ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 637

கேள்வி: இறையருளை பெற என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கையில் எதிர்படும் எல்லா வகையான ஏழைகளுக்கும் உழைக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் உழைத்தும் போதிய வருமானம் இல்லாதவர்களுக்கும் இயன்ற உதவிகளை செய்வதும் இதுதான் அதுதான் என்று இல்லாமல் ஆய்ந்து பார்க்காமலும் சமயத்தில் தேவை என்று வரும்பொழுது அள்ளி அள்ளி தரக்கூடிய சிந்தனையிலே ஒரு பெருந்தன்மையான போக்கிலே தர்மத்தை செய்து கொண்டே இருந்தால் அது இறையருளை பெற்று தர உதவுமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 636

கேள்வி: பல குடும்பங்களில் கணவன் மனைவியை மதிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

கணவன் மனைவியை மதிக்காமல் இருப்பதற்கும் மனைவி கணவனை மதிக்காமல் இருப்பதற்கும் வினைப்பயன் தான் காரணம். இந்த பிரச்சினை விலக நவகிரக காயத்ரியை அதிதெய்வ காயத்ரியை சப்த கன்னியர் மந்திரங்களை உருவேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 635

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

சராசரி மனிதர்கள் வாழ்வியல் துக்கங்களை துன்பங்களை எதிர் கொள்ள முடியாமல் அரட்டுவார்கள். வேதனைப்படுவார்கள். புலம்புவார்கள். கண்ணீர் சிந்துவார்கள். ஆனால் அதை ஓரளவு ஞான வழியில் செல்கின்ற மனிதர்கள் ஓரளவு கர்மாவை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று எண்ணக் கூடிய மனிதர்கள் அனைவருமே தனக்கு நேருகின்ற துன்பங்கள் அனைத்தும் இறைவன் காரண காரியமாக தருகிறார். வினைப் பயனால் வருகிறது. இது சோதனையான காலம் என்று எண்ணி அமைதியாக ஏற்றுக் கொள்வார்கள். ஒரு வினையை ஒத்திப் போடுவதோ தள்ளிப் போடுவதோ பெரிதல்ல. அப்படி செய்தால் மீண்டும் மீண்டும் பல்கிப் பல்கிப் பெருகி மீண்டும் அது மடுவளவு இருந்தது மலையளவு உயர்ந்து ஒரு மனிதனை வாட்டாமல் போகாது. எனவே விதியை எதிர்கொள்கிற பக்கும் ஒரு மனிதனுக்கு வேண்டும். அது அத்தனை எளிதில் வராது என்றாலும் ஒரு மனிதன் மெல்ல மெல்ல மந்திர உருவேற்றத்தாலும் தியானத்தாலும் ஏற்படும் அனுபவ நிகழ்வை கொண்டும் பிற அனுபவத்திலிருந்தும் மெல்ல மெல்ல கற்றுக் கொண்டு மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுபோல் பக்குவம் இல்லாத நிலையில் ஒரு மனிதன் அவன் எத்தனை தலங்கள் சென்றாலும் என்னென்ன வகையான வழிபாடுகளை செய்தாலும் அவனது மனமானது துன்பத்திலிருந்து வெளிவர வேண்டும் என்று எண்ணித்தான் செய்கிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக இந்த வழிபாடுகளும் இந்த தர்மங்களும் அவனது கர்ம வினைகளை குறைத்து துன்பத்திலிருந்து வெளிவரக் கூடிய வாய்ப்பை தருகிறதோ இல்லையோ துன்பத்தை தாங்குகின்ற வல்லமையை தந்து விடுகிறது. எனவே தான் துன்பமற்ற உளைச்சலற்ற தொல்லைகளற்ற வாழ்க்கை வேண்டும் என்று இறையை கேட்பதை விட எது நடந்தாலும் அதனை ஏற்று அமைதியாக வாழக் கூடிய பக்குவத்தை தா இறைவா என்று கேட்கக்கூடிய மன நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனை வெறும் வாத பிரதிவாதங்களோ உபதேசங்களோ அல்லது நூல் ஓதுதல் மூலமாகவோ கற்றுக் கொள்ள முடியாது.

