றது. குளமொன்றை அங்கு வெட்டினார். அக்குளத்திற்கு தசாச்வமேத தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. அங்கு ஒன்பது அசுவமேத யாகம் செய்து முடித்தார். ஒவ்வொரு யாக முடிவிலும் மூன்று தேவியருடன் நீராடினார். பத்தாவது யாக முடிவில் நீராட செல்லும் போது விஞ்ஞை மாது என்ற கந்தர்வ கன்னி ஒருத்தி யாழினை மீட்டி பாடிக் கொண்டிருந்தாள். அப்பாடலால் ஈர்க்கப்பட்ட சரஸ்வதி அங்கே நின்று விட்டாள். இதனால் பிரம்ம தேவர் மற்ற இருவருடன் கங்கையில் நீராடி வெளியேறினார். அங்கே வந்த சரஸ்வதி பிரம்ம தேவரிடம் என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் நீராட வந்தது ஏன்? என்று கேட்டாள். அதனைக் கேட்ட பிரம்ம தேவர் நீ உன்னிலை மறந்து இசையில் மூழ்கிவிட்டாய். தவறு உன் மீது இருக்க நீ எங்களைக் கோபிப்பது முறையல்ல. குற்றம் புரிந்த நீ மானிடப் பிறவி எடுத்து அக்குற்றத்தைப் போக்கிக் கொள் என்று கூறினார். இதனைக் கேட்டதும் அதிர்ந்த சரஸ்வதி உங்களின் உயிரான நான் அழியும் மானிடப் பிறவி எடுக்க வேண்டுமா? என்று கேட்டாள். அப்போது பிரம்மதேவர் உனது வடிவமாகிய நாற்பத்து எட்டு எழுத்துக்களும் நாற்பத்து எட்டு புலவர்களாக அவதரிப்பார்கள். அவர்களுக்கு தலைமைப் புலவராய் சொக்கநாதர் தோன்றி அவர்களுக்கு அறிவைத் தோற்றுவித்து அவர்களின் புலமையைக் காப்பார். அவர்கள் ஏட்டுச் சுவடிகளாக பாடல்கள் எழுதிக் குவிக்கையில் உன் சாபம் நீங்கி என் நாவில் உறைவாய் என சாப விமோசனமளித்தார்.

பிரம்மதேவரின் கூற்றுப்படி நாற்பத்து எட்டு எழுத்துக்களும் நாற்பத்து எட்டு புலவர்களாக அவதாரம் செய்தனர். சிவத்தொண்டில் சிறந்து விளங்கிய அவர்கள் பல நாடுகளுக்கும் சென்று புலமையில் வென்று மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது சொக்கநாதர் தானும் புலவர் வடிவில் அவர்களின் எதிரே வந்து அவர்களை மதுரைக்கு அழைத்து வந்து திருக்கோயிலை அடைந்து மறைந்தருளினார். அப்புலவர்கள் புலவராக வந்தது சொக்கநாதரே என்பதை உணர்ந்து பல பாடல்களைப் பாடி அவரை வழிபட்டனர். பின்னர் வங்கிசேகர பாண்டியனைக் கண்டு வாழ்த்துக் கூறினர். பாண்டியனும் அவர்களுக்கு பல பரிசுகள் கொடுத்து திருக்கோயிலுக்கு வடமேற்கு திசையில் சங்க மண்டபம் அமைத்து அதில் அவர்களை இருத்தி வைத்தான். ஆதலால் அவர்கள் சங்கப் புலவர்கள் என்று அழைக்கப்பட்டனர். சங்க மண்டபத்தில் வீற்றிருந்த சங்கப் புலவர்கள் வடநாட்டுப் புலவர்களையும் பாண்டிய நாட்டின் முதன்மைப் புலவர்களையும் வாதாடி வென்றனர். இதைக் கண்டு பல திறமையற்ற புலவர்கள் பொறாமை கொண்டவர். இதனை அறிந்த புலவர்கள் ஆலயம் சென்று இறைவனிடம் உண்மைப் புலவர்களை கண்டு பிடிக்கவும் அவர்களின் சிறப்பை வெளிப்படுத்தவும் புலவர்களின் புலமையை உள்ளபடி சீர்தூக்கி அறிய அளக்கும் கருவியாக ஒரு சங்கப் பலகையைத் தந்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தனர்.

சொக்கநாதர் புலவர் வடிவம் தாங்கி ஒரு பலகையுடன் வந்தார் வந்தார். புலவர்களைப் பார்த்து புலவர்களே இப்பலகை பார்ப்பதற்கு குறுகியது ஆனால் மந்திரத் தன்மை உடையது. ஒரு புலவர் தனது பாடலுடன் இந்தப் பலகையில் அமரலாம். பாடல் சரியாக இருந்தால் மட்டும் இது அவர்களுக்கு இடம் கொடுக்கும். அடுத்த புலவர் சரியான பாடலுடன் வந்தால் இப்பலகை சிறிது நீண்டு அவருக்கு இடம் கொடுக்கும். நீங்கள் அனைவரும் சரியான பாடலுடன் வந்தால் நாற்பத்து எட்டு பேருக்கும் வளர்ந்து இடம் கொடுக்கும். நீங்கள் மற்றவருடன் வாதத்தில் ஈடுபடும் போது உங்கள் பாடல் சரியானது தானா என்பதை அறிந்து கொள்ள இது ஒரு தராசு போல் உதவும் என்று கூறி மறைந்தருளினார். அப்பலகையை வித்யாபீடம் சரஸ்வதிபீடம் ஞானபீடம் மாத்ருகாபீடம் வியாக்யான பீடம் எனப் பலபெயர்கள் சூட்டி மகிழ்ந்தனர். சங்கப்பலகை என அதற்குப் பெயர் ஏற்பட்டது. சங்கப் புலவர்கள் அப்பலகையை திருக்கோயிலில் வைத்து வழிபட்டனர். ஒரு முழத்திற்கும் குறைவான அப்பலகையில் முதலில் நக்கீரர் சரியான பாடலுடன் அமர்ந்தார். உடனே இன்னொருவர் அமரும் அளவு பலகை நீண்டது. பின்பு கபிலர் அமர மறுபடியும் நீண்டது. இவ்வாறு புலவர்கள் அமர அமர பலகை விரிவடைந்தது. போலிப் புலவர் அமர்ந்தால் பலகை நீளாமல் அப்படியே இருந்தது. அவர் எழுந்தால் மட்டுமே நீண்டது. நாற்பத்து எட்டு புலவர்களும் சரியான பாடலைக் கொண்டு சங்கப் பலகையில் ஏறி வீற்றிருந்தனர். அதன்மேல் அமர்ந்த புலவர்கள் எழுதிப் போட்ட ஏடுகளால் சங்கமண்டபம் நிரம்பி வழிந்தது. யாருடையது எங்கே இருக்கிறது என்று பகுத்து எடுக்க முடியாத அளவு கலந்து கிடந்தது. தங்களுடையது எது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

