ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 298

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு உரைப்பது யாதென்றால் இதுபோல் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய நலமே விளையும் என்பது தான் மனிதன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய எளிய சூத்திரமாகும். வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் மனம் விரும்பாத சம்பவங்கள் நிகழ்வுகள் நிகழ்கிறதோ விரும்பாத உறவுகள் தொடர்கிறதோ விரும்பாத சூழலில் இருக்க நேரிடுகிறதோ அப்பொழுதே புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கோ எப்பொழுதோ எந்த ஊருக்கோ நகருக்கோ நாட்டிற்கோ ஒட்டுமொத்தமாக பிடிக்காத உயிர்கள் விரும்பாத பாதிப்பை தரக்கூடிய ஒன்றை அம்மனிதன் செய்திருக்கிறான் என்று. ஏற்படுத்திய விளைவு ஏற்படுத்திய மனிதனை மீண்டும் சென்று சேர்ந்த பிறகே அந்த விளைவு நேரமாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பழங்கால ஆயுதமான பூமராங்கு எப்படி எய்தவனிடமே திரும்ப வருமோ அது போல ஒவ்வொரு வினைக்கும் விளைவுகள் இருப்பதால் செய்கின்ற வினையை நல் வினையாய் செய்து விட்டு போனால் என்ன என்பதை தான் நாங்கள் காலம் காலமாக எம்மை நாடுகின்ற மனிதர்களுக்கு உணர்த்திக் கொண்டு இருக்கிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 297

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒருவன் உலகியல் ரீதியாக தேடக்கூடிய செல்வங்கள் பொருள் ஆஸ்தி இவை அனைத்தும் உடலை விட்டு அவன் சென்ற பிறகு வருமா? உதாரணமாக நாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல ஒரு விலை உயர்ந்த வாகனத்தை வாங்கி அதை இயக்கிப் பார்த்து சந்தோஷப்படுகிறான். நாங்கள் குறை கூறவில்லை. ஆனால் அந்த வாகனம் அவன் அந்த உடலை இங்கேயே விட்டு விட்டு அதாவது இழப்பு கண்ட பிறகு அந்த ஆன்மா அந்த வாகனத்தில் ஏறி அமர்ந்தால் அந்த ஆன்மாவிற்கு அந்த வாகனம் பயன்படுமா? சுகம் தருமா உயர்ந்த வைர கனக அணிமணிகளை வாங்கிக் குவிக்கிறான். அவை எல்லாம் விலை உயர்ந்தது என்று. அவற்றை வாங்கி அவன் உடலோடு இருக்கும் போது கழுத்திலே அணிந்து சந்தோஷப்படுகிறான். இதை மற்ற மனிதன் பார்த்தால் தன்னை மதிக்க வேண்டும் என்கிறான். ஆனால் அதே சமயம் அந்த உடலை விட்ட பிறகு அந்த ஆன்மா அந்த அணிகலன்களை எல்லாம் அணிய இயலுமா? எனவே சுருக்கமாகக் கூறுவது சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆதியில் இருந்து தொகுத்து சுருக்கமாக மீண்டும் மீண்டும் கூறுவது என்ன என்றால் ஆன்மா எனப்படும் உயிர் அல்லது ஆத்மா எப்படி அழைத்தாலும் ஒரு மனித உடலில் அது இருந்தாலும் அல்லது விலங்கு உடலில் அது இருந்தாலும் அல்லது வேறு எந்த உடலில் இருந்தாலும் அந்த ஆத்மா சந்தோஷமாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் பாவங்களற்ற தன்மையை மனிதன் மேற்கொள்ள வேண்டும். புண்ணியத்தை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு ஆத்மா உடலோடு இருந்தாலும் உடலற்று இருந்தாலும் அதனுடன் இருப்பது பாவங்களும் புண்ணியங்களும். எனவே ஆத்மா நித்ய சந்தோஷமாக நித்ய நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் சதாசர்வ காலம் மனிதன் புண்ணியத்தை தேடித்தான் ஆக வேண்டும். ஒரு விலங்கு புண்ணியத்தை சேர்க்க இயலாது. பாவத்தையும் செய்ய இயலாது. அது செய்த பாவத்தை அந்த விலங்கு உடலுக்குள் அந்த ஆத்மா புகுந்து செயல்பட்டு அந்த விலங்காகவே வாழ்ந்து அந்த பிறவியை முடிக்க வேண்டும் என்பது விதியின் கட்டளை. ஆனால் மனிதன் நினைத்தால் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள முடியும். பாவத்தை குறைத்துக் கொள்ள முடியும். இந்த சுதந்திரம் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்படுகிறது. கொடுத்த சுதந்திரத்தை மனிதன் என்றுமே சரியாக பயன்படுத்தியதாக சரித்திரமில்லை. சரியாக பயன்படுத்தினால் இறைவனருள் அதிக தொலைவில் இல்லை ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 296