இடைவிடாத பிரார்த்தனையும் இடைவிடாத பயிற்சி இடைவிடாத முயற்சி அதிகாலை துயில் கலைதல். உலகியலில் இருந்து உலக ஆரவாரத்தில் இருந்து எப்போதும் ஒதுங்கி ஒரு மூன்றாவது மனிதனின் பார்வை போல் தன்னையும் சேர்த்து பார்த்தல். இது போன்ற முறைகளாலும் உள்ளே நிறுத்தாமல் (மூச்சுக்காற்றை) பின்னால் பக்குவப்பட்ட பிறகு கும்பகத்தை செய்யலாம். உள்ளே நிறுத்தாமல் சுவாசத்தை ஆழ்ந்து இழுத்து பிறகு வெளியே விடுகின்ற முறையை செய்வதாலும் மனதிற்கு ஒரு உறுதி ஏற்படும். இல்லையென்றால் மனம் அதன் இயல்பானது எதையாவது எண்ணி கவலைப்படுவதும் யார் மீதாவது சினப்படுவதும் எதை எண்ணியாவது வேதனைப்படுவதும் அல்லது எவர் மீதாவது பொறாமைப் படுவதுமாகத்தான் இருக்கும். அதுதான் அதன் அடிப்படை இயல்பு. அதனை மெல்ல மெல்ல அதன் மிருக குணத்தில் இருந்து அதனை மேலேற்றி மனிதனாக்கி பிறகு மாமனிதனாக்கி பிறகு புனிதனாக்கி பிறகு மகானாக்கி பிறகு சித்த நிலைக்கு கொண்டு வர வேண்டும். இவையெல்லாம் ஒரு பிறவியில் சாத்தியப்படலாம். பல பிறவியிலும் சாத்தியப்படலாம். எனவே இதற்காக மனம் தளராமல் இறைவனை நோக்கி முதலில் கையெடுத்து மனம் ஒன்றி வழிபாடு செய்வது அடிப்படை என்பதால் தான் எடுத்த எடுப்பிலேயே எமை நாடும் மாந்தர்களுக்கு நாங்கள் தியானத்தையோ தவத்தையோ சுவாச பயிற்சியை உபதேசம் செய்யாமல் தீபம் ஏற்று யாகத்தை செய் தலங்கள் செல் தானம் செய் தர்மம் செய் என்று அவன் பாவ கர்மாவை மெல்ல மெல்ல குறைத்து மனதை பக்குவப்படுத்தி பிறகு தான் அவனுக்கு உண்டான அந்த கிரக சூழல் தக்கவாறு ஏற்படும் பொழுது தான் அவனுக்கு ஏற்ற வழிகளை சுட்டிக் காட்டுகிறோம்.

சக்தி பீடம் 1. மூகாம்பிகை கோயில்

இந்தியாவின் தென்பகுதியில் உள்ள கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் இக்கோயில் அமைந்துள்ளது. கோல மகரிஷி வழிபட்டதால் இத்தலம் கொல்லூர் என பெயர் பெற்றது. புராண பெயர் மூகாம்பாபுரி மற்றும் கோலாபுரம். 51 சக்தி பீடங்களில் இது அர்த்தநாரி சக்தி பீடம் ஆகும். இக்கோவில் 51 சக்தி பீடங்களில் தேவியின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. கோடாச்சத்ரி மலைக் குன்றுகளின் அடிவாரத்திலும் சௌபர்னிகா நதியின் தென்புறத்திலும் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூகாம்பிகை தேவி முதன்மை தெய்வமாக வழிபடப்படுகிறார். கோயில் அமைந்துள்ள நிலப்பகுதி புராண காலத்தில் துறவியான பரசுராமரால் உருவாக்கப்பட்டது. கோயில் முழுவதும் கேரளா ஆலய கட்டுமான பாணியில் உள்ளது.

கொல்லூரிலிருந்து 25 கிமீ தொலைவில் குடஜாத்ரி மலை இருக்கிறது. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்து விழுந்த துண்டு பகுதி குடஜாத்ரி மலையாகும். இதில் 64 வகை மூலிகைகளும் 64 தீர்த்தங்களும் உள்ளன. இந்த மலையில் கணபதி குகை சர்வஞபீடம் சித்திரமூலை குகை உள்ளன. இந்த குகையில் கோலமகரிஷி தவம் செய்திருக்கிறார். இவரின் தேவைக்காக அம்பாள் ஒரு நீர் வீழ்ச்சியை இங்கு தோற்றுவித்தார். குடஜாத்ரி மலையிலிருந்து 64 நீர்வீழ்ச்சிகள் தனித்தனியாக உருவாகி பின்னர் அவை ஒருங்கிணைந்து சௌபர்ணிகா நதியாக உருவெடுத்துப் பாய்கிறது. சுபர்ணா என்ற கழுகு இந்த நதிக்கரையில் தவம் செய்து இறுதியில் முக்தி அடைந்தது. எனவே இந்த நதிக்கு சௌபர்ணிகா என்று பெயர் வந்தது. கிருதயுகத்தில் இக்கோயிலுக்கு மகாராண்யபுரம் என்றும் பெயர். இக்காலத்தில் இதன் கரையில் ஏராளமான முனிவர்கள் தவம் இருந்தனர். இந்தப் பகுதிக்குப் பாத யாத்திரையாக வந்தார் கோலன் என்கிற மகரிஷி. இதன் அமைதியான சூழல் அவருக்குப் பிடித்துப் போக அங்கேயே ஆசிரமம் அமைத்துத் தங்கி இறைவனை நோக்கிக் கடுந் தவம் இருந்தார். கோல மகரிஷி தங்கியதால் இந்தப் பகுதி கொல்லாபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் கொல்லூர் ஆனது.

கோல மகரிஷி இங்கு தவம் செய்து கொண்டிருந்த போது ​​அவரை ஒரு அரக்கன் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தான். அரக்கனின் தொந்தரவுகளை பொருட்படுத்தாத முனிவர் அரக்கனால் பாதிக்கப்படாமல் அமைதியுடன் இருந்தார். அரக்கனால் முனிவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. முனிவரை மேலும் துன்புறுத்த இந்த அரக்கனும் தன்னை யாராலும் வெல்ல முடியாத சக்திகளைப் பெற சிவபெருமானை நோக்கி கடுமையான தவமிருந்தான். இந்த அரக்கனின் தீய மனதை அறிந்த சக்திதேவி சிவபெருமான் அரக்கன் முன் தோன்றிய போது அரக்கனை மூக்கனாக (ஊமையாக) ஆக்கினாள். அதனால் அரக்கனால் வரம் எதுவும் கேட்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த அரக்கன் கோல மகரிஷியை தவம் செய்ய முடியாதபடி மேலும் துன்புறுத்தத் தொடங்கினான். கோல மகரிஷி சக்திதேவியை எண்ணி பிரார்த்தனை செய்தார். சக்திதேவி அரக்கனான ஊமை மூகாசுரனுடன் போரிட்டு வென்றார். மூகாசுரன் அம்பிகையிடம் சரணடைந்தான். அவனது வேண்டுகோளுக்கு இணங்க இத்தலத்தில் அவனது பெயரையே தாங்கி மூகாம்பிகை என்ற பெயரில் அம்பிகை தங்கினாள்.

