சக்தி பீடம் 11. மகாகாளி-உஜ்ஜையினி

சக்தி பீடத்தில் 11 ஆவது கோயில் மகாகாளி உஜ்ஜையினி கோயிலாகும். இக்கோயில் இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் ருத்ராணி சக்தி பீடமாகும். தேவியின் உதடு விழுந்த இடமாக இது கருதப்படுகிறது. சிவபெருமான் திரிபுரங்களை எரித்து அசுரர்களை வெற்றி கொண்ட இடம் என்பதால் உஜ்ஜையினி (வெற்றித்தலம் என்று பொருள்) என்று பெயர் பெற்றது. மேலும் சமண மதத்தை சார்ந்த சுதன்வா என்ற மன்னன் இந்த நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். ஜைன மதம் அவ்வூரில் எங்கும் வியாபித்திருப்பதைக் கண்டு உஜ்+ஜைன் – உச்சத்தில் இருக்கும் ஜைனம் என்று பொருள் பட உஜ்ஜைய்ன் என்று பெயர் சூட்டினான் எனவும் வரலாறு உள்ளது. புராண பெயர்கள் அவந்திகா அவந்தி அவந்திபூர் அவந்திபுரம் என பல கால கட்டத்தில் பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் மகாகாளி மங்கள சண்டி என்ற பெயரில் அன்னை எழுந்தருளி இருக்கிறாள். சுடரும் ஜ்வாலையை மகுடமாய் தாங்கி பூத வேதாள கனங்களின் அதிகாரியாக உடுக்கை நாகம் கபாலம் வீரவாள் சூலம் ஏந்தி வீராசனமாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள்வாள். தலமரம் ஆலமரம். இதற்கு சித்திவடம் என்று பெயர். இம்மரம் பல நூறு வருடங்களாகச் சிறிய அளவிலேயே இருந்து வருகிறது. தீர்த்தம் சிப்ராநதித் தீர்த்தம் சூரிய குண்டம் நித்திய புஷ்கரணி கோடிதீர்த்தம். இந்த சிப்ரா நதிக்கரையில் பார்வதி தேவியால் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஆலமரத்தின் கீழ்தான் குழந்தையாக இருந்த முருகப் பெருமான் வளர்ந்தார். இந்த நதிக்கரையின் அருகில்தான் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார். புண்ணிய தீர்த்தங்களில் மிகவும் முக்கியமானது இந்த தீர்த்தம் என்று அக்கினி புராணம் குறிக்கிறது.

கருட புராணத்தில் முக்தி தலங்களாக போற்றப்படுபவை ஏழு. அவை துவாரகா அயோத்யா வாரணாசி ஹரித்துவார் மதுரா காஞ்சி மற்றும் அத்தலமான உஜ்ஜையினி கோயிலும் ஒன்றாகும். 12 ஜோதிர் லிங்கத்தலங்களுள் இத்தலமும் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சைவ வைணவ புத்த மற்றும் சமண மதத்தினருக்கு மிக முக்கியமான யாத்திரை தலம். இத்தலத்தில் விநாயகர் ஓங்காரேசுவரர் தாரகேசுவரர் பார்வதி தேவி சுப்ரமணியர் நந்தி ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். அனைத்து கோயில்களிலும் ஒரு தடவை பூஜித்த பொருள்களை மீண்டும் பயன்படுத்தி பூஜிப்பதில்லை. ஆனால் இந்த கோயிலில் பூஜித்த பிரசாதத்தையும் வில்வம் போன்ற தளிர்களையும் மீண்டும் உபயோகிப்பது வழக்கமாக இருக்கிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தை கடைந்த பொழுது அசுரர்களுக்கு பங்கு தராமல் தேவகுரு கலசத்தை தூக்கிக் கொண்டு ஓடும் பொழுது அமிர்தம் சிந்திய இடங்களுள் இத்தலமும் ஒன்று. துவாபர யுகத்தில் சாந்தீப முனிவரிடம் பகவான் கிருஷ்ணர் பலராமர் சுதாமர் குசேலன் ஆகியோர் இத்தலம் இருந்த இடத்தில்தான் கல்வி பயின்றார்கள். மகாபாரத காலத்தில் இந்நாட்டை ஆண்ட இளவரசர்கள் கௌரவர்கள் பக்கம் நின்று மகாபாரதப் போரில் யுத்தம் புரிந்தனர். இராமாயண காலத்தில் இராமர் வந்து நீராடியுள்ளார். அந்த இடத்தில் இப்போது ராமர் காட் என்னும் குளியல் கட்டம் உள்ளது. இங்கே மீன்களை கடவுளாக வழிபடுகின்றனர்.

காளி கோயில்களில் ஆத்யகாளி மகாகாளி மகாகாளி தசமுகி பத்ரகாளி மங்கலகாளி உச்சினி மாகாளி உச்சிமாகாளி என்று பல பெயர்களில் காளிதேவி அழைக்கப்படுகிறாள். காளிகளில் மிகவும் புராதனமாக விளங்குபவள் உஜ்ஜைனி நகரில் இருக்கும் உஜ்ஜைனி மாகாளி ஆவாள். ருத்ரம் என்றால் ஆவேசம் என்று பொருள். உக்கிர சக்தியைக் கொண்டு ஆவேசமாக இருப்பாள் இந்த அம்பிகை. அம்பிகையின் ஆவேசத்தை மாற்றி அம்பிகையின் அருகில் ஆதிசங்கரர் யந்திரத்தைப் பிரதிஷ்டை செய்து அம்பாளை சாந்த சொரூபியாக மாற்றினார். அன்னை அசுரர்களை அழிக்கும் ஹரசித்தி தேவியாகவும் மகாகாளியாகவும் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அசுர குணங்களை அழித்து மங்களம் அருளும் மங்கள சண்டியாகவும் பத்ர என்றாலே சாந்தம் அமைதி சாந்தத்தையும் அமைதியையும் கொடுக்கும் பத்ர காளியாகவும் விளங்குகிறாள். மகாகாளியின் அருளைப் பெற்றவர்களை எவராலும் வெல்ல முடியாது. கவிஞர்கள் புலவர்கள் உபாசகர்கள் சக்கரவர்த்திகள் மந்திரவாதிகள் போன்றவர்கள் விரும்பி வழிபட்ட தெய்வம் மகாகாளி. அவர்களுக்கு அவள் கவித்துவம் புலமை ஏகச்சக்ராதிபத்தியம் மந்திர ஆற்றல் போன்றவற்றை அளித்திருக்கிறாள்.