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

பாவம் என்றால் என்ன? எண்ணத்தால் வாக்கால் செயலால் பிறருக்கு அணுவளவும் துன்பத்தைத் தராமல் வாழ எண்ணுவது. அப்படி இல்லாமல் செய்கின்ற அனைத்தும் பாவங்களே. எனவே பாவங்களே இல்லாத ஒரு நிலையை நோக்கி ஒரு மனிதன் சென்றால்தான் துன்பங்களே இல்லாத வாழ்க்கை கிட்டும். ஆனால் இருக்கிறது அதற்காக இந்த தவறை செய்ய வேண்டி இருக்கிறது என்னை விட பல மடங்கு தவறுகளை செய்யக் கூடிய மனிதன் நன்றாகத்தானே வாழ்கிறான். நான் சிறிய தவறைதானே செய்கிறேன் என்று எதையாவது தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டு தவறு மேல் தவறு செய்யும் செய்து கொண்டே போகிறான். இறைவனும் கருணையோடு எப்படியாவது இந்த மனிதன் திருந்துவான் என்று பல்வேறு வாய்ப்புகளை தருகிறார். ஆனால் அப்படி எல்லாம் திருந்தாமல் அதிக துன்பம் வரும் பொழுது ஏதாவது ஒரு நிலையிலே மெல்ல உணரத் தொடங்குகிறான். அப்படி உணரும் பொழுது அவன் சேர்த்த பாவங்கள் அவனைப் பாடாய் படுத்தத் துவங்குகிறது. எனவே தொடர்ந்து புண்ணிய செயலை செய்வதும் (புண்ணியம் என்றால் நிறைய செல்வம் இருந்தால் தான் செய்ய முடியும். தனத்தை வாரி வாரி வழங்கினால்தான் புண்ணியம் என்று எண்ண வேண்டாம்) தனம் உள்ளவர்கள் தனத்தை வைத்து புண்ணியம் செய்யட்டும். தனம் இல்லாதவர்கள் உடல் உழைப்பால் பிறருக்கு நன்மையை செய்து அதன் மூலம் புண்ணியம் சேர்க்கட்டும்.