கோல மகரிஷியின் தவத்தின் பலனால் சிவபெருமான் அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று என்றார். இறைவன் தன் துணையுடன் என்றென்றும் இங்கே வீற்றிருந்து மக்களுக்கு அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சிவபெருமான் மனம் மகிழ்ந்து இதோ இந்தப் பாறையில் உனக்காக ஒரு லிங்கம் அமைக்கிறேன். இதை நீ தினமும் பூஜை செய்து வா என்று அருளினார். சிவனருளால் அங்கு ஓர் அழகிய லிங்கம் தோன்றியது. அதைக் கண்ட கோல மகரிஷி சிவபெருமானிடம் சக்தி இல்லாத சிவனை நாங்கள் எப்படி வழிபடுவது? என்று கேட்டார். அதற்கு சிவபெருமான் இந்த லிங்கத்தின் மத்தியில் உள்ள சுவர்ண ரேகையைப் பார். இதன் இடப் பாகத்தில் பார்வதியும் அறுபத்து நான்கு கலைகளுக்கும் தாயான சரஸ்வதியும் செல்வங்களை அள்ளித் தரும் லட்சுமி ஆகிய மூவரும் அரூபமாக இருப்பார்கள். வலப்புறம் பிரம்மா விஷ்ணு ஆகியோருடன் நானும் இருப்பேன் என்று கூறி மறைந்தார். சிவபெருமான் அருளியவாறு சுவர்ணரேகை ஜொலிக்கும் அந்த ஜோதி லிங்கத்தை கோல மகரிஷி உட்பட மற்ற முனிவர் களும் பூஜித்து வந்தார்கள்.

பாரத தேசம் முழுதும் புனித யாத்திரை மேற்கொண்ட ஆதிசங்கரர் கொல்லூருக்கு வந்தபோது மக்கள் அவரிடம் சுவாமி தங்க ரேகை மின்னும் சிவலிங்கத்தில் அம்பாள் அரூப வடிவில் இருக்கிறாள். ஆனால் மூகாம்பிகை அன்னையின் முகம் எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லையே என்று முறையிட்டனர். ஆதிசங்கரர் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தார். அப்போது அம்பாள் அவருக்கு காட்சி கொடுத்தாள். பத்மாசனத்தில் வீற்று இரு கரங்களில் சங்கு சக்கரம் மற்ற இரு கரங்களில் ஒரு கரம் பாதங்களில் சரணடையத் தூண்ட மற்றது வரம் அருளி வாழ்த்தும் கோலத்தில் அன்னை தோற்றமளித்தாள். தன் முன் தோன்றிய அம்பாளின் உருவத்தை தேர்ந்த ஸ்தபதியிடம் விவரித்து விக்கிரகம் செய்யப் பணித்தார் ஆதி சங்கரர். அதன்படி அம்பாளின் அழகிய உருவம் பிரமிப்பூட்டும்படி உருவானது. சுவர்ண ரேகை லிங்கத்தின் பின்னால் மூகாம்பிகை திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் அடியில் ஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தச் சக்கரத்தில் 64 கோடி தேவதைகள் இருப்பதாக ஆதிசங்கரர் அருளியிருக்கிறார். கோயிலின் பூஜை முறைகள் அனைத்தையும் ஆதிசங்கரரே வகுத்து அருளினார். இன்று வரை அவை சற்றும் மாறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மூகாம்பிகை ஆதிசங்கரருக்குப் காட்சி கொடுத்த பிறகு அவர் இயற்றியதுதான் சௌந்தர்ய லஹரி.