கோயில் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் ஓங்காரேஸ்வரரும் இரண்டாம் அடுக்கில் தாரகாஸ்வரரும் அமையப் பெற்றுள்ளனர். மூன்றாம் அடுக்கு பூமிக்கு கீழே அமைந்துள்ளது. மூலவர் சிவபெருமான் மகா காளேஷ்வர் பெரிய அளவு லிங்க ரூபமாக காட்சியளிக்கிறார். முகலாயரின் படையெடுப்பின் போது அல்டுமிஷ் என்பவன் இக்கோயிலை இடித்து விட்டு அங்கிருந்த சிவலிங்கத்தை எடுத்து சென்று விட்டான். அதன் பிறகு ராமச்சந்திரன் என்பவர் புதிய லிங்கத்தை ஸ்தாபிதம் செய்து புதிய கோவிலை உருவாக்கினார். பின்னர் பல மன்னர்களின் கைங்கரியத்தினாலும் பொது மக்களின் திருப்பணிகளாலும் இன்று இத்திருக்கோயில் ஐந்து அடுக்குடன் மிகச்சிறப்புடன் விளங்குகிறது. ஒரு காலத்தில் நள்ளிரவு இரண்டு மணியளவில் சுடுகாட்டு சாம்பலை கொண்டு வந்து மகாகாளேஷ்வரருக்கு பஸ்மார்த்தி என்று சொல்லப்படும் சாம்பல் அபிஷேகம் செய்து வந்தார்கள். இப்பொழுது அந்த அளவிற்கு இல்லாமல் சம்பிரதாயத்திற்கு சிறிதளவு சாம்பலால் அபிஷேகம் செய்கிறார்கள்.

இந்தத் தலத்தில் உள்ள காளிதேவி புராணப் பெருமையும் புகழும் பெற்றவள். காளிதாசனுக்கு அன்னை அருள்புரிந்த வரலாறு ஒரு சான்று. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூடன் ஒருவன் அமைச்சனின் சூழ்ச்சியால் மன்னன் மகளை திருமணம் முடிக்க நேர்கிறது. தன் கணவன் சகல கலைகளிலும் வல்லமை பெற்றவனாக இருப்பான் என்று எண்ணி அகம் மகிழ்ந்தாள் அரச குமாரி. ஆனால் சில நாட்களில் அவனுடைய உண்மையான ரூபம் வெளிப்பட்டு தனக்கு கணவனாக வந்தவன் மூடன் என்று அரச குமாரிக்குத் தெரிகிறது. தன் கணவன் படிப்பறிவு இல்லாதவன் என்பதை உணர்ந்த ராஜகுமாரி பெரும் துயரில் ஆழ்ந்தாள். நாட்டை ஆளும் தனக்கு நாயகனாக வந்தவன் எழுத்தறிவில்லாதவனாக இருந்தால் எல்லோரும் ஏளனம் செய்வார்களே என்று வேதனை அடைந்தாள். இதற்கு ஒரு வழி தேடினாள்.

மகாகாளி அன்னை தனக்கு விருப்ப தெய்வம் என்றும் மிகவும் சக்தி வாய்ந்தவள் என்றும் அவள் ஊர் எல்லையில் இருக்கிறாள் அவளிடம் சென்று அம்பிகையின் அருள் பெற்று வாருங்கள் எனக் கூறி அனுப்பினாள். அரசியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மகாகாளி அன்னையை நோக்கி கடும் தவத்தை மேற்கொண்டான் அவன். களங்கமில்லாத அவனுடைய வேண்டுதலைக் ஏற்ற காளி அவன் முன்னே தோன்றி அவன் நாவில் தன் சூலத்தினால் எழுதி ஈடு இணையற்ற கவித்துவத்தை அளித்தாள். அவன் கேட்டதற்கிணங்க தன் வாய் தாம்புலத்தை வாயில் உமிழ்ந்து அவனை உலக மகாகவியாக்கினாள். சரஸ்வதி தேவியும் மகிழ்ந்து அவனுக்கு அளப்பரிய ஞானத்தை வழங்கினாள். மாகாளி அவனுக்கு சியாமளாவாகவும் ராஜராஜேஸ்வரியாகவும் காட்சியளித்து அருள்புரிந்தாள். காளிதாசன் எழுதிய வடமொழி நூலான சியாமளா தண்டகத்தில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் மாகாளியின் தலைமுதல் பாதம் வரையிலான கேசாதி பாத வர்ணனை இடம் பெற்றுள்ளது. மாகாளியின் அருளால் மூடனாக இருந்தவன் பின்னாளில் கவிச் சக்கரவர்த்தியாக மாறி காளிதாசன் என்கிற அழியாப் புகழினைப் பெற்றான்.

முன்பொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய யுத்தம் நடந்தது. இரண்டு பக்கமும் பெரும் நாசம். நிறைய பேர் இறந்தனர். தேவர்கள் விலிமை இழந்து நின்றார்கள். தேவர்கள் ஏராளமானோர் இறந்த போது கவலை கொண்ட இந்திரன் விஷ்ணுவை அணுகி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டார். அதற்கு விஷ்ணு பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அதனை சாப்பிட்டால் இழந்த வலிமை அனைத்தையும் பெறலாம். ஆனால் அந்த பாற்கடலை கடையக்கூட தற்போது தேவர்களுக்கு வலிமை இல்லை. ஆகவே அசுரர்களோடு சேர்ந்து பாற்கடலை கடையுங்கள் என்று அறிவுறுத்தினார். இந்த தகவல் அசுரர்களுக்கும் எட்டியது. தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள். அசுரர்கள் ஒப்புக் கொள்ளவே இரண்டு பக்கத்தாரும் பாற்கடலைக் கடைய சம்மதித்தார்கள். மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பை கயிறாக்கி பாற்கடலை கடைய ஆரம்பித்தார்கள். அப்போது கடலிலிருந்து பல வகையான பொருட்கள் வெளிவந்தன. காமதேனு வச்சிராயுதம் கற்பக விருட்சம் என்று பல பொருட்கள் கிடைத்தது. அப்போது ஆலகால விஷம் வந்தது. அவ்விஷம் மூவுலகையும் அழிக்கும் தன்மை கொண்டது. ஆகவே விஷத்தைப் பார்த்து எல்லோரும் பயந்தார்கள். அது நிலத்தில் விழக்கூடாது என்று தேவர்கள் பயந்தனர். அப்போது சிவன் உலக நன்மைக்காக அந்த விஷத்தைக் கையிலே எடுத்து வாயிலே போட்டு விழுங்கி விட்டார். அதைக் கண்ட பார்வதி சிவனைத் தடுத்தாள். சிவன் பார்வதியின் செய்கையைப் பொருட்படுத்தவில்லை. பார்வதியோ கோபப்பட்டு சிவனின் உச்சியில் அடித்தாள். உடனே சிவன் தலையிலிருந்து மாகாளி பிறந்தாள்.