உடலாலும் பிறருக்கு உழைத்து நன்மையை செய்ய முடியாதவர்கள் வார்த்தைகளில் இதம் இதமாக நல்ல சுகமாக ஆறுதலாக பிறரிடம் பேசிப் பேசி அனைவரையும் மனமார குளிர வைத்து அதன் மூலம் புண்ணியம் சேர்த்து கொள்ளட்டும். எனவே மனிதனாக பிறவி எடுத்தவன் இந்த உலக வாழ்விற்காக ஏதாவது ஒரு பணியை செய்தாக வேண்டும். அந்தப் பணியில் கூடுமானவரை நேர்மையை கடைபிடிக்க வேண்டும். தன் கடமையை தவறாது செய்ய வேண்டும். தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் காப்பாற்ற வேண்டும். அதன் பிறகுதான் அவன் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். எனவே இவற்றை எல்லாம் செய்து கொண்டே ஒருவன் நேர்மையாக வாழ்ந்து கொண்டே நீதியை தவறாமல் பின்பற்றி கொண்டே இறைவனை 100/100 அவன் அறிந்த வடிவத்தில் அவனுக்கு எப்படி இறைவன் இப்படிப்பட்டவர் இந்த வடிவில் இருக்கிறார் என்று போதிக்கப்பட்டு இருக்கிறதோ அந்த வடிவிலேயே இறைவனை நம்பி நல்லவனாக வாழ்ந்தால் வாழ்க்கை என்பது தொடர்ந்து அவனுக்கு அதிக சிக்கல் இல்லாமல் இருக்கும். ஆனால் வெறும் புறத்தே உள்ள மாயையிலே சிக்கி காண்பதெல்லாம் காட்சி காண்பதெல்லாம் வேண்டும் என்ற நோக்கில் அவன் பயணப்பட்டால் மிகவும் கடினம்தான் அவனுக்குத் தொடர்ந்து வரும்.

சுலோகம் -165

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-3

நீ என்னுடைய பக்தனும் உற்ற நண்பனும் ஆவாய். ஆகவே அதே பழமையான இந்த யோகம் இன்று என்னால் உனக்கு சொல்லப்பட்டது. ஏனெனில் இந்த யோகம் மிகச் சிறந்தது ரகசியமானது. அதாவது மறைத்துக் காப்பற்றப் பட வேண்டியது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

நீ என்னை சரணடைந்து எப்போதும் மறக்காமல் நினைத்துக் கொண்டே இருக்கின்ற பக்தனாகவும் சிறந்த நண்பனாகவும் இருக்கின்றாய். உலகம் படைக்கப்பட்ட போது என்னால் சொல்லப்பட்டதும் மிகவும் ரகசியமாக மறைத்து காப்பாற்றப் பட்டதுமாகிய இந்த யோகத்தை நீ பெறத் தகுதி பெற்றவனாகி விட்ட படியால் இன்று நான் உனக்கு சொல்கிறேன். இந்த யோகத்தை இறைவனை சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கும் இந்த யோகத்தை கடைபிடிக்க முற்படும் தகுதியானவர்களுக்கு மட்டுமே சொல்லப்பட வேண்டும். தகுதியில்லாதவர்களுக்கோ அல்லது இந்த யோகத்தை ஏளனமோ அவமரியாதையோ செய்பவர்களுக்கு சொல்லக் கூடாது. ஆகவே இதனை மறைத்து ரகசியமாக காப்பாற்ற வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 295

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ஒன்றுமில்லாத நிலைத்து இல்லாத சில காலம் இருந்து அழிந்து போகக் கூடிய உலகியல் வாழ்க்கைக்காகவே தன் முயற்சியையும் உழைப்பையும் செலவு செய்ய துணியும் மனிதன் இப்படி எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் ஒன்று இருக்கிறது என்று வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலே அந்த நம்பிக்கையோடு மட்டும் அதை நோக்கி என்றால் அவனால் செல்ல முடியாது என்பது எமக்குத் (அகத்திய மாமுனிவர்) தெரியும். ஆனால் இதை எப்படி புரிந்து கொள்வது என்றால் வெறும் உலகியல் வாழ்க்கையோடு அல்லாமல் அதனைத் தாண்டி இறை தேடல் என்கிற உணர்வும் ஒரு மனிதனுக்கு இருந்தால் அடிப்படையிலே சிறு பொறி போல் இருந்தால் அதனை எம்போன்ற (அகத்திய மாமுனிவர்) ஞானிகளும் மகான்களும் ஊதி ஊதி மிகப்பெரிய அக்னிப்பிழம்பாக மாற்றி விடலாம். ஆனால் அடிப்படையிலேயே அந்த பொறி இல்லையென்றால் பொறி என்றால் அந்த ஆன்மிகத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற உணர்வை தரக்கூடிய புண்ணியம் இல்லையென்றால் இறைவனே நேரில் வந்தாலும் அந்த மனிதனை புரிந்து கொள்ள வைப்பது கடினம்.