சொக்கநாதர் அவர்களின் முன்னால் புலவர் வடிவத்தில் தோன்றி அவர்களின் பாடல்களை ஆராய்ந்து பொருளினை கூறி அவரவர் பாடல்களை அவரவர்களுக்கு பிரித்துக் கொடுத்தார். புலவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புலவர்களின் நடுவில் நடுநாயகமாக அமர்ந்து பாடல் ஒன்றை இயற்றினார் இறைவன். புலவர்களில் நக்கீரர் மட்டும் அதில் குற்றம் சொன்னார். சொல்லழகும் பொருளழகும் பண்ணழகும் மிக்கப் பாக்களை இயற்றினார் இறைவன். அதற்கும் குற்றம் சொன்னார் நக்கீரன். அப்போது ஆகாயத்தில் அசீரீரியாக புலவர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை தீர்க்கப் புலவர் வடிவில் வந்திருப்பது சொக்கநாதர். தானே பெரியவன் என்னும் அகந்தையில் வாது செய்யாதே நக்கீரா எனக் குரல் கேட்டது. நக்கீரர் தனது அகந்தையை நீக்கி வணங்கினார். மற்ற புலவர்களும் எம்பெருமானை வணங்க அனைவருக்கும் ஆசிகூறி மறைந்தார் சொக்கநாதர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

சங்கப் புலவர்களுக்கு தமிழ் பாடல்களின் தரத்தினை அளவீடு செய்வதற்காக சங்கப் பலகை ஒன்றைத் தந்து அருளியதையும் இறைவனார் எங்கும் நடுநிலைமை வகிப்பார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 474

கேள்வி: குறிப்பாக ஆராய்ச்சிக் கல்வியில் வெற்றி பெற என்ன செய்யவேண்டும்?

இறைவனின் கருணையாலே எப்படி இயல்பாக சிலருக்கு செல்வம் சேருகிறதோ இந்த உலகியல் கல்வியும் சிலருக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது. சிலர் எத்தனை முயற்சி செய்தாலும் அந்த அறிவு ஆற்றல் வராமல் போய்விடுகிறது. இதுவும் கர்மவினையின் காரணம்தான். எனவே பாவங்களைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் பொழுது கல்வியில் உள்ள தடையும் நீங்கி விடும். இருந்தாலும்கூட வழிபாடு எனும்பொழுது ஒருவன் விரும்புகின்ற அந்தக் கல்வியிலே தீவிர கவனமும் விரக்தியடையாமல் தொடர்ந்து முயற்சி எடுத்து அதனை புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நிலைக்கு தன்னை வைத்துக் கொள்ள வேண்டும். மனம் சோர்ந்து விடுகிறது படித்தாலும் மனதில் நிற்பதில்லை மறந்து விடுகிறது என்றெல்லாம் மனிதன் அயர்ந்து விடுகிறான். அவனுக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுகிறான்.

மீண்டும் மீண்டும் முயற்சி செய்து ஒன்றைக் கற்கும் ஆற்றலை ஆர்வத்தை மனிதன் வளர்த்துக் கொள்வதோடு லட்சுமி ஹயக்ரீவரையும் அன்னை கலைவாணியையும் தொடர்ந்து மானசீகமாக ஆத்மார்த்தமாக வணங்கிவந்தால் விரும்புகின்ற ஆராய்ச்சி கல்வி எதுவாக இருந்தாலும் கட்டாயம் அது வெற்றிபெறும். ஆனால் ஒன்று தன்னிடம் உள்ள கல்வியை வித்தை ஆற்றலை பிறருக்கு கற்றுக் கொடுக்க மாட்டேன் என்றால் அதுவும் பாவம் சேர்க்கக்கூடிய ஒரு நிலைதான். எனவே நன்றாக கல்வி கற்பதும் ஆராய்ச்சி பண்ணுவதும் அல்ல அதனால் சமுதாயத்திற்கு நல்ல பலனையும் தரவேண்டும். அதுதான் கல்வி கற்ற மனிதனின் கடமை. எல்லாவற்றையும் விட உண்மையை பேச தர்மத்தை செய்ய சாத்வீகத்தை கடைபிடிக்க பிறரை அனுசரித்து வாழ நன்மையை செய்ய சுயநலத்தை விட்டுவிட கற்றுக் கொடுக்காத கல்வி கல்வியே அல்ல. ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு மனதளவில் ஆக்காத கல்வி கல்வியே அல்ல என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 473

கேள்வி: கோவில்களில் இருக்கும் சப்தமாதாக்களின் பெருமையை பற்றியும் அவர்களினால் மக்கள் அடையும் நன்மைகள் பற்றியும்:

இறைவன் அருளால் சப்தமாதாக்கள் அல்லது சப்த கன்னியர்கள் சப்த ரிஷிகள் பற்றி முன்பு கூறிய வாக்குகள் இவர்களுக்கும் பொருந்தும். சப்த மாதாக்களை எங்கே ப்ரதிஷ்டை செய்திருப்பார்கள்? என்றால் தட்சிணாமூர்த்திக்கு நேர் எதிரில் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். ஞான வாழ்க்கைக்கும் பரிபூரண ஞானத்தை புரிந்து கொள்வதற்கும் ஞான அருளை பெறுவதற்கும் இதுபோல் அம்பாளின் வடிவங்கள்தான் சப்தமாக பிரிந்து மனிதர்களுக்கு அருள்புரிந்து கொண்டிருக்கிறது. மேலும் ஞானத்தை இறைவனிடமிருந்து வாங்கிக் கொள்வதற்காகவும் வாங்கி மனிதர்களுக்கு தருவதற்காகவும்தான் தட்சிணாமூர்த்திக்கு எதிரே அமர்ந்து அவர்களும் மௌன தவத்தில் ஈடுபடுகிறார்கள். ஒரு மனிதன் சித்தர்கள் வழியில் வரவேண்டும் சித்தர்கள் அருளைப் பெறவேண்டும் என்றால் அதற்கு சப்தமாதாக்களின் வழிபாடு மிகவும் முக்கியமாகும். இதுபோக இன்னும் உபரியாக இந்த மாதாக்களின் வழிபாடுகள் அதிகம் உண்டு. இதுபோன்ற சக்திகளில் அஸ்வாரூடா என்ற சக்தியும் இருக்கிறது. இந்த அஸ்வாரூடா தேவதை என்பது குதிரைமீது அமர்ந்து பவனி வருவதுபோல் இருக்கும். இந்த தேவதையை வழிபட்டு இதுபோல் சாஸ்திரப்படி பூஜைகள் செய்தாலும் எதிரிகளின் தாக்கமும் எதிர்ப்புகளின் தாக்கமும் குறையும்.