சிவனின் உச்சியில் இருந்து பிறந்ததால் இவளை உச்சினி மாகாளி என அழைத்தனர். பார்வதி அவளுக்கு வாந்திபேதி பெரியம்மை சின்னம்மை வலிப்பு ஆகிய வியாதிகளை போக்கும் சக்தியைக் கொடுத்தாள். அவளுக்கு நிறைய வரமும் கொடுத்தாள். உன்னை வணங்குபவர்களுக்கு வெப்பத்தினால் வரும் வெப்ப நோய்கள் வராது. உன்னை நினைத்தால் நோய் குணமாகும் என வரம் கொடுத்தாள். உச்சினிக்குத் துணையாக பச்சைவேதாளம் கறுப்பன் மோகினி ஆகியோரையும் படைத்தாள். உச்சினிமாகாளி பார்வதியிடம் வேறு சில வரங்களும் வாங்கினாள். பின் கயிலையை விட்டுப் புறப்பட்டு விக்கிரமாதித்தனின் நாட்டுக்கு வந்தாள். அங்குள்ள ஒரு பெரிய மலையின் உச்சியில் தங்கினாள்.

இங்கு சிவபெருமான் மகாகாளிக்கு 32 வேதாந்த ரகசியங்களை கதைகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அதனை அர்ச்சகர் ஒருவர் மறைவாக இருந்து அதனை கேட்டார். அதனால் அவருக்கு சிவபெருமான் அங்கிருந்த முருங்கை மரத்தில் வேதாளமாகத் தொங்கும்படி சாபம் கொடுத்தார். பின் சாப விமோசனமாக விக்கிரமாதித்தன் என்ற மன்னன் இங்கு வருவான். அவனால் சாபம் நீங்கும் எனவும் கூறி அருளினார்.

விக்ரமாதித்யன் ஆண்ட இந்த உஜ்ஜயினி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த போபால் இந்தோர் அருகில் உள்ள அழகான சிறிய ஊர். உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தனுக்கு பட்டி என்ற மந்திரி. இருவரும் இணைபிரியாத நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் அந்த மலைக்கு விக்கிரமாதித்தனும் தனது நண்பனும் மந்திரியுமான பட்டியும் வேட்டையாட வந்தார்கள். அவர்கள் அங்கு விலங்குகளை வேட்டையாடினர். விக்கிரமாதித்தன் களைத்துப் போனான். ஒரு மரத்தடியில் அமர்ந்தான். பட்டியிடம் தாகமாயிருக்கிறது தண்ணீர் வேண்டும் எப்படியாவது கொண்டு வா என்றான். பட்டி காட்டுக்குள் சென்றான் பல இடங்களில் அலைந்தான். கடைசியில் ஒரு சுனையைக் கண்டான். பட்டி சுனையில் தண்ணீர் எடுத்த போது அந்தப் பகுதியில் தெய்வீக மணம் கமழுவதைக் கண்டான். ஆனால் அவனுக்கு எதுவும் தெரியவில்லை. அந்தச் சுனையின் கரையில் உச்சினிமாகாளி வீற்றிருந்தது அவனுக்குத் தெரியவில்லை. சுனையிலிருந்து எடுத்து வந்த தண்ணீரைக் விக்கிரமாதித்தனிடம் கொடுத்தான். அந்த நீரைக் குடித்ததும் விக்கிரமாதித்தன் உடம்பு புத்துணர்ச்சி அடைந்தது. அப்போது உலகத்தையே மறந்து தூங்கினான். தூக்கத்தில் ஒரு கனவு கண்டான்.

உச்சினிமாகாளி கனவில் வந்தாள். அந்தச் சுனையின் அருகே தான் இருப்பதாகவும் தனக்கு இங்கு ஒரு கோவில் கட்டு என்றும் அருளினாள். விக்ரமாதித்ய மன்னன் விழித்தான். தான் கண்ட அற்புதக் கனவைப் பற்றி பட்டியிடம் கூறினான். பட்டி அரசே அந்தச் சுனையில்தான் தெய்வீக மணம் கமழுகிறது. அங்கேயே கோவில் கட்டுவோம் என்றான். மன்னனின் ஆசைப்படியே அந்த இடத்தில் பெரிய கோவிலைக் கட்டி உச்சினிமாகாளியை அங்கு பிரதிஷ்டை செய்தான் பட்டி. கோவிலுக்கு ஏராளமான பொருட்களைக் கொடுத்தான் விக்ரமாதித்யன். தங்கக் கட்டிகளையும் ஆபரணங்களையும் அளித்தான். அவையெல்லாம் அக்கோவிலிலேயே பல இடங்களில் புதைத்து பாதுகாத்து வைக்கப்பட்டன. தனது விருப்ப தெய்வமாக உஜ்ஜயினி மகாகாளியை வழிபட்டு வந்தான். அவனுக்கு போரில் வெற்றி பெற தேவையான அனைத்தையும் உஜ்ஜயினி மகாகாளி அவனுக்கு அருள் புரிந்தாள்.

விக்கிரமாதித்தனுக்குப் பல ஆற்றல்களைக் கொடுத்தவள் காளி. காளிதேவியின் அருளை தனது குருவின் மூலம் கேட்டு அறிந்த விக்கிரமாதித்தன் சர்வ வல்லமையும் பெற நினைத்து தன்னையே பலி கொடுக்க தீர்மானித்தான். அவன் தலை ஈட்டி முனையில் படும்போது மாகாளி தோன்றினாள். விக்கிரமாதித்தனிடம் இங்கிருந்து 2 கல் தொலைவில் ஒரு சிவாலயம் உள்ளது. அந்த சிவன் கோயிலில் உள்ள முருங்கை மரத்தில் ஒரு வேதாளம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை நீ கீழே இறக்கினால் அது உனக்கு 32 கதைகளைச் சொல்லி கேள்வி கேட்கும். அந்த கேள்விக்கு பதில் சொல்லி அதை வென்று அடிமைப்படுத்தினால் உனக்கு எல்லா உதவிகளையும் செய்யும். அதன்படி நீ நடந்தால் உனக்கு உன்னத பதவி கிடைக்கும் எனக் கூறி அருளினாள். அதன்படி விக்கிரமாதித்தனும் காட்டில் வாழ்ந்த ஆறு மாத காலத்தை சரியாக பயன்படுத்தி அந்த வேதாளத்தின் கதைகளை கேட்டு பதிலை சொல்லி அதனை வென்று பல உதவிகளைப் பெற்று நாட்டை வளப்படுத்தினான். இவ்வாறே வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு கதை சொன்ன வரலாறு நடந்தது. சிவனருளால் காளியின் வழி காட்டலில் அர்ச்சகருக்கு விக்கிரமாதித்தன் மூலமாக சாப விமோசனம் கிடைத்தது.