ஆதியில் குறிப்பிட்டதைப் போல இரண்டு வகையாக இதனை நோக்க வேண்டும். ஒன்று உலகில் சார்ந்த வெற்றிகள் இரண்டாவது உலகியல் சார்ந்த இன்பங்கள். இவை அனைத்தும் மனிதனால் விரும்பப்படுபவை. எந்த மனிதனும் உலகில் துன்பமாக வாழ விரும்புவதில்லை. சதாசர்வ காலம் இன்பமாக வாழவேண்டும் சாந்தியோடு இருக்க வேண்டும் என்றே மனிதன் விரும்புகிறான். ஆனால் அப்படி எல்லாம் எல்லோருக்கும் வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. பெரும்பாலான மனிதர்கள் பொருளாதார சிக்கலில் நெருக்கடியில் இருக்கிறார்கள். இன்னும் சிலர் தேக நலம் குன்றி அதனால் துயரமடைகிறார்கள். இன்னும் சிலர் உறவு சிக்கலால் வேதனைப் படுகிறார்கள். இப்படி பலவிதமான பிரச்சனைகளால் மனிதன் சூழப்பட்டு காலகாலம் பெரும்பாலும் ஒன்று போனால் ஒன்று என்று துன்பத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இரண்டு மனிதர்கள் வேண்டுமானால் துன்பம் இல்லாமல் வாழலாம். ஒன்று சித்தம் தெளிந்தவன். இன்னொன்று சித்தம் கலைந்தவன். அதாவது பைத்தியக்காரனுக்கு எந்த விதமான துன்பமும் தெரியாது அல்லது ஞானத்தில் உச்ச நிலையடைந்த தோற்றத்தில் பைத்தியக்காரன் போல் இருக்கின்ற அவனுக்கும் துன்பம் தெரியாது. எனவே இரண்டிற்கும் இடையில் இருந்து வாழுகின்ற மனிதனுக்கு ஏதாவது ஒரு துன்பமென்பது இருந்து கொண்டேதான் இருக்கும். எனவே யாங்கள் (சித்தர்கள்) கூற வருவது யாதென்றால் ஒரு மனிதன் அல்லது உயிர் எதுவாக இருந்தாலும் துன்பமில்லாமல் வாழ வேண்டும் என்று எண்ணுகிறது. நிம்மதியாக வாழ வேண்டும் என்று எண்ணுகிறது. நீடித்த இன்பம் வேண்டும். நிலைத்த நிம்மதி வேண்டும் என்று விரும்பாத மனிதர்களே இல்லை. அதற்கு ஒரே வழி மறந்தும் கனவிலும் பாவத்தை செய்யாமல் இருப்பது.

சுலோகம் -164

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-2

பார்த்தா இவ்விதம் வழிவழியாக வந்த இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தார்கள். அந்த யோகம் வெகு காலமாக மறைந்தாற் போல் ஆகிவிட்டது.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி?

ராஜ ரிஷிகள் என்று சொல்லப்படுபவர்கள் யார்?

கர்ம யோகத்தின் படி பற்றில்லாமல் அரசர்களாக வாழ்ந்திருந்து பின்பு அனைத்தையும் துறந்து சாதகங்கள் செய்து வேதங்களின் உட்பொருளை அறிந்தவர்கள் ராஜ ரிஷிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இஷ்வாகு மன்னனைத் தொடர்ந்து அவரது வாரிசுகளும் இந்த யோகத்தை ஒருவர் பின் ஒருவராக தங்களது வாரிசுகளுக்கு சொல்லிக் கொடுத்திருந்தார்கள். மன்னனைத் தொடர்ந்து மக்களும் அவ்வாறே வாழ்ந்து வந்தார்கள். இப்படி வழிவழியாக பல தலைமுறைகள் இந்த யோகத்தை கடைபிடித்து பற்றில்லாமல் வாழ்ந்து வந்தார்கள். காலம் செல்லச் செல்ல உலகத்தினருக்கு போகமும் பற்றும் வளர வளர கர்ம யோகத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து இறுதியில் இந்த யோகத்தை சொல்லிக் கொடுக்க யாரும் இல்லாமல் அழிந்தே விட்டது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 294