இது போல சப்த மாதாக்களின் ஒட்டுமொத்த வழிபாடு ஞானத்தை தருவதோடு மட்டுமல்லாமல் உலகியல் வாழ்க்கையிலே குறிப்பாக பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகள் குறைவதற்கு சப்தமாதாக்கள் வழிபாடு மிகவும் உதவும். அனாச்சாரமில்லாமல் ஆத்மார்த்தமாக ஆலயம் சென்று சப்த மாதாக்களை அமைதியான முறையில் வழிபட்டுவர நல்லதொரு மாற்றம் ஏற்படும். ஆனால் சப்த மாதாக்களை புடைப்பு சிற்பமாக வைப்பது எமக்கு ஏற்புடையது அல்ல. தனித்தனி சிற்பமாக முழுக்க ஆடை அலங்காரம் செய்வதுபோல் அமைத்து வழிபாடு செய்வது ஏற்புடையது. நாங்கள் முன்பே கூறியிருக்கிறோம்.இல்லத்திலே சப்தமாதாக்களை வைத்து வழிபட முடியாத நிலையிலே ஏழு மஞ்சள் துண்டங்களை வைத்து பெண்கள் சுக்ரவாரம் தோறும் குங்கும அர்ச்சனை செய்து மலர்கள் தூவி வழிபட்டால் களத்திர தோஷம் குறையும். உள்ளன்போடு ஏழு வாரம் செய்தாலே நல்ல மாற்றத்தை உணரலாம்.

50. சுந்தரப் பேரன் செய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சுந்தரப் பேரன் செய்த படலம் ஐம்பதாவது படலமாகும்.

வங்கிசேகரப் பாண்டியன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த போது விக்கிரம சோழன் என்ற சோழ அரசன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அவனுக்கு உதவியாக வடநாட்டு அரசர்கள் பலர் பாண்டிய நாட்டினை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருந்தனர். சோழனின் படைகள் பாண்டிய நாட்டிற்குள் புகுந்து நீர் நிலைகளை உடைத்தும் பசுக்களைக் கவர்ந்தும் வியாபாரிகளிடம் கொள்ளை அடித்தும் தாக்குதல் நடத்தினர். இச்செய்தியை வீரர்கள் மூலம் அறிந்த வங்கிசேகர பாண்டியன் பாண்டிய நாட்டினை சொக்கநாதரை தவிர யாராலும் காப்பாற்ற இயலாது என்று எண்ணி அவரைச் சரணடைந்தான். திருகோவிலுள் நுழைந்த பாண்டியன் எம் தந்தையே விக்கிரம சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறான். என்னிடமோ சோழனை எதிர்க்கும் அளவுக்கு படை வலிமை இல்லை. ஆதலால் தாங்கள்தான் பாண்டிய நாட்டினையும் என்னையும் காத்தருள வேண்டும் என்று வேண்டினான். அப்போது இறைவனார் வானத்தினின்றும் பாண்டியனே நீ முதலில் சென்று சோழனை எதிர்கொள். யாம் பின்னால் வந்து வெற்றியை உமதாக்குவோம் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

சொக்கநாதரின் திருவாக்கினைக் கேட்டதும் வங்கிசேகர பாண்டியன் தெளிவடைந்து சோழனை எதிர்க்கப் புறப்பட்டான். போர்க் களத்தில் பாண்டிய மற்றும் சோழப் படைகள் ஒன்றை ஒன்று எதிர்த்து போரிட்டன. அப்போது சோழனுக்கு உதவியாக வடநாட்டுப் படைகள் போர்க்களத்தை அடைந்தன. இதனால் பாண்டியனின் படைகள் சோழனின் படைகளை எதிர்க்க முடியாமல் சிதறி ஓடின. சோழன் போரில் வெற்றி பெற்றோம் என்று எண்ணி சங்கை முழங்கினான். அப்போது சொக்கநாதர் வேடுவ வடிவம் கொண்டு பாண்டியனின் சேனைக்கு தலைவராக சுந்தரேசன் என்ற திருப்பெயருடன் போர்க் களத்திற்கு வந்தார். தம்முடைய கணைகளை சோழனின் படைகளின் மீது எய்தார். அவர் விட்ட ஒவ்வொரு அம்பும் சோழப்படையில் பதினாறாயிரம் வீரர்களைக் கொன்றது. சோழப்படைகளின் எண்ணிக்கை குவியல் குவியலாக குறைந்தது. இதனைக் கண்ட சோழன் ஐயமுற்று இந்த அம்புகளுக்கு இவ்வளவு வலிமை எப்படி வந்தது என்று எண்ணி அம்பினை ஆராய்ந்த போது அம்பில் சுந்தரேசன் என்ற பெயர் பொறித்திருந்ததைக் கண்டான். வேடுவ வடிவில் உள்ளவர் சொக்கநாதர் பாண்டியனுக்கு துணையாக வந்துள்ளார் என்பதை உணர்ந்தான் விக்கிரம சோழன். மற்ற அரசர்களை அழைத்து இந்த அம்பை எறிந்தவர் சொக்கநாதர். அவர் போர் முனைக்கு வந்திருக்கிறார். தெய்வ பலத்தை மனித சக்தியால் வெல்ல முடியாது. அதனால் யுத்தத்தை நிறுத்தி ஊருக்குப் போகலாம் என்றான். சிலர் சம்மதித்தனர். சிலர் சண்டையிட்டு மாண்டார்கள். சோழன் போர்க் களத்தை விட்டு வெளியேறி சோழநாட்டிற்கு பயணமானான்.

வங்கிசேகர பாண்டியன் போரில் வெற்றி பெற்றான். இறைவனார் பாண்டியனின் வெற்றிப் புன்னகையைப் பார்த்து அருள்நகை புரிந்து மறைந்தருளினார். வெற்றி பெற்ற திருக்கோயிலுக்குச் சென்று வங்கிசேகர பாண்டியன் இரத்தினத்தால் செய்த வில்லும் சுந்தரர் என்று பேர் எழுதிய அம்பும் செய்து சாற்றி வணங்கினான். பின்னர் நீதிதவறாமல் ஆட்சி செய்து வந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

எவ்வளவு பெரிய வலிமையானவனாக எதிரி இருந்தாலும் தன்னை சரணடைந்தவர்களை இறைவன் காப்பாற்றுவார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 472

கேள்வி: மக்களின் துன்பங்கள் தீர்க்க தாங்கள் எப்பொழுது தனி நபர் வாக்கை அருள்வீர்கள்?