ஒருமுறை தேவலோகத்தில் நாட்டியத்தில் சிறந்தவள் ரம்பையா ஊர்வசியா என்ற சர்ச்சை எழுந்தது. யாராலும் தீர்ப்பை சொல்ல முடியவில்லை. நாரதரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் சிறந்து விளங்கும் விக்கிரமாதித்தன் தேவலோகம் அழைத்து வரப்படுகிறான். மகாகாளியின் அருளால் சரியான தீர்ப்பைச் சொன்ன விக்கிரமாதித்தனுக்கு பல பரிசுப் பொருட்களோடு முப்பத்திரண்டு பதுமைகள் உள்ள சிம்மாசனம் ஒன்றையும் தந்து  ஏறிய சிம்மாசனம் இறங்காமல் ஆயிரம் ஆண்டுகள் வாழ்க என்று வரம் தந்து அனுப்பி வைக்கிறான். பூலோகம் வந்து நடந்தவற்றை பட்டிக்கும் மற்றவர்களுக்கும் சொல்கிறான். இதைக் கேட்ட பட்டி நீ 1000 ஆண்டுகள் அரசனாக வாழ வரம் வாங்கிவிட்டாய். விக்கிரமாதித்தனுடன் 1000 ஆண்டுகள் வழவேண்டும் என்று ஆசைப்பட்ட பட்டி மாகாகாளியை சரணடைந்து தனது பக்தியினால் 2000 ஆண்டுகள் வாழும் வரம் வாங்கினான். இதனால் மந்திரி பட்டிக்கு முன்பே விக்கிரமாதித்தன் இறந்து போகும்படி வரங்கள் அமைந்தது. இதனால் இருவரும் கவலை அடைந்தார்கள். இருவரும் தீவிர யோசனைக்குப் பின் மந்திரி பட்டி ஒரு யோசனை கூறினார். ஆறு மாதம் சிம்மாசனத்தில் அமர்ந்து நாட்டை ஆள்வது. பின்னர் சிம்மாசனத்தை விட்டு இறங்கி ஆறு மாதம் காட்டிற்குள் சென்று வாழ்வது என்ற யோசனை சொன்னான். இதனால் வரத்தின்படி 1000 வருடங்கள் அரசனாக வாழ்வான். 1000 வருடங்கள் காட்டில் வாழ்வான். ஆக மொத்தம் இரண்டாயிரம் வருடங்கள் விக்கிரமாதித்தனும் வாழ்வான்.

விக்கிரமாதித்தன் இந்த யோசனையின் படி காடாறு மாதம் நாடாறு மாதம் என்ற முறைப்படி வாழ்ந்து வந்தான். அப்போது காட்டிற்கு செல்லும் போதெல்லலாம் மாகாகாளியும் அவனுடன் செல்வாள். விக்கிரமாதித்தன் வாழ்ந்து வந்த இடம் மற்றும் அவன் தங்கிய இடத்திலெல்லாம் மாகாளியும் தங்கியபடியால் அங்கெல்லாம் மகாகாளியின் கோயில்கள் பிற்காலத்தில் கட்டப்பட்டது. இப்படித்தான் இந்தியா இலங்கையில் மகாகாளிக்கு பல கோயில்கள் வந்தது. இவளைத்தான் தமிழகத்தில் உச்சினி மாகாளி உச்சிமாகாளி என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

விக்கிரமாதித்தன் தனது இறுதிக் காலம் முடிந்த பிறகு உஜ்ஜயினி மகாகாளி அவளுக்கு பிடித்த இடத்தில் சென்று இருக்க வேண்டும் என்று எண்ணினான். எனவே முறையாக பிரசன்னம் பார்த்தான். அதன் வழிகாட்டுதலின்படி வேதவிற்பனர்கள் பூஜகர்கள் பூஜைகள் செய்து மூலப்பொருட்கள் வைத்து பச்சை கலசத்தை உருவாக்கி அம்மனை ஆவாகனம் செய்து அருகில் இருந்த கடலில் விட்டனர்.

சமுத்திரத்தில் விடப்பட்ட கலசமானது பல இடங்களை சுற்றி இறுதியாக ராமநாதபுரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் ராமேஸ்வரத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள ஆற்றாங்கரை என்னும் பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு ஆலயம் எழுப்பி வழிபட்டு வந்தனர். இதை அறிந்த சேதுபதி சமஸ்தான சிப்பாய்கள் சமஸ்தானத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு சென்ற சேதுபதி மன்னர் அந்த கலசத்தை மீட்டு ராமநாதசுவாமி திருக்கோவிலில் வைக்குமாறு ஆணையிட்டார். ராமநாதசுவாமி திருக்கோவில் வைத்த பிறகு கோவிலுக்குள் அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெற தொடங்கியது. மேளதாளங்கள் ஓசை கேட்பது சலங்கை கட்டி ஆடுவது போல் ஓசைகளும் கேட்பது போன்று தொடர்ந்து நடைபெற தொடங்கியது. கோவிலில் பணிபுரிந்தவர்கள் மன்னரிடம் நடப்பதைப் பற்றி கூறி கலசம்‌ வந்ததில் இருந்து இப்படி நடைபெறுவதாக தெரிவித்தனர். உடனடியாக மன்னர் கோவில் வேதவிற்பனர்கள் ராஜகுருமார்களை வைத்து பூஜை செய்து அந்த கலசத்தை பற்றிய பிரசனம் பார்த்தான். பெரும் தேசத்தினை ஆண்ட விக்ரமாதித்தன் மன்னன் வழிபட்ட தெய்வமான உஜ்ஜயினி மகாகாளி என்று தெரிய வந்தது.

இந்த உக்கிரமான மகாகாளியை சாந்தப்படுத்தி அமைதி வாய்ந்த அம்மனாக இருக்க என்ன செய்யலாம் என ராஜகுருமார்களிடம் கேட்டார்கள். அதற்கு ராஜகுருமார்கள் ராமநாதர் சன்னதிக்கு எதிரே ஆலயத்தினனை உருவாக்கி அங்கே மகாகாளியை பிரதிஷ்டை செய்தால் சாந்தமாக இருப்பாள் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமிக்கு எதிரே அக்னி தீர்த்தம் கடற்கரைக்கு பின் இருந்த பிள்ளையார் கோவில் அருகில் மகாகாளிக்கு கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர். இங்கு இருந்து ஒரே நேரத்தில் உஜ்ஜயினி மாகாகளியையும் ராமநாத சுவாமியையும் வழிபட முடியும். ராமநாதசுவாமி மற்றும் உச்சயினி மகாகாளி கருவறையும் பூமியில் இருந்து ஒரே நேர்கோட்டில் சரிசமமாக அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதசுவாமி சன்னதியின் எதிரே உள்ள நந்தி சிலையானது சற்று கழுத்து பகுதி மட்டும் வலதுபக்கமாக வளைந்து காணப்படும் அது ஏனென்றால் உச்சியினை காளியம்மன் ராமநாதசுவாமியை பார்க்கும் படியும் இருந்தால் சாந்தமாக இருக்கும் என்பதால் அவ்வாறு இருக்கும். மேலும் நான்கு திசைகளிலும் ராமநாதசுவாமி கோவிலை காக்கும் தெய்வங்கலாக கிழக்கு பகுதியில் உஜ்ஜயினி மாகாளி அம்மனும் தெற்குப் பகுதியில் நம்பு நாயகி அம்மனும் மேற்கில் துர்க்கை அம்மனும் வடக்கு பத்திரகாளி அம்மனும் உள்ளனர்.