கோயிலின் மூலஸ்தானத்தில் மூகாம்பிகை தனது இரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்திக் கொண்டு காட்சி அளிக்கிறாள். மேலும் இரண்டு கரங்களில் ஒரு கையில் அபயகரமும் மற்றொரு கையை தன் திருவடியை சுட்டிக்காட்டும் படி காட்டிக் கொண்டு பத்மாசனத்தில் பார்வதி மகாலட்சுமி சரஸ்வதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அமர்ந்தபடி கருவறையில் வீற்றுள்ளாள். ஐம்பொன்னால் ஆன காளி சரஸ்வதி சிலைகள் மூகாம்பிகையின் இருபுறமும் உள்ளார்கள். அன்னை அவ்வப் பொழுது நவமணியால் அலங்கரிக்கப்படுகிறார். மார்பின் இடையில் மரகதம் பதித்த பொற்சரம் அலங்கரிக்கின்றது. மூகாம்பிகைக்கு நெற்றி கண்கள் மூக்கு காது ஆகியவற்றில் விலை உயர்ந்த ரத்தினங்களால் செய்யப்பட்ட அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு வருகிறது. விசேஷ காலங்களில் அன்னையின் திருமார்பில் அணிவிக்கப்படும் பச்சைக்கல் அட்டிகை சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் கெதளி ராஜ வம்சத்தை சேர்ந்த அரசன் ஒருவன் தேவிக்கு காணிக்கையாக அளித்த ஒன்றாகும். இதன் விலை மதிப்பிட முடியாதது ஆகும். இத்திருவுருவம் ஆதி சங்கரரால் பஞ்சலோகத்தில் தனக்கு கிடைத்த காட்சிப்படி அமைக்கப் பெற்றதாகும். அதற்கு முன்னர் இங்குச் சிவலிங்கம் ஸ்ரீ சக்கரமும் மட்டுமே இருந்து வந்தன. பரமேசுவரர் தனது கால் விரலின் உதவியால் ஸ்ரீசக்கரத்தை வரைந்தார் என்று புராண செவி வழி செய்திகள் உள்ளது. மூகாம்பிகையின் முன் தரையோடு தரையாக சிவலிங்கம் உள்ளது. சுயம்பாகத் தோன்றிய அந்த சிவலிங்கம் பொற் கோடால் இரு பிளவுபட்டாற் போன்றும் இடப்பாகம் பெரிதாகவும் அமையப் பெற்றுள்ளார். உச்சிப் பொழுதின் போது கண்ணாடியின் மூலமாக இந்த லிங்கத்தின் மீது பிரதிபலிக்கச் செய்தால் அப்பொற்கோட்டைப் பார்க்கலாம். அசையாத சக்தியாக சிவமும் அசையும் சக்தியாக உடையவளும் இச் சிவலிங்கத்தில் ஒன்றி உள்ளனர். சுயம்பு லிங்கத்திற்கும் விசேஷ பூஜை காலங்களில் அணிவிப்பதற்கு என்றே தனியாக அணிவிக்கப்பட ஆபரணங்கள் உள்ளது.

கோயில் கருவறையில் மூகாம்பிகை தேவியின் மூல விக்கிரகம் பக்கத்தில் சிறிய இரண்டு தேவிகளின் விக்கிரங்கள் உள்ளது. இதில் ஒரு தேவியின் திருவுருவத்தை தினத்திற்கு மூன்று வேளை அதாவது காலை உச்சி வேளை இரவு ஆகிய மூன்று நேரங்களிலும் ஆலயத்தின் உள்ளேயுள்ள பிரகாரத்தைச் சுற்றி திருவுலா வருவது வழக்கம். இதற்கு சீவேலி என்று பெயர். உட்பிரகாரத்தில் சீவேலி வருவது போன்று குறிப்பிட்ட விசேஷ தினங்களில் அம்பாள் ஆலயத்தைச் சுற்றியுள்ள முக்கிய தெருக்களில் நகர்வலம் வருவதும் உண்டு. உட்பிரகாரத்தில் பலி பீடங்களுக்கு நைவேத்யம் படையலைத் தலைமை பூசாரி படைத்தவாறு அதற்குரிய பூஜைகளைச் செய்தவாறு செல்ல அதன் பின்னால் அம்மன் கொலுவிருக்கும் உட்பிரகாரத்திலேயே சீவேலி நடைபெறும். உட்பிரகாரத்தின் சீவேலி முடிந்ததும் வெளி பிரகாரத்தில் தேவியைத் தலையில் சுமந்தவாறு ஒரு முறையும் நீண்ட பல்லக்கில் ஒரு முறையும் பின்னர் வெள்ளி தகடு வேய்ந்த சிறிய பல்லக்கில் ஒரு முறையும் தேவி சீவேலியாக 3 தடவை வலம் வருவாள். காலை இரவு ஆகிய இரு நேரங்களில் மிக பெரிய மரத்தால் ஆன ரதத்தில் அம்மனை அமர்த்தி பக்தர்கள் வெளி பிரகாரத்தில் ஊர்வலமாக அழைத்து வருவார்கள். சீவேலி சமயத்தில் நகாரா என்ற இரட்டை சிறிய முரசும் நமது ஊரில் உள்ள நாகஸ்வரம் வகையை சார்ந்த சற்றே பெரிய செனாய் என்ற இசைக்கருவியும் வாசிக்கப்படும். உடன் ஒத்து என்ற ஸ்ருதி வாத்தியக் கருவியும் இசைக்கப்படும்.