இறைவனின் கருணையைக்கொண்டு யாங்கள் கூறவருவது என்னவென்றால் ஒருவன் உயர்ந்தவன் ஒருவன் தர்மம் செய்கிறான் ஒருவன் நல்லவனாக இருக்கிறான் அவனுக்கு வாக்கு சொல்ல வேண்டும். ஒருவன் தாழ்ந்தவன் தீய எண்ணங்கள் கொண்டிருக்கிறான் அவனுக்கு வாக்கு சொல்லக்கூடாது என்றெல்லாம் இல்லை. பொதுவாகக் கூறுவோம் நல்ல எண்ணங்களும் தர்ம எண்ணங்களும் சாத்வீகமான சிந்தனையும் உள்ள மனிதர்களுக்கும் நாங்கள் வாக்கினை கூறுவோம் என்று. ஆனால் உண்மையில் எல்லோருக்கும் இறைவன் அருளால் யாங்கள் வாக்கை கூறிக்கொண்டுதான் இருக்கிறோம். இதுபோல் நிலையிலே இறைவனின் அருளாணையைப் பெற்று எப்பொழுது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் நாங்கள் வாக்கு கூற தயாராகத்தான் இருக்கிறோம். எனவே மனிதர்கள் எங்கள் வாக்கினை புரிந்துகொண்டு அந்த வழியில் வருவது அவர்களுக்கு பல நேரங்களில் கடுமையாக கடினமாக இருப்பதால் மௌனத்தைக் காட்டுகிறோம். இன்னொன்று எங்கள் வாக்கை கேட்டுவிட்டாலோ ஓலைசுவடியிலே எங்களோடு தொடர்பு வந்து விட்டாலோ வாழ்க்கையில் ஒரு துன்பம் கூட வரக்கூடாது ஒரு கஷ்டம் கூட வரக்கூடாது என்று மனிதன் எண்ணுகிறான். நியாயம்தான் ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் எத்தனை பூஜைகள் தர்மங்கள் செய்தேன் எத்தனை ஸ்தலங்கள் சென்றேன் எனக்கு ஏன் இப்படியொரு துன்பம் வந்துவிட்டது? என்றெல்லாம் கேட்கிறார்கள். எம்மிடம் வந்தால் துன்பம் போவதற்கு பதிலாக துன்பங்கள் அதிகமாகும். சம்மதம் என்றால் எமது வாக்கை யார் வேண்டுமானாலும் வந்து கேட்கலாம்.

அடுத்து இன்னொரு மிகப்பெரிய பிரச்சினை மனிதனிடம் இருக்கிறது. தன்னுடைய மகனோ மகளோ காந்தர்வம் (விரும்பியவர்களை திருமணம்) கொண்டுவிட்டால் ஏதோ கொலைபாதகம் செய்து விட்டது போல் எண்ணுகிறார்கள். அதை எப்படியாவது தடுக்க வேண்டும் குருநாதா என்று மௌனமாக எம்மிடம் பிரார்த்தனை வைக்கிறார்கள். எம் வழியில் வருபவர்கள் எதை செய்யக்கூடாது? என்று நாங்கள் எண்ணுகிறோமோ அதை செய்வதற்கு எங்களையே துணைக்கு அழைக்கிறார்கள். என் பெண் விரும்புகின்ற வாழ்க்கை அமையக் கூடாது. நாங்கள் பார்க்கின்ற மாப்பிளையைதான் அவள் திருமணம் செய்யவேண்டும். இதற்கு நீங்கள் வழி காட்டக்கூடாதா குருநாதா என்று எம்மிடமே வந்து கேட்கிறார்கள். யாங்கள் கூறுவதோ அல்லது அவன் கூறுவதோ இருக்கட்டும். முதலில் அந்தப் பெண்ணின் விதி எப்படியோ அப்படிதான் நடக்கும் என்பதை யாரும் புரிந்து கொள்வதேயில்லை.

அடுத்ததாக காந்தர்வம் என்பது நல்லதாக இருந்துவிட்டால் பாதகமில்லை குருநாதா. தவறான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விட்டால் எங்களுக்குதானே மனக்கஷ்டம ? அதனால்தானே தடுக்கிறோம்? என்றெல்லாம் கேட்கலாம். அப்படித்தான் நடக்க வேண்டும் என்ற விதியிருந்தால் அதை யாரும் மாற்ற முடியாது. அது ஒருபுறமிருக்கட்டும். முதலில் இப்படியொரு அனாச்சாரம் நடக்கக் கூடாது என விரும்பக் கூடியவர்கள் சிறு வயது முதலே அதிக பூஜைகளையும் முன்னோர்களின் சாபங்களை நீக்கும் பூஜைகளையும் தர்ம காரியங்களையும் செய்து கொண்டே வந்தால் பருவ தடுமாற்றம் என்பது ஆணுக்கோ பெண்ணுக்கோ இராது. ஆனால் இதை குற்றமாக பார்ப்பது மனிதனின் இயல்பாகிவிட்டது. இதை இறைவனோ சித்தர்களோ குற்றமாக பார்ப்பதில்லை. தன்னை சமுதாயத்தை கெடுக்காத தன் குடும்பத்தை நியாயமான வழியிலே பாதிக்காத எதனையும் நாங்கள் குற்றமென்று எடுத்துக் கொள்வதில்லை. ஒரு பெண்ணும் ஆணும் வளர்ந்த பிறகு நல்லது கெட்டதை போதிப்பதுதான் ஈன்றோரின் கடமையே தவிர வாழ்க்கையை இப்படித்தான் நீ வாழ வேண்டும் இந்த வேலைக்குதான் செல்ல வேண்டும் இந்த வியாபாரம்தான் செய்ய வேண்டும் இந்த பெண்ணைதான் நீ திருமணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் எவனொருவன் கூறுகிறானோ அவன் எமது வழியில் வருபவன் அல்ல.

49. திருவால வாயான் படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் திருவால வாயான் படலம் நாற்பத்தி ஒன்பதாவது படலமாகும்.