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய என்றும் யாவர் வாழ்விலும் நலமே நடக்கும் என்பதை காலகாலம் எமை நாடும் மாந்தர்களுக்கு (மனிதர்களுக்கு) யாம் இயங்கிக் கொண்டே இருக்கிறோம். ஆயினும் கூட நல்லதை எடுத்து கூறினாலும் எத்தனைதான் கூறினாலும் இதுபோல நலமான எண்ணங்கள் நலமான வாக்குகள் நலமான செயல்பாடுகள் என்பது மனிதரிடம் குறைந்து கொண்டுதான் வருகிறது. இதுபோல் நிலையிலே இரண்டு வகையான கண்ணோட்டங்களை இறைவன் அருளை கொண்டு யாம் இத்தருணம் ஆழி தாண்டி (கடல் தாண்டி) வந்திருக்கும் இந்த சேய்களுக்கு கூறுகிறோம். ஒன்று தேகத்தை பெற்ற மனிதன் அந்த தேகத்திற்குள் இருக்கின்ற ஆன்மாவை புரிந்து கொள்வது என்பது கடினம். கடினம் என்பதற்காகவே புரிந்து கொள்ளவே முயற்சி செய்யாமலிருப்பதும் மடமை. இதுபோல் புரிந்து கொள்ளவும் ஒரு வினைப் பயன் வேண்டும் என்பது உண்மை. வினைப்பயன் ஒத்துழைப்பு தராவிட்டாலும் போராடி இறையை வணங்கி வணங்கி புரிந்து கொள்ள வேண்டும். ஏன் புரிந்து கொள்ள வேண்டும்? எதற்காக புரிந்து கொள்ள வேண்டும்? என்ன அவசியம்? என்று மனித மனம் அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பும். இறைவன் அருளால் யாங்கள் (சித்தர்கள்) கூற வருவது என்னவென்றால் மனிதனின் மனமும் எண்ணங்களும் பெரும்பாலும் உடலெடுத்து அந்த உடலுக்குள்ளே நீக்கமற ஆன்மா நிரப்பப்பட்டு இறைவனால் படைக்கப்பட்டிருப்பதால் மனிதனால் தான் வேறு தன் உடல் வேறு என்று அத்தனை எளிதாக பிரித்துப் பார்க்க இயலவில்லை.

எதற்காக அப்படி பார்க்க வேண்டும்? என்பது அடுத்ததொரு வினா (எழும்). இருதயம் இயங்குகிறது. எனவே குருதி எல்லா நாளங்களிலும் பாய்கிறது. குருதிதான் மனிதன் இயங்க வேண்டிய சக்தியை தருகிறது. எலும்பு இருக்கிறது. எனவே மனிதனுக்கு ஒரு உறுதியான கட்டமைப்பை அது தருகிறது. நரம்புகள் எல்லா பக்கங்களிலும் செல்கிறது. அது உணர்வுகளை எடுத்து செல்கிறது. சுரப்பிகள் சுரந்து அதற்கு ஏற்றார் போல் மற்ற விஷயங்களைத் தூண்டி விடுகிறது. சிந்தனையை மூளை செயல்படுத்துகிறது. உடலில் இப்படி ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பணியை செய்ய இவைகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக சேர்ந்து மனிதனாகிறான். இவைகளெல்லாம் பழுதடைந்து விட்டால் இவைகளில் மிகப்பெரிய பிணி பீடித்து விட்டால் மனிதனால் முழுமையாக இயங்க முடியவில்லை. சோற்வுற்று படுத்து விடுகிறான் அல்லது முற்றிலும் இறந்து விடுகிறான். இதில் எங்கே இருக்கிறது ஆன்மா? அல்லது உயிர் என்று ஒன்று இருக்கிறதா? இந்த தேகமெங்கும் அப்படி ஏதாவது பரவியிருந்தால் அதை புறக்கண்ணால் பார்க்க முடியாதா? புறக்கண்ணால் பார்க்க முடியாத புற செவியால் உணர முடியாத நாசியால் நுகர முடியாத நாவால் சுவைக்க முடியாத ஒன்றை இருக்கிறது என்று நம்பு என்றால் நான் எப்படி நம்புவேன்? என்பது மனிதனின் வாதம். ஆனால் எல்லாம் வெளிப்படையாக பிற அங்கங்களால் புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இருந்தால் விலங்குகளும் ஆன்ம முன்னேற்றம் பெற்று விடலாமே. சில விலங்குகள் பெற்று இருக்கின்றன என்பது விதிவிலக்கு. எனவே அப்படி புரிந்து கொள்வதற்கு மனிதன் ஏராளமான முயற்சிகளையும் உழைப்பையும் மெய்யான மெய்ஞானம் நோக்கி திசை திருப்ப வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 293