கோயிலில் பஞ்சமுக கணபதி பார்த்தேஸ்வரர் பிராணலிங்கேஸ்வரர் சந்திரமவுலீஸ்வரர் நஞ்சுண்டேஸ்வரர் துளசி கிருஷ்ணன் பெருமாள் அனுமன் சுப்ரமணியர் வீரபத்திரர் சன்னதியும் நாகக் கடவுள்களுக்கு உபசன்னதிகளும் உள்ளன. தீர்த்தம் அக்னி தீர்த்தம் காசிதீர்த்தம் சுக்ளதீர்த்தம் மதுதீர்த்தம் கோவிந்ததீர்த்தம் அகஸ்தியர்தீர்த்தம் அர்ச்சனைதீர்த்தம் குண்டுதீர்த்தம். இக்கோவிலின் கருவறை விமானம் முழுவதும் தங்க தகடுகளால் வேயப்பட்டதாகும். இக்கோயில் அம்பாளின் கொடிக் கம்பத்தை ஒட்டி விளக்குத்தூண் இருக்கிறது. ஒரே கல்லினால் ஆன அழகிய தூண் இது. இதில் ஆயிரம் விளக்குகள் ஏற்றலாம். அன்னையின் கருவறை எதிரில் பணிவுடன் அமர்ந்த நிலையில் அம்மனின் சிம்ம வாகனம் உள்ளது. கருவறையின் இருபுறமும் தியான மண்டபம் உள்ளது. பக்தர்கள் அங்கு அமர்ந்து தியானம் செய்யலாம். முன் வாயிலைக் கடந்து மீண்டும் வெளிப்பிரகாரம் சுற்றினால் ஆலயத்தில் தனிச் சன்னதியில் முருகப்பெருமான் மேற்குப் பார்த்து அருள் பாலிக்கிறார். முருகன் சன்னதிக்கு அடுத்திருப்பது சரஸ்வதி மண்டபம். இங்குதான் ஆதி சங்கரர் மூகாம்பிகையை நோக்கி மனமுருகி இங்கு அமர்ந்து சவுந்தர்ய லஹரியை எழுதி அரங்கேற்றினார். இந்த சரஸ்வதி மண்டபம் கலா மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. அன்னையின் சன்னதிக்கு நேர் பின்புறம் அன்று ஆதிசங்கரர் தியானம் செய்ய அமர்ந்த இடம் இன்றும் சங்கரர் பீடம் என்று போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. நவராத்திரி சமயத்தில் ஆதிசங்கரரின் சிலைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

கோயில் மேற்கு கோபுரவாசல் அருகில் வடமேற்கு மூலையில் கிணறு உள்ளது. அதற்கு முன் ஆஞ்சநேயர் சன்னதி. இந்த தனிச்சன்னிதி வாயு திசையில் அமைந்துள்ளது. அதனை அடுத்து உள்ளது விஷ்ணு சன்னதி. கேரள பக்தர்கள் இந்த விஷ்ணுவை குருவாயூரப்பன் என்றே வணங்குகின்றனர். வடகிழக்கு மூலையில் துளசி மாடம். அதனை அடுத்து அம்பாளின் பரிவார தேவதைக்கு எல்லாம் தளபதியான வீரபத்திரர் சன்னதி அமைந்துள்ளது. வீரபத்திரர் இந்த தலத்திற்கு ரட்சா அதிகாரி. அன்னைக்குச் செய்யப்படும் அனைத்து பூஜைகளும் இவருக்கும் உண்டு. இவரின் எதிரே ஆஞ்சநேயர் இருக்கிறார்.

ஆதிசங்கரர் அங்கிருந்த மேடையில் அமர்ந்து தியானம் செய்து மூகாம்பிகையை சரஸ்வதியாக பாவித்து வணங்கி கலா ரோகணம் பாடி அருள் பெற்றார். ஒரு முறை ஆதிசங்கரர் இங்கு தவம் புரிந்து எழ முயன்றபோது அவரால் முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்தார். அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மூகாம்பிமை அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம் புஷ்பாஞ்சலி ஆராதனை மட்டுமே நடக்கும். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும். இங்கு ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த கரம் இருக்கிறது. பொதுவாக கிரகண நேரத்தில் கோயில்கள் நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் தொடர்ந்து பூஜை நடக்கும். இங்கு பூஜை செய்வதற்கு பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப் படுவதில்லை.

மூகாம்பிகைக்கு வருடத்தில் நான்கு திருவிழாக்கள் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடத்தப்படுகின்றன. அவை ஆனி மாதத்தில் வரும் அன்னையின் ஜெயந்தி விழா. ஆடி மாதத்தில் வரும் அன்னை மகாலட்சுமியின் ஆராதனை விழா. புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழா. மாசி மாதத்தில் வரும் மகா தேர்த்திருவிழா ஆகும். சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகை சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி பக்தர்களின் தரிசனத்திற்காக வெளியே பவனி வருகிறாள். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. கிழக்கு கோபுர வாயிலை 1996 ஆம் ஆண்டு புனர் நிர்மானம் செய்து பழைய அமைப்பு மாறாமல் கருங்கற்களால் கட்டியுள்ளார்கள். தேவியின் வலக் கையில் உயர்த்திப் பிடித்திருக்கும் வீர வாள் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அளித்தது. அந்த வாள் ஒரு கிலோ தங்கத்தில் செய்யப்பட்டு வெள்ளியால் அமைக்கப்பட்ட உறையுடன் கூடியது. இக்கோயிலின் மகிமை பற்றி கந்த புராணத்தில் உள்ளது. அங்குள்ள சுயம்பு லிங்கத்தில் சக்கர வடிவத்தில் பரப்பிரம்ம சொரூபியான பராசக்தி சகல தேவதைகளுடன் எழுந்தருளியுள்ளதாக சிவபெருமான் முருகனுக்கு விளக்குவதாகவும் அதைக் கேட்ட முருகன் அவர்களை வழிபட அத்தலத்திற்கு வந்ததாகவும் கந்த புராணத்தில் உள்ளது.

லலிதாசன விநாயகர்

இந்தியாவின் ஹைதராபாத் அருகே உள்ள பெத்தா கோல்கொண்டா கிராமத்திற்கு அருகே 800 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கணபதி சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மூர்த்தி கல்யாணி சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. (கிபி 12 ஆம் நூற்றாண்டு). விநாயகரின் மூர்த்திக்கு இரண்டு கைகள் உள்ளன. ஒரு கையில் பாலும் மற்றோரு கையில் மோதகம் (இனிப்பு) உள்ளது. மூர்த்தி எளிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. விநாயகர் லலிதாசன தோரணையில் அமர்ந்திருக்கிறார்.