சுகுண பாண்டியனின் மரபில் அவனுக்குப் பின் சித்திநாதன் சித்தி பூஷணன் சித்திரத்வஜன் சித்திரவர்மன் சித்திரசேனன் சித்திரவிக்ரமன் ராஜமார்த்தாண்டன் ராஜசூடாமணி ராஜ சார்த்தூலன் ராஜ குஞ்சரன் சத்ருஞ்சரன் பீமரதன் பீமபராக்கிரமன் பிரதாப மார்த்தாண்டன் விக்கிரம கஞ்சுகன் யுத்த கோலகன் அதுலவிக்கிரமன் அதுலகீர்த்தி கீர்த்திவிபூஷணன் முதலானோர் வம்ச வழியாக வெகுகாலம் நீதி நெறி தவறாமல் அரசாண்டனர். இந்த இருபத்தோரு மன்னர்கள் வெகு காலம் நெறிதவறாது அரசு புரிந்ததும் ஒரு மனுவின் காலம் முடிந்துவிட்டது. மனுவின் காலம் முடிந்தபடியால் ஊழிக் காலம் எனப்படும் பிரளயம் உண்டானது. கடல் நீர் பொங்கியதால் உலகில் உள்ளவை அழியத் தொடங்கின. அப்பிரளயத்திலிருந்து மீனாட்சி அம்மன் திருக்கோவில் திருக்கோவிலின் இந்திர விமானம் பொற்றாமரைத் தீர்த்தம் பசுமலை பன்றிமலை நாகமலை இடபமலை யானைமலை ஆகியவை அழியாதிருந்தன. பிரளயக் காலம் முடிந்ததும் இறைவனார் உலகத்தையும் உயிர்களையும் படைத்தார். சூரியனிடமிருந்தும் சந்திரனிடமிருந்தும் மன்னர்கள் தோன்றினர். சேர சோழ பாண்டிய நாடுகள் பிரிந்தன. அப்போது பாண்டிய மரபில் வங்கிசேகரப் பாண்டியன் என்பவன் தோன்றினான். அவன் அறுபத்து நான்கு கலைகளிலும் சிறந்தவனாய் விளங்கினான். அவன் மீனாட்சி அம்மன் திருக்கோவிலைச் சுற்றிலும் சிறிய நகரத்தை உண்டாக்கி ஆட்சி செய்து வந்தான். நாளடைவில் அவனின் நல்லாட்சியின் விளைவால் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆதலால் வங்கிசேகரப் பாண்டியன் நகர எல்லையை விரிவாக்க எண்ணினான். எனவே அவன் திருக்கோவிலை அடைந்து எம் பெருமானே உன் அருளினால் நான் இந்நாட்டை ஆண்டு வருகிறேன். இப்போது என்னுடைய குறை ஒன்றை போக்கி அருள வேண்டும். என்னுடைய குடிமக்கள் வசிக்க ஒரு நகரம் அமைக்க வேண்டும். இந்நகரத்திற்கு ஆதியில் வரையறுக்கப்பட்ட எல்லையை வரையறுத்துக் காட்டி அருளுங்கள் என்று வேண்டினான்.

வங்கிசேகரப் பாண்டியனின் வேண்டுதலை ஏற்ற இறைவனார் சித்தர் வடிவம் கொண்டு மகாமண்டபத்தின் அருகே வந்து நின்றார். தமது திருக்கரத்தில் கங்கணமாகக் கட்டி இருந்த பாம்பினைப் பார்த்து நீ இப்பாண்டியனுக்கு இந்நகரத்தின் எல்லையை வரையறை செய்து காட்டுவாயாக என்று ஆணை இட்டார். உடனே அப்பாம்பு எம்பெருமானே இந்நகரம் எனது பெயரினால் விளக்க அருள்புரிவாயாக என்று வேண்டுகோள் விடுத்தது. இறைவனாரும் அவ்வாறே ஆகுக என்று அருளினார். உடனே பாம்பு விரைந்து சென்று கிழக்கு திசையில் சென்று வாலை நீட்டியது. நகருக்கு வலமாக தரையில் படிந்து உடலை வளைத்து வாலைத் தன் வாயில் பிடித்து பழைய நகரின் எல்லையைக் காட்டியது. பின்னர் கங்கணமாக மாறி இறைவனாரின் திருக்கரத்தில் மீண்டும் அமர்ந்தது. பாண்டியனை ஆசீர்வதித்து சித்தர் மறைந்தார். சர்ப்பம் காட்டிய எல்லைப்படி நகரை அமைத்து ஆலவாய் எனப் பெயரிட்டான் வமிசசேகரன். நான்கு பக்கமும் எல்லை வகுத்ததால் நான்மாடக் கூடல் என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. பாம்பு வரையறுத்த எல்லையின் படி வங்கிசேகரப் பாண்டியன் சக்கர வாளகிரி என்னும் மதிலைக் கட்டுவித்தான். அந்நகருக்கு தெற்கு வாயிலுக்கு திருப்பரங்குன்றமும் வடக்கு வாயிலுக்கு இடபமலையும் மேற்கு வாயிலுக்கு திருஏடகமும் கிழக்கு வாயிலுக்கு திருப்பூவணமும் எல்லையாக அமைந்தன. அப்பெரிய மதிலை ஆலவாய் மதில் என்றும் அந்நகரை ஆலவாய் என்றும் அழைக்கத் தொடங்கினர். பாம்பு வரையறுத்த எல்லையில் வங்கிசேகரப் பாண்டியன் நகரினை விரிவு செய்து சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

பிரளயத்தில் உலகமே அழிந்தாலும் அழியாத பெருமை பெற்ற மதுரையின் சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ளவும் மதுரை திருஆலவாய் என்ற பெயர் அழைக்கப்படும் காரணத்தையும் வழி தெரியாமல் இறைவனை சரணடைபவர்களை இறைவனார் காப்பார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 471

கேள்வி: பொதுவாக குரு சுக்ர ஹோரைகளை சுபகாரியங்களுக்கு பயன்படுத்துவதும் சுபகாரியங்களுக்கு இராகு காலத்தை தவிர்ப்பதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் வெள்ளிக்கிழமை அன்று 10.30 லிருந்து 11.00 மணி வரை குரு ஹோரையும் இராகு காலமும் சேர்ந்து வருகிறது இதை எப்படி கையாள்வது?

இறைவனின் கருணையைக் கொண்டு ஞானப் பார்வையிலே ஞானத்தை முழுமையாக அடைந்து விட்ட மனிதனுக்கோ அல்லது அடைய முயற்சி செய்யும் மனிதனுக்கோ இதுபோன்ற பேதங்கள் தேவையில்லை. இருந்தாலும் இவைகள் எதற்காக கூறப்பட்டுள்ளன? சாலை விதிகள் போலதான் இதுவும். ஒரு சாலையிலே எப்படி வேண்டுமானாலும் வாகனத்தை ஓட்டினால் வாகனம் ஓடும். ஆனால் இப்படித்தான் ஓட்ட வேண்டும் இன்ன திசையில்தான் வரவேண்டும் இன்ன திசையில்தான் வாகனத்தை நிறுத்த வேண்டும் என்றெல்லாம் ஒரு சில சட்ட திட்டங்கள் கூறப்படுகின்றன. எதற்காக? என்பது மனிதர்கள் அறிந்ததே. அதைப் போலத்தான் மனிதர்கள் சுயநலமாய் இந்த உலக வாழ்வை வாழ்வதற்கும் தன் சொந்த பிரச்சினைகளுக்காகவும் துன்பங்களுக்காகவும் பிராயச்சித்தம் செய்வதற்கும் சில சுப ஹோரைகளையும் சுப தினங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் எல்லாம் இறை செயல். நான் எனக்கென்று எதையும் செய்யப் போவதில்லை வாழப் போவதில்லை. எப்பொழுதுமே எனக்கு பொது தொண்டுதான் தியாகம்தான் தர்மம்தான் பிறர் நலன்தான் குறிக்கோள் என்று வாழக் கூடிய மனிதர்களுக்கு இதுபோன்ற ஹோரையோ இராகு காலமோ எமகண்டமோ பார்க்க தேவையில்லை.