விக்ரமாதித்யன் காலத்திற்கு பிறகு பூஜைகள் சரியாக இல்லாமல் உச்சினி மாகாளி கோவில் பாழடைந்து சிதைந்து கிடந்தது. அங்கு பூசை செய்ய ஆளில்லை. அப்போது ஒருநாள் அந்தக் கோவிலுக்கு அயோத்திப் பட்டிணத்திலிருந்து நம்பியான் என்ற பிராமணன் வந்தார். அவர் அயோத்திக் கோவிலில் பூசை செய்து வந்தவர். அயோத்தியில் பஞ்சம் ஏற்பட்டதால் அங்கிருந்து குடிபெயர விரும்பினார். அப்போது அவர் கனவில் உச்சினிமாகாளி வந்தாள். என் கோவிலுக்கு வா என அழைத்தாள். அதனால் அவரும் இங்கு வந்தார். உச்சினி கோவிலின் தர்மகர்த்தாக்கள் அயோத்தி பிராமணனை அக்கோவிலின் பூசாரியாக நியமித்தனர். கோவிலையும் சரி செய்தார்கள். அவரும் மூன்று வேளைப் பூஜையைப் பக்தியோடு செய்து வந்தார்.

நம்பியானுக்கு ஏழு பெண் மக்கள் இருந்தனர். ஏழு பேருமே திருமணத்திற்குரிய வயதை எட்டியிருந்தனர். அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்க நம்பியானுக்கு வசதியில்லை. அவருடைய ஏழ்மை அவரை வதைத்தது. அவர் தினமும் பூஜையின் போது உச்சினி தேவியிடம் அம்மா என் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய உதவி செய் என உருகி வேண்டினார். ஒருநாள் காளி அவர் கனவில் தோன்றி கோவிலின் ஒரு இடத்தில் தங்கக் கட்டி இருக்கிறது எடுத்துக்கொள். உன் புதல்விகளுக்குத் திருமணம் செய்து வை என்றாள். நம்பியான் கனவில் கண்ட இடத்திற்குச் சென்றார். அந்த இடத்தில் மண்ணைத் தோண்டினார். தங்கக் கட்டி கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு பக்கத்து நகரத்துக்குச் சென்றார். தங்கத்தை விற்று பணத்தை வீட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும். பின் மகளுக்கு திருமணம் நடத்த வேண்டும் என்பது நம்பியானின் ஆசை. ஆனால் அவருக்கு அவ்வளவு பொன்னை எங்கு எப்படி விற்பதென்று தெரியவில்லை. ஆகவே அவர் அந்த நகரத்து வீதியில் தங்கக் கட்டியை விற்பதற்கு அலைந்தார். அவ்வளவு பெரிய கட்டியை விலை கொடுத்து வாங்க அங்கே யாருமில்லை. அப்போது அந்த வீதி வழியாக அதிகாரி ஒருவன் குதிரையில் வந்தான். அவன் பிராமணனைப் பார்த்து உன் பையைக் காட்டு என்று நம்பியானைச் சோதனை செய்தான். பிராமணனின் கையில் இருந்த பையில் நிறைய தங்கக் கட்டிகள் இருப்பதைப் பார்த்தான். அவன் திருடனோ என்ற ஐயம் அதிகாரிக்கு ஏற்பட்டது. அதிகாரி பிராமணனைத் தன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான். பிராமணனை அடித்துத் துன்புறுத்தி தங்கம் அவனுக்கு வந்த வரலாற்றைக் கேட்டான். நம்பியான் நடந்ததை அப்படியே கூறினார்.

நம்பியான் கூறியதை சோதனை செய்ய அவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே தோண்டத் தோண்ட ஏராளமான தங்கம் வந்தது. அங்கே இருந்த எல்லா தங்கத்தையும் எடுத்துக் கொள்ள அதிகாரி ஆசைப்பட்டான். தன் கீழே உள்ள வீரர்களைக் கோவிலை இடித்துத் தோண்டி சோதனை செய்யுமாறு ஆணை இட்டான். வீரர்கள் கோவிலை இடிக்க சுற்றி வளைத்தனர். அப்போது காளியின் படைகள் பயங்கரத் தோற்றத்துடன் கூச்சலிட்டபடி அதிகாரியின் வீரர்களை வளைத்து அவர்கள் மீது கற்களை வீசி எறிந்தன. அதிகாரியும் அவரது படைகளும் பயந்து அலறி கோவிலை விட்டு ஓடினார்கள். நம்பியான் காளியை வணங்கினான். அவன் குழந்தைகளுக்கு திருமணம் நடந்தது. கோவிலை புதுப்பித்து பூஜை செய்தார்கள்.

ஒரு நாள் சிவபெருமான் காளிதேவியும் அமர்ந்திருந்த போது சண்டன் பிரசண்டன் என்ற அசுரர்கள் அங்கே வந்து நந்தியைத் தாக்க முற்பட்டனர். சிவபெருமானைப் போருக்கும் அழைத்தனர். சிவபெருமான் காளிதேவியிடம் சண்டன் பிரசண்டன் பெற்ற வரம் பற்றிக் கூறினார். அவர்களை அழைக்கும் வல்லமை காளிதேவிக்கே உள்ளது என்றும் அவ்விரு அசுரர்களையும் அழித்து விடக் கட்டளையிட்டார். நவசக்தி தேவிமார்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு மிகுந்த கோபத்துடன் அசுரர்களுடன் போருக்குச் சென்றாள் காளி. மகாகாளியின் உருவத்தைக் கண்ட அசுரர்கள் இருவரும் பயந்து போய் மகாகாளி கோயில் தற்போது இடத்தில் ஓடி ஒளிந்தனர். மகாகாளி அவர்களை விடாமல் பின்தொடர்ந்து வந்து போரிட்டார். அரக்கர்கள் இருவரும் எருமைக்கடா உருவம் எடுத்து தேவியைப் பலமாகத் தாக்கினர். நவசக்தியுடன் தேவி சிங்க வாகனம் ஏறி வந்து அவ்வரக்கர்களை வதம் செய்தார். அரன் என்னும் சிவபெருமான் சித்தத்தைப் பூர்த்தி செய்தமையால் மகாகாளிக்கு அரசித்தி தேவி எனப்பெயர் பெற்றாள். சிப்ரா நதிக்கரையில் அரசித்திதேவிக்கு தனியாக கோயில் இன்றும் உள்ளது. இக்கோயில் 51 சக்தி பீடக் கோயில்களில் 5 ஆவதாகவும் உள்ளது.