சக்தி பீடம் – முன்னுரை

சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமர்விடம் என்று பொருளாகும். தேவி பாகவதம் என்ற நூல் அன்னைக்கு 108 சக்தி பீடங்கள் உள்ளதாகவும் அதில் 64 சக்தி பீடங்கள் முக்கியமானவை என்று கூறுகிறது. ஆனால் தந்திர சூடாமணியில் 51 சக்தி பீடங்கள் என்று உள்ளது. இந்நூலைப் பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 51 சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்றும் 18 சக்தி பீடங்கள் மகா சக்தி பீடங்கள் என்றும் 4 சக்தி பீடங்கள் ஆதி சக்தி பீடங்கள் என்றும் அறியப்படுகின்றன. சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசிக்க முடியா விட்டாலும் ஆதி சக்தி பீடங்கள் நான்கையாவது தரிசிக்க வேண்டும் என்பது நியதி. 1. அஸ்ஸாம் கவுஹாத்தியிலுள்ள காமாக்யா கோவில் 2. கல்கத்தாவின் காளிகாட் காளி கோவில் 3. ஒடிசாவின் பெர்ஹாம்பூரிலுள்ள தாராதாரிணி சக்தி பீடக் கோவில் 4. ஒடிசாவின் பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்திலுள்ள விமலா தேவி சன்னதி ஆகிய நான்கும் ஆதி சக்தி பீடங்களாகும். எந்த சக்தி பீடத்திற்குச் சென்றாலும் அங்குள்ள பைரவரையும் வணங்க வேண்டும் என்பதும் ஒரு நியதியாகும். ஆதி சக்தியின் ரூபமான சதி தேவியின் (தாட்சாயிணியின்) உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்களே சக்தி பீடமாகும்.

பிரம்மாவின் புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து சிவபெருமானிடம் பிரஜாபதி பட்டத்துடன் ஈரேழு உலகங்களை ஆளும் வல்லமையையும் வரமாகப் பெற்றான். மேலும் உலகத்திற்கே தாயான அம்பிகையைப் புதல்வியாக அடையும் வரத்தையும் வேண்டிப் பெற்றான். தன்னுடைய வரத்தின் பயனால் எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையால் அகங்காரம் மேலிட தானே ஈஸ்வரன் என்று தட்சன் எண்ணத் துவங்கினான். தர்ம நெறிகளில் இருந்து முற்றிலும் விலகி செயல்படவும் துவங்கினான். வரமளித்த இறைவனிடமே குரோதம் கொண்டு சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு ஒரு யாகமும் தொடங்கினான். ஹரித்வாரில் அமைந்துள்ள கனகல் என்னும் தலத்தில் யாகம் தொடங்கப்பட்டது. தனது தந்தையான தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணிய தாட்சாயிணி யாக சாலையில் தோன்றி அறிவுரை கூறினாள். தட்சனோ தாட்சாயிணியை அவமதித்ததோடு ஈசனையும் நிந்தித்துப் பேசினான். சிவ நிந்தனை பொறுக்காத அன்னை அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயில் குதித்து யாகத்தை நிறுத்தி தன் உயிரை விட்டாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில் சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை சுமந்த படி ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் தன் ஆட்டத்தை நிறுத்தினார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின.

சனத்குமாரர்கள் எட்டு பேர் சதாசிவனை நோக்கித் தவம் செய்தனர். அவர்களுடைய தவத்தால் மகிழ்ந்த சிவன் ரிஷபாரூடராகத் தோன்றினார். ஆனாலும் ஆழ்ந்த தியானத்திலிருந்து சனத்குமாரர்கள் கண் விழித்துப் பார்க்கவில்லை. அவர்களை எழுப்ப சிவன் தன் கையிலுள்ள டமருகத்தை (உடுக்கை) வேகமாய் அடித்தார். உடுக்கையின் சத்தத்தில் சனத்குமாரர்கள் கண் விழித்துச் சிவனடி பணிந்தனர். இதனைச் சிவமகா புராணம் சொல்கிறது. அந்த உடுக்கையிலிருந்து டம்டம் என்று எழுந்த நாதமே 51 அட்சர எழுத்துக்களாயின. இவை 51 இடங்களில் எரி நட்சத்திரம் போல் தெறித்து விழுந்தன. இந்த 51 அட்சர எழுத்துக்கள் விழுந்த இடங்களிலேயே தேவியின் உடல் பகுதிகள் விழுந்தன. ஆகவே இவற்றிற்கு 51 அட்சர சக்தி பீடங்கள் என்று பெயர் வந்தது. இந்த அட்சர சக்தி பீடங்கள் பற்றிய விரிவான தகவல்களை மேரு தந்திரம் என்னும் நூல் கூறுகிறது. நித்யோத்சவம் வாமகேஸ்வர தந்த்ரம் போன்ற நூல்களும் சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகின்றன.