இருந்தாலும் சராசரி மனிதர்கள் வாழ்க்கையிலே இன்ப துன்பங்களால் ஆட்படும் பொழுது சில குறிப்பிட்ட கால கட்டத்தில் சில விஷயங்களை செய்தால் நல்லது. செய்யாமல் தவிர்த்தாலும் நல்லது என்பதற்காக கூறப்பட்டுள்ளது. இந்த வகையில் பார்க்கும் பொழுது செய்யக் கூடிய செயல் பொது நலமான செயலா? சுயநலமான செயலா? என்று பார்த்து ஹோரையையும் எமகண்டம் இராகு காலத்தையும் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் இராகு காலம் எமகண்டம் சுப ஹோரை ஆகியவற்றை பார்க்கும் பொழுது அவசரமான தீவிர சிகிச்சையை ஒரு மனிதனுக்கு செய்ய வேண்டும். இராகு காலம் முடியட்டும் சிகிச்சை செய்கிறேன் என்று மருத்துவன் கூறினால் ஏற்றுக்கொள்வாயா? அல்லது எமகண்டம் முடியட்டும் என்றால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? பசியினால் மயங்கி விழுகிறேன். ஏதாவது அன்னம் கொடுங்கள் என்று ஒருவன் அங்காடியில் கேட்கிறான். சற்று பொறு அப்பா. எமகண்டம் முடியப் போகிறது. இன்னும் ஐந்து மணித்துளிகள் கழித்து உனக்கு உணவு தருகிறேன் என்றால் யாராவது கேட்பார்களா? எனவே மனோ நிலையை பொறுத்தும் சூழலை பொறுத்தும் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதன்முதலாக வீட்டிற்கு ஒரு விலையுயர்ந்த பொருள் வாங்கப் போகிறார்கள் அல்லது பெண் பார்க்கப் போகிறார்கள் அல்லது ஒரு சுப நிகழ்வு நிகழப்போகிறது என்றால் அதற்கு ஓரளவு துல்லியமாக நாளை பார்க்கலாம். மனிதர்கள் அதில்கூட அறியாமையால் தவறுதான் செய்கிறார்கள். கிடைத்த பஞ்சாங்கமோ தவறான பஞ்சாங்கம். அதைவிட சூரிய உதயத்தை மனதில் வைத்துதான் இராகு காலம் எமகண்டம் பார்க்க வேண்டும். சூரிய உதயம் என்றாலே 6 மணி என்று இவர்கள் வைத்துக் கொண்டு அதற்கேற்பத்தான் இராகு காலத்தையும் எமகண்டத்தையும் பார்க்கிறார்கள். இதேபோல் மதியோன் வாரம் பார்த்தால் இராகு காலமும் சுப ஹோரையும் குறுக்கிடும். எனவே இதுபோன்ற தருணங்களிலே சுப ஹோரையா இராகு காலமா என்று பார்ப்பதை விட செய்கின்ற செயல் சுய நலமா அல்லது பொது நலமா என்று பார்த்து முடிவெடுப்பதே சிறப்பிலும் சிறப்பாகும்.

48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் நாரைக்கு முத்தி கொடுத்த படலம் நாற்பத்தி எட்டாவது படலமாகும்.

பாண்டிய நாட்டில் வைகை ஆற்றிற்கு தெற்கே அழகிய தாமரை மலர்களைக் கொண்ட குளம் ஒன்று இருந்தது. அக்குளத்தில் இருந்த மீன்களை பிடித்து உண்டு நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு சமயம் மழை இல்லாமல் போனதால் தடாகத்தில் இருந்த தண்ணீர் வற்றி விட்டது. எனவே அந்த குளத்தில் மீன்கள் இல்லாமல் போனது. இதனால் நாரை உணவில்லாமல் தவித்தது. எனவே அது காட்டினை நோக்கிப் பறந்தது. அக்காட்டில் சிவனடியார்களான முனிவர்கள் வாழ்ந்து வந்தனர். முனிவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் குளம் ஒன்று இருப்பதை நாரை கண்டது. அத்தடாகத்தைச் சுற்றிலும் படித்துறை அமைந்திருந்தது. அத்தடாகத்தைச் சுற்றிலும் மரங்கள் நிறைந்திருந்தன. அக்குளத்தை அச்சோதீர்த்தம் என்று அழைப்பர். இதுவே தான் தங்குவதற்கு சிறந்த இடம் என்று எண்ணிய நாரை அங்கேயே தங்கியது. முனிவர்கள் அத்தீர்த்தத்தில் நீராடும் போது மீன்கள் அவர்களின் மீதும் அவர்களின் சடையின் மீதும் புரண்டன. அதனைக் கண்ட நாரை இம்முனிவர்களின் மேனியில் தவழும் இம்மீன்களை உணவாகக் கொள்ளுதல் கூடாது என்று எண்ணியது. தீர்த்தத்தில் நீராடிய முனிவர்களிடம் சத்தியதவர் என்ற முனிவர் மதுரையம்பதியின் பெருமைகளையும் சொக்கநாதரின் திருவிளையாடல்களையும் விரிவாக எடுத்துக் கூறினார். முனிவரின் விளக்கத்தினைக் கேட்ட நாரைக்கு மீனை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மறைந்தது. சொக்கநாதரை வழிபடும் எண்ணம் அதிகரித்தது. எனவே அது மதுரையம்பதியை நோக்கி பறந்தது.

மதுரையம்பதியை அடைந்த நாரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் வழிபட்டது. இவ்வாறு பதினைந்து நாட்கள் வழிபாடு நடத்தியது. பதினாறாம் நாள் நாரை பொற்றாமரைக் குளத்தில் நீராட செல்லும் போது அங்கு மீன்கள் துள்ளுவதைக் கண்டது. உடனே அதற்கு மீனினை உண்ணும் ஆவல் உண்டானது. குளத்திற்குள் தனது காலை வைத்ததும் சொக்கநாதரின் சிந்தனை தலை தூக்கியது. சொக்கநாத்தரின் குளத்தில் உள்ள மீனை உண்ணக் கூடாது என்று அவர் மீது கொண்ட அன்பினால் மீனினை உண்ணாமல் பொற்றாமரைக் குளத்தில் நீராடிவிட்டு சொக்கநாதரை வழிபட்டது. நாரையின் செயலினால் இறைவனுக்கு அதன்மீது கருணை ஏற்பட்டது. இதனால் நாரையின் முன்னால் சொக்கநாதர் தோன்றி என் இனிய நாரையே உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு நாரை ஐயனே இப்பிறவியை நீக்கி உன்னுடைய அடியவர்கள் வசிக்கும் சிவலோகத்தில் என்னை சேர்த்துக் கொள்ள வேண்டும். என்னைப் போல பறவைகள் இத்தீர்த்தத்தில் உள்ள மீனினை உண்டால் அவர்களுக்கு பாவம் வந்து சேரும். ஆதலால் இப்பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் எக்காலத்தும் இல்லாமல் இருக்க அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இறைவனாரும் அவ்வாறே ஆகுக என்று அருள் புரிந்தார். பின்னர் நாரை நான்கு தோள்களும் மூன்று கண்களும் கொண்ட சிவகணமாக மாறி சிவலோகத்தை அடைந்து நந்தி கணங்களுள் ஒன்றானது. நாரைக்கு வரம் அளித்த நாள் முதல் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் மட்டும் இன்றி நீரில் வாழும் உயிரினங்கள் ஏதும் இல்லாமல் போனது. சுகுண பாண்டியன் சிலகாலம் ஆட்சி செய்து பின்னர் சிவப்பேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனைப் பற்றிய தூய சிந்தனையும் அவரின் செய்திகளையும் உணர்ந்து கேட்கும் போது பிற உயிரினங்களுக்கு துன்பம் விளைவிக்கும் எண்ணம் அழிந்து விடும் என்பதையும் பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது இறைவனை அடைய சிறந்த வழி என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 470