அவந்தி மாநகரில் விலாசன் என்ற அந்தணன் இருந்தான். சிறந்த சிவபக்தன். அவனுக்கு நான்கு பிள்ளைகள். இரத்தின மாலை என்ற மலையில் வாழ்ந்த தூஷணன் என்ற அரக்கன் இந்த நகரைச் சூறையாடி மக்களைத் துன்புறுத்தினான். குடிகள் விலாசனை அணுகி தங்களைக் காக்கும்படி வேண்டினர். சிவலிங்கம் பிடித்து வைத்து அன்றாடம் பூசை செய்வது அந்தணர் வழக்கம். ஒரு நாள் அவர் அப்படிச் செய்யத் தொடங்கிய போது அந்த அரக்கன் வந்து பூஜைப் பொருள்களைத் தூக்கி எறிந்து சிவலிங்கத்தையும் அழித்தான். அந்தக் கணத்தில் பெருத்த சப்தம் எழுந்தது. எல்லாரும் திடுக்கிட்டனர். அந்த லிங்கத்திலிருந்து வெடித்துப் பிளந்து கொண்டு மகாகாளர் தோன்றி தூஷணை அழித்தார். அரக்கன் அழிந்த மகிழ்ச்சியில் மக்கள் மகாகாளரை அங்கேயே தங்கி தங்களைக் காக்கும்படி வேண்டினர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மகாகாளர் லிங்க உருவில் அருளத் தொடங்கினார்.

மகாபாரதத்தில் தேவகிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்த கண்ணனை யசோதையின் வீட்டில் விட்டு அங்கே பிறந்திருந்த பெண் குழந்தையை வசுதேவர் தூக்கி வந்தார். மாகாகாளியே அந்தப் பெண் குழந்தையாக பிறந்திருந்தார். அந்தப் பெண் குழந்தையைைக் கம்சன் விண்ணில் தூக்கி எறிந்து வாளால் வெட்டப் போனான். ஆனால் அந்தக் குழந்தை காளி உருக்கொண்டு மாகாளியாக மாறி உன்னை அழிக்க வந்த குழந்தை வேறு இடத்தில் பிறந்து விட்டது என்று சொல்லி மறைந்தாள்.

அசோகச் சக்ரவர்த்தி உஜ்ஜயினி வர்த்தகர் மகளையே மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். மவுரியப் பேரரசின் கிளைத் தலைமைப் பீடம் இங்கே இருந்திருக்கிறது. அசோகருடைய கல்வெட்டுகளில் உஜ்ஜயினி பற்றிய தகவல்கள் இருக்கிறது. பாணினி பெரிபுளூசு ஹியான்சான் போன்ற வெளிநாட்டுத் தூதர்கள் உஜ்ஜயினி வந்து இத்தலத்தைப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். பதஞ்சலி காளிதாசன் திருமங்கை ஆழ்வார் ஆகியோர் தமது இலக்கியப் படைப்பில் புகழ்ந்து பாடல்கள் பாடியுள்ளார்கள். தமிழ் இலக்கிய நூல் பெருங்கதை என்பதில் வரும் உதயணன் கதை நிகழ்ச்சிகள் நடந்த தலம் உஜ்ஜயினி ஆகும்.

லலிதாதேவி மற்றும் விஷாகா

லலிதாதேவி மற்றும் விஷாகா இவர்கள் இருவரும் கண்ணனின் கோபிகையரில் முதன்மையானவர்கள். வேணுகோபாலனுடன் இருவரும் இருக்கும் சிற்பம். இடம் ஹசாராராமா கோயில். ஹம்பி

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 680

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

கந்த சஷ்டி கவசம் கந்த குரு கவசம் என்று எந்த கவசமாக இருந்தாலும் அதை ஒரு மனிதன் தன் சொந்த கவசம் என்று (தனக்காக என்று) எண்ணி பாராயணம் செய்யாமல் பிறர் கஷ்டம் நீங்க பாராயணம் செய்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் இது போன்ற பாசுரங்களை இறை வழிபாட்டு பாடல்களை பாடியவர்கள் யாரும் தன் கஷ்டம் நீங்க வேண்டும் என்று பாடவில்லை. அதனால் தான் ஆதிசங்கரர் பிட்சை எடுத்தார். தனக்காக அன்னை மகாலட்சுமியை அவர் வேண்டவில்லை. பிறர் வறுமை நீங்கத்தான் வேண்டினார். எனவே இது போன்ற விஷயங்களை பிறர் துன்பம் நீங்க ஒரு மனிதன் பயன்படுத்தினால் பரிதமாகும். அதிலேயே பிறர் நலத்தை பார்ப்பதால் அவன் பாவங்கள் குறைந்து அவனுக்கும் இறையருளால் நலம் கிட்டும்.

ஊர்த்துவ தாண்டவத்தில் சிவபெருமான்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கம்பத்தடி மண்டபத்தின் கிழக்குப் பகுதியின் தெற்குப் பகுதியில் ஊர்த்துவ தாண்டவரின் சிற்பம் உள்ளது. சிவனுக்கும் காளிக்கும் இடையே யார் சிறந்த நடனக் கலைஞர் என்ற போட்டியின் போது சிவன் தனது வலது காலை நேராகத் தன் தலையின் மட்டத்திற்கு தூக்கி ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். சிவபெருமானின் இடது காலுக்கு அருகில் அமர்ந்து மத்தளம் இசைக்கும் நந்திதேவர் சிவாம்சத்துடன் கூடியவர் என்பதை விளக்க 2 கைகள் தலைக்கு மேலே உயர்த்தி இறைவனை வணங்கிய நிலையில் அஞ்சலி ஹஸ்தமாகவும் 2 மத்தளம் வாசிக்கும் நிலையிலும் மொத்தம் 4 கரங்களுடன் உள்ளது. வலதுபக்கம் உடன் காரைக்கால் அம்மையார் உள்ளார். இடம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மதுரை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 679

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

எங்கே சத்தியம் நிரந்தரமாக தங்குகிறதோ எங்கே தர்மம் நிரந்தரமாக தங்குகிறதோ எங்க கருணை நிரந்தரமாக குடி கொண்டிருக்கிறதோ எங்கே பெருந்தன்மை நிரந்தரமாக குடி கொண்டிருக்கிறதோ எங்கே விட்டுக் கொடுக்கும் தன்மை நீடித்திருக்கிறதோ அங்கே இறையருள் இருந்து கொண்டே இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம். இறையருளை தக்க வைத்துக் கொள்ள என்ன வழி? என்று பார்த்து அந்த வழியிலே ஒருவன் சென்றால் ஏனைய பிரச்சினைகள் மெல்ல மெல்ல அவனை விட்டு சென்று விடும்.