  1. தேவி பாகவதம் கந்த புராணம் பத்ம புராணம் ஆகிய நூல்களில் அம்பாளுக்கு 70 முதல் 108 வரை சக்தி பீடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது.
  2. வேதவியாசரின் தேவிபாகவதம் 108 சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது.
  3. காளிகா புராணம் நான்கு ஆதி சக்தி பீடங்கள் இருப்பதாகக் கூறுகிறது.
  4. ஆதி சங்கராச்சாரியாரின் அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரம் 18 மஹா சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது.
  5. தந்திர சூடாமணி என்ற நூல் 51 அட்சர சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது. 52 என்று கூறுபவர்களும் உண்டு.
  6. லலிதா ஸகஸ்ரநாம ஸ்தோத்திரத்திலும் பீடங்களும் அங்க தேவதைகளும் என்ற பகுதியில் சக்தி பீடங்களைப் பற்றிய குறிப்பு உள்ளது.
  7. மார்க்கண்டேய புராணமும் திருவிளையாடல் புராணமும் 64 சக்தி பீடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இந்த 64 பீடங்களும் தேவி பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

எத்தனை சக்தி பீடங்கள் உள்ளன என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளது போலவே எது சக்தி பீடம் என்பதிலும் பல்வேறு கருத்து வேறுபாடுகளும் சந்தேகங்களும் உள்ளன. உதாரணமாக தந்த்ர சூடாமணியில் இரண்டாவதாகக் கூறப்படும் சர்க்கரரா பீடம் கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவிலா அல்லது பாகிஸ்தானின் சிவஹர்கரையிலுள்ள கோவிலா என்ற சந்தேகம் உள்ளது. இரண்டில் ஒன்றை மட்டும் சக்தி பீடமாகக் கொள்ளாமல் இரண்டுமே இங்கு தரப்பட்டுள்ளது. சக்தி பீடம் என்பதற்கான பெரும்பான்மை ஆதாரம் கொண்ட கோவிலை முதலாவதாகவும் மிகக் குறைந்த ஆதாரங்களைக் கொண்ட கோவிலைக் கடைசியாகவும் வரிசைப்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதன்படி சர்க்கரரா பீடத்திற்கு கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவில் முதன்மையானதாகவும் சிவஹர்கரை இரண்டாம் பட்சமாகவும் தரப்பட்டுள்ளது. எந்த சந்தேகமும் இல்லாமல் இது சக்தி பீடம்தான் என்று உறுதியாகக் கூறப்படும் கோவில்கள் மிகச் சிலவே. அவற்றில் முதன்மையானது மற்றும் எந்த சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்கப்படும் தலம் அஸ்ஸாமின் காமாக்யா கோவிலாகும். இந்தக் குழப்பங்கள் மற்றும் சந்தேகங்களுக்கான மூன்று முக்கியக் காரணங்கள் 1. உள்ளூர் மக்கள் தங்கள் பகுதியிலுள்ள சக்தித் தலங்கள் மீது கொண்ட பக்தியும் ஈடுபாடும் 2. நாளடைவில் பெருகிய சக்தித் தலங்களும் கலாச்சார மாற்றங்களும் 3. புராணங்கள் மற்றும் தந்திர சூடாமணியில் உள்ள பழைய புராதனப் பெயர்களுக்கும் தற்போதுள்ள பெயர்களுக்கும் உள்ள மாறுதலும் வேறுபாடுகளும். மேலும் சில கோயில்கள் உப சக்தி பீடங்களாக கருதப்படுகிறது. உப பீடங்கள் என்பவை மேற்கண்ட எந்த வகைப்பாட்டிலும் வராத சக்தி பீடங்களாகும்.

51 சக்தி பீடங்கள்

  1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்) கர்நாடகா
  2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்) தமிழ்நாடு
  3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
  4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்) உத்திரபிரதேசம்.
  5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்) மத்தியபிரதேசம்.
  6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்) தமிழ்நாடு
  7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்) தமிழ்நாடு
  8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்) தமிழ்நாடு
  9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்) தமிழ்நாடு
  10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்) தமிழ்நாடு
  11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்) மத்தியபிரதேசம்
  12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்) தமிழ்நாடு
  13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்) காஷ்மீர்
  14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்) மிர்ஜாப்பூர்
  15. பிரம்மராம்பாள்-ஸ்ரீசைலம்-(சைல பீடம்) ஆந்திரா
  16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்) இமாசலபிரதேஷ்
  17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்) ஆந்திரா
  18. காமாக்யா-கவுஹாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
  19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
  20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்) தமிழ்நாடு
  21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்) கேரளா
  22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீர பீடம்) மகாராஷ்டிரம்
  23. ஸ்தாணுபிரியை-குருக்ஷேத்ரம்-(உபதேச பீடம்) ஹரியானா
  24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
  25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
  26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
  27. மாணிக்காம்பாள்-திராக்ஷராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
  28. அம்பாஜி-துவாரகை-பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
  29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்) தமிழ்நாடு
  30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
  31. லலிதா-ஈங்கோய் மலை குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
  32. காயத்ரி-அஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரி பீடம்) ராஜஸ்தான்
  33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
  34. விமலை, உலகநாயகி-பாபநாசம்-(விமலை பீடம்) தமிழ்நாடு
  35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்) தமிழ்நாடு
  36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்) தமிழ்நாடு
  37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்) தமிழ்நாடு
  38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷி பீடம்) தமிழ்நாடு
  39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்) தமிழ்நாடு
  40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாண பீடம்) இமாசல பிரதேசம்
  41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
  42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோண பீடம்) மகாராஷ்டிரம்
  43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
  44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
  45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
  46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
  47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
  48. மந்த்ரிணி-கயை-(திரிவேணி பீடம்) பீகார்
  49. பத்ரகர்ணி-கோகர்ணம்-(கர்ண பீடம்) கர்நாடகா
  50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்-(விரஜா பீடம்) உத்திரபிரதேசம்
  51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாக பீடம்) திபெத்

நந்தி லிங்கம்

ஈசனின் வாகனமான நந்தி பகவான் சிவலிங்க ஆவுடையாரின் மீதும் அவரின் மீது சிவலிங்கம் இருக்கும் அரிதான சிவலிங்க வடிவம்.