அகத்திய பெருமானின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையை கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் இறைவனின் கருணையால் இதுபோல் எம் வழி வருகின்ற அனைத்து சேய்களுமே நலமாய் உயர்வாய் நல்வித செயல்களை செய்து செய்து இறையருளை தொடர்ந்து பெற அதுபோல் இறை அருளைக் கொண்டே நல்லாசிகளை இயம்புகிறோம். இயம்புகிறோம் திடமான மனது உறுதியான மனது எந்த விதமான சங்கடத்திற்கும் சலனத்திற்கும் ஆளாகாத மனது இதுபோல் வைரத்தைவிட வைடூரியத்தை விட உறுதியான மனது ஒவ்வொரு மனிதனுக்கும் வாய்த்தால்தான் அறக்காரியங்களை செய்ய இயலும் நன்மையை செய்ய இயலும். யாம் அடிக்கடி கூறுவது போல தவறை செய்கின்ற மனிதன் சுயநலமாய் வாழ்கின்ற மனிதன் பாவத்தின் மேல் பாவத்தை சேர்க்கின்ற மனிதன் பலர் விமர்சனம் செய்கிறார்களே? பலர் உற்று உற்று பார்க்கிறார்களே? என்று தன் தவறான செயல்களை நிறுத்தி விடுகிறானா? இல்லையே? ஒரு தவறு செய்கின்ற மனிதன் துணிந்து தவறு செய்கிறான். இல்லையென்றால் அதற்கு பலவிதமான நியாய வாதங்களை கற்பித்து தவறு மேல் தவறு செய்து கொண்டே போகிறான். ஆனால் நல்லதை தர்மத்தை செய்ய வேண்டும் சத்தியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று முன் வருகின்ற மனிதர்கள் மட்டும் அதில் ஏதாவது இடையூறுகள் ஏளனங்கள் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வந்தால் அதனை விட்டு விடுகிறார்களே ஏன்? தீயதை செய்கின்ற மனிதன் யார் விமர்சனம் செய்தாலும் ஏன்? சட்டம் போட்டு தடுத்தாலும் கூட அதனையும் மீறி தீயதை செய்து கொண்டே இருக்கிறான்.

நல்லதை செய்கின்ற மனிதன் மட்டும் நல்லதை செய்வதால் சில துன்பங்கள் வருகிறதே? இத்தனை எதிர்ப்புகள் ஏளனங்கள் வருகிறதே? என்று மனம் வெதும்பி விரக்தியடைந்து அதனை விட்டுவிடுகிறான். இந்த தன்மையை எம் வழியில் வருகின்ற சேய்கள் அறவே குறைத்துக் கொண்டு நல்லதை செய்கின்ற தன்மைக்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதனை விட்டுவிடக் கூடாது என்ற சிந்தனைக்கு வந்து விட வேண்டும். அறவே அச்சம் குழப்பம் இல்லாமல் வாழ முயற்சி செய்ய வேண்டும். பல இடங்களில் பல விதமான தர்ம காரியங்களை பெறுவதற்கு பல மனிதர்கள் இருக்க சுற்றிலும் பலர் வேடிக்கை பார்க்கிறார்கள் நான் அள்ளிக் கொடுக்கலாம் என்றுதான் நினைத்தேன். மற்றவர்களின் பார்வை என்னை சங்கடப்படுத்துகிறது. எனவே குறைவாக கொடுத்து விட்டேன் என்றெல்லாம் மனிதர்கள் எண்ணுவது அறியாமையாகும். பலர் பார்க்க தீய பானங்களை ஒரு மனிதன் பருகுகிறான் தீய பொருள்களை விற்கிறான் வாங்குகிறான். தீய செயலை செய்கிறான். அதற்கெல்லாம் அச்சப்படாத வெட்கப்படாத மனிதன் தர்மத்தை செய்ய நல்லதை செய்ய ஏன் அச்சப்பட வேண்டும்? ஏன் வெட்கப்பட வேண்டும்? எனவே இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வார் என்று ஒரு மனிதன் நம்பிக்கையோடும் உறுதியோடும் இருத்தலே எம் வழியில் வருவதற்கு ஏற்ற மனோபாவமாகும்.

இந்த மனோபாவத்தை மனோநிலையை ஒருவன் வளர்த்துக் கொண்டே இருத்தல் அவசியமாகும். துன்பங்களை தாங்குவதற்கு பலம் வேண்டும் மனோபலம் வேண்டும் என மனிதர்கள் வினவுகிறார்கள், கேட்கிறார்கள். கட்டாயம் புண்ணியம் நற்காரியங்கள் அதிகம் சேர சேர நற்செயல்கள் அதிகம் செய்ய செய்ய மனோபலம் உருவாகும். துன்பங்களை தாங்குகின்ற சக்தியை வளர்த்துக் கொள்ள எந்த துன்பம் வந்தாலும் துவண்டு விடாமல் அதனை எதிர்கொள்ளக் கூடிய திறனை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதிகளவு தர்ம காரியங்களும் தன்னலம் கருதாத தொண்டும் பூஜைகளும் ஸ்தல யாத்திரையும் மந்திர உச்சாடனமும் எந்தப் பிரச்சினைகள் வந்தாலும் அறிவு கொண்டும் எம் பார்வையிலும் அதற்கு தீர்வு காணவேண்டும் என்று முயற்சி செய்வதே சிறப்பிலும் சிறப்பாகும். அப்படி ஒரு மனிதன் வாழ முற்பட்டால் மனோதிடம் அதிகமாகும் மனோபலம் அதிகமாகும். இதுபோல் கர்ணனை நாங்கள் உதாரணம் காட்டுவது எதற்கு? என்றால்