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒன்று உருவாகிறது என்றாலே பிறகு அது இல்லாமல் போய்விடும் என்ற பொருளும் உண்டு. சைவ சித்தாந்தத்தை நோக்கினால் தத்கர்ய வாதம் என்ற ஒன்று இருக்கிறது. எனவே இறை என்றும் எப்போதும் இருக்கிறது. அதற்கு ஆதியும் அந்தமும் இல்லை. ஆத்மாவும் அப்படித்தான். இன்று நீ அன்று நான் எனவே இந்த தத்துவத்தினுள் ஒரு மனிதன் கால் பதித்துவிட்டால் அவனுக்கு காலம் இல்லை இடம் இல்லை உறவில்லை கர்மா இல்லை வேதனை இல்லை சோதனை இல்லை எதுவும் இல்லை. இப்பொழுது பார்க்கின்ற அனைத்தும் ஒரு மாயத் தோற்றம் என்பது அப்பொழுது புரியும். கேள்விகளே இல்லாத ஒரு நிலை ஏற்படும்.

மனிதர்களிடம் உள்ள குறைகளில் பெரும் குறை என்ன என்றால் பேசிக் கொண்டே இருப்பதுதான். மனிதர்கள் மௌனத்தைக் கடைபிடித்தால் பல கேள்விகளுக்கு பதில் உள்ளேயே தோன்றும். எனவே கூடுமானவரை பேசவேண்டிய நாழிகை தவிர வேறு நாழிகைகளில் மௌனமாக செயல்படுவது பேசினால் அர்த்தம் உள்ளதாகவும் பிறருக்கு ஆனந்தம் தரக்கூடியதாகவும் நல்ல ஆக்கப்பூர்வமான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். தேவையில்லாத அரசியல் நிகழ்வுகள் அசுர மனிதர்களைப் பற்றிப் பேசுவது இவையெல்லாம் மனித சக்தியை விரயமாக்கும். எனவே கூடுமானவரை மௌனமாக இருந்தால் சிக்கல்கள் யாருக்கும் எழாது.

சுலோகம் -163

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-1

முன்னுரை

ஞான என்றால் ஞான யோகம். கர்ம என்றால் கர்ம யோகம். சந்யாச என்றால் ஞான மார்க்கம். கிருஷ்ணர் தாம் அவதரித்த ரகசியத்தையும் கர்ம யோகத்தையும் சந்யாச யோகத்தையும் சொல்லி உண்மையான ஞானத்தைப் பற்றி விவரிக்கிறார். மேலும் கர்ம யோகத்தில் ஈடுபட வேண்டிய அவசியத்தையும் கர்ம யோகத்தில் ஞான யோகமும் அடங்கியே உள்ளது என்பதையும் கர்ம யோகத்தின் தன்மைகள் பிரிவுகள் அதில் உள்ள ஞான யோகத்தின் முக்கியத்துவம் பற்றியும் இந்த பகுதியில் விவரிக்கிறார்.