இடம்: மகாராஷ்டிரா மாநிலம் சட்டரா மாவட்டம் பட்டேஸ்வர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இங்கு சிவனுக்காக 7 குகை கோவில்கள் உள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில்கள் சற்று சிதிலம் அடைந்திருந்தாலும் கோவிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் சிறப்பாகவே உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 634

கேள்வி: ஐயனே இயலாமையை என்னும் போது கோபமும் வருத்தமும் வருகிறது. இதிலிருந்து தப்பிக்க என்ன வழி?

எண்ணங்களின் தொகுப்பான மனம் பலவீனமாக இருக்கின்றது என்பதின் பொருள் இது. அதீத சினம். அதீத சோர்வு. அதீத வருத்தம். அதீதமான எந்த ஒரு உணர்வு நிலையும் மனதின் பலவீனத்தை காட்டுகிறது. உடல் பலவீனமானால் நோய் வருவது போல எண்ணங்கள் எண்ணங்களின் தொகுப்பான மனம் பலவீனமானால் இவ்வாறு உணர்வுகளின் விளிம்பில் மனிதன் நின்று விடுகிறான். ஆனால் இவற்றால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. அதீத உணர்வு நிலையால் மனிதனின் தேக நலம் பாதிக்கப்படும். அவரின் செயல் திறன் குன்றும். எனவே அதீத சோகமோ துன்பமோ அல்லது சோர்வோ இவைகள் ஒரு மனிதரிடம் இருக்கிறது என்றால் என்ன பொருள். இதுபோல் மனம் மிக மிக பலவீனமாக இருக்கிறது என்பது பொருள்.

மனிதனின் எண்ணத்திலே இவ்வாறெல்லாம் நடக்க வேண்டும். இவ்வாரெல்லாம் நான் செயலை துவங்குகிறேன். அது இவ்வாறெல்லாம் சென்று முடிய வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பை வைத்திருக்கிறான். ஆனால் நடைமுறையில் அந்த எதிர்பார்ப்பு நடக்காமல் தடை மேல் தடை வந்துவிட்டால் போதும் அப்படியே அமர்ந்து விடுகிறான். எனவே மனிதன் தன் மனதை உறுதியாக பலமாக வைத்திருக்க வேண்டும். பலமான மனம்தான் மனிதனுக்கு நல்லதொரு ஆரோக்கியத்தை தரும். தேகம் உற்சாகமாக இருக்க வேண்டும். உள்ளமும் உற்சாகமாக இருக்க வேண்டும். எனவே இதற்கு எளிய வழி எளிய முறையில் முதலில் பிரார்த்தனைகளை செய்து விட்டு மனதை சுய ஆய்வு செய்து எப்படி இல்லத்திலே வேண்டாத பொருள்கள் இருந்தால் இல்லம் தேவையற்ற பொருட்களால் நிரம்பி இருந்தால் அந்த இல்லம் எப்படி இருக்குமோ விரும்பத்தகாது இல்லமாக இருப்பது போல உள்ளத்தில் தேவையற்ற எண்ணங்கள் இருந்தால் அது விரும்பத்தகாத உள்ளமாகத்தான் இருக்கும் பலவீனமாகி.

எனவே எந்தெந்த பொருட்கள் தேவையில்லை என்று மனிதன் இல்லத்தை சுத்தம் செய்யும் போது முடிவெடுக்கலாம். அதேபோல உள்ளத்தையும் அன்றாடம் ஆய்வு செய்து எந்தெந்த எண்ணங்கள் தேவையில்லையோ அந்த எண்ணங்களை எண்ணுவதை நிறுத்தி தொடர்ந்து நல்ல எண்ணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டே வந்தால் மனம் உறுதி அடையும். மனம் உறுதி அடைந்து விட்டால் எந்த விதமான நிகழ்வு நடந்தாலும் மனதிற்கு அது குறித்து அச்சமும் குழப்பமோ கவலையோ இருக்காது. அந்த நிலையிலே தொடர்ந்து ஒரு மனிதன் இருந்தால் தொடர்ந்து தேகத்திற்கும் பயிற்சிகளை செய்து கொண்டே வந்தால் கட்டாயம் அதீத மிகு உணர்வு நிலைக்கு ஆளாகாமல் இருக்கலாம். அப்படி அதீத உணர்வு நிலை வரவில்லை என்றால் மனம் சோர்ந்து போகாது. மனம் சோரவில்லே என்றால் உடலும் நன்றாக இருக்கும்.

பார்வதிதேவி

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அழகைக் கொண்ட இந்த சோழர் காலத்தைச் சேர்ந்த பார்வதிதேவியின் வெண்கலச் சிலை நியூயார்க்கில் உள்ள தி மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆப் ஆர்ட் என்ற மியூசியத்தில் தற்போது உள்ளது.