ஒரு மனிதனிடம் எத்தனை விதமான ஏற்க முடியாத குணங்கள் இருந்தாலும் கூட தர்ம குணங்கள் அதிகம் இருந்தால் இறையருள் நிச்சயம் என்பதற்கு கர்ணன் ஒரு சிறந்த உதாரணம். அது மட்டுமல்லாமல் கடுமையான தவமோ பிரார்த்தனையோ இல்லாமல் செய்கின்ற தர்மத்தாலும் நற்காரியங்களாலும் இறைவன் அருளை பெறுவதோடு மட்டுமல்லாமல் இறைவனை தரிசிக்கவும் செய்யலாம் என்பதற்கு கர்ணன் சிறந்த உதாரணம். எனவே எம் வழியில் வர எண்ணுகின்ற சேய்கள் இதுபோல் கருத்தை உறுதியாக மனதிலே வைத்துக் கொண்டு தொடர்ந்து விடாது தர்மம் என்று தர்ம வழியில் வருவதோடு சத்தியம் என்று சத்திய வழியிலும் வந்து பரிபூரண சரணாகதி பக்தியிலே தன்னை ஆட்படுத்திக் கொண்டு சாத்வீக எண்ணங்களை வளர்த்துக் கொண்டு எவர் மனதையும் புண்படுத்தாமல் ஆணவமில்லாமல் தன்னை உயர்த்திக் கொள்ளக் கூடிய முயற்சியில் இறை வழியில் வர இறையருளால் அவர்கள் துன்பங்களெல்லாம் ஓடி அவர்கள் நித்ய இன்பமாக, நிம்மதியாக வாழ வழி பிறக்கும் என்று யாங்கள் கூறுகிறோம். இந்தக் கருத்தை நன்றாக மனதிலே பதியவைத்து சதாசர்வகாலம் இறைவனின் திருவடியை சிந்தித்து சிந்தித்து நல்வழியில் வர எம் சேய்களுக்கு இறைவன் அருளாலே நல்லாசிகளை இத்தருணம் இயம்புகிறோம்.

47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் நாற்பத்தி ஏழாவது படலமாகும்.

இராசராச பாண்டியனுக்குப் பின் அவனுடைய மகன் சுகுண பாண்டியன் மதுரையை நல்லாட்சி செய்து வந்தான். அப்போது முற்பிறவியில் நல்ல வினைகள் செய்த ஒருவன் சில தீவினைகள் செய்தமையால் மதுரைக்கு அருகில் உள்ள ஊரில் கரிக் குருவியாக பிறந்தான். அக்கரிக் குருவியை காகம் உள்ளிட்ட பெரிய பறவையினங்கள் தலையில் கொத்தின. இதனால் கரிக் குருவிக்கு தலையில் காயங்கள் உண்டானது. கரிக் குருவியால் அப்பறவைகளை எதிர்க்க இயலவில்லை. எனவே கரிக் குருவி அவ்வூரை விட்டு காட்டுப் பகுதிக்கு சென்றது. அங்கு ஒருநாள் மரத்தில் கரிக் குருவி அமர்ந்திருந்தது. அப்போது சிவபக்தர் ஒருவர் தன் அடியவர் கூட்டத்தினருடன் அம்மரத்தடிக்கு வந்து சிறிது ஓய்வெடுக்க அமர்ந்தார்கள். சிவபக்தர் கூட்டத்தினரை நோக்கி இறைவனைப் பற்றி பேச ஆரம்பித்தார். தலம் தீர்த்தம் மூர்த்தி என மூன்று சிறப்புகளையும் உடையது மதுரையம்பதி. அங்கு கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் தலைசிறந்தவர். அவர் தம் பக்தர்களுக்கு இம்மையிலும் மறுமையில் நற்கதி அளிப்பார். என்று மதுரையின் சிறப்பையும் சொக்கநாதரின் பெருமைகளையும் எடுத்துக் கூறினார். சிவபக்தர் கூறியதைக் கேட்ட கரிக் குருவிக்கு சொக்கநாதரை வழிபட வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. அக்கரிக் குருவி மதுரை நோக்கி பறந்தது. மதுரையை அடைந்ததும் பொற்றாமரைக் குளத்தில் நீராடியது.

மீனாட்சி அம்மனையும் சொக்கநாதரையும் மனமுருக வழிபட்டது. இவ்வாறாக மூன்று தினங்கள் கரிக்குருவி இறை வழிபாடு செய்தது. கரிக்குருவியின் செயலினைக் கண்டதும் மீனாட்சி அம்மன் இறைவனாரிடம் ஐயனே இக்கரிக் குருவி வழிபடும் காரணம் என்ன? என்று கேட்டாள். அதற்கு இறைவனார் கரிக் குருவி முற்பிறவியில் செய்த தவறினால் இப்பிறவியில் குருவியாக பிறந்தது. முற்பிறவியில் செய்த நன்மையால் இப்பிறவியில் மதுரையம்பதியையும் பொற்றாமறைக் குளத்தையும் இறைவனைப் பற்றியும் தெரிந்து கொண்டது. இத்தலத்தில் தனக்கு பிறவித் துன்பம் நீங்கும் என்று முழுமையாக நம்பிக்கையுடன் தனது வழிபாட்டை செய்து கொண்டிருக்கிறது. அதன் நம்பிக்கைக்கும் வழிபாட்டிற்கும் உரிய பலன் அதற்கு கிடைக்கும் என்று சொல்லி கரிக்குருவிக்கு ஆயுள் பலத்தையும் பிறவித் துன்பத்தையும் போக்கும் மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். ஞானம் பெற்ற கரிக்குருவியானது இறைவனை பலவாறு துதித்து வழிபட்டது. பின்னர் இறைவனாரிடம் ஐயனே எனக்கு ஓர் குறை உள்ளது. மற்ற பறவைகள் எல்லாம் என்னை துன்புறுத்துகின்றன என்றது. அதனைக் கேட்ட இறைவனார் அப்பறவைகளுக்கு எல்லாம் நீ வலிமையுள்ளவன் ஆவாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். உடனே இந்த வலிமையானது எமது மரபில் உள்ள அனைத்து பறவைகளுக்கும் கிடைக்கப் பெற்று விளங்க வேண்டும் எமக்கு உபதேசித்த மந்திரத்தை அவைகளுக்கும் ஓதி அனைத்து பறவைகளும் உய்ய அருள வேண்டும் என்று வேண்டியது. சொக்கநாதர் அவ்வாறே ஆகுக என்று கூறியருளினார். உடனே அக்குருவியும் அதன் இனமும் சொக்கநாதர் ஓதியருளிய மந்திரத்தை உச்சரித்து வலிமை பெற்றது. அதனால் அந்தப் பறவைகள் அனைத்தும் வலியன் என்னும் காரணப் பெயர் பெற்றுச் சிறப்பு பெற்றன. சில காலம் சென்ற பின் கரிக்குருவி சிவனடியை அடைந்தது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனை உணர்ந்த சான்றோர்கள் இறைவனை அடையச் சொல்லும் வழிகளை நம்பிக்கையுடன் கடைபிடித்து இறைவனை வழிபட்டு வந்தால் உறுதியாக வீடு பேறு பெறலாம் என்பதையும் தீமைகள் செய்தால் தீமைகள் வந்து சேரும் எனபதையும் நன்மை செய்தால் நன்மை கிடைக்கும் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.