ஆழ்வார்களிலே நான்காவதாக உள்ள திருமழிசை ஆழ்வார் தன்னுடைய பாசுரங்களில் திருமாலின் அவதாரங்களுக்குள் அழகன் யார் என்று ஒரு போட்டி வைத்தார்.
1 மச்ச அவதாரம்: ஒரு பெரிய வெள்ளத்தில் இருந்து மனு என்ற முதல் மனிதரைக் காப்பாற்ற விஷ்ணு மீனாக அவதரித்தார்.
2 கூர்ம அவதாரம்: தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெற கடலைக் கடைந்தபோது மந்தர மலையின் சுமையாக விஷ்ணு ஆமையாக அவதரித்தார்.
3 வராக அவதாரம்: பூமியை கடலுக்குள் இழுத்துச் சென்ற போது பூமியை மீட்க விஷ்ணு பன்றியின் உருவத்தில் வந்தார்.
4 நரசிம்ம அவதாரம்: அரக்கன் இரண்யகசிபுவை வதம் செய்ய விஷ்ணு மனிதன் மற்றும் சிங்கத்தின் உருவத்தில் அவதரித்தார்.
5 வாமன அவதாரம்: திரிவிக்ரமன் என்று அழைக்கப்படும் வாமன அவதாரத்தில் விஷ்ணு ஒரு குள்ள பிராமணராக அவதரித்து மகாபலி சக்கரவர்த்தியின் அகங்காரத்தை அடக்கினார்.
6 பரசுராம அவதாரம்: பிராமணராக அவதரித்து பூமியில் க்ஷத்திரியர்களின் (ஆட்சியாளர்கள்) அட்டூழியங்களை அடக்கினார்.
7 இராம அவதாரம்: திரேதா யுகத்தில் தர்மத்தின் வடிவமாக அவதரித்த விஷ்ணு ராவணனை வென்று அயோத்தி அரசராக ஆட்சி செய்தார்.
8 பலராம அவதாரம்: துவாபர யுகத்தில் கிருஷ்ணரின் மூத்த சகோதரராக பலராமன் அவதரித்தார். அவர் விவசாயம் மற்றும் விவசாயிகளின் பாதுகாவலராக கருதப்படுகிறார்.
9 கிருஷ்ண அவதாரம்: துவாபர யுகத்தில் அவதரித்து பகவத் கீதையை போதித்தவர்.
10 கல்கி அவதாரம்: கலியுகம் முடியும் போது தர்மத்தை நிலைநாட்ட அவதரிக்கும் அவதாரம்.
இந்த பத்து அவதாரங்களையும் தன்னுடைய கண் முன் நிறுத்தினார். மச்ச கூர்ம வராக அவதாரங்கள் மிருக வடிவங்களில் இருந்தமையால் அவர்களை முதலில் நிராகரித்து விட்டார். மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி மூன்றடி நிலம் கேட்டு விட்டுப் பெரிய காலால் மூவுலகையும் அளந்தவர் நீங்கள். அதுபோலப் போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு என்று அவரையும் நிராகரித்து விட்டார். பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும் கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால் அவரையும் நிராகரித்தார். பலராமன் கண்ணன் இருவரையும் பார்த்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக் கூடாது. யாராவது ஒருவர் மட்டும் இருங்கள் என்று கூறினார். தம்பிக்காக பலராமன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால் நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவரையும் நிராகரித்து விட்டார். ராமன் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மனிதனாகவே வாழ்ந்ததால் ஒரு வண்ணானின் பேச்சுக்காக தன் தேவியையே துறந்தார். அதனால் அவரையும் நிராகரித்தார். கண்ணன் கோபிகைகளை எல்லாம் மயக்கிய அழகன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த கோபிகைகளையும் விரக வேதனையில் தவிக்க விட்டுச் சென்றபடியால் அவரையும் நிராகரித்து விட்டார். இறுதியில் நரசிம்மருக்குத் தலை சிங்கம் போல இருந்தாலும் உடல் மனித வடிவில் இருப்பதாலும் ஆபத்தில் யார் நமக்கு உதவி செய்கிறார்களோ அவர்கள்தான் மிகவும் அழகாக நம் கண்களுக்குத் தெரிவார்கள். பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும் போது உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள் நரசிம்மர். எனவே அவர்தான் அழகு என்று கூறினார்.
பெருமாள் திருமேனியில் உள்ள அனைத்து அங்கங்களும் அழகாக இருந்தாலும் துன்பங்கள் நேரும்போது பெருமாளின் திருவடிகளைத்தான் நினைத்துக் கொள்கின்ற போது அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக் காக்து மோட்சத்தை கொடுக்கிறது. எனவே அவைதாம் மிகவும் அழகு அவ்வாறே ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர்தான் அவதாரங்களுக்குள் அழகானவர். இந்தக் கருத்தைத் திருமழிசைப் பிரான் தாம் இயற்றிய நான்முகன் திருவந்தாதி என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.
அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் குழவியாய்த்தான்
ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து.
என்ற பாசுரத்தில் அரி எனப்படும் சிங்க வடிவில் வந்த நரசிம்மரே அழகானவர் என்று காட்டுகிறார். அதனால்தான் அழகிய ராமன் அழகிய கண்ணன் முதலிய பெயர்களை நாம் கேள்விப்பட்டதில்லை. ஆனால் நரசிம்மர் மட்டும் அழகிய சிங்கர் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இதனால் நரசிம்மருக்கு ஸ்ரீமான் என்ற திருநாமமும் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள். மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி திருமார்பில் அமர்ந்திருக்க நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்? ஸ்ரீமான் நரசிம்மரின் அழகிய முகத்தை திருமார்பில் இருந்தபடி காணமுடியாது. மடியில் அமர்ந்தால் காண முடியும் என்று ஸ்ரீமானின் மடியில் ஸ்ரீதேவியாகிய அன்னை அமர்ந்திருந்து அவர் அழகை ஒவ்வொரு நொடியும் கண்டு லயிக்கிறாள்.