சுலோகம் -163

இந்த அழிவற்ற யோகத்தை சூரியனுக்கு சொன்னேன். சூரியன் தன் புதல்வனான வைவஸ்வத மனுவுக்குச் சொன்னார். மனு தன் குமாரனான இஷ்வாகு மன்னனுக்கு சொன்னார்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா கர்ம யோகங்களை உனக்கு தொடர்ந்து சொல்லியிருக்கிறேன். நீ சண்டையிட வேண்டும் என்ற காரணத்திற்காக இதனை இப்போது சொல்லவில்லை. உலகம் படைக்கப்பட்ட போதே இந்த யோகத்தை சூரியனுக்கு சொல்லியிருக்கிறேன். சூரியன் தன் புதல்வனான வைவஸ்வத மனுக்கு சொல்லியிருக்கிறான். வைவஸ்வத மனு அவன் புதல்வனான இஷ்வாகு மன்னனுக்கு சொல்லியிருக்கிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 292

கேள்வி: ஒரு அன்பர் வியாபாரம் சம்பந்தமாக கேட்ட கேள்விக்கு குருநாதரின் அருள்வாக்கு :

அன்னை மகாலட்சுமிக்கு உண்டான எல்லா வகையான பூஜைகளையும் இயன்ற போதெல்லாம் ஆலயத்திலோ இல்லத்திலோ செய்து கொள்ளலாம். இது பொதுவாக யாங்கள் (சித்தர்கள்) எம்மை நோக்கி கேட்கப்படும் வினாக்களுக்கு கூறுகின்ற பதில். இன்னொன்று தத்துவார்த்த விளக்கம் என்ன என்றால் ஒரு மாணவன் இருக்கிறான். அவன் ஒரு தேர்வு எழுதி பூர்த்தியடைந்து வந்தவுடன் இந்த இந்த தேர்வுகளிலே இன்ன குறைகள் நிகழ்ந்து விட்டன. எனவே எனக்கு மதிப்பெண் குறைந்து விடும். எனவே மதிப்பெண் கூடுதலாகப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கிறான். அந்த நிலையிலே தேர்வின் மதிப்பெண் பட்டியல் வருகிறது. பார்த்தால் மதிப்பெண் குறைந்து இருக்கிறது. இப்பொழுது இவன் மீண்டும் தேர்வு எழுதி மதிப்பெண் பெற்று வரும் வரையில் இவன் பெற்ற மதிப்பெண் எவ்வளவு? என்று கேட்டால் இவன் எதைக் கூறுவான்? அதிகமாக வரும் என்று தான் எதிர்பார்க்கின்ற மதிப்பெண்ணை கூற முடியுமா? அல்லது குறைந்த அளவு பெற்ற மதிப்பெண்ணை கூற முடியுமா?

இதைத்தான் பூஜைக்கும் புண்ணியத்திற்கு ஒரு மனிதன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே பிறவிதோறும் பெற்று செய்து அனைத்தையும் நுகர்ந்து அது போக இப்பிறவிக்கு வந்துள்ள மனிதர்கள் ஒன்றை மட்டும்தான் எண்ணி பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும். அது இல்லையே இது இல்லையே என்று எண்ணுவதை விட பிறவி இறைவன் சித்தர்கள் நவக்கிரகம் கர்மா போன்ற வார்த்தைகளை செவிமடுத்து ஓரளவு அந்த வழியில் வர இறைவன் அனுமதி தந்திருக்கிறார் என்றுதான் பெருமைப்பட்டுக் கொள்ள முடியுமே தவிர இருக்கின்ற இந்த மதிப்பெண்ணுக்கு என்ன உண்டோ அதுதான். இதனையும் மீறி ஒருவன் பூஜைகள் செய்தால் அதற்குண்டான பலன் பின்னால்தான் கிட்டும்.