ராமர் சீதை

ராமரும் சீதையும் சின்முத்திரையில் உள்ளார்கள். பரதன் சத்ருக்கன் அருகே உள்ளார்கள். லட்சுமணன் பணிவாக வணக்கம் செலுத்துகிறார். அனுமான் அன்புடன் ஸ்ரீராமரின் பாதங்களைத் தன் கைகளில் தொட்டு வணங்குகிறார். இடம் சிருங்கேரியில் உள்ள குரு நிவாஸில் இந்த சிற்பம் உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 678

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

விதியே ஒருவனை தவறு செய்யத் தூண்டினாலும் பிரார்த்தனையின் பலத்தால் தல யாத்திரையின் பலத்தால் புண்ணிய நதியில் நீராடுகின்ற பலத்தால் தர்ம செயலை செய்கின்ற பலத்தால் ஒரு மனிதன் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு சினமோ வேறு தகாத எண்ணங்களோ எழும் போதெல்லாம் இறை நாமத்தை ஜெபித்து ஜெபித்துத்தான் அதிலிருந்து வெளியே வர வேண்டும். இல்லையில்லை விதிதான் என்னை இவ்வாறு தூண்டுகிறது என்று பலகீனமாக இருந்து விட்டால் அதன் விளைவுகளுக்கும் அவனே பொறுப்பேற்க வேண்டும்.

சக்தி பீடம் 10. பகவதியம்மன் – கன்னியாகுமரி

சக்தி பீடத்தில் 10 ஆவது கோயில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் ஆகும். தந்திர சூடாமணி கூறும் அம்மனின் 51 சக்தி பீடங்களில் அம்பாளின் முதுகுப்பகுதி விழுந்த இடமாகும். குமரி சக்திபீடம் என்று அழைக்கப்படுகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் இந்தியாவின் தென்முனையில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியப் பெருங்கடல் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா எனும் முக்கடல்கள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. அம்பாள் பகவதியம்மன் வேறுபெயர் துர்காதேவி மற்றும் தேவிகன்னியாகுமரி ஆகும். உற்சவ மூர்த்தி தியாகசெளந்தரி பாலசௌந்தரி. புனித தீர்த்தத்தின் பெயர் பாபநாச தீர்த்தம். தனது ஆயுதமாக ஜபமாலையை வைத்திருக்கிறாள். இக்கோவிலின் வழிபாடுகளையும் சடங்குகளையும் சங்கராச்சாரியார் அவர்கள் சங்கரா மடம் மூலமாக நடக்க வழிவகைச் செய்துள்ளார். முனிவர் பரசுராமரால் இக்கோவில் கட்டப்பட்டது. இக்கோயில் 2000 ஆண்டு பழமையானதாகும். பகவதியம்மன் கன்னியாகவும் இளமையுடன் குமரியாக உள்ளதால் இந்த ஊர் கன்னியாகுமரி என்று பெயர் பெற்றது.

மகாபாரதம் சங்க நூலான மணிமேகலை புறநானூறு நாராயண உபநிடதம் கிருஷ்ண யஜூர் வேதம் சம்ஹித வைஷ்ணவ வேதங்களில் அம்மன் வழிபாடு பற்றி கூறப்பட்டுள்ளது. 1892ல் இராமகிருஷ்ண பரஹம்சருக்கு தேவி ஆசி வழங்கியுள்ளார். சுவாமி பிரமானந்தா (1863-1922) நிர்மலானந்தா (1963-1938) இக்காலகட்டங்களில் பகவதியம்மனுக்கு பணிவிடை செய்துள்ளனர். 1935 ஆம் ஆண்டுகளில் கேரள மாநிலத்திலிருந்து பல பெண்களை வரவழைத்து பகவதியம்மனுக்கு பூசை செய்ய அறிவுறுத்தப்பட்டார்கள். இவ்வாறு வந்த பெண்களில் ஏழு பெண்கள் குழு மூலம் சாரதா மடம் ஆரம்பிக்கப்பட்டது. கேரளாவில் பாலக்காடு ஒட்டப்பாளையம் என்ற இடங்களிலும் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது. 3000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இக்கோயில் வலுவான கல் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் விநாயகர் ஐயப்பன் பால சுந்தரி மற்றும் விஜய சுந்தரி சூரியன் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. கோயிலின் பிரதான நுழைவு வடக்கு வாசல் வழியாகும். கோயிலின் கிழக்கு வாசல் பெரும்பாலும் மூடப்பட்டு விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும்.

புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா 10 நாள் மற்றும் வைகாசி விசாகம் 10 நாளும் திருவிழா நடைபெறும். இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும் பத்தாவது நாள் தெப்பத்திருவிழாவுமாகும். தெப்பத் திருவிழாவன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவியின் திருவுருவம் நீரின் மேல் வலமாக மிதப்பில் கொண்டு செல்லப்படும். எழுத்தாளர் பெரிபிளசு 1060 – 1080 பகவதியம்மன் பற்றியும் பிரம்மச்சர்யம் பற்றியும் அன்னையின் வழிபாடு பற்றியும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

கன்னியாகுமரி பகவதி அன்னையின் ஒளிமிக்க மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி இருந்த காலகட்டம் அது. மன்னராட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திருவிதாங்கூர் பகுதியில் வசித்த ஒரு பனையேறும் தொழிலாளிக்கு ஏற்கனவே ஐந்து பெண் குழந்தைகள் பிறந்திருந்தன. ஆறாவதாக பனை தொழிலாளியின் மனைவி கருவுற்றிருந்தார். அந்த பிரசவத்திலும் பெண் குழந்தை பிறந்தது. அதை அவரது மூத்த மகள் தன் தந்தையிடம் வந்து சொன்னாள். ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்தவருக்கு பெருத்த ஏமாற்றம். மீண்டும் மனைவி கருவுற்றிருந்தார். அவரது மனம் இப்போது அடுத்த முறை பெண் குழந்தை பிறந்ததாக தன் மகள் வந்து என்னிடம் சொன்னால் மரத்தில் இருந்து இரண்டு கைகளையும் எடுத்து விட்டு கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார்.

தொழிலாளியின் மனைவிக்கு மீண்டும் பெண் பிள்ளையே பிறந்தது. அந்த விஷயத்தை அவரது மூத்த மகள் அவரிடம் சொல்ல வந்தபோது அந்த தொழிலாளி மரத்தை விட்டு கீழே இறங்கியிருந்தார். அதனால் உடனடியாக தற்கொலை செய்து கொள்வது இயலாமல் போனது. வாழ்க்கை வெறுத்துப்போன தொழிலாளிக்கு அருகில் இருந்த புற்று தென்பட்டது. அதற்குள் கையை நுழைந்தார். புற்றுக்குள் பாம்பு ஏதாவது இருந்து கடித்தால் இறந்து போய்விடலாம் என்பது அவரது எண்ணம். புற்றுக்குள் கையை நுழைத்த தொழிலாளியின் கையில் ஏதோ ஒன்று சுடுவது போன்று உணர்ந்தார். சட்டென்று கையை எடுத்தவரின் கையோடு மாணிக்கக் கல் ஒன்று வந்தது. அதைக் கொண்டு போய் மன்னனிடம் கொடுத்தார் அந்த பனை தொழிலாளி. அதைப் பெற்றுக்கொண்ட மன்னன் அவரது குதிரையை அவிழ்த்து விட்டு அது எவ்வளவு தூரம் ஓடுகிறதோ அவ்வளவு இடத்தையும் அந்த தொழிலாளியின் பெயரில் எழுதி வைக்கச் சொன்னார். மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார் தொழிலாளி.

அன்று இரவு திருவிதாங்கூர் மன்னனின் கனவில் தோன்றிய சிறு பெண் இன்று காலை பனை தொழிலாளி உன்னிடம் ஒரு மாணிக்கக் கல் கொண்டு வந்து கொடுத்தாரே. அதில் எனக்கு ஒரு மூக்குத்தி செய்து தரக்கூடாதா? என்று கேட்டாள். காலையில் எழுந்ததும் நம்பூதிரிகளை அழைத்து பிரசன்னம் பார்க்கச் சொன்னார் மன்னன். பிரசன்னம் பார்த்ததில் கனவில் தோன்றிய சிறுமி கன்னியாகுமரி பகவதி அம்மன் என்பது தெரியவந்தது. மன்னன் உடனடியாக தன்னிடம் இருந்த மாணிக்கக் கல்லில் ஒரு மூக்குத்தியை செய்து அதை தேவிக்கு சமர்ப்பித்தான். அந்த மூக்குத்தியைத்தான் இன்றளவும் பகவதியம்மன் அணிந்திருக்கிறாள். அந்த மாணிக்கக் கல்லின் ஒளி பன்மடங்கு அதிகமாக இருந்த காரணத்தால் அன்னையின் மூக்குத்தி வெளிச்சத்தை கலங்கரை விளக்கம் என்று நினைத்த கப்பலோட்டிகள் பலரும் விபத்துக்களை சந்திக்க நேர்ந்தது. எனவே ஆலயத்தின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு தெற்கு வாசல் வழியாக சென்று தேவியை தரிசிக்கும் நடைமுறை பழக்கத்திற்கு வந்தது.

கன்னிப் பெண் ஒருத்தியைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் நிகழக்கூடாது என்ற வரத்தைப் பிரம்ம தேவரிடம் இருந்து பெற்றவன் பாணாசுரன் என்னும் கொடிய அசுரன். அவன் பெற்ற அந்த வரத்தை வைத்துக் கொண்டு தேவர்களையும் முனிவர்களையும் கடுமையாக கொடுமைப் படுத்தினான். தேவர்களும் முனிவர்களும் தங்கள் துன்பங்களை துடைத்தருளும்படி மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அவரோ பாணாசுரன் கன்னிப் பெண்ணால் தான் தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் பெற்றுள்ளான். ஆகையால் உங்களுக்கு அந்த சிவனின் அருகில் அமர்ந்துள்ள பார்வதியால்தான் உதவ முடியும் என்று வழி கூறினார். இதனால் அனைவரும் அன்னை பார்வதியை வேண்டி யாகம் செய்தனர். யாகத்தின் நிறைவில் ரிஷப வாகனத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சியளித்தனர். அம்மையப்பன் இருவரையும் கண்டதும் ஆனந்தக் கூத்தாடினர் தேவர்களும் ரிஷி முனிவர்களும். அவர்களைப் பார்த்து அன்பர்களே தங்களின் குறையை நான் அறிவேன். உங்கள் துயரங்கள் விலகும் காலம் வந்து விட்டது. எனது தேவியானவள் பரத கண்டத்தின் தென்கோடியில் குமரியில் ஒரு கன்னியாக வடிவெடுத்து பாணாசுரனை வதம் செய்து உங்களுக்கு வாழ்வளிப்பாள் என்று ஆசி கூறினார் சிவபெருமான்.

அன்று முதல் அவள் கன்னியாகுமரிக்கு வந்து கடுந்தவம் புரியலானாள். தேவி கடுந்தவமிருக்கும் போது ஒரு நாள் பாணாசுரன் தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளை நேரில் காண வந்தான். தேவியைக் கண்டதும் அவளை மணந்து கொள்ள வேண்டினான். ஆனால் தேவி மறுத்து விடவே அசுரன் அவளைத் தன் உடல் வலிமையால் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான். இத்தகைய தருணத்தை எதிர்நோக்கியிருந்த தேவியும் தன் போர்வாளை வீசினாள். நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர். இறுதியில் தேவி தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்று அழித்தாள். தேவர்கள் அனைவரும் தேவிக்கு நன்றி செலுத்தினர். நாரதரும் பரசுராமரும் தேவியை கலியுகத்தின் இறுதி வரை பூமியில் இருக்குமாறு வேண்டினார்கள். இவர்களின் பிரார்த்தனையை தேவி ஏற்றுக் கொண்டாள். பரசுராமர் சமுத்திரத்தில் இந்தக் கோயிலைக் கட்டி தேவியின் சிலையை நிறுவினார். அன்று முதல் கன்னியாகுமாரியில் கன்னிப் பெண்ணாக பகவதி அம்மன் மக்களின் குறைகளை நீக்கி கொண்டிருக்கின்றாள்.

சிருங்கார நரசிம்மர் செஞ்சு லட்சுமி

அஹோபிலம் பகுதியில் பல நூற்றாண்டுகளாக வாழும் வனவாசி மக்கள் சமுதாயத்தினர் செஞ்சுக்கள் என்று அழைக்கப் படுகின்றனர். உலக நன்மைக்காக செஞ்சுக்களின் குடியில் பிறந்த லட்சுமியை நரசிம்மர் இங்கு வந்து திருமணம் புரிந்ததாக தல புராணம் கூறுகிறது. செஞ்சுலட்சுமி என்ற திருநாமத்துடன் நரசிம்மரின் நாயகியாக அருள்பாலிக்கிறாள். இடம் அஹோபிலம்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 677

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

நாங்கள் கூறுகின்ற சூட்சுமத்தை யாரும் புரிந்து கொள்ளவேயில்லை. ஒரு மனிதன் தன் தேவை மறந்துவிட்டு பிறருக்கு சேவையையும் பொது நல தொண்டையும் செய்ய துவங்கும் பொழுதே அவன் தேவையை இறைவன் கவனிக்க துவங்கி விடுவார் என்பதே சூட்சுமம். எனவே தன்னைத்தான் தனக்குத்தான் தன் குடும்பத்தைத்தான் பார்ப்பதை விட்டுவிட்டு தான் தான் தான் தான் என்பதையெல்லாம் விட்டுவிட்டு இறைவனைத்தான் அவனின் கருணையைத்தான் இறைவன் அன்பைத்தான் இறையின் பெருமையைத்தான் இறைவன் அருளைத்தான் இறையின் பெருந்தன்மையைத்தான் புரிந்து கொண்டால் இந்தத் தான் ஓடிவிடும். இந்தத் தான் ஓடிவிட்டால் அந்தத்தான் (இறைவன் அருளைத்தான்) தன்னால் வந்துவிடும். அந்தத் தான் வந்துவிட்டால் எந்தத் தானும் மனிதனுக்கு தேவையில்லை.